செவ்வாய், 27 ஜூலை, 2010

சின்ன‌ குயில் சித்ரா பிற‌ந்த‌ நாள் ஜுலை 27

சின்ன‌ குயில் சித்ரா பிற‌ந்த‌ நாள் ஜுலை 27 ...
சின்ன‌ குயில் சித்ரா திருவனந்தபுரத்தில் வானொலியில் பாடகராகப் பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயர் தம் மூத்தபெண் பீனாவின் அரிய குரலினிமையையும் , இசைத் திறமையையும் கண்டு அவரே தம் புகழை இசையுலகில் பட்டொளி வீசி பறக்கச் செய்வார் என்று கணக்கிட்டார். ஆனால் இறைவன் சித்தம் வேறாக இருந்தது. கிருஷ்ணன் நாயருடைய மனைவி சாந்தகுமாரி ஒரு வீணை வித்தகி. அவர் பள்ளியில் இசையும் கற்பித்து வந்தார். அபூர்வ குரலினிமையைப் பெற்றிருந்த பீனாவிற்கு சிறு வயது முதல் கவனத்துடன் தேவையான பயிற்சிகளெல்லாம் முறைப்படி அளிக்கப்பட்டது. ஆனால் திருவனந்தபுரத்தில் 1963 ஆம் ஆண்டில் ஜூலை 27ல் பிறந்த அவருடைய இளையமகள் சித்ரா கணக்கற்ற அபூர்வத் திறமைகளைத் தம்முள் பொதித்துக் கொண்டு அவருடைய தந்தையின் கனவுகளை எல்லாம் நனவாக்குபவர் என்பதைக் காலம் உலகிற்கு உணர்த்திற்று.
சித்ரா என்றாலே அவரது புன்னகை சிந்தும் முகமே ரசிகர்களின் கண் முன் தோன்றுகிறது. வாடாத மலரைப் போன்று மாறாத புன்னகை அவரின் தனித்த முத்திரையாகì காண்பவரை வசீகரிக்கிறது. குழந்தை சித்ரா வானொலியில் ஒலிபரப்பட்ட சுசீலா அம்மாவின் 'பிரியதமா பிரியதமா' என்ற பாடலைத் தன் பட்டு உதடுகளை அசைத்துப் பாட முயற்சித்த பொழுதே அவருடைய எதிர் காலம் இசை என்று எழுதப்பட்டு விட்டதாகத் தோன்றுகிறது.
பொம்மைகளை வைத்து விளையாடும் வயதில் பீனாவிற்கு சங்கீதம் கற்பிக்கப்பட்ட பொழுது சின்னஞ்சிறு சித்ரா தன் கேள்வி ஞானத்தினாலேயே கேட்ட பாடல்களை நினைவு படுத்திக் கொண்டு பாடும் திறமை படைத்தவராக இருந்தார். அவர் தம் ஐந்தாம் பிராயத்திலேயே அகில இந்திய வானொலி ஒரூ பரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார் என்பது வியக்க வைக்கிறது. பள்ளியில் பயின்ற நாட்களிலும் கையில் புத்தகத்துடன் தேர்விற்குô படிக்கும் வேளையிலும அவருடைய கவனம் படிப்பின் பால் செல்லாமல் பக்கத்து கோவிலிருந்து ஒலிக்கும் பாடலின் ஸ்வரங்களிலேயே லயித்து வந்தது. இதை கண்ட அவர் தந்தையார் தம் மகள் சார்பாக National Talent Search Scholarship க்கு பதிவு செய்தார். நேர்முகத் தேர்வுக்குî சென்றபொழுது இரண்டு வருடம் சங்கீதம் கற்றிருக்க வேண்டும் என்று குழுவினர் வலியுறுத்தியபோதும் பதிமூன்று வயது சித்ரா தோடி ராகத்தின் சிக்கலான ஸ்வரங்களை நிரவல் செய்து தம் தகுதியை நிரூபித்து ஏழு வருட scholarship ஐப் பெற்றார். பின்னர் இசை பட்டப்படிப்பில் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.
சித்ரா பேராசிரியர்.ஓமண்ணக்குட்டியிடம் இசை பயின்று வந்தார் அவருடைய சகோதரர் எம்.ஜி..ராதாகிருஷ்ணன் அவர்கள் திரைத்துறையில் புதுì குரல்வளம் கொண்டவர்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் இருந்தார். ஓமண்ணக்குட்டி அவர்கள் சுட்டிப்பெண் சித்ராவின் பெயரை முன் மொழிய திரைப்பட பின்னணிப் பாடகியாகப் பிரவேசித்தார்.
தான் ஒரு முழு நேரப் பின்னணி பாடகியாவோம் என்று கனவிலும் தான் நினைக்கவில்லை என்றுரைக்கிறார் சித்ரா. பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபொழுது அவர் திரு.கே.ஜே.யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றார். அவ ருடைய முதல் திரைப்படப்பாடல் வெளிவரும் முன்னரே அந்தப் பாடல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து திரு.யேசுதாஸ் அவர்களுடன் பல மேடை நிகழ்ச்சிகளிலும், 'தரங்கிணி' பதிப்புகளிலும் சித்ராவிற்குô பாடும் வாய்ப்புகள் வந்தன. தரங்கிணிக்கு வந்த இசையமைப்பாளர்கள் அப்புதுக்குரலால் ஈர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவரை நாடி வாய்ப்புகள் தொடந்து வந்தன. திருவனந்தபுரத்தை விட்டு சென்னைக்கு வந்து குடி பெயர்ந்தால் கணக்கற்ற வாய்ப்புகள் பெற இயலும் என்று இசையமைப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து சித்ராவிடம் வலியுறுத்தி வந்தார்.
முகமறியாத இடத்திற்கு வர முதலில் சித்ராவிற்கு விருப்பமில்லை. ஒரு முறை 'குஷி ஔர் குஷி ' என்ற ஹிந்தி திரைப்படத்திற்கு S.P.வெங்கடேஷ் எழுதிய ஒரு பாடலை P.B.ஸ்ரீனிவாசுடன் இணைந்து பாடுவதற்காகî சென்னைககு வந்திருந்தார். அந்தத் திரைப்படம் வெளியிடப்படவில்லை. ஒரு முறை இயக்குனர் ஃபாஸில் தம்முடைய Nokkethadhoorathu Kannum Nattu என்ற வெற்றிப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்ய விரும்பினார். அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்த இளையராஜா சித்ராவிற்கு அழைப்பு விடுததார். இளைய ராஜாவின் இசையமைப்பில் 'நீ தானா அந்தக்குயில் ' என்ற திரைப்படத்தில் அவர் பாடிய 'பூஜைக்கேத்த பூவிது' என்ற பாடலும், 'கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட ' என்ற இரு பாடல்களும் அவருக்கு புதிய இசையுலகிற்கு திறவுகோலாக அமைந்தன.
1985 ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் ('கீதாஞ்சலி ' திரைப்படத்தில் ' துள்ளி எழுந்தது பாட்டு சின்னக்குயிலிசை கேட்டு' , வைரமுத்துவின் 'ஒரு ஜீவன் அழைத்தது ') சித்ராவின் இனிய குரலில் உயிர் பெற்றெழுந்தன. தமிழ் சேவையால் சூட்டப்பட்ட 'சின்னக்குயில் சித்ரா' என்ற பெயர் நிலைத்தது. அறிமுகப்படுத்தப்பட்ட அதே ஆண்டு ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட 'நானொரு சிந்து காவடிச்சிந்து' , 'பாடறியேன் படிப்பறியேன்' போன்ற பாடல்களை சிந்து பைரவியில் மிகச் சிறப்பாகப் பாடி தேசிய விருதைப் பெற்றார். தன்னுள் ஒளிந்திருந்த திறமையை உலகிற்கு வெளிக்கொணர்ந்து புடமிட்ட பொன்னாக ஒளிரச் செய்ததில் தான் திரு.இளையராஜா அவர்களுக்கு பெரிதும் கடமைப் பட்டிருப்பதாக சித்ரா அவர்கள் கூறுகிறார்.
அடுத்து 1985-1986ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் பல்சுவையாக சுவைக்கக் கிடைத்தன. இதைத் தொடர்ந்து. இசையமைப்பாளர்கள் பலரும் தம் பாடல்களுக்கு உயிரூட்ட சித்ராவின் குரலைப் பயன் படுத்தி தீஞ்சுவை விருந்தை படைக்கத் துவங்கினார்கள். சித்ராவுடன் தமிழில் முதலில் பாடிய திரு.கங்கை அமரன், மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், ஷங்கர் - கணேஷ் ஆகியோர் இசையமைப்பிலும் அநேக பாடல்கள் பாடியிருக்கிறார் சித்ரா
எண்பதுகளின் பிற்பகுதியில் திரு.சந்திரபோஸின் இசைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. அவருடைய இசையமைப்பில் திருமதி.சித்ராவிற்கு 'மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு', சின்னக்கண்ணா செல்லக்கண்ணா, 'பூ முடிக்கணும் ', 'வண்ணாத்திப்பூச்சி வயசென்னாச்சு போன்ற அரிய பாடல்களைப் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.
மேலும் வி.குமாரின் இசையமைப்பில் திரு எஸ்.பி.பியுடன் இணைந்து 'பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பூவெல்லாம் ' பாடிய சித்ரா அவர்கள் குன்னக்குடி வைத்யநாதனின் 'உலா வந்த நிலா ' திரைப்படத்தில் சில அரிய பாடல்களையும், டி.ராஜேந்திரனின் இசையில் சில' பாடல்களையும் பாடி அசத்தினார்.
சில இசையமைப்பாளர்கள் சித்ராவிற்காக காத்திருந்து தம் படங்களில் பாடும் வாய்ப்பளித்தார்கள். R.D.பர்மன் (நதியே நதியே நைல் நதியே), லக்ஷ்மிகாந்த் பியாரிலால் (அச்சமில்லா பாதையில்), பப்பி லஹரி (தக்கதிமிதானா), V.S. நரசிமமன் (விழிகளில் கோடி அபிநயம்), L.வைத்யநாதன்(என்னை விட்டுப் பிரிவது நியாயமாகுமா), தேவேந்திரன் (கண்ணுக்குள் நூறு நிலவா, புத்தம்புது ஓலை வரும்), ஹம்ஸலேகா (ராக்குயிலே கண்ணிலே என்னடி கோபம், சேலை கட்டும் பெண்ணுக்கொரு), எம்.ரங்காராவ் (குடும்பம் ஒரு கோயில்), மனோஜ் - க்யான் (சின்னக்கண்ணன் தொட்டது பூவாக, கண்ணா நீ வாழ்க, உள்ளம் உள்ளம் இன்பத்தில் துள்ளும், அழகில் சொக்காத ஆண்களே) , பாக்யராஜ் (அம்மாடி இது தான் காதலா), S.P.B (உன்னைக் கண்ட பின்பு தான், இதோ என் பல்லவி), S.A.ராஜ்குமார் (ஆயிரம் திருநாள்) , தேவா (சந்திரலேகா, வேண்டும் வேண்Îம்), போன்றவர்களின் பாடல்கள் அவரின் பன்முகத்திறமைக்கு கட்டியம் கூறும் முகமாக அமைந்துள்ளன.
அடுத்து தொடர்ந்த பத்தாண்டுகளில் இசையரங்கில் A.R. ரஹ்மான், மரகதமணி, வித்யாசாகர், சிற்பி, பரத்வாஜ் போன்றவர்களின் பிரவேசத்தினால் இசையின் பரிமாணத்தில் பல அற்புதமான மாற்றங்கள் காணத் துவங்கின. அவர்கள் தம் கற்பனை வளத்திற்கேற்ப இசைத்துறையில் பல புது முயற்சிகளில் இறங்கினர். இத்துறையில் முதன்மையாக நின்ற ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சிதராவின் குரலில் ' புத்தம்புது பூமி வேண்டும்' , 'என் மேல் விழுந்த மழைத்துளியே' , 'தென் கிழக்குச் சீமையிலே', 'கண்ணாளனே' , ஊ லலலா,எங்கே எனது கவிதை போன்ற பல வெற்றிப்பாடல்களை வழங்கினார்.
சித்ராவின் இசைப்பயணத்தில் இசையமைப்பாளர் மரகதமணியும் ஒரு மைல் கல்லாக நிற்கிறார். 'அழகன் ' படத்தில் தாம் 'தத்தித்தோம் ' என்ற பாடல் தமக்கு சவாலாக இருந்ததாக சித்ரா உரைக்கிறார். அவர் இயக்கத்தில் 'நாடோடி மன்னர்களே' , 'நீ ஆண்டவனா?' , ' கம்பங்காடே' (வானமே எல்லை) போன்ற பாடல்கள் அற்புதமானவை. 'உயிரே உயிரே' என்ற பாடலும், 'தேவராகம்' என்ற இரு மொழிப்படத்துப் பாடல்களும் அவருக்கென்றே இசையமைக்கப்பட்டவை.
பாலபாரதி (உன்னைத் தொட்ட தென்றல்), ஆதித்யன் (ஒயிலா பாடும் பாட்டிலே, வெள்ளி கொலுசு ஜதி போடுதே), மஹேஷ் (பூங்குயில் பாடினால்), சிற்பி (கன்னத்துல வை, I love you love you , தென்றல் தென்றல் தென்றல் வந்து) , ரஞ்சித் பாரொட் (மின்னல் ஒரு கோடி), ஆகோஷ் (தொலைவினிலே, முந்தானை சேலை), வித்யாசாகர் (பாடு பாடு பாரத பண்பாடு , அடி ஆத்தி , அன்பே அன்பே நீ என் பிள்ளை, நீ காற்று நான் மரம்), பரத்வாஜ் (ஒரு பூ வரையும் கவிதை , வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே , உன்னோடு வாழாத , ஒவ்வொரு பூக்களுமே), ரமேஷ் வினாயகம் (காதலை வளர்த்தாய்), எஸ்.ஏ.ராஜகுமார் (தொடு தொடு எனவே, இன்னிசை பாடி வரும்) போன்ற பல வேறு இசையமைப்பாளர்களின் இசையில் சித்ரா பாடிய பாடல்களின் தொகுப்பைô பார்க்கிறோம்.
இருபது ஆண்டுகளுக்கு மேல் மலையாளத் திரையுலகில் மட்டுமின்றி பி.லீலாவிற்குப் பிறகு கேரளாவிலிருந்து வந்து தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் நான்கிலும் ஒப்பாரும், மிக்காருமில்லாமல் செங்கோலோச்சி பல இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் இளையராஜா,ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன், எஸ்.பி.பி, மனோ , ஜெயச்சந்திரன் என்று பலருடனும் இணைந்து பாடி வாலி, வைரமுத்து, பழனி பாரதி, பா.விஜய் போன்றவர்களின் வரிகளை தம் மந்திரக்குரலால் உயிர்ப்பித்த திருமதி .சித்ராவைப் பற்றி எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதலாம்.
தெலுங்கில் சித்ராவை ' பிரளயம்' திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய திரு.கே.வி.மஹாதேவன் 'ஸ்வாதி கிரணம்' என்ற திரைப்படத்தில் ' பிரணதி பிரணதி' என்ற பாடலை திரு.எஸ்.பி.பியுடனும், திருமதி.வாணி ஜெயராமுடனும் பாடும் அரிய வாய்ப்பைக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து எஸ்.பி.பி,, இளையராஜா, கீரவாணி(மரகதமணி) போன்றவர்கள் அவரை தெலுங்கில் பல அற்புதமான பாடல்களைப் பாட வைத்தார்கள். முதலில் மொழி அறியாது அவர் சற்று சிரமப்பட்டாலும் எஸ்.பி.பி அவர்கள் மொழியை பொருளோடு புரியவைத்து உச்சரிக்கும் முறையைî சுட்டிக் காட்டியபொழுது கற்பூர புத்தி கொண்டவரான சித்ரா அவர்கள் வெகு விரைவில் கற்று திருமதி.பாலசரஸ்வதியும், பிறரும் பாரட்டும் வண்ணம் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர் போன்றே அம்மொழிப் பாடல்களை மிகச் சிறப்பாகô பாடி பிற இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் என உறுதியாகக் கூறலாம்.
பாலிவுட்டையும் திருமதி.சித்ராவின் குரல் வசீகரிக்கத் தவறவில்லை. இசையமைப்பாளர் ஆனந்த் மிலிந்த் 'ப்ரேம' என்ற தெலுங்கு படத்தை 'LOVE ' என்ற பெயரில் தயாரித்த பொழுது இளையராஜாவின் பாடல்களைப் பின்பற்றி இசை அமைத்து சித்ராவையும், எஸ்.பி.பியுடன் இணைந்து பாட வைத்த பாடல்கள் பல வடநாட்டில் விரும்பிக் கேட்கப்பட்டன. ஏ.ஆர்.ரஹ்மான் அநேக ஹிந்தி மொழிப்படங்களில் அவரைப் பாட வைத்தார். ராஜேஷ் ரோஷன், நாதீம் ஷ்ரவண், அனு மாலிக், நிகில் வினய், இஸ்மயில் தர்பார் போன்ற இசையமைப்பாளர்கள் அந்த காலகட்டத்தின் மிகச் சிறந்த பாடகி என்று திருமதி..சித்ராவிற்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். லதா மங்கேஷ்கரின் எழுபத்தைந்தாம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது அந்தேரியில் நடந்த பிரம்மாண்டமான பாராட்டு விழாவில் லதாஜி கேட்டுக் கொண்டதற்கேற்ப சித்ரா அவர்கள் 'rasika balma' பாடலைப் பாடி விழாவைத் துவக்கி வைத்தார்.
சித்ரா அகில் இந்திய வானொலியிலும், தொலைகாட்சியிலும் Grade 'A' artiste ஆக பல வருடங்கள் இருந்ததோடு வங்காள, ஒரிய, பஞ்சாபி, வடுக மொழியிலும் அநேக பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடி வெளிவந்த திரையசை அல்லாத ஆல்பங்களும் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவர் சலீம் சுலைமானுடன் இணைந்து 'ராக ராகா ' என்ற Indipop தொகுப்பும், சாரங்கி வித்வான் உஸ்தான் சுல்தானுடன் இணைந்து வெளியிட்ட 'Piya Basanti' என்ற தொகுப்பும் விற்பனையில் சாதனை படைத்ததுடன் எம்.டி.வி விருதையும் பெற்றுத் தந்தன. 'Sunset Point' எனற தொகுப்பில் குல்சார் கதை சொல்லி வருகையில் இடையிடையில் பூபேந்திர சிங்கும், சித்ராவும் பாடுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அவர் தன் தாய் மொழியான மலையாளத்தில் பல பக்திப்பாடல் தொகுப்புகளில் பாடியுள்ளார். அவை கேரளக் கோவில்களில் திருவிழாக் காலங்களில் ஒலி பரப்பப் படுகின்றன. 'சலீல் சௌத்ரி' யின் இசையமைப்பில் உன்னி மேனனும் , சித்ராவும் 'Swarnarekha' என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளனர். தமிழில் 'அன்னை மூகாம்பிகையே ' என்ற தொகுப்பும், ஸ்வாதித் திருநாளின் பதங்களின் தொகுப்பான 'Enchanting Melodies' ம், ' ' கிருஷ்ணபிரியா'வும் அவருடைய மற்ற தொகுப்புகளாக வெளி வந்துள்ளன. இன்னிசையரசி எம்.எஸ் அவர்களின் நினைவிற்கு ஒரு அஞ்சலியாக 'My Tribute' என்னும் தொகுப்பில் எம்.எஸ் பாடி அமரத்துவம் பெற்ற ' குறை ஒன்றும் இல்லை' , ' பாவயாமி ரகுராமம்' , ' காற்றினிலே வரும் கீதம்' போன்ற பாடல்களைப் பாடியதோடு ' சுனாமி ' வெள்ள நிவாரண நிதிக்காக உஷா உதுப்' பின் 'We Believe in Now' என்ற தொகுப்பிலும் பாடியுள்ளார்.
'ஸ்ருதி' என்று பொருத்தமான பெயரில் சாலிகிராமத்தில் தனக்கென அழகுற கட்டிக் கொண்ட இல்லத்தில் 'விஜய ஷங்கர்' என்ற பொறி இயல் வல்லுனரான தன் கணவருடன் வாழ்ந்து வரும் சித்ராவின் சகோதரரும்., சகோதரியும் பெற்றோரின் மறைவிற்குப் பிறகு வெளி நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வாழ்கிறார்கள்.
திருமதி.சித்ரா வாங்கிய விருதுகள் கணக்கற்றவை. தமிழ் நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா என்ற நான்கு மாநில விருதுகளையும் பெற்ற ஒரே பின்னணிப்பாடகி அவரே. 1985ஆம் ஆண்டில் துவங்கி பதினைந்து முறை (ஜானகி அவர்கள் 12 முறை) அவர் கேரள மாநில விருதைப் பெற்றுள்ளார். அவர் ஆறு முறை ஆந்திர மாநில நந்தி விருதுகளையும், இரண்டு முறை கர்நாடக மாநில விருதுகளையும் , நான்கு முறை தமிழ் நாடு மாநில விருதுகளையும் பெற்று விருதுகளுக்கு பெருமை சேர்த்துள்ளார். 1995 ஆம் ஆண்டில் அவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது. அவருக்கு ஆறு முறை தேசிய விருது கிடைத்திருக்கிறது. விராசத் ஹிந்தி படத்தில் paayalEn chunmun chunmun' பாடலின் மூலம் சித்ரா தென்னிந்தியப் பின்னணியில் இருந்து ஹிந்தி மொழியில் பாடி தேசீய விருது பெற்ற முதல் பாடகி என்ற சிறப்பைப் பெற்றார்.
தேசிய விருது பெற்ற இவரது 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலை திருச்சிராப்பள்ளியில் ஒரு பள்ளியில் காலை நேர பிரார்த்தனைக்காக சிறுவர்கள் பாடுவதாகவும், ஒரு பல்கலைக் கழகத்தில் பாடத் திட்டத்தில் இதுவும் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தெரிவிக்கிறார். 12000 பாடல்களுக்கு மேல் பாடிய சித்ரா அவர் S.P.சரண், விஜய் யேசுதாஸ் முதலிய அடுத்த தலை முறை பாடகர்களுடனும் பாடுகிறார்.
வெற்றித் திருமகள் வரிந்து வந்து புகழாரங்கள் சூட்டியபொழுதும் சித்ரா அவர்கள் தன்னுடன் பிறந்த விட்டகலாத மாறாத புன்முறுவலுடன் எளிமையாக , இனிமையாக எல்லாவற்றையும் சமசித்தத்துடன் ஏற்று காட்சிக்கு எளியவராக நிற்பது ஒரு அரும் பண்பாடல்லவா? அவர் தன்னை இச்சிகரத்தை அடைய உதவி செய்த ஒவ்வொருவருக்கும் தம் உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறார். திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நந்தனா என்னும் மழலைக்கு தாயாகிய சித்ரா, மகளின் வருகைக்குப் பிறகு தன் வாழ்வு முழுமை பெற்றதாக உணருகிறார்.
அவர் சாதனைகளின் சிகரமாக 2005ஆம் ஆண்டில் மார்ச் 28ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் திரு.அப்துல் கலாம் அவர்களிடமிருந்து 'பத்மஸ்ரீ' விருது பெற்றதைச் சொல்லலாம். புகைப்படக்காரர்களும், பத்திரிகைக்காரர்களும் அவருடைய ஒரு நிமிடப் பேட்டிக்காக வரிசையில் காத்து நின்ற பொழுது தன் சகோதரியின் குழந்தைகளுக்காக நடிகர் ஷாரூக்கானின் கையெழுத்தைப் பெறும் முயற்சியில் இருந்தார்.
"எனக்குத் தெரிந்ததெல்லாம் ஓரளவு சங்கீதம் மட்டுமே. ஆனால் அந்த இசையே எனக்கு எல்லாம்" என்று கூறும் சித்ரா இன்னும் பல காலம் இசைத்துறையில் பல சாதனைகள் புரிய இறைவனை வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக