சனி, 30 செப்டம்பர், 2017

இசையமைப்பாளர் எஸ். டி. பர்மன் பிறந்த தினம் அக்டோபர் 1.



இசையமைப்பாளர் எஸ். டி. பர்மன் பிறந்த தினம் அக்டோபர் 1.

எஸ். டி. பர்மன் அல்லது சச்சின் தேவ் பர்மன் ( Sachin Dev Burman ) என்பவர் இந்தி திரையுலகப் பின்னணி இசையில் தனிப்பெரும் ஆளுமை கொண்டவர் ஆவார். ரசிகர்களால் "தாதா" என அன்புடன் அழைக்கப்பட்ட சச்சின் தேவ் பர்மன்,
திரிபுரா மன்னரின் நேரடி வாரிசு ஆவார்.
இவர், இந்தியிலும் வங்காளத்திலும் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். லதா மங்க்கேசுகர் ,
முகமது ரபி , கிஷோர் குமார் , ஆசா போசுலே, கீதா தத்து போன்ற பாடகர்கள் பர்மனின் இசை அமைப்பில் பாடியுள்ளார்கள். எஸ். டி. பர்மன், 14 இந்தி திரைப்படங்களிலும் 13 வங்காள மொழித் திரைப்படங்களிலும் பாடல்கள் தாமே பாடியுள்ளார். இவரது மகன் ராகுல் தேவ் பர்மன் பாலிவுட் திரைப்படங்களின் பின்னணி இசையமைப்பாளர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
அக்டோபர் 1, 1906 அன்று, அன்றைய பிரித்தானிய இந்தியாவின் வங்காளத்தில் (தற்போது பங்களாதேஷ்), கோமில்லா என்னும் இடத்தில் பர்மன் பிறந்தார். எஸ். டி. பர்மனின் தந்தையார், திரிபுராவின் ராச குடும்பத்தைச் சார்ந்த நபாட்விப்சந்திர தேவ் பர்மன் மற்றும் தாயார் மணிப்பூர் மன்னர் குடும்பத்தைச் சார்ந்த நிருபமாதேவி ஆவர். அவர்களின் 9 குழந்தைகளில் 5 ஆண்பிள்ளைகளுள் கடைசியாகப் பிறந்தவர் சச்சின் தேவ் பர்மன் ஆவார். இவரது இரண்டாவது அகவையில் தாயார் காலமானார்.
கல்வி
எஸ். டி. பர்மன், கோமில்லா விக்டோரியா கல்லூயில் இளங்கலைபட்டமும்,
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டத்தையும் முடித்துள்ளார்.  . அதோடு, 1925 முதல்
1930 ஆம் ஆண்டு வரை இசைக்கலைஞர் கே.சி டேவிடம் முறையான இசைப்பயிற்சி பெற்றார். அதன் பின்னர் 1932 ஆம் ஆண்டு, பீசமதேவ் சட்டோபதயா என்பவரின் அறிவுறுத்தலின்படி கைஃபா பாதால் கான் (சாரங்கி கலைஞர்),
அகர்தலாவில் உள்ள உஸ்தாத் அல்லாவுதீன் கான், உஸ்தாத் பாதல் கான் ஆகியோரின் கீழும் பயிற்சிகள் மேற்கொண்டார்.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
1934 : தங்க பதக்கம் வங்காளம் அகில இந்திய இசை மாநாட்டில் கல்கத்தா .
1934, 1958 : சங்கீத நாடக விருது.
1958: ஆசியா திரைப்பட சொசைட்டி விருது.
தேசிய திரைப்பட விருதுகள்
1970 : சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருது.
1974 : சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய திரைப்பட விருது: ஜிந்தகி ஜிந்தகி.
1969 : நாட்டுப்புற இசை மீது பத்ம சிறீ சர்வதேச யூரி.
பிலிம்பேர் விருதுகள்
1954 : பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: டாக்சி டிரைவர்
1973 : பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: அபிமான்
1959 : பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: சுஜாதா: பரிந்துரை
1965 : பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: கையேடு : பரிந்துரை
1969: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: ஆராதனா : பரிந்துரை
1970: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: தலாஷ் : பரிந்துரை
1974: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: பிரேம் நகர்: பரிந்துரை
மறைவு
1975ஆம் வருடம் அக்டோபர் மாதம் 31 ஆம் நாள், இந்தியாவின் மகாராட்டிர மாநிலம்,
மும்பையில் தனது 69 வது அகவையில் காலமானார்.

உலக சைவ உணவு தினம் ( World Vegetarian Day ) அக்டோபர் 1 .


உலக சைவ உணவு தினம் ( World Vegetarian Day ) அக்டோபர் 1 .

உலக சைவ உணவு நாள் ( World Vegetarian Day ) என்பது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 1 ஆம் நாளில், உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது, 1977 இல்
வட அமெரிக்க சைவ உணவு சமூகத்தால் முன்மொழியப்பட்டு, 1978 இல் பன்னாட்டு சைவ உணவாளர் ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு-நாள் கொண்டாட்டமாகும்.  மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ உணவு வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


உலக சைவ உணவு நாள்
World Vegetarian Day
அதிகாரப்பூர்வ பெயர்
உலக சைவ உணவு நாள்
கடைபிடிப்போர் உலகெங்கணும் உள்ள சைவ உணவாளர்கள்
கொண்டாட்டங்கள் சைவ (தாவர) உணவின் சிறப்புகளையும் பயன்களையும் வலியுறுத்தும் நோக்கில் உள்ளூர், பிராந்திய, மற்றும் தேசியக் குழுக்கள் நிகழ்வுகளை ஒழுங்கு செய்கின்றன.
நாள் அக்டோபர் 1
காலம் 1 நாள்
நிகழ்வு ஆண்டுதோறும்
தொடர்புடையன சைவ உணவு விழிப்புணர்வு மாதம், World Farm Animals Day, பன்னாட்டு சைவ உணவு வாரம், உலக தாவர உணவு நாள்


உலக சைவ உணவு தினம் ( World Vegetarian Day ) அக்டோபர் 1 .

சைவ உணவு சாப்பிடுறவங்களா? அப்ப "உலக சைவ உணவாளர் தினம்" கொண்டாடுங்க...

அசைவ உணவை உண்ணாமல், சைவ உணவை மட்டும் உண்பவர்களுக்கு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் நாள் "உலக சைவ உணவாளர் தினம்" ( World Vegetarian Day) ஆக உலகம் முழுவதும் கொண்டாப்படுகிறது. 



இந்த உலகில் அசைவ உணவை உண்ணாமல் சைவ உணவை மட்டும் உண்டு வாழ முடியும் என்று ஒருசிலர் இருக்கின்றனர். உண்மையில் அசைவ உணவை உண்டால் தான் வாழ முடியும் என்பதில்லை. சைவ உணவுகளிலேயே அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.



சொல்லப்போனால் இந்த நாள் கொண்டாடுவதின் ஒரு நோக்கம், அனைத்து உயிர்கள் மீதும் அன்பை தெரிவிக்க வேண்டும் என்பதனால் தான். இதாவது எந்த உயிரையும் கொன்று சாப்பிடக்கூடாது என்பது தான். மேலும் ஐந்து அறிவு இருக்கும் மிருகங்களுக்குத் தான் தங்கள் உணவை உற்பத்தி செய்து சாப்பிடத் தெரியாது, அதனால் அவை மற்ற உயிர்களை சார்ந்து வாழ்கின்றன. ஆனால் ஆறு அறிவு படைத்த மக்களுக்கு தன் உணவு தாமே தயாரித்து உண்ணும் அளவில் அறிவு இருக்கிறது. இருப்பினும் மற்ற உயிர்களையும் ஒரு வகையில் சார்ந்து வாழ்கின்றோம்.



மேலும் அசைவ உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றில் கிடைக்கும் சத்துக்கள் அனைத்தும், கீரை, முளைக்கட்டிய பயிர்கள், தானியங்கள் போன்றவற்றில் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல், அசைவ உணவுகள் மிகவும் விலை உயர்ந்தவை. ஆனால் காய்கறிகள், தானியங்கள் போன்றவை அன்றாடம் நமது வீடுகளில் பயன்படுத்தக்கூடியவையே. மேலும் அவை விலைமலிவானது.




உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் அசைவ உணவுகளை சாப்பிடுகிறோமா என்ன? வாரத்திற்கு ஒரு முறை தானே சாப்பிடுகின்றோம். அவ்வாறு ஒரு முறை மட்டும் சாப்பிட்டதால் தான் நாம் இவ்வளவு ஆரோக்கியத்துடன் வாழ்கின்றோமா என்ன? சைவ உணவுகளைத் தானே பெரும்பாலும் சாப்பிடுகின்றோம். சொல்லப்போனால், அசைவ உணவுகளை சாப்பிட்டால் அது ஜீரணம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதனாலேயே சில சமயங்களில் நிறைய உடல் பிரச்சனைகள் ஏற்பட்டுவிடுகின்றன. ஆனால் அதுவே சைவ உணவுகள் எளிதில் ஜீரணமாகிவிடும்.




ஆகவே அவற்றை கொன்று சாப்பிடுவதை விட, நாம் உற்பத்தி செய்யும் உணவுகளான, காய்கறி, பழங்கள், பயிர்கள், கீரைகள் மற்றும் மற்றவைகளை சாப்பிட்டாலே, நாம் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழலாம். மேலும் அசைவ உணவுகளில் தான் அதிக நன்மைகள் இருக்கின்றன என்று நினைப்பவர்கள், அந்த தவறான கருத்தை நீக்கி, சைவ உணவுகளை சாப்பிட்டாலும் ஆரோக்கியமாக வாழலாம் என்று நம்பி, அந்த உணவுகளையும் விரும்பி சாப்பிடுங்கள்.

உலக முதியோர் தினம் அக்டோபர் 01.




உலக முதியோர் தினம்  அக்டோபர் 01.

உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம் , சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு , ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக காணப்படுகிறது.

முதியோர் நலன்

பொதுவாக 60 வயதை கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர். அவர்கள் நலனை பாதுகாக்கவும், அவகளின் உரிமைகளை மதிக்கவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

உலக அளவில்

1991 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை அறிவுறுத்தலின் படி, (தீர்மானம்: 45/106) கீழ்க்கண்டவை முதியோர்களுக்கான அத்தியாவசிய விதிமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து முதியோர்களுக்கும்

உணவு , உடை , இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை கிடைக்கப்பெற வேண்டும்.
வாழ்வதற்க்கான நல்ல சூழலை உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும்.
அவர்களை பாதிக்ககூடிய எந்த கொள்கை முடிவுகளிலும் அவர்களின் கருத்துக்களுக்கு அரசுகள் மதிப்பளிக்க வேண்டும்.
சமூகத்திற்கு சேவை புரியவும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.
சமூக மற்றும் சட்டப் பாதுகாப்புகள் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
மனித உரிமை மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டும்.
இவை அனைத்து நாடுகளுக்கும் பொதுவான வரைமுறை ஆகும்.

இந்திய அளவில்

பெற்றோர் மற்றும் மூத்தகுடி மக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம், 2007, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் தேவையான பராமரிப்பை உறுதி செய்கிறது. இதுவரை 23 மாநிலங்கள், அனைத்து ஒன்றியப் பிரதேசங்களும் இச்சட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளன. இதில் 13 மாநிலங்கள் அதாவது சட்டீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஓடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, திரிபுரா, மற்றும் மேற்கு வங்காளம், மற்றும் ஒரு யூனியன் பிரதேசமான புதுடில்லி ஆகியவை இந்த சட்டத்தின் படி விதிகளை முறைப்படுத்தி உள்ளன. மீதமுள்ள மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள் இந்த சட்டத்தின் விதிகளை முறைப்படுத்தவும், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் விரைந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுள்ளது.

இந்த சட்டம் வழங்குவது :

தீர்ப்பாயங்கள் மூலம் சட்டரீதியான மற்றும் கட்டாயமான குழந்தைகள் / உற்றார் மூலம் பெற்றோர் மற்றும் மூத்தோர் நலன். பராமரிப்பு
உறவினர்களால் ஒதுக்கப்பட்ட மூத்த குடிமக்களின் சொத்துக்களை மீண்டும் ஒப்படைத்தல்.
கைவிடப்பட்ட மூத்த குடிமக்களுக்கு சட்டப்படியான பாதுகாப்பு வழங்கல்.
மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்கள் நிறுவுதல்.
மூத்த குடிமக்களின் சொத்துக்கள் மற்றும் தேவையான உயிர் பாதுகாப்பு மருந்துகள் கிடைக்க செய்தல்.
தமிழ் நாட்டில் முதியோர் நலத்திட்டங்கள்
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் போக தமிழ்நாடு மாநில அரசின் சார்பிலும் முதியோர் நலன் காக்க பல்வேறு திட்டங்கள் நடைபெறுகின்றன.
65 வயதை கடந்த ஆதரவற்றோருக்கு மாத மாதம் ரூ.500 முதல் ரூ.1000 வரை உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
இலவச மத்திய உணவு திட்டமும், இலவச அரிசித் திட்டமும் முதியோர்களுக்கு தனியாக வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் முதியோர்களுக்கு தனி படுக்கை மற்றும் மருத்துவ வசதி செய்ய நிதி ஒதுக்கீடு செய்கிறது.


உலக முதியோர் தினம்

அக்டோபர் முதலாம் தேதி சர்வதேச முதியோர் தினமாகும். மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டுதோறும் அக்டோபர் 1ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. 1990ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு 45/106 தீர்மானத்திற்கமையவே இத்தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி முதன் முதலாக 1991ம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டுகளும் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும். ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இத்தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும், ஜப்பானில் மூத்தோருக்கு கௌரவம் செலுத்தும் தினமாகவும் இது அனுட்டிக்கப்படுகின்றது.
இவ்விடத்தில் முதுமை என்றால் என்ன என்பதைப் பற்றி சிந்தித்தல் வேண்டும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப்பட்டாலும்கூட, முதுமை என்பது ஒரு நபரின் பிறப்பிலிருந்து தொடங்குகின்றது என்பர். ஒரு குழந்தையானது வளர்ந்து பெரிதாகும் ஒவ்வொரு காலகட்டத்திலும் முதுமை நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. முதுமையும் இறப்பும் மனிதன் சந்திக்கும் தவிர்க்கமுடியா நிலையாகும்.
முதுமையின் போது ஏற்படும் நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியில் எடுத்து நோக்குமிடத்து மூளை மற்றும் நரம்புமண்டல அமைப்பு முதுமையடையும் போது, மூளையின் நரம்புமண்டல அணுக்களின் எண்ணிக்கையானது குறையவடையத் தொடங்குகின்றது. இழையச் சீர்கேடு, தோல் சுருக்கம், தசை எடை குறைவு, புலன் குறைபாடு, உடல் அசைவுத் தன்மைக் குறைவு, இனப்பெருக்கத் தடை, உளவியல் பாதிப்புகள் என பல்வேறு முறைகளில் உடலியல் தொழிற்பாடு பாதிக்கப்படுவதனால் வயதானவர்களின் நடவடிக்கைகளில் வேகம் குறைந்து காணப்படுகின்றது. ஞாபகசக்தி குறைவு, புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் குறைவான வேகத்துடனேயே காணப்படுவர்.
60 வயதிற்கு மேல் முதுகு தண்டில் உள்ள அணுக்கள் குறைய ஆரம்பிப்பதால் அவர்களின் உணர்வு சக்தி குறையத் தொடங்குகின்றது. முதுமையடையும் பொழுது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது மெதுவாக குறைய ஆரம்பிக்கின்றது, இது பல நோய்த்தொற்றுகளுக்கு, குறிப்பாக இதய நோய், பக்கவாதம், மூட்டுவலி, புற்று நோய், நீரிழிவு நோய் போன்றவை பெரிதும் முதுமைப்படுதலின் காரணமாகவே ஏற்படுகிறது.
வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். சத்துணவு, நலவாழ்வு, மருத்துவம் ஆகிவற்றிலேயே வாழ்நாள் எதிர்பார்ப்பு பெரும்பாலும் தங்கி இருக்கிறது. சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டும் காரணிகளை ஏதுவாக்கத் தேவை. இத்தகைய சூழலைப் பொறுத்து ஒரு மனிதனுக்கு சராசரி ஆயுட்காலம் 81 வருடங்களாக கணிப்பிடப்பட்டுள்ளது. நாட்டுக்கு நாடு இந்த கணிப்பீடு வேறுபடலாம்.
பதியப்பட்ட மனித வரலாற்றில் யாரும் 123 வயதுக்கு மேல் இருந்ததாக ஆதாரம் இல்லை. மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதர்களே 100 வயதுக்கு மேலே வாழக்கூடியதாக இருக்கின்றது. மனிதனின் சராசரி வாழ்நாள் கூடி வந்திருப்பினும், மிக கூடிய வாழ்நாளின் அளவு கூடவில்லை. இதற்கு உயிரியல் அடிப்படையிலான எல்லைகள் இருக்கலாம். இருப்பினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி இந்த எல்லை நீடிக்கப்படக்கூடியதே.
முதுமை தொடர்பாக பல கோட்பாடுகள் காணப்படுகின்றன. மனிதரின் படிவளர்ச்சியை பேணவே மனிதர் முதுமை பெற்று இறக்கின்றனர் என்பதே படிவளர்ச்சிக் கோட்பாட்டின் (Evolutionary Theory) சாரம். காலம் செல்ல செல்ல ஒரு உயிரினத்துக்கு இயற்கையால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல் கூடுகின்றது. எடுத்துக்காட்டாக உயிரினம் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு கூடுகின்றது. உயிர் உற்பத்தித் திறன் இளவயதிலேயே வீரியமாக இருக்கிறது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல உடல் வலு இழந்து போகின்றது.
மேலும், யாரும் இறக்காவிட்டால், உயிரினங்களின் தொகைகூடி பெரும் அழிவுக்கு இட்டுச் செல்லலாம். மாறிவரும் சூழலுக்கு முதிய உயிரினங்கள் தாக்குப்பிடிப்பது கடினமாக இருக்கும். முதிய உயிரினங்களே இருந்தால் அவற்றின் குடிவழிகளே மக்கள் தொகையில் கூடுதலாக இருக்கும். இது இனப் பெருக்கத்துக்கும் படிவளர்ச்சிக்கும் உகந்தது அல்ல.
மரபணு முதுமைக் கோட்பாட்டின்படி (The Genetic Theory of Aging) மரபணுக்களாலேயே வாழ்நாள் பெரிதும் முடிவாவதாக மரபணுக் கோட்பாடு கூறுகிறது. அதாவது, பிறக்கும்போதே ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் மரபணுக்களைக் கொண்டு வாழ்நாள் முடிவாகிறது என்பது அடிப்படையாகும்.பெற்றோர்கள் நீண்ட வாழ்நாளைக் கொண்டால் பிள்ளைகளும் நீண்ட காலம் வாழ்வதை அவதானிக்க முடியும். மேலும் இரட்டை மனிதர்களின் வாழ்நாள் உடன் பிறந்தவர்களை விட ஒரே கால அளவைக் கொண்டதாக இருக்கும். இவை மரபணுக் கோட்பாட்டுக்கு ஆதாரங்களாக கொள்ளப்படுகின்றன. இதைப் போன்று மேலும் பல கோட்பாடுகள் காணப்படுகின்றன.



ஐ.நாவின் கணிப்பீட்டின்படி தற்போது உலகில் ஒவ்வொரு பத்துப் பேருக்கு ஒருவர் என்றடிப்படையில் அறுபது அதற்கு மேற்பட்ட வயதை உடையவர்கள் காணப்படுகின்றனர். இது 2050ம் ஆண்டில் 5க்கு ஒன்று என்றடிப்படையிலும் 2150ல் 3க்கு ஒன்று என்றடிப்படையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நோக்குமிடத்து தற்போது உலகலாவிய ரீதியாக 60 கோடி முதியவர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை 2050ம் ஆண்டளவில் 200 கோடியாக அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. கடந்த காலங்களில் உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருவது இதற்கு அடிப்படை காரணமாகக் கூறப்படுகின்றது. குழந்தை பிறப்பு வீதம் அதிகம் அதே போல் இறப்பு வீதம் அதிகம் என்ற நிலை மாறி தற்போது பிறப்பு-இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் கீழ் முதியோரின் சுதந்திரம், அவர்களின் பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை விசேடமாக கவனத்தில் கொள்ளப்படுகின்றன. உலக முதியோர் தினத்தில் இத்திட்டங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டுமெனவும் மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சமூக, கலாச்சார, அரசியல்ரீதியிலும் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றன.
முதியோர் தினத்தை உலகமே அனுஸ்டிக்கின்ற இச்சூழ்நிலையில் எமது முதிய பெற்றோர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டிய கட்டாயப்பாட்டில் நாம் உள்ளோம். எம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் தமது வாழ்நாளில் பல்வேறுபட்ட தியாகங்களைப் புரிந்து எம்மை இந்நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். நவீன உலகமயமாக்கல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டே எமது வாழ்க்கைத்திட்டத்தை ஒழுங்குபடுத்தி கொண்டு வருவதனால்; எமது பெற்றோரை பராமரிக்க எமக்கு கால அவகசாம் கிடைப்பதில்லை.
அண்மைக்கால ஆய்வுகளின்படி கடந்த ஒரு தசாப்தத்துக்கு இடைப்பட்ட காலத்தில் முதியோர் இல்லங்களில் தமது பெற்றோரை சேர்த்துவிடும் நிலை அதிகரித்து வருவதாக புள்ளி விபரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த நிலையை நாம் ஆத்மார்த்த வாக்குமூலங்களாக இதயங்களில் பதிவாக்கி சிந்திக்க வேண்டும்.
நாம் பெற்றோர் ஆகும் வரை நமது பெற்றோரின் அருமை தெரியாது என்ற முன்னோர் கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் விதமாகவே இன்றைய காலகட்டத்தில் பெற்றோராக இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி எண்ணி நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். பெற்றோருக்கு மதிப்பு தரவேண்டுமென்பது நம் எல்லோருடைய கலாசாரத்திலும் ஊறிப்போன விஷயம் என்றாலும், தற்போதுள்ள சூழலில் பெற்றோருக்குரிய மதிப்புகள் குறைந்து கொண்டே வருகிறதென்பது வருத்தமளிக்கும் விஷயமாகவே உள்ளது
இயந்திரமான வாழ்க்கை, மேலைநாடுகளின் கலாசார தாக்கம் போன்றவற்றின் காரணமாக பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் நேரங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. இதனால்தான் தற்போதெல்லாம் பிஞ்சு குழந்தைகளை மணிக்கணக்கில் பாதுகாக்க குழந்தைப் பராமரிப்பு இல்லங்களையும், ஆயாக்களையும் தேடிப்பிடிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது.
இன்று குழந்தைகளாக இருப்பவர்கள் பிற்காலத்தில் பெற்றோராக மாறும் போது தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதென்பது என்னவோ தற்போது பேஷனாகி விட்டது. பணம் கட்டி விட்டால் போதும் முதியோர் இல்லங்களில் பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்பும் இன்றைய பிள்ளைகள், முதியோர் இல்லங்களில் தங்கள் பெற்றோர் படும் துன்ப துயரங்களை எண்ணுவதில்லை.
வளரும் வரைதான் பெற்றோர்... சொந்தக்காலில் நின்று விட்டால் யாரும் தேவையில்லை என்ற கண்ணோட்டம் இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மனதில் ஆழமாகவே வேரூன்றியிருக்கிறது. ஆனால், தாமும் ஒரு காலத்தில் முதியவர்களாவோம் என்ற எண்ணத்தை மறந்துவிடுகின்றார்கள்.
இலங்கையைப் பொறுத்தவரை உலகளாவிய ரீதியில் ஒப்புநோக்கும்போது கூடிய முதியோர்களைக் கொண்ட நாடு என்ற பெருமை உள்ளது. 2006ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இலங்கையில் அண்ணளவாக 22 லட்சம் மூத்த பிரஜைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இக்கணிப்பீட்டின்படி இத்தொகை 2011ம் ஆண்டளவில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் தொகை 27 லட்சமாகவும், 2031ம் ஆண்டில் 50 லட்சமாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அப்போதைய மொத்த சனத்தொகையில் 13 சதவீதமாக இருக்கும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் முதியோர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் இவாகள் பெரும்பாலும் தமது பிள்ளைகளில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. ஒரு சிலர் தமது பிள்ளைகளாலேயே முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஏனையோர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர்.
புள்ளி விபரங்களைப் பார்க்கும் போது இலங்கையில் 48.3 சதவீதமான முதியோர்கள் தமது பிள்ளைகளின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர். ஓய்வூதியம் மூலம் 13.5 வீதத்தினரும் விவசாயம் மற்றும் ஏனைய தொழில்கள் மூலம் 10.3 வீதத்தினரும் தமது சொத்துகளின் வருமானம் மூலம் 7.7 வீதத்தினரும் வாழ்க்கையை நடத்துகின்றனர். இலங்கையில் உள்ள முதியோர்களில் 60-70 வயதுக்கிடைப்பட்டோர் 54.4 வீதமாக உள்ளனர்.70-80 வயதுக்கிடைப்பட்டோர் 32.3 வீதமும் 80-90 வயதுக்கிடைப்பட்டோர் 10 வீதமும் 90 வயதுக்கு மேற்பட்டோர் 1.3 வீதமுமாக உள்ளனர். இதே வேளை இலங்கையில் அதிகரித்து வரும் முதியோர்கள் தொடர்பில் அவர்களுக்குரிய பல செயற்றிட்டங்கள் முன்வைக்கப்படல் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காரணம், அதிகரித்து வரும் முதியோர்களை வைத்து பராமரிக்கும் அளவிற்கு இங்கு முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் அவ்வில்லங்களுக்குரிய போதிய வருமானங்கள் நன்கொடைகள் கிடைப்பதில்லை என்ற காரணங்களாகும்.
இலங்கையில் உள்ள முதியோர்களில் 70 சதவீதமானோர் வறுமை கோட்டிற்கு கிழே வாழ்ந்து வருவதாகவும் சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன, எனினும் இலங்கையில் மிக அதிகமான (34 சதவீதம்) வறுமை வீதத்தை கொண்டிருக்கக்கூடிய பெருந் தோட்டப் பகுதி முதயோர்களின் நிலை எப்படி இருக்கும் என்பது கூடியளவில் சிந்திக்க வேண்டிய விடயமே.
பெரியோர்களை மதி, கவனி என்று அறிவுரை வழங்கும் போது நம் பிற்காலத்தைக் கவனத்தில் கொண்டுதான் இப்படிக் கூறுகின்றோமோ என்று கூட எண்ணத்தோன்றுகின்றது. பிரபல்யம் மிக்க ஆங்கில மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் முதுமை எவ்வாறு உருவாகிறது?. அதனை வரவேற்பது எப்படி? என்பதை இவ்வாறு இயப்பினார். ஒருமனிதன் தன் வாழ் நாளில் பல பாத்திரங்களை ஏற்கிறான். முதலில் குழந்தை பிறகு மாணவன் பின்னர் விடலைப்பருவம், தொழில் வாய்ப்பை பெற்றபின் குடும்பஸ்தன் ஆகின்றான். காலச்சக்கரத்தின் அபரிமித சுழற்சியின் விளைவாக இறுதியில் மூக்கு கண்ணாடி அணிந்து முகம் சுருங்கி, உடல் மெலிந்து பல், கண்பார்வை எல்லாம் அற்ற நிலையில் கூன் விழுந்து முதுமையாகி மறைவது தான் சரித்திரம் என்றார்.
இன்றைய சமூக அமைப்பு பெரும்பாலும் கூட்டுக் குடும்ப அமைப்பிலிருந்து விலகி தன்னிச்சையாக இயங்கும் குடும்பங்களையே பெரிதும் சார்ந்துள்ளது. 'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்பதற்கிணங்க ஒரு சில குடும்பங்களில் உள்ள ஒரு நபரோ அல்லது குடும்பமோ புலம் பெயர்ந்து சென்று அயல் நாடுகளில் அமர்ந்தார்கள் என்றால் இதனால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் முதுமையில் காலம் தள்ளி வரும் வயதான பெற்றோர்கள்தான் என்பது சொல்லித் தெரிவதற்கில்லை.
புலம் பெயர்தலால் அடையும் நன்மைகள் பலப்பல, அதே நேரத்தில் நாம் நமது பெற்றோர்களுக்கு கொடுக்கும் மன உளைச்சலுக்கும் நிம்மதியின்மைக்கும் அளவில்லை என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. உலகமயமாக்கலுடன் இணைந்த எமக்கு இது சற்று சிரமத்தைத் தந்தாலும்கூட, இவற்றை நடுநிலைமைப்படுத்திக் கொள்ளக்கூடிய அளவில் எம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ளாதவிடத்து முதியோராகப்போகும் எம் நிலையைப் பற்றி நாம் ஓரளவுக்கேனும் சிந்திக்க வேண்டிய கட்டாயப்பாட்டில் உள்ளோம்.



உலக முதியோர் தினம்

ஒவ்வொரு சாதனையாளரின் வெற்றிக்குப் பின்னால், அவர்களின் குழந்தைப் பருவ சிந்தனைத் திறன் வளர்ச்சிக்கு அவர்களது தாத்தா, பாட்டிகள் இருப்பதாக முதியோர் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
மூத்த குடிமக்களை மரியாதையுடன் நடத்தவும், குடும்பம், சமூகத்துக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவுகூரவும், அவர்களின் அறிவு, சிந்தனை ஆற்றல் மற்றும் சாதனைகளை இளைய சமுதாயத்தினர் பார்த்து கற்றுக்கொள்ளவும், ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி சர்வதேச முதியோர் தினவிழா கொண்டாடப்படுகிறது.
முதியோர் எதிர்நோக்கும் குடும்பம், சமூகப் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும், அவர் களுக்கென சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
வயதானவர்களின் சமூகப் பாதுகாப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழக தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் சி.சிதம்பரம் ‘தி இந்து’விடம் கூறியது:
பொதுவாக 60 வயதைக் கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கணிப்புப்படி இன்று உலகில் பத்துக்கு ஒருவர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவர்கள். 2050-ம் ஆண்டுக்குள் ஐந்துக்கு ஒருவர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டுவார்கள் என்றும், 2150-ம் ஆண்டுக்குள் இது மூன்றுக்கு ஒருவர் என்ற நிலையை எட்டிவிடும் எனவும் கூறப்படுகிறது. தற்போது உலகில் சுமார் 60 கோடி முதியவர்கள் இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 2050-ம் ஆண்டு 200 கோடியாக அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இந்த தினம் தேசிய விடுமுறை தினமாகவும், ஜப்பானில் மூத்தோருக்கு கவுரவம் செலுத்தும் தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
தனி மனித ஆயுள் 81 வயது
சத்துணவு, நலவாழ்வு, மருத்துவம் இவற்றைக் காரணிகளாகக் கொண்டு ஒரு தனிமனிதனின் சராசரி ஆயுள்காலம் 81 ஆண்டுகளாக கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு நாடு இந்த கணிப்பு வேறுபடுகிறது. உலக மனித ஆயுள் காலப் பதிவின்படி, இதுவரை 123 வயதுக்குமேல் யாரும் வாழ்ந்ததாக சான்றுகள் இல்லை. 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர்.
உலகமயமாக்கல் சூழலில், மேலை நாடுகளின் கலாச்சாரத் தாக்கத்தால் இயந்திர வாழ்க்கையில் சிக்குண்ட மனிதன் தன் பெற்றோருடனும், முதியோருடனும் பேசும் நேரத்தைக்கூட குறைத்துக் கொண்டே வருகிறான். பொருளாதார ரீதியிலான தன்னிறைவுக்கு, தன்னை ஆற்றுப்படுத்துவதிலேயே ஆயுளை தேய்க்கிறான். கடந்த காலங்களில், உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்திய சிந்தனையாளர்கள் சரித்திரப் புகழ் சாதனையாளர்கள் அனைவரும் முதியோரின் வழிகாட்டுதலில், பராமரிப்பில் வளர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.
சிந்திக்க வைக்கும் பாட்டிக் கதை
குறிப்பாக, பாட்டிக் கதை சொல்வதற்கு, முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் தாத்தா, பாட்டி இருப்பார்கள். அவர்கள் தங்களது வாழ்க்கை அனுபவத்தை கதைகளாக தன் பேரன், பேத்திகளுக்கு சொல்வர்.
சிறுவயது முதலே இதுபோன்று கதைகளைக் கேட்டு வளரும் குழந்தைக்கு சிந்திக்கும் திறனும், ஆக்கத்திறனும் கூடும். வரலாற்றில் பார்த்தால் ஒவ்வொரு சாதனையாளரின் குழந்தைப் பருவத்தில் தாத்தா, பாட்டிகளுக்கு பெரும் பங்கு உண்டு. அதேபோல, குடும்ப அளவில் வழிநடத்தும் நல்வழிமுறைகளை தங்கள் அனுபவ ரீதியில் தன் குடும்பத்தாருக்கு போதித்து அந்தத் தலைமுறையை செழிக்க செய்வார்கள் ’’ என்றார்.
முதியோருக்கு ஒதுக்கப்படும் நிதி கேள்விக்குறி
இதுகுறித்து சி.சிதம்பரம் மேலும் கூறியது:
இந்திய வாழ்க்கைச் சூழலில் வயதான ஆண்களைவிட, பெண்களே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இன்றைய இந்திய வாழ்வியல் சூழல் அடிப்படையில் ஆண்களின் சராசரி திருமண வயது 30-க்கும் மேலாக உள்ளது. ஒரு ஆண் திருமணம் செய்வதற்கு அடிப்படைத் தேவையாக அவனது வேலைவாய்ப்பு அமைகிறது. பிறகு திருமணம் செய்து குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே, அவனது ஆயுட்காலம் முடிந்துவிடுகிறது. பிறகு கணவரை இழந்த பெண், சமூகத்தில் பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
அரசும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வந்தாலும், வயதான பெண்களின் சமூகப் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. மேலை நாடுகளை ஒப்பிடும்போது வயதானோருக்கு ஒதுக்கப்படும் நிதி, பாதுகாப்பு சார்ந்த முக்கியத்துவத்தைக் காட்டிலும், இந்தியாவில் மிகக்குறைந்த அளவிலேயே காட்டப்படுகிறது. முதியோர்களுக்கென ஒதுக்கப்படும் நிதி, உதவிகள் அவர்களை முறையாக சென்றடைகின்றனவா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது என்றார்.

போராளி வீரமங்கை குயிலி நினைவு தினம்




போராளி வீரமங்கை குயிலி நினைவு தினம் 

குயிலி பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி வீரமங்கை குயிலி. இவர் சிவகங்கை சீமை சேர்ந்த பெண்போராளி ஆவார்.
மெய்க்காப்பாளர்
முதன்மை கட்டுரை: வேலு நாச்சியார்
சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை
ஆங்கிலேய அரசாங்கம் சுட்டுக்கொன்றது. 8 ஆண்டுகள் அவர் மனைவி வேலு நாச்சியார் தலைமறைவாக இருந்தார். அப்போது ஆங்கிலேயர்களுக்காக உளவு பார்த்த வெற்றிவேல் என்பவரை குயிலி என்றபெண் குத்திக் கொன்றார். அதனால் வேலுநாச்சியார் தனது மெய்க்காப்பாளராக குயிலியை நியமித்தார்.
1780 இல் வேலுநாச்சியார் மானாமதுரை, திருப்பூர், திருப்பூவனம், காளையார்கோவில் போன்ற இடங்களை மீட்டார். மருதுபாண்டியர், ஹைதர் அலி ஆகியோரின் உதவியுடன் சிவகங்கையை மீட்க படையெடுத்தார் வேலுநாச்சியார்.
முதல் தற்கொலைப் போராளி
சிவகங்கை அரண்மனையில் வெள்ளையரின் ஆயுதக்கிடங்கு இருந்ததால் அப்பகுதிக்குள் யாரும் செல்ல அனுமதி இல்லை.
சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில்
நவராத்திரி விழாவிற்காக விஜயதசமி அன்று கொலு தரிசனத்திற்கு பெண்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது.
இதைப் பயன்படுத்தி பெண்கள் படையில் இருந்த குயிலி தன் உடம்பில் எரி நெய்யை ஊற்றி தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக்கிடங்கில் குதித்து தற்கொலை தாக்குதல் நடத்தி ஆயுதங்களை அழித்தாள்.


முதல் தமிழ் தற்கொலைப் போராளி குயிலி..!

இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ, அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ, ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொலைப்படைப் போராளி என்கிறோம்.
தற்கொலைப் போராளிகளின் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில்தான் என்கிறது எழுதப்பட்ட வரலாறு. ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தற்கொலைப் போராட்டமே இதற்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது.
ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரிட்டிஷாரை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற போர்க்களத்தில்தான் முதன்முதலாக 'தற்கொலைப் போராளி' உருவானார் என்பது நாம் அறியாதது.
அந்த போராளி வீரமங்கை யின் பெயர்தான் குயிலி.
1776ம் ஆண்டு
வேலுநாச்சியார், வெள்ளையர் எதிர்ப்பில் தம் கணவர், சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரைப் பறிகொடுத்து, எட்டாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த காலம். அப்போது வேலுநாச்சியார் விருப்பாட்சி என்ற ஊரில் தங்கியிருந்தார்.
குயிலி. அதுதான் அவள் பெயர்.
வயது பதினெட்டு. பிறந்த மண்ணையும், வீரத்தாய் வேலு நாச்சியாரையும் உயிரென மதிப்பவள்.
வேலுநாச்சியாரின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேல்..ஒருநாள். குயிலியிடம் வந்தார்,
"குயிலி! எனக்கொரு உதவி செய்வாயா?"
"சொல்லுங்கள் ஐயா!''
"நீ உன் ஊரான பாசாங்கரைக்கு செல்லும்போது இந்தக் கடிதத்தை, சிவகங்கை அரண்மனைக்கருகில் இருக்கும் வீட்டில், மல்லாரிராயன் என்பவனிடம் சேர்ப்பிக்க வேண்டும். சேர்த்து விடுவாயா...?''
"சரி.'' என்றபடி, குயிலி வாங்கிக் கொண்டாள்.
அன்றிரவு.
குயிலி. குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தார். அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம். இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியையும் வேலு நாச்சியார் உள்ளிட்ட அனைவரும் கண்டார்கள்.
குயிலி ஓடிவந்து அவர் காலில் விழுந்து கதறியழுதாள். கடிதத்தை நீட்டினாள். கடிதத்தை வாங்கிப் படித்த வேலுநாச்சியாரின் முகம் உணர்ச்சியில் துடித்தது. கடிதத்தில், வெற்றிவேல் வாத்தியார் மல்லாரிராயன் என்பவனுக்கு வேலு நாச்சியார் குறித்த சில விஷயங்களை எழுதியிருந்தார்.
நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார். கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.
குயிலி தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவள். இதைக் காரணம் காட்டி ஒரு கும்பல், குயிலியின் மேல் துவேஷத்தை வளர்க்க முனைந்தது. வேலு நாச்சியாரோ குயிலிக்கு தம் ஆதரவுக் கரத்தை இரும்பு அரணாக வைத்து காத்து வந்தார்.
ஒருநாள். நள்ளிரவு.
வேலு நாச்சியார் மஞ்சத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். குயிலி தூக்கம் வராமல் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தாள். வெளியே காலடிச் சத்தம் கேட்டு உஷாரானாள். மறைந்து நின்று கொண்டாள். ஒரு உருவம் சாளரத்தின் வழியே குதித்து இறங்கியது. அங்குமிங்கும் பார்த்தபடி வேலுநாச்சியாரின் மஞ்சத்தினருகே மெதுவாகப் போனது. கையை ஓங்கி, கத்தியால் வேலு நாச்சியாரை குத்த முனைய மறைந்திருந்த குயிலி ஓடி வந்து தன் கைகளால் அந்தக் கத்தியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அந்த உருவம் திமிற, கத்தியில் வெட்டுப்பட்ட குயிலியின் கரங்களில் ரத்தம் ஆறாக ஓடியது. சத்தம் கேட்டு வேலு நாச்சியார் எழுந்து கொண்டார். அந்தக் கயவன் சடாரெனத் துள்ளி, சாளரத்தின் வழியே குதித்து ஓடிப் போனான். மயங்கிச்சரிய இருந்த குயிலியை தாங்கிப் பிடித்துக் கொண்டார் வேலுநாச்சியார்.

அன்று முதல் குயிலி, வேலுநாச்சியாரின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தார். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்குத் தளபதியாக்கப்பட்டார்.
நாட்கள் கடந்தன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார்.
முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த மல்லாரி ராயன், முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான். ஒரு மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார் கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான். அங்கும் தமிழர் படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின.
வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது.
தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தி யிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தி யிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக் கணக்கான துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
என்னதான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியாருக்கு இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.
அந்த நேரம் அங்கே ஒரு தள்ளாத கிழவி ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்.
சபையின் நடுவே தடுமாறி நடந்து வந்த அவள், வேலுநாச்சியாரை வணங்கிவிட்டு, பேசத் தொடங்கினாள்.
"தளவாய் பெரிய மருது அவர்களே, இப்போது நவராத்திரி விழா நடந்து வருகிறது. நாளை மறுநாள் விஜயதசமி. அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு வைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்காக அன்று ஒருநாள் காலை மட்டும் மக்களுக்கு, அதுவும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள் படை உள்ளே கோட்டைக்குள் புகுந்துவிடும். பிறகு என்ன? வெற்றி, நமது பக்கம்தான்.''
அவள் மூச்சுவிடாமல் சொல்ல, அத்தனை பேரின் கண்களும் வியப்பில் விரிந்தன.
பெரிய மருதுவின் சந்தேகப் பார்வையைக் கண்டதும் அந்தப் பெண் கடகடவென நகைத்தாள். "பேராண்டி பெரிய மருது, இப்போது என்னைத் தெரிகிறதா?'' என்றபடியே மெல்ல தனது தலையில் கை வைத்து வெள்ளை முடியை விலக்கினாள். அந்த முடி, கையோடு வந்தது. குயிலி புன்னகை மின்ன நின்றிருந்தாள்.
ஆம், சிவகங்கைக் கோட்டையை உளவு பார்க்க ராணியின் உயிர்த்தோழி குயிலி மாறுவேடத்தில் சென்றாள் என்ற உண்மை வெளிச்சமிட்டு நின்றது.
"என்ன பெரிய மருது, உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? நாளை மறுநாள் நமது படைகள் போர்முரசு கொட்டட்டும், இந்த முறை ஒலிக்கும் முரசு, வெள்ளையரின் அடிமை விலங்கை ஒடித்து, விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும் முரசாக ஒலிக்கட்டும்!'' ஆணையிட்டுவிட்டு சென்றார் வேலுநாச்சியார்.
ராணி குறித்தது போல படைகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து, முரசறைந்து போர் முழக்கமிட்டுப் புறப்பட, ராணி வேலுநாச்சியாரின் தலைமையில் பெண்கள்படை சிவகங்கை நகருக்குள் புகுந்தது. அம்மனுக்கு சாத்தி வழிபட அவர்கள் கையில் பூமாலைகளோடு அணிவகுத்தனர்.
பூமாலைக்குள் கத்தியும், வளரியும் பதுங்கி இருந்தது பரங்கியருக்குத் தெரியாது. வேலுநாச்சியாரும் தனது ஆபரணங்களை எல்லாம் களைந்துவிட்டு சாதாரணப் பெண்போல மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரோடு கோட்டைக்குள் இருந்து வெளியேறிய பிறகு, இன்று தான் மட்டும் தனியே மாறுவேடத்தில் வரவேண்டி வந்துவிட்டதே என்றி எண்ணி வேலு நாச்சியார் ஒரு கணம் கலங்கினார். ஆனால், ஒரே நொடியில் அந்தக் கலக்கம் காலாவதியானது. "எனது கணவரை மாய்த்து நாட்டை அடிமைப்படுத்திய நயவஞ்சகரை ஒழிப்பேன். விடுதலைச் சுடரை நாடு முழுக்க விதைப்பேன்!'' என்ற வீரசபதம் நினைவில் புகுந்தது.
அவரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது. விஜயதசமி என்பதால் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நில முற்றத்தில் வழிபாடு நடத்த குவித்து வைத்திருந்தனர். ஒரு சில வீரர்களின் கையில் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.
ராணி கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன. நிலா முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில் ஒரு மின்னல் யோசனை தோன்றி மறைந்தது.
ஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து கூட்டத்தோடு கலந்துகொண்டாள்.
அதே நேரத்தில் கோட்டையில் பூஜை முடிந்தது. அனைவரும் கோட்டையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். பொதுமக்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது. வேலுநாச்சியார் தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என்பதை உணர்ந்தார். அவரது கை மெல்ல தலைக்குமேல் உயர்ந்தது. மனத்திற்குள் ராஜராஜேஸ்வரியை வணங்கியபடியே, "வீரவேல்! வெற்றிவேல்!!'' என்று விண்ணதிர முழங்கினாள்.
அந்த இடிக்குரல் அரண்மனையே கிடுகிடுக்கும் அளவிற்கு முழங்கியது. ராணியின் குரலோசையைக் கேட்டதும் பெண்கள் படை புயலாய்ச் சீறியது. புது வெள்ளமாய்ப் பாய்ந்தது. மந்திர வித்தைபோல பெண்களின் கைகளில் வாளும் வேலும் தோன்றின.
ஆயுதங்கள் அனைத்தையும் மின்னலெனச் சுழற்றி வெள்ளையர்களை சிவகங்கைப் பெண்கள் படை வெட்டிச்சாய்த்தது. இந்தக் காட்சியை மேல்மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயன் பான்சோருக்கு இடிவிழுந்தது போலாயிற்று.
"சார்ஜ்!..'' என்று பான்சோர் தொண்டை கிழியக் கத்தியபடியே, தனது இடுப்பில் இருந்த 2 கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட ஆரம்பித்தான். வெள்ளைச் சிப்பாய்கள் ஆயுதக் குவியலை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்கள்.
வேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்திற்குச் செல்வதற்குள் அங்கிருந்த யாரோ ஒரு பெண் தனது உடல் முழுக்க கொளுந்துவிட்டு எரியும் தீயோடு, "வீரவேல், வெற்றிவேல்'' என்று, அண்டம் பொடிபடக் கத்தியபடியே ஆயுதக்கிடங்கை நோக்கி கீழே குதித்தாள்.
நிலா முற்றத்தில் இருந்த ஆயுதங்கள் அனைத்தும் வெடித்தும், தீ பிடித்தும் எரிந்தன.
ஆயுதக் குவியலில் பற்றிய தீயைக் கண்டதும் பான்சோரும், அவனது வீரர்களும் நிராயுதபாணியாகி பயந்து நின்றனர்.
பான்சோர் தப்பி ஓட முயன்றான். ஆனால் வேலுநாச்சியாரின் வீரவாள் அவனை வளைத்துப் பிடித்தது. தளபதி சரணடைந்தான். கோட்டை மீண்டும் ராணியின் கைக்கு வந்தது.
இதே நேரத்தில் பெரிய மருது வெற்றியோடு வந்தார். திருப்பத்தூர் கோட்டையை வென்ற சின்ன மருதுவும் தனது படைகளோடு வந்து சேர்ந்தார். வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது. ஆனால் வேலுநாச்சியாரின் கண்களோ தன் உயிரான தோழியும், இந்த வெற்றிக்கு வித்திட்ட பெண்கள் படை தளபதியுமான குயிலியைத் தேடியது.
குயிலி என்ன ஆனார்.
போர் தொடங்கிய போது குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது. அப்போது அவள் எண்ணினாள், "நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது. இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன். என்று கூறியபடியே உடல் முழுவதும் நெய்யை ஊற்றிக்கொண்டு, கோயிலில் இருந்த எரியும் பந்தத்தோடு அரண்மனையின் உப்பரிகையை நோக்கிப் பறந்தாள்.
அரண்மனை உப்பரிகையை அடைந்ததும் தீப்பந்தத்தால் தனது உடலில் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு, அந்த ஆயுதக் குவியலில் குதித்து விட்டாள். வெள்ளையர்களை ஆயுதம் அற்றவர்களாக்கி தன் தலைவிக்கு வெற்றியை அள்ளித்தர, தன்னையே பலியிட்டுக்கொண்டாள்.
மானம் காக்கும் மறவர் சீமையின் விடுதலைக்காக குயிலி தன்னையே பலி கொடுத்தார் என்பதை அறிந்ததும் அந்தத் தியாக மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் அருவியாய் மாறின. கண்ணீர் வெள்ளம் அவரது உடலை நனைத்தது.
அவர் மட்டுமா அழுதார்? குயிலிக்காக சிவகங்கைச் சீமையே அழுதது. குயிலி போன்ற தியாகச்சுடர்கள் தந்த ஒளியின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான் இந்தியாவிற்கு விடுதலை வழிகாண வைத்தது. தங்கள் உடலையே எரிபொருளாக்கிய எத்தனையோ குயிலிகள் இன்னும் சரித்திரம் ஏறாமலேயே சருகாய்ப் போனார்கள். அவர்களது உன்னத தியாகத்திற்குத் தலைவணங்குவோமாக!
(நடந்து முடிந்த சட்டசசபையில் உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கிணங்க வேலு நாச்சியாருக்கு மணி மண்டபம் கட்டும் போது அதில் குயிலிக்கும் மண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்தார், யார் அந்த குயிலி என்ற தேடுதலின் அடிப்படையில் சுருக்கமாக எழுதப்பட்டதே இந்த கட்டுரை, நன்றி- விஜயபாரதம், தமிழ்தேசம், மகளிர் வரலாறு கட்டுரையாளர்களுக்கு)



உலகின் முதல் தற்கொலைப் படை போராளி வீரத்தாய் குயிலி...

: இந்திய விடுதலை வரலாற்றில் ஜான்சிராணியைப் பற்றி பேசுகிற பக்கங்கள் அதிகமாக இருக்கலாம்.. ஆனால் அவருக்கும் முன்பாக தமிழ் மண்ணில் தாய் மண்ணின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து பெரும் புரட்சியையே நடத்தியவர் வீரமங்கை வேலுநாச்சியார்..அவரது பெருமைக்குரிய தளபதியாக இருந்தவர்தான் வீரத்தாய் குயிலி...
இலங்கையில் தமிழீழம் கோரி விடுதலைப் போர் நடத்திய விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இணைந்து போர்க்களங்களில் பங்கேற்றனர். அதற்கு முன்பாக 1750களில் மிகப் பெரிய பெண்கள் படையணியை கட்டி வீரச்சமர் புரிந்தவர் அரசியார் வேலுநாச்சி அவர்கள்...வேலுநாச்சியாரின் வளரிப் படையும் பெண்கள் படை அணியும் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பணமாக இருந்தவை... வேலுநாச்சாரியின் வளரிப் படைக்கு தலைமை வகித்து தமிழர் வீரத்தை உலகுக்குப் பறை சாற்றியவர் வீரத்தாய் குயிலில்..
வேலுநாச்சியார் வரலாறு
1730ம் ஆண்டு பிறந்தவர் வேலுநாச்சியார். இளம்பிராயத்திலேயே அனைத்து போர் பயிற்சிகளையும் பிற மொழிகளையும் கற்றுத் தேர்ந்திருந்தார் வேலு நாச்சியார். 1746ஆம் ஆண்டு சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவரின் மகன் முத்துவடுகநாதரை திருமணம் செய்து கொண்டார். 1772ஆம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி ஆற்காடு நவாப்பின் படையெடுப்பின் போது சூழ்ச்சியால் முத்துவநடுகநாதர் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவருடன் இளைய மனைவி கவுரி நாச்சியாரும் கொல்லப்படுகின்றனர். இதனால் மகள் வெள்ளச்சி நாச்சியார், தளபதிகள் மருது பாண்டியர்கள் துணையோடு திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சி என்ற பாளையத்தில் தஞ்சம் அடைந்தார் வேலுநாச்சியார்,...
விருப்பாட்சி பாளையம் கோபால் நாயக்கர்
விருப்பாட்சி பாளையமானது ஹைதர் அலியின் நிர்வாகத்துக்கு உட்பட்டதாக இருந்தது. ஹைதர் அலி உதவியுடன் நவாப்- ஆங்கிலேயர் படைகளை வீழ்த்தி சிவகங்கையை மீட்க படை திரட்டிக் கொண்டிருந்தார் வேலுநாச்சியார்.
துரோகிகளை கருவறுத்த வீரத்தாய் குயிலி
விருப்பாட்சி பாளையத்தில் வேலுநாச்சியார் தங்கியிருந்த காலத்தில் அவருடன் அவரது சிலம்பு வாத்தியாரான வெற்றிவேலுவும் உடன் இருந்தார். அவரை மிகவும் நம்பிக்கைக்குரியவராகவே நம்பிவந்தார் வேலுநாச்சியார். ஆனால் வெற்றிவேலு வாத்தியாரோ, வேலுநாச்சியாரின் போர் திட்டங்களை ஆங்கிலேயருக்கு காட்டிக் கொடுத்து வந்தார். விருப்பாட்சியில் இருந்து சிவகங்கையில் இருக்கும் தாயாரைப் பார்க்க குயிலி செல்ல திட்டமிட்டிருந்தார். அப்போது வெற்றிவேலு வாத்தியார், குயிலியிடம் எழுதப் படிக்கத் தெரியுமா எனக் கேட்க தெரியாது என்று பதில் சொல்லி இருக்கிறார். அப்போது வெற்றி வேலு வாத்தியார் ஒரு கடிதத்தைக் கொடுத்து சிவகங்கை அரண்மை அருகே இருக்கும் மல்லாரிராயன் என்பவரிடம் கொடுக்கச் சொன்னார். வெற்றிவேலு வாத்தியாரின் கடிதத்தை வாங்கி வைத்துக் கொண்டார் குயிலி. சந்தேகப்பட்டு அக்கடிதத்தைப் பிரித்துப் படிக்க வெற்றிவேலுவாத்தியாரின் துரோகம் தெரியவருகிறது. வெற்றிவேலு வாத்தியாரின் குடிசைக்கு ஆக்ரோஷத்துடன் சென்று அவரைக் குத்தி படுகொலை செய்து விடுகிறார்.
மெய்க்காப்பாளரான குயிலி
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவராக இருந்தாலும் நம்பிக்கைக்குரியவராக வீரத்துடன் செயல்படுகிறவராக இருந்ததால் வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளராக நியமிக்கப்பட்டார். இதை சிலர் எதிர்த்த போது சாதி பார்க்காதவர்கள்தான் என் படையணியில் இருக்க வேண்டும் பிரகடனமே செய்தவர் வேலுநாச்சியார்.

போர்க்களத்தில் குயிலி..
மருது சகோதரர்கள் துணையுடன் 8 ஆண்டுகாலத்துக்குப் பின் 1780ஆம் ஆண்டு விருப்பாட்சி பாளையத்தில் இருந்து சிவகங்கை நோக்கி வேலுநாச்சியாரின் படை அணி புறப்பட்டது. அதில் பெண்கள் படையான உடையாள் படை அணிக்கு தலைமை வகித்தவர் வீரத்தாய் குயிலி. வேலுநாச்சியார் படை திண்டுக்கல் தொடங்கி ஒவ்வொரு தடையையும் தகர்த்துக் கொண்டு சிவகங்கை நோக்கி சீறியது.
ஒற்றர் குயிலி
ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார்கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் வரிசையாக படை அணியை நிறுத்தியிருந்தான். அரண்மனைக் கிடங்கில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், வெடிமருந்துகள் குவிக்கப்பட்டிருந்தன. போர்க்களத்தில் இருந்த வேலுநாச்சியாரிடம் ஒரு மூதாட்டி, நாளை விஜயதசமி திருவிழா.. அன்று சிவகங்கை ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் மட்டும்தான் வழிபாடு நடத்துவர்.. அந்த சந்தர்ப்பத்தை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது என்று கேட்டார். அற்புதமான யோசனையை சொன்ன நீங்கள் யார் என்று மூதாட்டியிடம் வேலுநாச்சியார் கூற அம்மூதாட்டியோ எதுவும் சொல்லாமல் ந்கர சின்ன மருது வாள்முனையில் அம்மூதாட்டியை தடுத்தார். அப்போதுதான் தெரிந்தது அது குயிலி என.. தாம் அனுமதியின்றி வேவுபார்த்தேன் என்று சொல்லி வேலுநாச்சியாரை மகிழ்ச்சி கொள்ள வைத்தார் குயிலி.
தற்கொலைப்படையான குயிலி
குயிலி யோசனைப்படி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குள் வேலுநாச்சியார் படையணி நுழைந்து உக்கிரதாக்குதலை நடத்தியது. ஆனாலும் ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முன்பு வேலுநாச்சியார் படை தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அப்போது சட்டென ஒரு உருவம் எரிநெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் குதித்தது. அப்படியே அந்த கிடங்கு வெடித்துச் சிதற அந்த உருவமும் வெடித்து சிதறியது...இதனால் ஆங்கிலேயர் பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆங்கில தளபதி பாஞ்சோர் சிவகங்கையைவிட்டு வெளியேறினான்... வேலுநாச்சியாரின் வெற்றிக்காக தன் உடலில் எரிநெய்யை ஊற்றிக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் குதித்தவர்தான் வீரத்தாய் குயிலி... ஆம் உலகின் முதல் தற்கொலைப்படை போராளியாக சரித்திரத்தின் பக்கங்களில் பிறப்பெடுத்தார் வீரத்தாய் குயிலி.. இந்த வீரத்தாய் குயிலிக்குத்தான் தமிழக அரசு நினைவு மண்டபம் கட்டப் போவதாக அறிவித்துள்ளது.



வெள்ளி, 29 செப்டம்பர், 2017

உலக மொழிபெயர்ப்பு நாள் ( International Translation Day ) செப்டம்பர் 30.



உலக மொழிபெயர்ப்பு நாள் ( International Translation Day ) செப்டம்பர் 30.

பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் ( International Translation Day ) ஆண்டுதோறும்
விவிலிய மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோமின் (கிபி 347-420) நினைவு நாளான செப்டம்பர் 30ஆம் நாள் கொண்டாடப்படும் ஒர் சிறப்பு நாளாகும். ஜெரோம்
மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர் என அழைக்கப்படுகிறார்.
புனித ஜெரோம் தனது படிப்பறையில். டொமெனிக்கோ கிர்லாந்தையோ வரைந்தது.
1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்' இந்த சிறப்புத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1991 ஆம் ஆண்டில் இவ்வமைப்பு பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோர் தம் ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இந்நாளைப் பன்னாட்டு ரீதியில் கொண்டாட அழைப்பு விடுத்தது.
தமிழகத்தின் பங்கு
தமிழகத்தில் எவ்வாறு எங்கெங்கே, யார்யாரால் பன்னாட்டு மொழிபெயர்ப்பு தினம் கொண்டாடப்பட்டது என்ற மூலங்கள் இல்லை. தமிழ்நாட்டில் மொழிபெயர்ப்புக்கென்று அரசு சார்பில் சில தனிப்பட்ட துறைகள் இயங்குவது அறியப்படுகிறது. பல்கலைக்கழங்களில், குறிப்பாக தமிழ் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புக்கென்று தனித்துறை உள்ளது. 1980களில் தமிழ்நாடு பாடநூல் கழகம் பல நூல்களை தமிழ் வழி பாடதிட்டத்திற்கேன்று மொழிபெயர்த்து வெளியிட்டன, அவற்றுள் பல நேரடி மொழிபெயர்ப்பு நூல்களாகும்.
பல மொழிபெயர்ப்பு நூல்கள் வழக்கமான, வறட்சியான பாடத்திட்ட நூல்கள்களாக இருப்பினும், சில நூல்கள் அபூர்வமாகவும், அருமையாகவும் இடம்பெற்றிருந்ததன. இருப்பினும் அந்த நூல்கள் பயன்பாடற்று குப்பைகளாயின. அனைத்து பொது நூலகங்களுக்கும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் அவைகள் இலவசமாக அளிக்கப்பட்டு கேட்பாரற்று கிடந்ததன.
1990களில் சில இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களை தமிழக அரசு வெளியிட்டது. அதில் கலீல் கிப்ரான்.] எழுதிய
தீர்க்கதரிசி , ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய
வேக்பீல்டு பாதிரியார்  போன்ற சில ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கது.


உலக இதய தினம். செப்டம்பர் 29-ம் தேதி.


 உலக இதய தினம். செப்டம்பர் 29-ம் தேதி.

காக்க காக்க இதயம் காக்க

  டாக்டர் விகடனில் ... இருந்து...
செப்டம்பர் 29-ம் தேதி, உலக இதய தினம். 'ஆரோக்கிய இதயத்துக்கான வழி’ என்ற மையக் கருத்தின் அடிப்படையில் 'உலக இதய தினம்’ கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக, பெண்கள் குழந்தைகள் ஆரோக்கியம் பற்றி, இந்த ஆண்டு அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது.  
இதயநோயானது ஆண், பெண் பேதமின்றி அனைவரையும் பாதிக்கிறது. பெண்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பைப் புற்றுநோய் பற்றிய பயமும், விழிப்பு உணர்வும் அதிகம் உள்ளன. ஆனால், ஓராண்டில் உயிரிழக்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இதயநோயால் உயிரிழக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். குழந்தைகளுக்கு பிறவியிலேயேகூடக் பிரச்னை ஏற்படலாம். ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் குழந்தைகள் இதய கோளாறுடன் பிறக்கின்றனர்.
இதயத்தில் ஏற்படும் பிரச்னைகள், காரணங்கள், அவற்றை தவிர்க்கும் வழிகள் பற்றி இதயநோய் சிறப்பு மருத்துவர்கள் சிவகடாட்சம், மதுசங்கர், சுரேஷ்குமார் ஆகியோர் அளிக்கும் பயனுள்ள தகவல்கள் இந்தக் கையேட்டில் இடம் பெற்றிருக்கின்றன...
இதயத்தின் செயல்பாடுகள்
மனிதனின் நெஞ்சுக்கூட்டில், இடது பக்கத்தில்  இதயம் உள்ளது. இது உடலுக்குத் தேவை யான ஆக்சிஜன் நிரம்பிய ரத்தத்தை அனுப்பும் ஒரு 'பம்ப்’. உடல் முழுவதிலும் இருந்து வரும் கார்பன் டை ஆக்சைடு நிரம்பிய ரத்தத்தைப் பெறும் இதயம், அதை நுரையீரலுக்கு அனுப்புகிறது. நுரையீரல், கார்பன் டை ஆக்சைடு நிரம்பிய ரத்தத்தைப் பிரித்து வெளி யேற்றுகிறது. அதேநேரத்தி லேயே, ஆக்சிஜன் ரத்தத்தில் சேர்க்கப்பட்டு, அது இதயத் துக்கு அனுப்பப்படுகிறது. இதயம், அதை உடல் முழு வதும் அனுப்புகிறது. ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 100 முறை இதயம் துடிக்கிறது. வயது, பாலினத்துக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை மாறு படலாம்.
இதயநோய்கள்
 நெஞ்சுவலி
தங்களுக்குப் பிரச்னை ஏற்படும்வரை இதயநோய்ப் பற்றிய கவலை மக்களுக்கு இல்லை. இதயமும் நம்முடைய உடலின் மற்ற தசைகளைப் போலதான். அது ஆரோக்கியமாக இருக்க, ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த ரத்தம் தேவை. கொரனரி ரத்தக்குழாய்கள் இதயத்துக்குத் தேவையான ரத்தத்தைக் கொண்டுசெல்கின்றன. இந்த ரத்தக்குழாய்கள் இதயம் முழுக்க பரவியுள்ளன. இவற்றுக்குள் கொழுப்புப் படிவதால், பாதைகள் குறுகிவிடுகின்றன. இதனால், இதயத் தசைகளுக்குப் போதுமான ரத்தம் செல்வதில்லை. இதை ஈடுகட்ட இதயம் சற்று மெதுவாக இயங்குகிறது. ரத்தம் குறைந்த அளவில் செல்லும்போது, நெஞ்சு வலி ஏற்படுகிறது.
 மாரடைப்பு
இதயத்தின் ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பின் வழியாக ரத்தம் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு, அது உறையும் தன்மையை அடையும்போது, மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் எந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபடுகிறதோ, அந்தப் பகுதியில் இதயத்தின் தசை உயிரிழக்கிறது.
 சீரற்ற இதயத்துடிப்பு
இதயம், ரத்தத்தை அழுத்தி உடல் முழுவதும் அனுப்ப, துடிக்க வேண்டும். அதற்கு மின் ஆற்றல் தேவைப்படுகிறது. இதற்காக, இதயத்தின் உள்ளே ஒரு மின் உற்பத்தி நிலையமும், அந்த மின்சாரத்தை இதயம் முழுக்கக் கொண்டு செல்லும் அமைப்பும் உள்ளது. இந்த மின் உற்பத்தி அளவு அதிகமானாலோ, குறைந்தாலோ, இதயம் துடிப்பதில் பாதிப்பு ஏற்பட்டு அது செயலிழக்க நேரிடலாம்.
 இதயநோய்
இதயத்தில் ஏற்படும் நோயை, குழந்தைகளுக்கு ஏற்படுவது; பெரியவர்களுக்கு ஏற்படுவது; முதியவர்களுக்கு ஏற்படுவது என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இந்த மூன்று பேருக்குமே வரக்கூடிய இதய நோய்களை, பிறவியிலேயே ஏற்படுவது (சிஷீஸீரீமீஸீவீtணீறீ), பிற்காலத்தில் ஏற்படும் நோய் (கிநீஹீuவீக்ஷீமீபீ) என்று இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு, பெரும்பாலும் பிறவிக் குறைபாடு காரணமாக இதயக்கோளாறுகள் ஏற்படுகின்றன. பிற்காலத்தில் ஏற்படக்கூடிய இதயநோய்களும், குழந்தைகளுக்கு ஏற்படலாம்.
பிற்காலத்தில் பெரியவர்களுக்கும் வால்வு, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற  பிரச்னைகள் வரலாம்.
முதியவர்களுக்கும் 99 சதவிகிதம் ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதால், பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்னையை, ரத்தக் குழாயில் வரக்கூடிய நோய்; வால்வில் வரக்கூடிய நோய்; இதயத் தசையில் வரக்கூடிய நோய் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இதயத்தில் எத்தனையோ பிரச்னைகள் ஏற்பட்டாலும், இதயத்தசைக்குச் செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு மூலம் உயிரிழப்பு ஏற்படுவதுதான் மிகவும் அதிக அளவில் உள்ளன. இதயநோய்களுக்கு என்னதான் பல்வேறு சிகிச்சைகள் இருந்தாலும், அவை வராமல் தவிர்ப்பதுதான் மிகவும் முக்கியமானது.
 மாரடைப்புக்கு முக்கியக் காரணங்கள்
 உயர் ரத்த அழுத்தம்.
 ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு.
 சர்க்கரை நோய்.
 புகைப் பிடிக்கும் பழக்கம்.
 மது அருந்துதல்.
 உடல் பருமன்.


இதயநோயின் அறிகுறிகள்
ரத்தக்குழாய் அடைப்பு, இதயம் செயலிழப்பு, மாரடைப்பு என இவற்றுக்கான சிகிச்சை முறைகள் வெவ்வேறாக இருந்தாலும் அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கின்றன. எனவே, ஒருவருக்கு இதயத்தில் என்ன பிரச்னை என்பதை டாக்டரால் மட்டுமே பரிசோதித்துக் கண்டறிய முடியும்.
பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள இதயநோய் சிகிச்சை மையத்தை அணுக வேண்டியது அவசியம்.
இதய ரத்தக்குழாய்ப் பிரச்னைகளின்போது, பொதுவாக நெஞ்சுவலி இருக்கும். நெஞ்சில் அழுத்தம், வலி, எரிச்சல், கனமான தன்மை போன்றவை தோன்றும். மேலும் தோள்பட்டை, கை, கழுத்து, தொண்டை, தாடை, முதுகில் வலி இருக்கும்.
இதுதவிர, மூச்சுவிடுவதில் சிரமம், சீரற்ற இதயத்துடிப்பு, இதயம் வேகமாகத் துடித்தல், சோர்வு, மயக்கம், அதிகம் வியர்வை வருவது போன்றவையும் இதயநோயின் அறிகுறிகள்.
மாரடைப்பு ஏற்படும்போதும் நெஞ்சு வலி, நெஞ்சில் அழுத்தம், கடினமானத் தன்மை இருக்கும். கை, கழுத்து, தாடை, முதுகுப் பகுதியில் வலி இருக்கும். வியர்வை, மயக்கம், வாந்தி அல்லது குமட்டல் இருக்கும். அதிகப்படியான சோர்வு, மனப்பதற்றம், மூச்சுத் திணறல் இருக்கும். சீரற்ற அல்லது அதிவேக இதயத்துடிப்பு இருக்கும்.
மாரடைப்பின்போது, இந்த ஆரம்பக்கட்ட அறிகுறிகள் அரை மணி நேரம் அல்லது அதற்கு மேல் இருக்கும். உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் தெரியாமல்கூட இருக்கலாம். இதனால்தான் சர்க்கரை நோயை 'சைலன்ட் கில்லர்’ என்கின்றனர்.
 தவிர்க்கும் வழிகள்
ரத்தக்குழாயில் கொழுப்புப் படிந்து அடைப்பு ஏற்படுவதை, முன்கூட்டியே பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.
 இதய ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பானது 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால், மருந்து மாத்திரைகளாலேயே சரிசெய்துவிட முடியும்.
 ஒன்று - இரண்டு ரத்தக் குழாய்களில் மட்டும் அடைப்பு இருந்தால் 'ஸ்டெண்டிங்’ என்ற சிகிச்சை முறையால் குணப்படுத்தலாம்.
மூன்றுக்கும் மேற்பட்ட ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், அறுவைச் சிகிச்சை செய்வதுதான் நல்லது.
 பரிசோதனை
 ஈ.சி.ஜி.
எளிய ஈ.சி.ஜி. பரிசோதனை மூலம் வலியின்றி ஒருவரின் இதய மின் செயல்பாட்டைக் கண்டறிய முடியும். இது இதயம் எவ்வளவு வேகமாகத் துடிக்கிறது என்பதைக் காட்டும். கொரனரி இதயநோய் காரணமாக, இதயம் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இது சுட்டிக்காட்டுவதன் மூலம் மாரடைப்பு வருவதைத் தெரிந்துகொள்ளலாம்.
 எக்கோ (எக்கோகார்டியோகிராபி)
ஒலி அலையைச் செலுத்தி இதயத்தின் படத்தை எடுத்து அதன் செயல்பாடு மதிப்பிடப்படுகிறது. எக்கோகார்டியோகிராபி மூலம் இதயத்தின் வால்வுகள், இதயத்தசையின் தடிமன் போன்றவற்றைப் பார்க்கலாம். இதன் மூலம் இதயத் தசைகளுக்கு ரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறியலாம்.
 சி.டி. ஸ்கேன்
சி.டி ஸ்கேன் மூலம் இதய ரத்தக்குழாயின் முழுப் பரிமாணத்தையும் படம் பிடித்துப்பார்க்கலாம். 64 ஸ்லைஸ், 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் கருவிகள் உள்ளன. 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் மூலம் இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் எவ்வளவு கொழுப்பு உள்ளது? எத்தனை ஆண்டுகளாக உள்ளது? என்பதைக் கண்டறிய முடியும்.
 டிரெட்மில்
நோயாளியின் இதயத்தில் உள்ள அடைப்புகள், அவர் வேகமாக நடப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போதுதான் கண்டறிய முடியும். இதற்கு டிரெட்மில் பரிசோதனை உதவுகிறது.
இதயம் காக்க எளிய வழிகள்
இதயநோய்கள் வந்துவிட்டதா, அதற்காகக் கவலைப்பட்டு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. புகைப் பழக்கத்தைக் கைவிட்டு, ஆரோக்கிய உணவு முறைகளைப் பின்பற்றி, உடற்பயிற்சிகள் செய்தால், மாரடைப்புக்கான வாய்ப்பை 92 சதவிகிதம் வரை குறைக்கலாம்.



இதயநோய் வராமல் தவிர்க்க எளிய வழிகள்:
 ரத்த அழுத்தத்தை கண்காணியுங்கள்:
இதயநோய் ஏற்படுவதற்கு, உயர் ரத்த அழுத்தம் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. எனவே, உங்கள் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
ரத்த அழுத்தமானது 141/91 என்ற அளவைத் தாண்டினால், அது உயர் ரத்த அழுத்தம் என்று அர்த்தம். அதுவே, 89/59 என்ற அளவுக்கு கீழ் இருந்தால், அது குறைந்த ரத்த அழுத்தம் என்று தெரிந்து கொள்ளலாம்.  
ரத்த அழுத்தம், 120/80 என்பதுதான் சரியான அளவு.
வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாகவே உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தமானது, பக்கவாதம், இதயச் செயலிழப்பு, மாரடைப்பு மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
உயர் ரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்களுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். அவற்றை எடுத்துக்கொள்வதால் கால் வலி, தூக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். வாழ்க்கை முறைகளை சரிசெய்து கொள்வதன் மூலம் பிரச்னையை ஓரளவுக்குச் சமாளிக்கலாம்.
 ப்ளீஸ்... ஸ்டாப் சிகரெட்
புகைப்பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் இதயம், ரத்தக் குழாய்கள், நுரையீரல், கண், வாய், இனப்பெருக்க மண்டலம், எலும்பு, செரிமாண மண்டலம் என உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பாதிக்கிறது.
சிகரெட்டைப் புகைக்கும்போது தார், கார்பன் மோனாக்சைட் உள்பட ஏழு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உடலுக்குள் செல்கின்றன.
புகைப் பிடிக்கும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. ரத்தச் செல்கள் ஆக்சிஜனை ஈர்க்கும் அளவு குறைகிறது. ரத்தக் குழாயின் சுவரைத் தாக்குகிறது.
உடலின் கடைமட்டம் வரையில் ரத்த ஓட்டம் சீராகச் செல்வதைத் தடுக்கிறது.
புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது, உடலில் உள்ள நல்ல கொழுப்பின் (எச்.டி.எல்.) அளவைக் குறைத்துவிடுகிறது.
புகைக்கும்போது ரத்தக்குழாய்கள் மற்றும் இதயத்தின் செயல்பாடும் பாதிக்கப்படுகிறது. இது ஆர்த்ரோஸ்லேரோசிஸ் (Atherosclerosis) வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அதாவது, ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது. இதனால், ஆக்சிஜன் நிறைந்த ரத்தம், செல்களுக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. அடைப்பு அதிகரிக்கும்போது மாரடைப்பு ஏற்படலாம்.
ஒன்றோ, இரண்டோ அல்லது ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டுக்கு மேல் சிகரெட் புகைப்பவராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு இதயம் மற்றும் காலில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
புகைப் பிடிப்பவர்களுக்கு மட்டும் அல்ல, புகைப்பவர் வெளியிடும் புகையைச் சுவாசிப்பவர்களுக்குக்கூட இதயநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே, புகைப் பிடிப்பவர்கள் அந்தப் பழக்கத்தைக் கைவிடுவதும், மற்றவர்கள் புகைப் பிடிப்பவர்கள் அருகில் இருப்பதைத் தவிர்ப்பதும் நல்லது.
புகைப் பழக்கத்தைக் கைவிட்ட ஒர் ஆண்டுக்குள், இதய நோய்க்கான வாய்ப்பு ஆச்சர்யப்படத்தக்க அளவுக்கு பெருமளவு குறைந்துவிடுகிறது.


 சர்க்கரைநோயைத் தவிர்ப்போம்
டாக்டர் கருணாநிதி, சர்க்கரை நோய் மருத்துவர்
சாதாரண மக்களைக் காட்டிலும், சர்க்கரைகள் நோயாளிகளுக்கு இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் இரண்டு மடங்கு அதிகம்.
சர்க்கரை நோய் உடலின் வளர்ச்சிதை மாற்றப்பணியைப் பாதிக்கிறது. இதனால், ரத்தக்குழாய்களில் கொழுப்பு அதிக அளவில் படிகிறது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்த அடைப்பு பெரிதாகி, ரத்த ஓட்டத்தைத் தடுத்துவிடுகிறது. சர்க்கரை நோய் இதயத்தில் உள்ள ரத்தக்குழாயை மட்டுமல்ல, உடல் முழுவதும் குறிப்பாக, சிறிய ரத்த நாளங்கள் உள்ள இதயம், கைவிரல், பாதம், கால் விரல்களில் உள்ள ரத்தக் குழாய்களையும் பாதிக்கிறது.
மாரடைப்பைப் பொறுத்தவரை, பெண்களைக்காட்டிலும் ஆண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  அதுவே, பெண்களுக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால் ஆண், பெண் இருவருக்கும் இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் சம அளவில் இருக்கின்றன.
சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சு அடைப்பு, வலி போன்ற அறிகுறிகள் தென்படும். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படும்போது அறிகுறிகள் தெரியாமல்கூட இருக்கலாம்.
சாதாரண மக்களுக்கு இதயநோய் வரும்போது, அதில் இருந்து அவர்கள் மீண்டு வரும் காலத்தைக் காட்டிலும் சர்க்கரை நோயாளிகள் மீண்டு வருவதற்கான காலம் அதிகம்.
சர்க்கரை நோயாளிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புள்ளவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இதைத் தவிர்க்க, குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதித்து கட்டுக்குள் வைத்திருங்கள். ரத்தத்தில் இயல்புநிலை சர்க்கரை அளவு என்பது 70-100. சாப்பிட்ட பின் இது 140-க்கும் கீழ் இருக்க வேண்டும்.
பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால், பிள்ளைகளுக்கு வர வாய்ப்புகள் அதிகம். இவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
 கொழுப்பைக் கட்டுப்படுத்துங்கள்
மாரடைப்புக்கான வாய்ப்புகள் உள்ளவர்கள், வருடத்துக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள், குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ரத்தத்தில் கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
 சராசரி கொழுப்பின் அளவு
மொத்த கொழுப்பு
200-க்கும் கீழ்
எல்.டி.எல் (கெட்டக் கொழுப்பு) 100-க்கும் கீழ்
எச்.டி.எல் (நல்ல கொழுப்பு)
40 அல்லது அதற்கு மேல்
கொழுப்பு விகிதம் (மொத்தக் கொழுப்பு / எச்.டி.எல்.):  ஐந்துக்கும் கீழ்
 உடற்பயிற்சி
பெரும்பாலானவர்கள் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லை என்பார்கள். 24 மணி நேரத்தில் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம், தூங்க ஏழு மணி நேரம். மீதம் 16 மணி நேரம் உள்ளது. இதில், ஒரு மணி நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்றால், 45 நிமிடங்களையாவது உடற்பயிற்சிக்குச் செலவிடுங்கள். நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி செய்வது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
வேலைக்குச் செல்லும் பெண்கள், கணவனுடன் இருசக்கர வாகனம் அல்லது பேருந்தில் செல்கின்றனர். அவர்கள், இரண்டு பஸ் நிறுத்தத்துக்கு முன்பு இறங்கி வீட்டுக்கு நடந்தே வந்தால்கூடப் போதும், ஆரோக்கியமாக இருக்கலாம். தினசரி ஒரே மாதிரியான பயிற்சியைச் செய்வதைக்காட்டிலும், வித்தியாசமாக ஏதாவது பயிற்சிகளைச் செய்ய முயற்சியுங்கள்.
 வீட்டு வேலை செய்யுங்கள்
ஜிம்முக்குச் சென்று வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்வதுதான் பயிற்சி என்று இல்லை. வீட்டு வேலை, தோட்டப் பராமரிப்பு, மாடிப்படி ஏறி இறங்குவதும்கூட உடலுக்கானப் பயிற்சிகள்தான்.
போதுமான தூக்கம்
பெரியவர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். 7 மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
போதுமான தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்டப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. மனஅழுத்தம் அதிகரிக்கும்போது, வெளியாகும் ஹார்மோன் இதயத்தைப் பாதிக்கிறது.
 ஆரோக்கியமான உணவு பழக்கம்:
எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது அல்ல... என்ன சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம்.
 வயிறு முட்டச் சாப்பிடும்போது, உடலில் கலோரியின் அளவு அதிகரிக்கும். இந்த அதிகப்படியான கலோரி கொழுப்பாக மாற்றப்பட்டுவிடும். எனவே, உணவில் கவனம் தேவை.
 கலோரி குறைந்த அதேசமயம் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
 காய்கறிகளில் அதிக அளவில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளன.
 அதிக கலோரி, சோடியம் உப்பு அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட, அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்த்துவிடுங்கள். இது உங்கள் உடல் அளவை மட்டும் அல்ல, இதயமும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
 க்ரீன் டீ பருகுங்கள்:
இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதால், உடலில் உள்ள கெட்டக் கொழுப்பு அளவையும், உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. தினமும் ஒரு கப் அளவுக்கு க்ரீன் டீ பருகுவது போதுமானது. க்ரீன் டீயை, கொதிக்கும் தண்ணீரில் போட்டு, சில நிமிடங்கள் கழித்து இறக்கி, வடிகட்டி அப்படியே அருந்த வேண்டும். சுவைக்காக சர்க்கரை, தேன் என எதையும் சேர்க்க வேண்டாம்.
 உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்து அளவைக் கவனியுங்கள்
இன்று எந்த ஓர் உணவுப் பொருளை வாங்கினாலும், அவற்றோடு ஊட்டச்சத்துப் பட்டியலும் இணைப்பாகவே வருகிறது! பெரும்பாலும் யாரும் அதைப் பார்ப்பது இல்லை. இனியாவது அந்தப் பட்டியலில் கலோரி மற்றும் கொழுப்பு எவ்வளவு உள்ளது என்று பாருங்கள்.
சாட்சுரேட்டட் (Saturated Fat)  கொழுப்பு எனப்படும் நிறைவுற்ற கொழுப்பு 7 சதவிகிதத்துக்கும் மேல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஒரு கிராமுக்கு மேல் 'டிரான்ஸ் பேட்’ இருக்கக் கூடாது. இந்த சேச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்புதான் ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரித்து, அதன் மூலம் இதய ரத்தக்குழாய் அடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.
இறைச்சி, பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பனை எண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இந்தப் பொருட்களைக் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்.


  எண்ணெயைக் குறைப்போம்
உணவு சமைக்க நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். முடிந்தவர்கள் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 மி.லி போதுமானது. ஒரு மாதத்துக்கு அரை லிட்டருக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். பதப்படுத்தப்பட்ட உணவு, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவைத் தவிர்ப்பது நல்லது!
 உணவில் நார்ச்சத்து அவசியம்
ஒரு நாளைக்கு குறைந்தது 25 முதல் 35 கிராம் அளவுக்கு நார்ச்சத்து தேவை. நார்ச்சத்துள்ள உணவைச் சாப்பிடுவது மாரடைப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. கெட்டக் கொழுப்பைக் குறைக்கும் தன்மை ஓட்ஸுக்கு உள்ளது. இதில் அதிக அளவில் நார்ச்சத்தும் உள்ளது. இதைக் காலை உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.
 ஒமேகா 3 கொழுப்பு அமிலம்
மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்கும் தன்மை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துக்கு உள்ளது. மேலும், இது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். வால்நட், பாதாம் போன்றவற்றில் இந்த 'ஒமேகா 3’ நிறைவாக உள்ளது. ஒருநாளைக்கு ஒன்று, இரண்டுக்கு மேல் இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
அசைவ உணவுப் பிரியர்கள் மீன், தோல் நீக்கப்பட்ட கோழி இவை இரண்டை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். மாடு, ஆட்டு இறைச்சியில் உள்ள கொழுப்பு, இதய ரத்தக் குழாய்களைப் பாதிக்கிறது. ஆனால், மீன் அதிலும் குறிப்பாக எண்ணெய்ச் சத்துள்ள மீன் வகைகளை எடுத்துக்கொள்ளும்போது, அதில் உள்ள 'ஒமேகா 3’ கொழுப்பு அமிலமானது, இதயம் சீராகத் துடிக்க உதவுகிறது. எண்ணெய் சேர்க்காமல், வேக வைத்த மீனைச் சாப்பிட வேண்டும்.
 ஆரஞ்சுப் பழச்சாறுடன் தொடங்குங்கள்
ஆரஞ்சு சாற்றில் அதிக அளவில் ஃபோலிக் அமிலம் உள்ளது. இது மாரடைப்புடன் தொடர்புடைய ஹோமோசிஸ்டீன் (Homocysteine)  என்ற அமிலத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது. திராட்சையில் அதிக அளவில் ஃபிளவனாய்ட்ஸ், ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளன. இது ரத்தக்குழாயில் அடைப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கின்றன. எனவே, காலையில் சர்க்கரைச் சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட, ஆரஞ்சு அல்லது ஏதேனும் ஒரு பழச்சாற்றைக் குடித்து அன்றைய தினத்தைத் தொடங்குங்கள்.
 அதிக அளவில் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்
காய்கறிகளில் கொழுப்பு மற்றும் கலோரி மிகவும் குறைவாகவும், நார்ச்சத்து மிகவும் அதிகமாகவும் உள்ளன. மேலும், இவற்றில் போலிக் அமிலம், மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகள் உள்ளன. இவை அனைத்தும் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகின்றன.
எனவே, உணவில் 50 சதவிகிதம் அளவுக்கு பச்சைக் காய்கறிக்கு இடம் அளியுங்கள். முட்டைகோஸ், ப்ருகோலி போன்ற காய்கறிகள், ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் இதயத்தை வலுவாக்கும் ஊட்டச் சத்துக்களின் சுரங்கங்கள்.
 உணவில் பூண்டு
தினசரி உணவில் பூண்டைச் சேர்த்துக்கொள்ளுங்கள். பூண்டில், ரத்தக்குழாயைத் தாக்குபவற்றை எதிர்த்துச் செயலாற்றும் 15 வகையான ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளன. பூண்டு ரத்தக் குழாய்களுக்குள் ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும், கொழுப்பின் அளவைக் குறைக்கும் ஆற்றலும் பூண்டுக்கு உண்டு.
 ஆரோக்கியமான உடல் எடை
உடல் எடை ஆரோக்கியமானதுதான் என்பதை பாடி மாஸ் இன்டெக்ஸ் மூலம் கணக்கிடலாம்.
பி.எம்.ஐ. அளவு 16.9-க்குக் கீழ் இருந்தால், குறிப்பிட்ட எடைக்கும் குறைவு என்று அர்த்தம். இதனாலும் சில பிரச்னைகள் வரலாம்.
17 முதல் 24.99 வரை இருந்தால், அது இயல்பு நிலை.
26 முதல் 29.9 வரை இருந்தால், உடல் பருமனுக்கு முந்தைய நிலை.
30-க்கு மேல் இருந்தால் உடல் பருமன். எனவே, உங்கள் பி.எம்.ஐ. 25 முதல் 29.9 வரைக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆண்களுக்கு இடுப்பின் சுற்றளவு 40 இன்ச்களாக இருக்க வேண்டும். இதுவே பெண்களுக்கு 35 இன்ச்கள் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
பெரியவர்களுக்கு உடல் எடை கூடுகிறது என்றால், அது பெரும்பாலும் கொழுப்பின் அளவு அதிகரிப்பாகத்தான் இருக்கும். இப்படி அதிகரிக்கும் கொழுப்பு உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிப்பு, சர்க்கரை நோய் போன்ற பிரச்னைக்கு வழிவகுத்து மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரித்துவிடுகிறது.
ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதன் மூலம், இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.
 டாக்டர்களின் பரிந்துரையைத் தவிர்க்காதீர்கள்
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு டாக்டர்கள் அளிக்கும் மாத்திரை, மருந்துகளை எக்காரணம் கொண்டும் தவிர்க்காதீர்கள். மேலும் சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். பயம் காரணமாக, எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாதீர்கள்.
 விழிப்பு உணர்வு அவசியம்
இதயநோயாளிகளின் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு காலத்தில் 40 வயதைக் கடந்தவர்களுக்கு மாரடைப்பு போன்ற பிரச்னைகள் வந்தன. இன்று 25 வயதினருக்குக்கூட வருகின்றன. இதற்கு மாறிவரும் வாழ்க்கை முறை முக்கியக் காரணம்.
அமெரிக்காவில் இதயநோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது.  மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதன் மூலமும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அலுவலக உணவுக் கூடங்களில் ஜங்க் ஃபுட் விற்பதில்லை என்று முடிவெடுத்ததன் மூலமும், இதயநோயை வெகுவாகக் குறைத்துள்ளனர். இந்தியாவில் இதுபோன்ற விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதன் மூலம், இதய நோயாளிகளின் எண்ணிக்கையை, பெருமளவுக் குறைக்க முடியும்.


 மன அழுத்தமும் இதய நோய்களும்
டாக்டர் எஸ்.ஆவுடையப்பன், மனநல மருத்துவர், சென்னை
 மன அழுத்தத்துக்கும் இதயநோய்க்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் மன அழுத்தம் அதிகரிக்கும்போது அது பிரச்னையை அதிகமாக்கிவிடும். நீண்டநாள் மன அழுத்தம் பிரச்னை இருப்பவர்களுக்கு மன அழுத்தத்துக்கு காரணமான 'அட்ரினல்’ மற்றும் 'கார்டிசோல்’ போன்ற ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கின்றன . ரத்தம் கட்டியாவதற்கு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை இந்த ஹார்மோன்கள் உண்டாக்குகின்றன என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
மன அழுத்தத்துக்கும் இதயத்துக்கும் உள்ள தொடர்பை நாம் அறிய வேண்டும் என்றால், நம் உடல் ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஆதிகாலத்தில் மனிதன் காட்டில் வேட்டையாடி வாழ்ந்தபோது, அவன் சந்தித்த மிக முக்கிய அச்சுறுத்தல் சிங்கம், புலி, பாம்பு போன்ற விலங்குகளின் தாக்குதல். அதைச் சமாளிக்க உருவானதே நம்முடைய உடலின் பல்வேறு செயல்பாடுகள். இன்றும் அவை அவ்வாறே இயங்குகின்றன.
எந்த வகைப் பிரச்னையாக இருந்தாலும், நம் உடலில் நிலவும் சமநிலை பாதிக்கும்போது, நம் உடல் அதை ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. உடனே, மூளையின் பாதுகாப்பு அமைப்பு வேலை செய்யத் தொடங்குகிறது. மூளையில் இருந்து அட்ரீனல் சுரப்பியைத் தூண்டும் சமிக்ஞை அனுப்பப்படுகிறது. அட்ரீனல் சுரப்பியின் ஹார்மோன் நம் உடலின் எல்லாத் தசைகளையும் தயார்ப்படுத்த உதவுகிறது! இதயத்தை வேகமாகச் செயல்பட வைக்கிறது. ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்கிறது. இதனால், உடலில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. எல்லாமும் சேர்ந்து இதயத்துக்குக் கூடுதல் பளுவை ஏற்படுத்துகின்றன.
  மன அழுத்தம் ஏற்படும்போது, அதை இதயம் இரண்டு வகைகளில் எதிர்கொள்கிறது.
1. திடீரென்று வரும் பாதிப்புகள்,
2. அதிகமான உணர்ச்சியின்போது வெளியேறும் ஹார்மோன் பாதிப்புகள். இதனால், இதயத்தின் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.
மிக முக்கியமான மற்றொரு வகை... சிறு சிறு எரிச்சல்கள், கோபங்கள், இயலாமைகள் போன்றவை இதயத்தைப் பாதிக்கும். தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னையும் நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால், உடலின் வளர்ச்சிதை மாற்றப் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது. கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. மீண்டும் மீண்டும் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. இதை 'க்ரானிக் ஸ்டிரஸ்’ என்பார்கள். மன அழுத்தம் அதிகரிக்கும்போது அதைக் குறைக்கிறேன் என்று பலர் சிகரெட் பிடிப்பார்கள், டீ அருந்துவார்கள், நொருக்குத் தீனி சாப்பிடுவார்கள். இவை அனைத்தும் இதயத்தைப் பாதிக்கின்றன.
 மன அழுத்தத்தைக் குறைக்க வழி
மன அழுத்தம், இதய நோய்க்கான முக்கிய வாய்ப்பு. உங்களுக்கு மன அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதைக் கண்டறியுங்கள். மன அழுத்தம் போக தினசரி குறைந்தது 5 முதல் 10 நிமிடங்களுக்கு கண்களை மூடி தியானம் செய்யுங்கள்; யோகா செய்யுங்கள்.  இதனால் மன அழுத்தம், ரத்த அழுத்தம் வெகுவாககுறையும்.

- பா.பிரவீன்குமார்,
படங்கள் : செ.திலீபன், தே.தீட்ஷித்