புதன், 8 ஏப்ரல், 2015

முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்! (ஏப்ரல் 08 2015 )




ஜெயகாந்தன் அவர்கள், மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். அவர் ஓரளவே படித்திருந்தாலும், தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்து, தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைத் தன் எழுத்துக்களால் கொள்ளைக் கொண்டவர். ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாமல், கட்டுரையாளர், பத்திரிகையாளர், துண்டு வெளியீடுகளை எழுதுபவர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர் எனப் பல்வேறு முகங்கள் கொண்டு, தமிழ் இலக்கியத்திற்கு அருட்தொண்டாற்றியவர் ஜெயகாந்தன் என்று சொன்னால் அது மிகையாகாது. இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர். மேலும், இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’ தமிழ் இலக்கியத்திற்காக முதல்முறைப் பெற்றார். ‘சாஹித்ய அகாடமி விருது’, ‘ரஷ்ய விருது’ என்று பல்வேறு விருதுகளுக்குத் தகுதியான ஜெயகாந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஏப்ரல் 24, 1934
பிறப்பிடம், கடலூர், தமிழ்நாடு, இந்தியா
பணி: எழுத்தாளர்பத்திரிகையாளர்திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர்
பிறப்பு
ஜெயகாந்தன் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
ஜெயகாந்தன் அவர்களுக்கு, சிறு வயதிலிருந்தே பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாமல் இருந்தது. எனவே, அவர் ஐந்தாம் வகுப்பு வரையே பள்ளிக்குச் சென்றார். இதன் காரணமாக, அவருக்கும், அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர் தனது தாயார் மற்றும் தாத்தாவிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். வீட்டில் அவருக்கும், அவரது தந்தைக்கும் சுமூகமானப் பேச்சுவார்த்தை இல்லாமல், இருவரும் எதிரும், புதிருமாக இருந்தனர். அவர் பள்ளிச் செல்லவில்லை என்ற ஒரே காரணத்தால், அவரது தந்தை அவருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கினார். சிறுவனாக இருந்து இதனை சற்றும் தாங்கிக் கொள்ள இயலாததால், அவர் தனது 12 வது வயதில் வீட்டை விட்டு ஓடி, விழுப்புரத்தில் உள்ள அவரது மாமாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அங்கு, அவரது மாமா அவருக்கு கம்யூனிச கொள்கைகளையும், சுப்ரமணிய பாரதி படைப்புகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இலக்கியம் மீது ஆர்வம் 
சிறிது காலம் கழித்து, ஜெயகாந்தன் அவர்களுடைய தாயார் அவரை சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது பிள்ளைப் பருவத்தைக் கழித்த அவர், தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்குப் பரிச்சயமானார். அக்கட்சி அலுவலகத்தைத் தனது வீடாகவும், அக்கட்சி உறுப்பினர்களைத் தனது குடும்ப அங்கத்தினர்களாகவும் கருதிய அவர், அவர்களின் கலந்துரையாடல்களைக் கேட்க கேட்க, இலக்கியத்தின் மீது அவருக்கு நாட்டம் ஏற்பட்டது. இதனால், கட்சியின் அங்கத்தினரான ஜீவானந்தம் என்பவர், அவருக்குத் தமிழாசிரியர் ஒருவரை அவருக்குக் கல்வி கற்றுத் தருமாறு பணியில் அமர்த்தினார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்த அவர், பல இடங்களில் முழுநேரம் மற்றும் பகுதிநேர வேலைகளில் வேலைப் பார்த்தார். 1949ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்டதால், அக்கட்சிக்குத் தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இதன் பொருட்டாக, அவர் தஞ்சாவூரிலுள்ள ஒரு காலணிகள் விற்கும் கடையில் தற்காலிகமாகப் பணியில் சேர்ந்தார். அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில், எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். மேலும், புதிய கட்சிகளின் வருகையால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுவதுமாக அழிந்ததால், காமராஜரின் கொள்கைகள் மீது அவருக்குப் பற்று ஏற்பட்டதால், அவரது தொண்டனாக மாறி, அவர் இருந்த தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
எழுத்துலக வாழ்க்கை
ஜெயகாந்தன் அவர்கள், அவரது இலக்கிய வாழ்க்கையை 1950களில் தொடங்கினார். பல்வேறு தினசரி மற்றும் மாத நாளிதழ்களான சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்றவற்றில் அவரது படைப்புகள் வெளியாயின. அவரது படைப்புகளனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவருக்குப் புகழும், அவரது படைப்புகளுக்கு அங்கீகாரமும் கிடைத்தது. இதனால், அவர் தலைச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். எழுத்துலகில் கொடிக்கட்டிப் பறந்த அவர், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். அவரது மிகவும் வெற்றிப்பெற்ற படைப்புகளான “உன்னைப் போல் ஒருவன்” மற்றும் “சில நேரங்களில் சில மனிதர்கள்” போன்ற நாவல்கள் படமாக்கப்பட்டன. “உன்னைப் போல் ஒருவன்” என்ற படம், சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான ‘குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதான பத்ம பூஷன் விருதை’ பெற்றது.
அவரது படைப்புகள்
ஜெயகாந்தன் அவர்கள், பல்வேறு வாழ்க்கை வரலாறு, நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு, கட்டுரைகள், போன்றவற்றைப் படைத்துள்ளார். அதில் சில குறிப்பிடத்தக்கப் படைப்புகள்:
‘வாழ்விக்க வந்த காந்தி 1973’, ‘ஒரு கதாசிரியனின் கதை’, ‘பிரம்ம உபதேசம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’, ‘கண்ணன்’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘ரிஷிமூலம்’, ‘கருணையினால் அல்ல’, ‘கங்கை எங்கே போகிறாள்’, ‘ஒவ்வொரு கூரைக்கும் கீழே…’, ‘சுந்தர காண்டம்’ மற்றும் பல.
தமிழ்த் திரையுலகில் இவருடைய கதைகள் பல திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன. அவை: ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘ஊருக்கு நூறு பேர்’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, மற்றும் ‘புதுச் செருப்பு’.
அவர் இயக்கிய திரைப்படங்கள்: ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, மற்றும் ‘புதுச்செருப்பு கடிக்கும்’
விருதுகள்
  • 1972 - சாஹித்ய அகாடமி விருது
  • 2002 – இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.
  • 2009 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.
  • 2011 – ரஷ்ய விருது
காலவரிசை
1934: தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார்.
1950: அவரது இலக்கிய வாழ்க்கையை 1950களில் தொடங்கினார்.
2002: இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.

2009: இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.

"இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார் (ஏப்ரல் 08 2015)

"இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்!

மிழ் சினிமாவில் மெல்லிசை பாடகர்களுக்கு மத்தியில் தனது கணீர் குரலால் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் நாகூர் ஹனிபா. இவரது அம்மா ராமநாதபுரத்தை சேர்த்தவர். அப்பா நாகூரைச் சேர்ந்தவர். இஸ்மாயில் முஹம்மது ஹனிபா என்ற தனது பெயரை சுருக்கி இ.எம்.ஹனிபா என்று அழைக்கப்பட்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது.
சிறுவயது முதலே பள்ளி, திருமண விழாக்களில் பாடத் துவங்கினார். 15 வயதில் திருமண வீடுகளில் பாடத்துவங்கியவர் 5 ஆயிரத்துக்கும் அதிகமான திருமண வீடுகளில் பாடியுள்ளார். திராவிட இயக்கத்தின் மீது பற்றுக் கொண்டு அதன் உறுப்பினர் ஆனார்.

தி.மு.க.வுக்காக இவர் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலம். தி.மு.க., சார்பாக சட்டசபை தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார். போராட்டங்களில் ஈடுபட்டு சிறையும் சென்றுள்ளார். தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும், வக்பு வாரிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ ‘உன் மதமா என் மதமா’ மற்றும் ‘இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ போன்ற பாடல்கள் சாதி மத வேறுபாடுகளைக் கடந்து பட்டிதொட்டியெங்கும் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 96 வயதான அவர் நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். அவர் குறித்த சில நினைவலைகள்...

# 1953 ஆம் ஆண்டு அது…..

திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகி நான்கே நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. பெரியாரின் சீடராக இருந்த நாகூர் ஹனிபா, அறிஞர் அண்ணாவுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக முழுமூச்சாய் பெரிதும் பாடுபட்டார். நாகூர் ஹனிபா அறிஞர் அண்ணாவின் மீது தீவிர பற்று வைத்திருந்தார். அதே போன்று அறிஞர் அண்ணாவும் எந்தவொரு போராட்டத்திற்குச் சென்றாலும் தன்னுடன் நாகூர் ஹனிபாவையும் தவறாமல் அழைத்துச் சென்றார்.
1953 ஆம் ஆண்டில் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் பெருமளவில் துன்ப அலை வீசியது. சொல்லவொணா துயரங்களை அவர்கள் சந்தித்தார்கள் அறிஞர் அண்ணாவும் நடுத்தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவரே. கைத்தறி நெசவாளர்களின் குடும்பம் படும் அவலங்களை அவரால் காணப் பொறுக்கவில்லை. நெய்த துணிகள் யாவும் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்தன. குடும்பங்கள் பசியால் வாடினர். சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலை.
இதனால் நெசவாளர்கள் கஞ்சித் தொட்டியை நாடும் அவல நிலை ஏற்பட்டது.  சிலர் பிச்சை எடுக்கும் நிலைக்குக்கூடத் தள்ளப்பட்டனர். கழகத் தலைமை ஒன்று கூடி கைத்தறித் துணிகளை விற்று அதனைக் கொண்டு நெசவாளர்களின் துயர் துடைக்க முடிவு செய்தனர். விற்பனை செய்வதற்கு முதற்கட்டமாக திருச்சி மாநகரத்தை தேர்ந்தெடுத்தனர்.
“திருச்சியில் யார் துணிகளை விற்பது?” என்ற கேள்வி எழுந்தபோது “திருச்சியில் நானே சென்று விற்கிறேன்” என்று அறிஞர் அண்ணா அறிவிப்பு செய்தார். கழகத் தொண்டர்களுக்கிடையே இந்த அறிவிப்பு பெரும் ஊக்கத்தையும், மிகுந்த எழுச்சியையும் உருவாக்கியது.

கழகத் தொண்டாற்றுவதற்காக சரியான வாய்ப்பை எதிர்பார்த்திருந்த நாகூர் ஹனிபா... இதனை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். அண்ணாவிடம் சென்று “நானும் உங்களோடு இணைந்து பாடிக்கூவி கைத்தறி துணிகளை விற்கத் தயார்” என்றார். “அனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை” என்று தந்தை பெரியார் முன்னொரு சமயம் கூறியது அறிஞர் அண்ணாவின் நினைவுக்கு வந்தது. ஊர் ஊராகச் சென்று கூவி விற்பதற்கு கம்பீர குரல்வளம் படைத்த நாகூர் ஹனிபாவைவிட வேறு பொருத்தமான ஆள் கிடையாது என்ற முடிவுக்கு வந்த அறிஞர் அண்ணா, உடனே அவரை அழைத்துக் கொண்டு கழகக் கண்மணிகளோடு திருச்சிக்கு புறப்பட்டார்.
அறிஞர் அண்ணாவின் இந்த கைத்தறி விற்பனைத் திட்டம் நன்றாகவே வெற்றி கண்டது. எதிர்பார்த்ததைவிட கூடுதல் பலனை அளித்தது. திருச்சியில் தொடங்கி பின்னர் ஊர் ஊராகச் சென்று கழகத் தோழர்கள் கைத்தறி துணி விற்பனையில் ஈடுபட்டனர். மூட்டைகளைச் சுமந்து தெருத் தெருவாக கூவி விற்றனர். இந்த விற்பனையில் நாகூர் ஹனிபாவின் பங்கு கணிசமான அளவில் இருந்தது.

உடுமலை நாராயணகவி எழுதிய பாடலொன்று நாகூர் ஹனிபாவுக்கு கைகொடுத்தது. கம்பீரக் குரலோடு ஒலிபெருக்கியின் உதவி இல்லாமலேயே பாடத் தொடங்கினார்.

    சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்

    திராவிட நாட்டின் சேமம் வேண்டி

    சிங்கார ஆடைகள் வாங்குவீர்.

பாடலின் ஆரம்ப வரிகள் இதுதான்.

தங்கள் அபிமான தலைவர்களைக் காணவும், “கணீர்” என்ற வெண்கலத் தொனியுடன், கம்பீரத் தோற்றம் கொண்ட  நாகூர் ஹனிபா பாடும் பாடலை ஆர்வத்துடன் கேட்கவும், கட்டுக்கடங்காத கூட்டம் ஆங்காங்கே கூடியது. பொதுமக்கள் தங்கள் விருப்பம்போல் கைத்தறி துணிகளை தாராள மனப்பான்மையோடு வாங்கிச் சென்றனர்.

# 1955-ஆம் ஆண்டு, “நம் நாடு” கழக ஏட்டில் வெளிவந்த ‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற பாடலை ஹ்ம்வ் நிறுவனம் பதிவு செய்ய, நாகூர் ஹனிபாவின் கம்பீரக் குரலில்  இசைத்தட்டு வெளியானபோது, அப்பாடல் தமிழகத்தில்  ஓர் இசைப்பிரளயத்தை உண்டு பண்ணி தென்னக அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த மூலக்காரணமாக இருந்தது. அந்த இசைத்தட்டுதான் அந்த ஆண்டில் அதிகம் விற்று விற்பனையில் ஒரு சாதனையைப் படைத்தது

அறிஞர் அண்ணா அடிக்கடி பெருமைபட கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா? “அழைக்கின்றார் அண்ணா” என்ற இந்தப்பாடலை நாகூர் ஹனிபாவை பாட வைத்து படமெடுத்து, அதைத் திரையிட அரசு அனுமதித்தால் நிச்சயம்  திராவிட நாடு பெற்று விடுவேன்” என்பதுதான். அப்படிப்பட்ட காந்தக் குரல் ஹனிபாவுடையது. ஒலிபெருக்கியையே அதிர வைக்கும் எட்டுக்கட்டை கம்பீரச் சாரீரம் அது.


#  “ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள் – நீ
    தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!”

    “திராவிடச் சோலையிலே
    தீரர் வாழும் வேளையிலே
    செந்தமிழை மேயவந்த
    இந்தி என்ற எருமை மாடே!
    முன்னம் போட்ட சூடு என்ன
    மறந்ததோ உனக்கு?
    என்றும் இந்தி ஏற்கமாட்டோம்
    ஓடிப்போ வடக்கு!”

இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நாகூர் ஹனிபா தி.மு.க. மேடைகளில் பாடிய பாடல் வரிகள் இவை.

#  “ஓடி வருகிறான் உதயசூரியன்”

  “அழைக்கின்றார்.. அழைக்கின்றார் அண்ணா”

  “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே”

  “இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை”

  “வளர்த்தகடா மார்பில் பாய்ந்ததடா”

என்று கணீர்க் குரலுடனும் கம்பீர வரிகளுடனும் நாகூர் ஹனீபா அவர்கள், திராவிட இயக்கத்தை எட்டுத் திசைக்கும் கொண்டுசேர்த்த ‘தனிமனித வானொலி’.

நன்றி: 'நாகூர் மண் வாசனை" வலைப்பூ