வெள்ளி, 3 ஜூன், 2016

உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 05


உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.

நோக்கம் 
சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.

நீதியான, தாங்குநிலை சார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதில் மக்கள் தங்கள் நேரடியான பங்களிப்பைச் செலுத்துவதற்கு அவர்களை ஊக்குவித்தல், சூழல் தொடர்பான விடயங்களில், மக்களுடைய மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய பொறுப்பு சமுதாயங்களுக்கு உண்டு என்ற புரிந்துணர்வை உருவாக்குதல், பாதுகாப்பானதும்,வளமுள்ளதுமான எதிர்காலத்தை பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற மக்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காகக் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளை இந்த நிகழ்வுகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன.

வரலாறு
இது ஐநாவின் பொது அவையினால் 1972 ஆம் ஆண்டில்[1] மனித சூழலுக்கான ஐநா மாநாடு நடத்தப்பட்ட நாளில் ஏற்படுத்தப்பட்டது.

உலகச் சுற்றுச்சூழல் நாள் நிகழ்ச்சிகள்
பணியிடத்தில் ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்க தனி ஒவ்வொருவருக்கும் ஊக்கமூட்ட 2007இல் இருந்து சிங்கப்பூரில் சூழல் செயற்பாட்டு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

2015 சூன் 5ஆம் நாளன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி புதுதில்லி, பந்தயச் சாலை, 7ஆம் எண்ணிட்ட தம் இல்லத்தில் ஒரு மரக்கன்றை நட்டார்.

உலகச் சுற்றுச்சூழல் நாள் பாடல்

புவியில் வாழும் உயிரினங் களோடும்
கருப்போ சிவப்போ பழுப்பு நிறமோ
மாந்த ரெல்லாம் ஓர்நிரை யாவோம்.
மாந்தர் நாமே நம்குடில் பூமி!


"புவிப் பண்" அபே கே என்பவரால் எழுதப்பட்டு 2013 சூன் மாதத்தில் உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு இந்திய அமைச்சர்கள் கபில் சிபல், சசி தரூர் ஆகியோரால் புதுதில்லியில் வெளியிடப்பட்டது.[7] ஐநா பொது அவையின் அலுவல் மொழிகளான அரபு, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம் ஆகிய ஆறு மொழிகளில் புவியின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றைவிட இந்தி, நேபால மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

கருப்பொருள்கள்
ஒவ்வோராண்டும் உலகச் சுற்றுச்சூழல் நாளுக்கும் ஒரு தனியான முழக்கத்தைத் தேர்ந்தெடுத்து கொண்டாடப்பட்டது.இந்த முழக்கங்களைப்போலவே ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு கருப்பொருளும் உண்டு. 2009-2015 வரை பரப்பிய கருப்பொருள்கள் கீழே தரப்பட்டுள்ளன.

2015
’ஏழு பில்லியன் கனவுகள்;ஒரே கோள்; விழிப்போடு நுகர்’.

2014
கருப்பொருள்:-'சிறு தீவுகளும் காலநிலை மாற்றமும்',
முழக்கம்:-'குரலை உயர்த்து, கடல் மட்டத்தையல்ல.

2013
2013இன் கருப்பொருள் சிந்தி. உண். சேமி.

பரப்புரை ஒவ்வோராண்டும் பேரளவில் வீணாக்கப்படும் உணவுப் பொருள்களின்பால் கவனத்தைக் குவித்தது. இந்த உணவு சேமிக்கப்பட்டால்,ஏராளமானோர்க்கு உணவு வழங்கி கரிமக் கால்தடத்தையும் குறைக்கமுடியும். உணவுப் பொருளை விரயமாக்கும் வாழ்முறைமை உள்ள நாடுகளின்பால் குறிப்பான கவனம் திருப்பப்பட்டது. உலகளாவிய உணவு விளைச்சலால் சூழலின் மீது ஏற்படும் ஒட்டுமொத்தத் தாக்கத்தைக் குறைக்க மக்கள் உண்ண விரும்பும் உணவின் தேர்வை அறிவிக்கும் உரிமையைப் பெறவைக்கும் குறிக்கோளையும் முன்வைத்தது.

2012
2012 உலகச் சுற்றுச்சூழல் நாள் கருப்பொருள் பசுமைப் பொருளாதாரம்: நீயும் உள்ளாயா?

இந்த கருப்பொருள் மக்களை தம் செயல்பாடுகளையும் வாழ்க்கைப்பாணியையும் சீர்தூக்கிப் பார்த்து பசுமைப் பொருளாதாரத்தில் அவை எப்படி பொருந்துகின்றன எனக் கருதுமாறு கேட்டுக்கொள்ளச் செய்கிறது. இந்த ஆண்டின் விழாக்கலை விருந்தோம்பிய நாடு பிரேசில் அகும்.

2011
2011இன் கருப்பொருள் காடுகள்-உன் சேவையில் இயற்கை. கடற்கரைத் தூய்மிப்பு, கண்காட்சிகள், திரைப்பட விழாக்கள், சமுதாய நிகழ்ச்சிகள், மேடைஇசைக் கொண்டாட்டங்கள் என பல்லாயிரம் செயற்பாடுகள் உலகளாவிய நிலையில் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டின் நிகழ்ச்சியைப் பரந்து விரிந்த இந்தியா முன்னின்று நட்த்தியது. உயிரியற் பல்வகைமை.[11]

2010
'பல உயிரினங்கள்; ஒரேகோள்; ஒரே எதிகாலம்.', என்பதே 2010இன் கருப்பொருள்.

2010 உலக [[உயிர்ப்பன்மைய ஆண்டாகக் கொண்டாடப்பட்டது. சமுதாய நிகழ்ச்சிகள், மேடைஇசைக் கொண்டாட்டங்கள் என பல்லாயிரம் செயற்பாடுகள் உலகளாவிய நிலையில் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டின் நிகழ்ச்சியை ருவாண்டா முன்னின்று நடத்தியது.[12]

2009
2009இன் உலகச் சுற்றுச்சூழல் நாளின் கருப்பொருள் || 'உன்கோள் உன்னைக் கேட்கிறது – காலநிலை மாற்றத்தை மாற்ற இணை ', உலகச் சுற்றுச்சூழல் நாள் பாடலாக மைக்கேல் ஜாக்சனின் ’புவிப் பாடல்’ அறிவிக்கப்பட்ட்து. '.இது மெக்சிகோவில் நடத்தப்பட்டது.

1972 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் உலகசுற்றுச்சூழல் தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.‘தீவு நாடுகளும், காலநிலை மாற்றமும்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றுச் சூழல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.உங்கள் குரலை உயர்த்துங்கள் கடல் மட்டதுக்கு அல்ல' என்ற வாசகத்தை இந்த ஆண்டு(2014) ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் சுற்றாடல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றுச் சூழல்லைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.

இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது.

சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன. மேற்குலகில் சூழலியல் அரசியலின் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் பெற்று பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன.

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன்.

சுற்றாடலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன. புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பாரிய விளைவுகளாகும். மேலும் சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஸ்ணமடைதல், ஓசோன் படை பாதிப்பு, நன்னீர் வளம், சமுத்திரம், கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு, வனாந்திரமாக்கல், உயிரியல் மாறுபாடு , உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம், இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மாத்திரம் நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்குகளை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் என்று இன்னும் கூட பலர் நினைக்கிறார்களோ என்று வியக்கவேண்டியிருக்கிறது. சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக பிறந்த சுற்றுச் சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உணர்வு காணப்படுகின்ற போதிலும், அரசியல் தலைமைத்துவங்கள் இதுவிடயத்தில் போதியளவு அக்கறை காண்பிக்காததால் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.

சுற்றுசூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது மனிதன் உணர்ந்து கருமத்தை ஆற்ற வேண்டியதும் முக்கியமானதாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

     இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பல வகைகளில் மாசுபட்டு கிடக்கிறது. இந்த மாசடைதலை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். முதலாவது வளிமண்டலம் மாசடைதல், இரண்டாவது நிலம் மாசடைதல், 3-வது நீர் மாசுபடுதல். இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், சோலைகள், கடற்கரைகளில் ஏற்படும் மாசுபாடுகள் சுற்றுச்சூழலை மட்டுமின்றி மனித, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச் சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமைந்துவிடுகிறது.

      நவீன விஞ்ஞான, தொழில் நுட்ப, கைத்தொழில் துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. ரசாயனக்கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது.

    மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலேயான உறவு மிகவும் முக்கியமானதாகும். ஒரு மரம் தன் வாழ்நாளெல்லாம் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேலானது என கணக்கிடப்பட்டுள்ளது. மனித வாழ்வுக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை பலரும் உணருவதில்லை.

    மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மரங்களை அழித்து உலகை பாலைவனமாக்கி வருகிறோம். உலகில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

          வாகனத்தின் என்ஜினில் எரிபொருள் எரிந்து புகை வெளிப்படுகிறது. இதில் கரித்துகள், கார்பன் மோனாக்சைடு, கார்பன்-டை-ஆக்சைடு, நீராவி, சல்பர் டை ஆக்சைடு, காரீயம் ஆகியவை கலந்திருக்கும். இவற்றுள் கார்பன்- மோனாக்சைடும், காரீயமும் தீங்கு விளைவிக்க கூடியவை. இவை நச்சுதன்மை வாய்ந்தவை.

       வாகனங்கள் வெளியிடும் புகையில் கார்பன் மோனாக்சைடின் அளவை கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் செய்யப்படுகின்றன. இது 4.5 பிபிஎம் அளவுக்கு குறைவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வாகனத்தை பழுது பார்க்க வேண்டும். கார்பன் அளவு அதிகமானால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும்.

       இதேபோல சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பிளாஸ்டிக் திகழ்கிறது. குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து விடலாம் என்றாலும் அதிலிருந்து பரவும் நச்சு வாயுக்கள் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடிய பல அபாயகர நோய்களை விளைவிக்கும்.இந்த நச்சு வாயுக்களால் மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? என்பது நியாயமான கேள்வி. அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத் தக்கூடாது என்பது நடை முறைக்கு உகந்தது அல்ல.ஆனால் நாம் வைராக்கியம் கொண்டால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க முடியும். பூமி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பாகும்.

பூமி சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். மனிதர்கள் உள்பட பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த பூமி அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகிறது. இத்தகையை சிறப்பு வாய்ந்த பூமி சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்படுகிறது.

எனவே உஷ்ணமடைதல், காலநிலை மாற்றம், ஓசோன் படலாம் பாதிப்பு, கடல், கடற்கரை பிரதேசங்கள், காடு ஆகியவை அழிப்பு, உயிரியல் மாறுபாடு, உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் ரசாயன பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

சுற்றுச்சுழலை பாதுகாப்போம்..எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையின் அதிசயங்களினை விட்டுச்செல்வோம் என இந்த நாளில் சூளுரைப்போம்.

புதன், 1 ஜூன், 2016

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 03


முத்துவேல் கருணாநிதி, இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி  (பிறப்பு ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இளமைப்பருவம்  
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் சூன் 3, 1924ல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.

கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்[சான்று தேவை]. நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தனது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர்களின் கழகம்" என்ற அமைப்பாக உருபெற்றது.

அரசியல்
மாணவர் மன்றம்
கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர்களை மாணவ நேசன் என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். அவ்விளைஞர் அணியை பின் மாணவர் அணியாக தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற பெயரில் உருவாக்கினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற நிலையை ஏற்படுத்தினார். கருணாநிதியும் அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசை வாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலைகளிலும் ஈடுபட்டனர்.

முரசொலி நாளிதழ் 
இந்த நிலையில் அவர் துண்டுப் பதிப்பாகத் தொடங்கிய முரசொலி செய்தித்தாளாக, கட்சிப் பத்திரிகையாக உருவெடுத்தது. முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை தன் மாணவர் மன்ற அணித்தோழர்களான அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோருடன் கொண்டாடினார்.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் 

1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார்: "மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும்இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று அவர் கூறினார். அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. நடுவண் அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.

சட்டமன்ற உறுப்பினர்
போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றார். 1957ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

ஆண்டு தொகுதி வாக்கு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்கு வாக்கு வேறுபாடு
1957 குளித்தலை 22785 கே. எ. தர்மலிங்கம் காங்கிரசு 14489 8296
1962 தஞ்சாவூர் 32145 பரிசுத்த நாடார் காங்கிரசு 30217 1928
1967 சைதாப்பேட்டை 53401 எஸ். ஜி. வினாயகமூர்த்தி காங்கிரசு 32919 20482
1971 சைதாப்பேட்டை 63334 என். காமலிங்கம் காங்கிரசு 50823 12511
1977 அண்ணா நகர் 43076 ஜி. கிருஷ்ணமூர்த்தி அதிமுக 16438 16438
1980 அண்ணா நகர் 51290 எச். வி. ஹண்டே அதிமுக 50591 699
1989 துறைமுகம் 41632 கே. எ. வகாப் முஸ்லீம் லீக் 9641 31991
1991 துறைமுகம் 30932 கே. சுப்பு காங்கிரசு 30042 890
1996 சேப்பாக்கம் 46097 S. S. நெல்லை கண்ணன் காங்கிரசு 10313 35784
2001 சேப்பாக்கம் 29836 தாமோதரன் காங்கிரசு 25002 4834
2006 சேப்பாக்கம் 34188 தாவுத் மியாகான் சுயேச்சை 25662 8526
2011 திருவாரூர் 109014 எம்.இராசேந்திரன் அதிமுக 58765 50249
2016 திருவாரூர் 121473 பன்னேர்செல்வம் அதிமுக 53107 68366 மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசம்
2016 தேர்தல்[தொகு]
2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். வேட்பு மனுவில் தனக்கு அசையா சொத்து எதுவும் இல்லை என்றும், தனது மனைவி மற்றும் துணைவியாருக்கு ரூ. 62.99 கோடி அளவிற்கு சொத்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தனது துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு வங்கிக் கடன் ரூ. 11.94 கோடி உள்ளது என்றும், தனது பெயரில் வங்கிக் கடனோ, காரோ, வேளாண் நிலமோ இல்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த போது தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ரூ.44 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருந்ததாக தெரிவித்திருந்தார்.

பொருளாளர் 
1957 ஆம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.

1967 இல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. நாவலர் இரா. நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராகவும், கருணாநிதி பொருளாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றனர்.

தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.

1969–1971 --கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி
1971-1976—இரண்டாவது முறையாக
1989–1991 --எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி
1996-2001—நான்காம் முறை ஆட்சி
2006-2011—ஐந்தாம் முறை ஆட்சி
விமர்சனங்கள்[தொகு]
1972 விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.
 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது. சர்க்காரியா கமிசன்  1973 ல் மிசா 1975 ஜூன் மாதத்தில் நெருக்கடிக்கால அறிவிப்பை அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அமல்படுத்தியதால் 1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள்.சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள் காங்கிரஸ் (I) ஐ கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது.

தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது..

2008–2009 இல் இவரது ஆட்சியின் போதே பெரும் ஈழத்தமிழர் இனப்படுகொலை இலங்கையில் நடந்தது. நடுவண் அரசு இவரது கட்சியின் ஆதரவிலேயே ஆட்சியில் இருந்தும் இவர் எந்தவித பலனைத் தந்த நடவடிக்கைகளை எடுக்காதற்காக அப்பொழுதும் பின்னரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதே காலப் பகுதியில் கருணாநிதியின் பிற குடும்பத்தாரும் ஊழல் விவகாரங்களிலும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

குடும்பம் 
மனைவிகள்

பத்மாவதி
ராசாத்தி அம்மாள்
தயாளு அம்மாள்
மகன்கள்

மு. க. முத்து
மு. க. அழகிரி
மு. க. ஸ்டாலின்
மு. க. தமிழரசு
மகள்கள்

செல்வி
கனிமொழி
மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் (2007), (2009)-2011 தமிழகத்தின் முதல் துணை முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். மு. க. அழகிரி மத்திய ரசாயன அமைச்சராக இருந்தவர். கனிமொழி இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
கருணாநிதி புலால் உணவுகளை உண்பவராக இருந்து பின் (தற்பொழுது) தாவர உணவு முறையை பின்பற்றி வருகிறார். இவர் அரசியல் பணிகளையும், எழுத்துபணிகளையும் ஓய்வின்றி செய்ய முடிவதற்கு நாளும் யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தமையே காரணமாகக் கூறப்படுகிறது.

இவரின் தன் வரலாற்று நூல் நெஞ்சுக்கு நீதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாளிதழான முரசொலி மற்றும் குங்குமத்தில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தமையாகும். இந்நூல் நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது.

திரைப்படப் பணி
கதை / வசனம் எழுதிய திரைப்படங்களில் சில[தொகு]
கண்ணம்மா
மண்ணின் மைந்தன்
பராசக்தி
புதிய பராசக்தி
மந்திரிகுமாரி
பாலைவன ரோஜாக்கள்
நீதிக்கு தண்டனை
பாசப் பறவைகள்
பாடாத தேனீக்கள்
பாலைவனப்பூக்கள்
மனோகரா
உளியின் ஓசை
பூம்புகார்
இளைஞன்
மேடை நாடகங்கள்
சிலப்பதிகாரம்
மணிமகுடம்
ஒரே ரத்தம்
பழனியப்பன்
தூக்கு மேடை
காகிதப்பூ
நானே அறிவாளி
வெள்ளிக்கிழமை
உதயசூரியன்
நச்சுக் கோப்பை
புத்தகங்கள்
குறளோவியம்
நெஞ்சுக்கு நீதி
தொல்காப்பிய உரை
சங்கத் தமிழ்
‎பாயும் புலி பண்டாரக வன்னியன்
ரோமாபுரி பாண்டியன்
தென்பாண்டி சிங்கம்
வெள்ளிக்கிழமை
இனியவை இருபது
சங்கத் தமிழ்
பொன்னர் சங்கர்
திருக்குறள் உரை
‎மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று
உலகக் கலைப் படைப்பாளி
உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் இந்திய மாநிலமான தமிழகத்தின் முதல்வராக, 2009ஆம் ஆண்டில் இருந்த கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.

கடந்த 9. அக்டோபர் 2009 அன்று அகில இந்திய திரைப்பட தொழிலாளர்களின் மூன்று நாள் மாநாடு தொடங்கியது. மாநாட்டின் முதல் நாளான அன்று, அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில், அதன் தலைவர் வி. சி. குகநாதன் தலைமையில், சம்மேளனத்தின் நிர்வாகிகள் கருணாநிதிக்கு உலகக் கலைப் படைப்பாளி என்ற விருதை வழங்கினர்.

கருணாநிதி தனது 17 வயதில் இருந்து 86 வயது வரை தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார். 1947ஆம் ஆண்டு முதன் முதலாக அவர் ராஜகுமாரி என்ற தமிழ் திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதினார். அவர் எழுதி இப்போது சினிமாவாக தயாராகிக் கொண்டிருக்கும் பொன்னர் சங்கர் அவரது 74வது படைப்பாகும். இதை பாராட்டும் வகையில் பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாவும் நேரு விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.


கலைஞர் கருணாநிதி பற்றி சுவையான சிறு குறிப்புகள்

தமிழ்நாட்டின் நிரந்தரத் தலைப்புச் செய்தி... கலைஞர் கருணாநிதி! ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் எதிரணியில் தொடர்ந்தாலும்  புகழ்க் கடலில் மூழ்கி,விமர்சன முத்தெடுத்து வெளியே வருபவர். பொது வாழ்வில் தலைமுறைகள் தாண்டியும் வலம் தமிழ்த் தேனி.




*டி.எம்.கருணாநிதி என்றுதான் ஆரம்ப காலத்தில் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார் இப்போது மு.க!.


*’ஆண்டவரே’ என்றுதான் எம்.ஜி.ஆர். இவரை அழைப்பார். பிற்காலத்தில் `மூக்கா’ என்றும் அழைத்திருக்கிறார். `மூனாகானா’ என்று அழைப்பது சிவாஜியின் ஸ்டைல். இன்று கருணாநிதியின் மனைவி, மகன்கள், பேரன் பேத்திகள் உட்பட அனைவருமே `தலைவர்’என்றுதான் சொல்கிறார்கள்!.


*தினமும் டைரி எழுதும் பழக்கம்கொண்டவர் அல்ல கருணாநிதி. ஆனாலும், அவருக்கு எல்லாம் நினைவில் அப்படியே இருக்கும். `என்னுடைய மூளையே எனக்கு ஒரு டைரி’ என்பார்!.


*தினமும் இரவுத் தூக்கம் சி.ஐ.டி.காலனி வீட்டில்தான். அதிகாலை எழுந்ததும் கோபாலபுரம் போவார். காலை உணவு அங்கு. முரசொலிக்கோ, தலைமைச் செயலகமோ போய்விட்டு மதிய உணவுக்கு சி.ஐ.டி. நகர். சிறு தூக்கத்துக்குப் பிறகு, மீண்டும் கோபாலபுரம். அங்கிருந்து அறிவாலயம் செல்வார். இரவுச் சாப்பாட்டுக்கு டி.ஐ.டி நகர் போய்விடுவார். கருணாநிதியின் ஒருநாள் இதுதான்!.


*அதிகாலையில் எழுந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று நடைப் பயிற்சி செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார் கருணாநிதி. முதுகு வலி ஆபரேஷனுக்குப் பிறகு வாக்கிங் நின்றுவிட்டது! கருணாநிதிக்கு யோகா கற்றுக்கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார்.`நாராயண நமஹ’ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்’ என்று இவர் சொல்வார். `இரண்டும் ஒன்றுதான்’ என்று தேசிகாச்சாரும் சொல்லி ஒப்புதல் வழங்கி இருக்கிறார்!.


*கருணாநிதிக்குப் பிடித்தலை சங்கு மார்க் வேட்டிகள்.`இதுதான்யா திருப்தியா இருக்கு’ என்பார்!.


*ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டவர். செரிமானத்தில் பிரச்னை இருந்தால், சைவமே பெரும்பாலும் சாப்பிடுகிறார்.நித்தமும் ஏதாவது ஒருவகைக் கீரை இருக்க வேண்டும். மற்றபடி இட்லி,சோறு,சாம்பார் வகையறாக்கள் விருப்பமானவை!.


*தி.மு.க. தேர்தல் செலவுக்கு எதிர்பாராத வகையில் 11 லட்சம் ரூபாய் வசூலித்துத் தந்ததைப் பாராட்டி, அண்ணா அணிவித்த மோதிரத்தைக் கழற்றியதே இல்லை.தங்க சங்கிலிகளை எப்போதுமே அணிந்ததில்லை!.


*சின்ன வயதில் ஆர்வமாக விளையாடியது ஹாக்கி. திருவாரூர் போர்டு ஹைஸ்கூல் ஹாக்கி டீமில் இருந்திருக்கிறார். இப்போது கிரிக்கெட் பார்ப்பதில்தான் அதிக ஆர்வம்!.


*ஏதாவது ஒன்றைப் படித்தால், அதை அப்படியே ட்விஸ்ட் செய்வதில் தனித்திறமை உண்டு. `வீரன் ஒருமுறைதான் சாவான்... கோழை பலமுறை சாவான்’ என்பது புகழ்பெற்ற பொன்மொழி. அதை கருணாநிதி, `வீரன் சாவதே இல்லை....கோழை வாழ்வதே இல்லை’ என்று மாற்றிப் பிரபலப்படுத்தினார்!.


*கோபாலபுரம் வீட்டில் செயல்மணி, அறிவாலயத்தில் நீலமேகம் ஆகிய இருவரும் தான் கருணாநிதிக்கு உதவியாளர்கள். இருவருக்கும் வயதாகி விட்டதால், புதிதாக நித்யா என்ற இளைஞர் நியமிக்கபட்டு இருக்கிறார்!.


*ஆரம்ப காலத்தில் மறவன் மடல் என்று எழுதி வந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பிறகுதான் `உடன்பிறப்பே’ என்று தலைப்பிட்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். `கடிதங்கள் எழுதுவதால்தான் என் மனவருத்தங்கள் குறைகின்றன’ என்பர்!.


*பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி போடுவது அவரது பாணி. `ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறீர்களா?’ என்று ஒரு முறை கேட்கப்பட்டது. `அது பிரச்னை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்றுதான் பார்க்க வேண்டும்’ என்று திருப்பி அடித்தார்!.


*கருணாநிதி 40-க்கும் மேலான படங்களுக்கு கதை-வசனம் எழுதியிருக்கிறார். இதில் அவருக்கு அதிகம் பிடித்த வசனம்,`மனச்சாட்சி உறங்கும்  சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!.


*ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’என்றுதான் என் கல்லறையில் எழுத வேண்டும் என்று கருணாநிதி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்!.


*பூஜை அறை மாதிரியான மாடத்தில் கருணாநிதியின் அப்பா முத்துவேலர், அம்மா அஞ்சுகம், முதல் மனைவி பத்மாவதி ஆகியோரின் படங்கள் இருக்கின்றன.முக்கியமான நாட்களில், அங்கு வணங்கி விட்டுத்தான் வெளியில் புறப்படுவார்!.


*சிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள்,திரைக்கதை,வசனங்கள்,பாடல்கள் கார்ட்டூன் என எதையும் விட்டுவைத்ததில்லை கருணாநிதி.`ஆளும் திறமை இட்து மூளை... காவியமும் கற்பனையும் வலது மூளை. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும். இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது கலைஞருக்குத்தான்’ என்றார் நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி!.


*’தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்’  கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக்கூடாது `வீழ்வது நாமாக் இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- கருணாநிதி எழுதிய இம் மூன்றும் தமிழகத்தில் அதிக முறை சொல்லப்பட்ட வாக்கியங்கள்!.


*12 முறை எம்.எல்.ஏ. 5 முறை முதலமைச்சர், 10முறை தி.மு.க. தலைவர் என்பது மாதிரியான சாதனை இதுவரை யாரும் செய்ததில்லை. இனியும் முடியுமா என்பது சந்தேகம்!.


*புழல் ஏரி உடைவது மாதிரி இருக்கிறது என்ற தகவல் கிடைத்தும்,அதைச் சரிப்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டு, நள்ளிரவு 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கவலையுடன் உட்கார்ந்திருந்த சம்பவம் அவரது அதிகப்படியான் அக்கறையை உலகத்துக்குச் சொன்னது!.


*படுக்கையில் உட்கார்ந்து பரீட்சை அட்டை வைத்து எழுதுவதுதான் அவரது வழக்கம்.உயரத்துக்காக இரண்டு தலையணைகளை அடுக்கிவைத்துக் கொள்வார். இன்றுவரை மை பேனாவைத்தான் பயன்படுத்துவார்!.


*கோபாலபுரம், சி.ஐ.டி. நகர், தலைமைச் செயலகம், அறிவாலயம்,முரசொலி ஆகிய ஐந்து இடங்களிலும் அன்றைய செய்தித்தாள்கள் மொத்தமும்  கருணாநிதிக்காகத் தனியாகக் காத்திருக்கும்!.


*கடற்கரை மணலில் உட்கார்ந்து காற்று வாங்கிய படி பேசுவதுதான் கருணாநிதிக்குப் பிடிக்கும். அது முடியாததால், மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் கடலைப் பார்த்த அறையில் அடிக்கடி தங்குகிறார்!.


*கருணாநிதிக்குப்  பிடித்த தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம், பிடித்த புராணம் மகாபாரதம். எப்போதும் மேசையில் வைத்திருப்பது திருக்குறள்!.


*தனிமை பிடிக்காது. எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை!.

செவ்வாய், 31 மே, 2016

பன்னாட்டு குழந்தைகள் நாள் ஜூன் 1


குழந்தைகள் நாள் (Children's Day) உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அனைத்துலக குழந்தைகள் நாள்
அனைத்துலக குழந்தைகள் நாள் (Universal Children's Day) டிசம்பர் 14, 1954 இலிருந்து, ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடுகின்றன. உலகெங்கணும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐநா அவையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநல திட்டங்களை உலகெங்கும் நடாத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பன்னாட்டு குழந்தைகள் நாள்
பன்னாட்டு குழந்தைகள் நாள் (International Children's Day, ICD) பல நாடுகளில் ஜூன் 1 ம் நாள் கொண்டாடப்படுகிறது. உலக சிறுவர் தினமும் முதியோர் தினமும் இலங்கையில் ஒரே தினத்தில் கொண்டாடப்படுகின்றன.

இந்தியா
முதன்மைக் கட்டுரை: இந்தியக் குழந்தைகள் நாள்
இந்தியாவில் ஜவகர்லால் நேரு பிறந்த நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடுகிறார்கள்.

திங்கள், 30 மே, 2016

உலக புகையிலை எதிர்ப்பு நாள் மே 31


உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது. 
உயிர் குடிக்கும் இலை
அன்று முதல் இன்றுவரை புகை பிடிப்பது இளைஞர்கள் மத்தியில் ஃபேஷனாகவே இருக்கிறது. தான் பெரிய ஆள் என்பதை உணர்த்துவதற்காக சிகரெட்டை விரல் இடுக்கில் பிடித்தபடி ஸ்டைல் காட்டும் இளைஞர்கள் இன்று அதிகம். புகை பிடிக்கும் பெண்களும் இன்றைக்கு அதிகரித்து வருகிறார்கள். புகை பிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்களைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை.
புகை பிடிப்பவர்களுக்கும் புகையிலை சார்ந்த பழக்கம் கொண்டவர்களுக்கும் மற்றவர்களைவிட புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பது புதிய தகவல் இல்லை. ஆனால், ஒரு பக்கம் புற்றுநோய் மரணங்கள் அதிகரித்துவருவதும், மற்றொரு புறம் புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துவருவதையும் ஒருசேரப் பார்க்கும் நிலைமை மோசமானதுதான்.
அதிகரிக்கும் இறப்புகள்
உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிவரத்தின்படி புகை பிடிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் 60 லட்சம் பேர் உலக அளவில் உயிரிழக்கிறார்கள். இவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள். ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 25 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக Lancet oncology journal-ன் சமீபத்திய ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வரும் 2035-ல் இந்தியாவில் புற்றுநோய் இறப்பு 12 லட்சமாக அதிகரித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. ஆனால், இதைப் பற்றி நம்மில் பலரும் அச்சப்படுவதோ, கவலைகொள்வதோ இல்லை.
உலக அளவில்
புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதே இதை நிரூபித்துவிடும். இன்றைக்கு உலக அளவில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 10.8 சதவீதம் பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவத்தில் பயன்படுத்துகின்றனர். உலக அளவில் ஆண்கள் 47 சதவீதமும், பெண்கள் 12 சதவீதமும் புகை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். வளர்ந்த நாடுகளில் 42 சதவீத ஆண்களும் 24 சதவீத பெண்களும், வளரும் நாடுகளில் 48 சதவீத ஆண்களும் 7 சதவீத பெண்களும் புகை பிடிக்கிறனர்.
இந்திய அளவில்
சரி, இந்தியாவின் நிலைமை? இந்தியாவில் 53 சதவீத ஆண்களும் 3 சதவீத பெண்களும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோய், இந்தியாவில் லட்சத்தில் 10 பேருக்கு ஏற்படுகிறது. புகையிலையால் வரும் புற்றுநோய்களில் இதுவே அதிகம். 2020-ம் ஆண்டில் இந்தியாவில் 13 சதவீதம் இறப்புகளுக்குப் புகையிலை பழக்கமே காரணமாக இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பாதிப்புகள் என்ன?
புகை பிடித்தால் எப்படிப் புற்றுநோய் வருகிறது? புகையிலையில் நோயை உண்டாக்கக்கூடிய கார்பன் மோனாக்சைடு நச்சு அதிகம் உள்ளது. இதனால்தான், தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப் பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காசநோய், மலட்டுத் தன்மை என மற்றப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.
யாருக்குப் பாதிப்பு
ஒரு பாக்கெட், இரண்டு பாக்கெட் என ஒரே நாளில் அதிகம் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதே எண்ணிக்கையில் ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டு புகை பிடித்தால் போதும், புற்றுநோய் நிச்சயமாக வந்துவிடும். வீட்டிலும், பொது இடத்திலும் புகை பிடிப்பதால் நமக்கு மட்டுமில்லாமல் நம் அருகில் இருக்கும் ரத்த உறவுகள், நண்பர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்திருப்பதால், முன்பைவிட அவர்களும் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கிராமப்புறப் பெண்கள் வாயில் புகையிலையை அடைத்துக் கொண்டிருப்பதைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். வாயில் புகையிலையை அடைத்துக் கொண்டிருப்பதால் புண் ஏற்படுகிறது. இது நாளடைவில் புற்றுநோய் புண்ணாக மாறிவிடுகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் புகை பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளைப் பள்ளிகளிலேயே மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்" என்கிறார் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பெல்லார்மின்.
நிறுத்துவோம்
இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்ய வேண்டும்? புகை பிடிப்பது, பான், குட்கா, புகையிலை போடுதல் போன்ற பழக்கங்களை நிறுத்துவதுதான் ஒரே வழி. புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபட முதலில் எளிய வழிகளான யோகா, ஆசனங்களைச் செய்யலாம். தொடர்ந்து தியானத்துக்கு நகரலாம். புகையிலை அடிமைத்தனத்தில் இருந்து மனதை மாற்ற, வேறு விஷயங்களில் ஈடுபட வேண்டும். அது சாக்லேட் தொடங்கி நூலகம் வரை எதுவாகவும் இருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக இப்படியே மாற்றி, புகை பிடிப்பதிலிருந்து ஒட்டுமொத்தமாக விடுபட முடியும். நமது மனஉறுதியின் வீரியத்தைப் பொறுத்து அது வேகமாக நிகழும்.
புகையிலை எதிர்ப்பு நாள்

புற்றுநோய் இல்லா உலகை உருவாக்க வேண்டும் என்பதே இன்றைக்கு உலக விருப்பமாக உள்ளது. இதை 27 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து புற்றுநோய் இறப்புகளைக் குறைக்கவும், புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் புகையிலை எதிர்ப்பு தினத்தை 1987-ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதற்காக ஒவ்வோர் ஆண்டும் புதிய வாசகம் ஒன்றை உருவாக்கி உலக சுகாதார அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. 2014-ம் ஆண்டுக்கான வாசகம், புகையிலை மீதான வரியை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான்.

புதன், 8 ஏப்ரல், 2015

முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்! (ஏப்ரல் 08 2015 )




ஜெயகாந்தன் அவர்கள், மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். அவர் ஓரளவே படித்திருந்தாலும், தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்து, தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைத் தன் எழுத்துக்களால் கொள்ளைக் கொண்டவர். ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாமல், கட்டுரையாளர், பத்திரிகையாளர், துண்டு வெளியீடுகளை எழுதுபவர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர் எனப் பல்வேறு முகங்கள் கொண்டு, தமிழ் இலக்கியத்திற்கு அருட்தொண்டாற்றியவர் ஜெயகாந்தன் என்று சொன்னால் அது மிகையாகாது. இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர். மேலும், இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’ தமிழ் இலக்கியத்திற்காக முதல்முறைப் பெற்றார். ‘சாஹித்ய அகாடமி விருது’, ‘ரஷ்ய விருது’ என்று பல்வேறு விருதுகளுக்குத் தகுதியான ஜெயகாந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஏப்ரல் 24, 1934
பிறப்பிடம், கடலூர், தமிழ்நாடு, இந்தியா
பணி: எழுத்தாளர்பத்திரிகையாளர்திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர்
பிறப்பு
ஜெயகாந்தன் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
ஜெயகாந்தன் அவர்களுக்கு, சிறு வயதிலிருந்தே பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாமல் இருந்தது. எனவே, அவர் ஐந்தாம் வகுப்பு வரையே பள்ளிக்குச் சென்றார். இதன் காரணமாக, அவருக்கும், அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர் தனது தாயார் மற்றும் தாத்தாவிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். வீட்டில் அவருக்கும், அவரது தந்தைக்கும் சுமூகமானப் பேச்சுவார்த்தை இல்லாமல், இருவரும் எதிரும், புதிருமாக இருந்தனர். அவர் பள்ளிச் செல்லவில்லை என்ற ஒரே காரணத்தால், அவரது தந்தை அவருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கினார். சிறுவனாக இருந்து இதனை சற்றும் தாங்கிக் கொள்ள இயலாததால், அவர் தனது 12 வது வயதில் வீட்டை விட்டு ஓடி, விழுப்புரத்தில் உள்ள அவரது மாமாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அங்கு, அவரது மாமா அவருக்கு கம்யூனிச கொள்கைகளையும், சுப்ரமணிய பாரதி படைப்புகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இலக்கியம் மீது ஆர்வம் 
சிறிது காலம் கழித்து, ஜெயகாந்தன் அவர்களுடைய தாயார் அவரை சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது பிள்ளைப் பருவத்தைக் கழித்த அவர், தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்குப் பரிச்சயமானார். அக்கட்சி அலுவலகத்தைத் தனது வீடாகவும், அக்கட்சி உறுப்பினர்களைத் தனது குடும்ப அங்கத்தினர்களாகவும் கருதிய அவர், அவர்களின் கலந்துரையாடல்களைக் கேட்க கேட்க, இலக்கியத்தின் மீது அவருக்கு நாட்டம் ஏற்பட்டது. இதனால், கட்சியின் அங்கத்தினரான ஜீவானந்தம் என்பவர், அவருக்குத் தமிழாசிரியர் ஒருவரை அவருக்குக் கல்வி கற்றுத் தருமாறு பணியில் அமர்த்தினார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்த அவர், பல இடங்களில் முழுநேரம் மற்றும் பகுதிநேர வேலைகளில் வேலைப் பார்த்தார். 1949ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்டதால், அக்கட்சிக்குத் தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இதன் பொருட்டாக, அவர் தஞ்சாவூரிலுள்ள ஒரு காலணிகள் விற்கும் கடையில் தற்காலிகமாகப் பணியில் சேர்ந்தார். அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில், எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். மேலும், புதிய கட்சிகளின் வருகையால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுவதுமாக அழிந்ததால், காமராஜரின் கொள்கைகள் மீது அவருக்குப் பற்று ஏற்பட்டதால், அவரது தொண்டனாக மாறி, அவர் இருந்த தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
எழுத்துலக வாழ்க்கை
ஜெயகாந்தன் அவர்கள், அவரது இலக்கிய வாழ்க்கையை 1950களில் தொடங்கினார். பல்வேறு தினசரி மற்றும் மாத நாளிதழ்களான சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்றவற்றில் அவரது படைப்புகள் வெளியாயின. அவரது படைப்புகளனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவருக்குப் புகழும், அவரது படைப்புகளுக்கு அங்கீகாரமும் கிடைத்தது. இதனால், அவர் தலைச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். எழுத்துலகில் கொடிக்கட்டிப் பறந்த அவர், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். அவரது மிகவும் வெற்றிப்பெற்ற படைப்புகளான “உன்னைப் போல் ஒருவன்” மற்றும் “சில நேரங்களில் சில மனிதர்கள்” போன்ற நாவல்கள் படமாக்கப்பட்டன. “உன்னைப் போல் ஒருவன்” என்ற படம், சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான ‘குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதான பத்ம பூஷன் விருதை’ பெற்றது.
அவரது படைப்புகள்
ஜெயகாந்தன் அவர்கள், பல்வேறு வாழ்க்கை வரலாறு, நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு, கட்டுரைகள், போன்றவற்றைப் படைத்துள்ளார். அதில் சில குறிப்பிடத்தக்கப் படைப்புகள்:
‘வாழ்விக்க வந்த காந்தி 1973’, ‘ஒரு கதாசிரியனின் கதை’, ‘பிரம்ம உபதேசம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’, ‘கண்ணன்’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘ரிஷிமூலம்’, ‘கருணையினால் அல்ல’, ‘கங்கை எங்கே போகிறாள்’, ‘ஒவ்வொரு கூரைக்கும் கீழே…’, ‘சுந்தர காண்டம்’ மற்றும் பல.
தமிழ்த் திரையுலகில் இவருடைய கதைகள் பல திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன. அவை: ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘ஊருக்கு நூறு பேர்’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, மற்றும் ‘புதுச் செருப்பு’.
அவர் இயக்கிய திரைப்படங்கள்: ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, மற்றும் ‘புதுச்செருப்பு கடிக்கும்’
விருதுகள்
  • 1972 - சாஹித்ய அகாடமி விருது
  • 2002 – இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.
  • 2009 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.
  • 2011 – ரஷ்ய விருது
காலவரிசை
1934: தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார்.
1950: அவரது இலக்கிய வாழ்க்கையை 1950களில் தொடங்கினார்.
2002: இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.

2009: இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.

"இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார் (ஏப்ரல் 08 2015)

"இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்!

மிழ் சினிமாவில் மெல்லிசை பாடகர்களுக்கு மத்தியில் தனது கணீர் குரலால் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் நாகூர் ஹனிபா. இவரது அம்மா ராமநாதபுரத்தை சேர்த்தவர். அப்பா நாகூரைச் சேர்ந்தவர். இஸ்மாயில் முஹம்மது ஹனிபா என்ற தனது பெயரை சுருக்கி இ.எம்.ஹனிபா என்று அழைக்கப்பட்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது.
சிறுவயது முதலே பள்ளி, திருமண விழாக்களில் பாடத் துவங்கினார். 15 வயதில் திருமண வீடுகளில் பாடத்துவங்கியவர் 5 ஆயிரத்துக்கும் அதிகமான திருமண வீடுகளில் பாடியுள்ளார். திராவிட இயக்கத்தின் மீது பற்றுக் கொண்டு அதன் உறுப்பினர் ஆனார்.

தி.மு.க.வுக்காக இவர் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலம். தி.மு.க., சார்பாக சட்டசபை தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார். போராட்டங்களில் ஈடுபட்டு சிறையும் சென்றுள்ளார். தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும், வக்பு வாரிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ ‘உன் மதமா என் மதமா’ மற்றும் ‘இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ போன்ற பாடல்கள் சாதி மத வேறுபாடுகளைக் கடந்து பட்டிதொட்டியெங்கும் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 96 வயதான அவர் நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். அவர் குறித்த சில நினைவலைகள்...

# 1953 ஆம் ஆண்டு அது…..

திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகி நான்கே நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. பெரியாரின் சீடராக இருந்த நாகூர் ஹனிபா, அறிஞர் அண்ணாவுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக முழுமூச்சாய் பெரிதும் பாடுபட்டார். நாகூர் ஹனிபா அறிஞர் அண்ணாவின் மீது தீவிர பற்று வைத்திருந்தார். அதே போன்று அறிஞர் அண்ணாவும் எந்தவொரு போராட்டத்திற்குச் சென்றாலும் தன்னுடன் நாகூர் ஹனிபாவையும் தவறாமல் அழைத்துச் சென்றார்.
1953 ஆம் ஆண்டில் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் பெருமளவில் துன்ப அலை வீசியது. சொல்லவொணா துயரங்களை அவர்கள் சந்தித்தார்கள் அறிஞர் அண்ணாவும் நடுத்தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவரே. கைத்தறி நெசவாளர்களின் குடும்பம் படும் அவலங்களை அவரால் காணப் பொறுக்கவில்லை. நெய்த துணிகள் யாவும் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்தன. குடும்பங்கள் பசியால் வாடினர். சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலை.
இதனால் நெசவாளர்கள் கஞ்சித் தொட்டியை நாடும் அவல நிலை ஏற்பட்டது.  சிலர் பிச்சை எடுக்கும் நிலைக்குக்கூடத் தள்ளப்பட்டனர். கழகத் தலைமை ஒன்று கூடி கைத்தறித் துணிகளை விற்று அதனைக் கொண்டு நெசவாளர்களின் துயர் துடைக்க முடிவு செய்தனர். விற்பனை செய்வதற்கு முதற்கட்டமாக திருச்சி மாநகரத்தை தேர்ந்தெடுத்தனர்.
“திருச்சியில் யார் துணிகளை விற்பது?” என்ற கேள்வி எழுந்தபோது “திருச்சியில் நானே சென்று விற்கிறேன்” என்று அறிஞர் அண்ணா அறிவிப்பு செய்தார். கழகத் தொண்டர்களுக்கிடையே இந்த அறிவிப்பு பெரும் ஊக்கத்தையும், மிகுந்த எழுச்சியையும் உருவாக்கியது.

கழகத் தொண்டாற்றுவதற்காக சரியான வாய்ப்பை எதிர்பார்த்திருந்த நாகூர் ஹனிபா... இதனை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். அண்ணாவிடம் சென்று “நானும் உங்களோடு இணைந்து பாடிக்கூவி கைத்தறி துணிகளை விற்கத் தயார்” என்றார். “அனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை” என்று தந்தை பெரியார் முன்னொரு சமயம் கூறியது அறிஞர் அண்ணாவின் நினைவுக்கு வந்தது. ஊர் ஊராகச் சென்று கூவி விற்பதற்கு கம்பீர குரல்வளம் படைத்த நாகூர் ஹனிபாவைவிட வேறு பொருத்தமான ஆள் கிடையாது என்ற முடிவுக்கு வந்த அறிஞர் அண்ணா, உடனே அவரை அழைத்துக் கொண்டு கழகக் கண்மணிகளோடு திருச்சிக்கு புறப்பட்டார்.
அறிஞர் அண்ணாவின் இந்த கைத்தறி விற்பனைத் திட்டம் நன்றாகவே வெற்றி கண்டது. எதிர்பார்த்ததைவிட கூடுதல் பலனை அளித்தது. திருச்சியில் தொடங்கி பின்னர் ஊர் ஊராகச் சென்று கழகத் தோழர்கள் கைத்தறி துணி விற்பனையில் ஈடுபட்டனர். மூட்டைகளைச் சுமந்து தெருத் தெருவாக கூவி விற்றனர். இந்த விற்பனையில் நாகூர் ஹனிபாவின் பங்கு கணிசமான அளவில் இருந்தது.

உடுமலை நாராயணகவி எழுதிய பாடலொன்று நாகூர் ஹனிபாவுக்கு கைகொடுத்தது. கம்பீரக் குரலோடு ஒலிபெருக்கியின் உதவி இல்லாமலேயே பாடத் தொடங்கினார்.

    சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்

    திராவிட நாட்டின் சேமம் வேண்டி

    சிங்கார ஆடைகள் வாங்குவீர்.

பாடலின் ஆரம்ப வரிகள் இதுதான்.

தங்கள் அபிமான தலைவர்களைக் காணவும், “கணீர்” என்ற வெண்கலத் தொனியுடன், கம்பீரத் தோற்றம் கொண்ட  நாகூர் ஹனிபா பாடும் பாடலை ஆர்வத்துடன் கேட்கவும், கட்டுக்கடங்காத கூட்டம் ஆங்காங்கே கூடியது. பொதுமக்கள் தங்கள் விருப்பம்போல் கைத்தறி துணிகளை தாராள மனப்பான்மையோடு வாங்கிச் சென்றனர்.

# 1955-ஆம் ஆண்டு, “நம் நாடு” கழக ஏட்டில் வெளிவந்த ‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற பாடலை ஹ்ம்வ் நிறுவனம் பதிவு செய்ய, நாகூர் ஹனிபாவின் கம்பீரக் குரலில்  இசைத்தட்டு வெளியானபோது, அப்பாடல் தமிழகத்தில்  ஓர் இசைப்பிரளயத்தை உண்டு பண்ணி தென்னக அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த மூலக்காரணமாக இருந்தது. அந்த இசைத்தட்டுதான் அந்த ஆண்டில் அதிகம் விற்று விற்பனையில் ஒரு சாதனையைப் படைத்தது

அறிஞர் அண்ணா அடிக்கடி பெருமைபட கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா? “அழைக்கின்றார் அண்ணா” என்ற இந்தப்பாடலை நாகூர் ஹனிபாவை பாட வைத்து படமெடுத்து, அதைத் திரையிட அரசு அனுமதித்தால் நிச்சயம்  திராவிட நாடு பெற்று விடுவேன்” என்பதுதான். அப்படிப்பட்ட காந்தக் குரல் ஹனிபாவுடையது. ஒலிபெருக்கியையே அதிர வைக்கும் எட்டுக்கட்டை கம்பீரச் சாரீரம் அது.


#  “ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள் – நீ
    தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!”

    “திராவிடச் சோலையிலே
    தீரர் வாழும் வேளையிலே
    செந்தமிழை மேயவந்த
    இந்தி என்ற எருமை மாடே!
    முன்னம் போட்ட சூடு என்ன
    மறந்ததோ உனக்கு?
    என்றும் இந்தி ஏற்கமாட்டோம்
    ஓடிப்போ வடக்கு!”

இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நாகூர் ஹனிபா தி.மு.க. மேடைகளில் பாடிய பாடல் வரிகள் இவை.

#  “ஓடி வருகிறான் உதயசூரியன்”

  “அழைக்கின்றார்.. அழைக்கின்றார் அண்ணா”

  “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே”

  “இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை”

  “வளர்த்தகடா மார்பில் பாய்ந்ததடா”

என்று கணீர்க் குரலுடனும் கம்பீர வரிகளுடனும் நாகூர் ஹனீபா அவர்கள், திராவிட இயக்கத்தை எட்டுத் திசைக்கும் கொண்டுசேர்த்த ‘தனிமனித வானொலி’.

நன்றி: 'நாகூர் மண் வாசனை" வலைப்பூ

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

சென்னை மாநகரத்தை...கொண்டாடுவோம் ..! (சென்னை தினம் ஆக., 22 ம் தேதி)



சென்னை மாநகரத்தை...கொண்டாடுவோம் ..! (சென்னை தினம் ஆக., 22 ம் தேதி)
    மெட்ராஸ், சென்னை இந்த இரு பெயர்களைக் கேட்டதும் இனம்புரியாத ஒருவித ஈர்ப்பு மனதில் ஒட்டிக் கொள்கிறது. பெரும் நகருக்கே உரிய பரபரப்பு, மக்கள் அடர்த்தி, வாகனங்களின் இரைச்சல், பலதரப்பட்ட கலாசாரம் என்ற வழக்கமான அடையாளங்களையும் தாண்டி, சென்னை ஏதோ ஒரு விதத்தில் நம்மைப் பாதிக்காமல் இல்லை.
ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய பல்லவ சாம்ராஜ்யத்தில் துவங்கி, இன்றைய உலகின் மிகச்சிறந்த மருத்துவச் சுற்றுலா நகரமாக இருப்பது வரை சென்னையின் பல்வேறு பரிணாமமும், பரிமாணமும் ரசிக்கத்தக்கவை; வியப்புக்குரியவை.
பொதுவாக ஒரு விஷயத்தை அல்லது வரலாற்றை விவரிப்பது எனில், குறிப்பிட்ட செயலுக்கு முன், குறிப்பிட்ட செயலுக்குப் பின் எனப் பிரிப்பது வழக்கம். இவ்வகையில் சென்னையின் வரலாறு ஆங்கிலேயரின் வருகைக்கு முன், வருகைக்குப் பின் என இருவகையாகப் பார்க்கப்படுகிறது.

ஆங்கிலேயரின் வருகைக்கு முன், ஆங்காங்கு இருந்த குடியிருப்புகளும், மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததுமான சம்பவங்களுமே வரலாற்றில் இடம்பெறுகின்றன. அதுவும் அதிக அளவில் இல்லை. காரணம் 1639ம் ஆண்டுக்கு முந்தைய வரலாற்றுக்கு போதிய ஆதாரங்களும், விவரங்களும் இல்லை. கிடைக்கும் ஒரு சில கல்வெட்டுகள், சங்க இலக்கியப் பாடல்கள், கர்ணபரம்பரைக் கதைகளை வைத்து ஒருவாறு யூகிக்க முடிகிறது.
சென்னை ஒரு பெருநகராக வளர்ச்சி பெற்றது, ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர்தான். ஆகவே, சென்னையின் வரலாற்றில் ஆங்கிலேயேர்கள் தவிர்க்க இயலாத இடம்பெறுகின்றனர். இன்னும் சொல்வதானால், சென்னையில் ஆங்கிலேயர்கள் என்பதே சென்னையின் வரலாறாகவும் ஆகி விட்டது.
சில உணர்வுப்பூர்மான நிகழ்வுகள், இந்தியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது மாநகராட்சி, அகிம்சையின் வலிமையை உலகுக்கு உணர்த்திய காந்தி சத்தியாக்கிரக ஒலியை எழுப்பிய இடம், முதன்முதலில் மதுவிலக்கு அமலாக்கப்பட்ட இடம் என சரித்திரப் புகழ் வாய்ந்த சம்பவங்களும், நிகழ்வுகளும் சென்னையில் நடந்தேறி இருக்கின்றன.
மும்பையும், கல்கத்தாவும் ராஜதானி நகரமாக மாறுவதற்கு முன்னரே, சென்னை இந்தியத்துணைக்கண்டத்தின் ராஜதானி நகரமாக உருவெடுத்திருக்கிறது. இன்னும் இன்னும் ஏராளமான சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள சென்னை கொண்டாடப்பட வேண்டிய நகரம்.
எனவேதான், ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை தாமரல வெங்கடப்ப நாயக்கரிடம் இருந்து வாங்கிய ஆக.,22ம் தேதியை சென்னை தினமாக அறிவித்து, அதைப் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
1639 ஜூலை 22 என்று ஒருசாரர் வாதிட்டாலும், ஆக., 22ம்தேதிதான் பதிவு செய்யப்பட்டது என சில ஆவணங்கள் மூலம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, இன்னும் வேறு ஆதாரங்களும், சான்றுகளும் கிடைக்கும் வரை ஆக., 22 ம் தேதிதான் சென்னை தினமாகக் கொண்டாடப்படும்.
பல்வேறு தரப்பினரும் தத்தமது விருப்பப்படி குழுவாகவோ, தனியாகவோ சென்னை தின (மெட்ராஸ் டே) கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றனர். பிறரின் கொண்டாட்டங்களுக்கு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர்; நாமும் பங்கேற்போம்.
சென்னை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க நாம் சென்னைவாசியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு பெருநகரத்தின் பெருமிதம் மிக்க வரலாற்றைப் பகிர்ந்து கொள்வோம். வாருங்கள் கொண்டாடுவோம் சென்னையை; நம் பெருமையை.

சென்னையின் வரலாற்று நிகழ்வுகளின் கால வரிசை
1522 - சாந்தோமில் போர்த்துகீசியர்கள் குடியேற்றம்
1639 - சாந்தோமுக்கு வடக்கே உள்ள 3 சதுர மைல் நிலப்பரப்பை பிரான்சிஸ்டே பெறுதல்
1640 - சென்னையில் உள்ள தொழிற்சாலைக்கு, புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்படுகிறது. * என்ன தொழிற்சாலை?
1641 - ஆண்ட்ரூ கோகனுக்குக்கீழ் கிழக்குக் கடற்கரையில், இங்கிலாந்தின் முக்கிய தொழிற்சாலையாக சென்னை ஆனது.
1662 - சாந்தோமை கோல்கொண்டா ஆக்கிரமித்தது.
1672 - சென்னை ஆவணங்களை, முதல் முறையாக பதிவு செய்ய ஆளுநர் லாங்ஹார்னின் கட்டளை
1675 - சாந்தோமின் அரியணையை தகர்த்து, கோல்கொண்டாவின் அதிகாரத்தின் கீழ் போர்த்துக்கீசியர்கள் குடியேற்றம்
1678 - ஐகோர்ட்டை ஸ்ட்ரெயின் ஷாம் மாஸ்டர் நிறுவினார்
1686 - சென்னையில் அட்மிரால்டி கோர்ட் ஆரம்பமானது
1688 - சென்னை மாநகராட்சி உதயமானது.
1693 - எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார் பேட்டை ஆகியவற்றைப் பெறுதல்
1708 - திருவொற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, கத்திவாக்கம், சாத்தங்காடு ஆகியவற்றைப் பெறுதல்
1734 - சிந்தாதிரிப்பேட்டை உருவாக்கப்படுதல்
1742 - வேப்பேரி,பெரம்பூர், புதுப்பாக்கம், எர்ணாவூர், சண்டையான்குப்பம் ஆங்கிலேயருக்கு கொடுக்கப்படுதல்.
1786 - சென்னை அஞ்சல் துறை அமைக்கப்பட்டு, சேவை துவக்கம்
1792 - சென்னை வானொலி ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டது
1835 - மருத்துவப்பள்ளி துவக்கம்
1842 - மாநில உயர்நிலைப்பள்ளி திறப்பு
1844 - மகளிர், குழந்தைகள் மருத்துவமனை திறப்பு
1856 - சென்னையிலிருந்து ஆற்காடு வரை முதல் இருப்புப்பாதை துவக்கம்
1857 - மாநில கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் துவக்கம்
1873 - சென்ட்ரல் ஸ்டேஷன் கட்டப்பட்டது
1895 - தராஸ் டிராம்வே துவக்கம்
1900 - மூர் மார்க்கெட் திறப்பு
1913 - ரிப்பன் கட்டடம் திறப்பு
1914 - எம்டன் கப்பல் குண்டுவீச்சு
1936 - விக்டோரியா நினைவிடம் திறப்பு
1939 - சென்னையின் முன்னூறாவது ஆண்டு விழா கொண்டாட்டம்
1947 - ஆங்கிலேயர் நிறுவிய நகரம், இந்தியர்களுக்குச் சொந்தமானது.

புதன், 29 பிப்ரவரி, 2012

லீப் வருடம் – பல சுவையான தகவல்கள்:


லீப் வருடம் – பல சுவையான தகவல்கள்:
நீங்கள் உங்கள் ‘பொன்னான பிறந்த’ (Golden Birthday)  நாளைக் கொண்டாடி இருக்கிறீர்களா?
‘ பொன்னான பிறந்த நாளா?’  என்று வியப்பவர்களுக்கு: உங்கள் பிறந்த தேதியும், உங்கள் வயதும் ஒன்றாக இருந்தால்   (அதாவது 27 ஆம் தேதி உங்கள் 27 வது பிறந்தநாள் வந்தால் அதுதான் உங்களது ‘பொன்னான பிறந்த நாள்’. 1953 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் தங்களது 53 வது பிறந்த நாளை ‘ பொன்னான பிறந்த நாளா’ கக் கொண்டாடலாம்.
சரி லீப் வருடத்தில் பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்கள் எப்போது தங்களது ‘ பொன்னான பிறந்த நாளை’ கொண்டாடுவார்கள்? யோசியுங்கள்…..       விடை கடைசியில்…….

ஒரு வருடத்தின் எண்களை மிகுதி இல்லாமல் 4 ஆல் வகுக்க முடிந்தால் அது தான் லீப் வருடம் என்று தெரியும். தெரியாத விஷயம்: நூற்றாண்டுகள் வரும்போது அவை  400 ஆல் மிகுதி இல்லாமல் வகுக்கப் பட வேண்டும் என்பது!
லீப் வருடமும் பலவிதமான காலண்டர்களும்:
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள் ஆகிறது. துல்லியமாக சொல்ல வேண்டுமானால் 365.242 நாட்கள் அதாவது 365 1/4 நாட்கள்.  எகிப்தியர்கள் மாறி வரும் பருவ நிலைகளும் தங்கள் நாட்காட்டியும் பல சமயங்களில் ஒத்துப் போகாததை கண்டறிந்தனர்.
 முதன் முதலில் இந்தக் கால் நாளை ஒரு நாளாக்கி நான்கு வருடங்களுக்கு ஒரு முறை காலண்டரில் சேர்த்த பெருமை கி.மு. 45 இல் வாழ்ந்த ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசரைச் சேரும்.
நாம் இப்போது பயன் படுத்தும் க்ரிகோரியன் (Gregorian) காலண்டர், ஜூலியஸ் சீசர் வடிவமைத்த காலண்டரின் லீப் வருடத்தை உள்ளடக்கிய காலண்டர் தான்.
ஸ்வீடனில் 1712 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு 30 நாட்கள்! காரணம் அங்கு அப்போது ஜூலியன் காலண்டரோ அல்லது க்ரிகோரியன் காலண்டரோ நடைமுறையில் இல்லாததுதான். அதன் பிறகு 1753  க்ரிகோரியன் காலண்டரை பின்பற்றி அமைக்கப் பட்ட காலண்டரில் லீப் வருடம் பிப்ரவரி 17 ஆம் தேதிக்குப் பிறகு மார்ச் 1 ஆம் தேதிக்குத் தாவியது. ஆனால் பொது மக்களுக்கு இந்த முறை பிடிக்கவில்லை; தங்கள் வாழ்நாளிலிருந்து 10 நாட்களை இழந்து விட்டதாக நினைத்தனர்!
1930  களில் சோவியத் யூனியனிலும் பிப்ரவரி 30 தேதியுடன் இருந்த காலண்டர் புழக்கத்தில் இருந்தது. தொழிலாளிகளின் உற்பத்தித் திறனைப் அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 7 நாட்களாக(  ஞாயிறு விடுமுறை)  இருந்த வாரக் கணக்கை மாற்றி 5 அல்லது 6 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை இல்லாத வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் 30 நாட்கள்! மிச்சமிருந்த 5 அல்லது 6 நாட்கள் மாதக் கணக்கில் வராத தேசீய விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டன. ஆனால் ஞாயிறு விடுமுறை என்ற வழக்கம் நெடு நாட்களாக இருந்ததால், இந்த முறை,  அதிக நாட்கள் நீடிக்க முடியவில்லை; 1940 ஆம் ஆண்டு பழையபடி க்ரிகோரியன் காலண்டர் பழக்கத்திற்கு வந்தது.
பழங்காலத்தில் லீப் வருடம்:
முற்காலத்தில் ஒரு பெண் தன் மனதுக்குப் பிடித்தவனை தேர்ந்தெடுக்க லீப் வருடமே சிறந்தது என்று கருதப் பட்டது. லீப் வருடத்தில் ஒரு பெண் தன் காதலைச் சொல்லலாம் என்று 5 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்து நாட்டில் ஒரு வழக்கம் இருந்ததாம். 13 ஆம் நூற்றாண்டில் இதை அரசு பூர்வ சட்டமாக மாற்றியவர் ஸ்காட்லாந்து ராணி மார்கரெட்.
ஒரு பெண் லீப் வருடத்தில் தன் காதலை சொல்லி அதை ஏற்க மறுக்கும் ஆண் மகன் அவளுக்கு புதிதாக பட்டு உடையும் ஒரு ஜோடி கையுறையும் கொடுக்க வேண்டும் என்ற வழக்கமும் இருந்ததாம்.
சில நாடுகளில் லீப் வருடம் அமங்கலமான வருடமாக கருதப்பட்டது. ஸ்காட்லாந்து நாட்டில் லீப் வருடத்தில் பிறக்கும் குழந்தை அதிர்ஷ்டம் இல்லாத குழந்தையாகக் கருதப் பட்டது. கிரேக்க நாட்டில் இன்னும் ஒரு படி மேலே போய் லீப் வருடத்தில் கல்யாணம் செய்து கொள்ளுவதையே தவிர்த்தனர்.
லீப் வருடமும் சினிமாவும்:
அயர்லாந்து நாட்டில் பழைய காலத்தில் இருந்த வழக்கத்தை அடிப்படையாக வைத்து 2010 ஆம் ஆண்டு ‘லீப் இயர்’ (Leap Year) என்ற நகைச்சுவைப் படம் வெளியானது.  தன் மனதுக்குப் பிடித்தவனை ‘ப்ரொபோஸ் ‘ செய்ய அயர்லாந்துக்கு பிரயாணம் செய்யும் ஒரு பெண்ணின் கதையை நகைச்சுவையுடன் விவரிக்கிறது இப்படம்.
19 ஆம் நூற்றாண்டு வெளி வந்த ‘The Pirates of Pinzance” என்கிற நகைச் சுவை  இசை நாடகம், கப்பற் கொள்ளைக்காரனான ஒரு இளைஞன் பற்றியது. வேலைக்குச் சேர்ந்தவுடன் அவனது பயிற்சி பருவம் (apprenticeship) அவனது 21 வயது வரை என்று நிர்ணயிக்கப் படுகிறது. முதலில் மகிழ்ச்சி அடையும் அவன் தன் பிறந்த நாள் பிப்ரவரி 29 என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைகிறான்! 84 வயதில் தான் அவனது 21 வது பிறந்த நாள் வரும்!
சராசரியாக 1461 குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டுமே இந்த லீப் வருடம் பிப்ரவரி 29 ஆம் தேதி பிறக்கும் பாக்கியத்தைப் பெறுகிறது.
இக்குழந்தைகள் ‘Leaplings’ என்று அழைக்கப் படுகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் பிறந்தநாளின் கால் பகுதியைத்தான் கொண்டாடுகிறார்கள். பிறந்த தேதி வராத வருடங்களில் பிப்ரவரி 28 அல்லது மார்ச் 1 ஆம் தேதி தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.
பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்த நம்மூர் பிரபலங்கள்: மறைந்த பிரதமர் மொரார்ஜி தேசாய் மற்றும் நடனக் கலைஞா் ருக்மிணி தேவி.
உலகப் புகழ் பெற்ற சூப்பர் மேன் பிறந்தது இதே பிப்ரவரி 29. இவரது 50 வது பிறந்த நாளை ‘டைம்ஸ்’ பத்திரிக்கை 1988 ஆம் ஆண்டு தனது அட்டைப் படத்தில் சூப்பர் மேனைப் பற்றிய விவரங்களை வெளியிட்டு கொண்டாடியது.
ஆஸ்திரேலியாவில் உள்ள தாஸ்மேனியா பிரதமர் சர் ஜேம்ஸ் வில்சன் பிறந்தது, இறந்தது இரண்டுமே பிப்ரவரி 29 ஆம் தேதிதான்!
2012 லீப் வருடம் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த ஆண்டின் தெரியாத விசேஷங்கள்:
இந்த ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் Rare Disease Day யாக கடை பிடிக்க உள்ளனர். குணப்படுத்த முடியாத, அரிதான,  நோய்களை ‘rare disease’ என்கிறார்கள். இந்நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு நாளாக பிப்ரவரி 29 ஆம் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் டிஸ்னி லாண்ட் இந்த வருடத்தில் வரும் ஒரு அதிகப் படியான நாளைக் கொண்டாட 29 ஆம் தேதி 24 மணி நேரமும் திறந்திருக்கும்.
சரி, இப்போது முதலில் கேட்ட கேள்விக்கு பதில் பார்ப்போமா? பிப்ரவரி 29 இல் பிறந்தவர்கள் தங்கள் பொன்னான பிறந்தநாளை தங்களது 116 வது வயதில் கொண்டாடுவார்கள்!!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2012

பம்மல் சம்பந்த முதலியார் பிறந்த நாள் பிப்ரவரி 01




"நாடகக்கலைப் பிதாமகர்' பம்மல் சம்பந்த முதலியார் பிறந்த நாள் பிப்ரவரி 01 
தமிழுக்குப் பெருமை தருவது நாடகக்கலை. முத்தமிழில் நாடகம் இயலையும், இசையையும் தன்னகத்தே கொண்டது. நாடகத்தின் வெற்றிக்குக் காரணம், நல்ல கதை, கதைப் பாத்திரங்களுக்கேற்ற நடிப்பு, உணர்ச்சியைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்தும் ஆற்றல்.
நாடகக்கலையின் அறிவுபூர்வமான வளர்ச்சியே திரைப்படம். மேடையில் வெற்றிபெற்ற நாடகங்களின் உரிமையை விலைக்கு வாங்கித் திரைப்படமாகத் தயாரித்தனர். ஆனால், மேடையில் நடிக்கப்பட்ட நாடகங்கள் சிற்சில தவிர, மற்றவை சிறப்பாகப் பாடக்கூடியவர்களால் வெற்றியடைந்தன. பெண் பாத்திரங்களை ஆண்களே ஏற்கும் நிலை இருந்தது. பெரும்பாலும் புராணப் படங்களே மேடையில் நடிக்கப்பட்டன.
சங்கரதாஸ் சுவாமிகளும், பம்மல் சம்பந்த முதலியாரும் நாடகத் துறையில் காலடி எடுத்து வைத்தபிறகே நாடகத்துக்கு மதிப்பு ஏற்பட்டது.
சென்னையில் பம்மல் என்ற கிராமத்தில் 1873-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் விஜயரங்க முதலியார். தாயார் பெயர் மாணிக்கவேலு அம்மாள்.
"நாடக உலகப் பிதாமகர்' என்று அழைக்கப்பட்டு நடிகர்களால், நாடகத் தயாரிப்பாளர்களால் போற்றப்பட்ட சம்பந்த முதலியார், பிறந்த சிற்றூரான பம்மலுக்குப் பெருமையும் புகழும் சேர்த்தவர்.  சென்னை, மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். சட்டம் படித்து வழக்குரைஞரானார்.
தந்தை, சிறுவயதில் பயிற்றுவித்த ஒழுக்கம், கட்டுப்பாடு, சத்தியம் தவறாமை இவற்றை என்றும் விடாது கடைப்பிடித்தார். அதனால், அவர் 1924-ஆம் ஆண்டு சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியானார்.
வழக்குரைஞராக, நீதிபதியாக புகழ் பெறுவதற்கு முன்பாகவே அவர் நாடகத்துறையில் பேரும் புகழும் பெறவேண்டியிருக்கும் என்று அவரோ, வீட்டில் உள்ளவர்களோ நினைத்துப் பார்த்தது கிடையாது. 1891-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அவர் வாழ்க்கையில் முக்கியமான நாள். அவர் தமிழ் நாடகங்கள் எழுதுவதற்கும் நடிப்பதற்கும் உந்து சக்தியாக இருந்த "சுகுண விலாஸ சபை' அன்றுதான் நிறுவப்பட்டது.
பல்லாரி கிருஷ்ணமாச்சாரி என்பவர் ஆந்திர மாநிலம் பல்லாரி என்ற ஊரிலிருந்து சென்னைக்கு வந்து, விக்டோரியா நினைவு மண்டபத்தில் (மெமோரியல் ஹால்) தெலுங்கு மொழியில் நான்கைந்து நாடகங்கள் நடத்தினார். அவை இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன. இதனால், நாடக சபை ஒன்றைச் சென்னையில் நிறுவ வேண்டும் என்று சில இளைஞர்கள் விரும்பினார்கள். அதுபோன்ற எண்ணம் கொண்டவருள் சம்பந்த முதலியாரும் ஒருவர்.
அவர் எண்ணத்தை ஊக்குவிக்க, அவரின் இளம் வயது நண்பர் வெங்கட கிருஷ்ணநாயுடு என்பவர், (சிறுவயதிலிருந்தே நாடகம் பார்ப்பதில் ஈடுபாடு கொள்ளாத சம்பந்தனாருக்கு, பல்லாரி நாடகமே காரணம் என்பதை அறிந்தார்) சம்பந்தனாரின் ஆவலுக்குத் தூண்டுகோலாக இருந்தார். அவர்கள் எண்ணம் நிறைவேறத் தொடங்கப்பட்டதுதான் "சுகுண விலாஸ சபை'.
அச்சமயம் சம்பந்தனார், "சகுந்தலா' என்ற நாடகத்தைத் தமிழாக்கம் செய்துகொண்டிருந்தார். அந்த நாடகத்தைத் தயாரித்து, சுகுண விலாஸ சபையில் அரங்கேற்ற அன்பர்கள் ஆதரவு தந்தார்கள். அப்போது, அவருக்கு வயது பதினெட்டு. பி.ஏ. தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தார்.
அங்கத்தினர்கள் ஒத்துழைப்போடு சுகுண விலாஸ சபை சிறப்பாக வளர்ந்தது. சம்பந்தனாரின் நாடகக் கனவு நிறைவேறி வந்தது. நாடகத்தில் நடிப்பவர்களின் தரம் குறைந்திருந்த காலத்தில் சம்பந்தனாரின் நாடகங்கள் கண்ணியமானவை என்ற பெயர் பெற்றது. பாடல்கள் நிறைந்தனவாகவும், உரையாடல்கள் பெரும்பாலும் செய்யுள் நடையிலும் இருந்தன. சமூகத்துக்கு நீதி புகட்டும் கதையைத் தேர்ந்தெடுத்தே நாடக வடிவமாக்கினார் சம்பந்தனார். அதை, சமூகத்தில் உயர் தட்டில் உள்ளவர்கள், அறிஞர்கள், புலவர்கள் பாராட்டி வாழ்த்துக் கடிதங்கள் எழுதினார்கள்.
மனோன்மணீயம் நாடகம் எழுதிய சுந்தரம்பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை, அஷ்டாவதானம் பூவை.கலியாணசுந்தரம் பிள்ளை முதலிய அறிஞர்கள் சம்பந்தனாரின் நாடகத்தைப் பார்த்துப் பெரிதும் பாராட்டினார்கள். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் "சாற்றுக் கவிதை' எழுதி அனுப்பினார்.  சம்பந்தனாரைவிட பரிதிமாற் கலைஞர் வயதில் இளையவர் என்றாலும், அவர் நாடகம் நடத்தும் முறை, உரையாடல்கள் போன்றவற்றைப் பாராட்டினார்.
நாடகம் வெற்றியடைய ஒவ்வோர் நிலையிலும், சம்பந்தனார் மிகவும் கவனம் செலுத்தினார். நாடகத்தில் தந்திரக் காட்சிகள் அமைத்து, நாடகம் பார்க்க வருவோரின் கரவொலியையும் பாராட்டுதலையும் பெற்றதனால் சம்பந்தனாரின் புகழ் பரவியது. கதைக்கேற்ற பாத்திரங்களைத் தேடி அவர்களுக்குச் சிறப்பாக ஒத்திகை செய்வித்த பிறகே மேடை ஏற்றுவார்.
அவரது முதல் நாடகம் "புஷ்பவல்லி'. அவர் எழுதிய நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவையாக இருந்தாலும், மிகவும் புகழ்பெற்ற நாடகம் "மனோகரா'.
மனோகரா நாடகத்தை எழுதத் தொடங்கியபோது அவரது தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு ஏதாவது நேர்வதற்குள் நாடகத்தை எழுதி அரங்கேற்றிவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் இருந்தார். ஆனால், முதல் காட்சி எழுதியவுடனேயே தந்தை உயிர் நீத்தார். மறுநாளே சம்பந்தனார் நாடகத்தின் இரண்டாவது காட்சியை எழுதுவதில் முனைந்தார். இதுபோலத்தான் தன் தாயும், மனைவியும் இறந்தபோதும் செய்தார்.
""என் துக்கத்தை மறக்க, நாடகம்தான் சிறந்த மருந்து'' எனக் கூறி, தான் எழுதிய காட்சிகளை வழக்கம்போல் நண்பர்களுக்குப் படித்துக் காட்டத் தொடங்கிவிடுவாராம். நாடகம் அவருடைய லட்சியமாக - உயிராக விளங்கியது.
மனோகராவின் நாடகக் காட்சி ஒவ்வொன்றையும் அவர் மிகக் கவனத்துடன் அமைத்தார். கதை அவருடைய சொந்தக் கற்பனை. நாடக ஆசிரியர் சம்பந்த முதலியார், தன் "நாடக நினைவுகள்' வரலாற்றில் குறிப்பிட்டதை அவர் எழுத்திலேயே தருவதில் தான் சிறப்பு இருக்கிறது.
""என் நண்பர் ஜெயராம நாயகருடைய வீட்டில் முழு ஒத்திகை நடைபெற்றது. அதில் முக்கியமாக எனக்கு ஞாபகம் இருக்கும் விஷயம் என்னவென்றால், இந்த நாடகத்தில் தற்காலத்தில் "இரும்புச் சங்கிலிக் காட்சி' என்று வழங்கிவரும் முக்கியக் காட்சியில் என் முழு தேக வலியுடன் மிகுந்த உரத்த சப்தத்துடன் "ஆக்ட்டு' செய்ததனால், அக்காட்சியின் முடிவில் சற்றேறக்குறைய வாஸ்தவத்திலேயே மூர்ச்சையானேன். அவ்வளவு நாள் தேக சிரமப்பட்டது அனாவசியம் என்றே இப்பொழுது யோசிக்கும்போது தோன்றுகிறது'' (நாடக மேடை நினைவுகள் - நூலை வெளியிட்ட ஆண்டு 1932).
மனோகரா நாடகம் சுகுண விலாஸ சபையாரால் 1895-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் நாள் விக்டோரியா நினைவு அரங்கில் நடைபெற்றது. நாடகத்தைக் கண்டு களித்த பெருமக்கள் மிகவும் பாராட்டினர். அந்தப் பாராட்டுதலும் வரவேற்பும் திரைப்படமாக ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்தபோதும் ஏற்பட்டன. இந்த நாடகம் பல நாடகச் சங்கங்களால் நடிக்கப்பட்டது.
சம்பந்தனார் எழுதிய  நாடகங்கள் மொத்தம் 94. அவைகளில் வெற்றிகரமாகத் திரையேறிய நாடகம் சபாபதி.
பம்மல் சம்பந்த முதலியார் வாழ்ந்த காலத்தில் நாடகத் தொழிலுக்கு மரியாதை குறைவு.நடிப்பவர்களை கூத்தாடிகள் என்றே அழைப்பார்கள். நாடகங்களில் பாடல்கள் அதிகம். நாடகத்துக்குச் சென்றுவந்தால் இசைக் கச்சேரிக்குச் சென்றுவந்த உணர்வுதான் ஏற்படும். அந்தச் சூழலை - நிலையை மாற்றியவர் சம்பந்தனார்தான்.
"நாடகத் தந்தை' என்று அவரைக் கூறுவதைவிட "நாடகக்கலைப் பிதாமகர்' என்று அழைப்பதே பொருத்தமாகும். அந்த அளவுக்கு மிக கவனத்தோடு நாடகக்கலையை வளர்த்தார். 1959-ஆம் ஆண்டு இவருக்கு "பத்மபூஷண்' விருதை பாரத அரசு வழங்கிச் சிறப்பித்தது. (முன்பே ஆங்கில அரசு ராவ் பகதூர் பட்டத்தை வழங்கியிருந்தது).
தெய்வ பக்தியும், பெற்றோரிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த ஒழுக்க சீலரான பம்மல் சம்பந்த முதலியார், 91-வது வயதில், 1964-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.
நாடகக் கலைக்கே தனிச் சிறப்பும் மரியாதையும் ஏற்படுத்திய பம்மல் சம்பந்த முதலியார் நினைவு, நாடகக்கலை உள்ளளவும் அழியாது.