திங்கள், 31 ஜூலை, 2017

உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்ட் 01.



   உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்ட் 01.

 உலக தாய்ப்பால் தினம். பெண்கள் தாய்மை அடையும் போது தான் முழு பெண்மையை அடைகின்றனர். தாய்மை பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். குழந்தை பிறந்ததுமே தாய்ப் பால் கொடுப்பது மிகவும் அவசியம். பிறந்த குழந்தைக்கு வழங்கப்படும் முதல் உணவு தாய்ப்பால் தான். தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் அடங்கி இருக்கிறது. தண்ணீர் கொழுப்பு புரதம் சர்க்கரை தாதுப் பொருட்கள் ஆகியவை தாய்ப்பாலில் காணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ், கால்சியம், வைட்ட மின்கள் ஆகியவற்றை மார்பகச் சிற்றறைகள் பிரித்து பாலாக மாற்றுகின்றன.
தாய்ப்பாலில் அதிசயிக்கத்தக்க ஆற்றல் படைத்த ரசாயனப் பொருள் இருக்கிறது. அது பிறந்த குழந்தையின் செரிமான உறுப்புக்களை பாதுகாக்கவும் குறைகளைப் போக்கவும் பெரிதும் உதவுகிறது. தாதுப் பொருள் குழந்தை பிறந்தவுடன் சில நாட்களுக்குச் சுரக்கின்ற சீம்பாலில் அதிக அளவில் இருக்கிறது. இது குழந்தையின் குடல் பகுதிகளை மற்ற அமிலச்சுரப்பினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. குழந்தை இனிமேல் சாப்பிடப் போகும் உணவுகளை ஏற்றுக்கொள்ளும் விதமாக பக்குவப்படுத்துகிறது. ஆகவே எல்லாவித சத்துக்களும் அடங்கிய பால் குழந்தையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. தாய் பால் பருகும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்வர். காரணம் தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு திறன்.
உடல் நலம் காக்கும் தாய்ப்பால்
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவு வலுப்படுகிறது. மன அமைதி, மகிழ்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. கையில் எடுத்து மார்போடு அணைத்து பால் கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்ச்சி ஏற்பட்டு அது மனநிறைவோடு காணப்படுகிறது. குழந்தைகளின் கன்னம் மற்றும் தாடை எலும்புகள் வலுவடைகின்றன. அதிக கால்சியம் சத்து நிறைந்த தாயின் பால் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. தாய்ப் பாலில் மட்டுமே பாலி அன்சேசுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. பசும் பாலில் இல்லாத இந்த அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் ஆகியவை அரிதாகவே ஏற்படுகின்றன.
தாய்க்கும் நன்மை உண்டு
தாய்ப் பால் கொடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள் இருப்பதைப் போல தாய்க்கும் நன்மைகள் இருக்கின்றன. முதலாவது தாய் கருத்தரிப்பதை இயற்கையாக பெரும்பாலானவர்களுக்கு தள்ளி வைக்கிறது. மேலும் தாய்ப் பால் கொடுப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று நோய் வருவதை தவிர்க்கமுடியும்.
கர்ப்பகாலங்களில் அதிகமாக சாப்பிட்ட தாயின் உடல் பருமனை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருகிறது. கர்ப்ப பையை சுருங்கச் செய்து மீண்டும் இயல்பான நிலைமைக்கு கொண்டு வருகிறது.
தாய்ப் பால் சுரப்பை அதிகரிக்க...
பிரசவத்தை நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பல சந்தேகங்களில் ஒன்று தாய்ப் பால் சுரப்பு. ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்த ஒரு பெண்ணுக்கு சுமார் 850 மி.லி தாய்ப் பால் தினமும் சுரக்கும். ஆரம்பத்தில் தாய்ப் பால் சுரப்பு குறைவாகவே இருக்கும். தாய்ப் பால் கொடுக்கும் தாய்க்கு தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியிருக்கிறது. சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த பொருட்கள், தண்ணீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்துக் கொண்டால் தாய்ப்பால் சுரப்பில் இழக்கும் கலோரியை ஈடு செய்துவிடலாம். அதிக புரத சத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறாமீன், மீன் முட்டை கரு(சிணை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பேரீச்சம் பழம், திராட்சைப் பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயா பீன்ஸ், காய்ந்த சுண்டைக் காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். மீன்கள் சாப்பிடலாம்.
வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், அதிக புரதம், மாவு சத்துள்ள பொன்னாங்கன்னி கீரை உள்பட அனைத்து கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் பால் நிறைய சுரக்கிறது. மேலும் தாய் தினமும் பசும் பால் உட்கொண்டால் தாய்ப் பால் பற்றாக் குறையே இருக்காது. அழகு கெட்டுவிடும் என்றும், இன்னும் பிற காரணங்களாலும் குழந்தைக்குத் தாய்ப் பால் கொடுப்பதை பெண்கள் தவிர்க்கின்றனர். இது தவறு. உலக சுகாதார அமைப்பும், அமெரிக்க குழந்தை நல மருத்துவ அகாடமியும் குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தனித் தாய்ப் பாலூட்டல் சிறந்தது என்பதை வலியுறுத்துவதுடன், முடிந்தால் 2 ஆண்டுகள் வரை (அல்லது அதிகமாகவோ) செயற்கை உணவூட்டலுடன் சேர்த்து தாய்ப் பாலூட்டலையும் செய்வதற்கு அறிவுறுத்துகின்றன. தாய்ப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தனியாக வேறு எந்தவிதமான சத்துணவையும் தர வேண்டிய அவசியமே இல்லை. பச்சிளங் குழந்தைக்கு கட்டாயமாக தாய்ப் பால் மட்டுமே கொடுப்பது அவசியம். இன்று முதல் 7ம் தேதி வரை உலகத்தாய்ப் பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



தாய்மை இந்த தேசத்தின் ஆகச் சிறந்த அழகு. சிலருக்கு வாய்க்கிறது. பலருக்கு வாய்க்காமல் போகிறது. அந்த ஒரு சிலரும், நடைமுறை விசயங்களை தொலைகிறபோதுதான், நினைவூட்டு நாட்கள் அவசியமாகிறது. உலகத் தாய்ப்பால் வாரம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழு தினங்கள் கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோவும், உலக சுகாதார நிறுவனமும் பிரபஞ்சத்தின் மத்தியில் நின்றுகொண்டு தாய்ப்பால்… தாய்ப்பால் எனத் தலையில் அடித்துக் கதறுகிறது. மருத்துவமனைகள், ஆட்சியர் அலுவலகங்கள், சமுதாயக் கூடங்கள், கல்லூரிகள், பள்ளிகள் எனக் களமிறங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தச் சொல்கிறது. AAP எனச் சொல்லப்படும் THE AMERICAN ACADEMY OF PAEDIATRICS உம் தாய்ப்பால் புகட்டுதலை மிகத் தீர்க்கமாக வலியுறுத்துகிறது. நாம் என்ன செய்கிறோம், இதெற்கெல்லாமா நோட்டீஸ் கொடுப்பீர்கள் சே... எனச் சலித்துக்கொண்டு துண்டுச்சீட்டுகளைச் சுருட்டி தெருவோரம் வீசிவிட்டுப் போகிறோம். ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். ஒரு தாயிடம், அவள் குழந்தைக்கு, அவள் பாலை புகட்ட, அவளிடமே கெஞ்சிக் கொண்டிருப்பது எத்தனை அபத்தம் என்பது. இது உலகளாவிய உணர்வுப் பிரச்னை.
பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் என்பதற்குள் அடக்கிப் பார்க்கிற விசயமாகத் தெரியவில்லை. எந்தச் சூழலுக்குள்ளும் சிக்காத தாய்க்கும் சேய்க்குமான பேரன்பாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு குழந்தை என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒப்பந்தம் என்று எப்படிச் சுலபமாகக் கடந்து போய்விட முடியும். இந்தச் சமூகத்தின் துளிர். தேசத்தின் அடையாளம் அல்லவா. அப்படியானால் அதை எப்படி ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க வேண்டும். தாயிலிருந்துதான் துவங்க வேண்டும் இந்த பங்களிப்பு.
2015-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் ஐந்து தாய்மார்களில் நான்கு பேர் தாய்ப்பால் கொடுப்பதில்லை என்ற பேரதிர்ச்சியை யுனெஸ்கோ முன்வைக்கிறது. கல்வியில் மிகவும் பின் தங்கிய சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் கூட ஐம்பது சதவீதம் பேர் தாய்ப்பால் புகட்டுகின்றனர். ஆனால், தமிழகத்தில் 18.8% குறிப்பாகச் சென்னையில் 7% தாய்மார்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதாகப் புள்ளிவிவரங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
தாய்மை வரம் என்றால் தாய்ப்பால் வரப்பிரசாதம். கருத்தரித்த நாள் முதல் அந்த சிசுவிற்காகவே தாயின் உடலும் மனமும் பழக்கப்படுகிறது. இயற்கையான பிரசவம் என்றால் அரை மணி நேரத்திற்குள்ளும், அறுவை சிகிச்சை என்றால் ஒன்றரை மணி நேரத்திற்குள்ளும் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அதன் ஸ்பரிசத்தைத் தேடும் தாயும், அவளின் பால் வீச்சத்திற்கு, கதகதப்பிற்கு ஏங்கும் குழந்தையின் துடிப்பையும் எந்த மெசின்களாலும் கண்டறிய முடியாது. அன்பையும் நேசத்தையும், ஆரோக்கியத்தையும் குழைத்து மார்பில் அணைத்தபடி தன் குழந்தைக்கு கலப்படமற்ற பால் புகட்டும் ஒரு தாயின் மன அமைதி வேறெதில் கிடைக்கப் போகிறது.
அம்மாவிற்கும் குழந்தைக்குமான உளவியல் ரீதியானத் தீண்டல், அரவணைப்பு, பாதுகாப்பு போன்ற அனுசரனைகளை எப்படி செயற்கைப் பாலில் எதிர்பார்க்க முடியும். ஊர் கூடித் தேர் இழுக்குறீர்களே? அப்படி என்னதான் இருக்கிறது தாய்ப்பாலில் என்ற கேள்வியை முன் வைத்தால் இவைகள்தான் பதில். குழந்தை பிறந்து முதல் இரண்டு நாட்கள் சுரக்கும் ‘கொலாஸ்ட்ரம்’ எனும் சீம்பாலில் தான் குழந்தைக்கு நோயை அண்டவிடாத ஆண்டிபாடிஸ் தடுப்பு மருந்து இருக்கிறது. குழந்தைக்கு ஆறு மாதங்கள் கண்டிப்பாகத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு ஒரு வருடமாவது தாய்ப்பாலுடன் சேர்ந்த இணை உணவு அவசியம். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் நரம்பு மண்டலத்திற்கும் வலு சேர்க்கக் கூடிய, எளிதில் செரிக்கும் புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்பு, மாவுச்சத்து இவைகளோடு வைட்டமின்களும் தாய்ப்பாலில் அதிகம் நிறைந்துள்ளன.
குழந்தைக்கு வரும் ஊட்டச் சத்துக் குறைபாடுகளில் இருந்து இவை காப்பதோடு டையாபடிஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை அண்டவிடாமல் தடுக்கும் எனவும் மருத்துவம் கூறுகின்றது. அத்துடன் தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டம் கர்ப்பத்தடைக்கான நாட்களாகவும் கருதப்படுகிறது. பிட்யூட்டரியில் சுரக்கும் ஆக்ஸிடோஸின், கருப்பையை சுருங்கச்செய்து பிரசவக் காலத்து உதிரப் போக்கிலிருந்து தாயைக் காக்கிறது. தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப் புற்று மற்றும் சினைப்பை புற்றுநோய் வரும் தன்மையும் தடுக்கப்படும் என்கிறது இந்திய மருத்துவக் கழக ஆராய்ச்சி.
எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் தாய்க்கும் மகனுக்கும், தாய்க்கும் மகளுக்குமான அன்பைத் தகர்க்க முடியுமா? பிரசவத்தின்போது குழந்தை இறந்து, பால் கொடுக்க முடியாமல் அவதிப்படும் ஒரு கிராமத்து தாயின் மார்பகத்தில் இருந்து, ஒருவார காலம் தன்னியல்பாக வழிந்தோடும் நெகிழ்ச்சியை, மல்லிகைப் பூக்கள் கொண்டு கட்டுப்படுத்தும் அவளின் உயிர் வலியை நகரத்தின் எந்த அழகுநிலையம், மஸ்காரா போட்டு மறைக்கும்.
என் குழந்தை என் ரத்தம், என் உணர்வு என்கிற நிலையில் தன்னுள் சுரக்கும் உணவை தன் ஜீவனுக்கு ஊட்டி உயிர்த்தெழச் செய்பவள்தானே தாய். குழந்தை பிறந்தபிறகு கொடுக்கும் மருந்துக் குழம்பும் பத்தியச் சாப்பாடும் நான் தாயாகி விட்டேன் என்கிற உன்னதத்தை அவளுக்குள் கிளர்த்திவிடுமே. பாலில் வேகவைத்த பூண்டு, திருக்கை மீன் குழம்பு, சுறாப்புட்டு, வெண்டைக்காய் வதக்கல் எனப் பால் சுரக்கும் டிப்ஸ்களும், மாம்பழம் மாந்தம், பலாப்பழமா கூடவே கூடாது குழந்தைக்கு ஆகாது எனக் கடிந்து கொள்ளும் பாட்டிகளுக்கும், இன்றைய இளம் தாய்கள் சொல்கிற பதில், நாங்கள் வேலைக்குச் செல்கிறோம். இதெல்லாம் சரிப்பட்டு வராது என்பதுதான்.
அரசு வேலைக்குச் செல்பவர்களுக்கு அரசாங்கம், அதிகப் படியான பேறுகால விடுமுறைச் சலுகைகள் வழங்குகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும் காரணம் சொல்கிறார்கள். எங்களுக்கு ஓரிரு மாதங்கள்தான் விடுமுறை. பிரெஸ்ட் பீடிங்கா... நோ சான்ஸ் என்கிறார்கள். மனம் புறக்கணிக்கிறபோது அறிவியல் அவசரமாக ஆட்கொள்கிறது. அம்மாக்களே அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் என்ற பதட்டத்தில், பிரெஸ்ட் பம்ப்புகள் மூலம் தாய்ப்பாலை எடுத்து குளிர்சாதனப் பெட்டிகளில் பதப்படுத்தி குழந்தைகளுக்கு கொடுக்கலாம் எனக் கண்டுபிடித்து விட்டார்கள். அறை வெப்ப நிலையில் 8 மணி நேரமும் பிரீசரில் 24 மணிநேரமும் வைக்கலாம். மேலும் 20’c-இல் மூன்று மாதங்கள் வரை கூடப் பதப்படுத்தி அதன் தன்மை மாறாமல் குழந்தைக்கு கொடுக்கலாம் என்கிறார்கள். ரத்த வங்கி போல தாய்ப்பால் வங்கியும் மெல்ல நடைமுறைக்கு வருகிறது.
இத்தனை இணக்கமான சூழல் இருந்தும், நஞ்சேறிய பவுடர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி தரிசான வாரிசுகளை உருவாக்கி வருகிறோமே ஏன்? வெளியில் சொல்ல முடியாத அந்த நெருடலில்தான் குழந்தைகளின் இறப்பு விகிதம் கூடிக்கொண்டே போகிறது. தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்து விடும் என இன்றைய இளம் பெண்கள் கங்கணம் கட்டிவிட்டார்கள். எத்தனை வேதனை இது. இந்த அறியாமையை எப்படி போக்குவது என்பதில் மருத்துவம் உறைந்து நிற்கிறது.
போர்க்களத்தில் போரிட்டு வீர மரணம் எதிர்கொள்ளும் தருவாயில், வீரர்களின் உயிர் பிழைக்க தங்கள் மார்பகக் காம்புகளைப் பிழிந்து பால் ஊட்டிய சங்க இலக்கியத் தாய்களின் ஈரப்பதம் எங்கே போயிற்று. தாய்ப்பால் என்பது தாயிடமிருந்து குழந்தைக்கு கடத்தப்படும் கொழ கொழப்பான ஏதோ ஒரு திரவம் அல்ல. அது தாயின் அன்பு, அவளின் பாசம், ஊறிக்கிடக்கும் அவளது அறிவு, மடைமாற்றம் செய்யப்படும் மூதாதையரின் குணம். இப்படி அணு அணுவாய் அனுபவித்து குழந்தைக்குத் தாயாகி மகிழும் நிலையான அழகைவிட, நிறப்பூச்சுகளில் மயங்கி, சுருக்கம் விழக் காத்திருக்கும் நீர் வற்றிய வெற்றுத் தோல் எப்படி அழகாகும். அழகின் அறியாமையை பெண்கள் அறிந்துகொண்டால்தான் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.
எத்தனை புள்ளி விவரங்களைக் கோடிட்டாலும், தாய்மை அளப்பறியது. தன்னிலை உணர்தல் அழகு. இளம்பெண்கள் அதை முதலில் தீர்மானிக்க வேண்டும். ஆதிக் கிழவிகள் விட்டுச் சென்ற தாயன்பின் எச்சத்திலேனும், குழந்தை பிறந்ததும் மருத்துவமனைக்கு உங்களைப் பார்க்க வரும் நண்பர்களின் உறவினர்களின் கைகளில் இருக்கும் செயற்கை பால் டப்பாக்களையும், பால் புட்டிகளையும் மறுத்துவிடுங்கள்.
உங்கள் குழந்தைக்கு நீங்கள் உணர்வுப் பால் புகட்டும் அன்னியோன்யத்தை தோழிகள் நெக்குருகப் பார்க்க வேண்டும். அவர்கள் மகள்களை மகன்களை ஓடிச்சென்று மார்போடு அணைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தாயின் மார்பில் சுரக்கும் வாஞ்சையால் மட்டுமே தாய்பால் புகட்டும் உள்ளொளி ஒளிரும். என் குழந்தையின் எதிர்காலத்திற்காகத்தான் உழைக்கிறேன் என இரவும் பகலுமாய் பட்டினிப்போட்டு விட்டு ஆளாய் பறக்குறீர்களே. உங்கள் மார்பில் ஊறும் ஒரு சொட்டுப் பாலையேனும் அந்தக் குழந்தையின் நாவில் ஊற்றி நனைத்து விட்டுப் போங்கள். உங்களை மட்டுமே நம்பிக் கண் விழித்த பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுங்கள். வீட்டிற்கு மட்டுமல்ல இது நாட்டிற்குச் செய்யும் சேவையும் கூட.-அகிலா கிருஷ்ணமூர்த்தி.


கொடுக்க கொடுக்கத்தான் சுரக்கும் தாய்ப்பால்!
தாய்ப்பால் வாரம்... சிறப்புக் கட்டுரை!
அவர்னேஸ்
''நா ன் சென்னையைச் சேர்ந்த வாசகி. 'அவள் விகடன்’ கட்டுரை ஒன்றில், தாய்ப்பால் பற்றி... குறிப்பாக சீம்பால் தருவதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டிருந்ததை படித்த நான், என் பிரசவத்தில் அதைத் தவறாமல் கடைபிடிக்கக் காத்திருந்தேன். ஆனால், சமீபத்தில் சுகப்பிரசவமான எனக்கு நேர்ந்த அனுபவமோ, கசப்பானது. 'சுகப்பிரசவம் எனில், குழந்தை பிறந்த அரை மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்’ என்று அவள் விகடனில் படித்திருந்ததைச் சொல்லி, பாலூட்டுவதற்காக என் குழந்தையைத் தரும்படி நர்ஸிடம் கேட்டேன். 'ரூம் இல்லை’ என்று ஏதேதோ சாக்கு சொல்லி, என் குழந்தை என் கையில் கிடைப்பதற்குள் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கும் மேலாகியிருந்தது.
அதன்பிறகும் தீரவில்லை பிரச்னை. குழந்தைக்கு நான் பாலூட்டியும் அது அழுகையை நிறுத்தவில்லை. நர்ஸ், 'சுத்தமா பால் இல்ல, ஏன் குழந்தையை அழவிட்டு வேடிக்கை பார்க்குறீங்க?’ என்று கடிந்ததுடன், பிரபலமான பால் பவுடரின் பெயரைச் சொல்லி, அதை கலக்கி குழந்தைக்குக் கொடுக்கச் சொன்னார். எனக்கு பால் ஊறுவதையும், குழந்தை அதை பருகுவதையும் நான் உணர்ந்ததால், 'எனக்கு பால் இருக்கு’ என்றேன். என் சொந்தபந்தங்களும் அந்த நர்ஸுடன் சேர்ந்துகொண்டு, 'அவளுக்கு பாலே இல்ல’ என்று பேச ஆரம்பித்தனர். ஆனாலும் நான் பால் பவுடரை கொடுக்க அனுமதிக்காமல், நானே பாலூட்டினேன். மறுநாள் காலை வந்த குழந்தை நல மருத்துவர், 'பால் சுரக்குதே... குட்! விடாம ஃபீட் பண்ணுங்க... அப்போதான் பால் நன்றாக ஊறும்!’ என்று சொன்னபோதுதான்... எனக்கு நிம்மதி பிறந்தது.
இப்படித்தான் தாய்ப்பால் பற்றிய உண்மைகளைத் தெரியாதவர்கள், அதன் மீது அதிக அக்கறை இல்லாதவர்கள் எல்லாம், இஷ்டம்போல ஆலோசனைகளைச் சொல்லி, இயல்பாக நடக்க வேண்டிய ஒவ்வொன்றுக்குமே, செயற்கையான விஷயங்கள் மற்றும் பொருட்கள் மீது கவனத்தைத் திருப்பிவிடுகிறார்கள். ஆகஸ்ட் முதல் வாரம் 'தாய்ப்பால் வாரம்'. இந்தச் சமயத்தில் தாய்ப்பால் பற்றி விளக்கமாக ஒரு கட்டுரை அளித்தால், பிரசவிக்கும் இளம் தாய்மார்களுக்கு வழிகாட்டியாக இருக்குமே!''
- மதுரையைச் சேர்ந்த வாசகி அகிலாவின் இந்தக் கடிதத்தை, சென்னை, குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் ஸ்ரீதர் ஆர்.எஸ். முன் வைத்தோம். ''இத்தனை இடையூறுகளுக்கு இடையேயும் தன் கடமையில் உறுதியாக இருந்து, குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய வாசகி பாராட்டுக்குரியவர்!'' என்று சொன்ன டாக்டர், தாய்ப்பால் சுரப்பு பற்றிய விளக்கத் தகவல்களை வழங்கினார்.
ஹார்மோன் தூண்ட, தாய்ப்பால் சுரக்கும்!
''முதலில் நான் வலியுறுத்த விரும்புவது, தாய்ப்பால் என்பது மனது சம்பந்தப்பட்ட விஷயம். 'ஒல்லியான தாய் என்பதால் பால் சுரக்கவில்லை’, 'குழந்தை மிகவும் குண்டாக இருப்பதால் பால் போதவில்லை’ என்ற பேச்சுக்களில் எல்லாம் துளியும் உண்மையில்லை. குழந்தை பிறந்ததும் தாய் அமைதியான மனநிலையில் இருந்து, 'குழந்தைக்கு பாலூட்ட வேண்டும்’ என்று உளப்பூர்வமாக நினைக்கும்போது, அந்தச் செய்தி மூளைக்கு தெரிவிக்கப்பட்டு, ஆக்சிடோஸின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன்தான் பால் சுரப்பதற்கு மிக முக்கியமானது. மாறாக, குழந்தை பெற்றெடுத்த தாயின் மனநிலை அமைதியில்லாமல் இருந்து, குழந்தைக்குப் பாலூட்டுவது பற்றிய நினைப்பில்லாமல், விருப்பமில்லாமல் இருந்தால், ஹார்மோன் சுரக்காது, தாய்ப்பாலும் சுரக்காது. எனவே, பிரவசத் தில் உடல், மன ரீதியாக துன்புற்று வந்திருக்கும் பெண்ணுக்குத் தேவையான அன்பையும், அமைதியையும் உடனிருப்பவர்கள் தரவேண்டும்.
பிரசவித்த தாய்மார்களுடன் உதவிக்காக இருப்பவர்கள், 'பெண் குழந்தையா போச்சு’, 'ஆபரேஷன் செய்ய வேண்டியதா போச்சு’, 'உனக்கு பால் இல்ல’, 'குழந்தையைத் தூக்கக்கூடத் தெரியல’ போன்ற புலம்பல்களை வெளிப்படுத்துபவர் களாக இருக்கும்பட்சத்தில், அவர்களை அங் கிருந்து மெதுவாக வெளியேற்றுவதே நல்லது.
மார்பகக் காம்பு... கவனம்!
குழந்தை பெற்ற தாய் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உடல் சுத்தம், மார்பகக் காம்புகள் சுத்தம் மற்றும் சத்தான உணவு. உடல் சுத்தம், சத்தான உணவு பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், மார்பகக் காம்பு சுத்தத்தை பொறுத்தவரை பல பெண்களும் அறியாமையிலேயே இருக்கிறார்கள். கர்ப்ப காலத்திலேயே மார்பகக் காம்புகளுக்கு உரிய பராமரிப்பை தரவேண்டும். காம்பில் புண், பிளவுகள் ஏதாவது இருந்தால் கர்ப்ப காலத்தில் செக்கப் செல்லும்போதே மருத்துவரிடம் தெரிவித்து, சிகிச்சை எடுக்கவேண்டும். சிலருக்கு இயல்பிலேயே காம்புகள் உள் அமுங்கி இருக்கும். இது குழந்தைக்கு பால் குடிக்க ஏதுவாக இருக்காது. அதனால் கர்ப்ப காலத்தில் இருந்தே குளித்து முடித்தபின் மிருதுவாக காம்புகளை வெளியே இழுத்துவிட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது பிரசவ நேரத்தில் காம்புகள் குழந்தை சப்புவதற்கு ஏதுவாக வெளிவந்திருக்கும்.
சீம்பால் முக்கியம்!
குழந்தை பிறந்ததும் சுகப்பிரசவமாக இருந்தால் அரை மணி நேரத்துக்குள்ளாகவும், சிசேரியனாக இருந்தால் தாய் மயக்கத்தில் இருந்து கண் விழித்த பிறகு, அல்லது தாய்ப்பால் கொடுக்கும் அளவுக்கு உடல் நிலைக்கு தேறிய பிறகு பால் புகட்ட வேண்டும். பிரசவத்துக்குப் பின் முதன் முதலில் தாய்க்கு சீம்பால் (கொலோஸ்ட்ரம்) சுரக்கும். இது குறைவான அளவே சுரக்கும் என்றாலும், பிறந்த குழந்தையின் வயிறு முதல் நாள் 5 முதல் 7 மில்லி பாலையே தாங்கும் என்பதால், அந்த அளவே குழந்தைக்குப் போதுமானது. அதனால் முதல் நாளில், 'ஐயோ பால் குறைவா இருக்கே’ என்று கவலைப்பட வேண்டியதில்லை.
பிரசவத்துக்குப் பின் தாய் ஏதாவது ஆகாரம் எடுத்துக் கொண்டால்தான் பால் சுரக்கும் என்பதிலும் உண்மையில்லை. பொதுவாக, பிரசவித்த தாய்க்கு பால், இளநீர் என்று கொடுக்கச் சொல்வது, பிரசவம் எனும் பெருநிகழ்வு முடித்து வந்திருக்கும் அவர் உடலுக்கான தெம்புக்காகத்தானே தவிர, பால் சுரப்புக்காக இல்லை. எனவே, பிரசவத்துக்குப் பின் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், பால் சுரப்பு நிகழும் என்பதுதான் இயற்கையின் கொடை.
அச்சப்பட வேண்டியதில்லை அழுகைக்கு!
அடுத்ததாக, குழந்தை அழுவதைப் பார்த்துப் பதற்றப்படும் தாய்மார்கள் அநேகம். பசிக்காக அழுகிறதோ என்று நினைத்து, பால் புகட்டுவார்கள். ஆனால், பசியாறிய பின்னும் குழந்தை அழும். 'பால் பத்தலையோ’ என்றும் மீண்டும் கவலைப்படுவார்கள். காரணம் அதுவல்ல. அதுவரை தாயின் வயிற்றில் இருட்டறையில் இருந்த குழந்தைக்கு, வேளாவேளைக்கு கேட்காமலேயே ஊட்டச்சத்து கிடைத்தது. ஆனால், வயிற்றில் இருந்து வெளிவந்ததும் வெளிச்சம், சத்தம் போன்றவை எல்லாம் புதிதாக இருப்பதாலும், பசித்து அழுதால்தான் பால் கிடைக்கும் என்பதாலும், பிறந்த ஓரிரு நாட்களுக்கு தொடர்ந்தோ, விட்டு விட்டோ குழந்தை அழுவது இயல்பே. அழும் குழந்தைக்கு பால் புகட்டுங்கள். அதற்குப் பின்னும் அழுதால், பதற்றமோ கவலையோ வேண்டாம். கருவறைக்கு ஒத்த பாதுகாப்பாக, தாயின் அரவணைப்புக்குள் குழந்தையைக் கொண்டு வாருங்கள். அழுகை சில நாட்களில் சரியாகிவிடும்.
பால்சுரப்பு அதிகரிக்க..!
அடுத்ததாக, பிரசவத்தை தொடர்ந்த நாட்களில் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்ய வேண்டியவற்றைப் பார்ப்போம். குழந்தை தாய் மார்பை சப்ப சப்பதான் பால் சுரப்பு அதிகமாகும். எனவே, தாய்ப்பால் குறைவாக இருக்கிறது என்று தோன்றினாலும், தொடர்ந்து குழந்தைக்கு பால் புகட்டியபடியே இருங்கள். அது பால் சுரப்பை தானாகத் தூண்டும். ஒருவேளை சிலருக்கு மிகமிகக் குறைந்த அளவே பால் சுரப்பு உள்ளது அல்லது சுரக்கவே இல்லை (இது மிக அரிதாகவே நிகழும்) எனில், மருத்துவரின் ஆலோசனைப்படி அந்தத் தாய் பால் சுரப்புக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்'' என்ற டாக்டர்,
தாய்ப்பாலின் இணையில்லா சிறப்புகள்!
தாய்ப்பால் உன்னதமானது, சுத்தமானது, சத்துக்கள் நிரம்பியது. தாய்ப்பாலில் எனர்ஜி, புரோட்டீன்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளதுடன், இது நிமோனியா, டயரியா, அலர்ஜி போன்றவற்றில் இருந்து குழந்தையைக் காக்கிற எதிர்ப்பு சக்தியினை தரவல்லது. தாய்ப்பால் பருகும் குழந்தைகள் மற்ற பால் அருந்தும் குழந்தைகளைவிட திறமையானவர்களாக இருக்கிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
மாட்டுப் பால் என்பது, அதன் கன்றுக்கானது. உலகத்தில் எந்த ஜீவராசியும் தன் குழந்தைக்கு மற்ற உயிரினத்தின் பாலை தருவதில்லை. ஆனால், நாம் மட்டும்தான் நம் குழந்தைகளுக்கு மாடு, தன் கன்றுக்காக சுரக்கும் பாலை அபகரித்துத் தருகிறோம். பால் பவுடர்களும் மாட்டின் பால் மற்றும் இன்ன பிற பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுவதுதான். இதன் விலையும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பசும்பால், பால் பவுடர் தயாரிப்புகளின்போது ஏற்படும் தவறுகளால் வயிற்றுப்போக்கு, வாந்தி என குழந்தைகளுக்கு அசௌகரியங்களும் ஏற்படலாம்.
எனவே, எண்ணிலடங்கா மற்றும் ஈடு இணையற்ற சத்துக்கள் நிரம்பிய தாய்ப்பாலை தங்கள் குழந்தைக்குக் கிடைக்கச் செய்வது ஒவ்வொரு தாயின் கடமை. ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது, தண்ணீர் கூட கொடுக்கத் தேவையில்லை. குழந்தைக்கான ஊட்டச்சத்து மட்டுமல்ல... பாலூட்டுவதால் தாய்க்கு ஏற்படும் பலன்களும் பல. தாய்ப்பால் கொடுக்கும்போது பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகான ரத்தப்போக்கு நிற்பதோடு, தொடர்ந்து தாய்ப்பாலூட்டி வருவது குறைந்தது ஆறு மாதங்களுக்கு தாய் கருத்தரிப்பதையும் தவிர்க்கிறது. மேலும், தாயின் உடல் எடை இயல்பு நிலைக்குத் திரும்பவும் பாலூட்டுவது அவசியமாகிறது'' என்று வலியுறுத்திய டாக்டர்...
''மொத்தத்தில் கருவுற்றிருக்கும்போதே, 'என் குழந்தைக்கு நான் தாய்ப்பால் மட்டுமே தருவேன்’ என்கிற அன்பையும் உறுதியையும் தாய்மார்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்!'' என்று அன்பான அறிவுரையையும் தந்தார் முத்தாய்ப்பாக!
- ம.பிரியதர்ஷினி.நன்றி விகடன்.




“அம்மா!” எனும் மொழி தரும் அங்கீகாரமும் அன்பும் உலகின் எந்த சொல்லுக்கும் இல்லை. அன்னை காட்டும் அன்பும், கூடுதல் அக்கறையும் தர உலகில் வேறு எந்த உறவும் கிடையாது . இணையான உள்ளமும் கிடையாது. ”பிறந்த குழந்தையை பிரசவித்த மறுகணம் தாயின் வயிற்றில் வைத்தால், அது தாயின் மார்பைப் பற்றி தன் முதல் சீம்பாலினை உறிஞ்சத் துவங்கும். யாரும் அதனை வழிகாட்ட வேண்டியதில்லை” என்ற செய்தி தரும் கவித்துவமும், வியப்பும் ஏராளம்.
குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால் தான். பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றது. இதனால்தான் குறைந்தது 6 மாதங்கள் வரையாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே… என்று கவலைப்படும் தாய்மார்களும் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தாய்ப்பால் என்பது குழந்தைக்கு மட்டுமல்ல; அம்மாவுக்குமேகூட பலவிதங்களில் நல்லது. பின்னாளில் தாய்க்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு இதனால் பெரிதும் குறைகிறது. சிலர் பிரசவத்துக்குப் பிறகு சரசரவென எடை போட்டுவிடுவார்கள். மீண்டும் பழைய உடல்வாகைப் பெற தாய்ப்பால் கொடுப்பது உதவும். தவிர, தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணுக்கு ஏற்படும் மனத்திருப்தி அவளது வாழ்க்கையின் பிற விஷயங்களிலும் பெரும் உற்சாகத்தை அளிக்கும்.
தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பதைப் போன்ற அபத்தம் வேறு எதுவும் கிடையாது. சொல்லப்போனால், குழந்தை தாய்ப்பாலுக்காக மார்பகங்களை அடிக்கடி உறிஞ்சுவதன் விளைவாக, அம்மாவின் யூட்ரஸ் சுருங்குகிறது. அதனால் அவளது வயிற்றுப்பாகம் கருவுறுவதற்கு முன்பு இருந்த பழைய வடிவை சீக்கிரமே பெறுகிறது.
மார்பகங்களின் அளவுக்கும், பால் சுரக்கும் அளவிற்கும் சம்பந்தமில்லை. அதிக அளவில் கொழுப்புத் திசுக்கள் இருப்பதுதான் பெரிய மார்பகத்தின் பின்னணி. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு
தினமும் 750 மில்லிலிட்டர் பால் சுரக்கும். அதற்கு அடுத்த மாதங்களில் 500லிருந்து 600 மில்லிலிட்டர் பால் சுரக்கும்.
தாய் எனும் சொல்லுக்கு தயாரான அந்த பிரசவித்த கணம் முதல் கூடுதல் ஊட்ட உணவு முக்கியம். தாய்ப்பாலின் மகத்துவம் பரவலாக ஓரளவு தெரிந்ததில், “தாய்ப்பால் கொடு கொடு!” என ஊக்குவிக்கும் கணவன் அதைச் சீராக சுரக்கும் தாய்க்கு கொடுக்கும் அக்கறை சில நேரத்தில் கொஞ்சம் குறைவு தான். ஊட்டமான உணவும் உள்ளமும் மட்டும்தான், பாலை சுரப்பித்திட, அந்த அன்னை ஊக்கமாய் சோர்வின்றி இருந்திட உதவும். “பச்சை உடம்புக்காரி” என நம் பாரம்பரியம் அந்த புது அன்னையை பராமரித்த விதம் அலாதியானது; அறிவியல் மெச்சக்கூடியது.
முதல் ஓரிரு மாதங்கள் பத்தியமாய்ச் சாப்பிடச் சொன்னது, தாய்ப்பாலின் குணத்தைக் கூட்ட மட்டுமல்ல, அதை சுரக்கும் அன்னை ஊட்டமாய் இருந்திடவும் தான். அதிக எண்ணெய் பலகாரம், முந்தைய நாள் சமைத்த உணவு, சீரணிக்க சிரமப்படும் பலகாரங்களைத் தவிர்ப்பது முக்கியம்.
0-6 மாத குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கு 550 க்லோரியும்; 6-12 மாத குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கு 400க்லோரியும் கூடுதலாக தேவை என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம். ‘அட! ஏற்கனவே, மகவை சுமக்கும் போது 10கிலோ வெயிட் போட்டாச்சு..இன்னும் சாப்பிடவா?.. நான் வெயிட் குறைக்க டயட் செய்யலாமா?’ என கேட்கும் புது அம்மாக்கள் இன்று அதிகம். புது அன்னை டயட்டிங்கில் போகவே கூடாது.
குழந்தை பிறந்தவுடனேயே பசும்பாலைக் கொடுப்பது சரியில்லை. அதில்
புரதச்சத்து தேவைக்கதிகமாக
இருக்கிறது. தவிர, அதிலுள்ள சோடியத்தின் அளவு அதிகம் என்பதால் குழந்தையின் சிறுநீரகங்கள் அதிக அளவில் செயல்பட வேண்டியிருக்கிறது.
தாய்ப்பாலில் உள்ள கொலஸ்ட்ரம் என்ற சத்து, குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடியது. குழந்தை பிறந்த இரண்டு நாட்களுக்கு வெளிப்படும் சீம்பாலைத்தான் இப்படிச் சொல்கிறோம்.
தாய்ப்பால் அருந்தி வளர்ந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட அதிக புத்திசாலிகளாக விளங்குகிறார்கள் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பல மாதங்கள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் பிற்காலத்தில் தேவைக்கதிகமான பருமனோடு இருப்பதில்லை.
எவ்வளவு நேரத்திற்கொருமுறை தாய்ப்பால் கொடுப்பது? பசித்து அழும்போது கொடுக்கலாம். மற்றபடி இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்கலாம். பத்திலிருந்து இருபது நிமிடங்கள் வரை பால் கொடுக்கலாம். ஆனாலும் குழந்தைகள் வேகமாகப் பாலை உறிஞ்சிக் கொள்கின்றனவா அல்லது மெதுவாகவா என்பதைப் பொறுத்ததுதானே அது அருந்தும் அளவு? எனவே ஐந்து நிமிடம் பால் கொடுத்தவுடன் குழந்தைக்குத் தூக்கம் வருகிறது என்றால் அதைத் தூங்க அனுமதித்துவிடுங்கள். எழுந்தபிறகு கொடுக்கலாம்.
தாய்ப்பால் அதிகம் சுரக்க டாக்டர்கள் கொடுக்கும் முதல் அறிவுரை, சத்தான உணவுகளோடு அதிக அளவில் பசும்பால் குடியுங்கள் என்பதுதான். எந்த அளவுக்கு அதிகமாக பசும்பால் குடிக்கிறோமோ, அந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்கிறார்கள் டாக்ரர்கள்.
தமிழர்களின் சமையலில் அதிகம் இடம் பிடிக்கும் மூலிகையான பூண்டுக்கும் தாய்ப்பாலை பெருக்கும் சக்தி அதிகம் உள்ளது. தினமும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது என்பது அனுபவ உண்மை. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
அதனால் போலும் எம்முன்னோர்கள் வேர்க்கொம்பு (திப்பலி), மிளகு, நற்சீரகம், உள்ளி போன்றவற்றை அரைத்து உறுண்டைகளாக்கி பனங்கட்டியுடன் பிள்ளை பெற்ற தாய்மாருக்கு சில நாட்களுக்கு உண்ணக் கொடுக்கின்றார்கள். அத்துடன் அவர்களுக்காக ஆக்கப்பெறும் பத்தியக் கறியிலும், சரக்குத்தூளும், பிஞ்சு முருக்கங்காயும், கீளி மீன்களும், புளுங்கல் அரிசியும் முக்கிய இடத்தைப் வகிக்கின்றன. சில ஊர்களில் கருவாடும் பத்தியக் கறிக்காக எடுத்துக் கொள்கின்றனர்.
பூண்டு தாய்ப்பாலை பெருக்குவதோடு மேலும் பல நன்மைகளையும் நமக்கு தருகிறது. தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் பூண்டுக்கு உண்டு
தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க மருத்துவ குறிப்புக்கள் சில..
உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கச் செய்யலாம்.
தாய் தினமும் பசும் பால் குடித்தால் தாய்ப்பால் பற்றாக்குறையே இருக்காது. அதிக புரதசத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு(சிணை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பால் கொடுக்கும் முன் தாய் ஓட்ஸ், பிரட்ஃரஸ்க் போன்ற உணவுகளை உட்கொண்டு விட்டு பால் கொடுக்க ஆரம்பித்தால் பால் அதிகமாக சுரக்கும். தாய்க்கும் போதிய சக்தி கிடைக்கும். குறைந்தபட்சம் தண்ணீர் மட்டுமாவது அருந்தி விட்டு தான் பால் கொடுக்க வேண்டும்.
மீன் வகைகளில் சுறா மீனை உட்கொண்டு வந்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். சுறா மீனை புட்டாக அவித்து, அதனுடன் அதிக அளவில் பூண்டு சேர்த்து சாப்பிட வேண்டும்.
கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.
சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். சுறா மற்றும் சிறிய மீன்களும் சாப்பிடலாம்.
சிறிய மீன்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளவும் மிளகு ஆணம் போல் செய்து சாப்பிடவும்.
காலையில் டிபன் சாப்பிட்ட பின் பாலில் ஓட்ஸ் போட்டு காய்ச்சி குடிக்கவும். அதே போல் இரவும் தூங்கும் முன் ஓட்ஸ் குடிக்கலாம். இவற்றைக் கண்டிப்பாக கர்ப்பகாலத்தின் 7வது மாதத்தில் இருந்து சேர்ப்பது மிகவும் நல்லது... அப்படி முடியவில்லையானாலும் பிரசவித்த பின்பாவது கண்டிப்பாக உண்ண வேண்டும் வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உளுந்தை பொடி செய்து வைத்துக்கொண்டு பாலில் அதை சேர்த்து காய்ச்சியும் குடிக்கலாம். இதை காலை வேளையில் சாப்பிடலாம். இரவில் சாப்பிட வேண்டாம். வாதம் இருந்தால் சாப்பிடக்கூடாது.
ஓம வாட்டர் என்று கடையில் கிடைக்கும் அதை வாங்கி தண்ணீரில் ஊற்றி குடிக்கலாம்.
ஓம வாட்டர் கிடைக்கவில்லை என்றால் வெறும் ஓமத்தைகூட 2 தேக்கரண்டி எடுத்து இரண்டு கைகளிலும் வைத்து கசக்கி உமியை போக்கிவிட்டு இரவு தண்ணீரில்( 1கிளாஸ்) போட்டு ஊறவைத்து காலையில் முழித்ததும் அந்த தண்ணீரைமட்டும் வடித்து எடுத்து குடிக்கவும்.
பேரீச்சம்பழம், திராட்சைப்பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயாபீன்ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.
அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.
ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கிராம் அளவு காலையில் மட்டும் பாலில் கலந்து குடித்து வர தாய்பால் பெருகும்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.




தாய் மார்களே உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் போது நீங்கள் கோபப்பட கூடாதாம்-
ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்,,!

கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை
கூட ஏற்படுத்துகிறதாம்.
எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கோபம் என்பது ஒரு உணர்வு.
எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள்.
கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான்
அதேசமயம் எதற்கெடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது.
கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழகவேண்டும்.
கோபம் வரக்கூடாது.
வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது.
அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கோபம் உடனே மறைந்து விட வேண்டும்.
திரும்ப திரும்ப பேசியதைப் பேசி கேட்பவரையும் கோபத்தின்
உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது.
கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது.
கோபத்தோடு தன் குழந்தைக்கு தாய்பால் அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கிவிடுமாம்.
கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது.
நரம்பு மண்டலம் முழுவதும் சீர்குலைகிறது.
உடல் பதறுகிறது.
உடலில் சோர்வு ஏற்படுகிறது.
மறுபடியும் உடல் தன்னிலைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின்றன.
எனவே உங்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும்.
தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
கோபம் வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நம்முடைய மூச்சுக்காற்றை கவனிக்க வேண்டும்.
மூச்சு உள்ளே போவதையும், வெளியே வருவதையும் சில நிமிடங்கள் கவனித்து வந்தீர்களானால் கோபம் வராது வந்தாலும் அடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் கோபத்தை கட்டுப்படுத்த தியானம் சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக