புதன், 30 டிசம்பர், 2009

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


அணைவருக்கும் எனது இனிய   புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள் .....
2010

புதன், 23 டிசம்பர், 2009

கிறிஸ்துமஸ்... கிறிஸ்துமஸ்...

கிறிஸ்துமஸ்... கிறிஸ்துமஸ்...


உலகெங்கும் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகைகளும் முக்கியமானது கிறிஸ்துமஸ். மனிதர்களை ரட்சிப்பதற்காகத் தேவமைந்தன் ஒரு சுடராக தொழுவத்தில் தோன்றிய நாள். உலகெங்கிலும் இதில் வித்தியாசமே இல்லை. ஆனால் கலாசாரத்துக்குக் கலாசாரம், நாட்டுக்கு நாடு கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறுசிறு வித்தியாசங்களுடன் கொண்டாடுகிறார்கள். அடிப்படை உணர்வு ஒன்றுதான்.
உலகெங்கும் வீடுகளிலும், தேவாலயங்களிலும் “நட்சத்திரங்களும்”, விளக்குகளும் பூத்து ஜொலிக்கும். கிறிஸ்துமஸ் மரங்கள் மினுக்கும் விளக்குகளை காய்த்துச் சிரிக்கும். தேவபுதல்வனை வரவேற்கும் பாடல்கள் ஒலிக்கும். இனிமை பூத்துக் கிடக்கும் இந்தக் குளிர்கால வேளையில் எங்கெங்கும் ஓர் உற்சாகம் மிதக்கும். உச்சக்கட்ட கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தின மாலையில்தான். அப்போது மக்கள் புத்தாடை அணிந்து பிரார்த்தனை செய்கிறார்கள். இயேசுவைப் போற்றிப் பாடுகிறார்கள். ஆடுகிறார்கள். வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று “கேக்” போன்ற இனிப்புகளுடன் விருந்தும், பரிசுப் பொருட்கள் பரிமாறலுமாக உள்ளங்கள் பூரித்துப் பொலிவு பெறுகின்றன. நூற்றாண்டுகளாக இந்தக் கொண்டாட்டம், இந்த உற்சாகம் தொடர்ந்து வருகிறது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தினரும் கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பேரார்வத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.
பெத்லகேமில் கிறிஸ்துமஸ்
இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில் உள்ள “சர்ச் ஆப் நேட்டிவிட்டி” யில் எளிமையான, இனிமையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெறுகிறது. மேற்குக் கரையில் உள்ள சிறுநகரான பெத்லகேமில் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் இருந்து வரும் கிறிஸ்தவர்களும், உள்ளூர் மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையைச் சேர்ந்து கொண்டாடுகிறார்கள். இதையொட்டி “சர்ச் ஆப் நேட்டிவிட்டி”, வண்ண வண்ணக் கொடிகளாலும், அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்படுகிறது. நாடகங்களுடன் கூடிய ஊர்வலம் ஒன்றும் நடத்தப்படுகிறது. இதில், அலங்கரிக்கப்பட்ட குதிரைகளில் அமர்ந்தவர்கள் முன்னிலை வகித்துச் செல்கிறார்கள். பெருவாரியான மக்கள், மத குருக்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கிறார்கள். தேவாலயத்தில் தெய்வக் குழந்தையின் சொரூபமும், அதன் பிறப்பைக் குறிக்கும் வெள்ளி நட்சத்திரமும் அமைந்திருக்கும் இடத்தில் ஊர்வலம் முடிவடைகிறது.கிறிஸ்துமஸை ஒட்டி பெத்லகேமில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்துவரின் இல்லத்திலும் முன் கதவில் “சிலுவை” தீட்டப்படுகிறது. தொழுவத்தில் இயேசு பிறப்புக் காட்சியை உருவாக்கி வைக்கிறார்கள்.
ஈரானில் கிறிஸ்துமஸ்
இஸ்லாமிய நாடான ஈரானிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இயேசு அவதரித்த போது இருந்த முப்பெரும் மனிதர்கள் வசித்த நாடாக ஈரான் கருதப்படுகிறது. ஈரானிய கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸை ஒட்டி டிசம்பர் 1-ம் தேதி முதல் நோன்பு இருக்கின்றனர். இக்காலத்தில் அவர்கள் அசைவம் உண்பதில்லை. இது “சிறுநோன்பு” எனப்படுகிறது. (ஈஸ்டருக்கு முந்தைய ஆறு வார காலத்தில் அவர்கள் “பெருநோன்பு” நோற்கின்றனர்.) கிறிஸ்துமஸ் அன்று தடபுடலான விருந்து உண்டு.
சீனாவில் கிறிஸ்துமஸ்
கம்யூனிச நாடான சீனாவில் கிறிஸ்தவம், அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்ட மதமல்ல. ஆனால் இங்கும் ஆண்டுக்காண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.
கிறிஸ்துமஸ் தாத்தா
கிறிஸ்துமஸ் காலத்தில் வெள்ளைத் தாடி, சிவப்புத் தொப்பி-ஆடையில் வரும் “சான்டா கிளாஸ்” எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா, இரவில் யாருக்கும் தெரியாமல் பரிசுப் பொருட்களை வீட்டுக்குள் எறிந்துவிட்டுப் போவதாக உலக மழலைகள் நம்புகிறார்கள். துருக்கி நாட்டைச் சார்ந்த “செயின்ட் நிக்கோலஸ்” என்ற பாதிரியார்தான் கிறிஸ்துமஸ் தாத்தா ஆனதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு வரலாற்று ரீதியான ஆதாரம் இல்லை என்று சொல்வோரும் உண்டு. ஆனாலும் அன்பின் அடையாளமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருவது சிறுவர்களை மகிழ்விக்கிறது.
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை
1843-ம் ஆண்டு சர்.ஹென்றி கோல் என்பவரால் முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பப்பட்டது. 1846-ல் ஜோசப் அன்டால் என்ற ஓவியர் ஆயிரக்கணக்கில் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டார். மக்கள் வாழ்த்து அட்டைகளில் வடிவு, நேர்த்தி, தொழில் நுட்பம் என பல்வேறு வகைகளிலும் கவரப்பட்டு கோடிக்கணக்கான மில்லியன் டாலர் வியாபாரப் பொருளாக வாழ்த்து அட்டை புழக்கத்திற்கு வந்தது. கிறிஸ்துமஸ் விழாவின் போது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்தும் அன்பும் அறிவித்து அன்புறவை புதுப்பிக்கும் பணியை வாழ்த்து அட்டைகள் செய்கின்றன.
கிறிஸ்துமஸ் நட்சத்திரம்
அரேபிய நாடான சிரியா நாட்டைச் சேர்ந்த மூன்று அரசர்களுக்கு இறை இயேசு பிறந்த இடத்தை காட்டிய வான் நட்சத்திரத்தை வாழ்த்தவும் அப்புதுமையை நினைவுபடுத்தவும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தொங்க விடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் குடில்
1223-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிரான்சிஸ் அச்சி என்ற புனிதரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இயேசுவின் பிறப்பை வெளிப்படுத்தும், நினைவூட்டும் சிலைகளின் வழிபாடே கிறிஸ்துமஸ் குடில் வழிபாடு எனப்படுகிறது. இறை இயேசு பிறந்த மாட்டுக் குடில், இறை இயேசுவின் பெற்றோர்கள் இறை இயேசு என அன்றைய பெத்லகேமை ஒவ்வொரு ஊரிலும் அமைப்பதே மாட்டுக் குடிலும், தேவபாலமும் என்ற கிறிஸ்துமஸ் குடிலின் அமைப்பாகும். பிறந்த இயேசு பாலனை முத்தமிட்டு மகிழும் உள்ளங்களில் அன்பு, அமைதி, சமாதானம் என்று இறை இயேசு பிறக்கிறார் என்கிற நம்பிக்கையை உருவாக்க அமைக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மரம்
மனித வழிபாட்டு முறைகளின் துவக்கம் இயற்கை வழிபாடாகும். மனிதன் இயற்கையை வணங்கினான். ஸ்காண்டி நேவியர்கள் மரத்தை வழிபடுபவர்கள். அவர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மனம் மாறினார்கள். கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளினபடி கலாச்சார மயமாகுதல், பண்பாடு மயமாகுதல் என்ற நெறிப்படி புதிய கிறிஸ்துவ மதத்திலும் ஸ்காண்டி நேவிய மக்களுக்கு மரத்தை வழிபட வழியிருந்தது. அவர்கள் மரங்களை மின் விளக்குகளால் அலங்கரித்து வணங்கினர். 500 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியர்கள் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க ஆரம்பித்தனர். 1841-ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட் தனது ராஜமுறை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் மரத்தை அறிமுகப்படுத்தினார்.
கிறிஸ்துமஸ் கேக்
ஒவ்வொரு விழாக்களுக்கும் ஓர் சிறப்பான உணவு விழா உணவாக கருதப்படும். கிறிஸ்துவம் மேற்கித்திய கலாச்சாரத்தின்படி கேக் கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பான உணவு பொருளாக இருக்கிறது.
கிறிஸ்துமஸ் பூ
மெக்சிகோவில் “போய்ன்செட்டியா” என்பது கிறிஸ்துமஸ் மலராகக் கருதப்படுகிறது. இதைப் “புனித இரவின் பூ” என்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் ஆடு
ஸ்வீடனில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் ஒன்றாக “ஜுல்பக்” என்ற வைக்கோலால் ஆன வெள்ளாடு இடம் பெறுகிறது.
கிறிஸ்துமஸ் நம்பிக்கைகள்
கிறிஸ்துமஸ் குறித்து கிறித்தவர்களிடம் வேறு சில நம்பிக்கைகளும் நிலவுகின்றன. அவை;
கிறிஸ்துமஸ் நாளில் பிறக்கும் குழந்தைக்குச் சிறப்பு அதிர்ஷ்டம் உண்டு.
கிறிஸ்துமஸ் நாளில் பனி பொழிந்தால் ஈஸ்டர் காலம் பசுமையாக இருக்கும்.


கிறிஸ்துமஸ் நாளில் நீங்கள் எத்தனை வீடுகளில் விருந்து உண்கிறீர்களோ, வரு கிற ஆண்டில் அத்தனை மாதங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும்.
கிறிஸ்துமஸ் கேக்குகளில் நாணயம், மோதிரம் போன்றவற்றை மறைத்து வைத்துப் பரிசளிப்பது மேலை நாடுகளில் வழக்கம். நாணயம் கிடைக்கப் பெற்றவர் பணக்காரராவர். மோதிரம் கிடைத்தால் விரைவில் திருமணமாகும் என்பது பொதுவான நம்பிக்கை.
கிறிஸ்துமஸ் மாலையில் நீங்கள் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் அடுத்த ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
கிறிஸ்துமஸ் நள்ளிரவில் பரலோகத்தின் கதவுகள் திறக்கின்றன. அப்போது அமரராவோர் நேராக பரலோகத்தை அடைவர்.
கிறிஸ்துமஸ் இரவில் ஏற்றப்படும் மெழுகுவர்த்திகள் மறுநாள் காலையில் அவை தானாக அணையும்வரை அணைக்கப்படக் கூடாது.
கிரேக்க நாட்டில், தொடர்ந்து வரும் ஆண்டில் தங்களைத் துரதிர்ஷ்டம் தீண்டக்கூடாது என்பதற்காக மக்கள் கிறிஸ்துமஸ் காலத்தில் பழைய காலணிகளை எரிக்கிறார்கள்.
உக்ரைனில், கிறிஸ்துமஸ் நாளில் வீட்டில் புதிதாக சிலந்தி வலை அமைத்திருந்தால் அது அதிர்ஷ்டகரமானதாகக் கருதப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் திருநாளுடன் தொடர்புடைய பிரபலமான ஒன்றாகும். பொதுவாக பசுமை மாறா ஊசியிலை கூம்பு மரங்கள் வீட்டுகுள்ளேயோ வெளியேயோ நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் விளக்குகளாலும் பிற கிறிஸ்துமஸ் அழகூட்டும் பொருட்களாலும் அழகூட்டப்படுவது வழக்கமாக உள்ளது. கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முன் சில நாட்களில் இம்மரத்தின் அழகூட்டப்படுவதைக் காணலாம். மரத்தின் உச்சியில் ஒரு முக்கோணம் அல்லது நட்சத்திர வடிவம் ஒன்றையும் சேர்த்துக் காணலாம் அல்லது சிறு சிறு நட்சத்திரங்கள் மின்னும். ஆமாம். இந்த கிறிஸ்துமஸ் மரம் எப்படி தோன்றியிருக்கும்?
எகிப்திய நாட்டு மக்களின் பழமையான கலாச்சாரங்களில் பசுமையை வழிபடுதலும் ஒன்றாய் இருந்தது. அதிலும் குறிப்பாக குளிர் காலங்களில் மரங்கள் எல்லாம் நிராயுதபாணிகளாய் இலைகளை இழந்து நிற்கையில் பேரீச்சை இலைகளை வெட்டி வந்து வாழ்வின் மறுமலர்ச்சி விழா, அல்லது சாவை வெற்றி கொண்ட விழா கொண்டாடுவது அவர்களுடைய வழக்கம்.
ரோமர்களின் கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய சாத்துர்னாலியா விழாவே விவசாயக் கடவுளை வழிபடும் விழா தான். அந்த நாளை பச்சை இலைகளுடனும், தாவரங்களுடனும் கொண்டாடுவதே அவர்களுடைய வழக்கம். வீடுகளையெல்லாம் இலை தோரணங்களால் அலங்கரிப்பது அவர்களுடைய விழாவின் சிறப்பம்சம்.
பிரிட்டனில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பச்சை இலைகளையும், கொம்புகளையும் வாசல்களில் தொங்க விட்டால் தீய ஆவிகள் அணுகாது என்னும் நம்பிக்கை ஆழமாக இருந்தது.
-இந்த நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கிறித்துவ மதத்தில், கிறிஸ்துமஸின் போது கிறிஸ்துமஸ் மரம் இடம் பெற்றிருக்கலாம் என்கின்றனர் சிலர்.
ஜெர்மனியே கிறிஸ்மஸ் மரத்தின் பிறப்பிடம் என்னும் சிறப்புப் பெருமையைப் பெறுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புனித போனிபேஸ் என்பவர் ஜெர்மனியில் கிறிஸ்தவ மத போதனைகளைச் செய்து கொண்டிருந்தபோது ஒரு கூட்டம் மக்கள் அங்குள்ள ஓக் மரம் ஒன்றை வழிபடுவதைக் கண்டார். அதைக் கண்டு கோபமடைந்த அவர் அந்த மரத்தை வெட்டி வீழ்த்த அதனடியிலிருந்து உடனடியாக ஒரு மரம் முளைத்து வளர்ந்ததாக கூறப்படும் கதை ஒன்றுள்ளது. இதனடிப்படையில்தான் கிறிஸ்துமஸ் மரம் தோன்றியது என்று சொல்வோரும் உண்டு.
சுமார் ஆயிரத்து ஐநூறாம் ஆண்டு மார்ட்டின் லூத்தர் கிங் ஒரு கிறிஸ்மஸ் காலப் பனி நாளில் நடந்து செல்கையில் சிறு சிறு பச்சை மரங்களின் மீது படர்ந்திருந்த பனி வெளிச்சத்தில் பிரமிக்க வைக்கும் அழகுடன் ஒளிர்வதைக் கண்டார். உடனே ஒரு ஃபீர் மரத்தை எடுத்து அதை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதைக் கிறிஸ்து பிறப்பு விழாவில் பயன்படுத்தினார். அன்றிலிருந்து கிறிஸ்மஸ் விழாக்களில கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றது என்றும் சொல்கிறார்கள்.
1521ல் பிரான்ஸ் இளவரசி ஹெலீனா தனது திருமணத்திற்குப் பிறகு ஒரு கிறிஸ்மஸ் மரத்தை பாரீஸ் நகருக்குக் கொண்டு வந்து விழா கொண்டாடியதால், அன்றிலிருந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றுள்ளது என்கிறது ஒரு வரலாற்றுச் செய்தி.
பதினைந்தாம் நூற்றாண்டுகளில் டிசம்பர் இருபத்து நான்காம் நாளை ஆதாம், ஏவாள் தினமாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது. விலக்கப்பட்ட மரத்தின் கனியைத் தின்றதால் பாவத்துக்குள் தள்ளப்பட்ட ஏதேன் காலத்தை நினைவு கூறும் விதமாக மரத்தை ஆப்பிள் போன்ற பழங்களால் அலங்கரித்து அந்த நாளைக் கொண்டாடி வந்தார்கள். பதினொன்றாம் நூற்றாண்டிலேயே இந்த வழக்கம் இருந்ததாக நம்பப்பட்டாலும், பதினைந்தாம் நூற்றண்டில் இந்த வழக்கம் இருந்தது என்று பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இப்படி கிறிஸ்துமஸ் மரம் குறித்து பல செய்திகள் சொல்லப்படுகின்றன.


ந‌ன்றி‍‍‍ .. முத்துக்க‌ம‌ல‌ம்....

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

நிறங்களும் அவற்றின் குணங்களும் ...



நிறங்களும் அவற்றின் குணங்களும் ...


உலகம் வண்ணமயமானது. நாம் அன்றாடம் உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாவற்றிலும் ஏராளமான வண்ணங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு குணமுண்டு. வெண்மை தூய்மையையும், சிவப்பு தடையையும் உணர்த்துவது இயல்பு. இவ்வாறே ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு தன்மையை உடையது. பொதுவாக அடிப்படை நிறம் என்பது நீலம், மஞ்சள், சிவப்பு ஆகிய மூன்றே. வெண்மை மற்றும் கருமை நிறத்தைத் தனியாகவே குறிப்பிடுகின்றனர். மற்ற வண்ணங்கள் அனைத்தும் இவற்றின் கலப்பினாலேயே உண்டாகின்றன. ஒவ்வொரு வண்ணத்திற்கும் நம் வாழ்வில் ஒரு பங்கு உள்ளது.


உளவியலில்(Psycology) நிறங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.இந்த வண்ணங்கள் நமது எண்ணங்களிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவை என்பதும் ஒருவர் விரும்பும் நிறத்தைக்கொண்டே அவர்கள் குணத்தையும் கணிக்க இயலும் என்பதும் உளவியலாளர்களின் கருத்து. உளவியலில், சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் மஞ்சளை அடிப்படை நிறங்கள் (Basic Colours) என்று சொல்லப்படுகிறது. நம் மீது தாக்கத்தை உண்டாக்கக்கூடிய நிறங்களாக அடிப்படை நிறங்களான மேற்கூறிய சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் இவற்றுடன் வெண்மை, கருமை, சாம்பல் நிறம்(Grey), ஆரஞ்சு, ஊதா(Violet), இளஞ்சிவப்பு (Pink) மற்றும் பழுப்பு(Brown) நிறங்கள் குறிப்பிடப்படுகின்றன.
பச்சை நிறமே பச்சை நிறமே: பசுமை நிறம் பொதுவாக சமநிலையையும் சூழலில் அமைதி நிலவுவதையும் குறிக்கிறது. பச்சை நிறத்தினைப் பார்க்கும்பொழுது நமது மனம் புத்துணர்ச்சி அடைகிறது. கண்களில் உள்ள லென்ஸ் நாம் பார்க்கும் ஒவ்வொரு நிறத்தின் அலைவரிசைக்கும் ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக்(Adjustment) கொள்ளுகிறது. ஆனால், பச்சை நிறத்திற்கு அப்படிப்பட்ட தகவமைப்பு ஏதும் தேவையில்லை. வான வில்லின் நடுவில் அமைந்துள்ள இந்நிறமானது சமநிலையைச் சுட்டுகிறது. ஓய்வு நிலையையும் செழிப்பையும் குறிக்கவும் பச்சை பயன்படுகிறது.
நீல நிறம், வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் : குளிர்ந்த நிறமாகக் கருதப்படும் நீலம், அறிவுத்திறனையும், நம்பிக்கையையும்,திறமையான தர்க்க ரீதியான செயல் பாட்டையும் குறிப்பிடுகிறது. நீல நிறம் மனதிற்கு இதமளிக்கக் கூடியதாகக் கருதப் படுகிறது. ஆழ்ந்த நீல நிறம், எண்ண ஓட்டங்களைச் சீராக்கி சிந்திக்கும் திறனை உயர்த்துகிறது. இள நீலமானது, மனதை அமைதிப்படுத்தி ஒருமுகப்படுத்துகிறது. அதிக அலை நீளமுள்ள நிறமாதலால், தொலைவில் உள்ள நீல நிறப்பொருட்கள் நம் கண்ணில் படுவதில்லை. இதனால்தான் போக்குவரத்து விளக்குகள் நீல நிறத்தைப் பயன்படுத்துவதில்லை. அதே அதிக அலை நீளம்தான், வானத்தை நீல நிறமாகத் தோன்றச் செய்யவும் காரணம். உலக முழுவதும் அதிக அளவிலான மக்கள் நீல நிறத்தை விரும்புவதாக ஆய்வுகள் கணிக்கின்றன.


வலிமையின் நிறம் சிவப்பு: வறுமையின் நிறம் சிவப்பா என்று நமக்குத் தெரியாது. ஆனால் வலிமையின் நிறம் சிவப்புதான். ஆம், சிவப்பு வலிமையையும் துணிச்சலையும் ஆண்மை, ஆற்றல் ஆகியவற்றையும் குறிக்கும் நிறமாகக் கருதப்படுகிறது. தூண்டுதலை உண்டாக்குகிறது. ஒரு அறையில் உள்ள பொருட்களில் சிவப்பு வண்ணப் பொருள்தான் நமது கவனத்தினை முதலில் ஈர்க்கிறது. எனவேதான் போக்குவரத்து சைகைகள், அபாய எச்சரிக்கைகள் முதலியவை சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகின்றன. 'செய் அல்லது செத்து மடி' என்ற உணர்வை உண்டாக்குவதும், நேரம் வேகமாக ஓடுவது போன்ற உணர்வைத் தோற்றுவிப்பதும் சிவப்பின் பிற தன்மைகள்.
மஞ்சள் மகிமை: மஞ்சள் உணர்வு பூர்வமான நிறம். தன்னம்பிக்கை, ஆக்க பூர்வ சிந்தனைகள், நட்புணர்வு, நேர்மறைச் சிந்தனை ஆகியவற்றின் குறியீடாகக் கருதப்படுகிறது. சிவப்பு நிறம் போலவே வலிமையையும் உணர்வுகளின் தூண்டுதலையும் கூட்டுவது மஞ்சளின் தன்மை. உத்வேகத்தை அதிகரிப்பதோடு நேர்மறை உணர்வுகளை ஏற்படுத்த வல்லது. ஆனால் அளவுக்கதிகமான மஞ்சள் நிறம் அல்லது தவறான வண்ணங்களுடன் மஞ்சளின் இணைப்பு எதிரான பலனைத் தரக்கூடியது. அது நமது சுய மதிப்பைக் (Self Esteem) குறைக்கின்ற அல்லது பதட்டத்தையும் பயத்தையும் உண்டாக்கும் காரணியாகிவிடுகிறது.

ஆழமான ஊதாவே: ஆன்மீக உணர்வுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இந்நிறம் நிறைவு, சொகுசு , தரம் ஆகியவற்றைக் குறிப்பதாகவும் விளங்குகிறது. ஊதா நிறம் ஆழ்நிலை தியானத்திற்கு உதவுகிறது. ஆன்மீக உணர்வைத் தூண்டக்கூடிய இந்நிறம் சீரான சிந்தனையையும், ஆழ்ந்த எண்ணங்களையும் ஊக்குவிக்கிறது.வானவில்லின் புறத்தில் கடைசியாக இருக்கும் நிறமாதலால், காலம்(Time), வெளி(Space)மற்றும் பிரபஞ்சம் (Cosmos) இவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அதே சமயம் அதிகப்படியான ஊதாநிறப் பயன்பாடு தாழ்வு மனப்பான்மை, அழுத்தம், வெளிப்படையாகப் பேசாமை (Introvert) போன்றவற்றை ஏற்படுத்தக் கூடியது. அதே போல் சரியான வண்ணக்கலவையாக இல்லாவிடில் அது அருவருக்கத் தக்கதாகத் தோற்றமளிக்கிறது.


ஆர்வம் தரும் ஆரஞ்சு: செயல்பாட்டைத் தூண்டக் கூடிய வண்ணம் ஆரஞ்சு. வளமை, பாதுகாப்பு, ஆர்வம், கதகதப்பு, வேடிக்கை ஆகியவற்றின் குறியீடு எனவும் ஆரஞ்சு வண்ணம் கருதப்படுகிறது. சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தின் கலவையால் ஆரஞ்சு உருவாவதால், செயல் திறன், உணர்வுகள் இரண்டையும் தூண்டும் தன்மையுடையதாக உள்ளது இந்த வண்ணம். மனம் மிகுந்த சோர்வாக இருக்கும்பொழுது ஆரஞ்சு வண்ண உடை அணிவதால், மனச்சோர்வில் இருந்து விடுபட இயலும். அதே நேரம், இவ்வண்ணத்தை கறுப்புடன் சேர்த்துப் பயன் படுத்துகையில் இது எதையோ இழந்தது போன்ற உணர்வைத் தோற்றுவிப்பதாக மாறிவிடுகிறது. மேலும் அதிகப் படியான ஆரஞ்சு வண்ணம், அறிவீனத்தைக் (நீலத்திற்கு எதிரான தன்மை) காட்டுகிறது.

திங்கள், 7 டிசம்பர், 2009

ர‌ஜினிகாந்த் பிற‌ந்தநாள் டிசம்பர் 12



ர‌ஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாசி ராவ் காயக்வாட்  ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் சூப்பர் சுடார் என்றும் அழைக்கின்றனர்.
இளமை
ர‌ஜினிகாந்த் டிசம்பர் 12 1949 அன்று இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.

திரைப்படங்களில்..
நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ர‌ஜினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராசா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை ர‌ஜினிகாந்த் நிரூபித்தார். ரசினிகாந்து நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான சுரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமய புனிதரான ராகவேந்திரரின் வாழ்க்கை பற்றியது.
1980களில் ர‌ஜினிகாந்த் நடித்து வெளிவந்த வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்சா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவநத்த பாபா (திரைப்படம்) வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இவருடைய நண்பரும், மற்றொரு சிறந்த நடிகருமான கமலஆசன் பெரும்பாலும் அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடிக்கையில்  ர‌ஜினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாகவே உள்ளன. தமிழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி ஆகிய மொழிகளிலும் 170 திரைப்படங்களில் ரசினிகாந்து நடித்துள்ளார்.

ர‌ஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரசினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு சப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.
ஆன்மீக ஈடுபாடு...
ரசினிகாந்து ஒரு ஆன்மீகவாதி ஆவார். சிறு வயது முதல் ராகவேந்திரர், ராமகிருச்ணர் போன்றோரின் போதனைகளை பின்பற்றி வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் அடிக்கடி இமய மலையில் உள்ள ரிசிகேச் போன்ற இடங்களுக்கு சென்று ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அரசியல் தொடர்பு
1990களில் ர‌ஜினிகாந்த் நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்றதன் காரணங்களுள் ஒன்றாக கூறப்படுகிறது. எனினும், இக்காரணி தேர்தல் புள்ளியியலாளர்களால் அறுதியிட்டுக் கூறப்படவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில், ரசினிகாந்து எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ பொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை. 2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ச.க தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், ரசினிகாந்து அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார். ரசினி 03நவ08 அன்று ரசிகர்களை சந்தித்து பேசினார்.ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்,அவரின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது, எந்திரன் படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாக கோரினர்.
குடும்பம்
16 பிப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். பின்னர் இருவரும் ஐசுவர்யா, சௌந்தர்யா ஆகிய இரு மகள்களைப் பெற்றனர். இவருடைய மூத்த மகள் ஐசுவர்யா, 2004 ஆம் ஆண்டு இளம் தமிழ் திரைப்பட நடிகரான தனுசை மணந்தார்

ஓஷோ பிற‌ந்த‌நாள் டிசம்பர் 11,


ஓஷோ  எனப் பரவலாக அறியப்படும் ரஜ்னீஷ் (Rajneesh Chandra Mohan Jain, டிசம்பர் 11, 1931 - ஜனவரி 19, 1990) இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளரான இவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெருமளவு உரையாற்றினார். இவரது பேச்சுக்கள் பெருமளவு நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. புத்தர், கிருஷ்ணர், குரு நானக், இயேசு, சாக்கிரட்டீஸ், ஜென் குருக்கள் போன்ற பல்வேறு சமய ஞானிகளின் பங்களிப்புத் தொடர்பாகவும் இவர் கருத்துக்களைக் கூறியுள்ளார். இவரது பேச்சுக்களின் போது கூறிய குட்டிக்கதைகள் பிரபலமானவையாகும்.
ரஜனிஷ் சந்திர மோகன் ஜெயின் டிசம்பர் மாதம் 11 முதல் 1931 -ஜனவரி 19, 1990 வரை வாழ்ந்தார். 1960 முதல் என்ற ஆச்சர்ய ராஜனீஷ் என அறியப்பட்டார். 1970 மற்றும் 1980 களில் பகவான் ஸ்ரீ ரஜனிஷ் என தன்னைத் தானே அழைத்துக் கொண்டார்.1989 ல் ஓஷோ எனவும் இந்திய ஆன்மிக குருவாகவும் அறியப்பட்டார்.
ஒரு தத்துவ விரிவுரையாளராக 1960 களில் இந்திய முழவதும் சென்று சொற்பொழிவுகள் நடத்தினார்.பொதுவுடைமை,மஹாத்மா காந்தி , மற்றும் நிலையான ஒழுங்கமைப்பு முறையுள்ள மதங்களைப் பற்றிய அவரின் மாறுபட்ட கருத்துக்களினால் எதிர்ப்புகள் தோன்றின.பாலுணர்வு குறித்த அவரின் வெளிப்படையான வாதங்களினால் அவர் செக்ஸ் குரு என உலக பத்திரிக்கைகள் அவரை மேற்க்கோள் காட்டின.[1]1970-ல் சிறிது காலம் மும்பையில் தங்கி இருந்தார்.
நயோ சந்நியாசியகள் என அழைக்கப் படும் சீடர்களை முதன் முதலாக தெரிவு செய்தார்.தன்னை ஒரு முழுமையான ஆன்மீக ஆசிரியராகவும் நிலைப் படுத்திக் கொண்டார்.அவரின் ஞான சொற்பொழிவுகளில் சமய பழக்க வழக்கங்களைப் பற்றியும்,உலகெங்கிலும் உள்ள பல்வேறு தத்துவர்களையும், சமயங்களையும் பற்றி விவாதித்தார். 1974 - ஆம் ஆண்டு புனே (பூனா) வுக்கு சென்று அங்கு தனது முதல் ஆசிரமத்தை துவங்கி எண்ணிலடங்கா வெளிநாட்டினரை ஈர்த்தார் .அவரின் சவாலான சொற்பொழிவுகளும்,சாதகமான சூழலும் அவர் முறைப் படுத்தித் தந்த நவீன தியான உக்திகளும் அவரை உலக அளவில் பிரபலமாக்கின. இந்தியா அரசுக்கும் சுற்றி இருந்த சமுதயத்திற்கும் 1970 களில் மிகப் பெரிய பிரச்சனையாக காட்சி அளித்தார்.
அவரின் சீடர்களால் அமெரிக்காவில் உலக அளவில் தங்களுக்காக உருவாக்கப்பட்ட சமூகத்திற்கு 1981- ம் ஆண்டு இடம் பெயர்ந்தார்.அது பின்னாளில் ஒரேகான் மாகாணத்தின் ரஜ்னீஸ்புறமாக அறியப் படுகின்றது .

விஸ்வநாதன் ஆனந்த் பிற‌ந்த‌நாள் டிசெம்பர் 11


விஸ்வநாதன் ஆனந்த் (பிறப்பு: டிசெம்பர் 11, 1969, சென்னை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் தற்போதய உலக சதுரங்க வெற்றிவீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி ஜூலை 2006ல் ஆனந்த் 2779 புள்ளிகள் பெற்றார். ஆனந்த் மாத்திரமே 2800 புள்ளிகளைத் தாண்டிய நால்வரில் ஒருவர். இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்.
சதுரங்கமும் ஆனந்தும்
இந்திய செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் குறிப்பிடத்தக்கவர். 14 வயதில் 1983இல் தேசிய சந்துரங்க சாம்பியன் ஆக 9/9 புள்ளிகள் பெற்றார். 15 வயதில் 1984இல் அனைத்துலக மாஸ்டர் (International Master) விருதினைப் பெற்றார். 16 வயதில் தேசிய வெற்றிவீராக மேலும் இருதடவை இந்தவிருதைப் பெற்றார். இவர் ஆட்டங்களை வேகமாக ஆடி லைற்றினிங் கிட் (lightning kid - மின்னல் வேகக் குழந்தை) என்ற பட்டப் பெயரையும் பெற்றார். 1987இல் உலக இளநிலை வெற்றிவீரரான முதலாவது இந்தியரானார்.விஷி எனச் செல்லமாக இவரது நண்பர்களால் சில சமயம் அழைக்கப் படுகின்றார்.
வெல்வதற்கான வாய்புக்களை மயிரிழையில் நழுவவிட்ட ஆனந்த் இறுதியாக 2000ஆம் ஆண்டில் தெகிரானில் அலெக்சி சிறோவ்-ஐத் 3.5 - 0.5 என்ற ரீதியில் தோற்கடித்ததன் மூலம் தமதாக்கிக் கொணடார். எனினும் அவர் 2002இல் இடம்பெற்ற நொக்-அவுட் ஆட்டத்தில் ருஸ்லான் பனமரியோவிடம் தோற்றார்.
உலகச் சதுரங்க வெற்றிவீரர்
விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோ நகரில் செபம்பர் 2007 இல் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் பங்குபற்றினார். செப்டம்பர் 29, 2007 இல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் 9/14 புள்ளிகள் பெற்று புதிய உலக வெற்றிவீரர் ஆனார். இவர் முன்னாள் உலக வெற்றிவீரர் விளாடிமிர் கிராம்னிக்குடன் 2008 அக்டோபரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.
2003 அதிவேக சதுரங்க வெற்றிவீரர்



2000 சதுரங்க வெற்றிவீரர்


1987 உலக இளநிலை சதுரங்க வெற்றிவீரர், கிராஸ்மாஸ்டர்


1985 இந்திய தேசிய வெற்றிவீரர் - 16 வயதில்


1984 தேசிய மாஸ்டர் - 15 வயதில்


1983 தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர், 14 வயதில்
சதுரங்க ஆஸ்கார் (1997, 1998, 2003 மற்றும் 2004)



பத்மபூஷண் (2000)


பிரித்தானிய் சதுரங்க கூட்டமைப்பின் Book of the year விருது 1998.


ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (1991-1992)


தேசியக் குடிமகனுக்கான பத்மசிறீ விருது (1987)


தேசிய விளையாட்டு வல்லுனருக்கான சதுரங்க விருது (1985).

மகாகவி பாரதி பிற‌ந்த‌நாள் டிசம்பர் 11 ...


மகாகவி பாரதி பிற‌ந்த‌நாள் டிசம்பர் 11...
சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.
தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் சமஸ்தானத்தால் வழங்கப்பட்டது.
வாழ்க்கைக் குறிப்பு
1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.


தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
இலக்கியப் பணி
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,


வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி
தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுணைந்த கவிஞாயிறு. சம்ஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
பாஞ்சாலி சபதம்
ஆகியன அவர் படைப்புகளில் சில.
பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்..
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இத்ழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கினைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.
பெண்ணுரிமைப் போராளி
தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுகானவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.
பாஞ்சாலி சபதம்
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.

உலக மனித உரிமைகள் நாள்


உலக மனித உரிமைகள் நாள்
உலக மனித உரிமைகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.

வியாழன், 3 டிசம்பர், 2009

கொடி நாள் டிசம்பர் . -7 .


கொடி நாள் டிசம்பர் . -7 .


நமது நாட்டை பாதுகாப்பதில் ராணுவத்தினருக்கு அதி முக்கிய பங்கு உண்டு . எனவே , நாட்டின் க்ண்னாக போற்றப்படும் ராணுவத்தினரை பாதுகாப்பது அவசியம் என்று பல தரப்பினர் வலியுறுத்தினர் .இதயடுத்து ராணுவத்தினர் நலன் காப்பது குறித்து முடிவு செய்ய ராணுவ அமைக்க்சகத்தின் சார்பில் 1949 ம் ஆண்டு ஆகஸ்ட் 28 ம் தேதி ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது .இந்த கமிட்டி பல மட்டங்களில் ஆலோசனையில் ஈடுபட்டது .
அண்டை நாட்டுடன் போரில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவுதல் , போரில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உதவுதல் , ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு உதவுதல் ஆகிய 3 நோக்கங்களை கொண்டு கொடி நாள் ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது .

அதன்படி 1949 ம் ஆண்டு இதே நாள் முதல் கொடி நாள் அறிவிக்கப்பட்டது .நிதி வசூலில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை ஈடுபடுகின்றன .ராணுவத்தின் ஒரு அங்கமான கேந்தர்ய சைனிக் போர்டு என்ற அமைப்பின் மூலம் இந்த நிதி வசூல் பராமரிக்கப்படுகிறது .

புதன், 2 டிசம்பர், 2009

டிசம்பர் 3 அனைத்துலக ஊனமுற்றோர் நாள்


அனைத்துலக ஊனமுற்றோர் நாள் (International Day of Disabled Persons) என்பது ஆண்டு தோறும் டிசம்பர் 3 ஆம் நாளன்று உலக நாடுகளால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக மக்கள் அனைவரும் ஊனமுற்றோரின் பிரச்சனைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் உருவானதே இந்த நாள்.
ஐக்கிய நாடுகள் அவை 1981 ஆம் ஆண்டை உலக ஊனமுற்றோர் ஆண்டாக முதன் முதலில் அறிவித்தது. அதன் பின்னர் 1982 இன் டிசம்பர் 3-ம் நாளை அனைத்துலக ஊனமுற்றோர் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் சர்வதேச ஊனமுற்றோர் தினம் என அனுசரிக்கப்படுகிறது.
உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.