வியாழன், 24 ஜனவரி, 2019

தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24...!!


தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24...!!

பெண் குழந்தை பெற்றவர்கள் கடவுளிடம் வரம் பெற்றவர்கள் மட்டுமல்ல பாக்கியசாலிகளும் கூட. அன்று பெண் குழந்தைகளை சாபமாக பார்த்தவர்கள், இன்று பெண் குழந்தைகளை வரமாக பார்க்கிறார்கள்.

வரமாக பெற்ற பெண் குழந்தைகளை நாம் கௌரவிக்க வேண்டாமா? இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பல தினங்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும், இதில் கவனிக்கத் தகுந்த தினம்தான் தேசிய பெண் குழந்தைகள் தினம்.

பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களது திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் தேசிய அளவில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய பெண் குழந்தைகள் தினம், தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிர்த்து போராடுவதற்குப் பெண்களுக்கு அதிகாரம் தேவை என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

பெண் குழந்தை பெற்றவர்களுக்கு :

குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுப்பது பெற்றோர்களின் கடமையே ஆகும்.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது தங்களை தவிர வேறு நபர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும், முகம் தெரியாதவர்கள் யாரேனும் அழைத்தால் அவர்களுடன் போகக்கூடாது என்பதை பற்றியும் சொல்லிக்கொடுத்து, குழந்தைகளிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

குட் டச், பேட் டச் சொல்லி கொடுங்கள் :

பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முதலில் பெற்றோர்கள் கண்டிப்பாக தங்களின் பெண் குழந்தைகளுக்கு எது குட் டச்? எது பேட் டச்? என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

காமுகர்கள் முதலில் குழந்தைகளுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக்கொடுத்து அவர்களை தன் வசப்படுத்துவார்கள். எனவே, குழந்தைகளுக்கு பரிசு வாங்கி கொடுப்பவர்கள் எல்லாம் மிக அன்புடையவர்கள் என்று நாம் சொல்லி கொடுக்கக்கூடாது. அது தவறான புரிதலாக மாறும்.

பெற்றோர்கள் தன் குழந்தைகளிடம் யாருக்கும் முத்தம் கொடுக்க சொல்லியோ, கட்டிப்பிடிக்க சொல்லியோ வற்புறுத்தக்கூடாது. ஏனெனில், இறுதியில் இந்த பழக்கமே அவர்களுக்கு ஆபத்தாக முடியும்.

பேருந்தில் செல்லும் போதும்கூட சிலர் காமுகர்கள் இருக்கலாம். அது நமக்கு தெரியாது. எனவே அத்தகையவர்களிடம் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள அவர்கள் எந்த நோக்கத்தில் உங்கள் குழந்தைகளை தொடுகிறார்கள் என்பதை அவர்களுக்கு முன்னரே (குட் டச், பேட் டச்) சொல்லி கொடுக்க வேண்டும்.

இன்றைய காலத்திற்கேற்ப உங்கள் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக கராத்தே, சிலம்பாட்டம் போன்ற இன்னும் சில தற்காப்பு கலைகளை கூட கற்றுக்கொடுக்கலாம்.

ஒவ்வொரு வயது குழந்தைக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்றவாறு சொல்லி கொடுக்க வேண்டும். அதே சமயம் மிக சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லி கொடுக்க வேண்டும். இல்லையெனில் மறந்து விடுவார்கள்.

பாதுகாப்பு :

பெண் குழந்தைகள் கண்டிப்பாக தற்காப்பு கலையை பயில்வது மிகவும் நல்லது.

பெண் குழந்தைகள் தனியாக வெளியில் செல்லும்போது விலையுயர்ந்த நகைகளை அணிந்து செல்லக்கூடாது.

முதன்முறையாக தனியாக பயணிப்பவராய் இருப்பின், தைரியமாக நடந்து கொள்ளவேண்டும்.

அந்நியர்களிடம் இருந்து எந்த விதமான பொருளையும் வாங்கக்கூடாது. யாரேனும் பிஸ்கட் அல்லது பழங்கள் கொடுத்தால், அதை பணிவாக மறுத்து விட வேண்டும்.

பெற்றோர்கள் பெண்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய தாரக மந்திரம் :

யாரையும் எளிதில் நம்பக்கூடாது. அனைவரிடமும் பழகும்போது எச்சரிக்கையுடன் பழக வேண்டும்.

இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்....

பெண் குழந்தைகளை பாதுகாப்பது நம் தலையாய கடமை..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக