புதன், 31 மே, 2017

உலக பால் தினம் ஜூன் 1 (World Milk Day)



உலக பால் தினம் ஜூன் 1 (World Milk Day)

உலக பால் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காகக் கடைபிடிக்கப்படும் ஒரு தினம் ஆகும்.
வரலாறு
இது 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. இது பால் பண்ணைடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்குக் கவனம் செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.  பால் ஒரு உலகளாவிய உணவு என்பதை உணர்ந்து கொள்ள இதே நாளில் பல நாடுகளில் தனிப்பட்ட மற்றும் தேசிய விழாக்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில், உலக பால் தினம் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்பட்டது. தேசியப் பொருளாதார மதிப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் தேசிய பால் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதில் கவனம் செலுத்துவதன் நோக்கம் ஆகியவற்றை உணர்த்த மாரத்தான் ஓட்டம், பண்ணைப் பார்வையிடல், பள்ளி சார்ந்த நடவடிக்கைகள், கச்சேரிகள், நிகழ்ச்சிகள், மாநாடுகள் , கருத்தரங்குகள் மற்றும் போட்டிகள் மூலம் பாலின் முக்கியத்துவத்தை உணர்த்துதல். 2017 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி, பண்ணைத் துறை "ஒரு கோப்பையை உயர்த்துங்கள்" (ஆங்கிலத்தில் : “Raise a Glass” ) தலைப்பில் சமூக வலைதளங்களில் உலக பால் தினம் (#WorldMilkDay) எனும் பிரச்சார ஹேஸ்டேக்(hashtag) மூலம் ஒரு சிறப்பு பிரச்சாரத்தை கொண்டாடுகிறது.



பாலின் பயன்கள்..

கு ழந்தையின் முதல் உணவு பால்; இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மனிதன் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டபோது பிற விலங்குகளின் பாலைப் பயன்படுத்தத் தொடங்கினான். ஆடு, பசு, எருமை, கழுதை, குதிரை... ஏன் ஒட்டகப்பால் வரை மனிதன் பருகாத பாலே இல்லை. ஆனால், ‘தாய்ப்பாலுக்குப் பிறகு பசும்பாலே குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகும்’ என்கிறது மருத்துவ உலகம். உலகளாவிய பால் உற்பத்தியில், பசும்பால் உற்பத்தி மட்டும் 85 சதவிகிதம்.
‘பால் மற்றும் பால் பொருட்களைச் சேர்த்துக்கொள்ளலாமா?’ என்று ஒரு பக்கம் விவாதம் நடந்தாலும், தினசரி காலையில் காபி, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் எனப் பால் பொருட்கள் இல்லாத நாளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என அனைவரும் சாப்பிட ஏற்றது பால். யார் யார் எந்தெந்த பால் சாப்பிட வேண்டும், பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் என்னென்ன சத்துக்கள் உள்ளன, எவ்வளவு உள்ளன என்பதைப் பற்றி சொல்கிறார், சீனியர் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி.


பசும்பால்
இது, தாய்ப்பாலுக்கு இணையானது. ஃபோலிக் அமிலம் தயமின், பொட்டாசியம் நிறைந்தது.
பசும்பாலில் அனைத்துவித அமினோஅமிலங்களும் உள்ளன. ஆனால், புரதத்தின் அளவு குறைவு. கால்சியம், லாக்டோஸ் நிறைந்தது. இது உடலுக்குள் சென்று லாக்டிக் அமிலமாக மாறுகிறது.
லாக்டிக் அமிலம், உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. வயிற்றுப்புண்ணின் வீரியத்தைக் குறைக்கிறது.
45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மெனோபாஸ் நிலையில் ஏற்படும், `எலும்பு அடர்த்தி குறைதல்’ எனும் ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையைப் போக்குகிறது.
வளரும் குழந்தைகள், சிறுவர்களது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானம் அடைவதைத் தடுக்கிறது.
பாலில் இருக்கும் லாக்டோஸை உடல் கிரகிக்காது. எனவே, வயிற்றுப்போக்கு, டைபாய்டு இருப்பவர்கள் பாலை அருந்தக் கூடாது.
5 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், தினமும் 400 மி.லி பால் சாப்பிடுவது நல்லது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் உட்கொள்வது சிறந்தது.
இளம் வயதினர் மிதமான கொழுப்புள்ள பாலையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்த கொழுப்புள்ள பாலையும், வயதானவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் குடிப்பது நல்லது.
பாலை எப்போதும் காய்ச்சிக் குடிப்பதே சிறந்தது. அப்போதுதான், அதில் உள்ள தொற்றுக்களும் பாக்டீரியாவும் கொல்லப்படும்.
அதிக வெப்பத்தில் கொதிக்கவைக்கத் தேவை இல்லை. சில நிமிடங்கள் காய்ச்சினாலே போதும்.
கடையில் வாங்கியதும் உடனே பயன்படுத்துவது நல்லது.
அவசியம் எனில், ஃப்ரிட்ஜில் வைத்து, பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நாள் வரை பயன்படுத்தலாம்.
முடிந்த வரை தேவையானபோது வாங்கி, அப்போதே பயன்படுத்துவது நல்லது.
நீண்ட நேரம் கொதிக்கவிடுவதைத்தான் பால் காய்ச்சுவது எனப் பலரும் நினைக்கின்றனர். இது தவறு. நீண்ட நேரம் கொதிக்கவிடும்போது, பாலில் உள்ள லேக்டால்புமின் எனும் வே புரோட்டின் உள்ளிட்ட சத்துக்கள் வெளியேறிவிடும்.
த ற்போது, பெரும்பாலானோர் பாக்கெட் பால்தான் பயன்படுத்துகின்றனர். பச்சை, நீலம் என விதவிதமான பாக்கெட்களில் கிடைக்கும் ஒவ்வொன்றுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. கொழுப்பு சேர்ப்பதைப் பொறுத்து பால் பல்வேறு வகையாகப் பிரிக்கப்படுகிறது.


எருமைப் பால்
ஃபோலிக் அமிலம், தயமின், ரிபோஃப்ளேவின் நிறைவாக உள்ளன.
இதில், கொழுப்பு அதிகமாக உள்ளதால், வயதானவர்கள் சாப்பிட உகந்தது அல்ல. உடல்பருமன் உள்ள குழந்தைகள் தவிர்க்க வேண்டும்.
அதீத சுறுசுறுப்பான குழந்தைகள், எடை குறைவான குழந்தைகளுக்கு அளிக்கலாம்.
பொதுவாக, காமாலை, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்கள் எருமைப் பாலைத் தவிர்ப்பது நல்லது.
வயிற்றுப்புண் உள்ளவர்களுக்குப் பால் மிகவும் சிறந்தது.
மோர்
குறைவான கலோரி கொண்டது. 80 சதவிகிதம் நீரும், மிகச்சிறிய அளவில் புரதமும் கார்போஹைட்ரேட்டும் உள்ளன.
கால்சியம், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ குறைந்த அளவே இருக்கின்றன.
மத்து வைத்துக் கடைந்து, கொழுப்பு முற்றிலுமாக நீக்கப்படுவதால், இதில் கொழுப்பு சுத்தமாக இருக்காது.
நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். நீர்ச்சத்து அதிகம் என்பதால், நாக்கு வறட்சியைப் போக்கும். குளிர்ச்சியைத் தரும்.
இதில் ப்ரோபயோடிக்ஸ் இருப்பதால், வயிற்றுப்போக்கு, தொற்றுநோய் வராமல் தடுக்கப்படும்.
‘காய்ச்சல், சளி இருப்பவர்கள் மோர் குடிக்கக் கூடாது’ என்று ஒரு தவறான கருத்து உண்டு. மோரைக் கரைக்கும்போது சேர்க்கப்படும் தண்ணீர் அசுத்தமாக இருந்தால், காய்ச்சல், சளி அதிகமாகும். மற்றபடி, எந்த நேரத்திலும் எல்லோரும் அருந்த உகந்தது.
வயிற்றுக்கோளாறு இருப்பவர்களுக்கு மோர் நல்லது.
மோரில் உள்ள லாக்டிக் அமிலமே அதன் புளிப்புச் சுவைக்குக் காரணம்.
குழந்தைகளுக்கு கெட்ட பாக்டீரியா மூலம் ஏற்படும் வயிற்றுப்போக்குக்கு மோர் சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. இதில் உள்ள நல்ல பாக்டீரியா, கெட்ட பாக்டீரியாவை உடனடியாக அழிக்கிறது.
இதில் கொழுப்பு இல்லாததால் உடல் பருமனானவர்கள் சாப்பிடலாம். இதய, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.


தயிர்
கால்சியம், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கலோரி, பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் ஏ, ரிபோஃப்ளோவின், தாதுஉப்புகள் மிதமான அளவில் உள்ளன. பாலில் இல்லாத ப்ரோபயோடிக் பாக்டீரியா இதில் உள்ளது.
லாக்டோபாசில்லஸ் (Lactobacillus), பைஃபிடோபாக்டீரியம் (Bifidobacterium) போன்ற நன்மை செய்யும் பாக்டீரியா சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் உள்ள கெட்ட வைரஸ் மற்றும் பாக்டீரியாவை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
குடல் புற்றுநோயைத் தடுக்கும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவல்லது. பலர், காலையில் தயிராக உறையிட்டு பல மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்துவிடுகின்றனர். இதனாலேயே, தயிரின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. வயிற்று எரிச்சல் அதிகரிக்கிறது. இது தவறானது.
உறையிட்டு அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். பொதுவாக, இரவு நேரத்தில் வெப்பம் குறையும்போது, நொதித்தல் தாமதப்படுகிறது. எனவே, முதல் நாள் இரவு உறையிட்டு, மறுநாள் காலை பயன்படுத்தலாம்.
ஃபோலிக் அமிலம் இதில் அதிகமாக உள்ளதால், கர்ப்பிணிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு இது.
எலும்புக் குறைபாடு முதல் பல பிறவிக் குறைபாடுகள் வரை தடுத்து ஊட்டமளிக்கிறது.
வெண்ணெய்
தயமின், ரிபோஃப்ளோவின், நியாசின் குறைந்த அளவில் உள்ளன.
பாலாக இருந்தபோது, அதில் இருந்த கால்சியம், புரதம், பாஸ்பரஸ், மாவுச்சத்து இதில் இல்லை.
வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. தினமும் நமக்கு 750 இ.யூ வைட்டமின் ஏ போதுமானது. எனவே, தினமும் 10 கிராம் வெண்ணெயை உணவில் எடுத்துக்கொள்ளலாம்.
வெண்ணையில் கொலஸ்ட்ரால் அதிகம். எப்போதும் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் 200-க்குள் இருக்க வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெண்ணெயைக் குறைத்துக்கொள்வது நல்லது.
பிறக்கும்போது ஒன்றரை கிலோவுக்கும் குறைவான எடை இருந்த அண்டர்வெயிட் குழந்தைகளுக்கு, ஆறு மாதங்களுக்குப் பிறகு, தாய்ப்பாலுடன் சிறப்பு உணவாக ஒரு டீஸ்பூன் வெண்ணையை மருத்துவரின் அனுமதியோடு கொடுக்கலாம்.
உடல் மெலிந்தவர்கள், பிரெட் சாண்ட்விச்சில் வெண்ணெய் தடவிச் சாப்பிடலாம்.
வாய்ப் புண்ணை உடனடியாகக் குணமாக்கும்.


நெய்
வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், இது கண்ணுக்கு மிகவும் நல்லது.
20 வயதுக்குக் குறைந்தவர்கள் தினமும் நான்கு டீஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளலாம்.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய் இல்லாதவர்கள், 40 வயது வரை இரண்டு டீஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.
இதில் இருக்கும் ஆயில் ஃபேட், வைட்டமின் டி3 ஆக மாறும். இது, இந்தக் கொழுப்பு மூலமாக மட்டுமே உருவாகும் வைட்டமின்.
சைவம் சாப்பிடுபவர்கள் தங்கள் உடலின் கொழுப்புப் பற்றாக்குறையைப் போக்க, நெய் சேர்த்துக்கொள்வது நல்லது.
வளரும் குழந்தைகள், எடை குறைந்தவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தினமும் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்.
உடல்பருமன், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும்.


பால்கோவா
உயர் டிகிரி வெப்பத்தில் பாலைச் சுண்டக் காய்ச்சி, நீரை வெளியேற்றி, மீதம் தேங்கி உள்ள ஆடைக்கட்டியைக் குளிர்வித்தால், பால்கோவா கிடைக்கும்.
உடலுக்கு நல்ல ஆற்றலைக் கொடுக்கும்.
உயர்தர பால்கோவாவில் சர்க்கரை சேர்க்கப்படாது. தூய்மையான பால்கோவா உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது.
விளையாட்டு வீரர்களுக்குச் சிறந்த போஷாக்கு தரும். மெலிந்த குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கு நல்லது.
சில கடைகளில் பால் சார்ந்த இனிப்புகளில் மைதா கலப்படம் செய்கின்றனர். எனவே, கடைகளில் பால்கோவா வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
பசும்பாலில் இதைத் தயாரித்தால் கொழுப்பின் அளவு குறைவாக இருக்கும்.
வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், எடை குறைந்தவர்கள் அளவோடு சாப்பிடலாம்.
உடல் பருமன் உள்ளவர்கள், இதய நோயாளிகள், 60 வயதைத் தாண்டியவர்கள் தவிர்ப்பது நல்லது.
ஸ்கிம்டு பால்
இது கொழுப்பு முற்றிலும் நீக்கப்பட்ட பால்.
கால்சியம் அதிகம் உள்ள, கொழுப்பு குறைவான, பதப்படுத்திய ஸ்கிம்டு பால், ஸ்கிம்டு பவுடர்கள், அனைத்து பல்பொருள் அங்காடிகளிலும் நிறைந்து உள்ளன.
கொழுப்பு நீக்கப்பட்டிருப்பதால், அடர்த்தி மிகக் குறைவாகத் தண்ணீர் போல் இருக்கும்.
அதனால், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் இதன் மூலம் உடலில் சேர்ந்தாலும், இதன் எனர்ஜி அளவு பசும்பால் அளவுக்கு இருக்காது.
வைட்டமின் ஏ கொழுப்பில் கரையக்கூடியது. ஸ்கிம்டு பாலில் கொழுப்பு சுத்தமாக நீக்கப்படுவதால், இதில் வைட்டமின் ஏ கிடையாது.
ஸ்கிம்டு பாலைப் பயன்படுத்தி டீ, காபி, மோர் அனைத்தும் தயாரிக்க முடியும்.
உடல்பருமனாக இருப்பவர்களின் எலும்பு உறுதிக்கு கால்சியம் தேவை. அவர்கள், குறைந்த அளவு பவுடரைத் தண்ணீரில் கலந்து, கொதிக்கவைத்துக் குடிக்கலாம்.
சிலர் வெறுமனே தண்ணீரில் கலந்து குடிக்கின்றனர். இது தவறு. கொதிக்கவைக்கும் போதுதான், இதில் உள்ள பாக்டீரியா அழிக்கப்படும்.
பனீர்
பாலில் எலுமிச்சைச் சாற்றை ஊற்றி, திரித்து வீட்டிலேயே தயாரிக்கலாம்.
இதில் உள்ள வே வாட்டர் உடலுக்கு மிகவும் நல்லது.
வயிற்றுப்போக்கைத் தடுக்கும். கால்சியம், புரதம், கொழுப்பு ஆகியவை அதிகமாக இருக்கின்றன.
பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், தயமின், நியாசின் மற்றும் தாதுஉப்புகள் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன.
வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.
பாலாடைக்கட்டி (சீஸ்)
ஐரோப்பியக் கண்டத்தைப் பூர்விகமாகக்கொண்ட சீஸ், பசு, எருமை, ஆடு ஆகியவற்றின் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் 300 வகையான சீஸ்கள் உள்ளன. அவற்றுள் காட்டேஜ் சீஸ், அமெரிக்கன் சீஸ், மொஜரெல்லா சீஸ், சுவிஸ் சீஸ் பிரபலமானவை.
சுவிஸ் சீஸில் லாக்டோஸ் சுத்தமாக இல்லை என்பதால், லாக்டோஸ் இன்டாலரன்ஸ் பிரச்னை உள்ள குழந்தைகள்கூட கால்சியம் பற்றாக்குறையைப் போக்க இதைச் சாப்பிடலாம்.
காட்டேஜ் சீஸ், எந்த நிறமியும் செயற்கை சுவையூட்டியும் சேர்க்காதது. இதில் உள்ள `காஸீன்’ என்ற புரதம், கை, கால் தசை வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கிறது.
பொதுவாக, பாலில் நீர் வற்றி, கெட்டி ஆக ஆக கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதனாலேயே சீஸில் இவை அதிகமாக உள்ளன.
இரும்பு மிதமான அளவில் இருக்கிறது.
மாவுச்சத்து, பீட்டாகரோட்டின் குறைந்த அளவே இருக்கின்றன.
கண் மற்றும் சருமத்தைப் பொலிவூட்ட உதவுகிறது.
உடல் வளர்ச்சிக்கும் எலும்புகள் உறுதியாக இருப்பதற்கும் பயன்படுகிறது.
பாடி பில்டர்கள், கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுவோர் தினமும் மூன்று டீஸ்பூன் காட்டேஜ் சீஸ் எடுத்துக்கொள்வது நல்லது.
குழந்தைகளுக்கு அவர்களின் உடல் எடையைப் பொறுத்து, ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் சீஸ் வாரத்துக்கு மூன்று நாட்கள் கொடுக்கலாம்.
வயதானவர்கள் கோதுமை பிரெட்டோடு சிறிதளவு சீஸ் சேர்த்துக்கொள்ளலாம்.
பீட்சா, பர்கர், ஸ்பிரிங் ரோல், சாண்ட்விட்ச் ஆகியவற்றில் மைதாவுடன் சீஸ் சேர்க்கப்படுகிறது. இதில், நார்ச்சத்து உள்பட எந்த சத்துக்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
சீஸில் முதல்தரப் புரதமும் கொழுப்பும் அதிக அளவில் உள்ளன. சைவ உணவுகளில் எதிலும் முதல்தரப் புரதம் கிடையாது. எனவே, சைவம் சாப்பிடுபவர்களுக்கு சீஸ், புரதச்சத்தை வாரி வழங்கும் உணவாக உள்ளது.



வளரும் குழந்தைகள், எடை குறைந்தவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தினமும் 10 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
யோகர்ட்
இனிப்புத் தயிர் என்று இதைச் சொல்லலாம்.
மிதமான பக்குவத்தில் ஐஸ்க்ரீம்போல க்ரீமாகக் கிடைக்கும் இந்த இனிப்புத் தயிர், உடலுக்குப் பல நன்மைகளைச் செய்கிறது.
பால் எப்படி சில நேரங்களுக்குப் பிறகு தயிராக மாறுகிறதோ, அதுபோன்ற பக்குவத்தில்தான் யோகர்ட்டையும் தயாரிக்கின்றனர். இதை, வீட்டிலே செய்வது கடினம். ஏனெனில், எட்டு, ஒன்பது மணி நேரம் எடுக்கலாம்.
ப்ரோபயோடிக், அதாவது நல்ல பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் இதில் மிக அதிகம். இது குடலுக்கு நன்மை செய்து ஆசிட் ஃபார்மேஷன் (Acid formation) பிரச்னை வராமல் தடுக்கிறது.
வயிறு தொடர்பான பிரச்னைகளின் வீரியத்தைக் குறைக்கும். வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு, அல்சர், தொற்று, மலச்சிக்கல், எரிச்சலைக் குறைக்கிறது. பெருங்குடல் புற்றுநோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வயிற்றுக்கு குளிர்ச்சியைத் தரும்.
ஆரோக்கியமான நொறுக்கு தீனியை சாப்பிடுங்கள் என்று சொல்கிறோம். அதில் அவசியம் பரிந்துரைக்கப்படவேண்டியது யோகர்ட். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யோகர்டை சுவைக்கலாம். இது, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, கிரீன் ஆப்பிள், மேங்கோ போன்ற பல சுவைகளில் கிடைக்கிறது.
தினமும் யோகர்ட் சாப்பிடலாம். ஆனால், மாலை ஆறு மணிக்கு மேல் யோகர்ட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், செரிமானம் ஆக தாமதம் ஆகும்.
கெட்ட கொழுப்பைக் (LDL) குறைத்து, இதய நோய்கள் வராமல் கட்டுப்படுத்தும்.
ஆரோக்கியத்துக்கு புரதம் அவசியம். யோகர்ட்டில் உள்ள புரதம் புதிய செல்கள் வளரவும், தசைகளை வலுவாக்கவும் உதவும்.
இதில் உள்ள கால்சியம், வைட்டமின் டி ஆகியவை பற்கள் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றன. இதனால், எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. தொடர்ந்து சாப்பிட, எலும்பு மெலிதல் பிரச்னை வராது.
அசைவ உணவுகளில் வைட்டமின் பி12 இருப்பதுபோல, யோகர்ட்டிலும் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.
சோயா பால்
சோயா பீன்ஸை நன்கு அரைத்துப் பொடியாக்கி, உயர் அழுத்தம் / வெப்பத்தில் கொதிக்கவைத்து, வடிகட்டி, தயாரிக்கப்படுவதுதான் சோயா மில்க்.
உடலுக்குத் தேவையான எல்லா கொழுப்பு அமிலங்களும் இதில் உள்ளன.
பசும்பாலில் உள்ளதுபோல், சாச்சுரேடட் கொழுப்பு, கொலஸ்ட்ரால் இதில் சுத்தமாக இல்லை.
பரம்பரையாக உயர் ரத்த அழுத்தம், இதயக் குழாய் அடைப்பு, வால்வு அடைப்பு இருப்பவர்கள் சோயா பால் பருகலாம்.
5 முதல் 14 வயது உள்ள வளரும் சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சர்க்கரை அளவு இதில் குறைவாக உள்ளதால், கொழுப்பு மிகவும் குறைவு. எனவே, உடல் எடையைக் கட்டுப்படுத்த டயட்டில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு காலை, மாலை இருமுறை சோயா மில்க் குடிக்கலாம்.
40 வயதுக்கு மேற்பட்ட மெனோபாஸ் அடைந்த பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் குறைவதால், எலும்பு அடர்த்தி குறைந்து, ஆஸ்டியோபொரோசிஸ் வர வாய்ப்புகள் அதிகம். சோயாவில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உடற்தசைகள் கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது.
பாதாம் பால்
பாதாம் பருப்பை ஊறவைத்து தண்ணீர்விட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டினால் கிடைப்பதுதான் பாதாம் பால்.
இதில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் லாக்டோஸ் சுத்தமாக இல்லை என்பதால், லாக்டோஸ் ஒவ்வாமைப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு இது சிறந்த மாற்றாக அமைகிறது.
அதீத பருமனான குழந்தைகளுக்கு எருமை, பசும்பால் கொடுக்க முடியாத சூழலில், ஊடச்சத்துக்காக இதைக் கொடுக்கலாம்.
இதய நோய் உள்ளவர்கள், முதியவர்கள் கொலஸ்ட்ராலைத் தவிர்க்க வேண்டும்.
பாலுக்கு மாற்றாக இதை எடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் டி அதிகமாக உள்ளதால், எலும்பு உறுதிக்கு ஏற்றது. ஆஸ்டியோ பொரோசிஸைத் தவிர்க்கும்.
வெயில் காலங்களில் புற ஊதாக் கதிரின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.
ரிபோஃப்ளேவின் மற்றும் இரும்புச்சத்துகள் அதிகம் இருப்பதால், ரத்தக் காயங்கள் சீக்கிரம் குணமாகி, தசை கூட உதவுகிறது.

ஹெம்ப் மில்க்
ஹெம்ப் செடியின் விதைகளை அரைத்துத் தயாரிக்கப்படும் நான்-டயரி மில்க் இது.
தேன் அல்லது வென்னிலா பீன்ஸ் இனிப்புக்காகச் சேர்க்கப்படுகிறது.
மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சரியாக இருக்கும் ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. சோயா பாலில் உள்ள பிடாட் (Pdat) என்சைம் இதில் கிடையாது என்பதால், அனைத்து மினரல்களையும் தடை இல்லாமல் உறிஞ்ச உதவும்.
உடல், தசை வளர்ச்சிக்குத் தேவையான பீட்டாகரோட்டின், ரிபோஃப்ளேவின், தயமின், நியாசின் அதிக அளவில் உள்ளன.
இது, குழந்தைகளுக்கு மிகவும் சிறந்தது. தினமும், 100 மில்லி ஹெம்ப் பால் குடித்துவருவதால், வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவுத்திறன் குறைபாடு நீங்குகிறது, சருமம் புத்துணர்வு பெறுகிறது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதயக் குழாய் உள்ளே படிந்திருக்கும் கொழுப்பை நீக்க உதவுகிறது. இதன் மூலம் இதயக் குழாய் அடைப்பு நீங்குகிறது.
தேங்காய்ப் பால்
நான்-டயரி பாலில் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தது, தேங்காய்ப் பால்.
வைட்டமின்கள் சி, இ, பி1, பி3, பி5, பி6, இரும்பு, செலினியம், சோடியம், கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ் நிறைந்தது.
இதில் உள்ள லாரிக் அமிலம், மோனோலாரின் என்னும் காம்பவுண்டாக மாற்றப்படுகிறது. இது, குழந்தைகள், வளரும் இளம் சிறுவர்களிடம் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சாச்சுரேடேட் கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளதால், உடல்பருமனானவர்கள் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
தேங்காய்ப் பாலை வீட்டில் தயாரித்தால், அன்றே முழுதையும் பயன்படுத்திவிட வேண்டும்.
கடைகளில் கேனில் அடைத்து விற்கப்படும் தேங்காய்ப் பாலை மூன்று நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம். கோடை காலத்தில் காலை உணவுடன் தேங்காய்ப் பால் சேர்த்துக்கொள்வது உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
ரைஸ் மில்க்
‘நான்-டயரி மில்க்’ எனப்படும் பால் பொருட்கள் அல்லாத / சேர்க்காத பாலின் பயன்பாட்டில் முதல் இடம் வகிப்பது, ரைஸ் மில்க்.
பாலீஷ் செய்யப்படாத காபி நிறப் பச்சரிசியுடன், வென்னிலா பீன்ஸ், சில இனிப்புத் திரவங்கள் சேர்க்கப்பட்டு, உயர் டிகிரி வெப்பத்தில் கொதிக்க வைக்கப்பட்டு, வடிகட்டி உருவாக்கப்படுகிறது.
அரிசி மாவைக் கொண்டும் இதை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
மேலை நாடுகளில் தாவர சிரப் இனிப்புக்காக ரைஸ் மில்க்கோடு சேர்க்கப்படுகிறது. பொதுவாக, இதில் இனிப்பு சேர்க்கப்படுவது இல்லை.
ஜப்பானில் `அமசக்’ என்ற பெயரில் வழங்கப்படும் ரைஸ் மில்க் பினில்கிடோனுரியா (Phenylketonuria -PKU) எனப்படும் பிறவி புரதச்சத்து ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்குச் சிறந்த மாற்று உணவாகப் பரிந்துரை செய்யப்படுகிறது.
கார்போஹைட்ரேட் குறைபாடு உள்ளவர்களுக்குச் சிறந்தது.
இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் எனப்படும் சாப்பிட்டஉடன் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் பிரச்னை, வயிற்றுப்போக்கு மற்றும் முதுகுவலிக்குச் சிறந்த நிவாரணமாக விளங்குகிறது.
பட்டாணிப் பால்
நான்-டயரி மில்க் வகையைச் சேர்ந்த பட்டாணிப் பால், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
பட்டாணியை இரவு முழுதும் சுத்தமான தண்ணீரில் ஊறவைத்து வென்னிலா பீன்ஸ், உப்பு அல்லது இனிப்பு சிரப் சேர்த்து வடிகட்டினால் கிடைப்பதுதான் பட்டாணிப் பால்.
மோனோஅன்சாசுரேடட் கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ள பட்டாணிப் பால், உடலில் கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகமாக்குகிறது.
இதயக் குழாய் அடைப்பு உள்ளவர்களுக்குச் சிறந்த நிவாரணம் தருகிறது.
பக்கவாதத்தைத் தடுக்கிறது. `ரெஸ்வெரட்ரால்’ எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் நரம்பியல் கோளாறு, அல்சைமர் ஆகியவற்றைக் குணமாக்கும் தன்மை உடையது.
பி6 வைட்டமின் அதிகமாக உள்ளது. `ஹோமோ சிஸ்டெய்ன்’ எனப்படும் அமினோஅமிலத்தை உடைப்பதன் மூலம், திடீர் மாரடைப்பைத் தவிர்க்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.
லாக்டோஸ் இன்டாலரன்ஸ்
சில குழந்தைகளுக்குப் பால் பொருட்களில் இயற்கையாக உள்ள லாக்டோஸை உடல் ஏற்றுக்கொள்ளாது.
இது, லாக்டோஸ் இன்டாலரன்ஸ் எனப்படுகிறது. இவர்களுக்கு, பால், தயிர், மோர் எதை உட்கொண்டாலும் வாந்தி, வயிற்றுப்போக்கு, வாயுத்தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
இது, பரம்பரையாகவும் வர வாய்ப்பு உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பாகவும் இருக்கலாம்.
இந்த பாதிப்பின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
சில குழந்தைகளுக்குப் பாலுடன் பருப்பு வகைகள், காய்கறிகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் இந்தப் பிரச்னையைக் கட்டுப்படுத்தலாம்.
ஆரோக்கியம் தரும் மில்க் ஷேக்
உடலுக்கு எனர்ஜியும் தேவை, அதேசமயம் ஊட்டச்சத்துக்களும் கிடைக்க வேண்டும் என நினைத்தால், எளிதாக மில்க்ஷேக் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். வேலைக்கு, பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில், பலர் காலை உணவைச் சரியாகச் சாப்பிடுவது இல்லை. மில்க்ஷேக் தயாரிக்க அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள்கூடத் தேவைப்படாது. அதே சமயம், எண்ணற்ற சத்துக்கள் நிறைந்தது என்பதால், குழந்தைகள், பெண்கள், பேச்சுலர்ஸ் என அனைவரும் குடிக்கலாம்.
மில்க்ஷேக்கில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, தாதுஉப்புகள், வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்
தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி - 9 (நடுத்தர அளவு), பால் - 200 மி.லி., சர்க்கரை அல்லது தேன், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: ஸ்ட்ராபெர்ரியைக் கழுவி சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக வெட்டி, ஐஸ் கட்டிகள், பாலுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். சுவைக்காகத் தேன் அல்லது சர்க்கரையைச் சேர்த்துக்கொள்ளலாம்.
மிக்ஸ்டு மில்க் ஷேக்
தேவையானவை: மாம்பழம் - முக்கால் பழம், சப்போட்டா - 1 (மீடியம்), ஆப்பிள் - பாதி, வாழைப் பழம் - பாதி, பைனாப்பிள் - சிறு துண்டு, பால் - 200 மி.லி., சர்க்கரை அல்லது தேன் - தேவையான அளவு, ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: மாம்பழம், சப்போட்டா, ஆப்பிள், வாழை, அன்னாசி ஆகிய நான்கையும் தோல் சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். இதனுடன், பைனாப்பிள், பாலும் தேனும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். ஐஸ்கட்டிகள் தேவைப்பட்டால் பயன்படுத்தலாம்.

மாதுளை மில்க் ஷேக்
தேவையானவை: மாதுளை - 1 (பெரிது), பால் - 200 மி.லி., சர்க்கரை அல்லது தேன், ஐஸ் - தேவையான அளவு.
செய்முறை: மாதுளை முத்துக்களை உதிர்த்து, ஐஸ்கட்டி மற்றும் பாலுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். சுவைக்காகத் தேன் அல்லது சர்க்கரையைச் சேர்த்துக்கொள்ளலாம். தேவையெனில் வடிகட்டி அருந்தலாம்.

அத்தி மில்க் ஷேக்
தேவையானவை: அத்தி - 5 (நடுத்தர ஆளவு), பால் - 200 மி.லி., சர்க்கரை அல்லது தேன் - தேவையான அளவு, ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: அத்திப் பழத்தை கழுவி இரண்டாக வெட்டி, ஐஸ்கட்டிகள், பாலுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். சுவைக்காகத் தேன் அல்லது சர்க்கரையைச் சேர்த்துக்கொள்ளலாம்.


ஆப்பிள் மில்க் ஷேக்
தேவையானவை: ஆப்பிள் - 1 (பெரிது), பால் - 200 மி.லி., சர்க்கரை அல்லது தேன், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: ஆப்பிளை நன்றாகக் கழுவிய பிறகு, தோல், விதை நீக்கி, பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். இதனுடன், ஐஸ்கட்டி, பால், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, பருகலாம்.
பிளாக் கரன்ட் மில்க் ஷேக்
தேவையானவை: கறுப்பு உலர் திராட்சை - 35 கிராம், பால் - 200 மி.லி., சர்க்கரை அல்லது தேன், ஐஸ்கட்டி - தேவையான அளவு.
செய்முறை: உலர் திராட்சை, தேனை பாலுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். உலர் திராட்சை இனிப்பு சுவை தரும் என்பதால், கொஞ்சம் குறைவாகவே தேன், சர்க்கரை சேர்த்து தயாரிக்க வேண்டும்.


நட்ஸ் மில்க் ஷேக்
தேவையானவை: வால்நட், பாதாம், முந்திரி - தலா15 கிராம், பால் - 200 மி.லி., சர்க்கரை அல்லது தேன், ஐஸ்கட்டி - தேவையான அளவு.
செய்முறை: வால்நட், முந்திரி, பாதாம் மூன்றையும், பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், தேவைக்கு ஏற்ப சர்க்கரை, தேன், ஐஸ்கட்டிகள் சேர்த்து, மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிப் பருகலாம்.


மேங்கோ மில்க் ஷேக்
தேவையானவை: மாம்பழம் - 1 (நடுத்தர அளவு), பால் - 200 மி.லி., சர்க்கரை அல்லது தேன், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: மாம்பழத்தை தோல், கொட்டை நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். ஒரு கைப்பிடி அளவுக்கு மாம்பழத்தை எடுத்து, பால், தேன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
பேரீச்சை மில்க் ஷேக்
தேவையானவை: விதை நீக்கப்பட்ட பேரீச்சை - 35 கிராம், முந்திரி - 15 கிராம், பால் - 200 மி.லி., சர்க்கரை அல்லது தேன், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: பேரீச்சை, முந்திரியைச் சுத்தம் செய்து, பால் மற்றும் தேன் சேர்த்து மிக்ஸியில் சிறிதளவு ஐஸ்கட்டிகள் போட்டு அரைத்து அருந்தலாம். தேவையெனில் இதை வடிகட்டிப் பருகலாம்.

நன்றி விகடன்.

உலக பெற்றோர் தினம் ஜூன் 1 .


உலக பெற்றோர் தினம் ஜூன் 1 .

உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜீன் 1 ஆம் தேதி அன்று பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. [1] இது முதலில் அன்னையர் தினமாக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது தந்தையர் தினம் தனியாகக் கொண்டாடப்படுவது மற்றும் விடுமுறை நாட்களைக் கணக்கில் கொண்டு பெற்றோர் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
சர்வதேச அளவில்
உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் வாழ்க்கையைக் குழந்தைகளுக்காகத் தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும் என ஜூன் 1 ம் தேதியை உலக பெற்றோர் தினம் என ஐக்கிய நாடுகள் சபையினர் அறிவித்தனர். It is the same day as International Children's Day.
அமெரிக்காவில்
அமெரிக்காவில் பெற்றோர் தினம் ஜூலை மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இது குழந்தைகள் வளர்ப்பதில் பெற்றோரின் பங்கை அங்கீகரிப்பதற்காக 1994 ஆம் ஆண்டில் குடியரசுத்தலைவர் பில் கிளிண்டன் அவர்களால் கொண்டுவரப்பட்டதுParents' Day is celebrated throughout the United States.
தென் கொரியாவில்
தென் கொரியாவில் பெற்றோர் தினம் மே 8 ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.

செவ்வாய், 30 மே, 2017

பன்னாட்டு குழந்தைகள் நாள் ( International Children's Day , ICD) ஜூன் 1 .



பன்னாட்டு குழந்தைகள் நாள் ( International Children's Day , ICD) ஜூன் 1 .

குழந்தைகள் நாள் ( Children's Day ) உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அனைத்துலக குழந்தைகள் நாள்
அனைத்துலக குழந்தைகள் நாள் ( Universal Children's Day ) டிசம்பர் 14 , 1954 இலிருந்து, ஐக்கிய நாடுகள் மற்றும்
யுனிசெஃப் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடுகின்றன. உலகெங்கணும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐநா அவையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநல திட்டங்களை உலகெங்கும் நடத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பன்னாட்டு குழந்தைகள் நாள்
பன்னாட்டு குழந்தைகள் நாள் ( International Children's Day , ICD) பல நாடுகளில் ஜூன் 1 ம் நாள் கொண்டாடப்படுகிறது. உலக சிறுவர் தினமும் முதியோர் தினமும் இலங்கையில் ஒரே தினத்தில் கொண்டாடப்படுகின்றன.
இந்தியா
முதன்மைக் கட்டுரை: இந்தியக் குழந்தைகள் நாள்
இந்தியாவில் ஜவகர்லால் நேரு பிறந்த
நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
இலங்கை
இலங்கையில் குழந்தைகள் நாள் அக்டோபர் 1 அன்று கொண்டாடப்படுகிறது

உலக புகையிலை எதிர்ப்பு நாள் மே 31 .

 
உலக புகையிலை எதிர்ப்பு நாள் மே 31 .

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.


அன்று முதல் இன்றுவரை புகை பிடிப்பது இளைஞர்கள் மத்தியில் ஃபேஷனாகவே இருக்கிறது. தான் பெரிய ஆள் என்பதை உணர்த்துவதற்காக சிகரெட்டை விரல் இடுக்கில் பிடித்தபடி ஸ்டைல் காட்டும் இளைஞர்கள் இன்று அதிகம். புகை பிடிக்கும் பெண்களும் இன்றைக்கு அதிகரித்து வருகிறார்கள். புகை பிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்களைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை.
புகை பிடிப்பவர்களுக்கும் புகையிலை சார்ந்த பழக்கம் கொண்டவர்களுக்கும் மற்றவர்களைவிட புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பது புதிய தகவல் இல்லை. ஆனால், ஒரு பக்கம் புற்றுநோய் மரணங்கள் அதிகரித்துவருவதும், மற்றொரு புறம் புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துவருவதையும் ஒருசேரப் பார்க்கும் நிலைமை மோசமானதுதான்.
அதிகரிக்கும் இறப்புகள்
உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிவரத்தின்படி புகை பிடிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் 60 லட்சம் பேர் உலக அளவில் உயிரிழக்கிறார்கள். இவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள். ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 25 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக Lancet oncology journal-ன் சமீபத்திய ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வரும் 2035-ல் இந்தியாவில் புற்றுநோய் இறப்பு 12 லட்சமாக அதிகரித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. ஆனால், இதைப் பற்றி நம்மில் பலரும் அச்சப்படுவதோ, கவலைகொள்வதோ இல்லை.
உலக அளவில்
புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதே இதை நிரூபித்துவிடும். இன்றைக்கு உலக அளவில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 10.8 சதவீதம் பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவத்தில் பயன்படுத்துகின்றனர். உலக அளவில் ஆண்கள் 47 சதவீதமும், பெண்கள் 12 சதவீதமும் புகை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். வளர்ந்த நாடுகளில் 42 சதவீத ஆண்களும் 24 சதவீத பெண்களும், வளரும் நாடுகளில் 48 சதவீத ஆண்களும் 7 சதவீத பெண்களும் புகை பிடிக்கிறனர்.
இந்திய அளவில்
சரி, இந்தியாவின் நிலைமை? இந்தியாவில் 53 சதவீத ஆண்களும் 3 சதவீத பெண்களும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோய், இந்தியாவில் லட்சத்தில் 10 பேருக்கு ஏற்படுகிறது. புகையிலையால் வரும் புற்றுநோய்களில் இதுவே அதிகம். 2020-ம் ஆண்டில் இந்தியாவில் 13 சதவீதம் இறப்புகளுக்குப் புகையிலை பழக்கமே காரணமாக இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பாதிப்புகள் என்ன?
புகை பிடித்தால் எப்படிப் புற்றுநோய் வருகிறது? புகையிலையில் நோயை உண்டாக்கக்கூடிய கார்பன் மோனாக்சைடு நச்சு அதிகம் உள்ளது. இதனால்தான், தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப் பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காசநோய், மலட்டுத் தன்மை என மற்றப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.
யாருக்குப் பாதிப்பு
“ஒரு பாக்கெட், இரண்டு பாக்கெட் என ஒரே நாளில் அதிகம் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதே எண்ணிக்கையில் ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டு புகை பிடித்தால் போதும், புற்றுநோய் நிச்சயமாக வந்துவிடும். வீட்டிலும், பொது இடத்திலும் புகை பிடிப்பதால் நமக்கு மட்டுமில்லாமல் நம் அருகில் இருக்கும் ரத்த உறவுகள், நண்பர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்திருப்பதால், முன்பைவிட அவர்களும் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கிராமப்புறப் பெண்கள் வாயில் புகையிலையை அடைத்துக் கொண்டிருப்பதைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். வாயில் புகையிலையை அடைத்துக் கொண்டிருப்பதால் புண் ஏற்படுகிறது. இது நாளடைவில் புற்றுநோய் புண்ணாக மாறிவிடுகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் புகை பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளைப் பள்ளிகளிலேயே மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்" என்கிறார் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பெல்லார்மின்.
நிறுத்துவோம்
இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்ய வேண்டும்? புகை பிடிப்பது, பான், குட்கா, புகையிலை போடுதல் போன்ற பழக்கங்களை நிறுத்துவதுதான் ஒரே வழி. புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபட முதலில் எளிய வழிகளான யோகா, ஆசனங்களைச் செய்யலாம். தொடர்ந்து தியானத்துக்கு நகரலாம். புகையிலை அடிமைத்தனத்தில் இருந்து மனதை மாற்ற, வேறு விஷயங்களில் ஈடுபட வேண்டும். அது சாக்லேட் தொடங்கி நூலகம் வரை எதுவாகவும் இருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக இப்படியே மாற்றி, புகை பிடிப்பதிலிருந்து ஒட்டுமொத்தமாக விடுபட முடியும். நமது மனஉறுதியின் வீரியத்தைப் பொறுத்து அது வேகமாக நிகழும்.
புகையிலை எதிர்ப்பு நாள்
புற்றுநோய் இல்லா உலகை உருவாக்க வேண்டும் என்பதே இன்றைக்கு உலக விருப்பமாக உள்ளது. இதை 27 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து புற்றுநோய் இறப்புகளைக் குறைக்கவும், புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் புகையிலை எதிர்ப்பு தினத்தை 1987-ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதற்காக ஒவ்வோர் ஆண்டும் புதிய வாசகம் ஒன்றை உருவாக்கி உலக சுகாதார அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. 2014-ம் ஆண்டுக்கான வாசகம், புகையிலை மீதான வரியை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான்.



நிறுத்தினால் கிடைக்கும் நிச்சயப் பலன்:

புகைப்பதைக் கைவிடுவது அவ்வளவு எளிதல்ல. அதேநேரம், முயற்சி எடுத்துப் புகைப்பதைக் கைவிட்டால் அடுத்தடுத்துக் கிடைக்கும் பலன்கள், உங்களுக்குப் பெரும் நம்பிக்கை அளிக்கக்கூடும். ஒருவர் புகைப்பதை நிறுத்திய நிமிடத்திலிருந்து உடல் எப்படியெல்லாம் மீட்டெடுக்கப்படுகிறது தெரியுமா?
20 நிமிடங்களில்
# ரத்த அழுத்தம் இயல்பாகும்.
# இதயத் துடிப்பு இயல்பாகும்.
8 மணி நேரத்தில்
# ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கார்பன் மோனாக்சைடு உடலிலிருந்து வெளியேறும்.
# ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இயல்புக்குத் திரும்பும்; அதனால் உடல் சக்தி முன்பைவிட மேம்பட்டிருக்கும்.
2 நாட்களில்
# நரம்புமுனைகள் திரும்ப வளர ஆரம்பிக்கும். நாக்கின் சுவை மொட்டுகளும் மணங்களை உணரும் தன்மையும் அதிகரிக்கும்; அதனால் உணவின் சுவை முன்பைவிட மேம்பட்டிருக்கும்.
2-12 வார இடைவெளியில்
# உடலில் மேல் தோல் மேம்படும்.
# ரத்தவோட்டம் மேம்படும்.
# சுவாசமும் நுரையீரல் செயல்பாடும் மேம்படும்.
# நடை எளிதாகும்.
1-9 மாத இடைவெளியில்
# இருமல், சைனஸ் இறுக்கம் தளரும்.
# மூச்சிளைப்பு குறையும்.
# உடல் சக்தி குறிப்பிடத்தக்க அளவு மேம்படும்.
# நுரையீரலின் சுயசுத்தம் செய்துகொள்ளும் தன்மை மேம்படும். நோய்த்தொற்று ஏற்படும் தன்மை குறையும்.
1 ஆண்டில்
# புகைபிடிக்கும்போது இதயக் கோளாறு ஏற்படுவதற்கு இருந்த ஆபத்து 50 சதவீதமாகக் குறையும்.
5 ஆண்டுகளில்
# பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியம் புகை பிடிக்காதவருக்கு உள்ள அளவுக்கே மாறிவிடும்.
# வாய், தொண்டை, உணவுக் குழாயில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் புகைபிடிப்பவரைவிட பாதியாகக் குறையும்.
10 ஆண்டுகளில்
# புகை பிடிக்காதவருக்கு உள்ள சராசரி ஆயுட்காலம் மீண்டும் கிடைக்கும்.
# நுரையீரல் புற்றுநோயால் இறப்பதற்கு உள்ள சாத்தியம் 50 சதவீதம் குறையும்.
# வாய், தொண்டை, உணவுக்குழாய், சிறுநீரகப்பை, சிறுநீரகம், கணையப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் குறையும்
# புற்றுநோயாக மாற வாய்ப்புள்ள செல்கள், இயல்பு செல்களாகப் பதிலிடப்படும்
15 ஆண்டுகளில்
# இதயக் கோளாறு ஏற்படுவதற்கான ஆபத்து, புகை பிடிக்காதவருக்கு இருப்பதைப் போலவே ஆகிவிடும்.


திங்கள், 29 மே, 2017

புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமி V. Narayanasamy , பிறந்த நாள் மே 30.1947.



புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமி  V. Narayanasamy , பிறந்த நாள்  மே 30.1947.

வி. நாராயணசாமி ( V. Narayanasamy , பிறப்பு: 30 மே 1947) இந்திய தேசிய காங்கிரசு கட்சி அரசியல்வாதியும்,
புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் முதலமைச்சரும் ஆவார். வி. நாராயணசாமி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

நாராயணசாமி பாண்டிச்சேரியில் வேலு, ஈசுவரி ஆகியோருக்குப் பிறந்தவர். சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி , அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்று பட்டம் பெற்றார்.

அரசியலில்
நாராயணசாமி மூன்று முறை
மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 இல்
புதுச்சேரி தொகுதி மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மன்மோகன் சிங்கின் இரண்டாவது அமைச்சரவையில் இணை அமைச்சராகவும், முதலாவது அமைச்சரவையில் நாடாளுமன்ற அலுவல்கள் இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.
2014 இந்தியப் பொதுத் தேர்தலில் இவர்
அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் கட்சியின் ஆர். இராதாகிருஷ்ணனிடம் தோற்றார்.
2016 மே மாதத்தில் நடைபெற்ற
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு, திமுக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து மாநில முதலமைச்சராக நாராயணசாமி காங்கிரசு கட்சியினால் நியமிக்கப்பட்டார்.

ஞாயிறு, 28 மே, 2017

நடிகை டி. பி. முத்துலட்சுமி T. P. Muthulakshmi நினைவு தினம் மே 29, 2008.



நடிகை டி. பி. முத்துலட்சுமி  T. P. Muthulakshmi  நினைவு தினம் மே 29, 2008.

டி. பி. முத்துலட்சுமி ( T. P. Muthulakshmi , இறப்பு: மே 29, 2008) 1950-60களில் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையாகத் திகழ்ந்தவர். 300 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இளமைக் காலம்
தமிழ்நாடு தூத்துக்குடியில் பொன்னைய பாண்டியர், சண்முகத்தம்மாள் ஆகியோருக்கு ஒரே மகளாகப் பிறந்தவர் முத்துலட்சுமி. தந்தை ஒரு விவசாயி. எட்டாம் வகுப்பு வரை படித்தார்.

திரைப்படங்களில் நடிப்பு

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு சென்றார். சென்னையில் அவருடைய மாமா எம். பெருமாள், இயக்குநர் கே. சுப்பிரமணியத்துடன் நடனக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். முத்துலட்சுமிக்கு, பெருமாளே நடனமும், பாட்டும் கற்றுக் கொடுத்தார்.
எஸ். எஸ். வாசன் தயாரித்த சந்திரலேகா திரைப்படத்தில் வரும் முரசு நடனத்தில் குழுவினருடன் சேர்ந்து நடனமாடும் வாய்ப்பு முத்துலட்சுமிக்குக் கிடைத்தது. அத்துடன் சில காட்சிகளில் டி. ஆர். ராஜகுமாரிக்காக சில காட்சிகளில் நடனம் ஆடும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பின்னர் "மகாபலி சக்கரவர்த்தி ", மின்மினி , தேவமனோகரி,
பாரிஜாதம் முதலான படங்களில் நடித்தார்.
நகைச்சுவை நடிகையாக அறிமுகம்
1950 இல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த
பொன்முடி படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். இதனை அடுத்து அவருக்கு ஏராளமான வாய்ப்புக்கள் வந்தன. 1951ல் ஓர் இரவு படத்தில் டி. கே. சண்முகத்தின் மனைவி பவானியாக நடித்தார். சிவாஜி கணேசன் நடித்த
திரும்பிப்பார் படத்தில் தங்கவேலு மனைவியாக ஊமைப் பெண்ணாக முத்துலட்சுமி நடித்தார். இருவர் உள்ளம் படத்தில் எம். ஆர். ராதாவின் மனைவியாக முத்துலட்சுமி நடித்தார்.
குடும்பம்
முத்துலட்சுமியின் கணவர் பி. கே. முத்துராமலிங்கம், அரச நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றியவர். தமிழ் நாடு சிலம்பாட்டக் கழகத்தின் நிறுவனத் தலைவர்.  நடிகரும் இயக்குனருமான டி. பி. கஜேந்திரன் இவர்களது வளர்ப்பு மகன் ஆவார்.  முத்துலட்சுமி தனது 77வது அகவையில் 2008 மே 29 இல் சென்னையில் காலமானார்.

விருதுகள்

கலைமாமணி விருது (1999)
கலைவாணர் விருது
நடித்த சில திரைப்படங்கள்
ராஜாம்பாள் (1951)
வளையாபதி (1952)
தாய் உள்ளம் (1952)
பராசக்தி (1952)
மனோகரா (1954)
பொன் வயல் (1954)
ராஜி என் கண்மணி (1954)
சுகம் எங்கே (1954)
துளி விஷம் (1954)
கணவனே கண் கண்ட தெய்வம் (1955)
பாசவலை (1956)
நான் பெற்ற செல்வம் (1956)
மக்களைப்பெற்ற மகராசி (1957)
மாயா பஜார் (1957)
சக்கரவர்த்தி திருமகள் (1957)
முதலாளி (1957)
வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
வண்ணக்கிளி (1959)
தங்கப்பதுமை (1959)
அடுத்த வீட்டுப் பெண் (1960)
படிக்காத மேதை (1960)
ஹரிச்சந்திரா (1968)
அன்னையின் ஆணை
அனுபவி ராஜா அனுபவி
இருவர் உள்ளம்
ஏழை உழவன்
ஓர் இரவு
கடன் வாங்கி கல்யாணம்
குணசுந்தரி
கொஞ்சும் சலங்கை
சந்திரலேகா
டவுன் பஸ்
திரும்பிப்பார்
திருவருட்செல்வர்
தேவமனோகரி
பத்மினி
பாரிஜாதம்
பிரேம பாசம்
பொன்முடி
போர்ட்டர் கந்தன்
மகாபலி சக்கரவர்த்தி
மகேஸ்வரி
மரகதம்
வடிவுக்கு வளைகாப்பு
வாழ்க்கை ஒப்பந்தம்
வாழவைத்த தெய்வம்
வீரபாண்டிய கட்டபொம்மன்
ஜமீந்தார்


தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ரி.பி.முத்துலட்சுமி 1948-ஆம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்ந்து சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். பொன்முடி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரி.பி.முத்துலட்சுமி “சௌபாக்கியவதி’, “மக்களைப் பெற்ற மகராசி, நான், ஒளிவிளக்கு நாடோடி மன்னன் அறிவாளி, ஆரவல்லி, வீரபாண்டிய கட்டபொம்மன், இருவர் உள்ளம், நவராத்திரி, அன்பே வா’ உள்பட சுமார் 350 படங்களுக்கு மேல் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்தார். நடிப்பில்
தன்னுடைய சிறப்பான பங்களிப்புக்காக கலைமாமணி விருது பெற்ற இவர், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா, ரி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு, ஏ.கருணாநிதி, ரி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்பட இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் இவருடைய நெருங்கிய உறவினர்.  நடிகை முத்துலட்சுமி நடிகர் தங்கவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவைக்காட்சிகளில் நடித்தவர். இன்றும் மறக்க முடியாத பல சிரிப்புக்காட்சிகளில் இவர் நடித்துள்ளார்.
இறுதிக்காலத்தில் நடக்க முடியாமல் அவதியுற்ற முத்துலட்சுமி சக்கர நாற்காலியைத் தான் பயன்படுத்தி வந்தார். இவரது கணவர் பெயர் முத்துராமலிங்கம். 29.5.2008 அன்று தனது 77-ஆவது வயதில் மரணடைந்தார்.
1957 -இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸாரின் வெற்றிப்படமான ‘ஆரவல்லி’ படத்தில் இவர் சிங்காரவல்லி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். மைனாவதியின் தோழி. ரி.பி.முத்துலட்சுமியை ஏ.கருணாநிதியும் இவரும் காதலிப்பார்கள். ரி.பி.முத்துலட்சுமிக்கு யாருடைய காதலை ஏற்றுக்கொள்வது என்பதில் குழப்பம். குழப்பத்தைத் தீர்க்க இருவருக்கும் ஒரு போட்டி வைப்பார். ஒரே போலவுள்ள மூன்று பெண்களின் முழு உருவச்சிலையை ஓரிடத்தில் வைத்து இந்த 3 பெண்களில் யாரைப்போல் இருந்தால் என்னை ஏற்றுக்கொள்வீர்கள் என்று இருவரும் சரியாகச் சொன்னால்தான் நான் அதில் சரியாகச் சொல்பவரை என் துணையாக ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லிவிடுவார். ஏ.கருணாநிதியோ 3 சிலைகளும் ஒன்று போலவே இருக்கின்றன. மூன்றுமே அழகாக இருக்கின்றன. என்று வீர வசனம் பேசிவிட்டு அதனால் என்னை ஏற்றுக்கொள் என்பார். ஆனால் ரி.பி.முத்துலட்சுமி ஏற்றுக்கொள்ளமாட்டார். இரு இரு நான் பார்த்து சொல்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வழக்கம்போல தனது காதில் திரியை விட்டு குடைந்து ஆராய்ச்சி செய்துவிட்டு , நான் இப்போது சொல்கிறேன் என்று 3 பெண்களது சிலைகளின் காதுகளில் வரிசையாக ஒரு காதில் ஒரு நீள திரியை விடுவார். ஒரு பெண்ணின் ஒரு பக்கக் காதிலிருந்து மறுபக்க காதுக்கு திரி வந்துவிடும். இன்னொரு பெண்ணின் ஒரு காதிலிருந்து திரி வாய்க்கு வந்துவிடும். மூன்றாவது சிலையில் திரியை நுழைப்பார்… அத்திரி ஒரு காதில் போய் உள்ளேயே நின்றுவிடும். இப்பெண்தான் சரியானவள் குடித்தனத்திற்கு ஏற்றவள். அவளைப் போல் நீ இருக்கவேண்டும் என்பார். ரி.பி.முத்துலட்சுமியும் சரியென ஏற்றுக்கொள்வார். இக்காட்சி படத்தில் மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.
நகைச்சுவை வேடத்தில் 300 படங்களில் நடித்த டி.பி.முத்துலட்சுமி என்ற தலைப்பில் “மாலை மலர்” நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தி.



டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி. அவர் நடித்த படங்கள் சுமார் 300. முத்துலட்சுமியின் சொந்த ஊர் தூத்துக்குடி. தந்தை பொன்னைய பாண்டியர். தாயார் சண்முகத்தம்மாள். அவர்களுடைய ஒரே மகள் முத்துலட்சுமி.தூத்துக்குடியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். படிக்கும்போதே, `பாட்டும், நடனமும் கற்றுக்கொண்டு சினிமா துறையில் நுழைய வேண்டும்’ என்ற ஆசை ஏற்பட்டது. எட்டாம் வகுப்பை முடித்தபோது, தன் விருப்பத்தை பெற்றோரிடம் கூறினார். அவர்கள் திடுக்கிட்டனர்.முத்துலட்சுமியின் தந்தை ஒரு விவசாயி. ‘நமக்கெல்லாம் சினிமா ஒத்து வராது. அந்த ஆசையை விட்டு விடு’ என்று கூறிவிட்டார்.ஆனால் முத்துலட்சுமி மனம் தளரவில்லை. எப்படியும் சினிமா நடிகை ஆகவேண்டும் என்று உறுதி கொண்டார். சென்னையில் அவருடைய மாமா எம்.பெருமாள், டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் சினிமா கம்பெனியில் நடனக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். அவருடைய உதவியுடன் சினிமாத்துறையில் நுழைய முடிவு செய்தார். பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு ரெயில் ஏறினார்.முத்துலட்சுமிக்கு, பெருமாளே நடனமும், பாட்டும் கற்றுக்கொடுத்தார்.அந்த சமயத்தில் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், ‘சந்திரலேகா’வை பிரமாண்டமாகத் தயாரித்து வந்தார். பெருமாளின் முயற்சியினால், ‘சந்திரலேகா’வில் வரும் முரசு நடனத்தில் இடம் பெறும் வாய்ப்பு முத்துலட்சுமிக்கு கிடைத்தது. ஏராளமான பெண்கள் பங்கு கொண்ட அந்த நடனக் காட்சியில், முத்துலட்சுமி நடனம் ஆடியதுடன், சில காட்சிகளில் டி.ஆர்.ராஜகுமாரிக்கு ‘டூப்’பாக ஆடினார்.ஜெமினியில் 65 ரூபாய் மாத சம்பளத்தில் சில காலம் வேலை பார்த்தார்.பின்னர் ‘மகாபலிசக்ரவர்த்தி’, ‘மின்மினி’, ‘தேவமனோகரி’, ‘பாரிஜாதம்’ முதலான படங்களில் நடித்தார்.1950-ல், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘பொன்முடி’ படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். அது முத்துலட்சுமியின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏராளமான பட வாய்ப்புகள் தேடிவந்தன.1951-ல் ஏவி.எம். தயாரித்த அண்ணாவின் ‘ஓர் இரவு’ படத்தில், டி.கே.சண்முகத்தின் மனைவி பவானியாக நடித்தார். பின்னர் ‘சர்வாதிகாரி’, ‘ஏழை உழவன்’ போன்ற படங்களில் நடித்தார்.மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘திரும்பிப்பார்’ படத்தில், சிவாஜிகணேசனின் தந்தையாக தங்கவேலு நடித்தார். (ஆரம்ப காலப்படங்களில், வயோதிக வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் தங்கவேலு)வயதான காலத்தில் தங்கவேலு மணக்கும் ஊமைப் பெண்ணாக டி.பி.முத்துலட்சுமி நடித்தார்.1958-ல் வெளியான எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படமான ‘நாடோடி மன்ன’னில் முத்துலட்சுமிக்கு நகைச்சுவை வேடம் கிடைத்தது. அதில், தனக்கு விரைவில் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக, ‘புருஷன்! புருஷன்! புருஷன்’ என்று பூஜை செய்வார்.இதுபற்றி முத்துலட்சுமி கூறுகையில், ‘இந்தக் காட்சி படமாக்கப்படும்போது, படத்தின் டைரக்டரான எம்.ஜி.ஆர். அங்கே இருந்தார். ‘நன்றாக வேண்டிக்கொள். படம் திரையிடப்படுவதற்கு முன்பே உனக்கு நல்ல கணவர் கிடைப்பார்’ என்றார். அவர் சொன்னபடியே, எனக்குத் திருமணம் நடந்தது. என்னையும், என் கணவரையும் வீட்டுக்கு அழைத்து எம்.ஜி.ஆர். விருந்து கொடுத்தார்’ என்றார்.சிவாஜி -சரோஜாதேவி நடித்த ‘இருவர் உள்ளம்’ படத்தில், எம்.ஆர்.ராதாவின் ஜோடியாக முத்துலட்சுமி நடித்தார்.
‘அறிவாளி’ படத்தில் தங்கவேலுவுடன் இணைந்து நடித்தார். இதில், நகைச்சுவை காட்சிகள் பிரமாதமாக அமைந்தன.
மனோகரா, வஞ்சிக்கோட்டை வாலிபன், அடுத்த வீட்டுப்பெண், கொஞ்சும் சலங்கை, வீரபாண்டிய கட்டபொம்மன், தங்கப்பதுமை, மரகதம், வடிவுக்கு வளைகாப்பு, மக்களைப்பெற்ற மகராசி, மாயாபஜார், அனுபவிராஜா அனுபவி, திருவருட்செல்வர் உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் முத்துலட்சுமி நடித்துள்ளார்.
பட உலக அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-
‘தங்கவேலு அண்ணனுடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளேன். அவர் நல்ல திறமைசாலி. கலைவாணரைப் பின்பற்றி படத்திற்கு ஏற்ப நகைச்சுவை காட்சிகளை அமைப்பார். பந்தா இல்லாதவர். படங்களில், அபசகுனமான எந்த வார்த்தையையும் உச்சரிப்பதில்லை என்று கொள்கையே வைத்திருந்தார்.
‘டவுன் பஸ்’ படத்தில், நானும், அஞ்சலிதேவியும் பஸ் கண்டக்டர்களாக நடிப்போம். அஞ்சலிதேவியின் ஜோடியாக கண்ணப்பாவும், எனக்கு ஜோடியாக ஏ.கருணாநிதியும் நடித்தனர். குறைந்த பட்ஜெட் படம். மிக வெற்றிகரமாக ஓடியது.
நடிகர் திலகம் சிவாஜி அண்ணன் நடித்த ‘அன்னையின் ஆணை’யில், தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தப் படம் வெளிவந்தபோது, சிவாஜி அண்ணனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘தேன்மொழி’ என்று அண்ணன் பெயரிட்டார்.
அரியலூர் ரெயில் விபத்தில் என் தாயார் இறந்துவிட்டார். அதுபற்றி எனக்கு தந்தி வந்தது. அது ஆங்கிலத்தில் இருந்ததால், சிவாஜியிடம் கொடுத்து, படித்துச் சொல்லும்படி கேட்டேன். அதைப் படித்த அவர், உண்மையைச் சொன்னால் நான் மிகவும் அதிர்ச்சி அடைவேன் என்று கருதி, ‘உன் தாயாருக்கு உடம்பு சரி இல்லையாம். உடனே புறப்படு’ என்றுகூறி, தன்னுடைய காரில் என்னை அனுப்பி வைத்தார். ஒரு தங்கை போல் என்னிடம் பாசம் வைத்திருந்தார்.’
இவ்வாறு முத்துலட்சுமி கூறினார்.
முத்துலட்சுமியின் கணவர் பி.கே.முத்துராமலிங்கம். அரசு நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றியவர். ‘தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக’த்தின் நிறுவனத் தலைவர்.
தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது, ‘கலைவாணர் விருது’ உள்பட பல விருதுகளைப் பெற்றவர், முத்துலட்சுமி. இவருடைய மாமன் மகன்தான் டைரக்டர் டி.பி.கஜேந்திரன்.

மாதவிடாய் சுகாதார நாள் ( Menstrual hygiene day MHD , MH Day ) மே மாதம் 28.



மாதவிடாய் சுகாதார நாள் ( Menstrual hygiene day MHD , MH Day ) மே மாதம் 28.


மாதவிடாய் சுகாதார நாள் ( Menstrual hygiene day MHD , MH Day ) ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 28 ஆம் நாளன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் விழிப்புணர்வு நாள் ஆகும். மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் காட்டப்படும் தயக்கத்தைத் தகர்ப்பதும், உலக முழுவதுமான பெண்கள் மற்றும் பதின்மச் சிறுமியரின் மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.
2014 இல் செருமனியைச் சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பான வாசு யுனைட்டெட் (WASH United) தொடங்கப்பட்டு, 270 க்கும் மேற்பட்ட உலகளாவிய ஒத்த அமைப்புகளின் ஆதரவைப் பெற்றது. உலகக் கைகழுவும் நாள் (அக்டோபர் 15), உலகக் கழிவறை நாள் (நவம்பர் 19) போன்றவற்றுடன் மாதவிடாய் சுகாதார நாளும் துப்புரவு மற்றும்
சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நாட்களுள் ஒன்றாக உள்ளது. பெரும்பாலான பெண்களின் மாதவிடாய் கால அளவு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 5 நாட்கள் என்பதையும் மாதவிடாய் சுழற்சியின் தோராய அளவு 28 நாட்கள் என்பதையும் அடையாளப்படுத்தும் விதமாக ஆண்டின் 5 ஆவது மாதமான மே மாதத்தின் 28 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மாதவிடாய் சுகாதார மேலாண்மை
முறையான மாதவிடாய் சுகாதார மேலாண்மை ( menstrual hygiene management – MHM ) என்பது கீழுள்ளவாறு வரையறுக்கப்படுகிறது:
மாதவிடாய்க் காலத்தின்போது மகளிரும் பதின்மச் சிறுமியரும் மாதவிடாய்க் குருதிச் சேகரிப்பதற்கு அல்லது உறிஞ்சுவதற்குச் சுத்தமான பொருட்களைப் பயன்படுத்தல்; அவர்களுக்குத் தேவையானபோது அவற்றை மாற்றுவதற்குத் தனியிட வசதி.
அந்நாட்களில் உடலைச் சுத்தப்படுத்தத் தேவைப்படும் தண்ணீர் மற்றும் கழுவுபொருள் (சோப்பு); குருதி சேகரிப்பு அல்லது உறிஞ்சலுக்குப் பயன்படுத்தப்பட்டவற்றை அப்புறப்படுத்தும் வசதி."
பின்னணி
வங்காளதேசத்தில் மாதவிடாய் சுகாதார நாள் கொண்டாட்டம்
இந்தியாவிலுள்ள அம்ரா படாதிக்கில் மாதவிடாய் சுகாதார நாள் கொண்டாட்டம்
தன்சானியாவிலுள்ள பள்ளிச்சிறுமிகளுக்கான கழிப்பிடம், இவை இருந்தாலும்,
விடாய்க்கால அணையாடை எறிவதற்கான வசதியில்லை.
மாதவிடாய் சுகாதாரம் குறித்த போதுமான அறிதல் இல்லாமையால் வளர்ந்துவரும் நாடுகளில் மகளிர் பலவிதமான சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. வெளிப்படையாய் மாதவிடாய் குறித்துப் பேசுவது தவிர்க்கப்படுவதால் மாதவிடாய்ப் பருவத்திலுள்ள மகளிருக்கும் பதின்மச் சிறுமையருக்கும் அவர்களது உடலமைப்பு, உடல் நலம், கல்வி, தன் மரியாதை, மனித உரிமை குறித்த விவரங்கள் தெரியவருவதில்லை.
இந்தியாவில் 2014-ம் ஆண்டில் நடைபெற்ற கருத்துக்கணிப்பின்படி, சுமார் 42% பெண்களுக்கு விடாய்க்கால அணையாடை பற்றியோ, தங்களுடைய உடலில் எந்த பகுதியிலிருந்து மாதவிடாய் தோண்றியதென்பதோ தெரியாமல் இருக்கிறது மற்றும் "அநேகமானோர் தங்களுடைய முதல் மாதவிடாயின் போது பயத்திலோ அல்லது கவலையிலோ ஆழ்ந்திருக்கின்றனர்." உலகளவில், மூன்றில் ஒருவருக்கு நல்ல கழிப்பிட வசதி கிடையாது.  நீர்-துப்புரவு-சுகாதாரம்-கல்வி துறையிலும் மாதவிடாய் சுகாதார மேலாண்மையிலுள்ள குறைகள் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை.
உடல்நலம், மனநலம் மற்றும் சமுதாயம் சார்ந்த கூறுகள்
மோசமான மாதாவிடாய் சுகதார மேலாண்மையால் பெண்களின் இனப்பெருக்கப் பாதை கிருமித் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும் எவ்வகையான கிருமித்தொற்று நேரலாம், அதன் வகைப்பாடு, அளவு, ஏற்படக்கூடிய வழிகள் ஆகியவை குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை. இந்தியாவில் பெரும்பான்மையான சிறுமியர் இனப்பெருக்கப் பாதையின் கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. துவக்கத்திலேயே இந்நிலை சரிவர கவனிக்கப்படவில்லையெனில் பலவிதமான ஊனங்களுக்கு வழி ஏற்படுத்தி விடும்.
மாதவிடாய் குறித்த தவறான கருத்துக்களால் இந்தியாவில் சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் சரியான உணவு எடுத்துக்கொள்வதும் குளிப்பதும் இல்லை. மாதவிடாய் குறித்த தவறான கண்ணோட்டங்களால் சிறுமியரின் தற்படிமம் எதிர்முகப் பாதிப்படையலாம்.
பள்ளிக்கூடங்களில் துப்புரவு வசதிகள்
மாதவிடாய் மற்றும் பருவமடைதல் பற்றி புத்தகம் ("Growth and change") மூலம் அறிதல் ( தன்சானியா )
மாதவிடாய்க்குப் பயன்படுத்தத் தேவையான சுகாதாரமான பொருட்கள் கிடையாமையாலும் தண்ணீர், துப்புரவு, சுகாதார வசதிகள் இல்லாமையாலும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் (sub-Saharan Africa) சிறுமியர் ஐந்து நாட்கள் வரை பள்ளிக்கூடங்களுக்குச் செல்லாமல் இருக்கின்றனர். தண்ணீர், துப்புரவு, சுகாதார வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பள்ளிகளில் சிறுமியரின் வருகைப்பதிவைக் கூட்டலாம். வங்காள தேசத்திலுள்ள ஒரு பள்ளியில் துப்புரவு வசதிகளை மேம்படுத்தியதால் அப்பள்ளியின் சிறுமியரின் சேர்க்கைப் 11% அதிகரித்தது.
வளர்ந்துவரும் நாடுகளிலுள்ள பள்ளிகளில் மாதவிடாய்க் கழிவு அகற்றல் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படுவதில்லை. உலகளவில் பள்ளிகளில் மாணவியருக்குத் தண்ணீர் மற்றும் துப்புரவு வசதி 47% மட்டுமே கிடைக்கிறது. பள்ளிகளில் கழிவறைகள் இருந்தாலும்கூட, அங்கு மாதவிடாய் கழிவுகளைச் சேகரிக்கும் கூடைகள் வைக்கப்பட்டிருப்பதில்லை. இதனால் பயன்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட மாதவிடாய் அணையாடைகள் பள்ளி வளாகத்தில் பல்வேறு இடங்களிலும் கிடக்க வாய்ப்புள்ளது.  இது பள்ளியின் சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்பதுடன் சிறுமியருக்கு மன உளைச்சலையும் தரும்.
ஐக்கிய அமெரிக்கவில் சுகாதாரமான மாதவிடாய்ப் பொருட்கள் வாங்க வசதியில்லாத சிறுமியர் ”ஆடைகளில் கறைபடக் கூடிய சங்கடத்தைத் தவிர்ப்பதற்காகப்” பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்க நேரலாம்.
மாதாவிடாய்ப் பொருட்கள் அணுக்கம்
குறைந்த வருவாயுள்ள நாடுகளில் விலை, கிடைக்கும்தன்மை, சமூக வரன்முறை போன்ற காரணிகளால் பெண்களுக்கு சுகாதாரமான மாதவிடாய்ப் பொருட்கள் கிடைக்கும் வாய்ப்பு மட்டுப்படுகிறது.
வேலைபார்க்கும் இடங்களில் மாதவிடாய் அணையாடைகள் கிடைக்காமையாலும் போதிய கழிவறை வசதிகள் இல்லாதமையாலும் மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வது பாதிக்கப்படுகிறது.வங்காளதேசத்தில் தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் பெண்கள், தங்களுக்கு நல்ல சுகாதாரமான அணையாடைகள் வாங்கப் பொருளாதார வசதி இல்லாமையால் அத்தொழிற்சாலையின் தரை விரிப்புகளின் கிழிசல்களை அணையாடைகளாகப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.
ஐக்கிய அமெரிக்காவிலும் குறைந்த வருமானமுள்ள/வீடற்ற ஏழைப் பெண்களும் சிறுமியரும் மாதவிடாய் அணையாடை வாங்கும் வசதியற்று உள்ளனர்.
நியூயார்க்கின் உணவு வைப்பகங்கள் பெண்களுக்கான மாதவிடாய் சுகாதார பொருட்களுக்கு அதிகளவு தேவையுள்ளதாகத் தெரிவிக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவிலுள்ள வீடற்ற பெண்கள் குளிப்பதற்கும் கழிவறைப் பயன்பாட்டிற்கும் சிரமப்பட வேண்டியுள்ளது. வசதியற்ற பெண்களுக்கு உதவும் வகையில் மாதவிடாய்ப் பொருட்களுக்கு விற்பனை வரிவிலக்கு அளிக்கப்படவேண்டும்; பொதுப் பள்ளிகளில் மாணவியருக்கு இலவசமாகப் பஞ்சுத்தக்கைகள் வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகள் நியூயார்க்கில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய இராச்சியம் போன்ற தொழில்வள நாடுகளிலும் பெண்கள் பஞ்சுத்தக்கைகள் மற்றும் அணையாடைகள் வாங்க வசதியில்லாமல் உள்ளனர்.
தவறான கருத்துகள்
நல்ல உடல்நலமுள்ள ஒரு பெண்ணின் உடலில் நிகழும் ஒரு உயிரியல் செயல்பாடாக இருந்தபோதும், ஆழமாக வேரூன்றிப்போன தவறான கலாச்சாரக் கண்ணோட்டங்களால் மாதவிடாய் தொடர்பான எவையும் ஒருவிதத் தயக்கத்துடனேயே அணுகப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, இந்தியாவில் பாராம்பரியமான இந்துக்கள் வீடுகளில் மாதவிடாய்க் காலத்தில் சமையலறைக்குள்ளும் கோயில்களுக்குள்ளும் நுழைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மத்தியப் பிரதேச மாநிலத்தில் சாபுஆ மாவட்டப் பகுதிகளில் ( இந்தி : झाबुआ जिला) மாதவிடாய் ஒரு நோயாகப் பார்க்கப்படுகிறது. அதனால் மாதவிடாய் நாட்களில் பெண்கள் படுக்கையில் படுக்கவும், சமயலறையில் நுழையவும், குடும்பத்தின் பிற ஆண்களைத் தொடவும், காரமான உணவுகளை உண்பதும் அனுமதிக்கப்படுவதில்லை.
குறிக்கோள்கள்
உகாண்டாவில் மாதவிடாய் சுகாதார நாள் கொண்டாட்டம்
விழிப்புணர்வு ஏற்படுத்தல்
மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்து நிலவும் மௌனத்தைத் தகர்த்து, பெண்களுக்காகவும் சிறுமியருக்குக்காகவும் ஒற்றுமையான வலுவான குரல் எழுப்புவதற்காகத் தனிநபர்கள், அமைப்புகள், சமூக வணிகங்கள் (social business) மற்றும் ஊடகங்களை ஒன்றிணைக்கும் மேடையாகச் செயல்படுவதே மாதவிடாய் சுகாதார நாளின் நோக்கமாகும்.
மாதவிடாய் சுகாதார நாளின் நோக்கங்கள்

மாதவிடாய் நாட்களில் பெண்களும் சிறுமியரும் சந்திக்கும் சவால்களையும் சிக்கல்களையும் குறித்து அலசுதல்
இதற்காக மேற்கொள்ளப்படும் வளர்முகமான புத்தாக்கத் தீர்வுகளை முன்னிலைப்படுத்தல்
பெண்கள் மற்றும் சிறுமியரின் உரிமைகளை அங்கீகரித்து ஆதரிக்கும் உலகளவிலான இயக்கம் வளர ஊக்குவித்தல்; இதே நோக்கத்தோடு செயற்படும் அமைப்புகளுக்கிடையே உள்ளிட அளவிலும் தேசிய அளவிலும் இணைப்பு ஏற்படுத்தல்
கொள்கை உரையாடல்களில் ஈடுபடுதல்; உலக, தேசிய, உள்ளிட அளவிலான கொள்கைகள், நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களாக மாதவிடாய் சுகாதார மேலாண்மை ஒருங்கிணைப்பை எடுத்துச் செல்லல்
சமூக ஊடகங்கள் உட்பட்ட பல ஊடகச் செயற்பாடுகளுக்கான வாய்ப்புகளைத் தோற்றுவிக்கிறது.
உடற்கூறு பற்றிய அறிதல், தன்னாட்சி மற்றும் பாலின சமத்துவத்துவத்தை வளர்த்தெடுக்கும் நாடுகடந்த இயக்கத்தை இந்நாள் உருவாக்குகிறது.
செயற்பாடுகள்
2015
மே 28, 2015 இல் "மாதாவிடாய் குறித்த தயக்கத்துக்கு முடிவு கட்டுவோம்" என்ற கருத்தை வலியுறுத்தி அனைத்துலக அமைப்புகளும் தனிநபர்களும் ஒன்றிணைந்து இரண்டாவது மாதவிடாய் சுகாதார நாளை அனுசரித்தனர். 33 நாடுகளில் 127 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெண்கள் மற்றும் சிறுமியரின் சிக்கல்கள், அவை தொடர்பான கொள்கைகளை முன்னெடுத்தல், விளிம்புநிலையோரை அணுகல், மாதவிடாய் நாட்கள் வெட்கப்படுவதற்குரியவை என்றும் அழுக்கானவை என்றும் கூறப்படும் சமூக வரன்முறைகளை எதிர்த்தல் போன்ற விடயங்களில் ஆண்களும் சிறுவர்களும் பங்கேற்கும் வாய்ப்பாக அந்நிகழ்வுகள் அமைந்தன

வெள்ளி, 26 மே, 2017

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம் மே 27, 1964.



இந்தியாவின் முதல் பிரதமர்  ஜவகர்லால் நேரு நினைவு தினம் மே 27, 1964.

இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், சுதந்திரப்போராட்ட வீரராகவும், இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், “நவீன இந்தியாவின் சிற்பி” எனவும் கருதப்படும் ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாக காண்போம்.
பிறப்பு: நவம்பர் 14, 1889
இடம்: அலகாபாத், உத்திரப் பிரதேசம் (இந்தியா)
பணி: சுதந்திர போராட்ட வீரர், அரசியல் தலைவர்
இறப்பு: மே 27, 1964
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
ஜவகர்லால் நேரு அவர்கள், இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பெரிய செல்வந்தரும், வழக்கறிஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த மகனாக ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். நேருவுக்கு, விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணா என்ற இரு சகோதரிகள் இருந்தனர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
இங்கிலாந்திலுள்ள ஹர்ரோவில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கிய நேரு அவர்கள், ட்ரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் படித்து 1910ல் “திரைபோசில்” இரண்டாவது மாணவனாகப் பட்டம் பெற்றார். கேம்ப்ரிட்ஜ் மற்றும் ட்ரினிட்டி கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர், 1912ல் இன்னர் டெம்பிலில் சட்டம் பயில பதிவு செய்துக்கொண்டார். 1962 ல், வெற்றிகரமாக சட்டப் படிப்பை முடித்த நேரு தனது சட்டப் பணியைத் தொடங்க இந்தியா திரும்பினார்.
திருமண வாழ்க்கை
நேரு அவர்கள், 1916 ல் கமலா கவுல் என்ற பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திராபிரியதர்ஷனி என்ற மகள் பிறந்தாள் (பின்னாளில் பெரோசு காந்தியை திருமணம் செய்துகொண்ட அவர், ‘இந்திரா காந்தி’ என்றழைக்கபட்டார்). இருபது ஆண்டுகாலம் நேருவுடன் வாழ்ந்த கமலா நேரு, 1936ல் புற்று நோயால் இறந்துப்போனார். கமலா நேருவின் இறப்பிற்குப் பிறகு, கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார்.
அரசியல் வாழ்க்கை
1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, நேருவை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் ஏதும் இன்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வெள்ளையர் ஆட்சி மீது நேருவுக்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் அவரை ஈடுபடுத்திக் கொள்ளவும் காரணமாக அமைந்தது.
காந்தியின் கொள்கைகள் மீது அதிக ஈடுபாடுகொண்ட நேருவும் அவருடைய குடும்பமும் விலையுயர்ந்த மேற்கு ஆடைகள் உடுத்துவதைத் தவிர்த்து கதர் ஆடையை உடுத்தினர். காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக மாறிய நேரு, 1920ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1921ல் முதன் முதலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்ட அவர், 1924ல் அலகாபாத்து நகராட்சித் தலைவராக தேர்தெடுக்கபட்டார். இரண்டு ஆண்டுகள் தலைமை நிர்வாகியாகியாக சிறப்பாக பணியாற்றிய அவர், 1926ல் தனது பணியை ராஜினாமா செய்தார். பின்னர் 1926 முதல் 1928 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக பணியாற்றினார். முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை காந்தியின் வழிகாட்டுதலில், 1929 லாகூர் நிகழ்ச்சியைத் தலைமையேற்று நடத்தினார். பின்னர், ஜனவரி 26, 1930ல் சுதந்திரம் கோரி இந்திய சுதந்திரக் கொடி நேருவால் லாகூரில் பறக்கவிடப்பட்டது.
1945 ஆம் ஆண்டு, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக நேரு கைது செய்யப்பட்டுப் பின் விடுதலை செய்யப்பட்டார். பின்னர், நேரு இடைகால அரசைத் தலைமையேற்று நடத்திசெல்லும்போது மத வன்முறை அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க்கட்சியான முகமது அலி ஜின்னா தலைமையில் முஸ்லீம் லீகின் முஸ்லிம்களுக்கான தனிநாடு கோரியது ஆகியவற்றால் அவருடைய முன்னேற்றம் தடைப்பட்டது மட்டுமல்லாமல் வேறுவழியின்றி 1947 ஜூன் 3ல் இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவளித்தார். ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தனி சுதந்திர நாடாக இந்தியா விடுதலைப் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்றதும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நியமிக்கப்பட்ட நேரு அவர்களுக்கு, ஆகஸ்ட் 15, 1947 புதுதில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிப்பெருமை நேருவுக்கு வழங்கப்பட்டது. அன்று முதல், சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்குத் தன்னை முழுவதுமாக அற்பணித்துக்கொண்டார்.


நேருவின் படைப்புகள்
வாழ்நாளில் ஒன்பது வருடங்கள் சிறையில் கழித்த நேரு அவர்கள், சிறையில் இருந்த நாட்களில் ஒரு சில நூல்களை எழுதினார்.
1934 ல் “உலக வரலாற்றின் காட்சிகள்”
1936 ல் “சுயசரிதை”
“இந்தியாவின் கண்டுபிடிப்பு”
இந்தப் படைப்புகள், ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்தது மட்டுமல்லாமல், நற்பெயரையும் தேடித்தந்தது.
இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக நேருவின் பணிகள்
இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியாக கருதப்படும் நேரு அவர்கள், ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964, அதாவது தனது இறுதிக் காலம் வரைப் பிரதமராக பணியாற்றினார். அவரது ஆட்சியில், இந்தியாவின் வளர்ச்சிக்குப் பல திட்டங்களைத் தீட்டி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார் என்றால் அது மிகையாகாது. 1951ல், இந்திய திட்டக் குழுவை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை வரைந்தார். பின்னர், 1952 ல் நடந்த தேர்தலில், நேருவின் தலைமையில் காங்கிரஸ் பெரும் வெற்றிப் பெற்றது. முதல் ஐந்தாண்டுத் திட்டம், அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது. மேலும் தொழிற்சாலைகளை அதிகப்படுத்துதல், வருமான வரிகள் மூலம் கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கி சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற்சாலைகள், தனியாரிடம் போவதை தடுத்து, அரசாங்கமே நடத்தத் திட்டம் வகுத்தார். நில மற்றும் பங்கீட்டை முதன்மைப் படுத்தினார். விவசாயக் கிணறுகள், அணைகள் கட்டுதல், விவசாய உற்பத்தியைப் பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையை செயல்படுத்தியது மட்டுமல்லாமல், அணு ஆற்றலில் இந்தியா சிறந்து விளங்கவும் திட்டங்களைத் தீட்டினார்.
‘இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது’ என்பதை நன்கு உணர்ந்த நேரு அவர்கள், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மைக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற அரசாங்க உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கவனித்து வந்தார். இலவச கட்டாய கல்வித் திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார். சிறந்த கிராமப்புறத் திட்டங்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டத்தையும் அமல்படுத்தினார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, அரசுப்பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார்.
நேருவின் வெளிநாட்டு கொள்கைகள்
நேரு அவர்கள், பல பிரச்சனைகளைத் திறம்பட சமாளித்து தீர்த்ததால், உலக பார்வையில், ‘சமாதானபடுத்துவதில் மன்னர்’ என்றும் ஐக்கிய நாடுகளின் வலுவான ஆதரவாளராகவும் போற்றப்பட்டார். “கூட்டுசேராக் கொள்கைகள்” மற்றும் “அணிசேரா இயக்கங்களை” உறவாக்கி, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் நடுநிலைமை வகித்தார். மனித சமுதாயத்திற்கு அணுஆயுதங்கள் உண்டாக்கும் விளைவுகளை நன்கு அறிந்ததாலும், அவை நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என கருதி அணுஆயுதக் கொள்கையை நேரு அவர்கள் ஆதரிக்கவில்லை என கூறப்படுகிறது. 1954 ல், நடைபெற்ற திபெத்தின் மீதான சீன-இந்திய உடன்படிக்கை, பஞ்சசீலக் கொள்கைகளின் அடிப்படையாக இருந்தாலும், பல காரணங்களால் சீன இந்திய உறவு இன்றளவும் பிளவுப் பட்டுத்தான் காணப்படுகிறது. இருந்தாலும், மிக சக்திவாய்ந்த வெளியுறவுக் கொள்கைகளால் நவீன இந்திய அரசாங்கத்தை, அரசியல் காட்சாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
நேருவின் பெயரை பறைச்சாற்றும் நினைவுச்சின்னங்கள்
இந்தியா முழுவதும் கல்விநிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள், தெருக்கள், சாலைகள் மற்றும் பல பொது நிறுவனங்களுக்கு நேருவின் பெயர் சூட்டப்பட்டு அவருடைய நினைவைப் பறைசாற்றுகின்றன.
1989 ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தால் நேருவின் தபால் தலை வெளியிடப்பட்டது.
மும்பையில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு ‘நேரு துறைமுகம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நேரு பிரதமாராக இருந்தபோது, அவர் வசித்து வந்த “தீன் மூர்த்தி பவன்”, தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, இன்றளவும் இந்திய அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
லண்டனில் உள்ள ஆல்ட்விச்சில் நேருவுக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது.
நேரு அவர்கள், வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி மற்றும் அக்கறையுடன் பாடுபட்டதை நினைவூட்டும் வகையில் அவரின் பிறந்த நாளான, நவம்பர் 14ஐ இந்தியா முழுவதும் “குழந்தைகள் தினமாகக்” கொண்டாடுகிறோம்.
இறப்பு
1964 ஆம் ஆண்டு, மே மாதம் 27 ஆம் தேதி நேரு அவர்கள், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய உடல், யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது. ஒரு சுதந்திரமான, சமத்துவமான ஜனநாயக நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நேருவின் கனவுதான் இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.

புதன், 24 மே, 2017

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் நாள் ( International Missing Children's Day ) மே 25.



சர்வதேச காணாமல் போன குழந்தைகள் நாள் ( International Missing Children's Day ) மே 25.


சர்வதேச காணாமல் போன குழந்தைகள் நாள் ( International Missing Children's Day ) எனும் இந்நாள், காணாமற்போன குழந்தைகளுக்கான சர்வதேச நாளென ஒவ்வொரு ஆண்டும் மே 25-ம் நாள் கொண்டாடப்படுகிறது. காணாமல் போகும் எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு
அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்காவில்
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் நாள் உருவாகக் காரணமாக இருந்த
இட்டன் பாட்சின் (Etan Patz) 1978 -ல் பதிவு செய்யப்பட்ட ஒளிப்படம்
1979 -ம் ஆண்டு மே 25-ம் நாள்
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் காணாமல் போய்விட, ஒரு ஒளிப்படக் கலைஞராக இருந்த அவனது தந்தை, தன்னுடைய குழந்தையின் (இட்டன் பாட்ஷ்)
ஒளிப்படத்தை வெளியிட்டுக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தீவிர தேடுதல் வேட்டையை அங்கிருந்த
ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. ஊடக நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால் 1979 -ம் ஆண்டில் இருந்து 1981 -ம் ஆண்டு வரையில் குளம் ,
ஆறு போன்ற இடங்களில் சுவடு தெரியாமல் காணாமல் போன 29 குழந்தைகளின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இதனையொட்டி 1983 -ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த
ரானல்ட் ரேகன் மே 25-ம் திகதியை காணாமல் போகும் குழந்தைகளுக்கான தேசிய நாளாக அறிவித்தார். அன்றிலிருந்து மே 25-ம் நாள் காணாமல் போகும் குழந்தைகள் நாளாக ஐக்கிய அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் காணாமல் போகும் குழந்தைகள்
சர்வதேச அளவில், ஆண்டுக்கு சராசரியாக ஒரு இலட்சம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் அதில் பெண்பாலர்கள் 55 சதவிதமும், ஆண்பாலர்கள் 45 சதவிதமும் காணாமல்போவதாக ஆய்வறிக்கைகள் உள்ளது. மேலும், இந்தியாவில் மட்டும்
ஆண்டுதோறும் 45 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும் இதில்
தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் தேசியக் குற்றப் பதிவு ஆணையச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் மேற்கு வங்கமும், அடுத்த இடத்தில் தமிழகம் இருப்பதாக அறியப்படுகிறது.
காரணிகள்
குழந்தைகள் காணாமல் போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. தற்போது வீட்டில் பெற்றோர்கள் கண்டிப்பதால் சினங்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், உடல் உறுப்புகளைத் களவாடி விற்கும் சமூகவிரோதிகள் குழந்தைகளைக் கடத்துவதாகவும் சென்னை குழந்தைகள் நலகுழுமத்தின் உறுப்பினர் ஷிலா சார்லஸ் மோகன் கூறுகின்றார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட வைக்க 10 வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், மற்றும்
பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். குறிப்பாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தான் அதிக அளவில் கடத்தப்படுவதாக ஆய்வறிக்கை உள்ளது.
மீட்பு
காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்களை மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைப்பதில் பெரும் சிரமம் உள்ளதாகவும், பல குழந்தைகள் தாங்கள் எங்கு இருந்தோம் என்பதுகூடத் தெரியாமல் இருப்பதாகவும், செவித்திறன் , பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகள் மீட்கப்பட்டாலும் அவர்களை மீண்டும் சொந்த இடங்களுக்கு சேர்ப்பதில் சிரமம் உள்ளதாகவும் சமூக நலக்கல்வி குழுமத் தலைவரான மனோரமா தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தொலைந்தாலோ அல்லது பொது இடங்களில் தனியாக இருப்பதைக் கண்டாலோ காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இதுபோன்ற புகாரின் அடிப்படையில் சைல்டு ஹெல்ப்லைன் அறக்கட்டளையை (CHILDLINE India Foundation (CIF)) 1098 என்ற கட்டணமில்லா தொலைத்தொடர்பு மூலம் தொடர்பு கொண்டு குழந்தைகளைக் கண்டுபிடிக்கவும் தனியாகவுள்ள குழந்தைகளை உரியவர்களிடம் சேர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். காணாமற்போன குழந்தைகள் பற்றி அரசின் இணையதளத்திலும் ( www.trackthemissingchild.gov.in )பதிவு செய்யலாம்.


‘காணாமல் போன குழந்தைகள் தினம்’... இந்தியாவிலேயே மேற்கு வங்காளம்தான் மோசம்


இன்று சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவிலேயே அதிகமாக குழந்தைகள் காணாமல் போவது மேற்கு வங்காள மாநிலத்தில் தான் என புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது.
இந்திய அளவில் மேற்கு வங்காளம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில்தான் அதிக அளவில் சிறார்கள், மைனர் பெண்கள் காணாமல் போகின்றனர். இந்தியாவில் காணாமல் போகும் சிறார்களில் 60 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
குறிப்பாக மைனர் சிறுமிகள் அதிக அளவில் இங்கு காணாமல் போகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ள இந்த புள்ளி விவரத்தைப் பார்த்தால் மேற்கு வங்காளத்தில் நிலைமை மோசமாக இருப்பதை உணர முடியும்.
மேற்கு வங்காளம்...
மேற்கு வங்காளத்தில் கடந்த 2014ம் ஆண்டு காணாமல் போன சிறார்களின் எண்ணிக்கை 14,671 ஆகும். இது நாட்டின் மொத்த காணாமல் போனோரின் எண்ணிக்கையில் 21 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
5 பேரில் ஒருவர்...
இந்தியாவில் காணாமல் போகும் 5 சிறார்களில் ஒருவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிரா இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ளது. இங்கு 2014ல் 13,090 சிறார்கள் காணாமல் போனார்கள். டெல்லியில் 7599, ஆந்திராவில் 7072 பேர் காணாமல் போயுள்ளனர்.
நிலைமை மாறவில்லை...
கடந்த 2010-14 காலகட்டத்தில் மேற்கு வங்காளத்தில் குழந்தைகள் காணாமல் போவது சற்று குறைந்துள்ளது. அதாவது 7.4 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும் நிலைமை மோசம் என்ற நிலையிலிருந்து இன்றும் மாறவில்லை.
அதிகரிப்பு...
குழந்தைக் கடத்தலில் மேற்கு வங்காளமே நாட்டில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது 608 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 2010ல் கடத்தப்பட்டோர் எண்ணிக்கை 332 ஆக இருந்தது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 2351 ஆக அதிகரித்துள்ளது.
சிறுமிகள் அதிகம் ...
கடந்த 2010-14 காலகட்டத்தில் கடத்தப்பட்ட சிறார்களில் 61 சதவீதம் பேர் சிறுமிகள் ஆவர். இதுதான் கவலையை அதகரிப்பதாக உள்ளதாக தேசிய குற்ற ஆவண பதிவகம் கூறியுள்ளது.
புள்ளி விவரம்...
2010-14 காலகட்டத்தில் நாடுமுழுவதும் 3.85 லட்சம் சிறார்கள் காணாமல் போனார்கள். இவர்களில் 61 சதவீதம் பேர் சிறுமிகள். கடந்த ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் காணாமல் போன சிறார்களில் 70 சதவீதம் பேர் சிறுமிகள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. காணாமல் போவோரில் 40 சதவீதம் பேர் கண்டுபிடிக்கப்படாமலேயே போகின்றனர்.
கிழக்குப் பகுதியில் அதிகம்...
மேலும் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கம், அஸ்ஸாம், பீகார், ஒடிஷாவில்தான் சிறுமிகள் அதிக அளவில் கடத்தப்படுகின்றனர் என்பது இன்னொரு கவலைக்குரிய அம்சமாகும்.

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் நினைவு தினம் மே 24 1981.




தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் நினைவு தினம் மே 24 1981.

சி. பா. ஆதித்தனார் (1905 - 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ்
நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார். எனினும், காந்தியின் தலைமையில்
இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார்.
இளமைக் காலம்
ஆதித்தனாரின் தந்தையார் பெயர் சிவந்தி ஆதித்தர். தாயார் கனகம் அம்மையார். தந்தையார் ஒரு வழக்கறிஞர். மிகவும் வசதியான குடும்பம் அவர்களுடையது. தனது மகனையும் வழக்கறிஞராக ஆக்க விரும்பிய சிவந்தி ஆதித்தர், அவரை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு படிக்கும்போதே இதழியல் தொடர்பான பகுதி நேர வேலைகளைச் செய்துள்ளார். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள், செய்திகள் முதலியவற்றை எழுதிப் பணம் சம்பாதித்ததாக அவரே எழுதியுள்ளார்.
இலண்டனில் இருந்தபடியே
சுதேசமித்திரன் போன்ற தமிழ் நாட்டுப் பத்திரிகைகளுக்கும், வட இந்தியா,
தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் வெளிவந்த சில பத்திரிகைகளுக்கும் செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் அனுப்பியுள்ளார்.
1933 ஆம் ஆண்டில் இவரது திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் கோவிந்தம்மாள். பின்னர் சென்னை திரும்பிய அவர், பெரியாரின்
சுயமரியாதைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அக்காலத்தில் பெரியாரின் குடியரசுப் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். எனினும் தனது பிற்கால நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டும் நோக்கில் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கே வழக்கறிஞராகப் பணிபுரிந்து நல்ல வருமானம் பெற்றார். 1942 ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ் நாடு திரும்பினார்.
பத்திரிகைப் பணி
இவர் தொடங்கிய முதல் பத்திரிகை தமிழன் என்னும் வார இதழ் ஆகும். 1942 ஆம் ஆண்டில் இதை அவர் தொடங்கினார். அதே ஆண்டிலேயே நவம்பர் மாதத்தில்,
தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழையும் அவர் தொடங்கினார். இது மதுரையில் இருந்து வெளிவந்தது. தனது இதழியல் முயற்சிகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்த அவர், மாலை மலர் என்னும் மாலைப் பத்திரிகையையும், ராணி என்னும் வார இதழையும் தொடங்கினார். 1947 ஆம் ஆண்டில் தினத்தாள் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து அதனைச்
சேலத்தில் இருந்து வெளியிட்டார். அடுத்த ஆண்டில், திருச்சி , சென்னை ஆகிய இடங்களிலிருந்து முறையே
தினத்தூது , தினத்தந்தி ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன.
தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்த ஆதித்தனார், அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள் வாசிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த மொழி நடையைத் தவிர்த்து, சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார். இதனால் பரந்த அளவில் தமிழ் நாட்டில் வாசிப்புப் பழக்கம் பரவ வழிவகுத்தார். அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில் கூட, செய்திகளை வாசிக்கும் போக்கு வளர இவரது இதழியல் முயற்சிகள் வழி வகுத்தன.
மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் கீழ்
ராணி முத்து என்னும் வெளியீட்டை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுத் தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய போக்கு ஒன்றிற்கு ஆதித்தனார் வித்திட்டார்.
சமூகவியல் நோக்கிலும், இவரது பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1947 ஆம் ஆண்டில் நாடு விடுதலை பெற்றபோது மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான சமகால அரசியல் அறிவை வளர்த்துக்கொள்வதில் இவரது இதழியல் முயற்சிகள் பெரும் பங்காற்றின.
அரசியலில் ஆதித்தனார்
இவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததுமே ”நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கினார். ஆதித்தனார் பல போராட்டங்களிலும் பங்குபற்றியுள்ளார். சில சமயங்களில் இதற்காகச் சிறை சென்றும் உள்ளார். 1947 முதல் 1953 ஆம் ஆண்டுவரை தமிழக மேலவை உறுப்பினராகவும், பின்னர் 1957 முதல் 1962 வரை தமிழ் நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1964 இல் அவர் மீண்டும் மேலவை உறுப்பினர் ஆனார். 1967 ஆம் ஆண்டு இவர் சட்டப் பேரவையின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1969ஆம் ஆண்டு இவர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இவருடைய அரசியல் சார்பு காலத்துக்குக் காலம் மாறியபடியே இருந்து வந்தது. நேதாஜி
சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தை ஆதரித்ததில் இருந்து,
இந்திய தேசிய காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், தனித் தமிழ்நாடு கோரிக்கை எனப் பல அரசியல் நிலைகளையும் அவர் எடுத்துள்ளார்.
மறைவு
இவர் தனது 76 ஆம் வயதில் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி காலமானார்.





ஞாயிறு, 21 மே, 2017

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ பிறந்த நாள் மே 22, 1944.



மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்  பொதுச்செயலாளர் வைகோ பிறந்த நாள் மே 22, 1944.

வைகோ (இயற்பெயர்: வை. கோபால்சாமி, பிறப்பு: மே 22, 1944; தமிழக அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் ஆவார்.
பிறப்பும் வளர்ப்பும்
வை கோபால்சாமி பிறந்த ஊர்,
திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆகும். வையாபுரி - மாரியம்மாள் தம்பதியினருக்கு 1944ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு மூன்று சகோதரிகள், ரவிச்சந்திரன் என்ற இளைய சகோதரரும் உள்ளனர்.
குடும்ப வாழ்க்கை
வை.கோ ரேணுகாதேவி என்ற பெண்ணை 14ஆம் தேதி சூன் மாதம் 1971ஆம் ஆண்டு மணந்தார், இவர்களுக்கு துரை வையாபுரி என்ற மகனும் ராஜலெட்சுமி மற்றும் கண்ணகி என்ற மகள்களும் உள்ளனர்.
அரசியல் வாழ்க்கை
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் 1992 இல் திமுக தலைவர் கருணாநிதியைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று கொலைப் பழி சுமத்தித் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்
மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் (03/04/1978-02/04/1996), இருமுறை
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருபவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக 2001 இல் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையிலிருந்தார்.
அரசியல் பயணத்தில் 50 ஆண்டு
1964 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா முன்னிலையில் சென்னை கோகலே மன்றத்தில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் முதன் முதலில் பேசி தனது அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தார் வைகோ.
மக்கள் நலக் கூட்டணி
வை.கோ மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். இதில் 2016 சட்டமன்ற தேர்தலின் போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் என ஆறு கட்சிகள் அங்கம் வகித்தன. அதன் பின்னர் ௭திர்பார்த்த வெற்றி கிடைக்காததால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தே. மு. தி. க மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் விலகியது. தற்பொழுது வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மற்ற கட்சிகளோடு உடன்பாடில்லாமல் தனித்து போட்டியிடும் ௭ன்று வைகோ அறிவித்தார். திசம்பர் மாதம் 27 ந்தேதி மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டத்திற்கு பிறகு மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகினார்.
குற்றம் சாட்டுகிறேன்
2004-2009 யில் ஈழத்தில் நடந்த இனக்கொலைக்கு இந்திய அரசு எப்படி எல்லாம் உதவியது என்பதனை விளக்கி "குற்றம் சாட்டுகிறேன்" எனும் புத்தகத்தினை வைகோ எழுதியுள்ளார். 2004-2009 ஆண்டுகளில் இந்தியப் பிரதமருக்கு தான் எழுதிய கடிதங்களையும், தனக்குப் பிரதமர் எழுதிய கடிதங்களையும் இந்தப் புத்தகத்தில் தொகுத்து உள்ளார் வைகோ. இதை ஆங்கிலத்தில் "I Accuse" என்ற தலைப்பில் வெளியிட்டும் உள்ளார்.
இவரின் போராட்டங்கள்
தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகளான முல்லைப்பெரியாறு பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, ஸ்டெர்லைட் என பல போராட்டங்களை நடத்தி வருபவர் வைகோ.
மதுவிலக்கு போராட்டம்
மதுவை எதிர்த்து 2400 கல் தொலைவு தூரம் இரவு பகலாக நடந்திருக்கின்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கடுமையாகப் போராடி அதில் வெற்றி பெற்றவர். 30 முறை கைதானவர். ஐந்து ஆண்டுகள் சிறையில் தன் வாழ்நாளை கழித்தவர். ஒரு கோடி கல் தொலைவுகளுக்கும் மேல் பயணம் செய்தவர், தமிழகத்தில் 50000 கிராமங்களுக்கும் மேல் சென்று மக்களை சந்தித்தவர் ஆவார்.
சீமை கருவேல மரங்கள் ஒழிப்பு
சீமைக்கருவேல மரங்களை அழிப்பதற்காக வழக்குத் தொடுத்து வாதாடி இருக்கின்றார். தமிழ்நாட்டில் பல்வேறு நீர்நிலைகள், கண்மாய்கள், ஆற்றுப் படுகைகள் மற்றும் தரிசு நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் நீர்வளம், நிலவளம் குன்றி வருகிறது. ௭னவே அம்மரங்களை அடியோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பிற துறைகளின் செயலாளர்களுக்கு 2015 ஆம் ஆண்டு ஆகத்து 8 ஆம் திகதி கடிதம் எழுதினார். தமிழக அரசின் சார்பில் ௭வ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதே ஆண்டு செப்டம்பர் 9 ஆம் திகதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.
இதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதியன்று மாண்பமை நீதிபதிகள் செல்வம், கலையரசன் அமர்வில் நடந்த விசாரணையில், தமிழகத்தின் 13 தென்மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் அந்தப் பணிகளை விரைவுபடுத்த ஒவ்வாரு மாவட்டத்திற்கும் 5 வழக்கறிஞர்கள் கொண்ட குழு அமைத்தது. இதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள மற்ற 19 மாவட்டங்களிலும் சீமைக்கருவேல மரங்களை வெட்ட ஆணை பிறப்பிக்க கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் திகதி அதற்கான உத்தரவையும் பிறப்பித்து, 19 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தாக்கீது அனுப்பியுள்ளது.
முல்லைப் பெரியாறு பிரச்சினை
முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக எட்டு ஆண்டுகள் போராடி இருக்கின்றார்.
மீத்தேன் ௭திர்ப்பு போராட்டம்
மீத்தேனை எதிர்த்துத் தஞ்சை மண்டலத்தில் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்திருக்கிறார்.
காவேரி பிரச்சினை
காவிரிப் பிரச்சினையில் பத்தாயிரம் பேர்களைத் திரட்டிக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து கல்லணை வரையிலும் நடந்து சென்றிருக்கிறார்.
ஸ்டெர்லைட் போராட்டம்
ஸ்டெர்லைட் பிரச்சினையில் உலகக் கோடீசுவரர்களுள் ஒருவரான ஸ்டெர்லைட் அதிபரை எதிர்த்துப் பதினெட்டு ஆண்டுகள் போராடி இருக்கின்றார். இதற்காக உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தானாகவே வாதாடியிருக்கின்றார்.
தனித்தமிழ் ஈழம்
தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்காகப் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்தை, உலக அரங்கில் முதன்முதலாக முன்வைத்தது இவரே.

வகித்த பதவிகள்
1970- கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் தனது 25வது அகவையில்
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர்
1978- முதன்முதலாக மாநிலங்களவை உறுப்பினர்
1984-இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர்
1990- மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் என 18 ஆண்டுகள்
1994- ம.தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் நிறுவனர்
1998- பிப்ரவரி மாதம் சிவகாசி தொகுதியில் மக்களவை உறுப்பினர்
1999- அக்டோபர் மாதம் இரண்டாவது முறையாக சிவகாசி தொகுதியில் மக்களவை உறுப்பினர்
திமுக மாநில மாணவரணித் துணைத்தலைவர்
திமுக தேர்தல் பணிக்குழு தலைவர்
திமுக தொண்டர் அணித் தலைவர்
எழுத்துப் பணிகள்
வை.கோ 50க்கும் அதிகமான புத்தகங்களை இயற்றியுள்ளார். அதில் குறிப்பிட்ட புத்தகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வரிசை எண் வருடம் புத்தகம் குறி
1 கனவு நனவாகியது
2 இதயச் சிறகுகள்
3
வீரத்தின் புன்னகை பரவட்டும்
4 தமிழிசை வெல்வோம்
5 நாதியற்றவனா தமிழன்?
6 குற்றம் சாட்டுகிறேன்
7 இரத்தம் கசியும் இதயத்தின் குரல்
8 சிறையில் விரிந்த மடல்கள்
9
இந்தியை எதிர்க்கிறோமே ஏன்?
10 தமிழ் ஈழம் ஏன்?
11 படையின் மாட்சி
12
தமிழர் வாழ்வில் தந்தை பெரியார்
13 வைகோவின் சங்கநாதம்
14 வாழ்வு மலரும் வழி
15 தமிழ் இசைத்தேன்
16
இசைத்தேனாய் இலக்கிய தென்றலாய்
17
தடைகளை தகர்ப்போம்! தாயகம் காப்போம்!
18
உலக நாடுகளின் ஒன்றியம்
19
வரலாறு சந்தித்த வழக்குகள்
20 பெண்ணின் பெருமை
21 வெற்றிப்படிகள்
22 தனலும் தன்மையும்
23
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
24 வெற்றி சங்கொலி
25 வாகை சூடுவோம்
26 உலகுக்கு ஒரே பொதுமறை
27 புயலின் முகங்கள்
28 ஒற்றுமை ஓங்கட்டும்
29 தமிழரின் போர்வாள்
30 மனித உரிமைகள்
31 போற்றி பாடுவோம்
32 ஆம் நம்மால் முடியும்
33
வைகோவின் கடிதங்கள்- பாகம் 1
34
வைகோவின் கடிதங்கள்- பாகம் 2
35
மறுமலர்ச்சி பெற எழுச்சி நடை
36 உழைப்பால் உயருவோம்
37 யமுனைக் கரையில்
38 மனைமாட்சி
39 தமிழால் உயருவோம்
40 பரணிக்கரையில் புரட்சிக்கனல்
41 தாகம் தீர பாசனம் பெருக
42 தேன் மலர்கள்- (பேச்சுக்கள்)
43 நடுநாடு தந்த நம்பிக்கை