வெள்ளி, 25 ஜனவரி, 2019

மொழிப்போர் தியாகிகள் தினம் ஜனவரி 25 .


மொழிப்போர் தியாகிகள் தினம் ஜனவரி 25 .

வீர வணக்கம் ! வீர வணக்கம் !!

சென்னை நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம் பாக்கம் சிவலிங்கம், விருகம் பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி...

இவர்களெல்லாம் இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் உயிர் நீத்த தியாகிகள்.

இந்தித் திணிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் 1965-ம் ஆண்டு தமிழகமே பற்றி எரிந்தது எனலாம். மாணவர்கள் முன்னின்று நடத்திய அந்தப் போராட்டத்தில் பல நூறு பேர் உயிர் நீத்தனர். போராட்டத்தை அடக்க ராணுவம் வந்தது.

மொழியைப் பாதுகாக்க நடைபெற்ற ஒரு போராட்டத்தை ஒடுக்க ராணுவம் களத்தில் இறங்கியதும், அந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன என்பதும் உலக வரலாற்றில் வேறெங்கும் இல்லாதது. அதனால்தான், 1965-ம் ஆண்டு போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையும் குலுக்கி எடுத்தது.

இந்தப் போராட்டம் 1960-களில்தான் உச்சத்தை எட்டினாலும், 1930-களிலேயே தொடங்கிவிட்டது. அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக 21-4-1938 அன்று ராஜாஜி தலைமை யிலான சென்னை மாகாண அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகளார், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்டோர் வழிகாட்டுதலில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். சென்னையில் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்ற நடராசனின் உடல் நலம் குன்றியது. மன்னிப்புக் கோரி கடிதம் எழுதித் தந்தால் விடுதலை செய்வதாக அரசு கூறியது. மன்னிப்புக் கேட்க மறுத்த நடராசன், 15-1-1939 அன்று உயிரிழந்தார்.

தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து, தமிழ் மொழியுணர்வால் உந்தப்பட்டு போராட்டக் களத்துக்குச் சென்ற நடராசன்தான் மொழிப் போராட்டத்தின் முதல் களப் பலி. அவரைத் தொடர்ந்து, அதே ஆண்டு மார்ச் 12-ம் தேதி கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்து சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

இந்த இரண்டு உயிர் பலிகளால் போராட்டம் மேலும் தீவிரமடையவே, இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணையை 21-2-1940 அன்று அரசு திரும்பப் பெற்றது. அடுத்து, 1948-ல் ஓமந்தூரார் முதல்வராக இருந்தபோது இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மீண்டும் கிளர்ச்சி ஏற்பட்டதால், அரசு பின்வாங்கியது. மேலும், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடரும் என்ற நேருவின் உறுதிமொழியால் போராட்டம் சற்று ஓய்ந்தது.

இந்நிலையில், 26-1-1965 அன்று முதல் இந்திய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்ற 1963-ம் ஆண்டின் ஆட்சி மொழி சட்ட மசோதாவால் மீண்டும் போராட்டம் உருவானது. இதனால், அண்ணா தலைமையில் இயங்கிய திமுகவின் போராட்டம் தீவிரமானது.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த திமுக தொண்டர் சின்னசாமி, இந்தி மட்டும் ஆட்சி மொழியாக அரியணையில் அமர்வதைத் தடுத்தாக வேண்டும் என்று, திருச்சி ரயில் நிலையம் எதிரே 25-1-1964 அன்று தீக்குளித்து மாண்டார்.

சின்னசாமியின் மரணம் அரசியல் எல்லையைக் கடந்து எல்லா தரப்பினரை யும் எழுச்சியூட்டியது. 25-1-1965 நெருங்க நெருங்க போராட்ட எழுச்சி அதிகமாகிக் கொண்டே சென்றது. 1965, ஜன. 25-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாணவர் இயக்கங்கள் கிளர்ச்சியில் இறங்கின.

சென்னை மாநகராட்சி ஊழியராக பணி யாற்றி வந்த கோடம்பாக்கம் சிவலிங்கம், அன்றைய தினம் தீக்குளித்து மாண்டார். மறுநாள், விருகம்பாக்கம் அரங்கநாதன் தீ்க்குளித்து இறந்தார். அதே நாளில் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் முத்து, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

27-ம் தேதி ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஊர்வலமாகச் சென்ற சிவ கங்கை மாணவர் ராசேந்திரன், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அதன் பிறகு, போராட்டம் மேலும் மேலும் வேகமெடுத்தது. போலீஸ் துப்பாக்கிச் சூடுகளும் அதிகரிக்க, உயிர்ப் பலிகளும் அதிகரித் துக் கொண்டே சென்றன. போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வந்தது. பொள்ளாச்சியில் பிப்ரவரி 12-ம் தேதி ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

நிலைமை மிகவும் மோசமானது. மாண வர்கள் போராட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அண்ணா அறைகூவல் விடுத்தார். ஆனால், போராட்டத்தை கைவிட தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு மறுத்து விட்டது. எல். கணேசன், விருதுநகர் பெ. சீனிவாசன், துரைமுருகன் என திமுகவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் அந்தக் குழுவில் தளகர்த்தகர்களாக இருந்தபோதும், மாணவர்களின் போராட்டத்தை நிறுத்த அண்ணாவால் முடியவில்லை.

இதனிடையே, இந்தித் திணிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் போக்கைக் கண்டித்து அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ.வி. அழகேசன் ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்தனர். அந்த ராஜினாமாக்களை ஏற்கும்படி குடி யரசுத் தலைவருக்கு, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பரிந்துரை செய்தார்.

'தமிழகம் தனி நாடாக பிரிந்து போக வேண்டாம் என்று கருதினால், பரிந் துரையை திரும்பப் பெறுங்கள்' என்று சாஸ்திரியிடம் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

வேறு வழியின்றி இந்தியுடன் ஆங்கில மும் ஆட்சி மொழியாக தொடரும் என்ற முடிவுக்கு ஆட்சியாளர்கள் வந்தனர். இத னால் மாணவர்களின் 50 நாள் போராட்டம் மார்ச் 15 அன்று முடிவுக்கு வந்தது.


வியாழன், 24 ஜனவரி, 2019

தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24...!!


தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24...!!

பெண் குழந்தை பெற்றவர்கள் கடவுளிடம் வரம் பெற்றவர்கள் மட்டுமல்ல பாக்கியசாலிகளும் கூட. அன்று பெண் குழந்தைகளை சாபமாக பார்த்தவர்கள், இன்று பெண் குழந்தைகளை வரமாக பார்க்கிறார்கள்.

வரமாக பெற்ற பெண் குழந்தைகளை நாம் கௌரவிக்க வேண்டாமா? இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பல தினங்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும், இதில் கவனிக்கத் தகுந்த தினம்தான் தேசிய பெண் குழந்தைகள் தினம்.

பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களது திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் தேசிய அளவில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய பெண் குழந்தைகள் தினம், தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிர்த்து போராடுவதற்குப் பெண்களுக்கு அதிகாரம் தேவை என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

பெண் குழந்தை பெற்றவர்களுக்கு :

குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுப்பது பெற்றோர்களின் கடமையே ஆகும்.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது தங்களை தவிர வேறு நபர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும், முகம் தெரியாதவர்கள் யாரேனும் அழைத்தால் அவர்களுடன் போகக்கூடாது என்பதை பற்றியும் சொல்லிக்கொடுத்து, குழந்தைகளிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

குட் டச், பேட் டச் சொல்லி கொடுங்கள் :

பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முதலில் பெற்றோர்கள் கண்டிப்பாக தங்களின் பெண் குழந்தைகளுக்கு எது குட் டச்? எது பேட் டச்? என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

காமுகர்கள் முதலில் குழந்தைகளுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக்கொடுத்து அவர்களை தன் வசப்படுத்துவார்கள். எனவே, குழந்தைகளுக்கு பரிசு வாங்கி கொடுப்பவர்கள் எல்லாம் மிக அன்புடையவர்கள் என்று நாம் சொல்லி கொடுக்கக்கூடாது. அது தவறான புரிதலாக மாறும்.

பெற்றோர்கள் தன் குழந்தைகளிடம் யாருக்கும் முத்தம் கொடுக்க சொல்லியோ, கட்டிப்பிடிக்க சொல்லியோ வற்புறுத்தக்கூடாது. ஏனெனில், இறுதியில் இந்த பழக்கமே அவர்களுக்கு ஆபத்தாக முடியும்.

பேருந்தில் செல்லும் போதும்கூட சிலர் காமுகர்கள் இருக்கலாம். அது நமக்கு தெரியாது. எனவே அத்தகையவர்களிடம் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள அவர்கள் எந்த நோக்கத்தில் உங்கள் குழந்தைகளை தொடுகிறார்கள் என்பதை அவர்களுக்கு முன்னரே (குட் டச், பேட் டச்) சொல்லி கொடுக்க வேண்டும்.

இன்றைய காலத்திற்கேற்ப உங்கள் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக கராத்தே, சிலம்பாட்டம் போன்ற இன்னும் சில தற்காப்பு கலைகளை கூட கற்றுக்கொடுக்கலாம்.

ஒவ்வொரு வயது குழந்தைக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்றவாறு சொல்லி கொடுக்க வேண்டும். அதே சமயம் மிக சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லி கொடுக்க வேண்டும். இல்லையெனில் மறந்து விடுவார்கள்.

பாதுகாப்பு :

பெண் குழந்தைகள் கண்டிப்பாக தற்காப்பு கலையை பயில்வது மிகவும் நல்லது.

பெண் குழந்தைகள் தனியாக வெளியில் செல்லும்போது விலையுயர்ந்த நகைகளை அணிந்து செல்லக்கூடாது.

முதன்முறையாக தனியாக பயணிப்பவராய் இருப்பின், தைரியமாக நடந்து கொள்ளவேண்டும்.

அந்நியர்களிடம் இருந்து எந்த விதமான பொருளையும் வாங்கக்கூடாது. யாரேனும் பிஸ்கட் அல்லது பழங்கள் கொடுத்தால், அதை பணிவாக மறுத்து விட வேண்டும்.

பெற்றோர்கள் பெண்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய தாரக மந்திரம் :

யாரையும் எளிதில் நம்பக்கூடாது. அனைவரிடமும் பழகும்போது எச்சரிக்கையுடன் பழக வேண்டும்.

இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்....

பெண் குழந்தைகளை பாதுகாப்பது நம் தலையாய கடமை..!!

புதன், 9 ஜனவரி, 2019

பொங்கல் விழா தகவல்கள்


பொங்கல் விழா தகவல்கள்...

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

வரலாறுசங்க காலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். தைப்பொங்கல் பண்டிகை இப்படித்தான் மலர்ந்தது. பல ஆயிரம் ஆண்டுகளை கடந்துள்ள பொங்கல் இன்று உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகையாக மாறியுள்ளது.

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.


முதல் நாள் போகிப் பண்டிகை (13-1-18)

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது நாளை (சனிக்கிழமை) கொண்டாடப் படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப் படுகிறது. இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்‘ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.

போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

போகி பண்டிகைக்கும் இந்திர தேவன் (மேகம் மற்றும் மழையின் கடவுள்) மற்றும் கிருஷ்ணா பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

முன்னதாக, தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் வணங்கி வந்தனர். இந்திரனுக்கு கொடுக்கப்பட்டு வந்த இந்த மரியாதை அவருக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்க செய்தது. மற்றவர்களை காட்டிலும் தான் தான் மிகவும் சக்தி வாய்ந்தவராக அவர் கருதினார். குழந்தை கிருஷ்ணருக்கு இது தெரிய வந்தவுடன், இந்திர தேவனுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க விரும்பினார்.

கிருஷ்ணன் தன்னுடைய ஆடு மேய்க்கும் நண்பர்களை கோவர்தன மலையை வணங்க தூண்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திர தேவன் இடைவிடாத இடி, மின்னல், பலமான மழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினார்.

அந்த புராணத்தின் படி, ஆடு மேய்ப்பவர்களையும், ஆடுகளையும் பாதுகாக்க, மிகப்பெரிய கோவர்தன மலையை தன் சிறிய கைகளில் தூக்கினார். இந்திர தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க அந்த மலையை தூக்கி சுமந்தபடியே நின்றார் கிருஷ்ணர். 3 நாட்களுக்கு நீடித்தது அந்த மழை. அதன் பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டார் இந்திர தேவன்.

பணிவுடன் இருப்பதாக வாக்களித்த இந்திர தேவன், கிருஷ்ணரின் மன்னிப்பை கோரினார். அன்று முதல், இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார்.

இதுவே பொங்கல் கொண்டாட்டத்திற்கு விதையாக அமைந்தது. இந்த பண்டிகை இந்திரனின் மற்றொரு பெயரை பெற்று புராணக்கதையாக மாறியுள்ளது.
இதையட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.

பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு.

போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.



இரண்டாம் நாள் தைப்பொங்கல் (14-1-18)

தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தைப் பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட உற்சாகம் மனம் முழுக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். புதுப்பானை பலர் வாங்குவர். புத்தாடை வாங்குவர்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிவார்கள். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர்.

புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி சூரியனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.

சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவி குலவையிடுவார்கள். பிறகு பொங்கலை சூரியனுக்கு படைத்து வழிபடுவார்கள். பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.


மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் (15-1-18)

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப் படும் பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படு கிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

மாட்டுப் பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய புராணக்கதை ஒன்று உள்ளது. அது சிவபெருமான் சம்பந்தப்பட்டது. பொங்கலுக்கு மூன்றாவது நாளான மாட்டுப்பொங்கல் என்பது, சிவபெருமானும் அவருடைய வாகனமான நந்தியும் சம்பந்தப்பட்டதாகும்.

புராண கதையின் படி, ஒரு முறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறு சிவபெருமான் கேட்டுள்ளார். தவறாக சொல்லிய நந்தி தினமும் எண்ணெய் மசாஜ் செய்த பிறகு குளித்து, மாதம் ஒரு முறை மட்டும் உண்ணுமாறு அங்கே இருக்கும் மக்களிடம் தான் கூறச் சொன்னதாக நந்தியை கூற சொன்னார்.

ஆனால் நந்தியோ மாதமுறை எண்ணெய் மசாஜ் செய்து குளித்து, தினமும் உண்ணுமாறு தவறாக கூறி விட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்தியை சபித்தார். அது செய்த தவறினால் இனி பூமியில் நெற்பயிர்களுக்கு பஞ்சம் ஏற்படும் என கூறினார். இனி அது என்றுமே பூமியில் வாழ்ந்து, மக்களுக்கு அவர்களின் நிலத்தை உழுது கொடுக்க வேண்டும் என அவர் சாபமளித்தார். அதனால் தான் மாட்டுப் பொங்கலுடன் மாடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.


நான்காம் நாள் காணும் பொங்கல் (16-1-18)

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத் தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள். நன்றி மாலை மலர்.

ஞாயிறு, 18 நவம்பர், 2018

உலக ஆண்கள் தினம் நவம்பர் 19.


உலக ஆண்கள் தினம் நவம்பர் 19.

நவம்பர் 19-ம் நாள் அகில உலக ஆண்கள் தினமாக (International Men’s Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்வதேச ஆண்கள் தினம் (IMD – International Men’s Day) ஆண்டு தோறும் நவம்பர் 19-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது 1999-ல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் & டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.
உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.
பொதுவாக அனைத்து சிறப்பான நாட்களும் பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட்டு வருகிறது. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப் படுகின்றன என்பதை நம் சமூகம் அங்கீகரிக்கவே இதுபோன்ற சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படும் சூழ்நிலை உருவானது.
இந்த ஆண்கள் தினத்தை அனுசரிக்கும் நோக்கங்கள்:
ஆண்கள் மற்றும் இளைஞர்களின் சுகாதார மேம்பாடு, ஆண், பெண் இருபாலரும் சம உரிமையுடன் மனமொருமித்த செயல்பாடு போன்றவற்றை வேண்டுவது,
ஆணினத்தின் வழி காட்டுதலுக்கு நேர்மையும், மனத்திண்மையும் ஒருங்கே கொண்ட முன் மதிரிகளை அடையாளம் காண்பது
அனைத்துத் துறைகளிலும் கடினமான செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, பல இடர்களுக்கு மத்தியில் முழுமையான அர்ப்பணிப்புடன் பணி புரிந்துவரும் ஆணினத்தின் சாதனைகளை அடையாளம் கண்டு அதற்கு நியாயமாகக் கிட்டவேண்டிய அங்கீகாரத்தை சமுதாயத்திலிருந்து பெறுதல்
வரலாறு தோன்றிய காலத்திலிருந்து ஆண் என்பவன் சமுதாயத்தின் காப்பாளனான, சமூகத்தின் அடிப்படைத்தேவைகளை தன் உழைப்பால் பூர்த்தி செய்பவனாக அறியப்படுகிறான் (the role of a protector and provider). அதுதான் ஆணின் முக்கிய கடமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆணின் இந்த மிக முக்கிய பங்களிப்பு சமூகத்தில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறவில்லை.


இந்த அடிப்படை மனப்பான்மையின் நீட்சியாகத்தான் தன்னை விட்டு வெளியேறிய முன்னாள் மனைவிக்கும் பராமறிப்புத்தொகை, ஜீவனாம்சம் என்ற வகைகளில், அவன் கப்பம் கட்டி அழவேண்டிய கட்டாயத்திற்கு அவனைத் தள்ளும் சட்டங்களும் தீர்ப்புக்களும் அமைகின்றன!
இத்தகைய தவறான போக்கை எதிர்த்து குரல் கொடுக்கும் நாளாக இந்த ஆண்கள் தினம் அமைகிறது/
முக்கியமாக இன்றைய நிலையில் இந்திய ஆண்கள் எதிர்கொள்ளும் சட்டபூர்வ பயங்கரவாதத்தையும்,
ஆண்களை பொருளாதார ரிதியிலும் மன ரீதியாகவும் கொடுமைப் படுத்தும் போக்கையும்,
பல ஆணெதிர் சட்டங்களின் செயல்பாடுகளால் இந்திய ஆண்கள் தொடர்ந்து எதிர் கொள்ளும் சித்திரவதைகளையும், ஆணினத்தையே அழிக்கச் செய்யும் ஒரு பால் சார்பு நிலையையும் எதிர்த்துப் போராடுவது போன்றவற்றிற்காகவுமே ஆண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டியதிருக்கிறது.
ஆணினத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இத்தகைய கொடுமைகளைக் களைய பாடுபடுவதற்காக அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் (All India Men’s Welfare Association) “AIMWA” என்னும் அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில் நாடெங்கும் சர்வதேச ஆண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

திங்கள், 8 அக்டோபர், 2018

உலக அஞ்சல் தினம் (World Post Day ) அக்டோபர் 9


உலக அஞ்சல் தினம் (World Post Day )
அக்டோபர் 9 

உலக அஞ்சல் தினம் (World Post Day )
அக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது.
அக்டோபர் 9 , 1874 இல்
சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில்
சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.
உலக அஞ்சல் தினப் பிரகடனம்.

உலக அஞ்சல் தினப் பிரகடனம்

உலகின் பல்வேறு நாடுகளுக்கும் உரிய புவியியல், அரசியல், மதம் போன்ற பல்வேறு எல்லைகளையும், தடைகளையும் தாண்டி எமது மக்களை முழு உலகுக்கும் இணைக்கின்றோம். மக்கள் அவர்களுக்குரிய பிரத்தியேகமானதும், மிகப் பெறுமதி வாய்ந்ததுமான தகவல்களையும், பொருட்களையும் எம்மிடம் ஒப்படைப்பது, அவற்றைப் பாதுகாத்து மிக வேகமாகவும் மிகக் கவனத்துடனும் அதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பார்கள் என்ற எம்மீதுள்ள பெரு நம்பிக்கை என்பதை நாம் அறிந்துள்ளதோடு அவர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உயர் செயற் திறமையுடனும், நேர்மையுடனும், பாதுகாப்புடனும் இரகசியத் தன்மையைப் பேணி அவர்களுடைய தகவல்களையும், பொருட்களையும், உரிமைகளையும் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், நேற்றைய தினத்தை விட நன்றாக இன்றைய தினத்திலும், இன்றைய தினத்தை விட நன்றாக நாளைய தினத்திலும் திறமையான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அர்ப்பணத்துடன் செயற்படுவோம்.

உலகில் முதலிடம்
உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியாவுள்ளது,
இந்திய அஞ்சல் துறை 1764ல் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.


உலக தபால் தினம் அக்டோபர் 9 ஆம் தேதி சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது. இது முதன் முதலில் 09.10.1874-ல் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் சர்வதேச தபால் ஒன்றியம் (Universal Postal Union) ஸ்தாபிக்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தபால்துறை என்பது மற்ற எல்லாத் துறைகளையும் விட சிறப்பான தொன்றாகும். இது மனித வாழ்வின் அங்கமாக தற்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கிறது. அறிவியல் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன் செய்திக் கருவியாய் விளங்கியது நம் தபால் துறை தான். ஆரம்ப காலத்தில் ஒருவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளை அனுப்பப் பயன்பட்டது கடிதங்கள். அவை வெறும் காகிதங்கள் மட்டும் அல்ல. சில கடிதங்கள் காவியமாகவும், வரலாறாகவும் ஆகியுள்ளன!
உலகின் முதல்தர விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக் போட்டி கூட கடிதப் பரிமாற்றத்தில் ஏற்ப்பட ஒரு விளைவின் ஞாபகார்த்தமாகவே ஆரம்பிக்கப்பட்டது என்று வரலாறு சான்று கூறுகின்றது. உத்தியோகப்பூர்வமான தகவல் பரிமாற்றங்களுக்கு இன்றும் தபால் முறை அவசியமாகின்றது.
ஆரம்ப காலத்தில் தபால்களைப் போடுவதற்கு தபால்பெட்டிகள் பயன்படுத்தப்படவில்லை. கடிதங்களைக் கொண்டு செல்பவர்களே கடிதங்களைப் பெற்றும் வந்தனர். 1653 ஆம் ஆண்டு லாங்குவிலே (Longueville) மாகாண மின்ஷ்டர் பாகுட் (Minister Fouget) என்ற தபால் அதிபரின் மனைவியின் யோசனையின் பேரில்தால் தபால்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தபால்பெட்டிக்கு மாதிரி வடிவத்தை சார்லஸ் ரீவ்ஸ் என்பவர் அமைத்துக் கொடுத்தார். சிவப்பு வண்ணத்தில் தபால்பெட்டிகன் வைக்கப்பட்டதன் காரணம் மக்களின் பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி கொண்டதால் ஆகும்.
இன்றளவும் நம் உலகம் அறிவியல் ரீதியாக வளர்ந்து தான் வருகின்றது. அவ்வாறிருக்கு இந்திய தபால் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறைகள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. அதில் ஒன்று தான் ‘My Stamp’ (மை ஸ்டாம்ப்). இது என்னவென்றால் நம் புகைப்படங்களையே நாம் அஞ்சல் தலைகளாக பெறும் முறை ஆகும். இதற்கு ஆகும் செலவு ரூ.300. இதனை முறையாக தபால் துறையில் விண்ணப்பித்து ரூ.300-க்கு பணிரெண்டு தபால் தலைகளைத் பெறலாம். இவை அனைத்து வயதினருக்கும் பொருந்தும். நம் புகைப்படங்களையே அஞ்சல் தலையாக பார்க்கும் இந்த நடைமுறை மகிழ்ச்சிக்குரியதாகும். இதை நாம் ஒரு பரிசாகவும் பிறகுக்கு அளிக்கலாம்.
தபால் துறையில் எத்தனையோ நலத்திட்டங்கள் உள்ளன. தபால் துறையில் மக்களின் பயன்பாடு குறைந்து கொண்டே வரும் இவ்வேளையில், அத்துறையையும் நாம் பயன்படுத்தி மகிழ்வதோடு மட்டுமல்லாமல், மக்களாகிய நாம் தபால் துறையைப்பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவோமாக!
ஏ.உதயகுமாரி

அ றிவியலின் வளர்ச்சியால் உலகில் நாள்தோறும் எண்ணற்ற மாற்றங்கள். இன்டர்நெட், இமெயில், ஃபேக்ஸ், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்று பலவகையான நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இன்றைய அறிவியல் உலகம் சுருங்கிவிட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் நேரடியாகவே அனைத்துச் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும், ஆடியோக்களும் பரிமாறப்படுகின்றன. ஆனால், பழங்காலத்தில் இத்தகைய வசதி எதுவும் இல்லை. முதலில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள ஓலை பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு, காகிதத்தின் வரவால் தபால் உபயோகப்படுத்தப்பட்டது. அத்தகைய தபால் தினம் இன்று.
அறிவியல் தொழில்நுட்பத்தால் இன்றைய தலைமுறையினர் தபால் எழுதுவதையே முற்றிலும் குறைத்துவிட்டனர். இதனால் அவர்களிடம் சுயமாகக் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது. இருப்பினும், அவர்களுடைய தினசரி வாழ்க்கையில் தபால் துறை ஏதாவது ஒரு வழியில் முக்கியப் பங்காற்றுகிறது. தற்போது அலுவலக தொடர்பான கடிதங்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியைத் தபால் துறையே செய்துவருகிறது.
உலக தபால் அமைப்பானது, 1874-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் இந்தியாவும் அங்கத்தினராக உள்ளது. உலக தபால் அமைப்பை நினைவுபடுத்தும் விதமாக 1969 அக்டோபர் 9-ம் தேதி உலக தபால் தினம் அறிவிக்கப்பட்டது. இந்தத் துறையின் சேவைகளைப் பாராட்டும் விதமாகவும், இதன் திட்டங்கள் பற்றியும் மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டில் 1764-ம் ஆண்டு தபால் துறை தொடங்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற காலத்தில் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது இந்தியாவில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் உள்ளன. இதில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் கணினி மையமாக்கப்பட்டு உள்ளன. உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை விளங்கிவருகிறது. இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில், அக்டோபர் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தபால் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆறு இலக்க அஞ்சல் குறியீட்டு எண்களைக்கொண்டு ஒவ்வோர் ஊர்களுக்கும் தபால்கள் அனுப்பப்பட்டு உரியோரிடம் சேர்க்கப்படுகிறது. பதிவுத் தபால், விரைவுத் தபால், இ-போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ் தவிர, ஸ்டாம்ப் விற்பனை, சேமிப்புக் கணக்குகள் போன்றவற்றையும் தபால் துறை செய்துவருகிறது. தற்போது 24 மணி நேரமும் செயல்படும் தபால் நிலைய ஏ.டி.எம் மிஷின்களும் உள்ளன. தந்திப் பிரிவு செயல்பாட்டில் இருந்தபோது அது, தபால் துறையிடம் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இளையத் தலைமுறையினர், தபால் மூலமும் செய்திகளை அனுப்பலாமே?
- ஜெ.பிரகாஷ்


அஞ்சல் துறை பரிசளித்த கடித இலக்கியம்!
சா ர்.. போஸ்ட்...
இந்தக் குரலுக்காவே காத்திருந்தவர்கள்போல வீட்டிற்குள் இருந்து சிறுவர்கள் முண்டியடித்து ஓடி வருவார்கள். யார் கடிதத்தை வாங்குவது என்று பெரும் சண்டையே நடக்கும். தபால்காரர் சிறிது நேரம் இந்தச் சண்டையை வேடிக்கை பார்த்துவிட்டு, 'சண்டை போடக்கூடாது, இன்னைக்கு நீ வாங்கிக்க.. அடுத்த முறை அவன் வாங்கிக்கலாம்' என்றுகூறி கடிதத்தை கொடுத்துச்செல்வார்.
இந்தக் காட்சியை சமீபத்தில் எங்கேயாவது பார்த்திருந்தால் மறைந்து வரும் அரியக் காட்சியைப் பார்த்த பாக்கியசாலிதான் நீங்கள். 1712 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் அஞ்சல் சேவை முதன்முதலில் தொடங்கியது. இந்தியாவில் ஆங்கில ஆட்சிக் காலத்தில் 1764-66 காலக்கட்டத்தில் பெருநகரங்களிடையே அஞ்சல் சேவை தன் பயணத்தை ஆரம்பித்தது. ஆனால் 1900ஆம் ஆண்டை ஒட்டி சற்றுமுன்னும் பின்னும்தான் இந்திய மக்களின் கடிதப் பரிவர்த்தம் பரவலானது.
இன்றைய தினம் உலக அஞ்சல் தினம். அஞ்சல் சேவையால் விளைந்த அற்புதமான வடிவம்தான் கடித இலக்கியம். இலக்கியச் செய்திகளை பரிமாறிக் கொள்வதை குறிப்பது மட்டுமே அல்ல. சில கடிதங்களின் தன்மையே இலக்கியமாகி விடுகிறது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்தி எழுதிய கடிதங்களை அரசியல் தொடர்பான உரையாடலாக மாற்றியிருப்பார்.
1918 ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் தனது மனைவி செல்லம்மாளுக்கு எழுதிய கடித்தத்தை 'என் அருமை காதலி செல்லமாளுக்கு... எனத் தொடங்குவார். மேலும் தன்னைப் பற்றி கவலை கொள்ளும் நேரத்தில் தமிழை நன்கு படித்தால் மகிழ்ச்சியடைவேன் என்று நெகிழ்ச்சியோடு முடித்திருப்பார். அதே ஆண்டில் நெல்லையப்ப பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில் தனது படைப்புகளை டெபுடி இன்ஸ்பெக்டரிடம் காட்டி அவரின் ஆட்சேபனை இல்லாமல் இருந்தால் மட்டுமே பிரசுரம் செய்ய முடியும் என்ற சூழலில் பாரதியார் இருந்ததையும் தெரிவிக்கிறது.
காந்தியடிகள் ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய தலைமை உரையை கடித வடிவில் நிகழ்த்தினார். தமிழறிஞர் மு.வ. அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பருக்கு என்று நான்கு கடித நூல்களை எழுதியுள்ளார். இவரின் கடிதங்களில் மிக செறிவான தமிழ் நடையை காணலாம். அறிஞர் அண்ணாவின் தம்பிக்கு எழுதிய கடிதங்கள் மிகப் பிரபலாமனவை. அண்ணாவின் கடிதங்கள் பலருக்கு அரசியல் உணர்வை ஊட்டியவையாகவும் அமைந்திருந்தன.
எழுத்தாளர் புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் பல இடங்களில் குறிப்பிடப்படுவன. தன் மனைவியை பிரிந்த நிலையில் தன் அன்பை கடிதங்கள் வழியே பகிர்ந்துகொண்டிருப்பதையும், காந்தியடிகள் கொல்லப்பட்டதை உருக்கமாக எழுதியிருப்பதையும் காணமுடியும். இது எல்லாவற்றையும் விட, அவரின் துன்பமான சூழலிலும் மனைவிக்கு தனது கடிதங்களால் நம்பிக்கை ஊட்டுவதையும் காணமுடியும்.
வல்லிகண்ணன் - தி.க.சி. இந்த இருவரின் கடிதங்கள் வராத இலக்கியவாதி தமிழில் அநேகமாக இருக்க முடியாது. அந்தளவு புதிதாக எந்த படைப்பு வந்தாலும் அதில் இருக்கும் நிறைகளைப் பாராட்டி, குறைகளை கவனமாக அந்தப் படைப்பாளர் திருத்திக் கொள்ளும் விதமாய் பக்குவமாய் குறிப்பிடுவார்கள். கடிதங்களில் மட்டுமல்லாமல் தாங்கள் பங்கேற்கும் விழாக்களில் அவர்களைப் பற்றி குறிப்பிடுவதும் உண்டு. தி.க.சி. தான் தினமும் ஆறுக்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதுவதாக குறிப்பிடுவார்.
எழுத்தாளர் வண்ணதாசன் கடிதங்கள் ரசனையானவை. தான் சந்திக்கும் எளிய மனிதர்கள் பற்றி அழகியல் பூர்வமாக தன் நண்பர்களுக்கு அவர் எழுதும் கடிதங்களை பலரும் ஆவலோடு எதிர்ப்பார்கலாம். வண்ணதாசன் கடிதங்கள் எனும் தலைப்பில் இவரின் கடிதங்கள் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதைப் படிக்கும்போது, நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளை இந்த கோணத்தில் பார்க்க முடியும் என்பதும், அதனை இத்தனை ரசனையோடு எழுத முடியுமா என்றும் ஆச்சரியத்தை தரும். எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்களின் தொகுப்பும் அன்புள்ள கி.ரா.க்கு எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது.
எழுத்தாளர் அ.வெண்ணிலா தன் கணவரான மு.முருகேஷுக்கு எழுதிய கடிதங்கள் கனவிருந்த கூடு எனும் நூலாக வெளிவந்துள்ளது. இந்த நூலில் ஒரு பெண் தன் காதலனிடம் எதிர்ப்பார்க்கும் சின்ன, சின்ன விஷயங்களை மிக நுணுக்கமாக பதிவு செய்திருப்பார். இன்னும் பலரும் தன் கருத்துகளை கடித வடிவில் வெளிப்படுத்தி வந்தவண்ணம் இருக்கின்றனர். இந்த வகையில் எழுத்தாளர் பாமரனின் பகிரங்க கடிதங்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கன.
இப்படி தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய பதிவுகளை தந்த கடித இலக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துபோய்க்கொண்டிருப்பதுதான் சோகம்.
-விஷ்ணுபுரம் சரவணன்

வியாழன், 4 அக்டோபர், 2018

இராமலிங்க அடிகளார் பிறந்த தினம் அக்டோபர் 5 , 1823


வள்ளலார் என்று அழைக்கப்படும்
இராமலிங்க அடிகளார் பிறந்த தினம் அக்டோபர் 5 , 1823

வள்ளலார் என்று அழைக்கப்படும்
இராமலிங்க அடிகளார் ( அக்டோபர் 5 , 1823 – சனவரி 30 , 1874 ) ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்.
 "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.  திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.
சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர். வள்ளலாருக்கு எதிராக வழக்குமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆறுமுக நாவலர் .

பிறப்பு

இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள
மருதூரில் புரட்டாசி 19 (05.10.1823)இல் கருணீகர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு
பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர்
சென்னையில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.

பசியாற்றல்

அரிசி மூட்டைகள் இருக்கும் இராமலிங்க அடிகளால் உருவாக்கப்பட்ட தருமசாலை
இராமலிங்க அடிகள் 23–5–1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது பாராட்டுக்கு உரியதாகும். மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்

1. அருளாசிரியர்
2. இதழாசிரியர்
3. இறையன்பர்
4. உரையாசிரியர்
5. சமூக சீர்திருத்தவாதி
6. சித்தமருத்துவர்
7. சிறந்த சொற்பொழிவாளர்
8. ஞானாசிரியர்
9. தீர்க்கதரிசி
10. நூலாசிரியர்
11. பசிப் பிணி போக்கிய அருளாளர்
12. பதிப்பாசிரியர்
13. போதகாசிரியர்
14. மொழி ஆய்வாளர் (தமிழ்)
சர்வ சமய சமரச சுத்த சன்மார்கம்
இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்ட சத்திய ஞான தர்ம சபையின் முக்கிய நுழைவாயில்,வடலூர்
எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். உண்மையான ஞானி என்பதால் சாதிய பாகுபாடுகளை சாடினார் அதனால் உயர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார், இருப்பினும் தொடர்ந்து தன் வழியே பயணப்பட்டார்.
தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அறிவுநெறி விளங்க
சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். இத்தகு உயரிய நோக்கங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். 1867ஆம் ஆண்டில் மக்களின் பசித்துயர் போக்க சத்திய தரும சாலையையும் நிறுவினார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.
இவருடைய காலத்தில் இருந்தவர்கள்
ஆறுமுக நாவலர்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை
காஞ்சிபுரம் சபாபதி முதலியார்
இராமலிங்க அடிகள் கோட்பாடுகள்
இராமலிங்க அடிகள் கொள்கைகள்
1. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்
2. எதிலும் பொது நோக்கம் வேண்டும்
3. எந்த உயிரையும் கொல்லக்கூடாது
4. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது
5. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது
6. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்
7. புலால் உணவு உண்ணக்கூடாது
8. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
9. சாதி , மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது
10. மத வெறி கூடாது
அதாவது எந்த சமயத்தின் நிலைப்பாட்டையும், எல்லா மத நெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்கிறார்.
வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்
1. நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
2. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
3. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
4. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
5. பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
6. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
7. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே
8. குருவை வணங்கக் கூசி நிற்காதே
9. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
10. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே
படைப்புக்கள்

வள்ளலார் பதிப்பித்தவை
1. சின்மய தீபிகை

2. ஒழிவிலொடுக்கம்
3. தொண்டமண்டல சதகம்
இயற்றிய உரைநடை
1. மனுமுறைகண்ட வாசகம்
2. ஜீவகாருண்ய ஒழுக்கம்
திருவருட்பா
இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. [5] இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டன. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறைப் பதிப்பு வெளியிட்டுள்ளார்.
அருள் விளக்க மாலைப் பாடல் (4174)
நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார்
இலைநீ விழித்திதுப்பார் என்றெனக்கு விளம்பியசற் குருவே

கண்டன நூல்கள்
வள்ளலார் எழுதிய திருவருட்பாவுக்கு எதிராக பல கண்டன நூல்கள் வெளிவந்தன. வள்ளலார் மேற்கொண்ட சமய சீர்திருத்தத்தால் அவரை அன்றைய
சைவவாதிகள் ஏற்கவில்லை. இதன் தொடர்ச்சியாக வள்ளலார் எழுத்துக்களையும் புறம் தள்ளினர். எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் செய்தனர். வள்ளலார் முன் வைத்த மாற்றுப் பண்பாட்டையும் மறுத்தனர். 1868 இல் சண்முகம் பிள்ளை என்பவரால் திருவருட்பா தூஷண பரிகாரம் என்னும் நூலின் வழி இவ்விவாதம் தொடங்க ஆரம்பித்தது. 1869 இல் போலியருட்பா மறுப்பு என்ற நூல் எழுதப்பட்டது; இது அருட்பா அல்ல, போலி அருட்பா என்று பல காரணங்களைக் கூறி இந்நூல் மறுத்தது. இதற்கு எதிராக 12 கண்டன நூல்கள் வெளிவந்தன.
1904 இல் நா. கதிரைவேற்பிள்ளை வள்ளலாருக்கு எதிராக இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலுக்கு மறுப்பாக ம.தி. பானுகவி என்பவர், 1905 இல் இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பண கண்டன நியாய வச்சிர குடாரம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். சைவ சமயத்தில் சீர்திருத்தம் செய்த வள்ளலாரை பழைமை வாதிகள் ஏற்றுக் கொள்ள மறுத்த நிகழ்வுகளாகவே இக்கண்டன நூல் போக்குகளைப் பார்க்கலாம்.

நினைவு அஞ்சல்தலை

இந்திய அரசு இவரது சேவையை கருத்தில் கொண்டு 2007 ஆகஸ்ட் 17ல் அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்தது.


சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான ‘வள்ளலார்’ ராமலிங்க அடிகள் (Ramalinga Adigal) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l சிதம்பரம் அடுத்த மருதூரில் (1823) பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்தார். குழந்தைகளுடன் தாய் சென்னை அடுத்த பொன்னேரியில் குடியேறினார். பின்னர் சென்னை ஏழுகிணறு பகுதிக்கு இடம்பெயர்ந்தனர்.
l தமிழ் அறிஞரான அண்ணனிடமே கல்வியைத் தொடங்கினார். பின்னர், தக்க ஆசிரியர்களிடம் பயின்று, தமிழ் அறிவை வளர்த்துக்கொண்டார். ஆன்மிகச் சொற்பொழிவாளரான அண்ணனுக்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லை. முருகன் பாடல்களை பாடிவிட்டு வருமாறு அனுப்பிவைக்கப்பட்ட 9 வயது ராமலிங்கம், மடைதிறந்த வெள்ளமென சொற்பொழிவாற்றி வியப்பில் ஆழ்த்தினார்.
l ஒருமுறை கோயிலில் இருந்து நள்ளிரவில் வீடு திரும்பியவர், அண்ணியை எழுப்ப மனமின்றி வீட்டு திண்ணையில் பசியோடு படுத்துவிட்டார். அவருக்கு அம்பிகையே நேரில் வந்து அறுசுவை உணவு பரிமாறியதாக நம்பப்படுகிறது.
l சைவம், வேதாந்தம், சைவ சித்தாந்த சாஸ்திரங்கள், தமிழ் இலக்கிய நூல்களை ஆராய்ந்தறிந்தார். பசி, பட்டினி, பிணி, கல்வியின்மையால் மக்கள் துன்புறுவதைக் கண்டு துடித்தார். ‘ஜீவகாருண்யமே மோட்சத்துக்கான திறவுகோல்’ என எடுத்துக் கூறினார்.
l ‘சமரச வேத சன்மார்க்க சங்கம்’ என்ற அமைப்பை 1865-ல் உருவாக்கினார். பிறகு இதை ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்’ என்று மாற்றினார். மக்கள் எளிதாக பின்பற்றக்கூடிய கொள்கைகளை வகுத்தார். ‘கடவுள் ஒருவரே. உயிர் பலி, புலால் உண்பது, ஜாதி, மத, பொருளாதார வேறுபாடுகள் கூடாது. பிற உயிர்களை தன்னுயிர்போல கருத வேண்டும். பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது உயர்வான புண்ணியம்’ என உபதேசித்தார்.
l பெண் கல்வியைப் போற்றினார். யோக சாதனப் பயிற்சி பெண்களுக்கும் அவசியம் என்றார். அனைவரும் தமிழ், ஆங்கிலம், வடமொழி கற்க வலியுறுத்தினார். திருக்குறள் வகுப்புகள் நடத்தினார்.
l சிறு வயதிலேயே சிறப்பாக கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். முருகனை வாழ்த்தி ‘தெய்வமணி மாலை’ என்ற பாமாலையை இயற்றினார். இவர் பாடிய ‘திருவருட்பா’ 6 திருமுறைப் பகுதிகளாக 399 பதிகங்கள், 5,818 பாடல்களைக் கொண்டது. ‘மனுமுறை கண்ட வாசகம்’, ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ ஆகியவை இவரது உரைநடை நூல்கள்.
l தண்ணீரில் விளக்கை எரியச் செய்தது உட்பட பல அற்புதங்களை இவர் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. 1,596 வரிகள் கொண்ட அருட்பெருஞ்ஜோதி அகவலை ஒரே இரவில் பாடி முடித்தார். சஞ்சீவி மூலிகைகள் குறித்து பல குறிப்புகளை எழுதியுள்ளார்.
l வடலூரை சேர்ந்த விவசாயிகள் 80 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க, அங்கு 1865-ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தர்மசாலையை அமைத்தார். அங்கு ஏழைகளின் பசியாற்றினார். அதனால் ‘வள்ளலார்’ எனப் போற்றப்பட்டார்.
l வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மிக்கவர். ‘அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை’ என்று இறைவனை ஜோதி வடிவில் கண்ட ராமலிங்க சுவாமிகள் 51-வது வயதில் (1874) இறை ஜோதியில் ஐக்கியமானார்.

உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 05.


உலக ஆசிரியர் தினம்  அக்டோபர் 05.

🌸 மாதாஇ பிதாஇ குருஇ தெய்வம் என்பார்கள். வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சி. இத்தகைய சிறப்புமிக்கவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ஆம் தேதி உலக ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

🌸 ஆசிரியர்கள் பொதுக்கல்விக்காக ஆற்றிவரும் பங்களிப்பினை மரியாதை செய்யும் விதமாகஇ யுனெஸ்கோ (Unesco) நிறுவனம் 1994ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. இத்தினம் கொண்டாடப்படும் நாட்களும்இ விதமும் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகின்றது.


மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள், வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சியாக உள்ளது.
அத்தகைய சிறப்பு மிக்கவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
வெறும் மாணவர்களாக பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே. அவர்களைக் கொண்டாடும் நாள் இன்னாள்.
எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும்.
இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.
ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள் எமது மனதளவு நன்றிக்கும், செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர்களே.
மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற ‘ஆசிரியரை’ கௌரவப்படுத்தும் நோக்கில் பல்வேறு சமய கலாசார மற்றும் நிறுவன நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன. இவை மனித நாகரிகத்தின் வளர்ச்சிப்படிகள் எனின் மிகையல்ல.
ஒக்டோபர் 05 ‘உலக ஆசிரியர் தினம் உலகளாவிய ரீதியில் பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகின்றது. யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் ஆசிரியரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக, ‘ஆசிரியரின் தன்மையினைக் கருத்திற்கொண்டு அங்கீகாரமளித்தல்’என்ற கூற்றுடன், பொதுக் கல்விக்காக அல்லது சிறப்புத் துறையொன்றுக்காக அவர்களினால் ஆற்றப்பட்டு வரும் பங்களிப்பினை மரியாதை செய்யும் முகமாக, இவ் உலக ஆசிரியர் தினத்தை அறிவித்து, வருடாந்தம் கொண்டாடப்பட்டும் வருகின்றது.
பொதுவாக ஆசிரியரை தெய்வீகத்தன்மையுடன் மதித்து மரியாதை செய்யும் வழக்காற்றினை ஆசிய நாடுகள் கொண்டுள்ளன. அவரவர் சமய கலாசார பின்னணிகளுக்கு ஏற்ப இதனை வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றங்கள் உள்ளன.
இலங்கை சிங்களவர் மற்றும் தமிழர் ஆசிரியர்களுக்கு வெற்றிலையைக் கொடுத்து காலில் விழுந்து வணக்கம் செலுத்துவர். சீனர்கள் ஆசிரியரின் வினாவுக்கு விடையளிப்பதாயினும் ஏதாவதொரு விடயத்தைக் கேட்பதாயினும் இரு கைகளையும் உயர்த்தி எழுந்து நின்று கூறல் – கேட்டலை மேற்கொள்வர். மேற்கு நாடுகளின் மாணவர்கள் தாம் அமர்ந்த இடத்தில் இருந்து கூறல் – கேட்டல் செய்வதை எவரும் குறையாகக் கருதுவதும் இல்லை.
அந்த வகையில் அவர்களை கௌரவித்து, மரியாதை செய்து, நினைவு கூறுவதற்கு வருடத்தில் ஒரு கணம், ஒரு ‘ஆசிரியர் தினம்’, அவசியம் தான்!!



புதன், 3 அக்டோபர், 2018

உலக புன்னகை தினம் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை


உலக புன்னகை தினம் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை

உலக புன்னகை தினம் என்பது அக்டோபர்
மாதம் முதல் வெள்ளிக்கிழமை
கொண்டாடப்படுகிறது. புன்னகை
என்பது மனிதனோடு கூடப்பிறந்த ஒரு உணர்வின்
வெளிப்பாடு. ஆரோக்கியமான
மனிதனிடமிருந்து வெளிப்படுகிறது. இது
மனிதனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க
உதவுகிறது.


ஹார்வே பால் ( Havey Ball) என்பவர் 1963-
இல் புன்னகை முகம் (Smiley) என்ற குறியீட்டை
1963 இல் அறிமுகம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து உலக புன்னகை
தினம் 1999-ஆம் ஆண்டிலிருந்து
கொண்டாடப்படுகிறது.

சிறிய புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆயுதம். எனவே, சிரித்த முகத்துடன் இருக்க பழகுவோம்..


உலக புன்னகை தினம்
ஹலோ உங்களைத்தான்... சிரிச்சா என்ன குறைஞ்சா போவீங்க?!
எதிரிகளையும் நண்பர்களாக்கும் சக்தி உங்களது சிறு புன்னகைக்கு உண்டு எப்படிப்பட்ட கணத்திலும் புன்னகைப்பது அப்போதிருக்கும் சூழலை உற்சாகமாக்க உதவுகிறது ஒருவரின் தோற்றத்தை செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே...


இந்த புன்னகை என்ன விலை..?

சாலையில் நடந்து செல்கிறோம். பைக்கில் செல்கின்ற ஒருவர் இடித்துவிடுகிறார். தாங்க முடியாத வலி. கன்னத்தில் நாலு அறை விட வேண்டும் என்கிற அளவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. ஆனாலும் சின்னதாய் நம் உதடுகளில் பரவ விடுகின்ற ஒரு புன்னகை, அந்த இறுக்கமான சூழலிலும் ஒரு வித அமைதியையும், இடித்தவர் வெட்கம் கொண்டு ஓடி வந்து. உதவ நினைக்கும் நிலையையும் உருவாக்கிவிடுகிறது.


புன்னகைக்கு அப்படியொரு அசாத்தியமான ஆற்றல்

அடித்துத் துன்புறுத்துகின்ற ஒருவனை அரவணைத்து... நீ செய்வது தவறு என்று உணர்த்துகின்ற பாங்கு இருக்கிறதே அதை தான் அகிம்சை என்கிறோம்.

இந்த ஒற்றை ஆயுதத்தால்தான் இன்று உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது. அதனை உரத்து ஒலிக்கச் செய்த காந்தி உலக நாடுகளின் தெருக்களில் சிலையாய் நிறுத்திவைக்கப்பட்டு நன்றி கூறப்படுகிறார்.

அதே போன்ற வலிமையும், மாபெரும் ஆற்றலும் நம் உதடுகள் உதிர்க்கும் புன்னகையில் இருக்கிறது என்பது நிச்சயமான உண்மை. 'இந்தப் புன்னகை என்ன விலை?' என்று கண்ணதாசன் காதலுக்காக புன்னகைக்கு விலை வைத்தார். காதலுக்காக என்றாலும்கூட, அந்தப் புன்னகைக்கும்கூட இதயத்தையே விலையாய் வைத்தார்.



ஆனாலும் புன்னகை விலை மதிப்பற்றது...

அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை இன்று உலக புன்னகை தினம்

முடியாது... இயலாது... வேண்டாம்... என்பதைக் கூட சிறிய புன்முறுவலோடு சொல்லிப் பாருங்கள்... அப்போது தெரியும் புன்னகையின் மகிமை...

யாரெல்லாம் திறந்த மனதோடு, வெளிப்படையாக எதையும் அணுகுகின்றார்களோ அவர்களுக்கே இந்த மகிழ்ச்சியும், புன்முறுவலும் வாய்க்கும். இதிலும் கூட கள்ளத்தனமான சிலரின் புன்னகை, அவர்களை யாரெனக் காட்டிக் கொடுத்துவிடும்.



ஆடம்பரமாய் நகைகள் இருக்காது. பகட்டான பட்டாடைகள் இருக்காது. அடித்துப் போடுகின்ற அலங்காரத்தை மறந்தும் காணமுடியாது.



ஆனாலும் அந்தப் பெண் அழகாக இருக்கிறார். இது போன்ற பலரை நாம் இயல்பாக கண்டிருப்போம்... அந்தக் கலையான முகம்தான் அதற்குக் காரணமாக இருக்கும். ஆனால் களையான அந்த முகம்... அழகான புன்னகையில்தான் சாத்தியம்.

ஒருநாளில் 400 முறை சிறு குழந்தைகள் சிரிக்கின்றனவாம். ஆனால் வளர வளர நாமோ ஒரு நாளில் வெறும் 15 முறையே சிரிக்கிறோம். இப்போது தெரிகிறதா ஏன் குழந்தைகள் அழகாய் இருக்கிறார்கள் என்று..!



வருகின்ற 2020ஆம் ஆண்டில் மன அழுத்தமே உலக நோயாகவும், முதல் நோயாகவும் இருக்கும் என்று மருத்துவப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. தற்போதைய நமது வாழ்வியல் முறையும், இயங்கும் வேகமும் அதை நோக்கியே அழைத்துச் செல்கின்றன.

இந்திய நாட்டின் மக்கள் தொகையில் சற்றேறக்குறைய 10 சதவிகிதம் பேர் மனநோய் அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இவர்களில் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குத் தூண்டப்படுகின்றனர்.



மன அழுத்தம் மற்றும் தற்கொலை அதிகம் நிகழும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்குக் காரணம் ஆற, அமர குடும்ப உறவுகளோடு உட்கார்ந்து பேசி மகிழ்கின்ற தருணங்கள் குறைந்து வருவதாகவும், அலுவலகம் மற்றும் சுற்றுப்புற எதார்த்தம் போட்டி நிறைந்ததாக உள்ளன என்று அவர்கள் பட்டியலிடுகின்றனர்.

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் ஓவியம் இன்றைக்கும் உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த ஓவியத்தின் பிரதிகள் விற்ற அளவிற்கு, உலகில் வேறு எந்த ஓவியமும் இதுவரை அந்தச் சிறப்பிற்கு அருகே கூட வரவில்லை.



மோனாலிசா... இந்த ஒற்றை ஓவியத்தால் உலகம் முழுவதும் பெயரைப் பெற்றார் லியானார்டோ டாவின்ஸி. சின்னதாய் இதழ்களில் இழையோடும் அந்தப் மர்ம புன்னகை... நம்மால் இன்றைக்கும் கூட ரசிக்க முடிகிறது. அவள் மர்மமாய் சிரித்தாளா... அல்லது மயக்கத்தில் சிரித்தாளா.. என்பது வேறு.

எனினும் அந்த ஒற்றைச் சிரிப்பு, உலகம் முழுவதும் நிறைய கவிஞர்களை இன்றைக்கும் எழுத ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.



ஒவ்வொரு நொடியும் புன்னகைப்போம்... பிறர் மனம் நோக அல்ல...

நம் மனம் நோய்வாய்ப்பட நேராமல் இருக்க...



உலகை வசமாக்க...புன்னகையை பதிலாக்குவோம்..!!

உலக புன்னகை தினம் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் புன்னகையை விதைத்து ஆரோக்கியத்தை அறுவடை செய்வோம்.

ஆரோக்கியமான மனிதனிடமிருந்து வெளிப்படும். இது மனிதனை எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. 

ஹார்வே பால் என்பவர் 1963-ல் புன்னகை முகம் என்பதை அறிமுகம் செய்தார். 

இதனை தொடர்ந்து உலக புன்னகை தினம் 1999-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப் படுகின்றது.

ஹார்வே பற்றிய நினைவுகளை பிரதிபலிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுவதோடு அவருடைய பெயரிலேயே ஒரு அறக்கட்டளையும் 2001-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

சிரிப்பு என்பது ஒரு தியானம் என்று யோகா வல்லூர்கள் கூறுகிறார்கள். இதுக்குறித்து ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் யோகா கலை நிபுணர் விஜயகுமார் கூறும்போது, 

சிரிப்பு தியானம், என்பது தன்னை உணர்தலுக்கான ஓர் உன்னத பயிற்சியாகும். இந்த பயிற்சியானது கோபம் பயம் மன அழுத்தம் இவற்றில் இருந்து ஒவ்வொரு மனிதனும் வெளியேற மிகவும் உறுதுணையாக உள்ளது என்று கூறுகின்றனார். 

ஓவ்வொரு முறையும் நாம் சிரிக்கும் போது அது உடலை தளர்த்தி உடல் சோர்வை நீக்கி செல் திசுக்களை புதுப்பிக்கின்றன. 

தசைகளின் சோம்பலுக்கு காரணமான லேக்டிக் ஆசிடை குறைக்கிறது. சிரிப்பு என்பது மனித உடலில் என்டார்பின் ஹார்மோன் சுரப்பியிலிருந்து நீர் சுரப்பி உருவாகி மனிதர்களுக்கு சோகத்தை தரக்கூடிய கார்டிசால் ஹார்மோனை கட்டுப்படுத்துவதாக கூறுகிறார். 

பொதுவாக சிரிப்பு என்பது மனிதனுடைய இதய நோய்களில் இருந்து 40 சதவீதம் வரை குறைக்கிறது. அதோடு மனித மூளையின் செரட்டின் உற்பத்தி கூடுகிறது. செலினீயம் அதிகரித்து நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பைட்டோ எஸ்ட்ரோஜன் சுரந்து கவலை குறைத்து மகிழ்ச்சியை தூண்டுகிறது. 

இந்த சிரிப்பு பயிற்சி, சிரிப்பு தியானம் போன்ற வகைகளுக்கு மேலை நாடுகளில் தனி படிப்புகள் உண்டு. கர்நாடக மாநிலத்தில் சிரிப்பு தியானத்திற்கான பல்கலைகழகம் இயங்கி வருகிறது. 

இங்கு முழுவதும் சிரிப்பு பற்றிய பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சிரிப்பின் தன்மை சிரிப்பின் வெளிப்பாடு சிரிப்பின் தேவை சிரிப்பின் செயல்பாடுகள் சிரிப்பின் முக்கியத்துவம் உள்ளிட்ட பலவற்றை குறித்த ஆராய்ச்சிகளுடன் கூடிய படிப்பும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.



இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் விஜயகுமார் அவர் பணியாற்று கல்லூரியில் வாரம் ஒரு முறை மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் சிரிக்கும் தியானத்தை கற்று தருகிறார். 

அவர்களுக்கு சிரிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்கள் மாணவிகள் தங்களுடைய படிப்பில் கவனம் செலுத்தும் விதமாகவும் அவர்களின் மனசோர்வு மன அழுத்தம் போன்றவற்றை நீக்க தொடர்ந்து அவர்களுக்கு சிரிப்பு தியான வகுப்புகளை நடத்தி வருகிறார். 

இந்த சிரிப்பு தியானத்தில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது ஒன்று தான் சிரிப்பு என்பது காரணம் இல்லாமல் சிரிக்க வேண்டும். காரணம் இல்லாமல் சிரித்தால் தான் நம்முடைய மூளை அந்த காரணத்தை பற்றி யோசிக்காமல் அமைதியாக இருக்கும் என்றும் காரணத்தோடு சிரிப்பது என்பதை தவிர்த்து சிரித்தால் உடல் முழுவதும் சோர்வடையாமல் துடிப்போடு செயல்பட முடியும் என்று கூறுகிறார்.



எனவே, சிரிப்பு ஒரு சிறந்த மருந்து, நீங்கள் சிரித்து மகிழ்வதோடு மற்றவர்களையும் சிரிக்க வைத்து வாழ்கையை ஆரோக்கியமுடன் வாழுங்கள்.

இந்திய விடுதலைப்போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த நாள் அக்டோபர் 4 .1884 .


இந்திய விடுதலைப்போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த நாள்  அக்டோபர்  4 .1884 .

சுப்பிரமணிய சிவா (4 அக்டோபர் 1884 - 23 ஜூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர் ஆவார். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் ' ஞானபாநு ' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.
சுப்பிரமணிய சிவா

இளமை

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் 1884, அக்டோபர் 4 ஆம் நாள் 'சிவம்' என்றும், 'சிவா' என்றும் அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவா பிறந்தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள்(நாகலட்சுமி). பெற்றோர் இட்ட பெயர் சுப்பராமன். இவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாளென்ற இரு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற ஒரு சகோதரரும் இருந்தனர். இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உணவருந்திக்கொண்டே மேற்படிப்பு படித்தார். இவர் கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் ஒரு ஆண்டு படித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோற்றார். 1899-ல் மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.1902இல் திருவனந்தபுரத்திலுள்ள கொட்டாரக் கரையில் நாயர் வகுப்பைச் சேர்ந்த சதானந்த சுவாமிகள் என்ற ராஜயோகியைச் சந்தித்து, அவரிடம் சிலகாலம் ராஜயோகம் பயின்றார்.1906 சிவாவின் தந்தை மறைவெய்தினார்.
1904-1905-ல் நடந்த ரஷ்ய-ஜப்பானியப் போரில் பெரிய நாடான உருஷ்யாவை ஜப்பான் தோற்கடித்தது. இது உலகெங்கும் காலனியாட்சியாளர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. 1906இல் கர்சான் பிரபு வங்கத்தை மதத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரித்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் 'வந்தேமாதரம்' எனும் முழக்கங்கள் எழுந்தன.
அரசியல் செயல்பாடும்,கைதும்
சிவா அவர்கள் 1906-07 திருவனந்தபுரத்தில் 'தர்ம பரிபாலன சமாஜம் அமைப்பை உருவாக்கினார், இளைஞர்களை கூட்டுவித்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி தேசபக்தி ஊட்டும் பணியில் ஈடுபட்டார்.அரசாட்சிக்கு எதிராக இவரின் செயல்பாடுகள் அமைந்ததால் இவர் திருவனந்தபுரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன்பிறகு சிவா கால் நடையாகவே ஊர் ஊராய்ச் சென்று தேசிய பிரச்சாரம் செய்ய முற்பட்டார். தூத்துக்குடிக்கு வந்தபொழுது தூத்துக்குடியில் வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை
சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் உளமார்ந்த நட்பு ஏற்பட்டது இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' இவர்களின் நண்பரான
பாரதியார் தூண்டிவிட்டார். 1908 இல் சிதம்பரனாரும்,சிவாவும் இணைந்து நெல்லை சீமையில் சுற்றுப்பயணம் செய்து தேசிய பரப்புரை செய்தனர். 12.3.1908 இல் சிவா ராஜத்துரோகக் குற்றம் புரிந்தார் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.2.11.1912 இல் விடுதலையடைந்தார்.
இதழ் துவக்கம்
பிறகு சென்னையில் குடியேறினார். எழுத்துத் தொழிலை கைக்கொள்ள கருதி, ஞானபாநு என்ற மாத இதழைத் துவக்கினார். இதற்கிடையில் 15.5.1915 இல் சிவாவின் மனைவி மீனாட்சி மரணமடைந்தார். ஞானபாநு நின்றதன் பின்பு, 1916இல் 'பிரபஞ்ச மித்திரன்' என்ற வார இதழை அரம்பித்து சிலகாலம் நடத்தினார். இதில் 'நாரதர்' என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதிவந்தார். எழுத்துலகில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சுமார் இருபது நூல்களுக்கு மேலாக எழுதினார்.
மீண்டும் கைது
1920 இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குப் பிரதிநிதியாகச் சென்றார். 1921 வாக்கில் துறவி போன்று காவியுடை அணியத்துவங்கினார். ஸ்வதந்ரானந்தர் என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார்.பாரத மாதாவுக்குக் கோயில் ஒன்று கட்டி முடிக்கத் திட்டம் வகுத்தார். 17.11.1921 இல் இரண்டாவது முறையாக, ராஜத்துரோகக் குற்றத்துக்காகச் சிவாவின் மீது அரசு வழக்குத் தொடுத்தது, இரண்டரை ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திருச்சி சிறையில் தொழு நோய்வாய்ப்பட்டு அவதிபட்டார். படுத்த படுக்கையாகிவிட்ட நிலையில் 12.1.1922 இல் விடுதலையானார். விடுதலையான சிவா திரும்பவும் சென்னைக்கு வந்து, சில நாட்கள் தங்கினார். உடல்நிலை சற்று தேறியதும், திரும்பவும் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். இதன் காரணமாக, ஓராண்டுகாலம் நன்னடத்தை பிணை கேட்டு அரசு வழக்குத் தொடுத்தது. 1923 ஆம் ஆண்டு துவக்கத்தில் தருமபுரி, கோவை, பாப்பாரப்பட்டி முதலான ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயிலுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அவ்வூரில் நிலம் பெற்று அதற்கு பாரதபுரம் என்று பெயர் சூட்டினார். கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவைச் சித்ரஞ்சனதாசை கொண்டு செய்வித்தார். 1924இல் காசியில் வசித்துவந்த இவரது தாயார் தாயார் காலமானார். இவருக்கு வந்திருந்த தொழுநோயைக் காரணம் காட்டி ரயில் பயணம் செய்ய ஆங்கில அரசு தடைவிதித்தது.

எழுதிய நூல்கள்

1. மோட்ச சாதனை ரகசியம்
2. ஸ்ரீ ஸ்வாமி விவேகானந்தர் ஆத்மஞான ரகசியம்
3. அருள் மொழிகள்
4. வேதாந்த ரகஸ்யம்
5. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம்
6. ஞானாம்ருதமென்னும் பிரஹ்மானந்த சம்பாஷணை
7. சச்சிதானந்த சிவம்
8. பகவத்கீதா சங்கிலகம்
9. சங்கர விஜயம்
10. ராமானுஜ விஜயம்
11. சிவாஜி (நாடகம்)
12. தேசிங்குராஜன் (நாடகம்)
13. நளின சுந்தரி (அ) நாகரிகத்தின் தடபுடல் (கதை)

இறப்பு

பாரதமாதா கோயில் திருப்பணிக்காக நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், உடல்நிலை மிக மோசமடைந்ததால் மதுரையிலிருந்து பாப்பாரப்பட்டியை 22.7.25 இல் வந்தடைந்தார். 23.7.1925 வியாழக்கிழமை காலை ஐந்து மணிக்கு, தம்முடைய நாற்பத்தோராவது வயதில் சிவா மறைந்தார்.


இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப் பேச்சாளர். சிறந்த பத்ரிகையாளர். 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர்.
விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப் பழகியவர். 'வீரமுரசு' எனப் புகழ்பெற்றவர் இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் 1884, அக்டோபர் 4-ம் நாள் பிறந்தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள் (நாகலட்சுமி). பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியம். இவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாளென்ற இரு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற ஒரு சகோதரரும் இருந்தனர்.
இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று சத்திரத்தில் தங்கி மேற்படிப்பு படித்தார். கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் ஒரு ஆண்டு படித்தார். 1899-ல் மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்தார். பின்பு வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.
தூத்துக்குடியில் இருக்கும் நாட்களில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்யத் தொடங்கினார். 1904- 1905-ல் நடந்த ரஷிய- ஜப்பானியப் போரில் பெரிய நாடான ரஷியாவை ஜப்பான் தோற்கடித்தது. இது உலகெங்கும் பிரிட்டனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. 1906-ல் கர்சான் பிரபு வங்கத்தை மதத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரித்தார்.
நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் 'வந்தே மாதரம்' எனும் முழக்கங்கள் எழுந்தன. அப்போது தூத்துக்குடியில் வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் உளமார்ந்த நட்பு ஏற்பட்டது இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' இவர்களின் நண்பரான பாரதியார் தூண்டிவிட்டார்.
சென்னை, கொல்கத்தா, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு சென்று தொழிலாளர் போராட்டங்களை நடத்தி ஆங்கில அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொடுமையான சிறைத்தண்டனை விதித்து, சித்ரவதை செய்தது ஆங்கில அரசு. சுதந்திர போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வாறு சிறையில் ஒருமுறை அடைக்கப்பட்டபோது தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால், ரெயிலில் பயணம் செய்ய ஆங்கிலேய அரசு இவருக்கு தடை விதித்தது.
உடல் முழுவதும் புண்ணாக இருந்த போதிலும் உடலை துணியால் மூடிக்கொண்டு சென்னை மாகாணம் முழுவதும் நடைபயணமாகவும், கட்டை வண்டியிலும் சென்று மேடை தோறும் முழங்கிவந்தார். இந்நிலையில், 15.5.1915-ல் எலும்புருக்கி நோயால் சிவாவின் மனைவி இறந்தார். இதன் பின்னர், சற்றும் சளைக்காமல் முன்பைவிட அதிக எண்ணிக்கையிலான கூட்டங்களில் பங்கேற்று சுதந்திர தீயை வளர்த்தார்.
முதலில் காரைக்குடியில் பாரத ஆசிரமம் தொடங்கிய அவர், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் 1921, 1922-ம் ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை மாகாணத்தில் அரசியல் ரீதியாக சிறையில் அடைக்கப்பட்ட முதல் கைதியானார். ஆந்திர மாநிலம், அலிபுரம் சிறையில் இருந்தபோது தருமபுரி அன்னசாகரத்தை சேர்ந்த தியாகி எம்டன், கந்தசாமி குப்தா, டி.என். தீர்த்தகிரியார் ஆகியோருடன் ஏற்பட்ட நட்பால் சுப்பிரமணிய சிவா பாப்பாரப்பட்டிக்கு வந்தார்.
தனது நண்பர் சின்னமுத்து முதலியார் மற்றும் நண்பர்கள் உதவியுடன் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்கி, அதற்கு பாரதபுரம் என பெயர் சூட்டினார். அதில் பாரத ஆசிரமும் ஏற்படுத்தினார். சிவாவும், ஆசிரம உறுப்பினர்களும் காலையில் எழுந்து மகாகவி பாரதியாரின் பாடல்களை பாடிக்கொண்டே தெருத்தெருவாகச் சென்று அரிசியும், காசுகளும் பெற்று வாழ்க்கையை நடத்தினர். மற்ற நேரங்களில் தேசத் தொண்டு பணியை செய்து வந்தனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வந்தனர்.
பாரதபுரத்தில் பாரத மாதாவுக்கு கோயில் கட்ட முடிவு செய்த அவர், தமிழகம் முழுவதும் பயணம் செய்து ஆலயத்தை கட்டுவதற்கு தேவையான தொகையை திரட்ட சிவா முயன்றபோது, தொழுநோய் இருப்பதை காரணம்காட்டி பஸ், ரயிலில் செல்லக்கூடாது என ஆங்கிலேய அரசு தடை விதித்தது.
இருப்பினும், கால்நடையாகவும், கட்டைவண்டியிலும் ஊர், ஊராக பயணம் செய்து சொற்பொழிவாற்றி பாரத மாதா கோயில் கட்ட நிதி திரட்டினார். 22.7.1925-ல் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பாரத ஆசிரமத்துக்கு வந்த அவர் தனது நண்பர்களுடன் மிக உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அடுத்த நாள் 23.7.1925-ல் தனது 41-வது வயதில் இயற்கை எய்தினார்.

உலக விண்வெளி வாரம் ( World Space Week (WSW ) அக்டோபர் 4 ஆம் நாள் முதல் - அக்டோபர் 10.


உலக விண்வெளி வாரம் ( World Space Week (WSW ) அக்டோபர் 4 ஆம் நாள் முதல் - அக்டோபர் 10.

உலக விண்வெளி வாரம் ( World Space Week (WSW ) அக்டோபர் 4 ஆம் நாள் முதல் -
அக்டோபர் 10 நாளில் முடிய,  இந்த இடைப்பட்ட நாட்களை உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது. 1957 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 இல் ஸ்புட்னிக் 1 ( Sputnik 1 ) என்ற செயற்கைகோள் உலகின் முதன்முதலாக செலுத்தப்பட்ட செயற்கைகோளாகும். 1967 இல் அக்டோபர் 10 ஆம் நாளில் புற விண்வெளி அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டு, உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆனதாக அறியப்படுகிறது.

யாது? எப்போது?

சர்வதேச விண்வெளி வாரமென்பது, அறிவியல், தொழினுட்பம் மற்றும் மனித மேம்பாட்டிற்கும், அமையபெற்று தங்கள் பங்களிப்பை கொடுப்பதாகும். 1999 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுசபையால்
அக்டோபர் 4 - 10 இரு நாட்கள் (இரு நிகழ்வுகள்) இடைநாட்கள், நினைவுகூரும் வகையில் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

உரிப்பொருள்

ஒவ்வொரு ஆண்டும், உலக விண்வெளி வாரக் கழக வாரியத்தின் ( World Space Week Association Board ) பணிப்பாளர்கள் மனிதத்துவத்துக்கு அறைகூவல் விடுத்து விண்வெளி அம்சம் பற்றிய முன்னிலைப்படுத்த கருப்பொருள் சேர்க்கிறது. இந்த குழு அவர்களின் திட்டங்கள் உள்ளடக்கத்தை உலக விண்வெளி வாரப் பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது.
1957 அக்டோபர் 4 இல், மனிதனால் உருவாக்கப்பட்ட, பூமியின் முதல்
செயற்கைக்கோள் ஸ்புட்னிக் 1 ஏவப்பட்டு
விண்வெளி ஆய்விற்கு வழிவகுத்தது.
1967 அக்டோபர் 10 இல், விண்வெளி கோட்பாடுகள், மாநிலங்களின் செயல்பாடுகளை காணல், அமைதியான முறையில் சந்திரன் மற்றும் இதர கோள்கள் உள்ளிட்ட விண்வெளி பயன்கள் ஒப்பந்தம் நிர்வாகக்குழுவால் கையொப்பமானது.

உலக விலங்கு நாள் ( World Animal Day) அக்டோபர் 4.


உலக விலங்கு நாள் ( World Animal Day) அக்டோபர் 4.

உலக விலங்கு நாள் ( World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அநேகமான கிறித்தவத் தேவாலயங்கள் அக்டோபர் 4 இற்குக் கிட்டவாக வரும்
ஞாயிற்றுக்கிழமையில் விலங்குகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் சிறப்பு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. ஆனாலும் இன்று கிறிஸ்தவர்களால் மட்டுமல்லாமல் உலகின் விலங்கு ஆர்வலர்கள் அனைவரினாலும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
விலங்குகள் சரணாலயங்கள் இந்நாளில் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.


விடுதலைப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த தினம் அக்டோபர் 4,



விடுதலைப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த தினம் அக்டோபர் 4,


கொடிகாத்த குமரனின் வாழ்க்கை வரலாறு

தேசியக் கொடியைக் காப்பதற்காக தன் இன்னுயிரைத் தியாகம் செய்தவர் தான் திருப்பூர் குமரன்.
நேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி கூட்டத்தின் பிரம்படி வாங்கி உயிரை விட்டு ஒவ்வொரு தமிழனையும் யோசிக்க வைத்த கொடிகாத்த குமரன் இறந்த நாள் இன்று.
கொடிகாத்த குமரனின் வாழ்க்கை வரலாறு
திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. இவரது சொந்த ஊர் ஈரோட்டை அடுத்த சென்னிமலை. தறி நெய்யும் நெசவாளி குடும்பத்தைச் சேர்ந்தவர்.
சென்னிமலை கைத்தறித் துணி உற்பத்திக்குப் பெயர் பெற்றது. இங்கு நாச்சிமுத்து முதலியார் கருப்பாயி அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் குமாரசாமி. இவர் 1904ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார்.
தறியில் துணி நெய்துப் பிழைக்கும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் சென்னிமலையில் தனது ஆரம்பகால கல்வியை ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். மேலே படிக்க வசதி இன்மையால் பள்ளிப்பாளையத்தில் இருந்த தாய்மாமன் வீட்டுக்குச் சென்றார். அங்கும் இவரது குலத் தொழிலான கைத்தறி நெசவுத் தொழிலை மேற்கொண்டார்.
ஈரோடு சென்று அங்கு நூல் வாங்கிக் கொண்டு வந்து துணி நெய்து மீண்டும் ஈரோடு சென்று விற்று பிழைப்பு நடத்தினார். அப்போதெல்லாம் போக்கு வரத்துக்கு போதிய வசதிகளோ அல்லது பேருந்து வசதிகளோ இல்லாத நிலையில் இவர் மாட்டு வண்டிகளிலோ அல்லது சுமையைத் தலையில் சுமந்து கால் நடையாகவோ சென்று வந்தார்.
இந்தத் தொழிலில் போதிய வருமானம் இல்லாமையாலும், அலைச்சல் ஒத்துக் கொள்ளாததாலும், இவர்கள் குடும்பம் திருப்பூருக்குக் குடி பெயர்ந்தது. அங்கு இவர் தனக்குப் பழக்கமான தறியடிக்கும் தொழிலைச் செய்யாமல், சென்னியப்ப முதலியார் மற்றும் ஈங்கூர் ரங்கசாமிக் கவுண்டர் ஆகியோர் நடத்திய தரகு மண்டியில் கணக்கு எழுதும் வேலையில் சேர்ந்தார்.
பஞ்சு எடைபோட்டு வாங்குவது கொடுப்பது என்பதில் மிகவும் நேர்மையாக நடந்து கொள்பவர்களைத்தான் முதலாளிகள் நியமிப்பார்கள், அப்படிப்பட்ட நேர்மையாளராக இருந்த குமாரசாமிக்கு அந்த வேலையை அவர்கள் அளித்திருந்தார்கள்.
பஞ்சு மண்டி வேலை முடிந்ததும், பொது வேலைகளிலும் ஈடுபட்டு நாட்டுச் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் குமாரசாமி. அப்போது திருப்பூரில் இயங்கி வந்த தேசபந்து வாலிபர் சங்கத்தில் இவர் உறுப்பினரானார்.
திருமண வாழ்க்கை
இவரது பத்தொன்பதாவது வயதில் இவருக்குத் திருமணம் நடந்தது. அப்போது பதினான்கே வயதான ராமாயி இவரது மனைவியானாள். ஆறாண்டு காலம் இவரது திருமண வாழ்வு இனிதே நடந்தும் மகப்பேறு இல்லை.
கதர் இயக்கத்தில் இணைந்தார்
மகாத்மா காந்தி ஐந்து முறை திருப்பூருக்கு வந்திருக்கிறார். கதர் இயக்கம் இங்குதான் சிறப்பாக நடந்து வந்தது. குமாரசாமியும் கதர் இயக்கத்தில் கலந்து தலையில் கதர்க் குல்லாய், கதர் உடை என்று அந்த நாள் காங்கிர தொண்டர்களின் உண்மைத் தோற்றத்தில் விளங்கினார்.
1932ம் ஆண்டு காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டிருந்தார். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. சட்ட மறுப்பு இயக்கம் அதனைச் சார்ந்த மறியல் போன்றவைகள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகின. பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அடக்குமுறை தலை விரித்தாடியது.
ஆங்கிலேய அரசு அடக்குமுறையை ஏவிவிடவும், அதனை எதிர்த்து மக்களின் போராட்டமும் மேலும் மேலும் வலுவடைந்தது. எல்லா இடங்களைப் போலவே திருப்பூரிலும் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டது, காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பூட்டி சீலிடப்பட்டது.
தேசபந்து ஊர்வலம்
இந்த தடைகளையெல்லாம் மீறி திருப்பூரில் 10-1-1932இல் ஓர் ஊர்வலம் நடத்த முடிவாகியது.
தேசபந்து வாலிபர் சங்கத்தினர் முன்னிலையில் இருந்து ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த ஊர்வலத்துக்கு அவ்வூர் செல்வந்தரும் மிகப் பிரபலமாயிருந்தவருமான ஈஸ்வர கவுண்டர் தலைமை ஏற்பது என முடிவாகியது.
ஊர்வலத்துக்கு முதல் நாள் மக்களிடம் செல்வாக்குள்ள பி.டி.ஆஷர், அவர் மனைவி பத்மாவதி ஆஷர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமை வகிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்த ஈஸ்வர கவுண்டர் வரவில்லை. எனவே புகழ்பெற்ற தியாகி பி.எஸ்.சுந்தரம் என்பார் அவரைத் தேடி அவர் வீடு சென்றார், பின்னர் அவரது பஞ்சாலைக்குச் சென்றார். அங்கு கவுண்டர் இருப்பதைப் பார்த்தார். ஊர்வலத்துக்கு வர அவர் மறுத்து விட்டார்.
இந்தச் சூழ்நிலையில் தியாகி பி.எஸ்.சுந்தரம் அவர்களே ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். அவரது தலைமையில் குமாரசாமி, இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார், அப்புக்குட்டி எனும் மாணவன், நாராயணன் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்று கொண்டிருந்தது. வீரர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்துச் சென்றனர்.
சாலையில் கூடியிருந்த மக்கள் என்ன நடக்குமோ இந்த வீரர்களை பொலிஸ் அரக்கர்கள் எப்படியெல்லாம் தாக்குவார்களோ என்று அஞ்சியபடி பார்த்துக் கொண்டிருந்தனர். ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து பொலிஸ் நிலையத்தை நெருங்கியது.
அப்போது பொலிஸ் நிலையத்திலிருந்து இரு உயர் அதிகாரிகள் உட்பட சுமார் முப்பது நாற்பது பொலிஸ்காரர்கள் கைகளில் தடியுடன் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது பாய்ந்தனர். ஊர்வலத்தில் வந்த தொண்டர்களைப் போல பல மடங்கு அதிகமான பொலிசார் அந்த சிறு ஊர்வலத்தில் வந்தவர்களைக் கண் மண் தெரியாமல் அடித்துப் புடைத்தனர்.
அவர்கள் கைகள் சோர்ந்து ஓயும் வரை அடித்தனர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன. தொண்டர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்து உயிர் பிரியும் நிலையிலும், மகாத்மா காந்திக்கு ஜே, பாரத மாதாக்கு ஜே என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.
குமாரசாமியின் மரணம்
குமாரசாமியின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீரிட்டு எழுந்து கொட்டியது. அவன் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பு மட்டும் பிடித்த பிடி தளரவேயில்லை.
வாய் ஜே கோஷம் போட்டபடி இருந்தது. குமாரசாமி எனும் அந்த வீரத்தியாகி உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவன் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் மட்டும் கீழே விழவேயில்லை.
நினைவு இழந்து தரையில் வீழ்ந்து கிடந்த குமாரசாமியைத் தன் பூட்ஸ் கால்களால் பொலிசார் உதைத்தனர். சிலர் அவன் உடல் மீது ஏறி மிதித்தனர். அவன் கை கெட்டியாகப் பிடித்திருந்த கொடிக் கம்பை ஒரு பொலிஸ்காரர் சிரமத்துடன் பிடித்து இழுத்து வீசி தரையில் எறிந்தார்.
குமாரசாமியும், ராமன் நாயரும் ரத்தமும் நிணமுமாக தரையோடு தரையாக வீழ்ந்து கிடந்தனர். மண்டையில் அடிபட்ட பி.எஸ்.சுந்தரத்துக்கு காட்சிகள் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தனவே தவிர காதில் எந்த ஒலியும் கேட்கவில்லை.
பொலிசார் அடித்த அடியில் அவரது கேட்கும் சக்தி முழுமையாகப் போய்விட்டது தெரிந்தது. அவரது உடலில் கை, கால்கள், இடுப்பு, விலா ஆகியவிடங்களில் மொத்தம் பதினான்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இந்த நிகழ்ச்சியின் விளைவாக தியாகி பி.எஸ்.சுந்தரம் தன் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனமுற்றவராக, செவிடராக இருக்க நேர்ந்த கொடுமையும் நடந்தது.
அடிபட்டு வீழ்ந்த சிலரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். மற்றவர்களை அவர்களது உற்றார் உறவினர் எடுத்துச் சென்று விட்டனர். இவ்வளவு அடிபட்ட காந்தியத் தொண்டர்கள் பொலிஸ் மீது கல் எறிந்து தாக்கியதாகவும், குழப்பம் விளைவித்ததாகவும், அதனால் பொலிஸ் தடியடி நடத்தியதாகவும் வழக்கு பதிவாகியது.
சுந்தரம், குமாரசாமி, ராமன் நாயர் ஆகியோர் உடல்களைத் தூக்கி சாமான்களை வீசுவது போல ஒரு வண்டியில் வீசினார்கள். மரண அடிபட்ட குமாரசாமிக்கு மண்டை உடைந்து ஏதோவொன்று மூளைக்குள் சென்று விட்டது. நினைவு இல்லை. ரத்தம் நிற்கும் வழியாக இல்லை. சிறிது நேரம் துடித்துக் கொண்டிருந்த குமாரசாமியின் உயிர் 11-1-1932 அன்று இரவு தன் மூச்சை நிறுத்திவிட்டுப் பிரிந்து சென்றது.
அந்த வீரத் திருமகனின் உடல் ஒரு துணியால் கட்டப்பட்டு மூங்கிலால் தூக்கப்பட்ட ஒரு தூணியில் கிடத்தப்பட்டு தூக்கிச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடம் எது? பொலிசார் செய்த ரகசிய சவ அடக்கத்தினால், அது எந்த இடம் என்று தெரிந்து கொள்ள முடியாமல் போனது.
ஒரு வீர தேசபக்த இளைஞனின் உடல், அவன் பிறந்த நாட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டதே தவிர, அவன் விளைத்த வீரப் போரின் விவரத்தை யாராலும் மறைக்க முடியாது.
வாழ்க திருப்பூர் குமரனின் புகழ்!


திருப்பூர் குமரன் ( அக்டோபர் 4, 1904 - ஜனவரி
11 , 1932 ) இந்திய விடுதலைப் போராட்ட
தியாகி ஆவார். இவர் ஈரோடு
மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில்
பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு
இயக்கம் மீண்டும் தொடங்கிய போது
தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய
நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற
உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு
செய்த மறியல் போராட்டத்தில்
தீவிரமாகப் பங்குகொண்டு, 1932
ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று
கையில் தேசியக் கொடியினை ஏந்தி,
தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று,
அணிவகுத்துச் சென்றபோது
காவலர்களால் தாக்கப்பட்டு
தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய
தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி
விழுந்து, பின்னர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். ஜனவரி 11 இல்
உயிர் துறந்தார் திருப்பூர் குமரன் .
இதனால், கொடிகாத்த
குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

இளமைப்பருவம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை
அருகிலுள்ள செ.மேலப்பாளையம்
என்னும் சிற்றூரில் 1904 அக்டோபர் 4ம் தேதி,
நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியினருக்கு
முதல் மகனாகப் பிறந்தார். குடும்ப
சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை
ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக்
கொண்டார். கைத்தறி
நெசவுத் தொழிலை செய்து
வந்த குமரன், 1923ல் தனது 19வது வயதில்,
14 வயது ராமாயியை மணம் முடித்தார்.
கைத்தறி நெசவுத் தொழிலில்
போதிய வருமானம் இல்லாததால்,
மாற்றுத் தொழில் தேடி திருப்பூர்
சென்று, ஈஞ்ஞையூர் கந்தசாமி
கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும்
பணியில் சேர்ந்தார். காந்தி
கொள்கையில் அதிக ஈடுபாடு
கொண்ட குமரன், நாட்டு
விடுதலைக்காக காந்தி அறிவித்த
போராட்டங்களில் எல்லாம் கலந்து
கொண்டார்.

இறுதி ஊர்வலம்

ஜனவரி 10 இல் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் 11 இல்
மருத்துவமனையில் அதிகாலையில்
உயிரிழந்தார். பொதுமக்கள்
அவரது இறுதி ஊர்வலத்தில்
பங்குகொண்டனர். முதலில்
அவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன்
தேசத்தின் பொதுச்சொத்து
என்று கூறி ராஜ கோபால அய்யர்,
மாணிக்கம் செட்டியார்,
வெங்கடாசலம் பிள்ளை என பலரும்
இறுதிச் சடங்கான கொள்ளி
வைத்தனர்.
குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர்
வந்த மகாத்மா காந்தி, அவரது
குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன்
குடும்பத்தினருடன் அவ்வப்போது
தொடர்பு கொண்டு
விசாரிப்பார்.

துணைவியார்

இவரது துணைவியார் ராமாயி
அம்மாள் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல்
மாதம் உயிர் நீத்தார்.

நினைவகம்

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன்
தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில்
திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை
அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல்
நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று
செயல்பட்டு வருகின்றது. மேலும்
இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின்
படங்கள் வரைந்து பொதுமக்கள்
பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தபால் தலை
இவரது நூறாவது பிறந்த நாளைச்
சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004 இல்
சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய
அரசால் வெளியிடப்பட்டது.
..........................................
கொடி காத்த குமரன்
..........................................
இந்தியரை அடிமைப்படுத்திய
வெள்ளையரிடமிருந்து உரிமை
பெறுவதற்காக 1930ம் ஆண்டு
காந்தியடிகள் உப்புச் சத்தியாகிரகப்
போராட்டத்தை அறிவித்தார்.
உப்பு இல்லாமல் மனிதன் உயிர்
வாழ முடியாது. அது கடற்கரையில்
தானாக விளைகிறது. கடல் நீரை
பாத்திகளில் தேக்கி வைத்து, கதிரவனின்
வெம்மையால் உலர்த்தி
தயாரிக்கப்படுகிறது. இயற்கை நமக்கு
இலவசமாகக் கொடுத்துவரும்
உப்பை ஆங்கில அரசாங்கம் தனதாக்கிக்
கொண்டு அதற்கும் வரி விதித்தது.
வரி செலுத்தியவருக்கே உப்பு எடுக்கும்
உரிமை உண்டு.
இதைக்கண்ட காந்தியடிகளின் “உப்புக்கு
வரி போட்டது தவறு. நீருக்கும் காற்றுக்கும் வரி
போட்டால் நாம் ஒப்பமாட்டோம். உப்புக்கு
வரி போட்டதை நாம் அற முறையில் எதிர்ப்போம்”
என்று அறிவித்தார்.
காந்தியடிகள் அறிவிப்பு மக்களை
வீறுகொள்ளச் செய்தது.
மக்கள் ஆங்காங்கே அச்சட்டத்தை எதிர்க்கத்
திரண்டு வந்தனர். “உப்பு விளையும்
கடற்கரையில் உப்புச் சட்டத்தை மீறி
உப்பெடுப்போம். அதோடல்லாமல் மற்ற
இடங்களிலும் உப்பு மண்ணை நீரில் கரைத்துக்
காய்ச்சி உப்புச் சட்டத்தை அமைதியான
முறையில் எதிர்ப்போம். முதலில் நான்
இச்சட்டத்தை மீறுகிறேன். அதன் பிறகு நாடு
முழுவதும் என்னைப் பின்பற்றி
உப்புச்சத்தியாகிரகம் செய்யுங்கள்”
என்று அறிவித்து தண்டி என்னுமிடத்தில்
உப்பளத்தை நோக்கி தொண்டர்களுடன்
சென்று சட்டத்தை மீறி உப்புக் காய்ச்சிட
முயன்றார்.
தமிழகத்தில் வேதாரண்யத்தில்
இராஜாஜியும், சென்னைக்
கடற்கரையில் ஆந்திர கேசரி பிரகாசம் பந்துலு
என்ற தலைவரும், தொண்டர்களும்
உப்புச் சட்டத்தை மீறினார்கள். தமிழகம்
முழுவதும் உப்புச் சத்தியாகிரகம்
தீவிரமாகவும், வலுவாகவும்
நடைபெற்றது.
இந்தியா முழுவதிலும், தமிழகம் எங்கும்
நடைபெற்ற உப்புச் சட்ட எதிர்ப்புப்
போராட்டம் திருப்பூரிலும் நடைபெற்றது.
கொடி காத்த குமரன் என்று
பெருமையுடன் அழைக்கப்படும்
தியாகியின் வரலாறு
எழுச்சியூட்டுவதாகும். அப்போதைய கோவை
மாவட்டம், தற்போது ஈரோடு மாவட்டம்,
சென்னிமலை என்ற சிறு நகரில் ஒர் ஏழை
நெசவாளர் குடும்பத்தில் 1904ம்
ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாச்சிமுத்து
முதலியாருக்கும், கருப்பாயி என்பவருக்கும்
புதல்வனாக குமரன் பிறந்தார்.
குமரன் பள்ளியில் கல்வி மீது மிகவும்
நாட்டம் கொண்டு படித்தார்.
ஆனால் பெற்றோரின் வறுமை அவருடைய
கல்விக்குத் தடை விதித்தது. ஐந்தாம் வகுப்போடு
குமரனின் கல்வி முடிந்துவிட்டது.
பெற்றோர் தம் பிள்ளைக்குச் சூட்டிய
பெயர் குமாரசாமி என்பதாகும்.
அப்பெயர் அவ்வருமைப் பிள்ளை விடுதலைப்
போரில் ஈடுபட்டு அமரன் ஆன பின்னர்
“குமரன்” என்று மாறியது.
பள்ளிப்படிப்பைக் கைவிட்ட குமரன்
பள்ளிப்பாளையத்திற்குச் சென்று
நெசவுத் தொழிலில்
ஈடுபட்டார் குமரன். பட்டுச் சேலை
நெய்வதில் சிறந்த நிபுணராக
விளங்கினார். பின்னர் தமது
சொந்த ஊரான
சென்னிமலைக்கு வந்து
அத்தொழிலைச் செய்து
குடும்பத்தின் வருவாயைப்
பெருக்கினார். குமரனுக்கு 19 வயதில்
இராமாயி என்னும் பெண்ணைத்
திருமணம் செய்து வைத்தனர்
பெற்றோர்.
குமரனின் குடும்பம் நெசவுத்
தொழிலில் இருந்து கிடைத்த
வருமானம் போதாமல் வறுமையில் உழன்றது.
வேறு வேலை தேடும் நோக்கத்தூடன் ஈரோட்டிற்குச்
சென்றார். அங்கு பல
நிறுவனங்களில் வேலை கேட்டும் வேலை
கிடைக்காமல், திருப்பூரில் பஞ்சு
வியாபாரக்கடையில் வேலை செய்தார்.
பின்னர் எடை பதிவு செய்யும்
குமாஸ்தா வேலை
கொடுக்கப்பட்டது. அதையும் திறம்பட
செய்தார். குமரன் தமக்கு
கொடுக்கப்பட்ட வேலையின்
பொறுப்பு நிலையுணர்ந்து,
முதலாளிக்கு நட்டம் ஏற்படாத வகையில்
மிகவும் கவனித்து எச்சரிக்கையாகப்
பணியாற்றி வந்தார்.
குமரன் தமிழ்மறையான திருக்குறள் மீது
ஆர்வம் கொண்டு பயின்றார்.
குமரன் எப்போதும் சுத்தக் கதராடையையே உடுத்தி
வந்தார். நாள்தோறும் கைராட்டையில் நூல்
நூற்று வந்தார்.
குமரனுக்கு வீர உணர்வையும், தியாக
உணர்வையும் எவரும் ஊட்டவில்லை அது
அவரிடம் இயல்பாகவே அமைந்திருந்தது.
1930 ஆம் ஆண்டு வேதாரண்யத்தில்
இராஜாஜி தலைமையில் நடைபெற்ற
உப்பு சத்தியாகிரகத்தில்
கலந்துக்கொள்ளத் துடித்தார்.
ஆனால் அவரது பெற்றோர்களும்,
முதலாளியும் தடுத்து விட்டனர்.
அப்பொழுது நடைபெற்ற
போராட்டம் உப்புச் சட்டத்தை மீறுதல் என்ற
அளவில் நின்றுவிடவில்லை. நாடு முழுவதும்
பரவியது. அப்போராட்டம் நிலவரி
கொடா இயக்கமாகவும்
வளர்ந்தது. மதுபானக் கடைகள்,
அயல்நாட்டுத் துணிக்கடைகள் முன்பு மறியல்
போராட்டங்களும் நடைபெற்றன.
போராட்டத்தின் விளைவால் ஆங்கிலேயர்
ஒப்பந்தம் போட முன் வந்தனர். அதுதான்
காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஆகும். அந்த
ஒப்பந்தத்தின் மூலம் உப்புவரி நீக்கப்பட்டது.
இர்வின் பிரபு தனது பதவிக்காலம்
முடிந்து இங்கிலாந்துக்குச்
சென்றுவிட்டார். அவருக்குப் பிறகு
ஆங்கில அரசின் பிரதிநிதியாக
ஏகாதிபத்திய வெறி பிடித்த
வெல்லிங்டன் பிரபு என்பவர் பதவி
ஏற்றார். அவர் இந்திய விடுதலைப்
போராட்டத்தை வெறுப்பவர். இந்திய
மக்களுக்கு இம்மியளவும் உரிமை
கொடுக்கக்கூடாது என்ற
கொள்கை உடையவர். எனவே காந்தி
– இர்வின் ஒப்பந்தத்தை
கிழித்தெறிந்தார். ஒப்பந்தம் மூலம்
வழங்கப்பட்ட உரிமைகளைப் பறித்தார்.
அந்த சமயத்தில் லண்டனில் நடந்த
வட்டமேஜை மாநாட்டில் காந்தியடிகள்
கலந்து கொண்டு இந்திய
விடுதலைக்கான கருத்துக்களை முன் வைத்தார்.
ஆங்கில ஏகாதிபத்தியம் அவற்றை ஏற்றுக்
கொள்ளவில்லை.
இந்தியா வந்த பின்னர் காந்தியடிகள்
கைது செய்யப்பட்டார். அவரைத்
தொடர்ந்து நேரு, வல்லபாய் படேல்
போன்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டனர்.
சுதந்திரப் போரில் இரண்டில் ஒன்றைப்
பார்த்துவிட வேண்டும் என்று துடித்துக்
கொண்டிருந்த
தொண்டர்களும்,
பொதுமக்களும் தலைவர்களின் கைது
செய்தியைக் கேள்விப்பட்டவுடன்
கொதித்தெழுந்தனர். மீண்டும்
சட்டமறுப்பு மறியல்கள் கடுமையாக
நடைபெற்றன. போராட்டத்தை ஆங்கிலேய
அரசு கண்மூடித்தனமாக அடக்கு முறைகளை
மேற்கொண்டு ஒடுக்க முயற்சித்தது.
தமிழகம் முழுவதும் போராட்டம்
தீவிரமடைந்தது. திருப்பூரில் தேசபந்து வாலிபர்
சங்கத்தினர் மறியல் நடத்துவதற்கான
ஏற்பாட்டைச் செய்தனர். குமரன் அதை
அறிந்து அச்சங்கத்தினருடன் இணைந்து
செயல்படத் துணிவு
கொண்டார். குடும்பத்தினர்களும்
நண்பர்களும் தடுத்தும் குமரன்
போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு
செய்துவிட்டார். குடும்பத்தைப் பற்றியும்,
மனைவியைப் பற்றியும் கவலைப்படாமல் தேச
விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு
பெறவும், குண்டாந்தடிகள்
தாக்கினாலும், குண்டுகள் நெஞ்சைப்
பிளந்தாலும், கொடுஞ்சிறையில்
அடைக்கப்பட்டாலும், செத்து
மடிந்தாலும் கவலை இல்லை, இந்தியாவின்
விடுதலையே தனது இலட்சியம் என்று உறுதி
கொண்டார்.
மறியல் போராட்டத்தில் கலந்து
கொள்ளச் செல்லும் முன்பு
குமரன் தன் தாயாரிடம் வணங்கி, ஆசி
கூறி அனுப்பும்படி வேண்டினார். மகனை
அனுப்ப விருப்பம் இல்லாத தாய்
கருப்பாயி, ஒருவாறு மனதை
தேற்றிக்கொண்டு மகனின்
உணர்ச்சியைக் கண்டு கண்ணீருடன் ஆசி கூறி
அனுப்பினார்.
திருப்பூரில் மங்கள விலாஸ்
மாளிகையின் முன்பு கூடினார்கள் மறியல்
போராட்ட வீரர்கள். அவர்களை மாதரசிகள்
மனங்கனிந்து முன்வந்து ஆரத்தி எடுத்து,
திலகமிட்டு, வாழ்த்தி வழி அனுப்பினர்.
“உடல், பொருள், ஆவி” என்ற
மூன்றையும் இந்திய தேச விடுதலைப்
போராட்டத்தில் இழந்தாலும் சரி என்று
போராட்டக்களம் நோக்கி புறப்பட்டனர்.
பின்னர் குமரன் என்று வழங்கப்பட்ட
குமாரசாமி தேசியக் கொடியை
கையில் பிடித்துக்கொண்டு
தலைநிமிர்ந்து ஏறுநடை போட்டுச் சென்றார்.
தொண்டர்படை சென்ற
வீதியில் தான் காவல் நிலையம் இருந்தது.
தொண்டர் படையைக் கண்டதும்,
சுமார் 30 காவலர்களும், 2 காவல்
அதிகாரிகளும் தடிகளுடன் காவல்
நிலையத்திலிருந்து ஓடி வந்தனர்.
தொண்டர் படையின் அருகில்
வந்ததும் கண்மூடித்தனமாக சுதந்திரப்
போராட்ட வீரர்களைத் தாக்கினார்கள்.
“கொடியை பிடித்துக்
கொண்டு ஊர்வலம் போவது
சட்டவிரோதமாகும் என்று அறிவித்து
இருக்கிறோம். ஆகையால் அணிவகுத்துச்
செல்வதைத் தடை செய்கிறோம். கலந்து
போய்விடுங்கள். இல்லையென்றால்
வன்முறையைக் கையாண்டு உங்களைச் கலைக்க
முற்படுவோம்” என்று எச்சரிக்கை ஏதும்
செய்யாமல் காவலர்கள் எடுத்த
எடுப்பிலேயே தடியால் தாக்கினார்கள்.
தொண்டர்கள் காவலர்களுக்கு
எவ்விதத் துன்பமும் செய்யவில்லை.
தடியால் வெறிநாயை அடிப்பது போல்
அடித்தார்கள். அதன் மூலம் சுதந்திர
உணர்வை, ஆர்வத்தை அழித்துவிடலாம் என்று
நினைத்தார்கள். தடியால் கடுமையாகத்
தாக்கியதுடன், தொண்டர்களின்
கரங்களிலிருந்து தேசியக் கொடியைப்
பிடுங்கி எறிந்தனர். காவலர்கள் தாக்கிய
போதும், குமரன் தனது கையில் பிடித்திருந்த
தேசியக் கொடியை காவலர்களிடம்
பறிகொடுக்காமல்
கெட்டியாகப் பிடித்திருந்தார்.
காவலர்கள் குமரனின் கரங்களிலிருந்து
பலவந்தமாக தேசியக்கொடியை
பிடுங்கி எறிந்தனர்.
குமரனும், இராமன் நாயர் என்ற
தொண்டரும் நினைவிழந்து இரத்த
வெள்ளத்தில் கிடந்தனர். அரசாங்க
மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர். காவலர்களின்
தாக்குதலால் குமரனின் மண்டை சிதறி மூளை
பாதிக்கப்பட்டுவிட்டது. அதனால்
மருத்துவர்களால் காப்பாற்ற
முடியவில்லை. 11.01.1932 அன்று குமரனின்
உயிர் பிரிந்தது. குமரனின் இறுதி ஊர்வலம்
காவல்துறையால் மிகவும் இரகசியமாக
வைக்கப்பட்டு, மக்கள் கலந்து
கொள்வது தடுக்கப்பட்டது.
இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு
தனது இன்னுயிரை ஈந்த தியாகி குமரனை
'கொடிகாத்த குமரன்' என்று தேசம்
போற்றுகிறது. குமரனின் தியாகம் போற்றுவோம்!
அவர் புகழ் பரப்புவோம்!!