திங்கள், 31 ஜூலை, 2017

உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்ட் 01.



   உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்ட் 01.

 உலக தாய்ப்பால் தினம். பெண்கள் தாய்மை அடையும் போது தான் முழு பெண்மையை அடைகின்றனர். தாய்மை பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். குழந்தை பிறந்ததுமே தாய்ப் பால் கொடுப்பது மிகவும் அவசியம். பிறந்த குழந்தைக்கு வழங்கப்படும் முதல் உணவு தாய்ப்பால் தான். தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் அடங்கி இருக்கிறது. தண்ணீர் கொழுப்பு புரதம் சர்க்கரை தாதுப் பொருட்கள் ஆகியவை தாய்ப்பாலில் காணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ், கால்சியம், வைட்ட மின்கள் ஆகியவற்றை மார்பகச் சிற்றறைகள் பிரித்து பாலாக மாற்றுகின்றன.
தாய்ப்பாலில் அதிசயிக்கத்தக்க ஆற்றல் படைத்த ரசாயனப் பொருள் இருக்கிறது. அது பிறந்த குழந்தையின் செரிமான உறுப்புக்களை பாதுகாக்கவும் குறைகளைப் போக்கவும் பெரிதும் உதவுகிறது. தாதுப் பொருள் குழந்தை பிறந்தவுடன் சில நாட்களுக்குச் சுரக்கின்ற சீம்பாலில் அதிக அளவில் இருக்கிறது. இது குழந்தையின் குடல் பகுதிகளை மற்ற அமிலச்சுரப்பினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. குழந்தை இனிமேல் சாப்பிடப் போகும் உணவுகளை ஏற்றுக்கொள்ளும் விதமாக பக்குவப்படுத்துகிறது. ஆகவே எல்லாவித சத்துக்களும் அடங்கிய பால் குழந்தையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. தாய் பால் பருகும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்வர். காரணம் தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு திறன்.
உடல் நலம் காக்கும் தாய்ப்பால்
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவு வலுப்படுகிறது. மன அமைதி, மகிழ்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. கையில் எடுத்து மார்போடு அணைத்து பால் கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்ச்சி ஏற்பட்டு அது மனநிறைவோடு காணப்படுகிறது. குழந்தைகளின் கன்னம் மற்றும் தாடை எலும்புகள் வலுவடைகின்றன. அதிக கால்சியம் சத்து நிறைந்த தாயின் பால் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. தாய்ப் பாலில் மட்டுமே பாலி அன்சேசுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. பசும் பாலில் இல்லாத இந்த அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் ஆகியவை அரிதாகவே ஏற்படுகின்றன.
தாய்க்கும் நன்மை உண்டு
தாய்ப் பால் கொடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள் இருப்பதைப் போல தாய்க்கும் நன்மைகள் இருக்கின்றன. முதலாவது தாய் கருத்தரிப்பதை இயற்கையாக பெரும்பாலானவர்களுக்கு தள்ளி வைக்கிறது. மேலும் தாய்ப் பால் கொடுப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று நோய் வருவதை தவிர்க்கமுடியும்.
கர்ப்பகாலங்களில் அதிகமாக சாப்பிட்ட தாயின் உடல் பருமனை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருகிறது. கர்ப்ப பையை சுருங்கச் செய்து மீண்டும் இயல்பான நிலைமைக்கு கொண்டு வருகிறது.
தாய்ப் பால் சுரப்பை அதிகரிக்க...
பிரசவத்தை நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பல சந்தேகங்களில் ஒன்று தாய்ப் பால் சுரப்பு. ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்த ஒரு பெண்ணுக்கு சுமார் 850 மி.லி தாய்ப் பால் தினமும் சுரக்கும். ஆரம்பத்தில் தாய்ப் பால் சுரப்பு குறைவாகவே இருக்கும். தாய்ப் பால் கொடுக்கும் தாய்க்கு தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியிருக்கிறது. சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த பொருட்கள், தண்ணீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்துக் கொண்டால் தாய்ப்பால் சுரப்பில் இழக்கும் கலோரியை ஈடு செய்துவிடலாம். அதிக புரத சத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறாமீன், மீன் முட்டை கரு(சிணை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பேரீச்சம் பழம், திராட்சைப் பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயா பீன்ஸ், காய்ந்த சுண்டைக் காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். மீன்கள் சாப்பிடலாம்.
வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், அதிக புரதம், மாவு சத்துள்ள பொன்னாங்கன்னி கீரை உள்பட அனைத்து கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் பால் நிறைய சுரக்கிறது. மேலும் தாய் தினமும் பசும் பால் உட்கொண்டால் தாய்ப் பால் பற்றாக் குறையே இருக்காது. அழகு கெட்டுவிடும் என்றும், இன்னும் பிற காரணங்களாலும் குழந்தைக்குத் தாய்ப் பால் கொடுப்பதை பெண்கள் தவிர்க்கின்றனர். இது தவறு. உலக சுகாதார அமைப்பும், அமெரிக்க குழந்தை நல மருத்துவ அகாடமியும் குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தனித் தாய்ப் பாலூட்டல் சிறந்தது என்பதை வலியுறுத்துவதுடன், முடிந்தால் 2 ஆண்டுகள் வரை (அல்லது அதிகமாகவோ) செயற்கை உணவூட்டலுடன் சேர்த்து தாய்ப் பாலூட்டலையும் செய்வதற்கு அறிவுறுத்துகின்றன. தாய்ப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தனியாக வேறு எந்தவிதமான சத்துணவையும் தர வேண்டிய அவசியமே இல்லை. பச்சிளங் குழந்தைக்கு கட்டாயமாக தாய்ப் பால் மட்டுமே கொடுப்பது அவசியம். இன்று முதல் 7ம் தேதி வரை உலகத்தாய்ப் பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



தாய்மை இந்த தேசத்தின் ஆகச் சிறந்த அழகு. சிலருக்கு வாய்க்கிறது. பலருக்கு வாய்க்காமல் போகிறது. அந்த ஒரு சிலரும், நடைமுறை விசயங்களை தொலைகிறபோதுதான், நினைவூட்டு நாட்கள் அவசியமாகிறது. உலகத் தாய்ப்பால் வாரம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழு தினங்கள் கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோவும், உலக சுகாதார நிறுவனமும் பிரபஞ்சத்தின் மத்தியில் நின்றுகொண்டு தாய்ப்பால்… தாய்ப்பால் எனத் தலையில் அடித்துக் கதறுகிறது. மருத்துவமனைகள், ஆட்சியர் அலுவலகங்கள், சமுதாயக் கூடங்கள், கல்லூரிகள், பள்ளிகள் எனக் களமிறங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தச் சொல்கிறது. AAP எனச் சொல்லப்படும் THE AMERICAN ACADEMY OF PAEDIATRICS உம் தாய்ப்பால் புகட்டுதலை மிகத் தீர்க்கமாக வலியுறுத்துகிறது. நாம் என்ன செய்கிறோம், இதெற்கெல்லாமா நோட்டீஸ் கொடுப்பீர்கள் சே... எனச் சலித்துக்கொண்டு துண்டுச்சீட்டுகளைச் சுருட்டி தெருவோரம் வீசிவிட்டுப் போகிறோம். ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். ஒரு தாயிடம், அவள் குழந்தைக்கு, அவள் பாலை புகட்ட, அவளிடமே கெஞ்சிக் கொண்டிருப்பது எத்தனை அபத்தம் என்பது. இது உலகளாவிய உணர்வுப் பிரச்னை.
பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் என்பதற்குள் அடக்கிப் பார்க்கிற விசயமாகத் தெரியவில்லை. எந்தச் சூழலுக்குள்ளும் சிக்காத தாய்க்கும் சேய்க்குமான பேரன்பாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு குழந்தை என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒப்பந்தம் என்று எப்படிச் சுலபமாகக் கடந்து போய்விட முடியும். இந்தச் சமூகத்தின் துளிர். தேசத்தின் அடையாளம் அல்லவா. அப்படியானால் அதை எப்படி ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க வேண்டும். தாயிலிருந்துதான் துவங்க வேண்டும் இந்த பங்களிப்பு.
2015-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் ஐந்து தாய்மார்களில் நான்கு பேர் தாய்ப்பால் கொடுப்பதில்லை என்ற பேரதிர்ச்சியை யுனெஸ்கோ முன்வைக்கிறது. கல்வியில் மிகவும் பின் தங்கிய சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் கூட ஐம்பது சதவீதம் பேர் தாய்ப்பால் புகட்டுகின்றனர். ஆனால், தமிழகத்தில் 18.8% குறிப்பாகச் சென்னையில் 7% தாய்மார்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதாகப் புள்ளிவிவரங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
தாய்மை வரம் என்றால் தாய்ப்பால் வரப்பிரசாதம். கருத்தரித்த நாள் முதல் அந்த சிசுவிற்காகவே தாயின் உடலும் மனமும் பழக்கப்படுகிறது. இயற்கையான பிரசவம் என்றால் அரை மணி நேரத்திற்குள்ளும், அறுவை சிகிச்சை என்றால் ஒன்றரை மணி நேரத்திற்குள்ளும் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அதன் ஸ்பரிசத்தைத் தேடும் தாயும், அவளின் பால் வீச்சத்திற்கு, கதகதப்பிற்கு ஏங்கும் குழந்தையின் துடிப்பையும் எந்த மெசின்களாலும் கண்டறிய முடியாது. அன்பையும் நேசத்தையும், ஆரோக்கியத்தையும் குழைத்து மார்பில் அணைத்தபடி தன் குழந்தைக்கு கலப்படமற்ற பால் புகட்டும் ஒரு தாயின் மன அமைதி வேறெதில் கிடைக்கப் போகிறது.
அம்மாவிற்கும் குழந்தைக்குமான உளவியல் ரீதியானத் தீண்டல், அரவணைப்பு, பாதுகாப்பு போன்ற அனுசரனைகளை எப்படி செயற்கைப் பாலில் எதிர்பார்க்க முடியும். ஊர் கூடித் தேர் இழுக்குறீர்களே? அப்படி என்னதான் இருக்கிறது தாய்ப்பாலில் என்ற கேள்வியை முன் வைத்தால் இவைகள்தான் பதில். குழந்தை பிறந்து முதல் இரண்டு நாட்கள் சுரக்கும் ‘கொலாஸ்ட்ரம்’ எனும் சீம்பாலில் தான் குழந்தைக்கு நோயை அண்டவிடாத ஆண்டிபாடிஸ் தடுப்பு மருந்து இருக்கிறது. குழந்தைக்கு ஆறு மாதங்கள் கண்டிப்பாகத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு ஒரு வருடமாவது தாய்ப்பாலுடன் சேர்ந்த இணை உணவு அவசியம். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் நரம்பு மண்டலத்திற்கும் வலு சேர்க்கக் கூடிய, எளிதில் செரிக்கும் புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்பு, மாவுச்சத்து இவைகளோடு வைட்டமின்களும் தாய்ப்பாலில் அதிகம் நிறைந்துள்ளன.
குழந்தைக்கு வரும் ஊட்டச் சத்துக் குறைபாடுகளில் இருந்து இவை காப்பதோடு டையாபடிஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை அண்டவிடாமல் தடுக்கும் எனவும் மருத்துவம் கூறுகின்றது. அத்துடன் தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டம் கர்ப்பத்தடைக்கான நாட்களாகவும் கருதப்படுகிறது. பிட்யூட்டரியில் சுரக்கும் ஆக்ஸிடோஸின், கருப்பையை சுருங்கச்செய்து பிரசவக் காலத்து உதிரப் போக்கிலிருந்து தாயைக் காக்கிறது. தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப் புற்று மற்றும் சினைப்பை புற்றுநோய் வரும் தன்மையும் தடுக்கப்படும் என்கிறது இந்திய மருத்துவக் கழக ஆராய்ச்சி.
எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் தாய்க்கும் மகனுக்கும், தாய்க்கும் மகளுக்குமான அன்பைத் தகர்க்க முடியுமா? பிரசவத்தின்போது குழந்தை இறந்து, பால் கொடுக்க முடியாமல் அவதிப்படும் ஒரு கிராமத்து தாயின் மார்பகத்தில் இருந்து, ஒருவார காலம் தன்னியல்பாக வழிந்தோடும் நெகிழ்ச்சியை, மல்லிகைப் பூக்கள் கொண்டு கட்டுப்படுத்தும் அவளின் உயிர் வலியை நகரத்தின் எந்த அழகுநிலையம், மஸ்காரா போட்டு மறைக்கும்.
என் குழந்தை என் ரத்தம், என் உணர்வு என்கிற நிலையில் தன்னுள் சுரக்கும் உணவை தன் ஜீவனுக்கு ஊட்டி உயிர்த்தெழச் செய்பவள்தானே தாய். குழந்தை பிறந்தபிறகு கொடுக்கும் மருந்துக் குழம்பும் பத்தியச் சாப்பாடும் நான் தாயாகி விட்டேன் என்கிற உன்னதத்தை அவளுக்குள் கிளர்த்திவிடுமே. பாலில் வேகவைத்த பூண்டு, திருக்கை மீன் குழம்பு, சுறாப்புட்டு, வெண்டைக்காய் வதக்கல் எனப் பால் சுரக்கும் டிப்ஸ்களும், மாம்பழம் மாந்தம், பலாப்பழமா கூடவே கூடாது குழந்தைக்கு ஆகாது எனக் கடிந்து கொள்ளும் பாட்டிகளுக்கும், இன்றைய இளம் தாய்கள் சொல்கிற பதில், நாங்கள் வேலைக்குச் செல்கிறோம். இதெல்லாம் சரிப்பட்டு வராது என்பதுதான்.
அரசு வேலைக்குச் செல்பவர்களுக்கு அரசாங்கம், அதிகப் படியான பேறுகால விடுமுறைச் சலுகைகள் வழங்குகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும் காரணம் சொல்கிறார்கள். எங்களுக்கு ஓரிரு மாதங்கள்தான் விடுமுறை. பிரெஸ்ட் பீடிங்கா... நோ சான்ஸ் என்கிறார்கள். மனம் புறக்கணிக்கிறபோது அறிவியல் அவசரமாக ஆட்கொள்கிறது. அம்மாக்களே அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் என்ற பதட்டத்தில், பிரெஸ்ட் பம்ப்புகள் மூலம் தாய்ப்பாலை எடுத்து குளிர்சாதனப் பெட்டிகளில் பதப்படுத்தி குழந்தைகளுக்கு கொடுக்கலாம் எனக் கண்டுபிடித்து விட்டார்கள். அறை வெப்ப நிலையில் 8 மணி நேரமும் பிரீசரில் 24 மணிநேரமும் வைக்கலாம். மேலும் 20’c-இல் மூன்று மாதங்கள் வரை கூடப் பதப்படுத்தி அதன் தன்மை மாறாமல் குழந்தைக்கு கொடுக்கலாம் என்கிறார்கள். ரத்த வங்கி போல தாய்ப்பால் வங்கியும் மெல்ல நடைமுறைக்கு வருகிறது.
இத்தனை இணக்கமான சூழல் இருந்தும், நஞ்சேறிய பவுடர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி தரிசான வாரிசுகளை உருவாக்கி வருகிறோமே ஏன்? வெளியில் சொல்ல முடியாத அந்த நெருடலில்தான் குழந்தைகளின் இறப்பு விகிதம் கூடிக்கொண்டே போகிறது. தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்து விடும் என இன்றைய இளம் பெண்கள் கங்கணம் கட்டிவிட்டார்கள். எத்தனை வேதனை இது. இந்த அறியாமையை எப்படி போக்குவது என்பதில் மருத்துவம் உறைந்து நிற்கிறது.
போர்க்களத்தில் போரிட்டு வீர மரணம் எதிர்கொள்ளும் தருவாயில், வீரர்களின் உயிர் பிழைக்க தங்கள் மார்பகக் காம்புகளைப் பிழிந்து பால் ஊட்டிய சங்க இலக்கியத் தாய்களின் ஈரப்பதம் எங்கே போயிற்று. தாய்ப்பால் என்பது தாயிடமிருந்து குழந்தைக்கு கடத்தப்படும் கொழ கொழப்பான ஏதோ ஒரு திரவம் அல்ல. அது தாயின் அன்பு, அவளின் பாசம், ஊறிக்கிடக்கும் அவளது அறிவு, மடைமாற்றம் செய்யப்படும் மூதாதையரின் குணம். இப்படி அணு அணுவாய் அனுபவித்து குழந்தைக்குத் தாயாகி மகிழும் நிலையான அழகைவிட, நிறப்பூச்சுகளில் மயங்கி, சுருக்கம் விழக் காத்திருக்கும் நீர் வற்றிய வெற்றுத் தோல் எப்படி அழகாகும். அழகின் அறியாமையை பெண்கள் அறிந்துகொண்டால்தான் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.
எத்தனை புள்ளி விவரங்களைக் கோடிட்டாலும், தாய்மை அளப்பறியது. தன்னிலை உணர்தல் அழகு. இளம்பெண்கள் அதை முதலில் தீர்மானிக்க வேண்டும். ஆதிக் கிழவிகள் விட்டுச் சென்ற தாயன்பின் எச்சத்திலேனும், குழந்தை பிறந்ததும் மருத்துவமனைக்கு உங்களைப் பார்க்க வரும் நண்பர்களின் உறவினர்களின் கைகளில் இருக்கும் செயற்கை பால் டப்பாக்களையும், பால் புட்டிகளையும் மறுத்துவிடுங்கள்.
உங்கள் குழந்தைக்கு நீங்கள் உணர்வுப் பால் புகட்டும் அன்னியோன்யத்தை தோழிகள் நெக்குருகப் பார்க்க வேண்டும். அவர்கள் மகள்களை மகன்களை ஓடிச்சென்று மார்போடு அணைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தாயின் மார்பில் சுரக்கும் வாஞ்சையால் மட்டுமே தாய்பால் புகட்டும் உள்ளொளி ஒளிரும். என் குழந்தையின் எதிர்காலத்திற்காகத்தான் உழைக்கிறேன் என இரவும் பகலுமாய் பட்டினிப்போட்டு விட்டு ஆளாய் பறக்குறீர்களே. உங்கள் மார்பில் ஊறும் ஒரு சொட்டுப் பாலையேனும் அந்தக் குழந்தையின் நாவில் ஊற்றி நனைத்து விட்டுப் போங்கள். உங்களை மட்டுமே நம்பிக் கண் விழித்த பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுங்கள். வீட்டிற்கு மட்டுமல்ல இது நாட்டிற்குச் செய்யும் சேவையும் கூட.-அகிலா கிருஷ்ணமூர்த்தி.


கொடுக்க கொடுக்கத்தான் சுரக்கும் தாய்ப்பால்!
தாய்ப்பால் வாரம்... சிறப்புக் கட்டுரை!
அவர்னேஸ்
''நா ன் சென்னையைச் சேர்ந்த வாசகி. 'அவள் விகடன்’ கட்டுரை ஒன்றில், தாய்ப்பால் பற்றி... குறிப்பாக சீம்பால் தருவதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டிருந்ததை படித்த நான், என் பிரசவத்தில் அதைத் தவறாமல் கடைபிடிக்கக் காத்திருந்தேன். ஆனால், சமீபத்தில் சுகப்பிரசவமான எனக்கு நேர்ந்த அனுபவமோ, கசப்பானது. 'சுகப்பிரசவம் எனில், குழந்தை பிறந்த அரை மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்’ என்று அவள் விகடனில் படித்திருந்ததைச் சொல்லி, பாலூட்டுவதற்காக என் குழந்தையைத் தரும்படி நர்ஸிடம் கேட்டேன். 'ரூம் இல்லை’ என்று ஏதேதோ சாக்கு சொல்லி, என் குழந்தை என் கையில் கிடைப்பதற்குள் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கும் மேலாகியிருந்தது.
அதன்பிறகும் தீரவில்லை பிரச்னை. குழந்தைக்கு நான் பாலூட்டியும் அது அழுகையை நிறுத்தவில்லை. நர்ஸ், 'சுத்தமா பால் இல்ல, ஏன் குழந்தையை அழவிட்டு வேடிக்கை பார்க்குறீங்க?’ என்று கடிந்ததுடன், பிரபலமான பால் பவுடரின் பெயரைச் சொல்லி, அதை கலக்கி குழந்தைக்குக் கொடுக்கச் சொன்னார். எனக்கு பால் ஊறுவதையும், குழந்தை அதை பருகுவதையும் நான் உணர்ந்ததால், 'எனக்கு பால் இருக்கு’ என்றேன். என் சொந்தபந்தங்களும் அந்த நர்ஸுடன் சேர்ந்துகொண்டு, 'அவளுக்கு பாலே இல்ல’ என்று பேச ஆரம்பித்தனர். ஆனாலும் நான் பால் பவுடரை கொடுக்க அனுமதிக்காமல், நானே பாலூட்டினேன். மறுநாள் காலை வந்த குழந்தை நல மருத்துவர், 'பால் சுரக்குதே... குட்! விடாம ஃபீட் பண்ணுங்க... அப்போதான் பால் நன்றாக ஊறும்!’ என்று சொன்னபோதுதான்... எனக்கு நிம்மதி பிறந்தது.
இப்படித்தான் தாய்ப்பால் பற்றிய உண்மைகளைத் தெரியாதவர்கள், அதன் மீது அதிக அக்கறை இல்லாதவர்கள் எல்லாம், இஷ்டம்போல ஆலோசனைகளைச் சொல்லி, இயல்பாக நடக்க வேண்டிய ஒவ்வொன்றுக்குமே, செயற்கையான விஷயங்கள் மற்றும் பொருட்கள் மீது கவனத்தைத் திருப்பிவிடுகிறார்கள். ஆகஸ்ட் முதல் வாரம் 'தாய்ப்பால் வாரம்'. இந்தச் சமயத்தில் தாய்ப்பால் பற்றி விளக்கமாக ஒரு கட்டுரை அளித்தால், பிரசவிக்கும் இளம் தாய்மார்களுக்கு வழிகாட்டியாக இருக்குமே!''
- மதுரையைச் சேர்ந்த வாசகி அகிலாவின் இந்தக் கடிதத்தை, சென்னை, குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் ஸ்ரீதர் ஆர்.எஸ். முன் வைத்தோம். ''இத்தனை இடையூறுகளுக்கு இடையேயும் தன் கடமையில் உறுதியாக இருந்து, குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய வாசகி பாராட்டுக்குரியவர்!'' என்று சொன்ன டாக்டர், தாய்ப்பால் சுரப்பு பற்றிய விளக்கத் தகவல்களை வழங்கினார்.
ஹார்மோன் தூண்ட, தாய்ப்பால் சுரக்கும்!
''முதலில் நான் வலியுறுத்த விரும்புவது, தாய்ப்பால் என்பது மனது சம்பந்தப்பட்ட விஷயம். 'ஒல்லியான தாய் என்பதால் பால் சுரக்கவில்லை’, 'குழந்தை மிகவும் குண்டாக இருப்பதால் பால் போதவில்லை’ என்ற பேச்சுக்களில் எல்லாம் துளியும் உண்மையில்லை. குழந்தை பிறந்ததும் தாய் அமைதியான மனநிலையில் இருந்து, 'குழந்தைக்கு பாலூட்ட வேண்டும்’ என்று உளப்பூர்வமாக நினைக்கும்போது, அந்தச் செய்தி மூளைக்கு தெரிவிக்கப்பட்டு, ஆக்சிடோஸின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன்தான் பால் சுரப்பதற்கு மிக முக்கியமானது. மாறாக, குழந்தை பெற்றெடுத்த தாயின் மனநிலை அமைதியில்லாமல் இருந்து, குழந்தைக்குப் பாலூட்டுவது பற்றிய நினைப்பில்லாமல், விருப்பமில்லாமல் இருந்தால், ஹார்மோன் சுரக்காது, தாய்ப்பாலும் சுரக்காது. எனவே, பிரவசத் தில் உடல், மன ரீதியாக துன்புற்று வந்திருக்கும் பெண்ணுக்குத் தேவையான அன்பையும், அமைதியையும் உடனிருப்பவர்கள் தரவேண்டும்.
பிரசவித்த தாய்மார்களுடன் உதவிக்காக இருப்பவர்கள், 'பெண் குழந்தையா போச்சு’, 'ஆபரேஷன் செய்ய வேண்டியதா போச்சு’, 'உனக்கு பால் இல்ல’, 'குழந்தையைத் தூக்கக்கூடத் தெரியல’ போன்ற புலம்பல்களை வெளிப்படுத்துபவர் களாக இருக்கும்பட்சத்தில், அவர்களை அங் கிருந்து மெதுவாக வெளியேற்றுவதே நல்லது.
மார்பகக் காம்பு... கவனம்!
குழந்தை பெற்ற தாய் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உடல் சுத்தம், மார்பகக் காம்புகள் சுத்தம் மற்றும் சத்தான உணவு. உடல் சுத்தம், சத்தான உணவு பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், மார்பகக் காம்பு சுத்தத்தை பொறுத்தவரை பல பெண்களும் அறியாமையிலேயே இருக்கிறார்கள். கர்ப்ப காலத்திலேயே மார்பகக் காம்புகளுக்கு உரிய பராமரிப்பை தரவேண்டும். காம்பில் புண், பிளவுகள் ஏதாவது இருந்தால் கர்ப்ப காலத்தில் செக்கப் செல்லும்போதே மருத்துவரிடம் தெரிவித்து, சிகிச்சை எடுக்கவேண்டும். சிலருக்கு இயல்பிலேயே காம்புகள் உள் அமுங்கி இருக்கும். இது குழந்தைக்கு பால் குடிக்க ஏதுவாக இருக்காது. அதனால் கர்ப்ப காலத்தில் இருந்தே குளித்து முடித்தபின் மிருதுவாக காம்புகளை வெளியே இழுத்துவிட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது பிரசவ நேரத்தில் காம்புகள் குழந்தை சப்புவதற்கு ஏதுவாக வெளிவந்திருக்கும்.
சீம்பால் முக்கியம்!
குழந்தை பிறந்ததும் சுகப்பிரசவமாக இருந்தால் அரை மணி நேரத்துக்குள்ளாகவும், சிசேரியனாக இருந்தால் தாய் மயக்கத்தில் இருந்து கண் விழித்த பிறகு, அல்லது தாய்ப்பால் கொடுக்கும் அளவுக்கு உடல் நிலைக்கு தேறிய பிறகு பால் புகட்ட வேண்டும். பிரசவத்துக்குப் பின் முதன் முதலில் தாய்க்கு சீம்பால் (கொலோஸ்ட்ரம்) சுரக்கும். இது குறைவான அளவே சுரக்கும் என்றாலும், பிறந்த குழந்தையின் வயிறு முதல் நாள் 5 முதல் 7 மில்லி பாலையே தாங்கும் என்பதால், அந்த அளவே குழந்தைக்குப் போதுமானது. அதனால் முதல் நாளில், 'ஐயோ பால் குறைவா இருக்கே’ என்று கவலைப்பட வேண்டியதில்லை.
பிரசவத்துக்குப் பின் தாய் ஏதாவது ஆகாரம் எடுத்துக் கொண்டால்தான் பால் சுரக்கும் என்பதிலும் உண்மையில்லை. பொதுவாக, பிரசவித்த தாய்க்கு பால், இளநீர் என்று கொடுக்கச் சொல்வது, பிரசவம் எனும் பெருநிகழ்வு முடித்து வந்திருக்கும் அவர் உடலுக்கான தெம்புக்காகத்தானே தவிர, பால் சுரப்புக்காக இல்லை. எனவே, பிரசவத்துக்குப் பின் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், பால் சுரப்பு நிகழும் என்பதுதான் இயற்கையின் கொடை.
அச்சப்பட வேண்டியதில்லை அழுகைக்கு!
அடுத்ததாக, குழந்தை அழுவதைப் பார்த்துப் பதற்றப்படும் தாய்மார்கள் அநேகம். பசிக்காக அழுகிறதோ என்று நினைத்து, பால் புகட்டுவார்கள். ஆனால், பசியாறிய பின்னும் குழந்தை அழும். 'பால் பத்தலையோ’ என்றும் மீண்டும் கவலைப்படுவார்கள். காரணம் அதுவல்ல. அதுவரை தாயின் வயிற்றில் இருட்டறையில் இருந்த குழந்தைக்கு, வேளாவேளைக்கு கேட்காமலேயே ஊட்டச்சத்து கிடைத்தது. ஆனால், வயிற்றில் இருந்து வெளிவந்ததும் வெளிச்சம், சத்தம் போன்றவை எல்லாம் புதிதாக இருப்பதாலும், பசித்து அழுதால்தான் பால் கிடைக்கும் என்பதாலும், பிறந்த ஓரிரு நாட்களுக்கு தொடர்ந்தோ, விட்டு விட்டோ குழந்தை அழுவது இயல்பே. அழும் குழந்தைக்கு பால் புகட்டுங்கள். அதற்குப் பின்னும் அழுதால், பதற்றமோ கவலையோ வேண்டாம். கருவறைக்கு ஒத்த பாதுகாப்பாக, தாயின் அரவணைப்புக்குள் குழந்தையைக் கொண்டு வாருங்கள். அழுகை சில நாட்களில் சரியாகிவிடும்.
பால்சுரப்பு அதிகரிக்க..!
அடுத்ததாக, பிரசவத்தை தொடர்ந்த நாட்களில் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்ய வேண்டியவற்றைப் பார்ப்போம். குழந்தை தாய் மார்பை சப்ப சப்பதான் பால் சுரப்பு அதிகமாகும். எனவே, தாய்ப்பால் குறைவாக இருக்கிறது என்று தோன்றினாலும், தொடர்ந்து குழந்தைக்கு பால் புகட்டியபடியே இருங்கள். அது பால் சுரப்பை தானாகத் தூண்டும். ஒருவேளை சிலருக்கு மிகமிகக் குறைந்த அளவே பால் சுரப்பு உள்ளது அல்லது சுரக்கவே இல்லை (இது மிக அரிதாகவே நிகழும்) எனில், மருத்துவரின் ஆலோசனைப்படி அந்தத் தாய் பால் சுரப்புக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்'' என்ற டாக்டர்,
தாய்ப்பாலின் இணையில்லா சிறப்புகள்!
தாய்ப்பால் உன்னதமானது, சுத்தமானது, சத்துக்கள் நிரம்பியது. தாய்ப்பாலில் எனர்ஜி, புரோட்டீன்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளதுடன், இது நிமோனியா, டயரியா, அலர்ஜி போன்றவற்றில் இருந்து குழந்தையைக் காக்கிற எதிர்ப்பு சக்தியினை தரவல்லது. தாய்ப்பால் பருகும் குழந்தைகள் மற்ற பால் அருந்தும் குழந்தைகளைவிட திறமையானவர்களாக இருக்கிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
மாட்டுப் பால் என்பது, அதன் கன்றுக்கானது. உலகத்தில் எந்த ஜீவராசியும் தன் குழந்தைக்கு மற்ற உயிரினத்தின் பாலை தருவதில்லை. ஆனால், நாம் மட்டும்தான் நம் குழந்தைகளுக்கு மாடு, தன் கன்றுக்காக சுரக்கும் பாலை அபகரித்துத் தருகிறோம். பால் பவுடர்களும் மாட்டின் பால் மற்றும் இன்ன பிற பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுவதுதான். இதன் விலையும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பசும்பால், பால் பவுடர் தயாரிப்புகளின்போது ஏற்படும் தவறுகளால் வயிற்றுப்போக்கு, வாந்தி என குழந்தைகளுக்கு அசௌகரியங்களும் ஏற்படலாம்.
எனவே, எண்ணிலடங்கா மற்றும் ஈடு இணையற்ற சத்துக்கள் நிரம்பிய தாய்ப்பாலை தங்கள் குழந்தைக்குக் கிடைக்கச் செய்வது ஒவ்வொரு தாயின் கடமை. ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது, தண்ணீர் கூட கொடுக்கத் தேவையில்லை. குழந்தைக்கான ஊட்டச்சத்து மட்டுமல்ல... பாலூட்டுவதால் தாய்க்கு ஏற்படும் பலன்களும் பல. தாய்ப்பால் கொடுக்கும்போது பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகான ரத்தப்போக்கு நிற்பதோடு, தொடர்ந்து தாய்ப்பாலூட்டி வருவது குறைந்தது ஆறு மாதங்களுக்கு தாய் கருத்தரிப்பதையும் தவிர்க்கிறது. மேலும், தாயின் உடல் எடை இயல்பு நிலைக்குத் திரும்பவும் பாலூட்டுவது அவசியமாகிறது'' என்று வலியுறுத்திய டாக்டர்...
''மொத்தத்தில் கருவுற்றிருக்கும்போதே, 'என் குழந்தைக்கு நான் தாய்ப்பால் மட்டுமே தருவேன்’ என்கிற அன்பையும் உறுதியையும் தாய்மார்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்!'' என்று அன்பான அறிவுரையையும் தந்தார் முத்தாய்ப்பாக!
- ம.பிரியதர்ஷினி.நன்றி விகடன்.




“அம்மா!” எனும் மொழி தரும் அங்கீகாரமும் அன்பும் உலகின் எந்த சொல்லுக்கும் இல்லை. அன்னை காட்டும் அன்பும், கூடுதல் அக்கறையும் தர உலகில் வேறு எந்த உறவும் கிடையாது . இணையான உள்ளமும் கிடையாது. ”பிறந்த குழந்தையை பிரசவித்த மறுகணம் தாயின் வயிற்றில் வைத்தால், அது தாயின் மார்பைப் பற்றி தன் முதல் சீம்பாலினை உறிஞ்சத் துவங்கும். யாரும் அதனை வழிகாட்ட வேண்டியதில்லை” என்ற செய்தி தரும் கவித்துவமும், வியப்பும் ஏராளம்.
குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால் தான். பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றது. இதனால்தான் குறைந்தது 6 மாதங்கள் வரையாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே… என்று கவலைப்படும் தாய்மார்களும் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தாய்ப்பால் என்பது குழந்தைக்கு மட்டுமல்ல; அம்மாவுக்குமேகூட பலவிதங்களில் நல்லது. பின்னாளில் தாய்க்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு இதனால் பெரிதும் குறைகிறது. சிலர் பிரசவத்துக்குப் பிறகு சரசரவென எடை போட்டுவிடுவார்கள். மீண்டும் பழைய உடல்வாகைப் பெற தாய்ப்பால் கொடுப்பது உதவும். தவிர, தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணுக்கு ஏற்படும் மனத்திருப்தி அவளது வாழ்க்கையின் பிற விஷயங்களிலும் பெரும் உற்சாகத்தை அளிக்கும்.
தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பதைப் போன்ற அபத்தம் வேறு எதுவும் கிடையாது. சொல்லப்போனால், குழந்தை தாய்ப்பாலுக்காக மார்பகங்களை அடிக்கடி உறிஞ்சுவதன் விளைவாக, அம்மாவின் யூட்ரஸ் சுருங்குகிறது. அதனால் அவளது வயிற்றுப்பாகம் கருவுறுவதற்கு முன்பு இருந்த பழைய வடிவை சீக்கிரமே பெறுகிறது.
மார்பகங்களின் அளவுக்கும், பால் சுரக்கும் அளவிற்கும் சம்பந்தமில்லை. அதிக அளவில் கொழுப்புத் திசுக்கள் இருப்பதுதான் பெரிய மார்பகத்தின் பின்னணி. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு
தினமும் 750 மில்லிலிட்டர் பால் சுரக்கும். அதற்கு அடுத்த மாதங்களில் 500லிருந்து 600 மில்லிலிட்டர் பால் சுரக்கும்.
தாய் எனும் சொல்லுக்கு தயாரான அந்த பிரசவித்த கணம் முதல் கூடுதல் ஊட்ட உணவு முக்கியம். தாய்ப்பாலின் மகத்துவம் பரவலாக ஓரளவு தெரிந்ததில், “தாய்ப்பால் கொடு கொடு!” என ஊக்குவிக்கும் கணவன் அதைச் சீராக சுரக்கும் தாய்க்கு கொடுக்கும் அக்கறை சில நேரத்தில் கொஞ்சம் குறைவு தான். ஊட்டமான உணவும் உள்ளமும் மட்டும்தான், பாலை சுரப்பித்திட, அந்த அன்னை ஊக்கமாய் சோர்வின்றி இருந்திட உதவும். “பச்சை உடம்புக்காரி” என நம் பாரம்பரியம் அந்த புது அன்னையை பராமரித்த விதம் அலாதியானது; அறிவியல் மெச்சக்கூடியது.
முதல் ஓரிரு மாதங்கள் பத்தியமாய்ச் சாப்பிடச் சொன்னது, தாய்ப்பாலின் குணத்தைக் கூட்ட மட்டுமல்ல, அதை சுரக்கும் அன்னை ஊட்டமாய் இருந்திடவும் தான். அதிக எண்ணெய் பலகாரம், முந்தைய நாள் சமைத்த உணவு, சீரணிக்க சிரமப்படும் பலகாரங்களைத் தவிர்ப்பது முக்கியம்.
0-6 மாத குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கு 550 க்லோரியும்; 6-12 மாத குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கு 400க்லோரியும் கூடுதலாக தேவை என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம். ‘அட! ஏற்கனவே, மகவை சுமக்கும் போது 10கிலோ வெயிட் போட்டாச்சு..இன்னும் சாப்பிடவா?.. நான் வெயிட் குறைக்க டயட் செய்யலாமா?’ என கேட்கும் புது அம்மாக்கள் இன்று அதிகம். புது அன்னை டயட்டிங்கில் போகவே கூடாது.
குழந்தை பிறந்தவுடனேயே பசும்பாலைக் கொடுப்பது சரியில்லை. அதில்
புரதச்சத்து தேவைக்கதிகமாக
இருக்கிறது. தவிர, அதிலுள்ள சோடியத்தின் அளவு அதிகம் என்பதால் குழந்தையின் சிறுநீரகங்கள் அதிக அளவில் செயல்பட வேண்டியிருக்கிறது.
தாய்ப்பாலில் உள்ள கொலஸ்ட்ரம் என்ற சத்து, குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடியது. குழந்தை பிறந்த இரண்டு நாட்களுக்கு வெளிப்படும் சீம்பாலைத்தான் இப்படிச் சொல்கிறோம்.
தாய்ப்பால் அருந்தி வளர்ந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட அதிக புத்திசாலிகளாக விளங்குகிறார்கள் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பல மாதங்கள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் பிற்காலத்தில் தேவைக்கதிகமான பருமனோடு இருப்பதில்லை.
எவ்வளவு நேரத்திற்கொருமுறை தாய்ப்பால் கொடுப்பது? பசித்து அழும்போது கொடுக்கலாம். மற்றபடி இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்கலாம். பத்திலிருந்து இருபது நிமிடங்கள் வரை பால் கொடுக்கலாம். ஆனாலும் குழந்தைகள் வேகமாகப் பாலை உறிஞ்சிக் கொள்கின்றனவா அல்லது மெதுவாகவா என்பதைப் பொறுத்ததுதானே அது அருந்தும் அளவு? எனவே ஐந்து நிமிடம் பால் கொடுத்தவுடன் குழந்தைக்குத் தூக்கம் வருகிறது என்றால் அதைத் தூங்க அனுமதித்துவிடுங்கள். எழுந்தபிறகு கொடுக்கலாம்.
தாய்ப்பால் அதிகம் சுரக்க டாக்டர்கள் கொடுக்கும் முதல் அறிவுரை, சத்தான உணவுகளோடு அதிக அளவில் பசும்பால் குடியுங்கள் என்பதுதான். எந்த அளவுக்கு அதிகமாக பசும்பால் குடிக்கிறோமோ, அந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்கிறார்கள் டாக்ரர்கள்.
தமிழர்களின் சமையலில் அதிகம் இடம் பிடிக்கும் மூலிகையான பூண்டுக்கும் தாய்ப்பாலை பெருக்கும் சக்தி அதிகம் உள்ளது. தினமும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது என்பது அனுபவ உண்மை. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
அதனால் போலும் எம்முன்னோர்கள் வேர்க்கொம்பு (திப்பலி), மிளகு, நற்சீரகம், உள்ளி போன்றவற்றை அரைத்து உறுண்டைகளாக்கி பனங்கட்டியுடன் பிள்ளை பெற்ற தாய்மாருக்கு சில நாட்களுக்கு உண்ணக் கொடுக்கின்றார்கள். அத்துடன் அவர்களுக்காக ஆக்கப்பெறும் பத்தியக் கறியிலும், சரக்குத்தூளும், பிஞ்சு முருக்கங்காயும், கீளி மீன்களும், புளுங்கல் அரிசியும் முக்கிய இடத்தைப் வகிக்கின்றன. சில ஊர்களில் கருவாடும் பத்தியக் கறிக்காக எடுத்துக் கொள்கின்றனர்.
பூண்டு தாய்ப்பாலை பெருக்குவதோடு மேலும் பல நன்மைகளையும் நமக்கு தருகிறது. தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் பூண்டுக்கு உண்டு
தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க மருத்துவ குறிப்புக்கள் சில..
உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கச் செய்யலாம்.
தாய் தினமும் பசும் பால் குடித்தால் தாய்ப்பால் பற்றாக்குறையே இருக்காது. அதிக புரதசத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு(சிணை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பால் கொடுக்கும் முன் தாய் ஓட்ஸ், பிரட்ஃரஸ்க் போன்ற உணவுகளை உட்கொண்டு விட்டு பால் கொடுக்க ஆரம்பித்தால் பால் அதிகமாக சுரக்கும். தாய்க்கும் போதிய சக்தி கிடைக்கும். குறைந்தபட்சம் தண்ணீர் மட்டுமாவது அருந்தி விட்டு தான் பால் கொடுக்க வேண்டும்.
மீன் வகைகளில் சுறா மீனை உட்கொண்டு வந்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். சுறா மீனை புட்டாக அவித்து, அதனுடன் அதிக அளவில் பூண்டு சேர்த்து சாப்பிட வேண்டும்.
கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.
சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். சுறா மற்றும் சிறிய மீன்களும் சாப்பிடலாம்.
சிறிய மீன்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளவும் மிளகு ஆணம் போல் செய்து சாப்பிடவும்.
காலையில் டிபன் சாப்பிட்ட பின் பாலில் ஓட்ஸ் போட்டு காய்ச்சி குடிக்கவும். அதே போல் இரவும் தூங்கும் முன் ஓட்ஸ் குடிக்கலாம். இவற்றைக் கண்டிப்பாக கர்ப்பகாலத்தின் 7வது மாதத்தில் இருந்து சேர்ப்பது மிகவும் நல்லது... அப்படி முடியவில்லையானாலும் பிரசவித்த பின்பாவது கண்டிப்பாக உண்ண வேண்டும் வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உளுந்தை பொடி செய்து வைத்துக்கொண்டு பாலில் அதை சேர்த்து காய்ச்சியும் குடிக்கலாம். இதை காலை வேளையில் சாப்பிடலாம். இரவில் சாப்பிட வேண்டாம். வாதம் இருந்தால் சாப்பிடக்கூடாது.
ஓம வாட்டர் என்று கடையில் கிடைக்கும் அதை வாங்கி தண்ணீரில் ஊற்றி குடிக்கலாம்.
ஓம வாட்டர் கிடைக்கவில்லை என்றால் வெறும் ஓமத்தைகூட 2 தேக்கரண்டி எடுத்து இரண்டு கைகளிலும் வைத்து கசக்கி உமியை போக்கிவிட்டு இரவு தண்ணீரில்( 1கிளாஸ்) போட்டு ஊறவைத்து காலையில் முழித்ததும் அந்த தண்ணீரைமட்டும் வடித்து எடுத்து குடிக்கவும்.
பேரீச்சம்பழம், திராட்சைப்பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயாபீன்ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.
அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.
ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கிராம் அளவு காலையில் மட்டும் பாலில் கலந்து குடித்து வர தாய்பால் பெருகும்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.




தாய் மார்களே உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் போது நீங்கள் கோபப்பட கூடாதாம்-
ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்,,!

கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை
கூட ஏற்படுத்துகிறதாம்.
எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கோபம் என்பது ஒரு உணர்வு.
எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள்.
கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான்
அதேசமயம் எதற்கெடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது.
கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழகவேண்டும்.
கோபம் வரக்கூடாது.
வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது.
அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கோபம் உடனே மறைந்து விட வேண்டும்.
திரும்ப திரும்ப பேசியதைப் பேசி கேட்பவரையும் கோபத்தின்
உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது.
கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது.
கோபத்தோடு தன் குழந்தைக்கு தாய்பால் அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கிவிடுமாம்.
கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது.
நரம்பு மண்டலம் முழுவதும் சீர்குலைகிறது.
உடல் பதறுகிறது.
உடலில் சோர்வு ஏற்படுகிறது.
மறுபடியும் உடல் தன்னிலைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின்றன.
எனவே உங்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும்.
தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
கோபம் வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நம்முடைய மூச்சுக்காற்றை கவனிக்க வேண்டும்.
மூச்சு உள்ளே போவதையும், வெளியே வருவதையும் சில நிமிடங்கள் கவனித்து வந்தீர்களானால் கோபம் வராது வந்தாலும் அடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் கோபத்தை கட்டுப்படுத்த தியானம் சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஜூலை 31.



விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம்  ஜூலை 31.

 விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை தூக்கிலடப்பட்ட நாள்: 31-7-1805

இன்றைய திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1756-ம் அண்டு ஏப்ரல் மாதம்  17-ந்தேதி *தீர்ன் சின்னமலை* பிறந்தார்.

அவரின் தந்தை பெயர் ரத்னசாமி கவுண்டர், தாயார் பெயர் பெரியாத்தா. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.

தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.

கொங்கு நாடு அப்பொழுது மைசூர் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழை மக்களுக்கு விநியோகித்தார்.

அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வந்தது.

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரிட்டன் கிழக்கிந்தியக் கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார்.

இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.

டிசம்பர் 7, 1782-ல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார்.

மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.

குறிப்பாக 40 ஆயிரம் வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது.

நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-ல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார்.

ஏற்கெனவே ஏப்ரல் 18, 1792-ல் தான் வாங்கிய சிவன்மலை- பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன.

தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.

போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5-ம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

சின்னமலையின் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்தபட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர்.

கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், பத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர்.

எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.

1801-ல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.

சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் அவருடன் வீரமரணம் எய்தினர்.

சனி, 29 ஜூலை, 2017

உலக நண்பர்கள் தினம் ஆகஸ்டு மாத முதல் ஞாயிறு.


உலக நண்பர்கள் தினம் ஆகஸ்டு மாத முதல் ஞாயிறு.

உலக நண்பர்கள் தினம் (International Friendship Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து மாத முதல் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கள் நண்பர்களுடன் நேரத்தைச் செலவழிப்பதுடன் தங்கள் அன்பைத் தெரிவிக்கும் விதமாக பூக்கள், வாழ்த்தட்டைகள், கங்கணக் கயிறுகளை பரிமாறிக் கொள்கின்றனர்.
வரலாறு
1935ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் நாடாளுமன்றம், காங்கிரசு, ஆகத்தின் முதல் ஞாயிறை தேசிய நண்பர்கள் தினமாக அறிவித்தது. அன்று முதல், தேசிய நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுவது ஓர் வருடாந்திர நிகழ்வாக மாறியது.
இதனைப் பின்பற்றி உலகின் பல நாடுகளும் நண்பர்களுக்காக ஒருநாளை ஒதுக்கி கொண்டாடி வருகின்றன. 1997ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் வின்னி த பூ என்ற பொம்மை கரடியை உலகின் நட்பு தூதராக அறிவித்தது.


உலக நண்பர்கள் தினம்- சிறப்பு பார்வை

நட்பு ஒரு தும்மல் மாதிரி எப்ப வரும்னு தெரியாது சில பேருக்கும் அது நம்மையும் அறியாமல் அது நம்மை தொற்றிகொள்ளும் ஒரு ஆனந்த கூத்தாட்டம். தும்மல் ஆனந்த கூத்தாட்டமா என்ன ரவின்னு கேட்பவர்களுக்கு தும்மல் அடிக்கடி வந்தால் கஷ்டம் ஆனால் ஒவ்வொரு முறை தும்மின பிறகு உங்களுக்கு கிடைக்கும் பாருங்கள் ஒரு புத்துணர்ச்சி அது ஆயிரம் குற்றாலத்தில் குளித்ததற்க்கு சமம். ஆம் ஒரு தும்மலில் வாய் மற்றும் வயிற்று பகுதியில் இருக்கும் அத்தனை கெட்ட பேக்டீரியாவும் அப்படியே சம்மர் சால்ட் அடித்து வெளியே வரும். அது போக இதயத்துக்கு நம் உடம்பில் இனைந்தத ஒரு சி பி ஆர். ஒவ்வொரு தும்மலும் மைல்ட் பிளாக்கை எடுக்க உதவும் என்பது விஞ்சான கருத்து.
பெண் ஒரு ஆணிடம் கொள்ளும் நட்பு அப்பாபா அது ஒரு புரியாத பொக்கிஷம். எத்தனை பேர் அனுபவித்து இருக்கிறார்கள் என்று தெரியாது நான் அதை அன்றும் இன்றும் என்றும் அனுபவித்து இருக்கிறேன். அது அப்பா அம்மா, அண்ணா தம்பி, காதலன் காதலி, கணவன் மனைவி அதற்க்கு மேல் உள்ள ஒரு அப்பாற்பட்ட அனுபவம். ஆனால் நட்பு பல சமயங்களில் மாறுபடுகிறது என கூறுபவர்கள் உண்மையில் அது வெளியே மட்டும் தானே தவிர உள்ளே இருக்கும் நட்பில் அல்ல. பெண்ணுக்கு நல்ல நண்பர் ஒரு இரண்டு பேர் கிடைத்து விட்டால் போதும் அவள் மிக பாக்கியமானவள் ஆனால் இதற்க்கு எந்த பருவம் என்பது தேவையில்லை பள்ளி காலத்திலும் இருக்கலாம், பையன் காலேஜ் போகும் பருவத்திலும் இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல ஆணாக அமைய அவனுக்கு சரியாக காதல், காமம் இது தெரிவதற்க்கு முன் ஒரு நல்ல பெண் நட்பு கிடைத்துவிட்டால் அவனை பத்து அம்மா திருத்துவதற்க்கு சமம். பெற்றொற்களும், சுற்றத்தார்களும் தான் ஒரு பெண் ஒரு ஆண் கண்டிப்பாக அவர்கள் தான் இவர்கள் என எண்ணி இவர்களீன் நட்பை முளைக்கும் முன்பே பிடுங்கிவிடுகின்றனர்.
நட்புக்கு அடிக்கடி சோதனை பெண்களுக்குத்தான். ஆம் ஒரு ஆண் பிறந்தததில் இருந்து ஒரு பையனிடம் நட்பு தடையில்லாமல் போய்கிட்டே இருக்கும் ஆனால் அதே ஒரு பெண்ணுக்கு பல வகையில் தடங்கல். பெண் வயதுக்கு வரும்போது ஒரு கட், அப்புறம் கல்யான சமயத்தில், அப்புறம் குழந்தை பிறந்து அவர்கள் பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்லும் சமயத்தில் இன்னுமொருமுறை என்று பல ஸ்டேஜ்கள். கல்யானம் ஆன பெண்களுக்கு ஆண் நட்பு கன்டினியூ செய்யாமல் இருப்பதற்கு காரணம் அவளின் அரேன்ஞ் மேரேஜ். பொண்ணுக்கு கல்யானம் நல்லபடியா ஆனா போதும்னு அப்பா அம்மா நிறைய பொய்யை கூறி என் பொண்ணுக்கு காலேஜ் வீடு இதை இரண்டை தவிர வேறு ஒன்னும் தெரியாதுன்னு சொல்லிட்டு பிரன்டு கிரன்டு எல்லாம் கட் பண்ணிடு உன் நல்லதுக்கு தான் இதை சொல்றேன் கேட்டுக்கோனு அப்படியே வெளியுலகத்திற்க்கு டாடா பை பை.
ஆனால் ஆண் தன் நண்பர்களை விட்டு கொடுக்கவே மாட்டார்கள். இதன் நன்கு உணர்ந்து கல்யாணத்திற்க்கு பிறகு ஜாடை மாடையா பேசி பேசி நண்பர்களை ஒதுக்க முயல்வார்கள். அப்போது தான் பிரச்சினை அவன் வீட்டுக்கு தெரியாமல் நண்பர்களை சந்திக்க செல்லுவான் அப்போது தான் பிரச்சினை ஆரம்பம். எனக்கு தெரிந்து பல குடும்பங்களில் கள்ள காதலை விட இந்த புருஷன் பிரன்ட்ஸ் பிரச்சினை தான் பிரதானம்.
நட்பின் இலக்கணம் என்னைக்கேட்டால் நம்பிக்கை தான். ஆம் இதை குறையாத டெபாஸிட்டாக வைக்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஒரு ஆண் இன்னொரு ஆண் நண்பனிடம் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டாலும் அதை இன்னொரு நண்பன் ரசிப்பான் அல்லது மச்சான் கொஞ்சம் பார்த்து நடந்துக்கோடா உன் நல்லதுக்கு தான் சொல்றேன்னு சொல்லுவான். நட்புக்கு சிட்டி, கிராமம் என எந்த ஒரு பாகுபாடும் கிடையாது. சிட்டியில நல்ல நண்பியை நடு வழியில் பார்த்து விட்டால் எந்த ஒரு டீக்கடையிலும் கண்னாடி கிளாஸில் கூட இரண்டு பேர் அவங்க கொடுக்கும் கொஞ்சமான டீ காஃபியை வாயால் உறிஞ்சி குடிக்கும் காட்சியை நான் பர்த்திருக் கிறேன். அதே சமயம் பெண் நட்பு என்றால் காஃபி டேவில் மட்டும் தான் என்றி நினைத்தால் அது அவர்களின் ஈகோவைத்தான் காட்டுமே தவிர கன்னியத்தை அல்ல. அதே மாதிரி கிராமத்தில் கூட மிக அதிகம் குளிக்கும் குளமாகட்டும், தரை டிக்கடில் படம் பார்க்கும் டூரிங் தியேட்டர் ஆகட்டும் நட்பு பாவாடை சட்டை காலத்தில் இருந்து பாம்படம் போடும் வரை அதையும் நான் பார்த்திருகிறேன்.
அதனால தான் மனைவிமார்கள் எங்கே ஃப்ரீ ஸ்பேஸ் கிடைக்குதோ அப்பல்லாம் நம்ம கஸ்டடியில தான் இருக்கனும்னு நினைக்கிறது சகஜம், ஆனா நம்ம ஊட்டு ஐயாக்கள் எப்படா இங்கிருந்து எஸ்கேப் ஆகி மசசான் மாமன் பிரன்ட்ஸோடு கடலை போடலாம்னு சரியான பிட்டை போட்டு எஸ் ஆகிருவாங்க……… அதனாலயே பாதி பெண்கள் சரி ஆன்லைன்ல நட்பை தேடுவோம்னு வந்து ரொம்ப கஷ்டபட்டு சில பேரை லைன் அப் பண்ணி நட்பை வளர்த்து கொள்ளுவார்கள். தன்னை அப்பா அம்மா புருஷன் கூட கேட்டிருகுக்கமாட்டான் சாப்டியான்னு ஆனா இங்கே கண்ணியமிக்க நண்பர்கள் ஹலோ குட்மார்னிங், சாப்டாச்சா என்ன கதைன்னு அக்கறையா கேட்கும் போது மாமியாரின் சிக்ஸர் கூட சிக் பீ டால் மாதிரி சின்னதாயிடும்.
நல்ல நண்பர்கள் பேசி கொண்டிருக்கும் போது ஏதாவது கரென்ட் கட்டாகி போச்சு இல்லைனா லாக்கவுட் அகிடுச்சுனா மறு நாள் அவங்க வர்ற வரைக்கும் நம்ம பெண் நண்பர்கள் தவிப்பாங்க பாருங்க பிளஸ் டூ எக்ஸாம் டைம்ல கூட அவ்வளவு டென்ஷன் ஆகிருக்க மாட்டாங்க. அந்த பதட்டம், வீட்டீல் இருக்கும் எல்லோரும் எங்கோ பூகம்பம் வந்தா லைட்டா அடுமே நம்ம பிளாட்டும் அந்த மாதிரி ஒரு ஸ்மால் இம்பாக்ட் இருக்கும். நம்ம பசங்க மட்டும் என்ன நல்ல பெண் நண்பர்களுடன் அடிக்கடி ஏதாவ்து அண்டை போட்டு போடீ நீயும் உன் பிரன்ட்ஷிப்பும்னு லாக் அவுட் பண்ணிட்டு கூலா பீர் கிடைக்குமான்னு போயிடுவாங்க. ஆனால் மறு நாள் லாகின் பன்னும் போது இஷ்ட தெய்வம் எல்லாத்தையும் வேண்டிகிட்டு வந்து ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரி ஹலோ குட்மார்னிங்னு நம்ம மானஸ்தன் சொல்லுவாங்க பாருங்க அங்க நிக்கிறான் நம்ம ஆண் நண்பன்.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை, நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாயன்புக்குப் பிறகு உலகில் உள்ள எல்லா உறவுகளை விடவும் நட்பு தான் உயர்ந்ததாக மதிக்கப்பட்டு வருகிறது. உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது. இக்காலத்திலும் நட்பினை கவுரவப்படுத்துவதில் பலரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நட்பினை பாராட்டுவதற்காக உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கால போக்கில் தங்களை விட்டு பிரிந்து சென்று வேறு எங்கேயோ வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்களையும் நினைவு கூறும் தினமாகவும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில், உலகம் முழுவதும் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த நாள் ஞாபகம்
உலகில் சின்ன தீவுகளில் வசிப்பவர்களும் சாதி, மத பாகுபாடு இன்றி அன்பின் அடையாளமாக நண்பர்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர். வயதானாலும் நட்புக்கு என்றும் வயது இல்லை என்று கூறி அந்த நாள் பழகிய நண்பர்களை இந்நாளில் தொடர்பு கொண்டு, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே… என்று ஆட்டம் போடும் நாளாகவும் இந்த நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஏற்கனவே உயிருக்கு உயிராக நண்பர்களாக பழகி வருபவர்கள் கூட தங்கள் நட்பை பலப்படுத்திக்கொள்ள, தங்கள் அன்பை வெளிப்படுத்த நண்பர்கள் கையில் நட்பு கயிற்றை (பிரண்ட்ஷிப் பேண்ட்) கட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள்.
எஸ்.எம்.எஸ். மூலம்…
மேலும் அவர்கள் நண்பர்கள் தினத்திற்காக கடைகளில் விற்கப்படும் விசேஷமான வாழ்த்து அட்டைகளை வாங்கி நண்பர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். தொலைத்தூரத்தில் இருப்பவர்கள் தங்கள் செல்போன் மூலம் நண்பர்களை தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தும், செல்போன்களில் இருந்து எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியும் தங்கள் நட்பை உறுதி செய்யும் தினமாக இந்த நாளை பயன்படுத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
நண்பர்களுக்கு வாழ்த்து
விலை உயர்ந்த பொருட்கள், வித விதமான பரிசுகள், வாட்சுகள், புத்தகங்கள் ஆகியவற்றை தங்கள் அன்பின் அடையாளமாக நண்பர்களுக்கு பரிசளிப்பார்கள். இதற்காக ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் சென்னையில் உள்ள முக்கிய ஷாப்பிங் கடைகளில் நேற்று முகாமிட்டு தங்கள் நண்பர்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்யும் காட்சிகளை காண முடிந்தது.
பெரும்பான நண்பர்கள் ரோஜா மலரை பரிசளித்து வாழ்த்து கூறுவதே வழக்கமாக கொண்டு உள்ளனர். எல்லாவற்றையும் விட இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையிலே நண்பர்களை தொடர்பு கொண்டு வாழ்த்து கூறுவதே சிறந்த பரிசாக பலரும் கருதுகின்றனர்.
கைகளை குலுக்கி…
இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்றே நண்பர்கள் தினத்தை கொண்டாடிய காட்சிகளை Viagra online காண முடிந்தது. அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கியும், கட்டிப்பிடித்தும் தங்கள் அன்பை தெரிவித்துக்கொண்டனர். மேலும் பலர் தங்கள் நண்பர்களுக்கு அழகிய பரிசுகள் அளித்தும் தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை, நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாயன்புக்குப் பிறகு உலகில் உள்ள எல்லா உறவுகளை விடவும் நட்பு தான் உயர்ந்ததாக மதிக்கப்பட்டு வருகிறது. உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது. இக்காலத்திலும் நட்பினை கவுரவப்படுத்துவதில் பலரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய நாகரீக யுகத்தில், `மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்தான்’ என்று சொல்லி நட்பினை நண்பர்கள் கவுரவப்படுத்தி வருகிறார்கள். அந்த காலம் முதல் இந்த காலம் வரை நட்பை மையமாக வைத்து பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இத்தகைய நட்பினை பாராட்டுவதற்காக உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கால போக்கில் தங்களை விட்டு பிரிந்து சென்று வேறு எங்கேயோ வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்களையும் நினைவு கூறும் தினமாகவும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில், உலகம் முழுவதும் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த நாள் ஞாபகம்
உலகில் சின்ன தீவுகளில் வசிப்பவர்களும் சாதி, மத பாகுபாடு இன்றி அன்பின் அடையாளமாக நண்பர்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர். வயதானாலும் நட்புக்கு என்றும் வயது இல்லை என்று கூறி அந்த நாள் பழகிய நண்பர்களை இந்நாளில் தொடர்பு கொண்டு, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே… என்று ஆட்டம் போடும் நாளாகவும் இந்த நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஏற்கனவே உயிருக்கு உயிராக நண்பர்களாக பழகி வருபவர்கள் கூட தங்கள் நட்பை பலப்படுத்திக்கொள்ள, தங்கள் அன்பை வெளிப்படுத்த நண்பர்கள் கையில் நட்பு கயிற்றை (பிரண்ட்ஷிப் பேண்ட்) கட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள்.
எஸ்.எம்.எஸ். மூலம்…
மேலும் அவர்கள் நண்பர்கள் தினத்திற்காக கடைகளில் விற்கப்படும் விசேஷமான வாழ்த்து அட்டைகளை வாங்கி நண்பர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். தொலைத்தூரத்தில் இருப்பவர்கள் தங்கள் செல்போன் மூலம் நண்பர்களை தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தும், செல்போன்களில் இருந்து எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியும் தங்கள் நட்பை உறுதி செய்யும் தினமாக இந்த நாளை பயன்படுத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
நண்பர்களுக்கு வாழ்த்து
விலை உயர்ந்த பொருட்கள், வித விதமான பரிசுகள், வாட்சுகள், புத்தகங்கள் ஆகியவற்றை தங்கள் அன்பின் அடையாளமாக நண்பர்களுக்கு பரிசளிப்பார்கள். இதற்காக ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் சென்னையில் உள்ள முக்கிய ஷாப்பிங் கடைகளில் நேற்று முகாமிட்டு தங்கள் நண்பர்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்யும் காட்சிகளை காண முடிந்தது.
பெரும்பான நண்பர்கள் ரோஜா மலரை பரிசளித்து வாழ்த்து கூறுவதே வழக்கமாக கொண்டு உள்ளனர். எல்லாவற்றையும் விட இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையிலே நண்பர்களை தொடர்பு கொண்டு வாழ்த்து கூறுவதே சிறந்த பரிசாக பலரும் கருதுகின்றனர்.
கைகளை குலுக்கி…
இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்றே நண்பர்கள் தினத்தை கொண்டாடிய காட்சிகளை காண முடிந்தது. அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கியும், கட்டிப்பிடித்தும் தங்கள் அன்பை தெரிவித்துக்கொண்டனர். மேலும் பலர் தங்கள் நண்பர்களுக்கு அழகிய பரிசுகள் அளித்தும் தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.

வெள்ளி, 28 ஜூலை, 2017

உலக புலிகள் தினம் ஜுலை 29.



உலக புலிகள் தினம் ஜுலை 29.

உலகப் புலி நாள் என்பது புலி வளம்பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் ஜூலை 29இல் கொண்டாடப்படும் நாளாகும். இந்நாள் 2010இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த புலிக் குழுமலில் உருவாக்கப்பட்டது.  இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி, புலி வளம்பேணும் சிக்கல்கள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்தி அவர்களது ஆதரவைப் பெறுவதாகும்.



உலக புலிகள் தினம் இன்று (ஜுலை 29) . இந்தியாவின் தேசிய விலங்கான புலியைப் பற்றி இந்த நாளில் அறிந்து கொள்வோம்.

20 ம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளிலும் விரவிப் பரவியிருந்த புலிகள், மனிதர்களை அதிகம் கவரும் விலங்கினமாக இருந்தது; இருக்கிறது. ஆனால் இன்று அதே மனிதர்களின் பேராசையினால் அருகிவிட்ட விலங்கினங்கள் பட்டியலில் புலி இனம் இடம்பெற்றுவிட்டது சோகம்.
தனித்துவமான முகம், கவர்ந்திழுக்கும் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிற கோடுகள் என பூனை இனங்களின் பெரிய விலங்காக விளங்குவது புலி இனம். இந்த இனம் அருகி கொண்டே வருவதை கண்ட விலங்கின ஆதரவாளர்கள் ஒன்று கூடி அதன் அழிவை தடுத்து நிறுத்துவதற்கும், புலிகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டனர். அதன் விளைவாக, 2010 ம் ஆண்டில் ஜுலை 29 ம் தேதியை உலக புலிகள் தினமாக அறிவித்தனர்.

பல்லுயிர் பெருக்கத்தை தக்க வைப்பதற்கும், காடுகளை அழிவில் இருந்து காப்பதற்கும் புலிகளின் எண்ணிக்கை சீராக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் மேய்ச்சல் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து காடுகளின் வளம் குன்றிவிடும். கானகத்தின் காவலனாக திகழும் புலி இனங்கள் அதன் தோலுக்காகவும், மருத்துவ பயன்பாட்டிற்காகவும் அதிக அளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக பல ஆயிரங்களாக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது சில ஆயிரங்களுக்குள் சுருங்கிவிட்டது.
இருட்டிலும் ஊடுருவி கண்காணிக்கும் கண்கள், வலிமையான நகங்கள், 300 கிலோவுக்கும் அதிகமான எடை என்ற சிறப்புகள் கொண்ட புலி இனம், பூனைக் குடும்பத்தை சேர்ந்தது. பாலூட்டி வகையை சேர்ந்த புலி, ஒரே நேரத்தில் 4 குட்டிகள் வரை ஈன்றெடுக்கும். நூற்றுக்கணக்கான வரிகளை தனது உடலில் கொண்டிருக்கும் புலி, மணிக்கு 40 மைல் தொலைவிற்கு ஓடும் வலிமை வாய்ந்தது.
300 கிராம் அளவு கொண்ட மூளையின் விரைவான செயல்பாட்டால் நொடிக்கு 30 அடி தூரம்வரை பாய்ந்து பலமான விலங்குகளையும் வேட்டையாடும் திறமை படைத்தது. புலி இனத்தில் பெரியது, சைபீரிய புலி. சிறியது, பாலி புலி. இந்தோனேஷியாவின் பாலி தீவில் இவை காணப்பட்டதால் இதற்கு பாலி புலி என பெயர் வந்தது. நீரில் நன்கு நீந்தத் தெரிந்த புலி, மிக நீளமான ஆற்றை கூட எளிதில் நீந்திக் கடந்து விடும் வலிமை கொண்டது என்பது ஆச்சர்யமான தகவல்.


வங்கப் புலி, இந்திய சீனப் புலி, சைபீரியப் புலி, சுமத்திரா புலி, மலயான் புலி, தென் சீனப் புலி ஆகியன இன்றளவும் காணப்படும் புலி இனங்கள் ஆகும். முற்றிலுமாக அழிந்துவிட்ட புலி இனங்களான பாலி புலி, ஜாவா புலி, கேஸ்பியன் புலி ஆகியவற்றைப் போலவே தற்போது வாழ்ந்துவரும் புலி இனங்களும் அருகி வரும் இனங்களாக உள்ளன. உலகில் உள்ள மொத்த புலிகளில் 70% புலிகளை கொண்டது இந்தியா.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் செயல்படுத்தி வரும் புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் பயனாக 2013 ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் 2,226 புலிகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இங்குதான் புலிகள் அதிக அளவு கொல்லப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் உள்ளது. 2010 ம் ஆண்டு முதல் 2014 இடையேயான 4 ஆண்டுகள் காலத்தில் மட்டும் 128 புலிகள் கொல்லப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 49 புலிகள் சரணாலயங்கள் உள்ளன.
இந்தியாவிற்கு அடுத்து அதிகளவு புலிகள் உள்ள நாடு ரஷ்யா (433). இவை தவிர இந்தோனேஷியாவில் 371, மலேசியாவில் 250, நேபாளத்தில் 198, தாய்லாந்தில் 189, வங்கதேசத்தில் 106, பூடானில் 103, சீனாவில் 7, வியட்நாமில் 5, லாவோஸ் நாட்டில் அதிர்ச்சி தரும் விதத்தில் 2 என புலிகள் எண்ணிக்கை இருந்து வருகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் சமீப காலமாக அழிந்து வரும் புலிகள் இனம், இந்தியாவில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது மகிழ்ச்சியான செய்தி.தமிழகத்தில் புலிகள் எண்ணிக்கை 225 முதல் 230 க்குள் இருக்கலாம் என்கிறது புள்ளிவிவரம். இது கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்த எண்ணிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மனிதர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் கைவிரல் ரேகை வித்தியாசப்படுத்தி காட்டுவது போல், புலிகளின் கால் விரல் ரேகைகள் ஒவ்வொரு புலிக்கும் இடையேயும் வித்தியாசப்பட்டிருக்கும். புலியின் வேகத்தை போலவே அதன் உணவும் அதிகமானதாக இருக்கும். ஒரே நேரத்தில் சுமார் 40 கிலோ இறைச்சியை உண்ணும் தன்மை கொண்டவை புலிகள்.
மனிதர்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு சுத்தமான காற்றும் நீரும் அவசியம். அவை இரண்டையும் தருவது காடுகளே. அந்த காடுகளைக் காக்க உதவும் புலிகளை நாம் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும்.நன்றி விகடன்.

வியாழன், 27 ஜூலை, 2017

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் ( World Nature Conservation Day ) ஜூலை 28 .


உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் ( World Nature Conservation Day ) ஜூலை 28 .

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் ( World Nature Conservation Day ) ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.


உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் ஜூலை 28.
(World Nature Conservation Day) july 28.
உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
---
இயற்கை – இது நமக்குக் கிடைத்த வரம், அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் இயற்கைக்கு மனிதனைப் போன்று சுயநலமில்லை. அனைத்திலும் பொதுநலம் பார்க்கும் இயற்கையானது நமக்கு தூய காற்றையும், நீரையும் வழங்குவதோடு உணவு, உடை, உறைவிடத்திற்குத் தேவையான அத்தனை மூலப்பொருட்களையும் நமக்கு வழங்கி நம்மை வாழ்விக்கிறது. இவ்வாறு நமக்கு உதவி வரும் இயற்கையை நாம் காக்கிறோமா? என்றால் இல்லை.
இந்த விசயத்தில் கல்வி நிறுவனங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இயற்கையின் அவசியத்தை உணர்த்தும் சுற்றுச்சூழல் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறதா? இதனைச் சரியாகக் கற்றுக் கொடுக்கிறதா? என்றால் அது கேள்விக்குறிதான். தற்போது கணினியும், ஆடம்பரத்திற்குத் தேவையான உபகரணங்களும் பெருகி உள்ளதால் இதனைப் பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமே என்று எத்தனை பேர் அறிந்து செயல்படுகிறோம் என்று தெரியவில்லை.
இயற்கை அழிந்தும், சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் பாதிப்படைந்தும் வருவதால் பாதிக்கப்படுவது நம்மைச் சார்ந்தவர்களும், எதிர்காலச் சந்ததியினருமே.
சுற்றுச்சூழல் கல்வி:
ஐம்பூதங்கள் எனப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்றவை, உலகின் உயிர்கள் நிலைத்தும், நீடித்தும் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கித் தருகிறது. 19ம் நூற்றாண்டிலும், இதற்குப் பிறகு நடந்த உலகப் போர்கள், தொழிற்புரட்சி, பொருளாதாரத்திலும் இதன் வளர்ச்சியிலும் ஏற்பட்ட பின்னடைவுகள் போன்ற நிகழ்வுகள், உலக நாடுகளை மிகவும் பாதிப்படையச் செய்தது. இதனால் அவர்கள் அனைவரும் காடுகள், கனிம வளங்கள், நீர், நிலம், காற்று என்று இயற்கை வளங்கள் ஒன்றையும் விடாமல் சுரண்டினர்.
இதன் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நெருக்கடிக்குள்ளாகி உள்ளன. தற்போது அமில மழை, பாலைவனமாதல், உலக வெப்பநிலை மாறுபாடு, ஓசோன் படலம் பாதிப்பு, கதிரியக்கம், உயிர்களின் அழிவு போன்றவை மனிதர்களுக்குப் பெரும் சோதனையாகிவிட்டன. மேற்சொன்ன நிலையை மாற்றவும், ஆய்வுகள் நடத்தி தீர்வு காணவும் எண்ணிய ஐ.நா. சபை 1992-ல் சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாட்டை ஏற்பாடு செய்தது. இம்மாநாட்டில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டது. இதில் சுற்றுச்சூழல் கல்வியை எல்லா நிலைகளிலும் கொண்டுவர வேண்டும்’ என்று உறுதி எடுக்கப்பட்டது. இதற்கு “அஜெண்டா-21” என்று பெயரிடப்பட்டது. இதன் மூலம் கல்வி, பொது விழிப்புணர்வுப் பயிற்சி போன்றவை சுற்றுச் சூழலை மேம்படுத்த வேண்டிய காரணிகளாகக் கொள்ள வேண்டும் என்று முடிவானது. மேலும் சுற்றுச்சூழல் கல்வி , கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம்:
நேற்றைய இயற்கை அழிவிலிருந்து உலகினை மீட்டெடுக்கவும், இன்றைய இயற்கை அழிவிலிருந்து உலகைப் பாதுகாக்கவும், நாளைய அல்லது எதிர்கால உலகில், இயற்கை வளங்களினால் மனித சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மைகளில் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் சமாளிக்கவும், ஆக்கப்பூர்வமான சுற்றுச்சூழல் கல்வி தேவைப்படுகிறது. இக்கல்வியின் மூலம் இருக்கும் வளங்களைக் கொண்டு, முன்னேற்றத்திற்கான வழிவகைகளைச் சிந்திப்பதும், அவற்றைச் செயல்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.
கணிதம், அறிவியல், சுற்றுச்சூழல் கல்வி என இம்மூன்றையும் ஒரே கற்றல் செயலாக இணைப்பதன் மூலம் கல்விப் பணியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இயலும். அன்றாட வாழ்க்கையில் இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவதால் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்துத் தடத்திலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க இம்முறை உதவும் என சுற்றுச்சூழல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இதனை நடைமுறைப்படுத்தும் அம்சங்களையும் கல்வியில் புகுத்தியுள்ளனர். ஆகவேதான் சுற்றுச்சூழல் கல்வி மிகவும் அவசியமாகிறது.
சுற்றுச்சூழல் மாசும் இதனால் ஏற்படும் பாதிப்புகளும்:
சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான காரணங்களை ஆராய்ந்தால், மக்கள் தொகைப் பெருக்கம், நவீன அறிவியல் வளர்ச்சியினால் குறுகிய கால வேளாண்மை, தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களின் உருவாக்கம், போக்குவரத்தினால் ஏற்படும் மாறுதல்கள் போன்றவற்றால் சுற்றுச்சூழல் முக்கிய அங்கங்களாகிய இயற்கை வளங்கள் (நிலம்,நீர்,காற்று) பாதிக்கப்பட்டன. இப்பாதிப்பாதிப்புக்குப் பெயர் தான் ‘சுற்றுச்சூழல் மாசு’ என்கிறோம். இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் மாசிற்கு உள்ளாகியுள்ளனர்.
‘மாசு’ என்னும் சொல் இலத்தீன் மொழியில் ‘பொலுட்டோனியம்’ என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவானது. இச்சொல்லை முதலில் 1966-ம் ஆண்டு ‘ஹெனி’ என்பவரே கண்டறிந்து அறிமுகம் செய்தார்.
காற்று மாசு:
மாசு என்று கூறினாலே முதலில் நம் நினைவுக்கு வருவது காற்றில் கலக்கும் மாசு தான். ஏனெனேன்றால் நம் வாழ்வாதாரமே சுவாசத்தில்தான்

புதன், 26 ஜூலை, 2017

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு தினம் ஜூலை 27 , 2015 .



டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு தினம் ஜூலை 27 , 2015 .

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் ( அக்டோபர் 15 , 1931 - ஜூலை 27 , 2015 ) பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் , என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய
அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் அவர்களை பின்பற்றினார் என்றும் கூறினர்.
கலாம், இந்தியாவின் முக்கியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாட்னா, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றியதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.
கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார்.
தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்புப் பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார். அவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக,
இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, "நான் என்ன தர முடியும்" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது, கருணை மனுக்களின் மீது முடிவேதும் எடுக்காமல் இருந்த காரணத்தால், குற்றவாளிகளின் மீதான நடவடிக்கைகள் கால தாமதம் ஆகியதற்காக, விமர்சிக்கப்பட்டுள்ளார்.

தொடக்க வாழ்க்கையும் கல்வியும்..

கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில், ஒரு படகுச் சொந்தக்காரரும்
மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் அவர்களுக்கும், இல்லத்தரசி ஆஷியம்மா அவர்களுக்கும், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில், மகனாகப் பிறந்தார். அவர் வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர் ஆனதால், இளம் வயதிலேயே, அவருடைய குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்காக, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். அவர் பல மத சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர் என்றாலும், ஒரு மத வழக்கத்தையே பின்பற்றினார். பள்ளி முடிந்ததும், கலாம் அவரது தந்தையின் வருமானத்திற்குப் பங்களிக்கும் பொருட்டு, செய்தித்தாள்கள் விநியோகத்தில் ஈடுபட்டார். தனது பள்ளிப்பருவத்தில், கலாம் சராசரி மதிப்பெண்களே பெற்றார். என்றாலும், பிரகாசமான மாணவனாகவும், கற்பதில் திடமான ஆர்வமும், படிப்பிற்காக, முக்கியமாக கணக்குப் பாடத்திற்காக, பல மணி நேரங்கள் செலவளிப்பவராகவும், அவர் சித்தரிக்கப்படுகிறார்.
இராமேசுவரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், கலாம் திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளன் கல்லூரியில் சேர்ந்து, 1954 ஆம் வருடத்தில், இயற்பியலில் பட்டம் பெற்றார். அந்த பட்டப் படிப்பின் இறுதியில் கலாமிற்கு இயற்பியலில் ஆர்வம் இல்லாது போனதால், பின்னாளில் இந்த நான்கு ஆண்டு படிப்பைக் குறித்து வருத்தப்பட்டார். அவர் 1955 ஆம் ஆண்டில், எம்.ஐ.டி சென்னையில் , விண்வெளி பொறியியல் படிப்பிற்காக, சென்னை சென்றார்.- அங்கு அவர் முதுகலை பட்டமும் பெற்றார். கலாம் பல புகழ்மிக்க முனைவர் பட்டங்கள் பெற்றிருந்தாலும், முறையான படிப்பை, எம்.ஐ.டி சென்னையில் படித்த முதுகலை பட்ட படிப்பைக் கொண்டு முடித்தார்.
கலாம் ஒரு உயர்தரத் திட்டத்திற்காக உழைத்துக் கொண்டிருந்த போது, கல்லூரி முதல்வர், அந்த திட்டத்தின் முன்னேற்றத்தைக் குறித்து மனக்குறை ஆனதோடு, இரண்டு நாட்களுக்குள் திட்டம் முடிக்கப்படவில்லை என்றால் அவருடைய கல்வி உதவித் தொகை நிறுத்தப்படும் என்று மிரட்டினார். அதனால் கலாம், ஓய்வு ஒழிவில்லாமல் அந்த திட்டத்திற்காக உழைத்து, திட்டத்தை உரிய காலத்தில் முடித்து, கல்லூரி தீனின் நன்மதிப்பை பெற்றார். பின்னர் அவர் "நான் உனக்கு அதிக பளு கொடுத்து எளிதில்லாத காலக்கெடுவை விதித்தேன்." என்று கூறினார்.

அறிவியல்ப்பணித்துறை..

சென்னை தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் 1960 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் முதன்மை அறிவியலாளராக சேர்ந்தார். கலாம் இந்திய இராணுவத்துக்காக ஒரு சிறிய
ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்து பணித்துறையை தொடங்கினார். இருப்பினும் அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்ந்தது குறித்து ஒரு வித மனக்குறையுடன் இருந்தார். புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த ஒரு குழுவின் (INCOSPAR) அங்கமாகவும் கலாம் இருந்தார். 1969 ஆம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுதல் வாகனம் (launcher) ( எஸ். எல். வி -III) திட்டத்தின் இயக்குனர் ஆனார். (எஸ். எல். வி-III) பாய்ச்சுதல் வாகனம் ரோகினி செயற்கைக்கோளை புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக 1980 ல் ஏவியது. கலாமின் வாழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்ததில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. கலாம் அவர்கள் எஸ்.எல்.வி திட்டத்தில் வேலை செய்ய தொடங்கியப் பிறகுதான் தன்னையே கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. கலாம் 1965 ல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் விரிவுப்படுத்தக்கூடிய வின்கலத்திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார். 1969 இல், கலாம் அரசாங்கத்தின் இசைவு பெற்று மேலும் பல பொறியாளர்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.
கலாம் ஐ.ஐ. டி குவஹாத்தி பொறியியல் மாணவர்களிடம் உரையாற்றுகிறார்.
1963–64 இல், அவர் நாசாவின் ஹாம்ப்டன் வர்ஜீனியாவில் லாங்க்லியின் ஆராய்ச்சி மையம், கிரீன்பெல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி மையம், மேரிலாண்ட் மற்றும் விர்ஜினியா கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வால்லோப்ஸ் விமான வசதி ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார். 1970 லிருந்து 1990 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் கலாம் போலார் எஸ். எல். வி மற்றும் எஸ். எல். வி-III திட்டங்களுக்காக முயற்சி மேற்கொண்டார். இரண்டு திட்டங்களும் வெற்றிகரமாக முடிந்தன.
கலாம் அணு ஆயுத வடிவமைப்பு, வளர்ச்சி, மற்றும் சோதனைத் தள முன்னேற்பாடு ஆகியவற்றில் பங்கேற்காதபோதிலும், நாட்டின் முதல் அணு ஆயுத சோதனையான
புன்னகைக்கும் புத்தன் திட்டத்தைக் காண்பதற்காக ராஜா ராமண்ணாவால் முனைய எறிகணை ஆய்வகத்தின் பதிலியாக அழைக்கப்பட்டார். 1970 இல், எஸ்.எல்.வி விண்வெளிக்கலனைப் பயன்படுத்தி ரோகினி - 1 விண்வெளியில் ஏவப்பட்டது இஸசுரோவின் சாதனை ஆகும். 1970 களில், கலாம் வெற்றிகரமான எஸ்.எல்.வி திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து எறிகணைத் உற்பத்திக்காக டெவில் செயல் திட்டம் (Project Devil) மற்றும் வாலியன்ட் செயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்களை இயக்கினார். மத்திய அமைச்சரவை மறுத்தபோதிலும் தலைவர் இந்திரா காந்தி தனது தன்னாற்றல் மூலம் கலாமின் கீழ் இயக்க உள்ள விண்வெளி திட்டங்களுக்கு மர்மமான நிதி ஒதுக்கினார். கலாம் நடு அமைச்சரவை இந்த விண்வெளி திட்டங்களின் உண்மையான தன்மையை மறைப்பதற்கு ஏற்கும்படி செய்வதில் தலைமைப்பங்கு வகித்தார். அவரது ஆராய்ச்சி மற்றும் கல்வி தலைமையால் அவருக்குக் கிடைத்த பெரும் வெற்றி மற்றும் மரியாதையால், 1980 களில், அவரை அரசாங்கம் தனது இயக்கத்தின் கீழ் ஒரு கூடுதல் ஏவுகணை திட்டத்தைத் துவக்க தூண்டியது. கலாம் மற்றும் முனைவர் வி.எஸ் அருணாச்சலம், உலோகவியல் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும் அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமனின் யோசனையைப் பின்பற்றி ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளின் தயாரிப்பில் ஈடுபட்டார்கள். ஆர்.வெங்கட்ராமன் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டப் (IGMDP) பணிக்காக 388 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய நடுவணரசின் ஒப்புதல் பெறுவதற்கும், கலாமை தலைமை நிர்வாகியாக்கவும் காரணமாக இருந்தார். அக்னி இடைநிலை தூர ஏவுகணை , ப்ரித்வி தந்திரோபாய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் பல ஏவுகணைகளை உருவாக்குவதில் ஏற்படும் தவறான நிர்வாகம், அதிக செலவு மற்றும் கால விரயம் பற்றி குறையாக பேசப்பட்டாலும் கலாம் இந்தத் திட்டத்தில் தலைமைப் பங்கு வகித்தார். ஜூலை 1992 முதல் டிசம்பர் 1999 வரை அவர் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். அவர் இந்த சமயத்தில் நடந்த பொக்ரான்- II அணு ஆயுத சோதனையில் தீவிர அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களித்தார். சோதனை கட்டத்தில் கலாம், ஆர் சிதம்பரத்துடன் சேர்ந்து தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். ஊடகங்கள் எடுத்த புகைப்படங்கள் கலாமை நாட்டின் உயர்மட்ட அணு அறிவியலாளராக உயர்த்திக்காட்டியது.
1998 இல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான மருத்துவர் சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் "கலாம், ராஜூ ஸ்டென்ட்" என பெயரிடப்பட்டது. 2012 இல் கிராமப்புறங்களில் உள்ள சுத்த வழிமுறைக்காக இவர்கள் வடிவமைத்த டேப்லெட் கணினி "கலாம், ராஜூ டேப்லெட்" என்று பெயரிடப்பட்டது.

குடியரசுத் தலைவர் பதவி.

அப்துல் கலாம் இந்தியாவின் பதினொன்றாவது குடியரசுத் தலைவராக, கே ஆர் நாராயணனுக்குப் பிறகு பணியாற்றினார். அவர் 2002-ல் நடந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் 107,366 வாக்குகளைப் பெற்ற இலட்சுமி சாகலை, 922,884 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் 25 ஜூலை 2002 முதல் 25 ஜூலை 2007 வரை பணியாற்றினார்.
10 சூன் 2002 ல் அப்பொழுது அதிகாரத்தில்
இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஜனாதிபதி பதவிக்கு கலாமை முன்மொழியப் போவதாக அறிவித்தது.
சமாஜ்வாடி கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் அவரை வேட்பாளராக ஆதரிப்பதாக அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி கலாமிற்கு தனது ஆதரவை அறிவித்த பின்னர், அப்போதைய ஜனாதிபதி கே ஆர் நாராயணன் இரண்டாவது முறையாக போட்டியிடாமல் கலாம் நாட்டின் 11 வது குடியரசுத் தலைவர் ஆவதற்கு களத்தை விட்டு வெளியேறினார்.
18 சூன் 2002 இல் கலாம், வாஜ்பாய் மற்றும் அவரது மூத்த அமைச்சரவை சகாக்களுடன் சேர்ந்து இந்திய பாராளுமன்றத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
15 ஜூலை 2002 ல் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாநிலங்கள் அவையுடன் பாராளுமன்றத்தில் ஊடகங்களின் கலாமிற்கு வெற்றியென்ற முடிவான கூற்றுடன் நடந்தது. வாக்குகள் எண்ணும் பணி ஜூலை 18 ம் தேதி நடைபெற்றது. கலாம் ஒரு தலை போட்டியில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் இந்தியக் குடியரசின் 11 ஆவது தலைவரானார். ஜூலை 25 ஆம் தேதியில் பதவியேற்ற பின்பு ராஷ்ட்ரபதி பவனுக்கு குடியேறினார். குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா கொடுத்து கௌரவிக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதி ஆவார். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1954) மற்றும் டாக்டர்
சாகிர் ஹுசைன் (1963) ஆகியோர் ஜனாதிபதி ஆவதற்கு முன் பாரத ரத்னா விருது பெற்றவர்கள். அவர் ராஷ்ட்ரபதி பவனை ஆக்ரமித்த முதல் விஞ்ஞானி மற்றும் மணமாகாதவர் ஆவார்.
ஜனாதிபதி காலத்தில்
விளாடிமிர் புடின் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோருடன் கலாம்
அவரின் ஜனாதிபதி காலத்தில், அவர் "மக்களின் ஜனாதிபதி" என்று அன்பாக அழைக்கப்பட்டார். அவர், ஆதாயம் தரும் பதவி மசோதாவை கையெழுத்திடுவதே தனது பதவி காலத்தில் எடுத்த கடினமான முடிவு என்று கூறுகிறார்.
21 இல் 20 கருணை மனுக்களை ஜனாதிபதியாக விசாரித்து முடிவெடுப்பதில் செயலற்றவர் என்று விமர்சிக்கப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் 72 வது சட்டத்தின் கீழ் மன்னிப்பு வழங்கல், இறப்பு தண்டனை வழங்கல் மற்றும் நிறுத்தல், மாற்று இறப்பு வரிசையில் குற்றவாளிகளின் மரண தண்டனையை நிகழ்த்தல் ஆகியவற்றை செயல்படுத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலாம் தனது 5 ஆண்டு பதவிக் காலத்தில், கற்பழிப்பு குற்றம் புரிந்த தனஞ்சாய் சட்டேர்ஜீயின் கருணை மனுவை தள்ளுபடி செய்து தூக்கிலிட ஆணை கொடுத்து ஒரே ஒரு தீர்மானமெடுத்தார். 20 மனுக்களில் மிக முக்கியமான காஷ்மீரி தீவிரவாதி அப்சல் குருவிற்கு அவர் டிசம்பர் 2001 ல் பாராளுமன்றத்தின் மீது நடத்திய தாக்குதலுக்காக 2004 ல் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. 20 அக்டோபர் 2006 ம் நாள் மரண தண்டனை நிறைவேற்ற வழங்கிய உத்தரவின் மீதான கருணை மனு நிலுவையில் வைக்கப்பட்டதால் அவர் மரண வரிசையில் தொடர்ந்து வைக்கப்பட்டார்.
20 சூன் 2007 ஆம் தேதியில், தனது பதவிக் காலத்தின் இறுதியில், 2007 ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றி நிச்சயமாக இருந்தால் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவர் பதவியில் நீடிக்க தனது சம்மதத்தைத் தெரிவித்தார். எனினும், இரண்டு நாட்கள் கழித்து எந்த அரசியல் செயல்பாடுகளிலிருந்தும் ராஷ்ட்ரபதி பவனை சம்பந்தப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். என்று கூறி மறுபடியும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்தார். அவருக்கு இடது சாரி,
சிவ சேனா மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் புதுப்பிக்கப்பட்ட ஆணை / ஆதரவு இல்லை.
24 ஜூலை 2012 , 12 வது குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டிலின் பதவிக் காலம் முடிவு பெரும் நிலையில், ஏப்ரலில் ஊடக அறிக்கைகள் இரண்டவது முறையாக கலாம் பரிந்துரைக்கப்படலாம் என்று கூறின. அந்த அறிக்கைக்குப் பிறகு, சமூக வலைப்பின்னல் தளங்கள் கலாம் வேட்பாளராக நிற்பதற்கு ஆதரவை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் செயல்பட்டன. திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள், தனது பரிந்துரையான கலாமை 2012 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்த ஆதரவு கொடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கூறியது. தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு முலாயம் சிங் யாதவ் மற்றும் மமதா பானெர்ஜி கலாமிற்கு தங்களது ஆதரவையும் அவரின் பெயரை முன்மொழியவும் ஆர்வம் தெரிவித்தனர். சம்மதம் தெரிவித்த சில நாட்களில் முலாயம் சிங்க் யாதவ் மமதா பானெர்ஜியை தனி ஆதரவாளராக்கி விட்டு பின்வாங்கினார். 18 சூன் 2012 ம் தேதியில் பல ஊகங்களுக்குப் பிறகு, கலாம் 2012 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டார்.

விமர்சனங்களும், சர்ச்சைகளும்.

போக்ரான் II இன் நம்பகமான மற்றும் உண்மை அறிக்கை பற்றிய பற்றாக்குறையால், ஒரு விஞ்ஞானியாக கலாமைச் சுற்றி சர்ச்சை உள்ளது. தள சோதனை இயக்குனர் கே சந்தானம் வெப்ப அணு ஆற்றல் குண்டு ஒரு தோல்வியுற்ற சோதனையென்றும் கலாமின் அறிக்கை தவறானதென்றும் விமர்சித்தார். எனினும் இந்த கூற்றை கலாமும், போக்ரான் II இன் முக்கிய கூட்டாளியான ஆர் சிதம்பரமும் மறுத்தனர்.

தனிநபர் தாக்குதல்கள்
அணுசக்தித் திட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய போதிலும், அணு அறிவியலில் கலாமிற்கு "அதிகாரம்" இல்லை என்று அவரின் பல சக பணியாளர்கள் கூறினர். ஹோமி சேத்னா என்ற இரசாயனப்பொறியாளர், அணு அறிவியல் மற்றும் அணு இயற்பியல் கட்டுரைகளை வெளியிட கலாமிற்கு எந்தப் பின்னணியும் இல்லை என்று விமர்சித்தார். கலாம் அணுப் பொறியியலில் இருந்து முற்றிலும் வேறுபட்ட விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். மேலும் அவரது சாதனைகளுக்காக பல பல்கலைக்கழகங்கள் வழங்கிய பட்டமும் அணுப் பொறியியலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் சேத்னா கூறினார். 1950 இல் கலாம் தனது கல்லூரிப் படிப்பில் மேம்பட்ட இயற்பியலில் தோல்வி அடைந்தார் என்றும் "அவருக்கு அணு இயற்பியல் பற்றி என்ன தெரியும்" என்றும் சேத்னா அவரது கடைசி தேசிய தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார். மேலும் அணு விஞ்ஞானி என்ற தேசிய அந்தஸ்து பெற ஜனாதிபதி பதவியை உபயோகிப்பதாகவும் கூறினார். மற்றவர்கள், இந்திய அணு சக்தி ஆலைகளில் கலாம் பணிபுரியவில்லையென்றும் ராஜா ராமண்ணா கீழ் முடிக்கப்பட்ட அணு ஆயுத வளர்ச்சியில் அவருக்கு பங்கு இல்லையென்றும் கூறினர். 1970 இல் எஸ். எல். வி திட்டத்தில் விண்வெளிப் பொறியாளராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்வதற்கு முன், 1980 முதல் திட்ட இயக்குநராகவும் இருந்தார் என்றும் சேத்னா முடித்தார். பெங்களூருவில் உள்ள பிரபல இந்திய அறிவியல் கழகம் , அறிவியல் சான்றிதழ்கள் இல்லாததால் கலாமின் விண்ணப்பத்தை நிராகரித்தது.
2008 இல் ஏவுகணை திட்டத்தில் ஏவுகணை கண்டுபிடிப்புகள் பற்றிய அவரின் சொந்தப் பங்களிப்பை இந்திய ஊடகங்கள் கேள்வியாக்கியது. கலாம் அக்னி, ப்ரித்வி மற்றும் ஆகாஷ் ஏவுகணை கண்டுபிடிப்பில் தனி புகழ் பெற்றிருந்தார். மேற்கண்ட எல்லாவற்றையும் பிற விஞ்ஞானிகள் ஆராய்ந்து, வடிவமைத்து, உருவாக்கியபோது கலாம் அதற்கான நிதி மற்றும் பல ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் என்ற முறையில் கலாமிற்கு நிறைய புகழ் சென்றடைந்தன. மேம்பட்ட கணினி ஆய்வகத்தின் முன்னாள் இயக்குநர் மற்றும் அக்னி ஏவுகணை முன்னாள் இயக்குநரான அகர்வால் அக்னி ஏவுகணையின் வெற்றிகரமான வடிவமைப்புக்கு உண்மையான காரணமாக இருந்தார் என்று கருதப்படுகிறது. கலாம் அவரது சொந்த வாழ்க்கை வரலாற்றில், அக்னி ஏவுகணை கண்டுபிடிப்பில் முன்னாள் சென்னை தொழில்நுட்ப நிறுவன மாணவரான அகர்வாலின் முக்கியப் பங்கை புகழ்ந்து எழுதினார். பிரித்வி திட்டத்தில் சுந்தரம் என்பவரை நிழல் மூளை என்றும் திரிசூல் ஏவுகணைத் திட்டத்தில் மோகனை என்பவரையும் புகழ்ந்துள்ளார். 2006 இல் பிரபல மூத்த ஊடக நிருபர் பிரபுல் பிடவை ஒரு செய்தித்தாளில் (THE DAILY STAR), முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அங்கீகரிக்கப்பட்டு டாக்டர் அப்துல் கலாம் இயக்கத்தின் கீழ் நிறுவப்பட்ட இரண்டு விண்வெளித் திட்டங்கள் "மொத்தத் தோல்வி" என்று எழுதியிருந்தார். 1980 களில் இந்தத் திட்டங்கள் இரண்டும் இந்திய இராணுவம் கொடுத்த அழுத்தத்தினால் ரத்து செய்யப்பட்டன.
உள்ளூர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் கூடங்குளம் அணு சக்தி ஆலை அமைப்பதில் ஆதரவு தந்து தனது நிலைபாட்டைக் கூறிய கலாமை மக்கள் குழுவினர் குறை கூறினர். அவர்கள் கலாம் ஒரு அணு சக்தி சார்பு விஞ்ஞானி என்றும் பாதுகாப்பு பற்றிய அவரது உறுதிமொழியை ஏற்க விருப்பமில்லாமலும் அவரது வரவை விரோதமாகவும் கருதினர்.
அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் தனி நபர் சோதனை
29 செப்டம்பர் 2011 இல் நியூ யார்க்கின் கென்னெடி விமான நிலையத்தில் விமானம் ஏறும் போது தனி நபர் சோதனைக்கு உட்பட்டார். அமெரிக்கப் பாதுகாப்பு நெறி முறைகளின் கீழ் பாதுகாப்பு சோதனை நடைமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட முக்கிய பிரமுகர்கள் வகையின் கீழ் அவர் வரவில்லை என்று "தனித் திரையிடப்பட்ட" சோதனைக்குட்பட்டார். இதற்கு விமானக் குழுவிலிருந்து எதிர்ப்பு இருந்த போதிலும், "தனித் திரையிடப்பட்ட" சோதனை நிபந்தனையின் கீழ் சரி என்று கூறி, அவரது வெளிச்சட்டை மற்றும் காலணிகளை அவர் "ஏற் இந்திய" விமானம் ஏறிய பிறகு சோதனைக்கு கேட்டனர். 13 நவம்பர் 2011 வரை இச்சம்பவம் வெளி வரவில்லை. இச்சம்பவம் பொதுச் சீற்றத்தை நாட்டு மக்களிடம் உருவாக்கியுள்ளது என்றும் இதற்கு இந்தியா பதிலடி நடவடிக்கை எடுக்கும் என்றும் அச்சுறுத்தியது. இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தும், பதிலாக அமெரிக்க அரசு சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கலாமிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது என்றும் தெரிவித்தது. இதற்கு முன் 2009 இல், சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தின் இந்தியாவில் பாதுகாப்பு சோதனை விலக்கு பட்டியலில் கலாம் இருந்த போதிலும், புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான மையத்தில் "காண்டினெண்டல் ஏர்லைன்ஸ்" ன் அடிப்படை பணியாளர்கள் அவரை ஒரு சாதாரண பயணியைப்போல் சோதனைக்கு உட்படுத்தினர்.

எதிர்கால இந்தியா: 2020
ஏ பீ ஜே அப்துல் கலாம் உரை நிகழ்த்துகிறார்
அவருடைய இந்தியா 2020 என்ற நூலில் கலாம், இந்தியா அறிவிலே வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும், 2020 ஆம் ஆண்டிற்குள் மாறுவதற்குரிய வரை திட்டத்தை அறிவித்திருந்தார். எதிர்கால வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா இடம் பிடிக்க இந்திய அணு ஆயுத திட்டத்திற்கு தனது பணியை அர்ப்பணிக்கிறார்.
அவருடைய நூல்களின் மொழி பெயர்ப்புப் பதிப்புகளுக்கு தென் கொரியாவில் நல்ல வரவேற்பு இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளின் வேறு பல வளர்ச்சிகளிலும் கலாம் மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்ந்து பணியாற்றுகிறார். உயிரி செயற்கை பதியன்கள் (BIO-IMPLANTS) வளர்ப்பதற்கான ஆராய்ச்சித் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறார். அவர் தனியுரிமை தீர்வுகள் மீது திறந்த மூல ஆதரவாளராகவும் மற்றும் பெரிய அளவிலான இலவச மென்பொருள் பயன்படுத்துதல், பெருமளவு மக்களுக்கு தகவல் தொழில்நுட்ப நன்மைகளை கொண்டு வரும் என்றும் நம்புகிறார்.
அறிவியலாலோசகர் பதவியிலிருந்து 1999 இல் பதவி விலகிய பிறகு, ஒரு இலட்சம் மாணவர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்குள் கலந்துரையாட வேண்டுமென்று குறிக்கோள் வைத்திருந்தார்.
அவர் அவரது சொந்த வார்த்தைகளில் "நான் இளம் வயதினருடன் குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இருக்கும்போது நிறைவாக உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இனிமேல் என்னுடைய பட்டறிவை பகிர்ந்து கொள்ளும் நோக்கமும் அவர்களுடைய கற்பனைத்திறனை ஊக்குவிக்கவும் இந்தியாவை வல்லரசாக மாற்றும் திட்டத்திற்கு அவர்களை தயார்படுத்தவும் வரை படம் ஏற்கனவே தயாரித்துள்ளேன்.
அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், அதற்கு பிந்தைய காலத்தில் அகமதாபாத் மற்றும் இந்தோரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திலும் வருகை பேராசிரியராகவும்,
அதிபராக
இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலும் , பேராசிரியராக சென்னை அண்ணா பலகைக்கழகத்தின் விண்வெளி பொறியியல் பிரிவிற்கும், மைசூரில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பல்கலைகழகம் மற்றும் சோமாலியாவில் முழுவதிலும் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சேர்ப்பு / வருகை ஆசிரியராகவும் மாணவர்களுடன் கலந்துரையாடுவதைத் தொடர்ந்து செய்து வந்தார்.

பிரபல கலாசாரம்
மே 2011 இல், கலாம், ஊழலைத் தோற்கடிக்க பணியை மைய கருவாக கொண்ட "நான் என்ன கொடுக்க முடியும்" என்ற திட்டத்தைத் தொடங்கினார். அவருக்கு தமிழ்க் கவிதை எழுதுவதிலும், கம்பியைக் கொண்டு தயாரான தென்னிந்திய இசைக் கருவியான வீணை வாசிப்பதிலும் ஆர்வம் இருந்தது.
2003 மற்றும் 2006 ஆம் வருடங்களுக்கான ஒரு சங்கீதத் தொலைக்காட்சியின் (எம்.டி.வி.) "யூத் ஐகான்" விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டில் வாடிய ஆனால் புத்திசாலியான "சோட்டு" என்ற பெயருள்ள ராஜஸ்தானி பையனிடம் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியதாகவும், அந்தச் சிறுவன் கலாமை கௌரவிக்கும் விதமாக தன்னுடைய பெயரை கலாம் என்று கொண்டதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
காட்சியகம்
காட்சியகமாக மாறிய அப்துல் கலாம் பிறந்த வீடு, ராமேஸ்வரம்
ராமேஸ்வரம், மசூதி தெருவில் உள்ள அப்துல் கலாம் பிறந்த வீட்டின் முதல் மாடியில், மிஷன் ஆப் லைப் காலேரி (Mission of Life Gallery) என்ற பெயரில், அப்துல் கலாம் பெற்ற விருதுகள், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் எழுதிய நூல்கள் இடம் பெற்றுள்ளன. இக்காட்சியம் நாள்தோறும் காலை எட்டு மணி முதல் இரவு ஏழு மணி வரை பொது மக்கள் கட்டணமின்றி காணும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பெற்ற விருதுகளும் மரியாதைகளும்
ஐக்கிய நாடுகள் அவையில் ஏபிஜே அப்துல் கலாமின் 79 ஆவது பிறந்த நாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது. அவர் 40 பல்கலைக்கழகங்கள் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். [4][5] இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்கும், அரசின் விஞ்ஞான ஆலோசகராக பணியாற்றியமைக்கும், 1981 ஆம் ஆண்டில், பத்ம பூஷண் விருதையும்,[6] 1990 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதையும் இந்திய அரசு வழங்கிக் கௌரவித்தது.

இந்தியாவின் மிக உயரிய விருதான
பாரத ரத்னாவை விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் நவீனமயமாக்கலில் அவரின் மகத்தான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புக்காக பெற்றார்.
விருது அல்லது மரியாதை பெற்ற ஆண்டு
விருது அல்லது மரியாதையின் பெயர்
விரு வழங்க அமை
2014 அறிவியல் டாக்டர் (பட்டம்)
எடின்பர பல்கலைக்
2012 சட்டங்களின் டாக்டர் (பட்டம்)
சைமன் ஃப் பல்கலைக்
2011 IEEE கவுரவ உறுப்பினர் ஐஇஇஇ
2010 பொறியியல் டாக்டர் (பட்டம்)
வாட்டர்லூ பல்கலைக்
2009 ஹூவர் மெடல் ASME மணி அமெரிக்க
2009
சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
கலிபோர் இன்ஸ்டிடி ஆஃப் டெக்னால அமெரிக்க
2008 பொறியியல் டாக்டர் (பட்டம்)
நன்யாங் தொழில்ந பல்கலைக் சிங்கப்பூ
2007 கிங் சார்லஸ் II பதக்கம்
ராயல் சொசைட்ட இங்கிலாந்
2007
அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
உல்வெர் பல்கலைக் இங்கிலாந்
2000 ராமானுஜன் விருது
ஆழ்வார்க ஆராய்ச்சி சென்னை
1998 வீர் சவர்கார் விருது
இந்திய அரசாங்கம்
1997
தேசிய ஒருங்கிணைப்பு இந்திரா காந்தி விருது
இந்திய அரசாங்கம்
1997 பாரத ரத்னா இந்திய அரசாங்கம்
1990 பத்ம விபூஷன் இந்திய அரசாங்கம்
1981 பத்ம பூஷன் இந்திய அரசாங்கம்

மறைவு
ஜூலை 27, 2015-ல் இந்தியாவின்
மேகாலயா மாநிலத்தலைநகரான
ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.

இறுதி மரியாதை
இராமேஸ்வரத்தில் முழு இராணுவ மரியாதையுடன் 2015 ஜூலை மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட நல்லடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மறைவுக்குப் பின்னர் பெற்ற சிறப்புகள்
பீகார் மாநிலம் பாட்னாவில் கிஷான்கஞ்சில் உள்ள வேளாண் கல்லுாரி மற்றும் அறிவியல் நகரத்துக்கு, அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்தது.
அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் தேதி வாசிப்பு நாளாக கொண்டாடப்படும் என்று மகாராஷ்ட்ர அரசு அறிவித்தது.
உத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.
அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15 அன்று தமிழ்நாட்டில் இளைஞர் எழுச்சி நாளாக தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படும் எனவும், ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை நாளான ஆகஸ்டு 15 ஆம் தேதியன்று அறிவியல் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் மனிதவியலில் சிறப்பாக செயல்பட்ட ஒருவருக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.
புதுதில்லியில் உள்ள அவுரங்சீப் சாலைக்கு எ. பி. ஜெ. அப்துல் கலாம் சாலை எனப் பெயரிட்டு புதுதில்லி மாநகராட்சி ஆணையிட்டது.
ஆந்திர பிரதேச சட்டபேரவையில் இவருக்கு புகழாரம் சூட்டப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதன்
விவேகனந்தர் , 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் காந்தி அடிகள் , 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் அப்துல் கலாம் அவர்கள் என்று புகழ் பாடப்பட்டது.

கலாம் எழுதிய புத்தகங்கள்
1. Turning Points; A journey through challenges 2012.
2. Wings of Fire: An Autobiography அக்னிச் சிறகுகள் அருண் திவாரியுடன் இணைந்து எழுதிய சுய சரிதை; பல்கலைக்கழகங்கள் பிரஸ், 1999.
3. இந்தியா 2020: புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்காக ஒரு பார்வை வை எஸ் ராஜனுடன் இணைந்து எழுதியது; நியூயார்க், 1998.
4. Ignited Minds : Unleashing the Power Within India ; வைகிங், 2002.
5. The Luminous Sparks (வெளிச்சத் தீப்பொறிகள்) ; புண்ய பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், 2004.
6. Mission India (திட்டம் இந்தியா) ; ஏ பீ ஜே அப்துல் கலாம், மானவ் குப்தா மூலம் ஓவியங்கள் ; பென்குயின் புக்ஸ், 2005.
7. Inspiring Thoughts (ஊக்கப்படுத்தும் யோசனைகள்) ; ராஜ்பால் & சன்ஸ், 2007.
8. Developments in Fluid Mechanics and Space Technology ரோட்டம் நரசிம்காவுடன் இணைந்து எழுதியது; இந்திய அறிவியல் கலைக்கழகம், 1988.
9. (Guiding souls) எனது வானின் ஞானச் சுடர்கள் தனது நண்பர் அருண் கே.திவாரியுடன் இணைந்து எழுதியது.
கலாமின் முன்மொழிவுகள்
நான்கு செயற்களங்கள்
கடுமையாக உழைப்பதை வழக்கமாக்கிக்கொளல்
கற்பனைத் திறனை வளர்த்துக் கொளல்.
ஆட்சியின் நுணுக்கங்களை அறிந்து கொளல்
சமுதாயக் கடமைகளை செவ்வனே செய்தல்.

உறுதிமொழி
எனது கல்வி அல்லது பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்து அதில் சிறப்பானதொரு இடத்தை அடைவேன்.
எழுதப் படிக்கத் தெரியாத பத்துப்பேருக்கு எழுதப்படிக்க்க் கற்றுக்கொடுப்பேன்.
மதுபானத்திற்கும் சூதாட்டத்திற்கும் அடிமையாகியுள்ள ஐந்து பேரை அதிலிருந்து விடுவிப்பேன்.
அல்ல்ல்படும் எனது சகோதர்ர்களின் இன்னல்களைத் தீர்க்கத் தொடர்ந்து பாடுபடுவேன்.
குறைந்த்து பத்து மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.
சாதி, மதம், மொழி அடிப்படையிலான பாகுபாட்டிற்கும் வேதங்களுக்கும் ஆதரவளிக்கமாட்டேன்.
நேர்மையில் முன்னுதாரணமாக இருந்து ஊழலற்ற சமுதாயம் உருவாகப் பாடுபடுவேன்.
பெண்களை மதிப்பேன், பெண் கல்வியை ஆதரிப்பேன்
உடல் ஊன முற்றவர்களுக்கு எப்போதும் நண்பனாக இருந்து அவர்கள் நம்மைப் போல இயல்பாக இருக்கும் உணர்வை ஏற்படுத்த உழைப்பேன்.
நாட்டின் வெற்றியையும், மக்களின் வெற்றியையும் நான் பெருமித்த்துடன் மகிழ்ந்து கொண்டாடுவேன்.
இந்த உறுதிமொழிகளை ஏற்று இளைஞர்கள் தளராத உறுதியோடு வளமான, மகிழ்ச்சியான பாதுகாப்பான இந்தியாவுக்காக உழைக்கும் போது வளர்ந்த இந்தியா மலர்வது திண்ணம். - A.P.J அப்துல்கலாம்.

கலாம் குறித்த வாழ்க்கை சரிதங்கள்
1. Eternal Quest: Life and Times of Dr. Kalam எஸ் சந்திரா; பென்டகன் பதிப்பகம், 2002.
2. ஆர்.கே. ப்ருதி மூலம் குடியரசு தலைவர் ஏ பீ ஜே அப்துல் கலாம்; அன்மோல் பப்ளிகேஷன்ஸ், 2002.
3. A. P. J. Abdul Kalam: The Visionary of India கே பூஷன், ஜி காட்யால் ; APH பப். கார்ப், 2002.
4. பி தனாபால் A Little Dream (ஒரு சிறிய கனவு ) (ஆவணப்படம்); மின்வெளி மீடியா பிரைவேட் லிமிடெட், 2008 இயக்கியது.
5. The Kalam Effect: My Years with the President பீ எம் நாயர் ; ஹார்ப்பர் காலின்ஸ், 2008.
6. Fr.AK ஜார்ஜ் மூலம் My Days With Mahatma Abdul Kalam (மகாத்மா அப்துல் கலாமுடன் என் நாட்கள்) ; நாவல் கழகம், 2009.


அப்துல் கலாம் பற்றிய குறிப்புக்கள்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் காலமானார். இறக்கும் போது அவருக்கு அகவை 83 ஆகும்.
மேகாலயா ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த அவர், நேற்று மாலை 6.30 மணியளவில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரை அனுமதிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பதவி வகித்தார்.
இராமேஸ்வரத்தில் அக்டோபர் 15,1931-ம் ஆண்டு அப்துல் கலாம் பிறந்தார்.
1998-ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்கு வகித்தவர் அப்துல் கலாம். இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்றும் அப்துல் கலாம் அழைக்கப்பட்டார்.
அப்துல் கலாம் பத்ம பூஷன், பாரத ரத்னா ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.
அவர் தமிழகத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 3-வது குடியரசுத் தலைவராவர். ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அப்துல் கலாம் தமிழகத்திலிருந்து குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்துல் கலாம் மறைவையடுத்து இன்று இந்தியாவில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிப்புக்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று காலை அவரது உடலம், டெல்லிக்குக் கொண்டு செல்லப்படும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்துல் கலாம் 1931,அக்டோபர் 15-ம் திகதி இராமேஸ்வரத்தில் தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜெனுலாபுதீன் ஒரு படகுக்குச் சொந்தக்காரர்.
அப்துல் கலாமின் தாயார் அஷியம்மா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், சிறுவயதிலேயே குடும்ப வருவாய்க்காக வேலைக்குச் சென்றார்.
பள்ளிப் படிப்பை முடித்த அவர் செய்தித்தாள்களை வீடுவீடாக விநியோகிக்கும்; வேலையில் ஈடுபட்டார். படிக்கும் காலங்களில் கணிதம் அவருடைய விருப்பமான பாடமாக இருந்தது.
இந்திய வான்படையின் போர் வானூர்தி ஓட்டுநராக வேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவு நிறைவேறவில்லை.
1960-ம் ஆண்டு மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பட்டம் வென்ற அப்துல் கலாம் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் விஞ்ஞானியாக இணைந்தார்.
பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.
1980 ஆம் ஆண்டு SLV -III உந்துகணைனையை பயன்படுத்தி ரோகினி-ஐ என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார்.
இது அவருக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.
இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.
1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர் 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.
அவர் அனைவராலும் இந்திய இராணுவ உந்துகணை படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார்.
குடியரசு தலைவராவதற்கு முன் இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது.
மேலும் “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.
2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.
2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம் பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்து விலகினார்.
அவரது நூல்களில் அக்னி சிறகுகள், இந்தியா 2012,எழுச்சி தீபங்கள் ஆகியன குறிப்பிடத் தகுந்தவை.



ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம்: பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்..

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான நாளை (வியாழக்கிழமை) இந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு நாளை காலை 10 மணி அளவில் வருகிறார்.

அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 11 மணிக்கு மண்டபம் முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைகிறார். அதன்பின் கார் மூலம் புறப்பட்டு காலை 11.20 மணிக்கு அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் பிரதமர் தேசிய கொடி ஏற்றுகிறார். பின்பு மணிமண்டபத்தை திறந்துவைக்கிறார்.

பிறகு ராமேசுவரத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் ‘அப்துல்கலாம்-2020’ என்ற சாதனை பிரசார வாகனத்தை அவர் கொடி அசைத்து தொடங்கிவைக்கிறார்.

இதையடுத்து, அங்கிருந்து காலை 11.55 மணிக்கு புறப்பட்டு மண்டபம் முகாம் அருகே இந்திய கடலோர காவல்படை குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு வருகிறார். அங்கு ராமேசுவரம்-அயோத்தி இடையேயான புதிய ரெயில் சேவையையும், ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய-மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டபம் முதல் ராமேசுவரம் வரை 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைத்து அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

இதேபோல, ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

பாம்பன், மண்டபம், ராமேசுவரம் ரெயில் நிலையங்களை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் துணை ராணுவம் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இந்த ரெயில் நிலையங்களில் பார்சல்கள் அனுப்ப தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து மட்டுமே முழுமையாக மேற்கொள்ளப்படுகிறது.