திங்கள், 15 ஜூன், 2020

உலக மூத்தோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம் ஜூன் – 15



 
உலக மூத்தோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம் ஜூன் – 15

*(World Elder Abuse Awareness Day)*

உலகளவில் 60 வயதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை 1995ஆம் ஆண்டில் 542 மில்லியனாக இருந்தது. 

இது 2025இல் 1.2 பில்லியனாக அதாவது இரு மடங்காக உயரப்போகிறது.

சுமார் 4 முதல் 6 சதவீதம் முதியோர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை.

இதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

முதியவர்களை மரியாதையுடன் நடத்த ஐ.நா. இத்தினத்தை அறிவித்துள்ளது.
~_,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,_

ஞாயிறு, 14 ஜூன், 2020

உலக காற்று தினம் ஜூன் 15:


உலக காற்று தினம் ஜூன் 15: 

காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.

நம் முன்னோர்கள் இயற்கையையே தெய்வமாக எண்ணி வணங்கினர். பஞ்ச பூதங்களான காற்று,நீர்,நிலம்,ஆகாயம், நெருப்பு இவற்றின் தொகுப்புதான் உலகமாகும்.
மனித நாகரீகம் வளர வளர இயற்கையும் சீர்கேடு அடைய ஆரம்பித்துள்ளது. இயற்கையை சீரழித்தது, உயிரினங்களில் மனிதன் மட்டும்தான். மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அழித்தான். மரங்களை வெட்டி காடுகளை அழித்து மனைநிலங்களாக மாற்றினான். நிலத்தைத் தோண்டி நிலக்கரி பெட்ரோல் எடுத்து, இயற்கையை நாசப்படுத்தினான். நிலத்தடி நீரை உறிஞ்சி நீர் இல்லாமல் வறண்ட பிரதேசமாக மாற்றினான். மனிதன் ஐம்பூதங்களையும் பாழாக்கியதன் விளைவுதான் பூமி வெப்பம், பூகம்பம், சுனாமி, வறட்சி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள். இந்த பஞ்ச பூதங்களின் பாதிப்பு தான் மனிதனை பல நோய்களுக்கு ஆளாக்கியுள்ளது.

இயற்கையை நாம் எந்தளவுக்கு மாசு படுத்தியுள்ளோம் என்பதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கொஞ்சமாவது அறிந்து கொள்வோமா?

உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்றுதான். காற்று எங்கும் நிறைந்த பொருள். இதனை கண்ணினால் பார்க்க முடியாவிடினும், இதன் செயலால் இதனை உணர்ந்து கொள்கிறோம். ஆறு அறிவுடைய மனிதன் முதல் ஓரறிவுடைய தாவரம் வரை உள்ள ஒவ்வோர் உயிருக்கும் காற்று இன்றியமையாததாகும். இக்காற்று இல்லையென்றால் எந்த உயிரும் வாழ முடியாது. காற்றோட்டமில்லாத இடத்திலும், மக்கள் நிறைந்த இடத்திலும் நச்சுக்காற்று மிகுந்திருக்கும் ஆதலால் அங்கு அதிக நேரம் தங்குவதற்கு சிரமமாக இருக்கும். ஒருவேளை தங்க நேரிட்டால் தூய காற்றை சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறும்.

உயிர்கள் வாழ்வதற்கு உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அவசியம்வேண்டியவைதான். ஆனாலும் உணவின்றி சில நாட்களும், நீரின்றி சிலமணிநேரங்களும் உயிர்வாழ நம்மால் முடியும். ஆனால் தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. எனவே உயிர் வாழ்க்கைக்கு தூய காற்று இன்றியமையாதது. உயிரினங்கள் தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடுமிகவும் முக்கியமாகும். தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்-டை-ஆக்ஸைடு என்றகரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற் சாலையாக இருந்த காடுகளை அழித்ததன்விளைவுதான் காற்றில் கரியமில வாயுவின் ஆதிக்கம் அதிகரித்தது. மேலும் எண்ணற்ற தொழிற் சாலைகளின் புகை, வாகன புகை என பல வகைகளில் காற்றுமாசடைந்து வருவதால் இயற்கை சீர்கெட்டு, மனித இனமும் ஆரோக்கியமின்றி அலைந்து கொண்டிருக்கிறது - நெருங்கிய வீடுகள், பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தல், செங்கல் சூளைகள்,சுண்ணாம்புக் காளவாய்கள்,இரசாயன தொழிற்சாலைகள், புகையை ஏற்படுத்தும் காட்டுத்தீ போன்றவற்றால் வரும் புகையால் காற்று மண்டலம் மாசடைந்துள்ளது. இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்று. தாவரங்களுக்கும் காற்று தேவை.

உயிரினங்கள், தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை- ஆக்ஸைடு மிகவும் முக்கியம்.

தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்- டை -ஆக்ஸைடு என்ற கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன.நாட்டின் வளர்ச்சிக்காக அழிக்கப்பட்ட காடுகள், தொழிற்சாலைகளின் அதிகரிப்பு, வாகனப் புகை போன்ற பல காரணங்களினால் காற்று மாசடைகிறது. காற்றின் ஆற்றலைக் கொண்டாடும் தினம் இது. காற்றின் ஆற்றல், காற்றை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

காற்று மாசுபாட்டால் தாவரங்கள், நிலம், நீர், நினைவுச் சின்னங்கள், கட்டடங்கள் முதலியவையும் பாதிக்கப் படுகின்றன. வளி, காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துகிறோம். எனினும் அறிவியலில் இவை வேறுவேறாகப் பொருள் கொள்ளப்படுகின்றன. தட்பவெப்பவியலில், காற்று அதன் வலு, வீசும் திசை ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடப்படும்.

காற்று (wind) : வளி மண்டலத்தில் வளி (Gas) பெருமளவில் நகர்வதே காற்று.

மாசு அடைந்த காற்றைச் சுவாசிப்பதால் என்ன ஆகும்?

கண் எரிச்சல்
தலைவலி
தொண்டைக்கட்டு
காய்ச்சல்
காச நோய்
ஆஸ்துமா
சுவாசக் கோளாறு
நுரையீரல் புற்றுநோய்
உரிய வயது முதிர்வுக்கு முன் இறப்பு (Premature Death)
சூரியக் காற்று (Solar Wind): விண்வெளியில் சூரியனில் இருந்து வளிமங்கள் வெளியேறிச் செல்வது.

கோள் காற்று (Planetary Wind): கோள்களில் இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்களின் வெளியேற்றம்.

வன் காற்று (Gust): குறுகிய நேரம் நிலைக்கும் மிகவும் வேகமாக வீசும் காற்று.

சூறாவளி (Squall): நீண்ட நேரத்துக்கு வீசும் பலமான காற்று.

காற்று வேகமானி (அனிமோ மீட்டர் -/ Anemometer): காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி. சுழலும் கிண்ண அமைப்பு கொண்ட காற்று வேகமானிகளே பொதுவாகப் பயன்படுகின்றன.

தமிழில் பண்டைக்காலத்திலிருந்தே வெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுக்கு தனித்தனி பெயர் இடப்பட்டு உள்ளது.

வாடை - வடக்கில் இருந்து வீசும் காற்று

சோழகம் - தெற்கில் இருந்து வீசும் காற்று

கொண்டல் - கிழக்கில் இருந்து வீசும் காற்று

கச்சான் (காற்று) - மேற்கில் இருந்து வீசும் காற்று

ஓசோன் படலம்: வாயு மண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் சூரியனிலிருந்து வருகிற ஆபத்தான புற ஊதாக் கதிர்களை தடைசெய்கிறது.

அதிகவேக விமானங்கள் வெளியிடும் அதிகப்படியான நைட்ரஜன் ஆக்ஸைடுகளும், குளிர்சாதனப் பெட்டி,

தீயணைப்பான் போன்றவற்றிலிருந்து வெளிவரும் வாயுக்களின் மூலமாகவும் ஓசோன் படலம் சிதைக்கப்படுகிறது.

இதன் விளைவாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது.

காற்றின் தரம்: காற்றில் உள்ள தூசி, புகை போன்ற நுண்துகள்களைக் (Fine Particles) கொண்டு அதன் தரம் அளவிடப்படுகிறது. 'PM 2.5', 'PM 10' என்று 2 வகையாக காற்றின் தரத்தை நிர்ணயிக்கின்றனர்.

காற்றின் தோழன்: மரங்கள் கார்பன்டை ஆக்ஸைடை ஆக்சிஜனாக மாற்றுகிறது. மரங்களை வெட்டுவதால் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது. இதனால் காற்று மாசு ஏற்படுகிறது.

வாகனங்கள்: வாகனப் புகை மூலமாக வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, பிற வாயுக்கள் காற்றில் நச்சுப் படலத்தை ஏற்படுத்தி சூழலைப் பாதிக்கின்றன

அமில மழை: தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கந்தகம், நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற வாயுக்களால் அமில மழை பெய்யும்.

இதனால் மண்ணின் அமிலத் தன்மை அதிகமாகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் விவசாய உற்பத்தித்திறன் பாதிக்கப்படும்.

காற்றைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?

வீடுகளில் சமையலுக்கு தரமான எரிபொருள், சாண எரிவாயு பயன்படுத்தலாம். குப்பைகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வாகனங்களில் புகை வெளியேறும் அமைப்பை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். பொது வாகனப் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும்.

எரிபொருள் தட்டுப்பாடு, காற்று மாசு, சாலை நெரிசல் போன்றவற்றை இது குறைக்கும்.

தொழிற்சாலைகளின் புகை வடிகட்டிகள், சுத்திகரிப்புக் கலன்கள் அமைக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, தூசி போன்ற கழிவுப் பொருள்கள் காற்றில் கலந்து மாசடைவதைத் தடுக்கலாம்.

பூமியைச் சூழ்ந்துள்ள வளி மண்டலம் பல வாயுக் கலவை உடையது.

வளி மண்டலத்தில் நிறைந்துள்ள வாயுக்கள்

79% நைட்ரஜன்

20% ஆக்சிஜன்

3% கரியமில வாயு

1% இதர வாயுக்கள்

காற்று திசை காட்டி: காற்று எங்கிருந்து உருவாகிறது என்பதைக் காட்டுகிறது.

காற்று மாசு ஏற்படுத்துபவை:

தொழிற்சாலைகள் > நைட்ரஜன், கந்தக ஆக்சைடு, புகை

பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் > ஹைட்ரோ கார்பன்

உலோகத் தொழிற்சாலைகள் > உலோக நுண்துகள்கள்

ரசாயனத் தொழிற்சாலைகள் > கரிமச் சேர்மங்கள்

வாகனங்கள் > கார்பன் மோனாக்சைடு

விட்டுக்கு ஒரு மரம் நடுவோம் !!! காற்று மாசடைவதை தடுப்போம் !!

உலகக் காற்று தினம் (World Wind Day) ஜூன் 15.


உலகக் காற்று  தினம் (World Wind Day) ஜூன் 15.

உலகக் காற்று நாள் (World Wind Day) ஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது.இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.

2012

2012 ஆம் ஆண்டு, காற்றாற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

உலக ரத்த தான தினம் ஜுன் 14


உலக ரத்த தான தினம் ஜுன்  14

உலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. ரத்தப் பிரிவுகளான A, B, O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
ரத்த தானம் என்பது இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்குவதை பொருள்படுத்தி நிற்கின்றது. இந்த தானத்தின் மூலம் சகல வழங்குநரும் பெருநரும் இதன் பிரதிபலன்களை அவர்களுடைய வாழ்நாளிலேயே அனுபவிக்கிறார்கள். விபத்தினாலோ, யுத்த அனர்த்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அளவிற்கு அதிகமான குருதி வெளியேற்றத்தினாலும், சத்திரசிகிச்சைகளின் போது குருதி தேவைப்படுமிடத்தும் மற்றும் குருதி மாற்றுச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும்போதும் குருதியை தானமாக பெறுபவர்கள் பயன் அடைகிறார்கள். குருதியின் தேவை எச்சந்தர்ப்பத்தில் தேவைப்படும் என்பதை திட்டவட்டமாகக் குறிப்பிட முடியாது.

அதேநேரம், குருதியைப் பெறுபவர் தன் உயிரை மீளப் பெற்றுக் கொள்வதினூடாக நன்மையடைவதைப் போலவே ரத்த தானம் செய்பவர்களும் மறைமுகமாக நன்மையடைகின்றார்கள். இவர்களின் சிறிய செயற்பாடு சில சந்தர்ப்பங்களில் ஒரு உயிரைக் காப்பதற்கு உதவும் மனோநிலை இவர்களிடம் வளர்கின்றது. மறுபுறமாக ரத்த தானம் செய்பவர்களின் உடலில் புதிய குருதி உற்பத்தி செய்யப்படுவதால் அவர்களும் ஆரோக்கியமான வாழ்வை அனுபவிக்கிறார்கள். இந்த உண்மையை ரத்த தானம் செய்வோர் என்ற வட்டத்திற்கு அல்லது எல்லைக்கு வெளியே இருந்து பார்ப்போர் புரிந்து கொள்வதில்லை.

உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் ரத்த தானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதற்காகவே வேண்டியாகும். உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியபோதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை. இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தமே வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் நோயாளி மரணிக்கவும் கூடும்.

2009ம் ஆண்டில் இத்தினத்தின் கருப்பொருள் இரத்தம் வழங்களின் பாதுகாப்பையும், தன்னிறைவையும் செம்மைப்படுத்தி எவ்வித ஊதியமோ, வெகுமதியோ இன்றி சுயமாக தொண்டு செய்யும் நோக்குடன் ரத்த தானத்தை ஊக்குவிப்பதாகும். வருடாவருடம் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் 81 மில்லியனுக்குக் கூடிய அலகுகளை ரத்த தானமாக வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு மனிதருக்கும் என்றோ ஒருநாள் இரத்தத்தின் மூலம் சிகிச்சைச் செய்ய தேவை ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் மிகவும் பயபக்தியுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. அதேநேரம், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை பிரகாரம் உலக சனத்தொகையில் ஒரு வீதத்துக்கும் குறைவானவர்களே ரத்த தானத்தை செய்கின்றனர். எல்லா நோயாளர்களுக்கும் தேவையான இரத்தம் மூலமான சிகிச்சையை உத்தரவாதப்படுத்தி வழங்க ரத்த தானம் செய்வோரின் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது.

மேலும் உலக மக்கள் வழங்கும் ரத்த தானம் ஆண்டுதோறும் 81 மில்லியன் அலகுகளுக்கும் அதிகமாக இருந்த போதிலும் இதில் 38 வீதமான பங்களிப்பினையே வளர்முக நாடுகளில் வழங்கப்படுகின்றது. ஆனால், உலக சனத்தொகையின் 82வீதமானோர் வளர்முக நாடுகளில் வாழ்கின்றனர். இந்நிலையில் இந்நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் மக்களுக்கு பல்வேறுபட்ட வகைகளில் புரிந்துணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றது.

அன்று முதல் இன்றுவரை இன மத மொழி வேறுபாடின்றி உலகெல்லாம் வாழும் அனைத்து மக்களும் மாற்றுக்கருத்தின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு தானம் ரத்த தானமாகும். ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் வைத்தியத்துறை அடைந்துள்ள முன்னேற்றத்தின் காரணமாக குருதிதிரவ இழைய தானம், உடல் உறுப்பு தானம் போன்ற தானங்களும் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியடைந்துள்ளன. இந்த வெற்றிக்குரிய முக்கியமான காரணம் தானம் செய்யும் கருணையுள்ளம் கொண்ட கொடையாளிகளின் இதயத்தில் இவையும் முக்கிய இடத்தை பிடித்துவிட்டன என்பதேயன்றி வேறு எதுவும் இல்லை.

சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முத‌ல் 350 மில்லிலீட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். பொதுவாக 17 - 60 வயதுக்கிடைப்பட்ட சுகதேகிகளால் ரத்த தானம் செய்ய முடியும்.

இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும். தானமாக அளித்த இரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும். இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும். இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.

உடலில் இருந்து இரத்தம் எடுக்க 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இரத்த தானம் அளித்த பிறகு 10, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கச் சொல்லி பிறகுதான் அங்கிருந்து அனுப்புவார்கள். எனவே மொத்தமாகவே இரத்த தானம் அளிக்க 30 நிமிடங்கள் போதும். இரத்த தானம் அளித்த பிறகும் கூட அவரவர் தங்களது அன்றாட வேலைகளில் எப்போதும் போல் ஈடுபடலாம். எந்த சிக்கலும் இருக்காது.

இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. சர்க்கரை நோய், காசரோகம், எய்ட்ஸ் போன்று இரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது. மேலும் 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.

உலக இரத்தான தினத்தின் பிரதான குறிக்கோள்களாக பின்வருவன அமைகின்றன:-

எந்தவொரு வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி ரத்த தானத்தை வழங்குவோருக்கு நன்றி செலுத்துதல்.

நெருக்கடியான சூழ்நிலையில் உயிர்காக்கும் விலைமதிப்பற்ற வளத்தினை ஒழுங்காக வழங்கும் அற்புதமான விசேடமான தொண்டர் அணியைச் சேர்ந்தவர் என்ற மனநிலையை ரத்த தானம் புரிவோருக்கு ஏற்படுத்துதல்.

சுகதேகியாக உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் எவ்வித வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத்தான நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்கமளித்தல்.

ஒரு குடும்ப அங்கத்தவருக்கு இரத்தம் தேவைப்பட்ட சந்தர்ப்பத்தில் ரத்த தானம் செய்தவரை தொடர்ந்தும் இத்தகைய தொண்டர் பணியில் ஈடுபட ஊக்குவித்தல்.

ரத்த தானம் செய்வோருக்கு எவ்வாறு சுகமான வாழ்வினை மேற்கொள்ள முடியும், எவ்வாறு தமது இரத்தத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பது பற்றி அறிவுறுத்துதல்.

உலக ரத்த தான இயற்கை நிகழ்ச்சிகள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுதல்.

ஐக்கிய இராச்சியத்தில் பொதுமக்கள் பெருந்தன்மையுடன் ரத்த தானம் செய்கின்றார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இங்கிலாந்திலும், பிரேசிலிலும் நிச்சயிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக தேசிய இரத்த சேவை நிறுவனம் தினமும் 9000 இரத்த அலகுகளை சேகரிக்கின்றது என்றும், கடந்த வருடம் 1.3 மில்லியன் மக்களிடமிருந்து 2.3 மில்லியன் இரத்த அலகுகளை சேகரித்து வழங்கியமையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்றும் அற்றிக்கைகளில் குறிப்பிடுகின்றது.

எனவே, இது விஷயமாக நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ரத்த தானம் என்பது ஒரு உயிரைக் காக்க நாங்கள் வழங்கும் பங்களிப்பு. இந்த உணர்வினை இத்தினத்தில் உறுதியாக எமது மனங்களில் பதித்துக் கொள்வோம்.

சனி, 6 ஜூன், 2020

உணவு பாதுகாப்பு தினம் ஜூன் 07.


உணவு பாதுகாப்பு தினம் ஜூன் 07.

இன்று ஜூன் 07ஆம் தேதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 10 பேரில் 1 பேர் அசுத்தமான உணவை சாப்பிடுவதால் நோய்வாய்ப்படுகிறார்கள் என அறிவித்துள்ளது. உணவுப் பாதுகாப்பு முறைமைகளை ஒழுங்காக கையாளுவதன் மூலம் எமக்கான உணவு சுத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் பெற்றுக்கொள்ள இயலும். இது குறித்து உலக சுகாதார அமைப்பு எளிய ஐந்து வழிமுறைகளை தந்துள்ளது.


1. எப்போதும் தூய்மை

நாம் சமையலறைக்குள் நுழைவதற்கு முன்பு, கைகளை கழுவுவதும், சமைக்கும் போது எல்லா நேரங்களிலும் தூய்மையையும் சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

2. பதப்படுத்தப்பட்ட மற்றும் சமைக்காத உணவுகளை பிரிப்பது

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சமைக்காத உணவுகளிலிருந்து வெவ்வேறு கொள்கலன்களில் வைப்பது நல்லது. இது இரண்டில் ஏதேனும் மாசுபடுவதற்கான அபாயத்தைத் தடுக்கும்.

3. நன்றாக சமைக்கவும்

எந்தவொரு கிருமிகளையும் கொல்லவும், ஊட்டச்சத்தை அதிகரிக்கவும், உணவு பரிமாறுவதற்கு முன்பு முழுமையாகவும் ஒழுங்காகவும் சமைக்கப்படல் வேண்டும்.

4. உணவு வகைகளுக்கு தகுந்த வெப்பநிலை

வேவ்வேறு வகையான உணவுகளுக்குத் தகுந்தாற்போல் வேவ்வேறு முறைகளில் அவைகளை சேமிக்க வேண்டும். (பாதுகாக்க வேண்டும்). உணவு சேமிப்பு இடம் மற்றும் வெப்பநிலை வாரியாகவும்; உணவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.

5. சுத்தமான நீர் மற்றும் பாதுகாப்பான மூலப்பொருட்களைப் பயன்படுத்துங்கள்

சமையலின் போது பாதுகாப்பான மூலப்பொருட்களும், சுத்தமான பாத்திரங்கள் மற்றும் சுத்தமான நீரை எல்லா நேரங்களிலும் பயன்படுத்துங்கள்.

இந்த வழிமுறைகளை நாம் அடிக்கடி செய்வோர் ஆயினும் இந்த நோய் பேரிடர் காலத்தில் மீண்டும் கூடுதல் அவதானமாக உணவுகளை பாதுகாப்பாக வைத்திருப்பது அதனை உட்கொள்வோர் அனைவரினதும் கடமையாகும். மேலும் ஊரடங்கு காலத்தில் புதிதாக தங்களது திறமைகளை வெளிப்படுத்த சமையலைறைகளுக்குள் நுழைந்திருப்பவர்கள் உணவை பாதுகாக்கும் இந்த ஐந்து முக்கிய வழிமுறைகளை தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள், தெரிந்திருந்தால் வாழ்த்துக்கள். வாருங்கள் உணவை பாதுகாப்பாக உட்கொள்வோம்!

 

நுகர்வோர்கள் இனிப்பு மற்றும் கார வகைகளை உணவு அங்காடிகளில் வாங்கும் பொழுது கடை பிடிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு முறைகள் :-

1. அதிகப்படியான செயற்கை வண்ண நிறமிகள் (Artificial Colouring Agent) கொண்டு இனிப்பு பொருட்கள் இருந்தால் வாங்குவதை தவிர்த்தல் வேண்டும்.


2. இனிப்பு வகைகளை பரிசு பொருட்களாக பேக்கிங் செய்து விற்பனை செய்யும்பொழுது. அதில் பால் வகையான இனிப்புகளை மற்ற இனிப்புகளோடு கலந்திருந்தால் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஏன் என்றால், பாலால் செய்யப்பட்ட இனிப்புகளின் சேமிக்கும் நிலை மற்றும் காலாவதியாகும் தேதி மாறுபடும். எனவே, அது குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.


3. ஈக்கள் மொய்க்கும் வண்ணம் இனிப்பு மற்றும் கார வகைகள் இருந்தால் வாங்குவதை தவிர்த்தல் வேண்டும்.


4. துர்நாற்றம் வீசும்; இனிப்பு மற்றும் கார வகைகளை தவிர்த்திட வேண்டும்.


5. உணவு அங்காடிகளில் வாங்கும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு முறையான ரசீது பெற்றிருத்தல் வேண்டும்.


6. உணவு கையாளும் பணியாளர்கள் தூய்மையான ஆடைகள் அணிந்தும் நகங்களை சீர்செய்தும், தலைகவசம், கையுறையுடன் இனிப்பு கார வகைகளை கையாளுகின்றனரா என்பதை உறுதி செய்தல் வேண்டும்.


7. இனிப்பு கார வகைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய். நெய் விபரங்களை தகவல் பலகையாக உணவு விற்பனை கூடத்தில் வைத்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.


8. நுகர்வோர் இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை கூடங்களில் பொட்டலமிட்டு வாங்கும் பொழுது உணவு சேமிப்புக்குரிய தரத்துடன் (Food Grade containerlPacking Mpterial) உள்ள பிளாஸ்டிக் கொள்கலன்களில் வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும்.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் ஜூன் 6, 2004.


தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் 
ஜூன் 6, 2004.
   
உலகெங்கும் கிட்டத்தட்ட 7,000 மொழிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. உலக மொழிகளை ஆய்வுசெய்தபோது ஆப்பிரிக்கக் கண்டத்திலும் இந்தியாவிலும்தான் அதிக மொழிகள் பேசப்படுகின்றன எனத் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் சுமார் 1,600 மொழிகள் பேசப்படு கின்றன. அவற்றில் 22 மொழிகளை இந்தியாவின் ஆட்சி மொழிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அவற்றில் சம்ஸ்கிருதமும் தமிழும் அடங்கும்.

சம்ஸ்கிருதத்தின் பழைமை எல்லோரும் அறிந்த ஒன்று. அதில் இந்தியாவின் தொன்மையான பல இலக்கியங்கள் உள்ளன. தமிழின் தொன்மைகுறித்த விவாதம் கடந்த 150 ஆண்டுகளில்தான் விரிவடைந் திருக்கிறது.

அறிஞர் கால்டுவெல் திராவிட மொழிகளை ஒப்பிட்டு 1856-ல் ஒரு ஆங்கில நூலை எழுதினார். அதில் தமிழின் தொன்மையை விளக்கினார். அது உலக அளவில் விவாதிக்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக, பேராசிரியர் பரிதிமாற் கலைஞர் தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என 1902-ல் கோரிக்கை விடுத்தார். அதன் பிறகு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புகளும் அறிஞர்களும் இது தொடர்பாகப் பல முயற்சிகளை எடுத்தனர். அதன் விளைவாக, இந்திய அரசால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட நாள் இன்று.

செம்மொழி என இந்திய அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ்தான். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 - ம் ஆண்டில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தியாவில் தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆட்சிமொழியாகத் தமிழ் இருக்கிறது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இடம்பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது குறிப்பிடத் தக்கது.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் ஜூன் 6-



தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் ஜூன் 6.
“ஆங்கிலம் பேசும் அமெரிக்க நாட்டு பேராசிரியராகிய நான் ஹார்வேடு பல்கலைக்கழகத்தில் வடமொழியில் பட்டம் பெற்றேன். லத்தீன், கிரேக்க செம்மொழிகளை அறிந்து கற்றேன். கிழக்காசிய மொழிகள் துறையில் பணியாற்றியதால் இந்திய மொழிகள், பிற ஆசிய மொழிகளின் இலக்கியச் சிறப்புகளையும் அறிந்தேன். பன்மொழிப் புலமையின் பின்னணியில் செம்மொழி தகைமையைச் சீர்தூக்கும் தகுதி எனக்கு உண்டு. செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட மொழிகளில், தமிழ் சிறப்பான இடம் பெற்றுள்ளது என்பதை எந்த தயக்கமுமின்றி உறுதியாக என்னால் எடுத்துச் சொல்ல முடியும். இந்தியா பெருமை மிக்க நாடு, இந்து சமயம் உலகச் சமயங்களில் சிறந்த ஒன்று என்று புதிதாக வாதாடுவதைப் போலத்தான் தமிழ் செம்மொழிதான் என்று உலகம் ஏற்றுக்கொண்ட உண்மையை நிலை நிறுத்துவதாகும்.”

இவ்வாறு அறிஞர் ஜார்ஜ் ஆர்ட் எழுதியது வரலாற்றில் நிற்கும் வைரச் சொற்களாகும்.

தொன்மைச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் வகையில் 1500 முதல் 2000 ஆண்டுகள் வரலாற்று பெருமிதம் கொண்டதாகவும், காலப்பழமையும், இலக்கண முழுமையும், இலக்கியச் செழுமையும் ஒரு மொழி கொண்டிருக்க வேண்டும் என்று இந்திய அரசு வரையறுத்துச் செம்மொழி தகுதியை வழங்கியது. அந்த வகையில் இன்றைய நிலையில் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒரியா முதலிய ஆறு மொழிகளையும் செம்மொழிகளாக உலகிலேயே இந்திய நாடுதான் அறிவித்துள்ளது.

2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி தமிழுக்கு செம்மொழி தகைமை வழங்கும் ஆணையை மத்திய அரசு வழங்கியது. இன்றைய நன்னாளில்தான் 15 ஆண்டுகளுக்கு முன்னர் 6-6-2004 அன்று நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய இந்திய குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், “தமிழ் செம்மொழியாக இனிப் பொன்னொளியோடு மின்னி மிளிரும்” என்று அறிவித்தார். இந்த புகழ் மொழி தமிழறிஞர்களையும், தமிழ் ஆர்வலர்களையும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களையும், தமிழக அரசு தொடங்கி, தமிழர் வாழும் அரசுகளையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக மைசூரில் செயற்பட்ட செம்மொழி தமிழாய்வு பிரிவு, தமிழ்நாட்டில் சென்னை மாநகரிலேயே அமைந்தது.

இந்திய மொழிகள் நடுவண் நிறுவனம் என்பது இந்திய நாட்டின் இரண்டொரு மாநிலங்களில் தலைநகரங்களில் தலைமை நிலையத்தைக் கொண்டிருந்தது. தென்னக மொழிகளை ஆய்வு செய்யும் மொழிகள் நிறுவனமாக மைசூர் நடுவண் நிறுவனம் அமைந்து இருந்தது.

மொழியியல் சார்ந்த தலைப்புகளில் அறிஞர்களைக் கொண்டு ஆய்வுப்பணிகளை ஆற்றியது. தமிழார்வம், தமிழ் இலக்கியச் செறிவு முதலியன இடம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. மத்திய அரசோ, செம்மொழி என்ற முழக்கத்தின் அடிப்படையே விளங்காமல் கண் தெரியாதவனுக்கு துதிக்கை உலக்கையாக தெரிந்தது போல மைசூர் நிறுவனத்தில் தமிழ் மொழிப்பிரிவில் இந்த பொறுப்பை ஒப்படைத்தார்கள். மைசூர் நிறுவனத்தின் கிளைக்குச் செம்மொழிக்கென வழங்கப்பட்ட தொகை திகைப்பைத் தந்தது. இது முதற்கோணலாயிற்று.

நான்கு கூட்டங்கள் போல, தமிழக செம்மொழி நிறுவனத்தின் சார்பில் மைசூரிலேயே நடந்தன. தமிழகத்தின் தலைநகரில் அல்லவா இந்த நிறுவனம் அமைய வேண்டும் என்று அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி வலியுறுத்தியதால், மைசூரில் இருந்த ஒரு பிரிவைச் சென்னைக்கு அனுப்பி நிறுவனத்தைத் தொடங்கச் சொன்னார்கள்.

இந்த கோட்பாட்டு பின்னணியில் ஏற்பட்ட குழப்பத்தால் செம்மொழி நடுவண் நிறுவனத்தில் மொழியியலாளர்களே இடம் பெற்று ஆராய்ச்சிகளைச் சென்னையிலும் தொடங்கினார்கள். தமிழக அரசு இந்த நோக்கையும், போக்கையும் மாற்ற முனைந்தது. தமிழக அரசுக்கே முழுப்பொறுப்பையும் வழங்குவதற்கு மத்திய அரசு தடையாக நின்றது.

செம்மொழி பெருமிதத்துக்காகவே 500 கோடி ரூபாய் செலவில் ஐந்து நாள் மாநாடு கோவையில் உலகத்தமிழ் மாநாடு ஒத்தநிலையில் மாபெரும் மாநாடாக நடந்தது. தமிழக முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி தாமே தம் கடின உழைப்பையும், உறுதியையும், கரைகாணாத் தமிழ்க்காதலையும் காட்டிய மாநாடாக திகழ்ந்தது. இந்திய குடியரசு தலைவரே நேரில் வந்து நெஞ்சுருக பாராட்டி வாழ்த்தினார். கருணாநிதி தாம் பெற்ற தமிழ் வெற்றியாக தன் செலவில் ஒரு கோடி ரூபாய் தமிழறிஞர் விருதளிப்புக்கென வழங்கியதையும் நினைவு கூரலாம். அந்த கோப்பு டெல்லிக்கும், சென்னைக்குமாக மிதிபட்டுத் தேக்கமுற்றது.

செம்மொழி தமிழாய்வு நிறுவனம், மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழ் மக்கள் எதிர்பார்த்து ஏங்கிப்பெற்ற ஆய்வு நிறுவனமாகும். அறிஞர்கள் கண்ட கனவுகள் பல. ஆய்வுக்களங்களோ எண்ணற்றவை. அந்த நாளிலேயே வாழிய செந்தமிழ் என்று பாரதியார் தம் மொழிப்பற்றையும், நாட்டுப்பற்றையும், இனப்பற்றையும் ஒன்றாக இணைத்துச் செம்மொழி நிறுவனத்துக்கு அடிகோலினார். நாளும் முயன்ற நல்லறிஞர்களையும், அரசையும் கட்சிக் கண்ணோட்டத்திலேயே காணும் போக்கும் படர்ந்தது.

தாயில்லாத சவலைப் பிள்ளையாக நாளும் ஒரு கவலையும், பொழுதும் ஒரு அவலமும் கொண்டு அழும் குரல் எல்லை தாண்டித் டெல்லியின் காதில் எட்டுவதில்லை. மாநில தலைநகரில் உள்ள வேறு எந்த நடுவண் நிறுவனமும் இத்தகைய புறக்கணிப்பால் தவிக்கவில்லை.

ஒரு பல்கலைக்கழகத்தை கட்டிக்காத்த துணைவேந்தரும், புகழ் வாய்ந்த கல்லூரியின் முதல்வரும், நல்லறிஞரும் துணைத்தலைவராக இருந்தும் தினையளவும் சிக்கல் தீரவில்லை. துணைத்தலைவருக்கு அடையாறு ஐ.ஐ.டி தலைவரைப் போன்ற அதிகாரங்களை வழங்கியிருக்க வேண்டாமா? நாடாளும் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியாக இன்று பதவியேற்று இருக்கும் ரமேஷ் பொக்ரியால் நாடு புகழும் கவியரசராவார். உத்தரகாண்ட் மாநிலம் ஆண்ட முதல்- அமைச்சருமாக இருந்தவர். கவியரசர்களுக்குத்தான் மொழியின் அருமையும், பெருமையும் நன்றாக தெரியும் என்று நம்புகிறார்கள். அந்த வாய்ப்பை வலியுறுத்தும் கடமை தமிழக அரசையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சாரும்.

செம்மொழி நிறுவனம் செழித்தோங்கும் நிறுவனமாக மலர வேண்டும். நிறுவனம் ஒரு பல்கலைக்கழகம் போல உருப்பெறுவதற்கு இடமும் வழங்கப்பட்டு வளமனைகள் வளர்ந்து வருகின்றன. செம்மொழி நிறுவனத்திற்காக, தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக சென்னை, பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. “செம்மொழி என்னும் போதினிலே சிந்தும் அழுகுரல் விழுகுது காதினிலே” என்று சொல்லும் நிலைமை துடைக்கப்பட வேண்டும். பொங்கும் மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடும் நன்னாளாக செம்மொழி நாள் அமைய வேண்டும்.
- முனைவர் அவ்வை நடராசன், முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.

புதன், 3 ஜூன், 2020

உலக சைக்கிள் தினம் ஜூன் 03.


உலக சைக்கிள் தினம் ஜூன் 03.

'உலக சைக்கிள் தினம்'- சைக்கிளில் வந்து மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஹர்ஷவர்தன்!

சைக்கிள்.. நிச்சயம் இந்த வார்த்தையை கடக்காமல் யாரும் வளர்ந்திருக்க முடியாது. ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கியச் சாதனமாக இருந்த இது, இன்று பெரும்பாலும் உடற்பயிற்சி சாதனமாகத் தான் மாறி விட்டது. ஆனாலும், சமீபகாலமாக சைக்கிள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. காரணம் ஒன்று உடல் ஆரோக்கியம். குறைந்த நேரத்தில் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்க முடியும். உடல் எடையை எளிதாக குறைக்க உதவும்.

இரண்டாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு. பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் நிறைய சுவாசப் பிரச்சினைகள் உருவாகின்றன. சைக்கிளால் இந்த பாதிப்பைக் குறைக்க முடியும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், சைக்கிள் ஓட்டுவது என்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
சரி, ஏன் இப்போது சம்பந்தமில்லாமல் சைக்கிளைப் பற்றி இப்படி மானே, தேனே என பேசிக் கொண்டிருக்கிறோம் எனக் கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது. இன்று ’உலக சைக்கிள் தினம்’.



அமெரிக்காவைச் சேர்ந்த லெசுச்செக் சிபிலிசுக்கி என்ற பேராசிரியர் தனது சமூகவியல் மானவர்களுடன் இணைந்து உலக மிதிவண்டி நாளை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த வேண்டும் என பரப்புரை செய்தார். அவரது முயற்சிக்கு 56 நாடுகள் ஆதரவளிக்க, ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதியை உலக மிதிவண்டி நாளாக அறிவித்தது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை.

எந்தக் காலத்திலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானது சைக்கிள். நம் முன்னோர்கள் ஒவ்வொரு பொருளையுமே நமது உடலை வலிமையாக்கும் பொருட்டே உருவாக்கினர். ஆனால் நாம் தான் நாகரீகம், நவீனம் என்ற பெயரில் அவற்றை தொலைத்து வருகிறோம். இது சைக்கிளுக்கும் பொருந்தும்.

சைக்கிள் வரலாறு:

பதினேழாம் நூற்றாண்டில் பொழுதுபோக்காக பிரான்ஸைச் சேர்ந்த கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte mede de Sivrac) உருவாக்கியது தான் சைக்கிள். இரண்டு மரத்துண்டுகளை வைத்து விளையாட்டுத்தனமாக சைக்கிளுக்கு அவர் உருவம் கொடுத்தார். அப்போது அவருக்குத் தெரியாது, பின்னாளில் இது பூமிக்கு எவ்வளவு தேவையான பொருளாக உருமாறப் போகிறது என்று.

தான் உருவாக்கிய அமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி, 1791ம் ஆண்டு மரச் சைக்கிள் ஒன்றை உருவாக்கினார் கோம்டி. இந்த சைக்கிளுக்கு பெடல்கள் கிடையாது. காலால் தரையை உந்தித் தள்ளி தான் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும்.

கோம்டி உருவாக்கிய இந்த மாடல், ‘The Celerifere’ என்று அழைக்கப்பட்டது. இதில் திசைமாற்றி, மிதி இயக்கி, தடை என எதுவுமே கிடையாது. 1794ம் ஆண்டு தனது கண்டுபிடிப்பை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்தார் கோம்டி.
இதன் பிறகு மிதிவண்டியை இன்னும் மேம்பட்ட வசதிகளுடன் உருவாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர் மக்கள். அவர்களில் ஒருவர் தான் ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் ( karl Von Drais). இவர் 1817ம் ஆண்டு மரத்தினால் திசைமாற்றியுடன் கூடிய முதல் மிதிவண்டியை உருவாக்கினார். சுமார் 30 கிலோ எடை கொண்டதாக அந்த சைக்கிள் இருந்தது.

இந்த சைக்கிள் 1818- ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட மிதிவண்டி இதுதான்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனின் கண்டுபிடிப்புகள் மெருகேறுவது வழக்கமான விசயம்தானே. சைக்கிளும் அதற்கு விதிவிலக்கல்ல. அதுவரை மரத்தால் மட்டுமே செய்யப்பட்டு வந்த மிதிவண்டிகளுக்கு மாற்றாக, லண்டனைச் சேர்ந்த டென்னிஸ் ஜான்சன் (Denis Johnson) என்ற கொல்லர் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி சைக்கிளைத் தயாரிக்க முயற்சி செய்தார். 1818-ஆம் ஆண்டு அவர் சில குறிப்பிட்ட பாகங்களில் உலோகப்பொருளை பயன்படுத்தி புதிய சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். அதன் நேர்த்தியான தோற்றம் மற்றும் எளிதில் உருளக்கூடிய சக்கரம் ஆகியவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், டென்னிஸ் செய்த சைக்கிளிலும் பெடல் எனப்படும் மிதி இயக்கி இல்லை. உலகின் முதல் பெடல்களைக் கொண்ட மிதிவண்டியை, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் (Krikpatric Macmillan) என்பவர் உருவாக்கினார். 1839ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அவரது சைக்கிள் அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்ததால், வரலாற்றில் சைக்கிளைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமை கிர்க்பாட்ரிக்கிற்குக் கிடைத்தது. ஆனால் இந்த சைக்கிளில் பின்புறச் சக்கரம், முன்புறச் சக்கரத்தைக் காட்டிலும் அளவில் சற்று பெரிதாக இருந்தது.

அதனைதொடர்ந்து மேம்பட்ட மிதிஇயக்கி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றார் பிரான்ஸைச் சேர்ந்த எர்னெஸ்ட் மிசாக்ஸ் (Ernest Michaux). அவரது தீவிர உழைப்பின் பலனாக 1863-ஆம் ஆண்டு கிராங்ஸ் மற்றும் பால் பியரிங்க்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்ட மிதிஇயக்கி ஒன்றைத் தயாரிப்பதில் வெற்றிகொண்டார். முந்தைய சைக்கிள்களை விட மிசாக்ஸ் கண்டுபிடித்த சைக்கிளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. காரணம் அதனை பயன்படுத்தும் முறை எளிதாக்கப்பட்டது தான்.

தனது சைக்கிளுக்கு மக்களிடம் வரவேற்பை வணிக ரீதியாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார் மிசாக்ஸ். தனது பெயரிலேயே 1868ம் ஆண்டு சைக்கிள் கம்பெனி ஒன்றை அவர் ஆரம்பித்தார். உலகிலேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட சைக்கிள் கம்பெனி இது தான்.
மைல்கல்:

சைக்கிளில் ஒவ்வொரு பாகமாக மேம்படுத்தப்பட்டு வந்தாலும், சக்கரம் என்னவோ மரத்தால் ஆனதாகவே இருந்தது. இதற்கும் ஒரு தீர்வு கண்டார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஸ்டெர்லி. பென்னி பார்த்திங் (Penny farthing) என்ற கொல்லருடன் இணைந்து, சைக்கிளின் சக்கரங்களையும் அவர் உலோகத்தில் உருவாக்கினார். இவர்களது முயற்சியின் விளைவாக 1872ம் ஆண்டு பெண்களும் பயன்படுத்தும் வகையிலான புதிய நேர்த்தியான சைக்கிள்கள் உருவானது. பெண்களுக்கென்று மூன்று மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட சைக்கிள்கள் இந்த காலகட்டத்தில் விற்பனைக்கு வந்தது.

1876ம் ஆண்டு சைக்கிள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும். அந்த ஆண்டு தான், ஹென்றி லாசன் (Henry Lawson) என்ற இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் பல்சக்கரம் (Sprocket) மற்றும் இயக்கி சங்கிலி (Drive Chain) போன்றவற்றை உருவாக்கினார். இந்த கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த வாகன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.

இப்படியாக ஒவ்வொரு மாற்றங்களாய் பெற்று, 1885ம் ஆண்டு சான் கெம்பு இசுட்டார்லி (John Kemp Starley) என்பவர் புதிய மிதிவண்டி ஒன்றை உருவாக்கினார். இவர் தான் இன்றைய நவீன சைக்கிளின் தந்தை என அழைக்கப்படுகிறார். அவர் வடிவமைத்த மாடலைத் தான் இன்று நாம் பயன்படுத்துகிறோம்.

ஹர்க்குலீஸ்:

சைக்கிள் பல்வேறு காலகட்டங்களில் பல மாற்றங்களுக்குப் பிறகு நல்லதொரு வடிவம் பெற்றது. மக்கள் பெருமளவில் அதனை போக்குவரத்திற்குப் பயன்படுத்தத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து சர் எட்மண்டு கிரேன் (Sir Edmund Crane) என்பவர், 1910ம் இங்கிலாந்தில் எர்க்குலீஸ் (Hercules) சைக்கிள் கம்பெனியைத் துவக்கினார். படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் சைக்கிளைக் கொண்டு சென்ற பெருமை எர்க்குலீஸுக்கே சேரும்.

 

எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உதவியதால், சைக்கிளின் தேவை நாளுக்கு நாள் ஆரம்பித்தது. புதிய புதிய சைக்கிள் கம்பெனிகள் முளைக்கத் தொடங்கின. ஆனால், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தனது உடல் உழைப்பைக் குறைக்க நினைத்த மனிதன், படிப்படியாக சைக்கிளை முன்மாதிரியாகக் கொண்டு மோட்டார் சைக்கிள்களை உருவாக்கினான். அதன் வளர்ச்சி தான் இன்று சைக்கிளை இருந்த இடம் தெரியாமல் அழித்து விட்டது.

ஆனால், உலகிற்கே சவால் விடும் வகையில் வாகனப் பெருக்கங்களின் காரணமாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால், சீனா, நெதர்லாந்து போன்ற மேலை நாடுகளில் போக்குவரத்திற்கான முதன்மை வாகனமாக சைக்கிளுக்கு மாறி வருகின்றனர். அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளிலும் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் சைக்கிளையே பயன்படுத்துகிறார்கள்.

சைக்கிள் 2.0 :

ஆனால் நம் நாட்டில் போக்குவரத்திற்குப் பயன்படுத்த சைக்கிளை உடற்பயிற்சிக்கான ஒரு கருவியாக மாற்றி வைத்திருக்கிறோம். இது நிச்சயம் சைக்கிளின் 2.0 வெர்சன் என்று தான் சொல்ல வேண்டும். வீட்டிற்குள் ஒரே இடத்தில் சைக்கிள் போன்ற இயந்திரத்தில் உடற்பயிற்சி செய்வதைவிட இயற்கையான சூழலில் நிஜ சைக்கிளை ஓட்டுவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தற்போது இந்த விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். சென்னை போன்ற மாநகரங்களில் காலை அல்லது இரவு நேரத்தில், போக்குவரத்து குறைந்த சாலைகளில் பலர் சைக்கிளில் செல்வதைப் பார்க்க முடிகிறது. அதுவும் உடற்பயிற்சிக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சைக்கிள்கள் தான் என்றாலும், இப்படியாவது அதனை பயன்படுத்துகிறார்களே என நிம்மதி அடைய முடிகிறது.

கால் பாதத்தில் இருந்து, மூளை வரை உடலின் அத்தனை உறுப்புகளையும் இயங்க வைப்பது சைக்கிள். இதனால் அரைமணி நேரம் சைக்கிள் ஓட்டினாலே 300 கலோரி கொழுப்பு எரிக்கப்படுகிறது. இதன் மூலம் சர்க்கரை அளவை சீராக்க முடியும் என்பது இனிப்பான செய்தி.
சைக்கிள் பகிர்வு திட்டம்:

உலக சைக்கிள் தினத்தையொட்டி இன்று டெல்லியில் 8 கிமீ தூர சைக்கிள் பந்தயம் நடைபெறுகிறது. உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் ஒன்றாக டெல்லி உள்ளது. எனவே, அங்கு வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக சைக்கிளை பயன்படுத்தவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதோடு, சைக்கிள் பகிர்வு திட்டம் அங்கு தொடங்கப்பட உள்ளது. டெல்லி முழுவதும் 50 இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு மையங்களிலும் 10 முதல் 20 சைக்கிள்கள் இருக்கும். ஒரு மணி நேரத்துக்கு ரூ.10 என்ற கட்டண அடிப்படையில் அந்த சைக்கிள்களை பொதுமக்கள் பயன்படுத்தலாம். பின்னர், ஏதேனும் ஒரு சைக்கிள் மையத்தில் சைக்கிளை ஒப்படைக்க வேண்டும்.

முன்னுதாரணமாக மாறிய மத்திய அமைச்சர்:

சைக்கிள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹர்ஷவர்தன், இன்று காலை சைக்கிளில் வந்து பொறுப்பேற்றுக் கொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில்,

‘என் மீது நம்பிக்கை வைத்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி. மக்களின் ஆரோக்கியமே மோடி அரசின் முக்கிய நோக்கமாகும். சைக்கிளிங் எனக்கு பிடித்த விளையாட்டு. சைக்கிளில் செல்வது எளிமையாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கும். காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த இது சிறந்த வழி’ எனத் தெரிவித்துள்ளார். அதோடு, தான் சைக்கிளில் பயணம் செய்யும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மோடி அரசின் பதவியேற்பு விழாவிற்கு, பாஜக எம்.பிக்கள் மற்றும் கட்சியினர் பலர் சைக்கிளில் சென்றது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 1 ஜூன், 2020

உலக பாலியல் தொழிலாளர்கள் தினம் ஜூன் 02.



உலக பாலியல் தொழிலாளர்கள் தினம் ஜூன் 02.

தேனீக்கள் தீண்டத் துடிக்கும் தனது தேகத்தை, வானவில்லுக்கே வண்ணம் தரும் தன்னுதடை, தன் தாய் தந்துபோன உயிர்நாடியை, சொந்தங்களோடு கழிக்க வேண்டிய அந்திப்பொழுதை, எவனோ ஒருவன் தரும் காசுக்காக விற்கிறாள் அவள். அவள் விற்பது உடலை மட்டுமல்ல. தனது ஆசைகளை, இன்பங்களை, சொந்தங்களை, காதலை. ஆனால் அவள் கற்பை விற்பதை மட்டும்தான் பார்க்கிறது இச்சமூகம். அதனால் தான் அவளுக்கு இந்தப் பெயரையும் வைத்துள்ளது – பாலியல் தொழிலாளி என்று. 

அவளின் மொத்த அங்கத்தையும் கூறு போட்டு அருந்தும் ஆணினம் அவளை மனித பிறப்பாய் பார்ப்பதில்லை போல. எத்தனை எத்தனை இன்னல்களை அவள் இங்கு சந்திக்க வேண்டியுள்ளது. அவளுக்கு எதிராக நடக்கும் தீண்டல்கள், பலாத்காரங்கள், கொலைகள், அவளை பூனையிடமிருந்து உயிரைக் காக்க ஓடும் எலியைப் போல் இன்று ஓடவைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவ்வுலகில் அவளின் நலனைப் பற்றிக் கவலைப்படும் சில உயிர்களும் பிறந்துள்ளன.

அவளை வன்கொடுமைகளிலிருந்து காப்பாற்ற நினைக்கும், அவளுக்கு குரல் கொடுக்கவும், போராடவும் தயாராய் இருக்கும் ஒருசிலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவளைப்பற்றி மக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்நாள் – சர்வதேச பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினம்.



ஆண் இனமும் விதிவிலக்கல்ல

2012-ம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பின் படி, உலகம் முழுதும் சுமார் 4 கோடி பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். அதில், அமெரிக்காவில் மட்டும் 10 லட்சம் பேர் உள்ளனர். 75 சதவிகிதம் பாலியல் தொழிலாளர்களின் வயது 13-25. இதைக் கண்டு ஏளனம் செய்ய ஆண்களுக்கு ஒன்றுமேயில்லை. காரணம் சுமார் 80 லட்சம் ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உலகின் பல நாடுகளில் பாலியல் தொழில் அனுமதியுடனேயே நடக்கிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. நமது நாட்டில் கூட பாலியல் தொழில் செய்வது குற்றம் என்று சட்டத்தில் இல்லை. உடலுறவுக்கு ஒருவரை அழைப்பதே குற்றம். அப்படியிருக்கையில் அதிகார வர்க்கம் முதற்கொண்டு பொதுஜனம் வரை இவர்களை இழிக்காதவர்களும் தாக்காதவர்களும் இல்லை. அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கு 29 டாக்சி டிரைவர்கள் கொல்லப்படுகின்றனர். அதேபோல் மதுபானக் கடை பெண் ஊழியர்களில் ஒரு லட்சத்துக்கு 4 பேர் கொல்லப்படுகின்றனர். ஆனால் பாலியல் தொழில் செய்பவர்களில் ஒரு லட்சத்துக்கு சுமார் 204 பேர் கொல்லப்படுகின்றனர். காரணம் அவர்களை பாதுகாக்கவும், குரல் கொடுக்கவும் யாரும் இல்லை என்பதே. 

இன்று நாம் டிராபிக் போலீசிடம் லஞ்சம் கொடுப்பதற்கும், பொறியியல் கல்லூரிகளில் லட்சங்களில் டொனேஷன் கொடுக்கவும் காரணங்கள் சரியானது என்று கருதுகிறோம். ஒவ்வொருவரின் செயலுக்கும் தவறுக்கும் காரணம் உண்டென்றில், அவர்கள் இந்நிலைக்குத் தள்ளப்படவும் காரணம் உண்டுதானே? அக்காரணம் அறிந்து கொள்ளவும், அதைப் புரிந்து கொள்ளவும் இங்கு யாரும் தயாராய் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.



பிச்சை எடுப்பவர்களுக்கும், கடன் வாங்குபவர்களுக்கும் மட்டுமல்ல இவர்களுக்கும் உடல்நிலை சரியில்லாத தாய் தந்தை, கஷ்டப்படும் குடும்பம் என எல்லோமும் உண்டு. குடும்பப் பிரச்னைகளுக்காக எங்கெங்கோ திரிந்து யாரும் உதவாத நிலையில், இவர்கள் கண்களில் பணத்தைக் காட்டுவது ஏனோ காமத்தின் எதிர்ப்பார்ப்பில் திரியும் ஒரு கொடிய மிருகம்தான். உயிர்கொல்லி நோய்கள் தாக்கும் என்று தெரிந்திருந்தும் ஒருத்தி அதைச் செய்கிறாள் என்றால் அவள் நிச்சயம் எதிர்பார்ப்பது உடல் சுகம் அல்லவே. அவளுக்கான வாய்ப்பும் அன்பும் மறுக்கப்பட்டதால்தானே அவள் அந்த முள் பாதையை தேர்ந்தெடுக்கிறாள். உறவினர்களால் கைவிடப்பட,  பெண்ணுக்கான அடையாளங்கள் முழுமையடையாத நிலையிலும் கூட பல சிறுமிகள் இதற்கு முற்படுகிறார்கள். ஏன் இந்தக் கொடுமை. யார்தான் இவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அளிப்பது? 



பெண்களே ஒதுக்காதீர்கள்

பாலியல் தொழில் செய்யும் பெண்களை மற்ற பெண்களே ஏளனமாய் நினைப்பதுதான் பெரும் கொடுமை. இவ்வுலகில் புலி, பூனை, மண்புழு என எந்தவொரு உயிரும் மனிதன் வாழ முக்கியம் என்கின்றனர் வல்லுனர்கள். அதில் எந்த உயிர் இல்லாவிட்டாலும் அதுவும் மனிதனின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். இன்று பாலியல் தொழிலாளிகள் என்று ஒதுக்கப்படும் இவர்கள் இல்லை என்றால் குடிப்பழக்கத்திற்கும், போதைப்பழக்கத்திற்கும் ஆளான,  ஆண்களின் வக்கிர வடிகால் விபரீத விளைவுகளை அல்லவா உருவாக்கும்? 

கடந்த 10 ஆண்டுகளில் ஆண்களின் கொடூர தாக்குதலால் காயமடைந்து பலியான பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரங்களில். அமெரிக்காவில் பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் டிசம்பர் 17-ம் நாள் ‘பாலியல் தொழிலாளர்களுக்கெதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ஐரோப்பாவில் இதற்கென அமைப்புகள் பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றன.

சிவப்புக் குடை சின்னம் பாலியல் தொழிலாளர்களின் வன்கொடுமைக்கு  எதிரான சின்னமாக கடைபிடிக்கப்படுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் நிவாரண நிதிக்கு மும்பையைச் சார்ந்த பாலியல் தொழிலாளர்கள் இணைந்து 1 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். அவர்களுக்கும் எல்லா மனித உணர்வுகளும் காலாவதி ஆகாமல் உள்ளது. நாம் தான் அவர்களை நம்மில் ஒருவராக ஏற்க மறுக்கின்றோம். மனிதம் என்பது எல்லோரையும் ஏற்றுக் கொள்வதுதான்.

இனியாவது அவர்களிடத்திலும் கொஞ்சம் அன்பு செலுத்துவோம். அவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுப்போம். அதற்கான உறுதியை இந்த உலக பாலியல் தொழிலாளர்கள் நாளில் மேற்கொள்வோம்!