வெள்ளி, 25 ஜனவரி, 2019

மொழிப்போர் தியாகிகள் தினம் ஜனவரி 25 .


மொழிப்போர் தியாகிகள் தினம் ஜனவரி 25 .

வீர வணக்கம் ! வீர வணக்கம் !!

சென்னை நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம் பாக்கம் சிவலிங்கம், விருகம் பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி...

இவர்களெல்லாம் இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் உயிர் நீத்த தியாகிகள்.

இந்தித் திணிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் 1965-ம் ஆண்டு தமிழகமே பற்றி எரிந்தது எனலாம். மாணவர்கள் முன்னின்று நடத்திய அந்தப் போராட்டத்தில் பல நூறு பேர் உயிர் நீத்தனர். போராட்டத்தை அடக்க ராணுவம் வந்தது.

மொழியைப் பாதுகாக்க நடைபெற்ற ஒரு போராட்டத்தை ஒடுக்க ராணுவம் களத்தில் இறங்கியதும், அந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன என்பதும் உலக வரலாற்றில் வேறெங்கும் இல்லாதது. அதனால்தான், 1965-ம் ஆண்டு போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையும் குலுக்கி எடுத்தது.

இந்தப் போராட்டம் 1960-களில்தான் உச்சத்தை எட்டினாலும், 1930-களிலேயே தொடங்கிவிட்டது. அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக 21-4-1938 அன்று ராஜாஜி தலைமை யிலான சென்னை மாகாண அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகளார், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்டோர் வழிகாட்டுதலில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். சென்னையில் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்ற நடராசனின் உடல் நலம் குன்றியது. மன்னிப்புக் கோரி கடிதம் எழுதித் தந்தால் விடுதலை செய்வதாக அரசு கூறியது. மன்னிப்புக் கேட்க மறுத்த நடராசன், 15-1-1939 அன்று உயிரிழந்தார்.

தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து, தமிழ் மொழியுணர்வால் உந்தப்பட்டு போராட்டக் களத்துக்குச் சென்ற நடராசன்தான் மொழிப் போராட்டத்தின் முதல் களப் பலி. அவரைத் தொடர்ந்து, அதே ஆண்டு மார்ச் 12-ம் தேதி கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்து சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

இந்த இரண்டு உயிர் பலிகளால் போராட்டம் மேலும் தீவிரமடையவே, இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணையை 21-2-1940 அன்று அரசு திரும்பப் பெற்றது. அடுத்து, 1948-ல் ஓமந்தூரார் முதல்வராக இருந்தபோது இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மீண்டும் கிளர்ச்சி ஏற்பட்டதால், அரசு பின்வாங்கியது. மேலும், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடரும் என்ற நேருவின் உறுதிமொழியால் போராட்டம் சற்று ஓய்ந்தது.

இந்நிலையில், 26-1-1965 அன்று முதல் இந்திய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்ற 1963-ம் ஆண்டின் ஆட்சி மொழி சட்ட மசோதாவால் மீண்டும் போராட்டம் உருவானது. இதனால், அண்ணா தலைமையில் இயங்கிய திமுகவின் போராட்டம் தீவிரமானது.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த திமுக தொண்டர் சின்னசாமி, இந்தி மட்டும் ஆட்சி மொழியாக அரியணையில் அமர்வதைத் தடுத்தாக வேண்டும் என்று, திருச்சி ரயில் நிலையம் எதிரே 25-1-1964 அன்று தீக்குளித்து மாண்டார்.

சின்னசாமியின் மரணம் அரசியல் எல்லையைக் கடந்து எல்லா தரப்பினரை யும் எழுச்சியூட்டியது. 25-1-1965 நெருங்க நெருங்க போராட்ட எழுச்சி அதிகமாகிக் கொண்டே சென்றது. 1965, ஜன. 25-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாணவர் இயக்கங்கள் கிளர்ச்சியில் இறங்கின.

சென்னை மாநகராட்சி ஊழியராக பணி யாற்றி வந்த கோடம்பாக்கம் சிவலிங்கம், அன்றைய தினம் தீக்குளித்து மாண்டார். மறுநாள், விருகம்பாக்கம் அரங்கநாதன் தீ்க்குளித்து இறந்தார். அதே நாளில் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் முத்து, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

27-ம் தேதி ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஊர்வலமாகச் சென்ற சிவ கங்கை மாணவர் ராசேந்திரன், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அதன் பிறகு, போராட்டம் மேலும் மேலும் வேகமெடுத்தது. போலீஸ் துப்பாக்கிச் சூடுகளும் அதிகரிக்க, உயிர்ப் பலிகளும் அதிகரித் துக் கொண்டே சென்றன. போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வந்தது. பொள்ளாச்சியில் பிப்ரவரி 12-ம் தேதி ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

நிலைமை மிகவும் மோசமானது. மாண வர்கள் போராட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அண்ணா அறைகூவல் விடுத்தார். ஆனால், போராட்டத்தை கைவிட தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு மறுத்து விட்டது. எல். கணேசன், விருதுநகர் பெ. சீனிவாசன், துரைமுருகன் என திமுகவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் அந்தக் குழுவில் தளகர்த்தகர்களாக இருந்தபோதும், மாணவர்களின் போராட்டத்தை நிறுத்த அண்ணாவால் முடியவில்லை.

இதனிடையே, இந்தித் திணிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் போக்கைக் கண்டித்து அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ.வி. அழகேசன் ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்தனர். அந்த ராஜினாமாக்களை ஏற்கும்படி குடி யரசுத் தலைவருக்கு, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பரிந்துரை செய்தார்.

'தமிழகம் தனி நாடாக பிரிந்து போக வேண்டாம் என்று கருதினால், பரிந் துரையை திரும்பப் பெறுங்கள்' என்று சாஸ்திரியிடம் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

வேறு வழியின்றி இந்தியுடன் ஆங்கில மும் ஆட்சி மொழியாக தொடரும் என்ற முடிவுக்கு ஆட்சியாளர்கள் வந்தனர். இத னால் மாணவர்களின் 50 நாள் போராட்டம் மார்ச் 15 அன்று முடிவுக்கு வந்தது.


வியாழன், 24 ஜனவரி, 2019

தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24...!!


தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24...!!

பெண் குழந்தை பெற்றவர்கள் கடவுளிடம் வரம் பெற்றவர்கள் மட்டுமல்ல பாக்கியசாலிகளும் கூட. அன்று பெண் குழந்தைகளை சாபமாக பார்த்தவர்கள், இன்று பெண் குழந்தைகளை வரமாக பார்க்கிறார்கள்.

வரமாக பெற்ற பெண் குழந்தைகளை நாம் கௌரவிக்க வேண்டாமா? இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பல தினங்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும், இதில் கவனிக்கத் தகுந்த தினம்தான் தேசிய பெண் குழந்தைகள் தினம்.

பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களது திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் தேசிய அளவில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய பெண் குழந்தைகள் தினம், தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிர்த்து போராடுவதற்குப் பெண்களுக்கு அதிகாரம் தேவை என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

பெண் குழந்தை பெற்றவர்களுக்கு :

குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுப்பது பெற்றோர்களின் கடமையே ஆகும்.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது தங்களை தவிர வேறு நபர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும், முகம் தெரியாதவர்கள் யாரேனும் அழைத்தால் அவர்களுடன் போகக்கூடாது என்பதை பற்றியும் சொல்லிக்கொடுத்து, குழந்தைகளிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

குட் டச், பேட் டச் சொல்லி கொடுங்கள் :

பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முதலில் பெற்றோர்கள் கண்டிப்பாக தங்களின் பெண் குழந்தைகளுக்கு எது குட் டச்? எது பேட் டச்? என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

காமுகர்கள் முதலில் குழந்தைகளுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக்கொடுத்து அவர்களை தன் வசப்படுத்துவார்கள். எனவே, குழந்தைகளுக்கு பரிசு வாங்கி கொடுப்பவர்கள் எல்லாம் மிக அன்புடையவர்கள் என்று நாம் சொல்லி கொடுக்கக்கூடாது. அது தவறான புரிதலாக மாறும்.

பெற்றோர்கள் தன் குழந்தைகளிடம் யாருக்கும் முத்தம் கொடுக்க சொல்லியோ, கட்டிப்பிடிக்க சொல்லியோ வற்புறுத்தக்கூடாது. ஏனெனில், இறுதியில் இந்த பழக்கமே அவர்களுக்கு ஆபத்தாக முடியும்.

பேருந்தில் செல்லும் போதும்கூட சிலர் காமுகர்கள் இருக்கலாம். அது நமக்கு தெரியாது. எனவே அத்தகையவர்களிடம் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள அவர்கள் எந்த நோக்கத்தில் உங்கள் குழந்தைகளை தொடுகிறார்கள் என்பதை அவர்களுக்கு முன்னரே (குட் டச், பேட் டச்) சொல்லி கொடுக்க வேண்டும்.

இன்றைய காலத்திற்கேற்ப உங்கள் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக கராத்தே, சிலம்பாட்டம் போன்ற இன்னும் சில தற்காப்பு கலைகளை கூட கற்றுக்கொடுக்கலாம்.

ஒவ்வொரு வயது குழந்தைக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்றவாறு சொல்லி கொடுக்க வேண்டும். அதே சமயம் மிக சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லி கொடுக்க வேண்டும். இல்லையெனில் மறந்து விடுவார்கள்.

பாதுகாப்பு :

பெண் குழந்தைகள் கண்டிப்பாக தற்காப்பு கலையை பயில்வது மிகவும் நல்லது.

பெண் குழந்தைகள் தனியாக வெளியில் செல்லும்போது விலையுயர்ந்த நகைகளை அணிந்து செல்லக்கூடாது.

முதன்முறையாக தனியாக பயணிப்பவராய் இருப்பின், தைரியமாக நடந்து கொள்ளவேண்டும்.

அந்நியர்களிடம் இருந்து எந்த விதமான பொருளையும் வாங்கக்கூடாது. யாரேனும் பிஸ்கட் அல்லது பழங்கள் கொடுத்தால், அதை பணிவாக மறுத்து விட வேண்டும்.

பெற்றோர்கள் பெண்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய தாரக மந்திரம் :

யாரையும் எளிதில் நம்பக்கூடாது. அனைவரிடமும் பழகும்போது எச்சரிக்கையுடன் பழக வேண்டும்.

இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்....

பெண் குழந்தைகளை பாதுகாப்பது நம் தலையாய கடமை..!!

புதன், 9 ஜனவரி, 2019

பொங்கல் விழா தகவல்கள்


பொங்கல் விழா தகவல்கள்...

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

வரலாறுசங்க காலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். தைப்பொங்கல் பண்டிகை இப்படித்தான் மலர்ந்தது. பல ஆயிரம் ஆண்டுகளை கடந்துள்ள பொங்கல் இன்று உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகையாக மாறியுள்ளது.

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.


முதல் நாள் போகிப் பண்டிகை (13-1-18)

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது நாளை (சனிக்கிழமை) கொண்டாடப் படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப் படுகிறது. இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்‘ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.

போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

போகி பண்டிகைக்கும் இந்திர தேவன் (மேகம் மற்றும் மழையின் கடவுள்) மற்றும் கிருஷ்ணா பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

முன்னதாக, தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் வணங்கி வந்தனர். இந்திரனுக்கு கொடுக்கப்பட்டு வந்த இந்த மரியாதை அவருக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்க செய்தது. மற்றவர்களை காட்டிலும் தான் தான் மிகவும் சக்தி வாய்ந்தவராக அவர் கருதினார். குழந்தை கிருஷ்ணருக்கு இது தெரிய வந்தவுடன், இந்திர தேவனுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க விரும்பினார்.

கிருஷ்ணன் தன்னுடைய ஆடு மேய்க்கும் நண்பர்களை கோவர்தன மலையை வணங்க தூண்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திர தேவன் இடைவிடாத இடி, மின்னல், பலமான மழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினார்.

அந்த புராணத்தின் படி, ஆடு மேய்ப்பவர்களையும், ஆடுகளையும் பாதுகாக்க, மிகப்பெரிய கோவர்தன மலையை தன் சிறிய கைகளில் தூக்கினார். இந்திர தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க அந்த மலையை தூக்கி சுமந்தபடியே நின்றார் கிருஷ்ணர். 3 நாட்களுக்கு நீடித்தது அந்த மழை. அதன் பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டார் இந்திர தேவன்.

பணிவுடன் இருப்பதாக வாக்களித்த இந்திர தேவன், கிருஷ்ணரின் மன்னிப்பை கோரினார். அன்று முதல், இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார்.

இதுவே பொங்கல் கொண்டாட்டத்திற்கு விதையாக அமைந்தது. இந்த பண்டிகை இந்திரனின் மற்றொரு பெயரை பெற்று புராணக்கதையாக மாறியுள்ளது.
இதையட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.

பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு.

போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.



இரண்டாம் நாள் தைப்பொங்கல் (14-1-18)

தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தைப் பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட உற்சாகம் மனம் முழுக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். புதுப்பானை பலர் வாங்குவர். புத்தாடை வாங்குவர்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிவார்கள். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர்.

புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி சூரியனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.

சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவி குலவையிடுவார்கள். பிறகு பொங்கலை சூரியனுக்கு படைத்து வழிபடுவார்கள். பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.


மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் (15-1-18)

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப் படும் பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படு கிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

மாட்டுப் பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய புராணக்கதை ஒன்று உள்ளது. அது சிவபெருமான் சம்பந்தப்பட்டது. பொங்கலுக்கு மூன்றாவது நாளான மாட்டுப்பொங்கல் என்பது, சிவபெருமானும் அவருடைய வாகனமான நந்தியும் சம்பந்தப்பட்டதாகும்.

புராண கதையின் படி, ஒரு முறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறு சிவபெருமான் கேட்டுள்ளார். தவறாக சொல்லிய நந்தி தினமும் எண்ணெய் மசாஜ் செய்த பிறகு குளித்து, மாதம் ஒரு முறை மட்டும் உண்ணுமாறு அங்கே இருக்கும் மக்களிடம் தான் கூறச் சொன்னதாக நந்தியை கூற சொன்னார்.

ஆனால் நந்தியோ மாதமுறை எண்ணெய் மசாஜ் செய்து குளித்து, தினமும் உண்ணுமாறு தவறாக கூறி விட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்தியை சபித்தார். அது செய்த தவறினால் இனி பூமியில் நெற்பயிர்களுக்கு பஞ்சம் ஏற்படும் என கூறினார். இனி அது என்றுமே பூமியில் வாழ்ந்து, மக்களுக்கு அவர்களின் நிலத்தை உழுது கொடுக்க வேண்டும் என அவர் சாபமளித்தார். அதனால் தான் மாட்டுப் பொங்கலுடன் மாடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.


நான்காம் நாள் காணும் பொங்கல் (16-1-18)

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத் தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள். நன்றி மாலை மலர்.