வியாழன், 13 ஜூலை, 2017

ஓவியர் வீர சந்தானம் காலமானார்! ஜூலை13..2017.



ஓவியர் வீர சந்தானம் காலமானார்! ஜூலை13. 2017.

ஓவியர் வீர.சந்தானம் மறைந்தார் .. தமிழ் உணர்வாளர் சிந்தனையாளர், தூரிகை
நெருப்பு ஓவியர் வீர .சந்தானம் மூச்சுதிணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில்
மறைந்தார்.
ஓவியர் வீர. சந்தனத்தின் மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல்!
தமிழின உணர்வாளரும், புகழ்பெற்ற ஓவியருமான வீர.சந்தனம் உடல்நலக் குறைவால்
காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும்
அடைந்தேன்.
ஓவியர் சந்தனத்தின் தியாகங்களை எழுத்துக்களில் சாதாரணமாக வடித்துவிட முடியாது.
எளியக் குடும்பத்தில் பிறந்த வீர.சந்தனம் சுயம்புவாக வளர்ந்து ஓவியராக
உருவெடுத்தார். கலைஞன் என்பதன் உண்மையான அடையாளமாக திகழ்ந்தார். தனது வாழ்க்கை
முழுவதையும் தமிழுக்காகவும், ஈழத்தமிழர் நலனுக்காகவும் அர்ப்பணித்துக்
கொண்டவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் அன்புக்கும்
மரியாதைக்கும் பாத்திரமானவர். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தை வடித்ததன்
மூலம் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை உலகம் அறிந்து கொள்வதற்கு வழி
வகுத்தவர்.
எனது அன்புக்குரிய நண்பர்களில் ஒருவராக திகழ்ந்தார். தமிழ் மற்றும் தமிழ்
சார்ந்த பணிகளில் என்னோடு தோள்நின்றவர். தமிழ் தேசியத் தலைவர்கள் அனைவரின்
நம்பிக்கையையும், மரியாதையையும் வீர சந்தனம் பெற்றிருந்தார். அறம் மீது
மட்டுமே பற்று கொண்டிருந்த அவர், பொருள் மீது பற்றற்று இருந்தார். அவருக்கு
இருந்த தொடர்புகளை பொருளாதாரரீதியில் பயன்படுத்தியிருந்தால் அவரது நிலை
மிகப்பெரிய உயரத்தை எட்டியிருக்கும். ஆனால், தமது வாழ்நாள் முழுவதும்
தமிழுக்கும், தமிழருக்காகவும் உழைத்து எண்ணற்ற நண்பர்களையும், அவர்களின்
நம்பிக்கை மற்றும் மரியாதையையும் மட்டுமே சேர்த்து வைத்திருக்கிறார். அவர்
மறைந்தாலும் தமிழர்களின் மனங்களில் இறப்பின்றி வாழ்வார்.
ஓவியர் வீர சந்தனத்தின் மறைவு தமிழ் சமுதாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு
ஆகும்.

வீர சந்தானம் என்பவர் ஓவியர், நடிகர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். மொழி, இனம், நாடு பண்பாடு தொடர்பான விதயங்களில் உணர்வுடனும் முனைப்புடனும் இயங்கி வருபவர்.
இளமைக் காலம்
தஞ்சை மாவட்டம் கும்பக்கோணம் அருகில்
உப்பிலியப்பன் கோயில் என்னும் ஊரில் பிறந்தார். தந்தை வீரமுத்து ஒரு கூலித் தொழிலாளி. தாயார் பொன்னம்மாள் .கல்லூரிப் படிப்பு கும்பக்கோணம் அரசுக் கல்லூரியிலும் அதைத் தொடர்ந்து மேல் படிப்பு சென்னையிலும் கற்றார். சந்தானத்தின் இளமைக் காலம் பெரும்பாலும் கோயில்களில் கழிந்தது. கோயில்களில் காணப் படும் சிற்பங்களைக் கண்டு கோடுகளையும் சுவர் ஓவியங்களையும் பார்த்து நகல் எடுத்து தம் ஓவியத் திறமையை வளர்த்துக் கொண்டார். இராசஸ்தானில் பனஸ்தலி வித்யா பீட் பல்கலைக் கழகத்தில் பிரஸ்கோ என்னும் சிறப்பு சுவரோவியக் கலையில் பயிற்சி பெற்றார். அவ்வமயம் இத்தாலி, செய்ப்பூர் அசந்தா வகை ஓவியங்களின் செய்முறையை தேவன்கி சர்மா என்பவரிடம் கற்றுக் கொண்டார். புகழ் பெற்ற சிற்பக் கலைஞர் தனபால் (ஓவியர்) இவர் படிக்கும்போது பொருளியல் சூழலைச் சரி செய்தார் என்பது குறிப்பிடதக்கது. இளம் அகவையில் பள்ளி நாடகத்தில் நடித்தும் உள்ளார்.
அலுவலகப் பணி
நெசவாளர் சேவை மையத்தில் பணியில் சேர்ந்தார் சென்னை , பெங்களூரு ,
காஞ்சிபுரம், திரிபுரா , நாக்பூர் ,
மிசோரம் என இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்திருக்கிறார். 25 ஆண்டுகள் அங்கு பணி செய்த பின்னர் விருப்ப ஒய்வு பெற்றார்.
கலைப் பணி
கல்தூண்களில் இடம்பெற்றுள்ள 108 பறவைகளை ஒன்று சேர்த்து ஒரு வடிவமைப்பை உருவாக்கினார். திசு நெசவு முறையில் அச்சுக் கலையைப் பயன்படுத்தி அந்த வடிவமைப்பைப் பதித்து ஓர் அழகான விரிப்பைச் செய்தார். கன்னனூர் கோவில்களில் இருந்த வீரன், குட்டிச்சாத்தான், குளிகன் போன்ற வடிவங்களை உள்வாங்கி 108 தையம் உருவங்களை தொகுத்து வடிவமைத்து திரைச் சீலைகளை உருவாக்கினார். தோல் பாவைக் கூத்து இவருக்குப் பிடித்த ஒன்று. தோல் பாவைக் கூத்து பற்றிய ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உண்டு. திரிபுரா மாநில பழங்குடியினரின் மரபு கலை வடிவங்களை ஆடைகளில் அறிமுகம் செய்தார். புதிய உத்திகளைக் கையாண்டு பீங்கான், மெட்டல் ரிலீப் போன்ற பல வகையான பொருள்களைப் பயன்படுத்தி புடைப்புச் சிற்பங்களைச் செதுக்கி வருகிறார். சகட யாழ், மகர யாழ், காமதேனு எனத் தமிழர்களின் அடையாளங்களை ஓவியங்களாக எழுதியுள்ளார்.
தஞ்சைக்கு அண்மையில் உள்ள விளாரில்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்என்னும் கூடத்தில் இவர் படைத்த கருங்கல் சிற்பங்கள் 2009 இல் நிகழ்ந்த ஈழப் போரின் அவலங்களைச் சித்திரித்துக் காட்டுகின்றன.
திரைப்பட நடிப்பு
திரை இயக்குநர் பாலு மகேந்திராவின்
சந்தியா ராகம் என்னும் படத்தில் நடித்தார். தம்பியுடையான், மகிழ்ச்சி, அரவான், பீட்சா, வில்லா, கத்தி அநேகன், அவள் பெயர் தமிழரசி ஆகியவை வீர சந்தானம் நடித்த பிற படங்கள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக