புதன், 30 டிசம்பர், 2009

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


அணைவருக்கும் எனது இனிய   புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள் .....
2010

புதன், 23 டிசம்பர், 2009

கிறிஸ்துமஸ்... கிறிஸ்துமஸ்...

கிறிஸ்துமஸ்... கிறிஸ்துமஸ்...


உலகெங்கும் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகைகளும் முக்கியமானது கிறிஸ்துமஸ். மனிதர்களை ரட்சிப்பதற்காகத் தேவமைந்தன் ஒரு சுடராக தொழுவத்தில் தோன்றிய நாள். உலகெங்கிலும் இதில் வித்தியாசமே இல்லை. ஆனால் கலாசாரத்துக்குக் கலாசாரம், நாட்டுக்கு நாடு கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறுசிறு வித்தியாசங்களுடன் கொண்டாடுகிறார்கள். அடிப்படை உணர்வு ஒன்றுதான்.
உலகெங்கும் வீடுகளிலும், தேவாலயங்களிலும் “நட்சத்திரங்களும்”, விளக்குகளும் பூத்து ஜொலிக்கும். கிறிஸ்துமஸ் மரங்கள் மினுக்கும் விளக்குகளை காய்த்துச் சிரிக்கும். தேவபுதல்வனை வரவேற்கும் பாடல்கள் ஒலிக்கும். இனிமை பூத்துக் கிடக்கும் இந்தக் குளிர்கால வேளையில் எங்கெங்கும் ஓர் உற்சாகம் மிதக்கும். உச்சக்கட்ட கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தின மாலையில்தான். அப்போது மக்கள் புத்தாடை அணிந்து பிரார்த்தனை செய்கிறார்கள். இயேசுவைப் போற்றிப் பாடுகிறார்கள். ஆடுகிறார்கள். வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று “கேக்” போன்ற இனிப்புகளுடன் விருந்தும், பரிசுப் பொருட்கள் பரிமாறலுமாக உள்ளங்கள் பூரித்துப் பொலிவு பெறுகின்றன. நூற்றாண்டுகளாக இந்தக் கொண்டாட்டம், இந்த உற்சாகம் தொடர்ந்து வருகிறது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தினரும் கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பேரார்வத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.
பெத்லகேமில் கிறிஸ்துமஸ்
இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில் உள்ள “சர்ச் ஆப் நேட்டிவிட்டி” யில் எளிமையான, இனிமையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெறுகிறது. மேற்குக் கரையில் உள்ள சிறுநகரான பெத்லகேமில் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் இருந்து வரும் கிறிஸ்தவர்களும், உள்ளூர் மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையைச் சேர்ந்து கொண்டாடுகிறார்கள். இதையொட்டி “சர்ச் ஆப் நேட்டிவிட்டி”, வண்ண வண்ணக் கொடிகளாலும், அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்படுகிறது. நாடகங்களுடன் கூடிய ஊர்வலம் ஒன்றும் நடத்தப்படுகிறது. இதில், அலங்கரிக்கப்பட்ட குதிரைகளில் அமர்ந்தவர்கள் முன்னிலை வகித்துச் செல்கிறார்கள். பெருவாரியான மக்கள், மத குருக்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கிறார்கள். தேவாலயத்தில் தெய்வக் குழந்தையின் சொரூபமும், அதன் பிறப்பைக் குறிக்கும் வெள்ளி நட்சத்திரமும் அமைந்திருக்கும் இடத்தில் ஊர்வலம் முடிவடைகிறது.கிறிஸ்துமஸை ஒட்டி பெத்லகேமில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்துவரின் இல்லத்திலும் முன் கதவில் “சிலுவை” தீட்டப்படுகிறது. தொழுவத்தில் இயேசு பிறப்புக் காட்சியை உருவாக்கி வைக்கிறார்கள்.
ஈரானில் கிறிஸ்துமஸ்
இஸ்லாமிய நாடான ஈரானிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இயேசு அவதரித்த போது இருந்த முப்பெரும் மனிதர்கள் வசித்த நாடாக ஈரான் கருதப்படுகிறது. ஈரானிய கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸை ஒட்டி டிசம்பர் 1-ம் தேதி முதல் நோன்பு இருக்கின்றனர். இக்காலத்தில் அவர்கள் அசைவம் உண்பதில்லை. இது “சிறுநோன்பு” எனப்படுகிறது. (ஈஸ்டருக்கு முந்தைய ஆறு வார காலத்தில் அவர்கள் “பெருநோன்பு” நோற்கின்றனர்.) கிறிஸ்துமஸ் அன்று தடபுடலான விருந்து உண்டு.
சீனாவில் கிறிஸ்துமஸ்
கம்யூனிச நாடான சீனாவில் கிறிஸ்தவம், அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்ட மதமல்ல. ஆனால் இங்கும் ஆண்டுக்காண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.
கிறிஸ்துமஸ் தாத்தா
கிறிஸ்துமஸ் காலத்தில் வெள்ளைத் தாடி, சிவப்புத் தொப்பி-ஆடையில் வரும் “சான்டா கிளாஸ்” எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா, இரவில் யாருக்கும் தெரியாமல் பரிசுப் பொருட்களை வீட்டுக்குள் எறிந்துவிட்டுப் போவதாக உலக மழலைகள் நம்புகிறார்கள். துருக்கி நாட்டைச் சார்ந்த “செயின்ட் நிக்கோலஸ்” என்ற பாதிரியார்தான் கிறிஸ்துமஸ் தாத்தா ஆனதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு வரலாற்று ரீதியான ஆதாரம் இல்லை என்று சொல்வோரும் உண்டு. ஆனாலும் அன்பின் அடையாளமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருவது சிறுவர்களை மகிழ்விக்கிறது.
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை
1843-ம் ஆண்டு சர்.ஹென்றி கோல் என்பவரால் முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பப்பட்டது. 1846-ல் ஜோசப் அன்டால் என்ற ஓவியர் ஆயிரக்கணக்கில் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டார். மக்கள் வாழ்த்து அட்டைகளில் வடிவு, நேர்த்தி, தொழில் நுட்பம் என பல்வேறு வகைகளிலும் கவரப்பட்டு கோடிக்கணக்கான மில்லியன் டாலர் வியாபாரப் பொருளாக வாழ்த்து அட்டை புழக்கத்திற்கு வந்தது. கிறிஸ்துமஸ் விழாவின் போது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்தும் அன்பும் அறிவித்து அன்புறவை புதுப்பிக்கும் பணியை வாழ்த்து அட்டைகள் செய்கின்றன.
கிறிஸ்துமஸ் நட்சத்திரம்
அரேபிய நாடான சிரியா நாட்டைச் சேர்ந்த மூன்று அரசர்களுக்கு இறை இயேசு பிறந்த இடத்தை காட்டிய வான் நட்சத்திரத்தை வாழ்த்தவும் அப்புதுமையை நினைவுபடுத்தவும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தொங்க விடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் குடில்
1223-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிரான்சிஸ் அச்சி என்ற புனிதரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இயேசுவின் பிறப்பை வெளிப்படுத்தும், நினைவூட்டும் சிலைகளின் வழிபாடே கிறிஸ்துமஸ் குடில் வழிபாடு எனப்படுகிறது. இறை இயேசு பிறந்த மாட்டுக் குடில், இறை இயேசுவின் பெற்றோர்கள் இறை இயேசு என அன்றைய பெத்லகேமை ஒவ்வொரு ஊரிலும் அமைப்பதே மாட்டுக் குடிலும், தேவபாலமும் என்ற கிறிஸ்துமஸ் குடிலின் அமைப்பாகும். பிறந்த இயேசு பாலனை முத்தமிட்டு மகிழும் உள்ளங்களில் அன்பு, அமைதி, சமாதானம் என்று இறை இயேசு பிறக்கிறார் என்கிற நம்பிக்கையை உருவாக்க அமைக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மரம்
மனித வழிபாட்டு முறைகளின் துவக்கம் இயற்கை வழிபாடாகும். மனிதன் இயற்கையை வணங்கினான். ஸ்காண்டி நேவியர்கள் மரத்தை வழிபடுபவர்கள். அவர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மனம் மாறினார்கள். கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளினபடி கலாச்சார மயமாகுதல், பண்பாடு மயமாகுதல் என்ற நெறிப்படி புதிய கிறிஸ்துவ மதத்திலும் ஸ்காண்டி நேவிய மக்களுக்கு மரத்தை வழிபட வழியிருந்தது. அவர்கள் மரங்களை மின் விளக்குகளால் அலங்கரித்து வணங்கினர். 500 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியர்கள் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க ஆரம்பித்தனர். 1841-ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட் தனது ராஜமுறை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் மரத்தை அறிமுகப்படுத்தினார்.
கிறிஸ்துமஸ் கேக்
ஒவ்வொரு விழாக்களுக்கும் ஓர் சிறப்பான உணவு விழா உணவாக கருதப்படும். கிறிஸ்துவம் மேற்கித்திய கலாச்சாரத்தின்படி கேக் கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பான உணவு பொருளாக இருக்கிறது.
கிறிஸ்துமஸ் பூ
மெக்சிகோவில் “போய்ன்செட்டியா” என்பது கிறிஸ்துமஸ் மலராகக் கருதப்படுகிறது. இதைப் “புனித இரவின் பூ” என்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் ஆடு
ஸ்வீடனில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் ஒன்றாக “ஜுல்பக்” என்ற வைக்கோலால் ஆன வெள்ளாடு இடம் பெறுகிறது.
கிறிஸ்துமஸ் நம்பிக்கைகள்
கிறிஸ்துமஸ் குறித்து கிறித்தவர்களிடம் வேறு சில நம்பிக்கைகளும் நிலவுகின்றன. அவை;
கிறிஸ்துமஸ் நாளில் பிறக்கும் குழந்தைக்குச் சிறப்பு அதிர்ஷ்டம் உண்டு.
கிறிஸ்துமஸ் நாளில் பனி பொழிந்தால் ஈஸ்டர் காலம் பசுமையாக இருக்கும்.


கிறிஸ்துமஸ் நாளில் நீங்கள் எத்தனை வீடுகளில் விருந்து உண்கிறீர்களோ, வரு கிற ஆண்டில் அத்தனை மாதங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும்.
கிறிஸ்துமஸ் கேக்குகளில் நாணயம், மோதிரம் போன்றவற்றை மறைத்து வைத்துப் பரிசளிப்பது மேலை நாடுகளில் வழக்கம். நாணயம் கிடைக்கப் பெற்றவர் பணக்காரராவர். மோதிரம் கிடைத்தால் விரைவில் திருமணமாகும் என்பது பொதுவான நம்பிக்கை.
கிறிஸ்துமஸ் மாலையில் நீங்கள் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் அடுத்த ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
கிறிஸ்துமஸ் நள்ளிரவில் பரலோகத்தின் கதவுகள் திறக்கின்றன. அப்போது அமரராவோர் நேராக பரலோகத்தை அடைவர்.
கிறிஸ்துமஸ் இரவில் ஏற்றப்படும் மெழுகுவர்த்திகள் மறுநாள் காலையில் அவை தானாக அணையும்வரை அணைக்கப்படக் கூடாது.
கிரேக்க நாட்டில், தொடர்ந்து வரும் ஆண்டில் தங்களைத் துரதிர்ஷ்டம் தீண்டக்கூடாது என்பதற்காக மக்கள் கிறிஸ்துமஸ் காலத்தில் பழைய காலணிகளை எரிக்கிறார்கள்.
உக்ரைனில், கிறிஸ்துமஸ் நாளில் வீட்டில் புதிதாக சிலந்தி வலை அமைத்திருந்தால் அது அதிர்ஷ்டகரமானதாகக் கருதப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் திருநாளுடன் தொடர்புடைய பிரபலமான ஒன்றாகும். பொதுவாக பசுமை மாறா ஊசியிலை கூம்பு மரங்கள் வீட்டுகுள்ளேயோ வெளியேயோ நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் விளக்குகளாலும் பிற கிறிஸ்துமஸ் அழகூட்டும் பொருட்களாலும் அழகூட்டப்படுவது வழக்கமாக உள்ளது. கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முன் சில நாட்களில் இம்மரத்தின் அழகூட்டப்படுவதைக் காணலாம். மரத்தின் உச்சியில் ஒரு முக்கோணம் அல்லது நட்சத்திர வடிவம் ஒன்றையும் சேர்த்துக் காணலாம் அல்லது சிறு சிறு நட்சத்திரங்கள் மின்னும். ஆமாம். இந்த கிறிஸ்துமஸ் மரம் எப்படி தோன்றியிருக்கும்?
எகிப்திய நாட்டு மக்களின் பழமையான கலாச்சாரங்களில் பசுமையை வழிபடுதலும் ஒன்றாய் இருந்தது. அதிலும் குறிப்பாக குளிர் காலங்களில் மரங்கள் எல்லாம் நிராயுதபாணிகளாய் இலைகளை இழந்து நிற்கையில் பேரீச்சை இலைகளை வெட்டி வந்து வாழ்வின் மறுமலர்ச்சி விழா, அல்லது சாவை வெற்றி கொண்ட விழா கொண்டாடுவது அவர்களுடைய வழக்கம்.
ரோமர்களின் கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய சாத்துர்னாலியா விழாவே விவசாயக் கடவுளை வழிபடும் விழா தான். அந்த நாளை பச்சை இலைகளுடனும், தாவரங்களுடனும் கொண்டாடுவதே அவர்களுடைய வழக்கம். வீடுகளையெல்லாம் இலை தோரணங்களால் அலங்கரிப்பது அவர்களுடைய விழாவின் சிறப்பம்சம்.
பிரிட்டனில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பச்சை இலைகளையும், கொம்புகளையும் வாசல்களில் தொங்க விட்டால் தீய ஆவிகள் அணுகாது என்னும் நம்பிக்கை ஆழமாக இருந்தது.
-இந்த நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கிறித்துவ மதத்தில், கிறிஸ்துமஸின் போது கிறிஸ்துமஸ் மரம் இடம் பெற்றிருக்கலாம் என்கின்றனர் சிலர்.
ஜெர்மனியே கிறிஸ்மஸ் மரத்தின் பிறப்பிடம் என்னும் சிறப்புப் பெருமையைப் பெறுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புனித போனிபேஸ் என்பவர் ஜெர்மனியில் கிறிஸ்தவ மத போதனைகளைச் செய்து கொண்டிருந்தபோது ஒரு கூட்டம் மக்கள் அங்குள்ள ஓக் மரம் ஒன்றை வழிபடுவதைக் கண்டார். அதைக் கண்டு கோபமடைந்த அவர் அந்த மரத்தை வெட்டி வீழ்த்த அதனடியிலிருந்து உடனடியாக ஒரு மரம் முளைத்து வளர்ந்ததாக கூறப்படும் கதை ஒன்றுள்ளது. இதனடிப்படையில்தான் கிறிஸ்துமஸ் மரம் தோன்றியது என்று சொல்வோரும் உண்டு.
சுமார் ஆயிரத்து ஐநூறாம் ஆண்டு மார்ட்டின் லூத்தர் கிங் ஒரு கிறிஸ்மஸ் காலப் பனி நாளில் நடந்து செல்கையில் சிறு சிறு பச்சை மரங்களின் மீது படர்ந்திருந்த பனி வெளிச்சத்தில் பிரமிக்க வைக்கும் அழகுடன் ஒளிர்வதைக் கண்டார். உடனே ஒரு ஃபீர் மரத்தை எடுத்து அதை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதைக் கிறிஸ்து பிறப்பு விழாவில் பயன்படுத்தினார். அன்றிலிருந்து கிறிஸ்மஸ் விழாக்களில கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றது என்றும் சொல்கிறார்கள்.
1521ல் பிரான்ஸ் இளவரசி ஹெலீனா தனது திருமணத்திற்குப் பிறகு ஒரு கிறிஸ்மஸ் மரத்தை பாரீஸ் நகருக்குக் கொண்டு வந்து விழா கொண்டாடியதால், அன்றிலிருந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றுள்ளது என்கிறது ஒரு வரலாற்றுச் செய்தி.
பதினைந்தாம் நூற்றாண்டுகளில் டிசம்பர் இருபத்து நான்காம் நாளை ஆதாம், ஏவாள் தினமாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது. விலக்கப்பட்ட மரத்தின் கனியைத் தின்றதால் பாவத்துக்குள் தள்ளப்பட்ட ஏதேன் காலத்தை நினைவு கூறும் விதமாக மரத்தை ஆப்பிள் போன்ற பழங்களால் அலங்கரித்து அந்த நாளைக் கொண்டாடி வந்தார்கள். பதினொன்றாம் நூற்றாண்டிலேயே இந்த வழக்கம் இருந்ததாக நம்பப்பட்டாலும், பதினைந்தாம் நூற்றண்டில் இந்த வழக்கம் இருந்தது என்று பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இப்படி கிறிஸ்துமஸ் மரம் குறித்து பல செய்திகள் சொல்லப்படுகின்றன.


ந‌ன்றி‍‍‍ .. முத்துக்க‌ம‌ல‌ம்....

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

நிறங்களும் அவற்றின் குணங்களும் ...



நிறங்களும் அவற்றின் குணங்களும் ...


உலகம் வண்ணமயமானது. நாம் அன்றாடம் உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாவற்றிலும் ஏராளமான வண்ணங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு குணமுண்டு. வெண்மை தூய்மையையும், சிவப்பு தடையையும் உணர்த்துவது இயல்பு. இவ்வாறே ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு தன்மையை உடையது. பொதுவாக அடிப்படை நிறம் என்பது நீலம், மஞ்சள், சிவப்பு ஆகிய மூன்றே. வெண்மை மற்றும் கருமை நிறத்தைத் தனியாகவே குறிப்பிடுகின்றனர். மற்ற வண்ணங்கள் அனைத்தும் இவற்றின் கலப்பினாலேயே உண்டாகின்றன. ஒவ்வொரு வண்ணத்திற்கும் நம் வாழ்வில் ஒரு பங்கு உள்ளது.


உளவியலில்(Psycology) நிறங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.இந்த வண்ணங்கள் நமது எண்ணங்களிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவை என்பதும் ஒருவர் விரும்பும் நிறத்தைக்கொண்டே அவர்கள் குணத்தையும் கணிக்க இயலும் என்பதும் உளவியலாளர்களின் கருத்து. உளவியலில், சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் மஞ்சளை அடிப்படை நிறங்கள் (Basic Colours) என்று சொல்லப்படுகிறது. நம் மீது தாக்கத்தை உண்டாக்கக்கூடிய நிறங்களாக அடிப்படை நிறங்களான மேற்கூறிய சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் இவற்றுடன் வெண்மை, கருமை, சாம்பல் நிறம்(Grey), ஆரஞ்சு, ஊதா(Violet), இளஞ்சிவப்பு (Pink) மற்றும் பழுப்பு(Brown) நிறங்கள் குறிப்பிடப்படுகின்றன.
பச்சை நிறமே பச்சை நிறமே: பசுமை நிறம் பொதுவாக சமநிலையையும் சூழலில் அமைதி நிலவுவதையும் குறிக்கிறது. பச்சை நிறத்தினைப் பார்க்கும்பொழுது நமது மனம் புத்துணர்ச்சி அடைகிறது. கண்களில் உள்ள லென்ஸ் நாம் பார்க்கும் ஒவ்வொரு நிறத்தின் அலைவரிசைக்கும் ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக்(Adjustment) கொள்ளுகிறது. ஆனால், பச்சை நிறத்திற்கு அப்படிப்பட்ட தகவமைப்பு ஏதும் தேவையில்லை. வான வில்லின் நடுவில் அமைந்துள்ள இந்நிறமானது சமநிலையைச் சுட்டுகிறது. ஓய்வு நிலையையும் செழிப்பையும் குறிக்கவும் பச்சை பயன்படுகிறது.
நீல நிறம், வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் : குளிர்ந்த நிறமாகக் கருதப்படும் நீலம், அறிவுத்திறனையும், நம்பிக்கையையும்,திறமையான தர்க்க ரீதியான செயல் பாட்டையும் குறிப்பிடுகிறது. நீல நிறம் மனதிற்கு இதமளிக்கக் கூடியதாகக் கருதப் படுகிறது. ஆழ்ந்த நீல நிறம், எண்ண ஓட்டங்களைச் சீராக்கி சிந்திக்கும் திறனை உயர்த்துகிறது. இள நீலமானது, மனதை அமைதிப்படுத்தி ஒருமுகப்படுத்துகிறது. அதிக அலை நீளமுள்ள நிறமாதலால், தொலைவில் உள்ள நீல நிறப்பொருட்கள் நம் கண்ணில் படுவதில்லை. இதனால்தான் போக்குவரத்து விளக்குகள் நீல நிறத்தைப் பயன்படுத்துவதில்லை. அதே அதிக அலை நீளம்தான், வானத்தை நீல நிறமாகத் தோன்றச் செய்யவும் காரணம். உலக முழுவதும் அதிக அளவிலான மக்கள் நீல நிறத்தை விரும்புவதாக ஆய்வுகள் கணிக்கின்றன.


வலிமையின் நிறம் சிவப்பு: வறுமையின் நிறம் சிவப்பா என்று நமக்குத் தெரியாது. ஆனால் வலிமையின் நிறம் சிவப்புதான். ஆம், சிவப்பு வலிமையையும் துணிச்சலையும் ஆண்மை, ஆற்றல் ஆகியவற்றையும் குறிக்கும் நிறமாகக் கருதப்படுகிறது. தூண்டுதலை உண்டாக்குகிறது. ஒரு அறையில் உள்ள பொருட்களில் சிவப்பு வண்ணப் பொருள்தான் நமது கவனத்தினை முதலில் ஈர்க்கிறது. எனவேதான் போக்குவரத்து சைகைகள், அபாய எச்சரிக்கைகள் முதலியவை சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகின்றன. 'செய் அல்லது செத்து மடி' என்ற உணர்வை உண்டாக்குவதும், நேரம் வேகமாக ஓடுவது போன்ற உணர்வைத் தோற்றுவிப்பதும் சிவப்பின் பிற தன்மைகள்.
மஞ்சள் மகிமை: மஞ்சள் உணர்வு பூர்வமான நிறம். தன்னம்பிக்கை, ஆக்க பூர்வ சிந்தனைகள், நட்புணர்வு, நேர்மறைச் சிந்தனை ஆகியவற்றின் குறியீடாகக் கருதப்படுகிறது. சிவப்பு நிறம் போலவே வலிமையையும் உணர்வுகளின் தூண்டுதலையும் கூட்டுவது மஞ்சளின் தன்மை. உத்வேகத்தை அதிகரிப்பதோடு நேர்மறை உணர்வுகளை ஏற்படுத்த வல்லது. ஆனால் அளவுக்கதிகமான மஞ்சள் நிறம் அல்லது தவறான வண்ணங்களுடன் மஞ்சளின் இணைப்பு எதிரான பலனைத் தரக்கூடியது. அது நமது சுய மதிப்பைக் (Self Esteem) குறைக்கின்ற அல்லது பதட்டத்தையும் பயத்தையும் உண்டாக்கும் காரணியாகிவிடுகிறது.

ஆழமான ஊதாவே: ஆன்மீக உணர்வுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இந்நிறம் நிறைவு, சொகுசு , தரம் ஆகியவற்றைக் குறிப்பதாகவும் விளங்குகிறது. ஊதா நிறம் ஆழ்நிலை தியானத்திற்கு உதவுகிறது. ஆன்மீக உணர்வைத் தூண்டக்கூடிய இந்நிறம் சீரான சிந்தனையையும், ஆழ்ந்த எண்ணங்களையும் ஊக்குவிக்கிறது.வானவில்லின் புறத்தில் கடைசியாக இருக்கும் நிறமாதலால், காலம்(Time), வெளி(Space)மற்றும் பிரபஞ்சம் (Cosmos) இவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அதே சமயம் அதிகப்படியான ஊதாநிறப் பயன்பாடு தாழ்வு மனப்பான்மை, அழுத்தம், வெளிப்படையாகப் பேசாமை (Introvert) போன்றவற்றை ஏற்படுத்தக் கூடியது. அதே போல் சரியான வண்ணக்கலவையாக இல்லாவிடில் அது அருவருக்கத் தக்கதாகத் தோற்றமளிக்கிறது.


ஆர்வம் தரும் ஆரஞ்சு: செயல்பாட்டைத் தூண்டக் கூடிய வண்ணம் ஆரஞ்சு. வளமை, பாதுகாப்பு, ஆர்வம், கதகதப்பு, வேடிக்கை ஆகியவற்றின் குறியீடு எனவும் ஆரஞ்சு வண்ணம் கருதப்படுகிறது. சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தின் கலவையால் ஆரஞ்சு உருவாவதால், செயல் திறன், உணர்வுகள் இரண்டையும் தூண்டும் தன்மையுடையதாக உள்ளது இந்த வண்ணம். மனம் மிகுந்த சோர்வாக இருக்கும்பொழுது ஆரஞ்சு வண்ண உடை அணிவதால், மனச்சோர்வில் இருந்து விடுபட இயலும். அதே நேரம், இவ்வண்ணத்தை கறுப்புடன் சேர்த்துப் பயன் படுத்துகையில் இது எதையோ இழந்தது போன்ற உணர்வைத் தோற்றுவிப்பதாக மாறிவிடுகிறது. மேலும் அதிகப் படியான ஆரஞ்சு வண்ணம், அறிவீனத்தைக் (நீலத்திற்கு எதிரான தன்மை) காட்டுகிறது.

திங்கள், 7 டிசம்பர், 2009

ர‌ஜினிகாந்த் பிற‌ந்தநாள் டிசம்பர் 12



ர‌ஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாசி ராவ் காயக்வாட்  ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் சூப்பர் சுடார் என்றும் அழைக்கின்றனர்.
இளமை
ர‌ஜினிகாந்த் டிசம்பர் 12 1949 அன்று இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.

திரைப்படங்களில்..
நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ர‌ஜினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராசா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை ர‌ஜினிகாந்த் நிரூபித்தார். ரசினிகாந்து நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான சுரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமய புனிதரான ராகவேந்திரரின் வாழ்க்கை பற்றியது.
1980களில் ர‌ஜினிகாந்த் நடித்து வெளிவந்த வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்சா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவநத்த பாபா (திரைப்படம்) வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இவருடைய நண்பரும், மற்றொரு சிறந்த நடிகருமான கமலஆசன் பெரும்பாலும் அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடிக்கையில்  ர‌ஜினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாகவே உள்ளன. தமிழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி ஆகிய மொழிகளிலும் 170 திரைப்படங்களில் ரசினிகாந்து நடித்துள்ளார்.

ர‌ஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரசினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு சப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.
ஆன்மீக ஈடுபாடு...
ரசினிகாந்து ஒரு ஆன்மீகவாதி ஆவார். சிறு வயது முதல் ராகவேந்திரர், ராமகிருச்ணர் போன்றோரின் போதனைகளை பின்பற்றி வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் அடிக்கடி இமய மலையில் உள்ள ரிசிகேச் போன்ற இடங்களுக்கு சென்று ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அரசியல் தொடர்பு
1990களில் ர‌ஜினிகாந்த் நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்றதன் காரணங்களுள் ஒன்றாக கூறப்படுகிறது. எனினும், இக்காரணி தேர்தல் புள்ளியியலாளர்களால் அறுதியிட்டுக் கூறப்படவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில், ரசினிகாந்து எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ பொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை. 2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ச.க தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், ரசினிகாந்து அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார். ரசினி 03நவ08 அன்று ரசிகர்களை சந்தித்து பேசினார்.ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்,அவரின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது, எந்திரன் படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாக கோரினர்.
குடும்பம்
16 பிப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். பின்னர் இருவரும் ஐசுவர்யா, சௌந்தர்யா ஆகிய இரு மகள்களைப் பெற்றனர். இவருடைய மூத்த மகள் ஐசுவர்யா, 2004 ஆம் ஆண்டு இளம் தமிழ் திரைப்பட நடிகரான தனுசை மணந்தார்

ஓஷோ பிற‌ந்த‌நாள் டிசம்பர் 11,


ஓஷோ  எனப் பரவலாக அறியப்படும் ரஜ்னீஷ் (Rajneesh Chandra Mohan Jain, டிசம்பர் 11, 1931 - ஜனவரி 19, 1990) இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளரான இவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெருமளவு உரையாற்றினார். இவரது பேச்சுக்கள் பெருமளவு நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. புத்தர், கிருஷ்ணர், குரு நானக், இயேசு, சாக்கிரட்டீஸ், ஜென் குருக்கள் போன்ற பல்வேறு சமய ஞானிகளின் பங்களிப்புத் தொடர்பாகவும் இவர் கருத்துக்களைக் கூறியுள்ளார். இவரது பேச்சுக்களின் போது கூறிய குட்டிக்கதைகள் பிரபலமானவையாகும்.
ரஜனிஷ் சந்திர மோகன் ஜெயின் டிசம்பர் மாதம் 11 முதல் 1931 -ஜனவரி 19, 1990 வரை வாழ்ந்தார். 1960 முதல் என்ற ஆச்சர்ய ராஜனீஷ் என அறியப்பட்டார். 1970 மற்றும் 1980 களில் பகவான் ஸ்ரீ ரஜனிஷ் என தன்னைத் தானே அழைத்துக் கொண்டார்.1989 ல் ஓஷோ எனவும் இந்திய ஆன்மிக குருவாகவும் அறியப்பட்டார்.
ஒரு தத்துவ விரிவுரையாளராக 1960 களில் இந்திய முழவதும் சென்று சொற்பொழிவுகள் நடத்தினார்.பொதுவுடைமை,மஹாத்மா காந்தி , மற்றும் நிலையான ஒழுங்கமைப்பு முறையுள்ள மதங்களைப் பற்றிய அவரின் மாறுபட்ட கருத்துக்களினால் எதிர்ப்புகள் தோன்றின.பாலுணர்வு குறித்த அவரின் வெளிப்படையான வாதங்களினால் அவர் செக்ஸ் குரு என உலக பத்திரிக்கைகள் அவரை மேற்க்கோள் காட்டின.[1]1970-ல் சிறிது காலம் மும்பையில் தங்கி இருந்தார்.
நயோ சந்நியாசியகள் என அழைக்கப் படும் சீடர்களை முதன் முதலாக தெரிவு செய்தார்.தன்னை ஒரு முழுமையான ஆன்மீக ஆசிரியராகவும் நிலைப் படுத்திக் கொண்டார்.அவரின் ஞான சொற்பொழிவுகளில் சமய பழக்க வழக்கங்களைப் பற்றியும்,உலகெங்கிலும் உள்ள பல்வேறு தத்துவர்களையும், சமயங்களையும் பற்றி விவாதித்தார். 1974 - ஆம் ஆண்டு புனே (பூனா) வுக்கு சென்று அங்கு தனது முதல் ஆசிரமத்தை துவங்கி எண்ணிலடங்கா வெளிநாட்டினரை ஈர்த்தார் .அவரின் சவாலான சொற்பொழிவுகளும்,சாதகமான சூழலும் அவர் முறைப் படுத்தித் தந்த நவீன தியான உக்திகளும் அவரை உலக அளவில் பிரபலமாக்கின. இந்தியா அரசுக்கும் சுற்றி இருந்த சமுதயத்திற்கும் 1970 களில் மிகப் பெரிய பிரச்சனையாக காட்சி அளித்தார்.
அவரின் சீடர்களால் அமெரிக்காவில் உலக அளவில் தங்களுக்காக உருவாக்கப்பட்ட சமூகத்திற்கு 1981- ம் ஆண்டு இடம் பெயர்ந்தார்.அது பின்னாளில் ஒரேகான் மாகாணத்தின் ரஜ்னீஸ்புறமாக அறியப் படுகின்றது .

விஸ்வநாதன் ஆனந்த் பிற‌ந்த‌நாள் டிசெம்பர் 11


விஸ்வநாதன் ஆனந்த் (பிறப்பு: டிசெம்பர் 11, 1969, சென்னை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் தற்போதய உலக சதுரங்க வெற்றிவீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி ஜூலை 2006ல் ஆனந்த் 2779 புள்ளிகள் பெற்றார். ஆனந்த் மாத்திரமே 2800 புள்ளிகளைத் தாண்டிய நால்வரில் ஒருவர். இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்.
சதுரங்கமும் ஆனந்தும்
இந்திய செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் குறிப்பிடத்தக்கவர். 14 வயதில் 1983இல் தேசிய சந்துரங்க சாம்பியன் ஆக 9/9 புள்ளிகள் பெற்றார். 15 வயதில் 1984இல் அனைத்துலக மாஸ்டர் (International Master) விருதினைப் பெற்றார். 16 வயதில் தேசிய வெற்றிவீராக மேலும் இருதடவை இந்தவிருதைப் பெற்றார். இவர் ஆட்டங்களை வேகமாக ஆடி லைற்றினிங் கிட் (lightning kid - மின்னல் வேகக் குழந்தை) என்ற பட்டப் பெயரையும் பெற்றார். 1987இல் உலக இளநிலை வெற்றிவீரரான முதலாவது இந்தியரானார்.விஷி எனச் செல்லமாக இவரது நண்பர்களால் சில சமயம் அழைக்கப் படுகின்றார்.
வெல்வதற்கான வாய்புக்களை மயிரிழையில் நழுவவிட்ட ஆனந்த் இறுதியாக 2000ஆம் ஆண்டில் தெகிரானில் அலெக்சி சிறோவ்-ஐத் 3.5 - 0.5 என்ற ரீதியில் தோற்கடித்ததன் மூலம் தமதாக்கிக் கொணடார். எனினும் அவர் 2002இல் இடம்பெற்ற நொக்-அவுட் ஆட்டத்தில் ருஸ்லான் பனமரியோவிடம் தோற்றார்.
உலகச் சதுரங்க வெற்றிவீரர்
விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோ நகரில் செபம்பர் 2007 இல் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் பங்குபற்றினார். செப்டம்பர் 29, 2007 இல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் 9/14 புள்ளிகள் பெற்று புதிய உலக வெற்றிவீரர் ஆனார். இவர் முன்னாள் உலக வெற்றிவீரர் விளாடிமிர் கிராம்னிக்குடன் 2008 அக்டோபரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.
2003 அதிவேக சதுரங்க வெற்றிவீரர்



2000 சதுரங்க வெற்றிவீரர்


1987 உலக இளநிலை சதுரங்க வெற்றிவீரர், கிராஸ்மாஸ்டர்


1985 இந்திய தேசிய வெற்றிவீரர் - 16 வயதில்


1984 தேசிய மாஸ்டர் - 15 வயதில்


1983 தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர், 14 வயதில்
சதுரங்க ஆஸ்கார் (1997, 1998, 2003 மற்றும் 2004)



பத்மபூஷண் (2000)


பிரித்தானிய் சதுரங்க கூட்டமைப்பின் Book of the year விருது 1998.


ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (1991-1992)


தேசியக் குடிமகனுக்கான பத்மசிறீ விருது (1987)


தேசிய விளையாட்டு வல்லுனருக்கான சதுரங்க விருது (1985).

மகாகவி பாரதி பிற‌ந்த‌நாள் டிசம்பர் 11 ...


மகாகவி பாரதி பிற‌ந்த‌நாள் டிசம்பர் 11...
சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.
தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் சமஸ்தானத்தால் வழங்கப்பட்டது.
வாழ்க்கைக் குறிப்பு
1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.


தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
இலக்கியப் பணி
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,


வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி
தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுணைந்த கவிஞாயிறு. சம்ஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
பாஞ்சாலி சபதம்
ஆகியன அவர் படைப்புகளில் சில.
பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்..
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இத்ழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கினைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.
பெண்ணுரிமைப் போராளி
தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுகானவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.
பாஞ்சாலி சபதம்
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.

உலக மனித உரிமைகள் நாள்


உலக மனித உரிமைகள் நாள்
உலக மனித உரிமைகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.

வியாழன், 3 டிசம்பர், 2009

கொடி நாள் டிசம்பர் . -7 .


கொடி நாள் டிசம்பர் . -7 .


நமது நாட்டை பாதுகாப்பதில் ராணுவத்தினருக்கு அதி முக்கிய பங்கு உண்டு . எனவே , நாட்டின் க்ண்னாக போற்றப்படும் ராணுவத்தினரை பாதுகாப்பது அவசியம் என்று பல தரப்பினர் வலியுறுத்தினர் .இதயடுத்து ராணுவத்தினர் நலன் காப்பது குறித்து முடிவு செய்ய ராணுவ அமைக்க்சகத்தின் சார்பில் 1949 ம் ஆண்டு ஆகஸ்ட் 28 ம் தேதி ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது .இந்த கமிட்டி பல மட்டங்களில் ஆலோசனையில் ஈடுபட்டது .
அண்டை நாட்டுடன் போரில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவுதல் , போரில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உதவுதல் , ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு உதவுதல் ஆகிய 3 நோக்கங்களை கொண்டு கொடி நாள் ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது .

அதன்படி 1949 ம் ஆண்டு இதே நாள் முதல் கொடி நாள் அறிவிக்கப்பட்டது .நிதி வசூலில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை ஈடுபடுகின்றன .ராணுவத்தின் ஒரு அங்கமான கேந்தர்ய சைனிக் போர்டு என்ற அமைப்பின் மூலம் இந்த நிதி வசூல் பராமரிக்கப்படுகிறது .

புதன், 2 டிசம்பர், 2009

டிசம்பர் 3 அனைத்துலக ஊனமுற்றோர் நாள்


அனைத்துலக ஊனமுற்றோர் நாள் (International Day of Disabled Persons) என்பது ஆண்டு தோறும் டிசம்பர் 3 ஆம் நாளன்று உலக நாடுகளால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக மக்கள் அனைவரும் ஊனமுற்றோரின் பிரச்சனைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் உருவானதே இந்த நாள்.
ஐக்கிய நாடுகள் அவை 1981 ஆம் ஆண்டை உலக ஊனமுற்றோர் ஆண்டாக முதன் முதலில் அறிவித்தது. அதன் பின்னர் 1982 இன் டிசம்பர் 3-ம் நாளை அனைத்துலக ஊனமுற்றோர் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் சர்வதேச ஊனமுற்றோர் தினம் என அனுசரிக்கப்படுகிறது.
உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதன், 25 நவம்பர், 2009

மாவீரர் நாள்

மாவீரர் நாள்

தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுறுத்தும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.
வரலாறு
விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.
தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

தமிழீழம்
மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெறுகின்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப் படுகிறார்கள்.
புலம்பெயர் நாடுகள்
புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் மாவீரர்துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். முன்னர் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர்நாட்கள் அந்தந்த நாடுகளின் விடுமுறைகளோடு ஒட்டி, ஈழமக்களின் வசதிக்கேற்றபடி நாள் குறிக்கப்பட்டு நினைவுகூரப் பட்டது. தற்போது சில ஆண்டுகளாக அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பெற்று மாவீரர்நாளான நவம்பர் 27 ம் நாளிலேயே அனேகமான புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் நிகழ்கிறது.
கொடியேற்றுதல்
மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத்தேசியக் கொடி தமிழீழத் தேசியத்தலைவர் வே. பிரபாகரன் அவர்களாலும், மாவீரர் குடும்ப உறுப்பினர்களாலும் தமிழீழத்தில் உள்ள அந்தந்தத் துயிலும் இல்லங்களில் ஏற்றப்படும். புலம்பெயர் நாடுகளில் மாவீரர் குடும்ப உறுப்பினார்களால் நிகழ்வு நடைபெறும் மண்டபத்தில் ஏற்றப்படும்.
கொடியேற்றப்படும் போது புதுவை இரத்தினதுரை அவர்களால் எழுதப்பெற்ற ஏறுது பார் கொடி ஏறுது பார்... என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.
மாவீரர்நாள்

மாவீரர்நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்படுகிறது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலி பரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்றுக் கொண்டோர்ர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு செவிமடுக்கப்படுகிறது.
மாவீரர் நாள் பாடல்
மாவீரர் நாள் அன்றும் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். இந்த பாடல் புதுவை இரத்தினதுரை அவர்களால் இயற்றப்பட்டது. வர்ணராமேஸ்வரன் அவர்கள் பாடியது. ஈகச்சடரேற்றும் பொழுது இது பாடப்படுகிறது, அல்லது ஒலிபரப்படுகிறது.[1] இந்தப் பாடல் பின்வருமாறு தொடங்கிறது:

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்
மாவீரர் குடும்ப கௌரவிப்பு
 மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கௌரவிக்கப் படுகிறார்கள். முன்னர் இந்தச் செயற்பாடு தமிழீழத்தில் மட்டுமே கடைப்பிடிக்கப் பெற்றது. தற்போது சில ஆண்டுகளாக வெளிநாடுகளிலும் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெறுகிறது.
 தமிழீழத்தில்
ஒரு மாவீரனின் நினைவுச்சின்னம் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கௌரவ விருந்தினர்களாகக் கவனிக்கப் படுவார்கள்.
புலம்பெயர் நாடுகள்
அதற்கென மாவீரர் வாரத்தின் ஒரு நாளையோ அன்றி மாவீரர் நாளையோ தேர்ந்தெடுத்து அந்த நாளில் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப் படுவார்கள்.
தேசியத்தின் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இலங்குவது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டு கலாச்சாரத்தின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக்கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு.

கார்த்திகைப் பூ
இந்த வகையிலேயே தமிழர்களின் தேசியப்பூவாக, கார் காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர்.

மாவீர‌ன் உத‌ய‌ நாள் ந‌வ‌ம்ப‌ர் 26


வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 - மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
பல இலங்கைத் தமிழர்கள் அவரைத் தமிழீழத் தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் அவருக்கு இருக்கக்கூடிய தொடர்பின் காரணமாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார். அவர் எவ்வாறு இறந்தார் என்ற விவரங்களை பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள் என செ. பத்மநாதன் தெரிவித்தார். பிரபாகரனின் மனைவி, மற்றும் கடைசி மகன் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.சிறிய பையன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும்,அவனது உடலத்தின் புகைப்படடமும் கிடைக்கப் பெற்றது . மதிவதனியின் நிலையும்,துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.
குடும்பப் பின்னணி
வல்வெட்டித்துறையில் நன்கு அறியப்பட்ட சைவ நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிரபாகரன் பிறந்தார். இவரின் தகப்பனார் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி பிரபாகரனின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள்.
சிறுவயது அனுபவங்கள்
தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது இலங்கை காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களைத் துன்புறுத்துவதை நேரடியாக கண்டார். குறிப்பாகப் பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் இலங்கைத் தமிழர்கள், ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள், பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம், இவ்வாறு கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார்.பிரபாகரன் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்த்லுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பி சென்ற பிராபகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை.
வரலாற்று முக்கியத்துவம்.
பிரபாகரனின் போராட்ட வரலாற்றுப் பின்னணியைப் புரிவதற்கு, இலங்கை அரசினது சிறுபான்மை இனங்களுக்கு எதிரான இலங்கைப் பெருந் தேசிய வாதத்தின் இனஞ் சார்ந்த பொருளாதாரச் சார்பு நிலையையும் அதன் மிகக் கெடுதியான இனவொதுக்கல் அரசியலையும் முதலில் புரிந்தாகவேண்டும். அதாவது,"இலங்கை அரசு பொருளாதார முரண்பாடுகளுக்குள் சிங்களப் பெருந்தேசியவாதத்தையும் அது சார்ந்த இனவொதுக்குதலையும் கைவிடாதவரை,பிரபாகரன் தமிழ்த் தேசியத்தின் குறியீடும்,தந்தையும் என்பதை வரலாற்றிலிருந்து அழித்துவிட முடியாது"என்பதே உண்மை.

பிரபாகரன் கூற்றுக்கள்.
"இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி."




'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.'


"ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்."


"உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார்.
"வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்."


"எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்."


"செய் அல்லது செத்துமடி."

வியாழன், 19 நவம்பர், 2009

நவ.,21ம் தேதி ஹலோ தினம்.....

ஹலோ தினம்!  இமெயில், மொபைல் போன் என தகவல் தொடர்பு வசதிகள் பெருகி, உலகமே சுருங்கிவிட்டதால், இன்று ஒருவருக்கொருவர் சந்தித்து மனம் விட்டு பேசுவது குறைந்துகொண்டே வருகிறது. இந்த குறையை போக்கத் தான் ஹலோ தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் நவ.,21ம் தேதி ஹலோ தினமாக கொண்டாடப்படுகிறது. 1973ம் ஆண்டு எகிப்து, இஸ்ரேலிடையே நிகழ்ந்த மோதல்களும், சமாதானமுமே ஹலோ தினம் உருவாக காரணமாக இருந்தது. இன்று 180 நாடுகள் ஹலோ தினம் கொண்டாடுகின்றன. இந்த ஹலோ தினத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ள முடியும். ஒவ்வொருவரும் 10 பேரை சந்தித்து ஹலோ கூறினால் போதுமானது.தீர்க்கமுடியாத பிரச்னைகளுக்கும் இருவர் பேசிக்கொள்ளும் போது தீர்வு கிடைக்கிறது. பெரிய சிக்கல்களுக்கும் சுமூகமான முடிவை எட்ட வழி பிறக்கிறது. இதன் மூலம் உலக அமைதிக்கு வழி கிடைக்கிறது.நம் இதயத்தில் உள்ள சுயநலமும், பயமும் அகன்று நம்பிக்கையும், இரக்கமும் உருவாகும் போது தான் அமைதி பிறக்கும் என்றார் முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன். இவ்வாறு தனிநபர்களிடையே ஏற்படும் சமாதானம், உலக அமைதிக்கும் உதவுகிறது.நோபல் பரிசு பெற்ற அறிஞர்களும் ஹலோ தினத்துக்கு பின்னணியில் உள்ள உன்னத நோக்கத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  உலகில் அமைதி ஏற்படுத்துவதற்கு முதல் படியாக இரு இதயங்களுக்கிடையே சமாதானத்தை உருவாக்குவதே ஹலோ தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம். 

ஞாயிறு, 15 நவம்பர், 2009

அனைத்துலக மாணவர் நாள் நவம்பர் 17 ...


அனைத்துலக மாணவர் நாள் (International Students' Day) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 ஆம் நாளன்று இடம்பெறும் நிகழ்வாகும்.

வரலாறு 
1939 ஆம் ஆண்டில் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் நாசிப் படைகளினால் நசுக்கப்பட்டமை, போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் ஒன்பது மாணவர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டமை, செக்கொசிலவாக்கியா ஆக்கிரமிப்புக்குள்ளாமை போன்ற நிகழ்வுகளின் ஞாபகார்த்தமாக இந்நாள் அநுட்டிக்கப்பட்டு வருகிறது.இந்நாள் முதன் முதலில் 1941 ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் அப்போது அகதிகளாக இடம்பெயர்ந்த மாணவர்கள் அங்கத்தவர்களாயிருந்தனர். இந்நிகழ்வை ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரிக்க ஐரோப்பாவின் தேசிய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஊடாக இந்த மாணவர் அமைப்பு அழுத்தம் கொடுத்தது.

நவம்பர் 17

கிரேக்கத்தில் அந்நாட்டு 1967-1974 இராணுவ ஆட்சிக்கெதிராக ஏத்தன்ஸ் பல்தொழில்நுட்ப பயிற்சி நிலைய மாணவர்கள் நடத்திய போராட்டம் 1973 நவம்பர் 17 இல் அதி உச்சக் கட்டத்துக்கு வந்தது. இந்நாளில் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. இந்நாள் கிரேக்கத்தில் இன்று விடுமுறை நாளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
1989 இல் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்ப படியாக அமைந்தது. இந்நாள் தற்போது செக் குடியரசிலும் சிலவாக்கியாவிலும் விடுதலைக்கும் மக்களாட்சிக்குமான போராட்ட நாளாக அரச விடுமுறையாக்கப்பட்டுள்ளன

காதல் மன்னன் ஜெமினியின் பிறந்தநாள்  17 நவம்பர் ....
ஜெமினி கணேசன்  17 நவம்பர் 1920 – 22 மார்ச்சு 2005) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர், தமிழ் மற்றும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200ம் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழகத்தின் புதுக்கோட்டையில் நவம்பர் 1920ல் பிறந்தவர் ஜெமினி கணேசன். அவரது சினிமா சரித்திரம் மிஸ்மாலினி (1947) மூலமாகத் துவங்குகிறது. பெண், கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார்.அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளையும், பட்டங்களை வழங்கப்பட்டிருக்கிறது.

 இந்நிலையில் அவருடைய தபால்தலை வெளிவந்திருப்பதும் அவர்தம் கலைத் திறனுக்கு ஒரு சான்றாகலாம். தமிழ் திரைப்படத்துறையின் காதல் மன்னன் என்று வருணிக்கப்படும் காலம் சென்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் தபால்தலையினை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதிமாறன் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். ஐந்து ரூபாய் நாணயப்பிரிப்புகளில் வெளியான இந்தத் தபால் தலையினை ஜெமினி கணேசன் அவர்களின் புதல்விகள் கமலா செல்வராஜ் ரேவதி சுவாமிநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

வியாழன், 5 நவம்பர், 2009

வீரமாமுனிவர் பிறந்தநாள் நவம்பர் 8...


வீரமாமுனிவர்
தமிழில் வீரமாமுனிவர் என்றழைக்கப் படுகின்ற பெசுகிப் பாதிரியார், (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1746) தற்போது இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். (இத்தாலிய இயற்பெயர் - Costanzo Giuseppe Beschi,ஆங்கிலம் - Father Constantine Joesph Beschi) இவர் இயேசு சபையைச் சேர்ந்த, ஒரு பாதிரியார் ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு சேசுசபைப் பாதிரியாரானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்க்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்.

பெயர்மாற்றம்...
மதம் பரப்பும் முயற்சிக்காகத் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தனது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.
தமிழக வாழ்க்கை முறை..
1822 இல், முதன் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட வித்துவான் முத்துசாமி பிள்ளை, இவருடைய நடையுடை பாவனைகளை, அந்நூலில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்.
இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு, தலைக்குச் சூரியகாந்திப பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும், வெள்ளைப்பாகையும் , இளங்காவி யுத்தரிய முக்காடும், கையினிற் காவி யுருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், கெம்பொட்டுக் கடுக்கனும், விரலிற்றம்பாக்கு மோதிரமும், கையிற் றண்டுக் கோலும், காலிற் சோடுடனும் வந்து, பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலிதோலாசனத்தின் மேலுட்காருவார்
அவரின் தமிழ் படைப்புகள்...
இவர் எழுத்து, அகரமுதலி, மொழிபெயர்ப்பு, உரைநடை, இலக்கணம், காவியம், பிரபந்தம் என்று பலதுறைகளிலும் முத்திரைப் பதித்தவர்.
சதுரகராதியை,நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.
தொன்னூல் விளக்கம்என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.
கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும். கிறித்தவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக அமைந்தது இந்த நூல் என்றால் மிகையாகாது.
திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.
பரமார்த்த குருவின் கதை என்பது, தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.
காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். இவருடைய வருணணைத் திறனுக்குக் கீழ்க்காணும் பாடல் சாட்சியாகிறது.
பயனினால் மறைநூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும்
வியனினால் உலகம் ஒக்கும் வேலியால் கன்னி ஒக்கும்
முயலினால் அலையை ஒக்கும் முனினி ஒன்னாக் கொக்கும்
நகரினை ஒக்கும் வீடே
திருக்குறளில் அறத்தையும் பொருளையும் லத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை கிய நூல்களைப் படைத்தவர். இதில் பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த ஹாஸ்ய இலக்கியம் என்பதைச் சொல்லத்தானாக வேண்டும்.
திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள். காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் னது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். இவருடைய வருணணைத் திறனுக்குக் கீழ்க்காணும் பாடல் சாட்சியாகிறது.
பயனினால் மறைநூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும் வியனினால் உலகம் ஒக்கும் வேலியால் கன்னி ஒக்கும் முயலினால் அலையை ஒக்கும் முனினி ஒன்னாக் கொக்கும் நகரினை ஒக்கும் வீடே
இந்தப் பாடல் ஜெருசலேம் நகரை வர்ணிக்கிறது. காப்பியத் தலைவர் வருணணை வளவனாரை வர்ணிக்கும் இந்தப் பாடலின் பாங்கில் வெளிப்படுகிறது.
அன்பு வைத்த உயிர்நிலை அ•திலார்க் கென்பு தோலுடல் போர்த்ததென றன்புடை இன்பு தோய்த்த நிலையெனத் தானிவன் துன்பு காய்ந்த உயிர்த்துணை யினான் ஒலிக்குறிப்புகளைத் தம் பாடலில் எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.
வளனார் தேவத்தாயார் திருமணம் குறித்தது இந்தப் பாடல்.
முடுகு முரசொலி முடுகு முழவொலி முடுகு முருகொலி முடிவிலாக் கடுகு பறையொலி கடுகு கலமொலி கடுகு கடலொலிக னிவெழாத் தொடுகு குழலொளி கொடுகு குரலொலி தொடுகு துதியொலி தொடுதலாற் படுகு முகிலொலி படுகு கடலொலி படுத லிலமண மாயதே.

திங்கள், 2 நவம்பர், 2009

உலக நாயகனின் உதய நாள் நவம்பர் 7...


உலக நாயகனின் உதய நாள் நவம்பர் 7...
கமல்ஹாசன் (பிறப்பு - நவம்பர் 7, 1954, பரமக்குடி), புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். கமல்ஹாசன், தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
*கமல்ஹாசன் இதுவரை 2006 ஆம் ஆண்டுவரை 240 திரைப்படங்களில் நடித்துள்ளார்,
1960 - தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகம்

1962 - மலையாளத் திரைப்படங்களில் அறிமுகம்

1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்

1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்

1977 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்

1977 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்

 கமல்ஹாசன் கலைப்பயணம்

2009 - "உன்னைப்போல் ஒருவன்" 'WEDNESDAY' என்ற ஹிந்தி திரைப்படத்தின் மீள்தயாரிப்பு

2008 - தசாவதாரம் (திரைப்படம்) (பத்து வேடங்கள்)

2006 - வேட்டையாடு விளையாடு

2005 - ராமா சாமா பாமா (கன்னடம்)

2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (த) (எ)

2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (ஹிந்தி (த) (எ)

2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (தெலுங்கு) (த) (எ)

2004 - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

2004 - விருமாண்டி (த) (எ) (இ)

2004 - பொதுராஜு (தெலுங்கு) (த) (எ) (இ)

2003 - நள தமயந்தி (நட்புக்காக) (த) (எ)

2003 - அன்பே சிவம் (எ)

2002 - பஞ்சதந்திரம்

2002 - பம்மல் கே.சம்பந்தம்

2002 - பிரம்மச்சாரி (தெலுங்கு)

2001 - லேடீச் ஒன்லி

2001 - பார்த்தாலே பரவசம் (நட்புக்காக)

2001 - பரவசம் (தெலுங்கு) (நட்புக்காக)

2001 - ஆளவந்தான் (இரட்டை வேடம்) (எ)

2001 - அபே (ஹிந்தி) (இரட்டை வேடம்) (எ)

2001 - அபே (தெலுங்கு) (இரட்டை வேடம்) (எ)

2000 - தெனாலி

2000 - தெனாலி (தெலுங்கு)

2000 - ஹே ராம் (த) (எ) (இ)

2000 - ஹே ராம் (ஹிந்தி) (த) (எ) (இ)


தொண்ணூறுகள்

1998 - காதலா காதலா

1998 - சாச்சி 420 (ஹிந்தி) (த) (எ) (இ)

1996 - அவ்வை சண்முகி

1996 - பாமனெ (தெலுங்கு)

1996 - இந்தியன் (திரைப்படம்)(இரட்டை வேடம்)

1996 - இந்துஸ்தானி (Hindi) (இரட்டை வேடம்)

1996 - பாரதீயுடு (தெலுங்கு) (இரட்டை வேடம்)

1995 - குருதிப்புனல் (பாடல்களில்லாத திரைப்படம்) (த)

1995 - த்ரோகி (தெலுங்கு) (பாடல்களில்லாத திரைப்படம்) (த)

1995 - சுப சங்கல்பம் (தெலுங்கு)

1995 - சதி லீலாவதிi (த)

1994 - நம்மவர்

1994 - மகளிர் மட்டும் (நட்புக்காக (த)

1994 - ஆடவளக்கு மாற்றம் (தெலுங்கு) (நட்புக்காக) (த)

1994 - மகாநதி (திரைப்படம்) (b)

1993 - கலைஞன்

1993 - மகராசன் (த)

1992 - தேவர் மகன் (த) (எ) - ஹிந்தியில் மறுதாயாரிப்பு விராசாத்.

1992 - ஷத்ரிய புத்ருடு (தெலுங்கு) (த)

1992 - சிங்காரவேலன்

1991 - குணா

1990 - மை டியர் மார்த்தாண்டன் (நட்புக்காக)

1990 - மைக்கேல் மதன காம ராஜன் (நான்கு வேடம்) (த)

1990 - மைக்கேல் மதன காம ராஜு (தெலுங்கு) (நான்கு வேடம்) (த)

1990 - இந்திரன் சந்திரன் (இரட்டை வேடங்கள்)


எண்பதுகள்

1989 - இன்ருடு சன்ருடு (தெலுங்கு)(இரட்டை வேடங்கள்) ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டதுமேயர் சாப்

1989 - வெற்றி விழா

1989 - சாணக்யன் (மலயாளம்)

1989 - அபூர்வ சகோதரர்கள் (மூன்று வேடங்கள்) (த) ஹிந்தியிலும்.தெலுங்கிலும் மொழிமற்றம் செய்யப்பட்டன.

1989 - ச்ப்பு ராஜா (ஹிந்தி (மூன்று வேடங்கள்) (த)

1989 - அபூர்வ சகோதருலு (தெலுங்கு) (மூன்று வேடங்கள்) (த)

1988 - உன்னால் முடியும் தம்பி

1988 - சூர சம்ஹாரம்

1988 - டெய்சி (மலையாளம்)

1988 - சத்யா (த)

1988 - பேசும் படம்

1987 - புஷ்பக் (ஹிந்தி)

1987 - புஷ்பக விமானம் (தெலுங்கு)

1987 - புஷ்பக விமானா (கன்னடம்)

1987 - கடமை கண்ணியம் கட்டுப்பாடு (நட்புக்காக) (த)

1987 - நாயக்குடு (தெலுங்கு)

1987 - வேலு நாயக்கன் (ஹிந்தி)

1987 - நாயகன் - ஹிந்தித் திரைப்படமான தயவன் இல் இப்படத்தினை போன்ற சாயல்.

1987 - பேர் சொல்லும் பிள்ளை

1987 - அந்த்தரிகந்தே கனுடு (தெலுங்கு)

1987 - விரதம் (மலயாளம்)

1987 - காதல் பரிசு

1986 - டிசம்பர் பூக்கள் (நட்புக்காக)

1986 - டான்ஸ் மாஸ்டர் (தெலுங்கு) (இரட்டை வேடம்)

1986 - புன்னகை மன்னன் (இரட்டை வேடம்)

1986 - ஒக்க ராதா இதரு கிருஷ்னுலு (தெலுங்கு)

1986 - விக்ரம் (த)

1986 - நானும் ஒரு தொழிலாளி

1986 - சிப்பிக்குள் முத்து

1986 - ஸ்வாதி மூத்யம் (தெலுங்கு) - ஹிந்தியில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது ஈஷ்வர் அணில் கபோருடன்

1986 - மனக்கணக்கு (நட்புக்காக)

1985 - தேகா பியார் துமாரா (ஹிந்தி)

1985 - ஜப்பானில் கல்யாணராமன் (இரட்டை வேடம்)

1985 - மங்கம்மா சபதம்

1985 - ஜிராப்டார் (ஹிந்தி)

1985 - சாகர் (ஹிந்தி)

1985 - உயர்ந்த உள்ளம்

1985 - அந்த ஒரு நிமிடம்

1985 - காக்கிச் சட்டை

1985 - ஒரு கைதியின் டைரி (இரட்டை வேடம்) - ஆக்ரி ராஸ்தாவாக ஹிந்த்தியில் மறு தயாரிப்பு.

1984 - கரிஷ்மா (ஹிந்தி)

1984 - எனக்குள் ஒருவன் (இரட்டை வேடம்)

1984 - ராஜ் திலக் (ஹிந்தி)

1984 - யாட்கார் (ஹிந்தி)

1984 - ஏக் நை பகெலி (ஹிந்தி)

1984 - ஜே தேஷ் (ஹிந்தி)

1983 - தூங்காதே தம்பி தூங்காதே (இரட்டை வேடம்)

1983 - வெங்கியலி அரலித குவு (கன்னடம்)

1983 - பொய்க்கால் குதிரை (நட்புக்காக)

1983 - சத்மா (ஹிந்தி)

1983 - சலங்கை ஒலி தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தெலுங்குப்படம்

1983 - சாகரா சங்கமம் (தெலுங்கு)

1983 - சினேக பந்தம் (மலையாளம்)

1983 - சட்டம்

1983 - உருவங்கள் மாறலாம் (நட்புக்காக)

1983 - சாரா ஸீ சிந்தகிi (ஹிந்தி)

1983 - வசந்த கோகிலா (தெலுங்கு)

1982 - பாடகன் (சனம் தேரி கசமின் மொழிமாற்ற வெளியீடு)

1982 - அக்னி சாட்சி (நட்புக்காக)

1982 - பியாரா தரானா (நினைத்தாலே இனிக்கும் திரைபடத்தின் மொழிமாற்ற வெளியீடு)

1982 - பகடை பன்னிரெண்டு

1982 - ஜே தோ கமல் ஹொகயா (ஹிந்தியில் முதல் இரட்டை வேடம்) இத்திரைப்படம் சட்டம் என் கையிலின் ஹிந்தித் தயாரிப்பு.

1982 - ராணித் தேனி (நட்புக்காக)

1982 - எழம் ராத்திரி (மலையாளம்)

1982 - சகலகலா வல்லவன்

1982 - சனம் தேரி கசம் (ஹிந்தி)

1982 - ஷிம்லா ஸ்பெஷல்

1982 - மூன்றாம் பிறை (திரைப்படம்) - சாத்மாவாக ஹிந்தியில் மறுதயாரிப்பு.

1982 - அந்தி வெயிலிலே (மலையாளம்)

1982 - அந்தகடு (தெலுங்கு)

1982 - வாழ்வே மாயம் (மலையாளம்)

1982 - வாழ்வே மாயம்

1981 - தோ தில் தீவானே (மொழிமாற்றம் செய்யப்பட்டது)

1981 - எல்லாம் இன்பமயம்

1981 - டிக்! டிக்! டிக்!

1981 - அமாவாசைய சந்துருடு (தெலுங்கு) (த)

1981 - சங்கர்லால்

1981 - சவால்

1981 - கடல் மீன்கள்

1981 - எக் துஜே கெ லியே (ஹிந்தி)

1981 - ராஜ பார்வை (த)

1981 - ராம் லக்சுமன்

1981 - பிரேம பிச்சிi (தெலுங்கு)

1981 - மீண்டும் கோகிலா

1981 - ஆகலி ராஜ்யம் (தெலுங்கு)

1981 - தில்லு முல்லு (நட்புக்காக)

1980 - நட்சத்திரம் (நட்புக்காக)

1980 - மரியா மை டார்லிங் (தமிழ்)

1980 - மரியா மை டார்லிங் (கன்னடம்)

1980 - வறுமையின் நிறம் சிகப்பு

1980 - குரு

1980 - உல்லாசப் பறவைகள்

 எழுபதுகள்

1979 - அழியாத கோலங்கள் (நட்புக்காக)

1979 - நீல மலர்கள் (நட்புக்காக)

1979 - மங்கள வாத்தியம்

1979 - கல்யாணராமன் (தமிழ்)

1979 - ஜப்பானில் கல்யாணராமன் (தமிழ்)

1979 - இடிகாதா காது (தெலுங்கு)

1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும் (தெலுங்கு)

1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும்

1979 - அந்தமைனா அனுபவம் (தெலுங்கு)

1979 - நினைத்தாலே இனிக்கும்

1979 - தாயில்லாமல் நான் இல்லை

1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும் (மலையாளம்)

1979 - நீயா!

1979 - சிகப்புக்கல் மூக்குத்தி

1979 - சோமோகடித்தி சொக்கடித்தி (தெலுங்கில் முதல் இரட்டை வேடம்)(தெலுங்கு) இரு நிலவுகள் தமிழில் மொழிமாற்றம்.

1978 - தப்புத் தாளங்கள் (நட்புக்காக)

1978 - தபித்த தாளா (தெலுங்கு) (நட்புக்காக)

1978 - மதனோல்சவம் (மலையாளம்)

1978 - யீட்ட (மலையாளம்)

1978 - அவள் அப்படித்தான்

1978 - மனிதரில் இத்தனை நிறங்களா!

1978 - சிகப்பு ரோஜாக்கள்

1978 - வயனாதன் தம்பன் (மலையாளம்)

1978 - வயசு பிலிச்சிந்தி (தெலுங்கு)

1978 - சட்டம் என் கையில் (தமிழில் முதல் இரட்டை வேடம்)

1978 - இளமை ஊஞ்சலாடுகிறது

1978 - மரோ சரித்திரா (தெலுங்கு)

1978 - நிழல் நிஜமாகிறது

1977 - ஆத்யப்பாதம் (மலையாளம்) (நட்புக்காக)

1977 - சத்யவான் சாவித்ரி (மலையாளம்)

1977 - கோகிலா கன்னடத்தில் முதல் படம்

1977 - நாம் பிறந்த மண்

1977 - ஆனந்தம் பரமானந்தம் (மலையாளம்) (நட்புக்காக)

1977 - ஆடு புலி ஆட்டம்

1977 - 16 வயதினிலே

1977 - ஊர் மகள் மரிக்குமோ (மலையாளம்) (நட்புக்காக)

1977 - நிறைகுடம் (மலயாளம்)

1977 - ஆஸ்த மாங்கல்யம் (மலையாளம்) (நட்புக்காக)

1977 - கபிதா (வங்காளம்)

1977 - உன்னை சுற்றும் உலகம்

1977 - சிறீதேவி (மலையாளம்)

1977 - மதுர சொப்னம் (மலையாளம்)

1977 - அவர்கள் (நட்புக்காக)

1977 - ஆசீர்வாதம் (மலையாளம்)

1977 - சிவதாண்டவம் (மலையாளம்)

1977 - உயர்ந்தவர்கள்l

1976 - லலிதா (நட்புக்காக)

1976 - மோகம் முப்பது வருஷம்

1976 - மூன்று முடிச்சு

1976 - னீ எந்தே லகாரி (மலையாளம்)

1976 - பொன்னி (மலையாளம்)

1976 - இதய மலர்

1976 - குமார விஜயம்

1976 - குட்டவும் சிட்சாயும் (மலையாளம்)

1976 - உணர்ச்சிகள் (மலையாளம்)

1976 - ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது

1976 - சத்தியம்

1976 - அருது (மலயாளம்) (நட்புக்காக)

1976 - ஸ்விமிங் பூல் (மலையாளம்)

1976 - மன்மத லீலை

1976 - சமசியா (மலையாளம்)

1976 - அப்பூப்பான் (மலையாளம்)

1976 - அக்னி புஷ்பம் (மலயாளம்)

1975 - அந்தரங்கம்

1975 - ராசலீலா (மலையாளம்)

1975 - மற்றொரு சீதா (மலையாளம்)

1975 - திருவோணம் (மலையாளம்)

1975 - அபூர்வ ராகங்கள்

1975 - மாலை சூட வா

1975 - ஞனன் நினே பிரேமிக்கினு (மலையாளம்)

1975 - பட்டிக்காட்டு ராஜா

1975 - தங்கத்திலே வைரம்

1975 - மேல்நாட்டு மருமகள் (வானி கண்பதியச் சந்தித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டார்.)

1975 - தேன் சிந்துதே வானம்

1975 - ஆயிரத்தில் ஒருத்தி

1975 - பட்டாம்பூச்சி

1975 - சினிமா பைத்தியம்

1974 - பணத்துக்காக

1974 - ஆய்னா (ஹிந்தி)

1974 - அந்துலேனி காதா (தெலுங்கு)

1974 - அவள் ஒரு துடர்கதா (மலையாளம்)

1974 - அவள் ஒரு தொடர்கதை

1974 - விஷ்னு விஜயம் (மலையாளம்)

1974 - அன்புத் தங்கை

1974 - கன்யாகுமாரி (மலையாளம்)

1974 - நான் அவனில்லை

1974 - குமாஸ்தாவின் மகள்

1974 - பருவ காலம்

1973 - சொல்லத்தான் நினைக்கிறேன்

1973 - அரங்கேற்றம்

1972 - குறத்தி மகன்

1970 - மாணவன்

அறுபதுகள்

1963 - ஆனந்த ஜோதி

1963 - வானம்பாடி

1962 - கண்ணும் கரளும் (மலையாளம்)

1962 - பாத காணிக்கைi

1962 - பார்த்தால் பசிதீரும் (முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)


1960 - களத்தூர் கண்ணம்மா

கமல்ஹாசனின் தயாரிப்பில் வந்த திரைப்படங்கள்

ராஜ பார்வை

அபூர்வ சகோதரர்கள்

சத்யா

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

மைக்கேல் மதன காமராஜன்

தேவர் மகன்

ஹே ராம்

விருமாண்டி

மகளிர் மட்டும்

மும்பை எக்ஸ்பிரஸ்

கமல்ஹாசன் எழுதிய திரைக்கதைகள்


1999 - விவி நெ.1 (இந்தி)

1997 - விராசாத் (இந்தி)

கமல்ஹாசன் இயக்கிய திரைப்படங்கள்

1998 - Chachi 420

2000 - ஹே ராம்

2004 - விருமாண்டி

மேலும் பங்காற்றிய திரைத் துறைகள்

2006 - புதுப்பேட்டைi (பின்னணிப் பாடகர்)

2004 - மும்பை எக்ஸ்பிரஸ் (பின்னணிப் பாடகர்)

2004 - வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (பின்னணிப் பாடகர்)

2003 - அன்பே சிவம் (பின்னணிப் பாடகர்)

2003 - நள தமயந்தி (பின்னணிப் பாடகர்)

2000 - ஹே ராம் (சிகையலங்காரம்)

1998 - சாச்சி 420 (பின்னணிப் பாடகர்: "ஜாகொ கோரி") (கமலாகவே நடித்துள்ளார்)

1996 - உல்லாசம் (பின்னணிப் பாடகர்)

1996 - அவ்வை சண்முகி (பின்னணிப் பாடகர்)

1995 - சதி லீலாவதி (பின்னணிப் பாடகர்)

1992 - தேவர் மகன் (பின்னணிப் பாடகர்)

1987 - நாயகன் (பின்னணிப் பாடகர்)

1985 - ஒக்க ராதா இடரு கிருஷ்னுலு (பின்னணிப் பாடகர்)

1975 - அந்தரங்கம் (பின்னணிப் பாடகர்)

1974 - ஆய்னா (நடனங்கள்)

 விருதுகள்

*மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள். (திரைப்படங்கள் - மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்)

*சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது. (திரைப்படம் - களத்தூர் கண்ணம்மா)

18 பிலிம்பேர் விருதுகள்.

பத்மஸ்ரீ விருது (1990)

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம். (2005)