ஞாயிறு, 16 மே, 2010

அயோத்தி தாசர் உத‌ய நாள் மே 20

அயோத்தி தாசர் உத‌ய நாள் மே 20..
அயோத்தி தாசர் (மே 20, 1845 - 1914; தமிழ்நாடு) ஒரு சாதிக்கொடுமை எதிர்ப்பாளர், சமூக சேவகர், தமிழ் அறிஞர். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். தலித் பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 நூற்றாண்டின் இறுதியில் தலித் மக்களின் முன்றேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவரமாக செயற்பட்டார். இவர் பெரியாருடனும் தொடர்பு பேணினார். அவரது இயற்பெயர் காத்தவராயன். அயோத்திதாசர் தமிழ், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம், வடமொழி, மற்றும் பாலி போன்ற மொழியறிவும் பெற்று விளங்கினார்.
இவரைப் பற்றிய நூற்கள்

ஞான அலாய்சியஸ். அயோத்தி தாசர் சிந்தனைகள் ..

புதன், 5 மே, 2010

உலக செவிலியர் நாள் மே 12

உலக செவிலியர் நாள் மே 12...
உலக செவிலியர் நாள் (International Nurses Day) உலக நாடுகளனைத்திலும் மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.  உலக செவிலியர் அமைப்பு (International Council of Nurses) இந்நாளை 1965அம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. 1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (Dorothy Sutherland) என்பவர் இந்நாளை செவிலியர் நாளாக அறிவிக்க அன்றைய அதிபர் ஐசன்ஹோவருக்கு விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
ஜனவரி 1974இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.
இங்கிலாந்தில் செவிலியர் நாள்..
ஆண்டுதோறும் மே 12ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயபூவமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அது அங்கு சமூகமளிக்கும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
செவிலியர் வாரம்
ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் மே 9 இலிருந்து மே 15 வரை 1974 ஆம் ஆண்டிலிருந்து செவிலியர் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.
 

ந‌மிதா பிற‌ந்த‌ நாள் மே 10...

ந‌மிதா பிற‌ந்த‌ நாள் மே 10...
நமிதா (பி. மே 10, 1981), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நமிதா நடித்துள்ள தமிழ் திரைப்படங்கள்
எங்கள் அண்ணா (2004)
ஏய் (2005)
சாணக்கியா (2005)
பம்பரக்கண்ணாலே (2007)
ஆணை (2005)
இங்கிலீஷ்காரன் (2005)
கோவை பிரதர்ஸ் (2006)
பச்சக் குதிர (2006)
தகப்பன்சாமி (2006)
நீ வேணுன்டா செல்லம் (2006)
வியாபாரி (2007)
நான் அவன் இல்லை (2007)
அழகிய தமிழ் மகன் - (2007)
பில்லா - (2007)

உலக செஞ்சிலுவை நாள் மே 8

உலக செஞ்சிலுவை நாள் மே 8 ...
உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (International Red Cross and Red Crescent Day) மே 8ஆம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகார்த்தாவுமான ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது.

வரலாறு
முதலாம் உலகப் போரின் பின்னர் சமாதானத்துக்கான தேவை உணரப்பட்டது. செக்கோஸ்லவாக்கியாவில் சமாதானத்தை வலியுறுத்தி 1922 இல் ஈஸ்டர் திருநாளுக்காக மூன்று நாள் யுத்த நிறுத்தத்துக்கான வேண்டுகோள் விடப்பட்டது. இதுவே பின்னர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளாக அநுசரிக்கத் தூண்டுதலாக அமைந்தது எனலாம். 1934 ஆம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தினரின் 15வது அனைத்துலக மாநாட்டில் இது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் 1948 ஆம் ஆண்டிலேயே இந்நாளை செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவரான ஹென்றி டியூனண்ட் அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடும் தீர்மானம் எடுக்கப்பட்டது. முதலில் இந்நாள் செஞ்சிலுவைச் சங்க நாள் என்றே அழைக்கப்பட்டது. எனினும் பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாகி 1984 இல் இருந்து இந்நாள் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் என அழைக்கப்படுகிறது.

இரவீந்தரநாத் தாகூர் உத‌ய‌ நாள் மே 7

இரவீந்தரநாத் தாகூர் உத‌ய‌ நாள் மே 7
இரவீந்தரநாத் தாகூர் (வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவர். இவர் மக்களால் அன்பாக குருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக உள்ளது.
கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனை பெயரில் வெளியிட்டார். 1877 ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவரது முயற்சிகள் இவர் எழுதிய ஏராளமான எழுத்துக்கள் மூலமும், விசுவபாரதி பல்கலைக்கழகம் என்னும் அவர் நிறுவிய கல்வி நிறுவனத்தின் மூலமும் இன்றும் வாழ்ந்துகொண்சிருக்கின்றன.
கடுமையான செந்நெறி வடிவங்களை விலக்கியதன் மூலம் தாகூர் வங்காலக் கலையை நவீனமயப்படுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் என்பன அரசியல் தலைப்புக்களையும், தனிப்பட்ட விடயங்களையும் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை மிகவும் அறியப்பட்ட அவரது ஆக்கங்கள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் உணர்ச்சிகளுக்காகவும், மக்கள் மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் பெரிதும் புகழப்பட்டன.

இவர் பிறந்த வம்சத்தில் பூமகளும் நாமகளும் கூடியே வாழ்ந்தனர். செல்வமும் கல்வியும் இலங்கும் ஒப்பற்ற வமிசம். இவருடைய சகோதரர்களில் ஒருவரான துவேந்திரநாத் உபநிடதங்களைக் கற்ற பண்டிதர், இன்னொருவர் ஓவியக் கலையில் புகழ் பெற்றவர், ஒரு சகோதரர் அரசாங்கத்தில் கலெக்டெராகப் பணியாற்றினார். இவருடைய சகோதரியின் புத்திரர்கள் அபினீந்திர நாதரும், சுகனேந்திர நாதரும் சித்திரக் கலையிலும் சிற்பக் கலையிலும் நாடெங்கும் புகழ் பெற்றவர்கள். இத்தகைய குடும்பத்தில் பிறந்த இரவீந்திரர் இசை, கலை, காவியம் ஆகிய துறைகளில் மிகவும் தேர்ச்சியுடையவர்.
தொடக்க காலம் (1861-1901)

இரவீந்திரநாத் தாகூர் தேவேந்திரநாத்தின் புதல்வர். இவர் 7 மே 1861(1861-05-09) ஆம் ஆண்டு கல்கத்தாவில் இருந்த ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். இவர் தாயார் பெயர் சாரதா தேவி. இவரது பெற்றோருக்குப் பிறந்து உயிர் தப்பிய 13 பிள்ளைகளில் இவர் கடைசிப் பிள்ளை. இவரது இளம் வயதிலேயே தாயார் இறந்து விட்டதாலும் தந்தையார் அடிக்கடி பயணங்களை மேற்கொண்டிருந்ததாலும் இவர் பெரும்பாலும் வேலைக்காரரின் கைகளிலேயே வளர்ந்தார். இரவீந்திரருக்குப் பள்ளியில் உபாத்தியாயரின் உரையில் மனம் நாடவில்லை. இவர், பள்ளிக்குச் செல்வதைத் துன்பமே எனக் கருதினார். இவர் மனம் வங்காள பாஷையிலும், சமசுக்கிருத பாஷையிலும் லயித்து நின்றது. இவரது பதினோராவது வயதில் பூணூல் சடங்குக்குப் பின்னர், 14 பெப்ரவரி 1873 ஆம் ஆண்டு இவரது தகப்பனாருடன் கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுப் பல மாதங்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவரது தந்தையாரின் சாந்திநிகேதன் தோட்டத்துக்கும் சென்றனர். பின்னர் இமயமலைப் பகுதியான டால்கூசிக்குச் செல்வதற்கு முன்னர் அம்ரித்சாரிலும் இவர்கள் தங்கினர். அங்கே அவர் பலருடைய வரலாறுகளை வாசித்ததுடன், வீட்டிலேயே வரலாறு, வானியல், அறிவியல், சமசுக்கிருதம் ஆகிய பாடங்களைப் படித்தார். காளிதாசரின் கவிதைகளையும் கற்றார். தான் ஒரு பாரிஸ்டர் (Barrister) ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் Brighton, Londonல் ஒரு பள்ளியில் 1878ல் சேர்ந்தார். பிறகு லண்டன் சர்வகலாசாலையில் படித்தார். ஆனால் சேக்சுப்பியரினதும் அவர் போன்ற பிறரினதும் ஆக்கங்களை ஆராய்வதிலேயே ஆர்வம் காட்டியதால் பட்டம் பெறாமலேயே 1880ல் வங்காளத்திற்குத் திரும்பிவிட்டார். 1883ஆம் வருடம் டிசம்பர் 9ஆம் தேதி மிருனாலி தேவி என்னும் 10 வயதுப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஐந்து குழைந்தைகள் பிறந்தன. ஆனால் இரண்டு குழைந்தைகள் வாலிபப் பருவம் அடையுமுன்பே இறந்து விட்டனர். 1890 ஆம் ஆண்டில் தாகூர் இன்றைய வங்காளதேசத்தின் பகுதியாக உள்ள சிலைடாகா என்னும் இடத்தில் இருந்த குடும்பத்தின் பெரிய பண்ணையை நிர்வாகம் செய்யத் தொடங்கினார். 1898 ஆம் ஆண்டில் இவரது மனைவியும் பிள்ளைகளும் அங்கு சென்று இவருடன் இணைந்து கொண்டனர். 1890 ஆம் ஆண்டில் இவரது பெயர் பெற்ற ஆக்கங்களில் ஒன்றான மானஸ்த் என்னும் கவிதையை வெளியிட்டார். 1895ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் வாழ்க்கையில் பேரும், புகழும், பட்டமும், இன்னலும், இகழ்ச்சியும் ஒரு சேரக் கலந்தன எனலாம். அக்காலத்திலிருந்த பாரத மக்களின் நிலமையைக் கண்டு பாரத தேவியின் அருந்தவப் புதல்வராகிய இரவீந்திர நாதர் மனம் உளைந்து, தேசத் தொண்டில் இறங்கினார்.  1901ல் தாகூர் ஷிலைடஹாவிலிருந்து (Shilaidaha) சாந்தினிகேதனுக்குக் குடியேறினார்.அங்கு அவர் ஒரு ஆச்சிரமத்தை நிறுவினார். அது ஒரு பிரர்த்தனைக் கூடம், பள்ளிக்கூடம், புத்தக சாலையுடன் மரங்களும், செடிகளும் கொண்ட பூஞ்சோலையாக மிளிர்ந்தது. இங்கே தாகூரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இறந்து போயினர். இவரது தந்தையாரும் 1905 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து தந்தையார் மூலமான சொத்துரிமை மூலம் இவருக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைத்தது. திரிபுராவின் மகாராசாவிடம் இருந்தும் இவருக்கு ஒரு தொகை வருமானமாக வந்தது. அத்துடன், குடும்பத்தின் நகைகள், பூரியில் இருந்த கடற்கரையோர மாளிகை என்பவற்றை விற்றதன் மூலமும் இவர் வருமானம் பெற்றார். இது தவிர இவரது ஆக்கங்களுக்கான உரிமமாகவும் 2,000 ரூபா கிடைத்தது.
இக் காலத்தில் இவரது ஆக்கங்கள் வாங்காளத்திலும், பிர நாடுகளிலும் புகழ் பெறத் தொடங்கின. இவர் தனது நைவேத்ய (1901), கேயா (1906) போன்ற ஆக்கங்களையும் வெளியிட்டார்.
நோபெல் பரிசு
1913ல் அவர் நோபெல் பரிசு இலக்கியத்திற்காக (for Literature) தன்னுடைய படைப்புகளுக்காகப் பெற்றார். 1915ல் பிரிட்டிஷ் அரசாங்கம் தாகூருக்கு Knighthood பட்டம் அளித்தது.
1921ஆம் ஆண்டு சாந்தினிகேதனுக்கு அருகில் உள்ள சுருல் என்ற கிராமத்தில் ஸ்ரீநிகேதன் (Abode of Peace) என்ற நிறுவனத்தை ஆம்பித்தார்.
1905ஆம் ஆண்டில் "வங்காளத்தைப் பிரிப்போம்" என்று அரசாங்கம் தீர்மானிக்க வங்காளம் முழுவதும் கொதித்தெழுந்தது. இரவீந்திர நாதரும் "அடிமை ஒழிக" என கர்ஜித்து எழுந்தார்; எண்ணிறந்த கூட்டங்களில் இடியென வெகுண்டு பேசினார். இவர் செய்த பிரசாரங்களில் உள்ள வீராவேசமும், தேசாபிமானமும், தன் நாட்டு மக்களிடத்தில் உள்ள தயையும் வேறெந்த மொழியிலும் நான் கண்டதில்லை" என்று இ.ஜே. தாம்சன் என்னும் ஆங்கிலேயர் கூறுகின்றார்..
இக்காலத்தில்தான் இரவீந்திர நாதர், தம் நாட்டு மக்களிடமிருந்த வறுமையையும், அடிமையையும் கண்டதுடன் அவர்கள் அடைந்திருந்த தாழ் நிலையையும் கண்டார். கல்வி அறிவே இல்லாதோர் எண்ணிறந்தவர். மூட நம்பிக்கையும், குறுகிய நோக்கமும், சுயநலமும், சிறு மனமும் எங்கும் திகழ்வதைக் கண்டார். "இந்திய மக்களுக்கு இக்கதியும் வந்ததோ!" என்று துன்பத்தில் ஆழ்ந்தார். தங்களிடமிருந்த இப்பெருங்குறைகளை நீக்கினாலன்றி இவர்களால் அடையத் தக்கது ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்தார். இனி இங்கு இருப்பதில் பயனில்லை என்று தேசிய இயக்கங்கள் யாவற்றிலுமிருந்து திடீரென்று விலகினார்.
1919ஆம் ஆண்டில் பஞ்சாபிலுள்ள அமிர்தசரசில் நடந்த கோர சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் இரவீந்திர நாதர், தமக்கு ஆங்கிலேயரால் அளிக்கப்பட்ட "ஸர்" பட்டத்தைத் துறந்ததுடன், உள்ளன்பில்லாத வெளி நடப்பில் தமக்குப் பற்றில்லை என்பதையும் புலப்படுத்தி செவி தைக்கும்படி சுடுசொல் பகர்ந்திருக்கின்றார்.
1930ஆம் ஆண்டு ஜூன் மாதம் H.G. Wells அவர்களும் தாகூரும் ஜெனீவாவில் சந்தித்தனர். அன்று அவர்கள் பல விஷயங்கள் பற்றி உரையாடினார்கள். ஜூலை 14 1930 அன்று Dr. Mendel என்னும் நண்பர் மூலம் பிரசித்திபெற்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அவர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இதன் பிறகு ஐன்ஸ்டீன் தாகூருடைய இல்லத்திற்கு வந்து அவருடன் உரையாடினார்.
இரவீந்திரர் தனது 8 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார் அவைகளை பானுஷங்கோ (sun lion) என்ற புனைப்பெயரில் 1877ல் வெளியிட்டார். 16வது வயதில் சிறு கதைகளும், நாடகங்களும் எழுத ஆரம்பித்தார். தன்னுடைய 20வது வயதில் தன்னுடைய முதல் நாடகத்தை, "வால்மீகி பிரபிதா" (The Genius of Valmiki) எழுதினார். அவருடைய 60 வயதில் டிராயிங் மற்றும் பெயிண்டிங் செய்ய ஆரம்பித்தார். தெற்கு பிரான்ஸில் சந்தித்த ஒரு கலைஞரின் ஊக்குவிப்பினால் தன்னுடைய படைப்புகளை வைத்துப் பொருட்காட்சி நடத்தினார்.
1878 முதல் 1932 முடிய இரவீந்திரர் ஐந்து கண்டங்கலில் முப்பத்து ஒரு தேசங்களுக்கு சென்றிருக்கிரார். எழுத்தாளாராக, அநேக புத்தகங்கள் எழுதியுள்ளார். முதலில் தன் தாய் மொழியான வங்காளத்தில் தான் எழுதினார். அவருடைய கீதாஞ்சலிக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்ததும், தான் எற்கனவே வங்காளியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 2000த்திற்கும் மேலாகப் பாடல்கள் எழுதி மெட்டும் போட்டுள்ளார். அதில் இரண்டு பாடல்கள் இந்தியா, மற்றும் பங்களா தேசத்தின் தேசிய கீதமாக ஆயின.
பயணங்கள்

1878க்கும் 1932க்கும் இடையில் தாகூர் ஐந்து கண்டங்களில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். இவற்றுட் பல பயணங்கள் இவரது ஆக்கங்களை இந்தியரல்லாதவர்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும், இவரது அரசியல் எண்னங்களைப் பரப்புவதற்கும் முக்கிய பங்காற்றின. 1912 ஆம் ஆண்டில் தன்னுடைய ஆக்கங்கள் சிலவற்றின் மொழிபெயர்ப்புகளோடு தாகூர் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே இவரது ஆக்கங்கள் சார்லசு எப். ஆன்ட்ரூசு, ஆங்கில-ஐரியக் கவிஞரான வில்லியம் பட்லர் யீட்சு, எசுரா பவுண்ட், ராபர்ட் பிரிட்ஜசு, ஏர்னஸ்ட் ரைசு, தாமசு இசுட்டர்சு மூர் மற்றும் பலரைக் கவர்ந்தன. யீட்சு கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான முகவுரையை எழுதினார். ஆன்ட்ரூசு சாந்திநிகேதனில் இணைந்துகொண்டார். 1910 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி தாகூர் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் பயணம் ஒன்றைத் தொடங்கினார்.
ஐக்கிய இராச்சியத்தில் அவர் இசுட்டபோர்ட்சயரில் உள்ள பட்டர்ட்டன் என்னும் இடத்தில் ஆன்ட்ரூசின் மதபோதகர்களான நண்பர்களுடன் தங்கினார். 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியில் இருந்து 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை விரிவுரைகள் வழங்குவதற்காக ஜப்பானிலும் அமெரிக்காவிலும் பயணம் செய்தார்.
இந்தியாவுக்குத் திரும்பிய சில காலத்தின்பின், 63 வயதான தாகூர் பெரு நாட்டு அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றார். அவர் அங்கிருந்து மெக்சிக்கோவுக்கும் சென்றார் இரு நாட்டு அரசுகளும் இவரது வருகையின் நினைவாக சாந்திநிகேதனில் இருந்த பள்ளிக்கு 100,000 அமெரிக்க டாலர்களை வழங்கின.
ஆர்சென்டீனாவில் உள்ள புவனசு அயர்சுக்கு வந்த தாகூர் ஒரு கிழமையின் பின் நோய்வாய்ப்பட்டார். அதனால் அங்கு சில காலம் தங்கிய பின் அவர் சனவரி 1925 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பினார். 1926 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி தாகூர் இத்தாலியில் உள்ள நேப்பிள்சை அடைந்தார். அடுத்த நாள் அவர் ரோம் நகரில் பெனிட்டோ முசோலினியைச் சந்தித்தார். 1926 ஆம் ஆண்டு யூலை 20 ஆம் தேதி தாகூர் முசோலினியைக் கண்டித்ததுடன் அவர்களுடைய உறவு முறிந்துபோனது.
1927 ஆம் ஆண்டு யூலை 14 ஆம் தேதி தாகூரும் அவரது தோழர்கள் இருவரும் தென்கிழக்கு ஆசியாவில் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள், பாலி, ஜாவா, கோலாலம்பூர், மலாக்கா, பீனாங்கு, சியாம், சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றனர். தாகூரின் இந்தப் பயணங்கள் குறித்த தகவல்கள் யாத்ரி என்னும் நூலாகத் தொகுக்கப்பட்டது.
இறப்பு
நீண்ட காலம் நோய்வாய்பட்டு 7 ஆம் தேதி ஆக்ஸ்ட் 1941 ஆம் வருடம் உயிர் நீத்தார்.