செவ்வாய், 25 ஜூலை, 2017

கார்கில் போர் வெற்றி தினம் ஜூலை 26.



கார்கில் போர் வெற்றி தினம்  ஜூலை  26.

கார்கில் போர் வரலாறு:

இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள பனி படரும் மிக உயர்ந்த இமயமலை பிரதேசம். பாரத மாதாவின் மணி மகுடத்தில் அழகுக்கு அழகு சேர்க்கும் அழகிய நகரம். திரும்பும் திசையெல்லாம் உயர்ந்து நிற்கும் மலை முகடுகள்.. அதை சுற்றி போர்த்தப்பட்டிருக்கும் பனித் திரைகள்.
பார்க்க பார்க்க பரவசப்படுத்தும் இந்த நகரம் ஸ்ரீநகரில் இருந்து 205 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஸ்ரீநகரையும் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மட்டும்தான் கார்கில் வழியாக செல்கிறது. கரடு முரடான மலை பிரதேசத்தில் இது ஒன்றுதான் போக்கு வரத்துக்கான ஒரே வழி.
தரை பகுதியில் இருந்து 16 ஆயிரம் அடி முதல் 18 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. இந்த கோட்டின் இருபகுதியிலும் பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன.
இரு நாட்டு ராணுவமும் அந்த பகுதியில் முகாமிட்டு இரவு பகலாக எல்லையை கண்காணித்து வருகின்றன. துப்பாக்கி குண்டுகளுக்கு கூட அஞ்சாத ராணுவ வீரர்களை குளிர்காலத்தில் பனிக் கீற்றுகள் துளைத்து நடுங்க வைத்து விடும். வெப்பம் (-48) டிகிரிக்கு மாறி விடும். குளிரில் பனிக்கட்டிகள் அந்த பகுதியையே சூழ்ந்து விடும்.
எனவே அந்த குளிர்காலத்தில் இரு நாட்டு ராணுவத்தினரும் தங்கள் பாசறைகளை அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவார்கள்.
குளிர்காலம் முடிந்ததும் மீண்டும் ராணுவம் தங்கள் நிலைகளுக்கு திரும்பும். அதை தொடர்ந்து ராணுவத்தின் ரோந்தும் தீவிரமாகும். இதுதான் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் வழக்கம்.
காஷ்மீருக்கு சொந்தம் கொண்டாடும் பாகிஸ்தானுக்கு எவ்வளவு பட்டாலும் புத்திவராது. கார்கில் பகுதிக்குள் ஊடுருவி ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலையை துண்டித்து விட்டால் அங்கிருந்து இந்தியாவை எளிதில் தாக்கலாம். இதன் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று பாகிஸ்தான் கனவு கண்டது.
இந்த ஊடுருவல் முயற்சிக்கு பல முறை திட்டம் வகுத்தார்கள். ஆனால் ஜியா உல் ஹக், பெனாசிர் பூட்டோ ஆகியோர் அதிபர்களாக இருந்தபோது அந்த திட்டத்தை நிராகரித்து விட்டனர்.
ஏற்கனவே 1971–ல் நடந்த போரில் பட்ட சூடும், அவ்வப்போது இந்திய ராணுவத்தின் அதிர வைக்கும் பதிலடிகளும் போரை நினைத்தாலே அவர்களை அஞ்சி நடுங்க செய்தது.
ஆனால் 1990–களில் பாகிஸ்தான் தூண்டுதலோடு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிராத தாக்குதல்கள் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவுக்கு வேட்டு வைத்தது. இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் உருவானது.
இந்த பதட்டத்தை தவிர்க்கவும் காஷ்மீர் பிரச்சினையை அமைதியாக தீர்த்து கொள்ளும் வகையிலும் 1999 பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு பஸ் பயணத்தை தொடங்கி வைத்து லாகூருக்கு பஸ்சில் சென்று வந்தார். இந்தியா அன்புடன் நேசக்கரம் நீட்டியது. ஆனால் பாகிஸ்தான் வம்பு செய்தது.
ஒரு புறம் நட்பு பாராட்டி கொண்டே திரைமறைவில் ஊடுருவல் வேலைகளை கச்சிதமாக செய்து கொண்டிருந்தது. 1999–ம் ஆண்டு குளிர்காலத்தில் படைகள் கீழே இறங்குவதற்கு பதில் அங்கேயே முகாமிட்டு இருந்தன. ராணுவ தளவாடங்களை கொண்டு வந்து குவித்தனர். படைகள் கீழே இறங்கி விட்டதால் காலியாக இருந்த இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியது. கார்கிலில் ஊடுருவி எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றனர்.
130 சதுர கிலோ மீட்டர் முதல் 200 சதுர கிலோ மீட்டர் வரை ஊடுருவி விட்டனர். முஷ்கோ பள்ளத்தாக்கு, டிராஸ் அருகில் உள்ள மார்போலா மலை முகடுகள், கார்கிலுக்கு அருகில் உள்ள கக்சர், சிந்து நதியின் கிழக்கு பகுதியில் உள்ள படாலிக் பகுதி, எல்லையோரத்தில் உள்ள சோர்பாட்லா பகுதி, சியாசின் பனி மலைக்கு தெற்கே அமைந்துள்ள துர்தோக் ஆகிய பகுதிகளை முற்றிலுமாக தங்கள் வசப்படுத்தி விட்டன.
இந்திய ராணுவ நிலைகளை கைப்பற்றியதோடு புதிதாக ராணுவ தளங்களையும் அமைத்து விட்டனர்.
வல்லவர்களாக இருந்தாலும் நம்மவர்கள் கோட்டை விடுவதிலும் கெட்டிக்காரர்களல்லவா? கார்கில் விசயத்திலும் அப்படித்தான்! பாகிஸ்தான் ஊடுருவலை கண்டு பிடிப்பதில் கோட்டை விட்டு விட்டனர்.
மாடு மேய்ப்பவர்கள்தான் முதலில் இந்த ஊடுருவலை இந்திய ராணுவத்தின் பார்வைக்கு கொண்டு வந்தனர். மலை முகடுகளில் மாடு மேய்க்க சென்றவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடமாட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மாடு மேய்ப்பவர்கள் சொல்லிய தகவலை கேட்டதும் உஷார் அடைந்த ராணுவத்தினர் கேப்டன் சவுரப் காலியா என்பவரது தலைமையில் படாலிக் பகுதிக்கு ரோந்து சென்றனர். அவர்களில் 5 பேரை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து சித்ரவதை செய்து கொன்றனர். அப்போதும் இது தீவிரவாதிகள் செயலாகத்தான் இருக்கும் என்று தான் நமது ராணுவம் நினைத்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் அங்கிருந்து கார்கில் ராணுவ கிடங்கை குறி வைத்து குண்டு வீசப்பட்டதில் ராணுவ கிடங்கு சேதமடைந்தது. அதன் பிறகுதான் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி இருக்கிறது என்பதை உறுதி செய்தனர்.
முதுகில் குத்திய பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட பிரதமர் வாஜ்பாய் போர் பிரகடனப்படுத்தினார்.
தாய் மண்ணை காக்க கார்கில் போருக்கு நமது வீரர்கள் தயாரானார்கள்.
ஒரு ஆண்டுக்கு முன்புதான் (1998–ல்) 2–வது முறையாக பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலகிற்கே சவால் விடுத்த நமக்கே பாகிஸ்தான் சவால் விடுவதா? என்ற ஆவேசம்....
தரைப்படை, விமானப்படை, கப்பல் படை அத்தனையும் அசுர வேக தாக்குதலை தொடங்க தயாரானது. 2 லட்சம் வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கார்கில் போர்களத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
ஆனால் கார்கில் கரடு முரடான மலை பகுதி! போக்கு வரத்துக்கு ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலை மட்டும்தான் உண்டு. ஒரே வழியில் லட்சக்கணக்கில் வீரர்கள் செல்வது... ஆயுதங்கள் கொண்டு செல்வது.... பீரங்கிகள் அணிவகுப்பது... அவ்வளவு எளிதானதல்ல.
தாய் நாட்டை காக்க உயிரை துச்சமென மதித்து இளம் இந்திய சிங்க குட்டிகள் மலை முகடுகளில் துள்ளி குதித்தன. மிக உயர்ந்த மலை சிகரத்தில் கடுமையான சவால்களை சந்தித்து நமது ராணுவ வீரர்கள் நடந்து முன்னேறினார்கள்.
முதலில் ஸ்ரீநகர் – லடாக் தேசிய நெடுஞ்சாலையை மீட்க போராடினார்கள். இந்த போராட்டம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மலை முகடுகளின் உச்சியில் இருந்து பாகிஸ்தான் பொழிந்த குண்டு மழையையும், துப்பாக்கி குண்டுகளையும் கீழே இருந்து சந்தித்து அங்குலம் அங்குலமாக நகர்ந்தார்கள்.
சாலை முழுவதும் குண்டு வீச்சில் சேதம் அடைந்து கிடந்தது. வழி நெடுக கண்ணி வெடிகளும் மிரட்டியது. அவற்றை ராணுவத்தினர் அப்புறப்படுத்தினார்கள். 9 ஆயிரம் கண்ணி வெடிகள் செயலிழக்கச் செய்யப்பட்டது.
சிறு சிறு குழுக்களாக வெறும் 30 ஆயிரம் வீரர்கள் மட்டுமே போர்க்களத்தில் இருந்தார்கள். படை சிறிதாக இருந்தாலும் அவர்களின் நெஞ்சுரம் அதிகமாக இருந்தது.
எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை கடந்தால் பாகிஸ்தான் படைகளை பல முனைகளில் புகுந்து தாக்கி துவம்சம் செய்து இருப்பார்கள். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடக்க கூடாது என்ற கட்டுப்பாடு ராணுவத்துக்கு விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் நேருக்கு நேராக தாக்கி அவர்களை ஓட வைப்பது மட்டும்தான் சாத்தியமாக இருந்தது.
பகல் நேரத்தில் ராணுவம் நகர்ந்ததால் மலை உச்சியில் இருந்து கவனித்து குண்டுகளை வீசினார்கள்.
இதனால் இரவு நேரத்தையே தாக்குதலுக்கு தேர்வு செய்தார்கள். அடர்ந்த காடு... முகம் தெரியாத கும்மிருட்டு... கண்களில் தெறித்த கோபக் கனலில் ராத்திரி நேரத்தில் வேட்டையாடினார்கள். எதிரிகள் பலரை எமலோகத்துக்கு அனுப்பினார்கள்.
பாகிஸ்தான் வசம் இருந்த ஒவ்வொரு சிகரத்தையும் நமது ராணுவத்தினர் மிகப்பெரிய போராட்டத்துக்கு இடையே கைப்பற்றினார்கள். மலை உச்சியில் இருந்து தாக்கிய பாகிஸ்தான் ராணுவத்தினரை மலை பாறைகளுக்கு இடையே ஊர்ந்தபடி சென்று வீழ்த்தினார்கள்.
முன்னேறிய ராணுவத்துக்கு வலுசேர்க்க விமானப் படை விமானங்களும் குண்டுகளை வீசியது. ஆனால் உயர்ந்த மலை முகடுகளுக்கிடையே பனி மூட்டத்தில் விமானங்களை செலுத்துவது கடினமாக இருந்தது.
இந்த போரில் இந்தியா 3 விமானங்களை இழந்தது. மிக் 27 மிக்–21 ஆகிய இரு விமானங்களை இந்தியா இழந்தது. விமானப்படை லெப்டினன்ட் நசிகேதாவை பாகிஸ்தான் சிறை பிடித்தது. எம்.ஐ.17 என்ற விமானத்தையும் சுட்டு வீழ்த்தினார்கள். இதில் விமானத்தில் இருந்த 4 வீரர்கள் பலியானார்கள்.
போர் உக்கிரமானதே தவிர முடிவுக்கு வரவில்லை. தரைப்படைக்கு ஆதரவாக பீரங்கிப்படையும் மலை அடி வாரங்களில் இருந்து எதிரிகள் நிலைகள் மீது குண்டு மழை பொழிந்தது. முற்றிலும் மலை மீது நடந்த மாறுபட்ட போர். இளம் வீரர்களுக்கு புது அனுபவம். இதனால் வீரர்கள் பலர் இன்னுயிரை இழக்க நேரிட்டது. ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.
நமது கடற்படையினர் போரின் போக்கை மாற்றினர். எதிரிகளை வீழ்த்த புது வியூகம் அமைத்தனர். கராச்சி துறைமுகத்துக்கு சரக்கு கப்பல்கள் செல்ல முடியாதபடி நடுக்கடலில் தடுத்து நிறுத்தியது நமது கடற்படை.
ஒரு புறம் பெருளாதார சிக்கல். இன்னொரு புறத்தில் போர். நிலைமையை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. ராணுவத்துக்கு 6 நாட்களுக்குத்தான் எரிபொருள் இருந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் அலறியது.
அமெரிக்க அதிபர் பில்கிளிண்டனிடம் போரை நிறுத்த உதவும்படி பிரதமர் நவாஸ் ஷெரீப் கெஞ்சினார். இந்திய தரப்பு நியாயத்தை உணர்ந்த அமெரிக்கா உடனடியாக கார்கிலில் இருந்து படைகளை வாபஸ் பெறும்படி எச்சரித்தது.
இந்திய வீரர்களின் ஆவேச தாக்குதலில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் ஒவ்வொன்றாக இழந்து வந்த பாகிஸ்தான் உலக நாடுகளின் எச்சரிக்கையால் படைகளை விலக்கி கொள்ள முன் வந்தது. இதற்கான அறிவிப்பை நவாஸ்ஷெரீப் வெளியிட்டார்.
இது அப்போது தளபதியாக இருந்த முஷரப்புக்கு பிடிக்கவில்லை. இதுவே பிற்காலத்தில் ராணுவ புரட்சி நடத்தி முஷரப் ஆட்சியை பிடிக்க வித்திட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் படைகள் 80 சதவீதம் வெளியேறிய பிறகும் ஊடுருவிய தீவிரவாத குழுக்கள் போரை தொடர்ந்தது. அவர்களை ஒரு வாரத்தில் அடித்து விரட்டி கார்கில் பகுதி முழுவதையும் நமது ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
போர் முடிவுக்கு வந்ததாக ஜூலை 26–ந் தேதி இந்திய தேசம் உலகுக்கு அறிவித்தது.
இந்த போரில் இந்தியா 527 வீரர்களை தியாகம் செய்துள்ளது. 1863 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக எங்கள் தரப்பில் 357 வீரர்களை தான் இழந்தோம் என்று போலி கணக்கு காட்டியது பாகிஸ்தான். ஆனால் 4 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி விட்டனர் என்ற உண்மையை பிற்காலத்தில் நவாஸ்ஷெரீப்பே ஒத்துக் கொண்டார்.
"நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்!"



கார்கில் நினைவு தினம்!

இமயமலையில் உள்ள கார்கில் பனிசிகரத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் போர் தொடுத்தது. இதை கொஞ்சமும் தயங்காமல் நம் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலின் காரணமாக பாகிஸ்தான் படைகள் பின்வாங்கி சென்றன. அந்த போரில் நம் வீரர்கள் உயிரிழந்ததையும், இந்திய ராணுவம் வெற்றி பெற்றதன் நினைவாகவும் ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 17-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி காஷ்மீரில் இருக்கும் கார்கில் போர் நினைவிடத்தில் பலரும் உயிரிழந்த நம் நாட்டின் ராணுவ வீரர்களுக்காக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் மற்றும் முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.
அது சரி கார்கில் போர் பற்றி முழுமையான தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?.
கார்கில் போர் பிரச்சனை, 1999இல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், நடந்த போராகும். இந்த போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது. கார்கிலை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையான விஜய் நடவடிக்கை என்ற பெயரிலும் இது வழங்கப்படுகிறது.
மே 1999இல் பாகிஸ்தான் இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாடுக் கோடைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்ததே போருக்கு முக்கிய காரணமாகும். போரின் ஆரம்பத்தில் பாகிஸ்தான், பழியை முற்றிலுமாக காஷ்மீரி போராளிகள் மீது சுமத்தியது. ஆனால், உயிரிழந்த வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாகவும், போருக்குப்பின் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆகியோர் விடுத்த அறிக்கைகள் மூலமாகவும், பாகிஸ்தான் துணை இராணுவப் படையினர், தளபதி அஷ்ரஃப் ரஷீத் தலைமையில் போரில் ஈடுபட்டிருந்தது உறுதியானது.
இந்திய வான்படையின் துணையோடு, இந்தியத் தரைப்படை, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் போரளிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்டது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் படைகள் இந்தியாவுடனான போரைக் கைவிட்டன.
இப்போரானது, மிக உயர்ந்த மலைத்தொடரில் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு நடந்த போருக்கு சிறந்த உதாரணமாகும். இதுவரை இந்த போர் மட்டுமே, அணு ஆயுத சக்தியுடைய நாடுகள் இரண்டுக்கிடையில் நடந்த நேரடிப் போராகும். இந்தியா முதன்முறையாக 1974 இல் வெற்றிகரமாக அணு ஆயுதச் சோதனை நிகழ்த்தியது. பாகிஸ்தானும் இரகசியமாக அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், 1998 ஆம் ஆண்டு இந்தியா நிகழ்த்திய இரண்டாவது அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு இரண்டு வாரங்கள் கழித்தே பாகிஸ்தான் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை நிகழ்த்தியது.
அமைவிடம்
1947 ஆம் ஆண்டு நடந்த இந்திய பிரிவினைக்கு முன், கார்கில் பகுதி லடாக்கின் பல்திஸ்தான் மாவட்டத்தோடு இணைந்திருந்தது. உலகின் பல உயர்ந்த மலைகளைக் கொண்ட கார்கில் பகுதி, பல இன, மொழி மற்றும் சமய வேறுபாடுடைய மக்களைக் கொண்டது. முதல் காஷ்மீர் போருக்குப் பின் (1947 – 1948) வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டின் படி, கார்கில் நகரம் இந்திய மாநிலமான ஜம்மூ காஷ்மீரின் லடாக் பகுதியுடன் இணைக்கப்பட்டது.
இந்திய-பாகிஸ்தான் போரில் (1971) பாகிஸ்தானின் தோல்விக்குப் பின் இந்தியாவும் பாகிஸ்தனும் செய்துகொண்ட சிம்லா உடன்படிக்கையில், இரு நாடுகளும் கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி இராணுவ மோதல்களில் ஈடுபடக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
போர் நடைபெற்ற கார்கிலின் அமைவிடம்
ஸ்ரீநகரில் இருந்து 205 கி.மீ. (127 மைல்) தொலைவில், இந்தியாவிற்குட்பட்ட பகுதிகளின் வடக்கு எல்லையில் உள்ளது. இமய மலைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் மிதமான வானிலை கொண்டதாக கார்கில் விளங்குகிறது. கோடை காலங்கள் குளுமையாகவும்; குளிர்காலங்கள் நீண்டதாகவும், மிகவும் குறைந்த வெப்பநிலை (-48 °C வரை) கொண்டதாகவும் இருக்கும். ஸ்ரீநகரையும் லேவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான NH-1D, கார்கில் வழியாக செல்கிறது. ஊடுருவல் நடந்தது இந்த சாலைக்கு சிறிது தொலைவில் இருக்கும் முகடுகளில்தான். இப்பகுதியல் உள்ள இராணுவ கண்காணிப்புத் தளங்கள் தரைமட்டத்தில் இருந்து சுமார் 5000 மீட்டர் (16,000 அடி) உயரத்தில் அமைந்துள்ளன.மாவட்டத் தலைநகரைத் தவிர முஷ்கோ பள்ளத்தாக்கு, திரஸ் எனும் நகரம், படாலிக் பகுதி, கார்கிலின் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர்.
கார்கில் நகரம் ஊடுருவப்பட்டதற்கு முக்கிய காரணம், அதன் அருகில் இருந்த காலியான இராணுவ கண்காணிப்புத் தளங்களாகும். இதுபோன்ற இடங்களில், மலை முகடுகளின் உச்சியில் தற்காப்பு நிலைகள் ஏற்படுத்தப்பட்டால், அது கோட்டையை போன்ற பாதுகாப்பைத் தரும். உயரத்தில் இருக்கும் இராணுவத்தை எதிர்த்துப் போரிடும் படையினருக்கு பன்மடங்கு அதிக பலம் தேவைப்படும் என்பதைத் தவிர நடுங்க வைக்கும் குளிரையும் அப்படையினர் தாக்குப்பிடித்தாக வேண்டும்.
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்கார்டூ எனும் நகரம் கார்கிலில் இருந்து 173 கி.மீ (107 மைல்) தொலைவில்தான் உள்ளது. அந்நகரம் பாகிஸ்தான் படையினருக்கு, தாக்குதலின் போது தேவையான ஆயுதங்கள் மற்றும் பிற தளவாடங்களை விநியோகிக்கக்கூடியதாக அமைந்தது.
பின்புலம்
1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின் இரு நாடுகளுக்கிடையே பெரும்பாலும் அமைதியே நிலவியது. ஆனால் சியாசென் பனிமலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இரு நாடுகளும் செய்த முயற்சிகளும் அதன் காரணமாக அமைக்கப்பட்ட இராணுவ கண்காணிப்பு நிலைகளும், சிறிய அளவில் மோதல்கள் ஏற்பட காரணமாக அமைந்தது. காஷ்மீரில் 1990 களில் பாகிஸ்தான் ஆதரவுடன் நடந்த பிரிவினைவாத மோதல்களும், இரு நாடுகளும் 1998 இல் மேற்கொண்ட அணு ஆயுத சோதனைகளும், பதற்றம் அதிகரிக்கக் காரணமாயின. பதற்றத்தைத் தணிக்கவும், காஷ்மீர் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளவும் இரு நாடுகளும் பிப்ரவரி 1999 இல், லாகூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பாகிஸ்தான் இராணுவத்தின் சில பிரிவுகளும் பாகிஸ்தான் துணை இராணுவப் படையினரும் முஜாஹிதீன் போராளிகளைப்போல இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் 1998-1999 களில் ஊடுருவத் தொடங்கினர். இந்த ஊடுருவல் பத்ர் நடவடிக்கை என்ற குறியீட்டுப் பெயரால் அறியப்பட்டது. காஷ்மீருக்கும் லடாக்குக்கும் உள்ள இணைப்பைத் துண்டிப்பதும்; சியாசென் பனிமலையில் இருக்கும் இந்தியப் படையினரைப் பின் வாங்க வைத்து காஷ்மீர் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியாவை நிர்பந்திப்பதும் இதன் முக்கிய நோக்கங்களாகக் கருதப்படுகின்றன. காஷ்மீர் பகுதியில் பதற்றம் அதிகரித்தால் சர்வதேச நாடுகள் தலையிடும் என்றும் அதன் மூலம் காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் முடிவு காண முடியும் என்றும் பாகிஸ்தான் நம்பியது.
இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் நடந்து வரும் கிளர்ச்சியையும் இதன்மூலம் பெரிதாக்க முடியும் என்பதும் இதன் ஒரு முக்கிய இலக்காக இருந்திருக்கலாம்.பாகிஸ்தான் இராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் சாகித் அஸிஸ் மற்றும் ஐ.எஸ்.ஐ யின் கூற்றுகளால் ஊடுருவலில் முஜாகிதீன் ஈடுபடவில்லை என்பதும், ஊடுருவியதும் கார்கில் போரில் ஈடுபட்டதும் பாகிஸ்தான் படையினர்தான் என்பதும் புலனாகிறது. இந்த நடவடிக்கை, இந்தியாவின் மேக்தூத் நடவடிக்கைக்குப் பாகிஸ்தானின் பதிலடி என்றும் நம்பப்படுகிறது.
இந்தியாவின் அப்போதைய தரைப்படைத் தளபதியான வேத் பிரகாஷ் மாலிக் மற்றும் பலர், இந்த ஊடுருவல் பாகிஸ்தான் இராணுவத்தால் பல காலமாகத் திட்டமிடப்பட்டது என்று கருதுகின்றனர். பல முறை பாகிஸ்தான் இராணுவம் இத்திடத்தை செயல்படுத்தப் பாகிஸ்தான் தலைவர்களிடம் (சியா உல் ஹக் மற்றும் பெனசீர் பூட்டோ) அனுமதி கேட்டும், இது பெரும் போருக்கு வித்திடக்கூடும் என்ற அச்சத்தால் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தான் இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதும் தாக்குதலுக்கானத் திட்டங்கள் மீண்டும் வகுக்கப்பட்டன. போருக்குப் பின் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், தனக்குத் தாக்குதல் திட்டங்கள் குறித்து எவ்விதத் தகவல்களும் தெரியாது என்றும் இந்தியப் பிரதமராக விளங்கிய அடல் பிகாரி வாஜ்பாய் தொலைப்பேசியில் அழைத்து எல்லை நிலவரம் குறித்துப் பேசிய பின்னர்தான் தனக்குத் தாக்குதல் பற்றித் தெரியும் என்றும் கூறியுள்ளார். ஷெரீஃப், இத்தாக்குதலுக்கு முழு காரணம், பாகிஸ்தான் இராணுவத் தளபதியாக விளங்கிய பர்வேஸ் முஷாரஃபும் அவரது கூட்டாளிகளான சில தளபதிகளும்தான் என்று கூறியுள்ளார். ஆனால் தாக்குதல் திட்டம் குறித்து நவாஸ் ஷெரீஃபுக்கு, வாஜ்பாய் பிப்ரவரி 20 அன்று லாகூர் வருவதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டது என்று பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார்..


போரின் போக்கு
மோதல் சம்பவங்கள்(1999)
மே 3- கார்கிலில் பாகிஸ்தான் ஊடுருவியிருப்பது அங்குள்ள மேய்ப்பர்கள் மூலம் அறியப்பட்டது
மே 5- இந்திய இராணுவம் கார்கில் பகுதிக்கு ரோந்துக் குழுவை அனுப்பியது; பாகிஸ்தான் வீரர்கள், ஐந்து இந்திய வீரர்களைச் சிறைபிடித்து சித்திரவதை செய்து கொன்றனர்.
மே 9- பாகிஸ்தான் குண்டு வீச்சில் கார்கிலில் இருந்த ஆயுதக் கிடங்கு சேதம் அடைந்தது
மே 10- திரஸ், கக்சர் மற்றும் முஷ்கோ பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
மே மாத மத்தியில் இந்திய இராணுவம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து படைகளை கார்கில் பகுதிக்கு அனுப்பியது
மே 26 – ஊடுருவியவர்களுக்கெதிரான வான்வழித் தாக்குதலை இந்திய வான்படைத் தொடங்கியது
மே 27- இந்திய வான்படை மிக்-21 மற்றும் மிக்-27 ஆகிய இரண்டு போர் விமானங்களை இழந்தது; வான்படைலெப்டினன்ட் நசிகேதாவை பாகிஸ்தான் வீரர்கள் போர் கைதியாகப் பிடித்துச் சென்றனர்
மே 28 – இந்திய வான்படையின் எம்.ஐ-17 என்ற போர் விமானம் பாகிஸ்தான் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது; அதனுள் இருந்த நான்கு வீரர்களும் உயிரிழந்தனர்
ஜூன் 1- பாகிஸ்தான் தனது தாக்குதலை பலப்படுத்தியது; இந்தியாவின் NH 1A தேசிய நெடுஞ்சாலை குண்டுவீசித் தாக்கப்பட்டது
ஜூன் 5- ஊடுருவலில் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டிருப்பது, இறந்துபோன பாகிஸ்தான் விரர்களிடமிருந்து இந்திய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதியானது
ஜூன் 6- இந்திய இராணுவம் கார்கிலில் பெரும் தாக்குதலைத் தொடங்கியது
ஜூன் 9- படாலிக் பகுதியில் இரு முக்கிய நிலைகளை இந்திய இராணுவம் கைப்பற்றியது
ஜூன் 11- சீனா சென்றிருந்த பாகிஸ்தான் இராணுவ தளபதி பர்வேஸ் முஷாரஃபுக்கும் ராவல்பிண்டியில் இருந்த பாகிஸ்தானின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அஸிஸ் கானுக்கும் நடந்த உரையாடலை இந்தியா இடைமறித்து, ஊடுருவலில் பாகிஸ்தான் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்தது
ஜூன் 13- இந்திய இராணுவம், திரஸிலுள்ள தோலோலிங் பகுதியைக் கைப்பற்றியது
ஜூன் 15- அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கார்கிலில் இருந்து படைகளைத் திரும்பப்பெறுமாறு வலியுருத்தினார்
ஜூன் 29- இந்திய இராணுவம், இரண்டு முக்கிய நிலைகளான புள்ளி 5060 மற்றும் புள்ளி 5100 ஆகியவற்றைக் கைப்பற்றியது
ஜூன் 2- இந்திய இராணுவம் கார்கிலில் மும்முனைத் தாக்குதலைத் தொடங்கியது
ஜூன் 4- இந்திய இராணுவம் பதினோரு மணிநேரப் போராட்டத்திற்குப்பின் டைகர் ஹில் பகுதியை மீட்டது
ஜூன் 5- இந்திய இராணுவம் திரஸ் பகுதியை முழுமையாக மீட்டது. கிளின்டனுடனான சந்திப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் படைகளைத் திரும்பப்பெற ஒப்புக்கொண்டார்
ஜூன் 7- இந்திய இராணுவம் படாலிக் பகுதியிலுள்ள ஜுபார் என்ற இடத்தைக் கைப்பற்றியது
ஜூன் 11 – பாகிஸ்தான் இராணுவம் கார்கிலில் இருந்துத் திரும்பத் தொடங்கியது; இந்திய இராணுவம் படாலிக் பகுதியில் முக்கிய முகடுகளைக் கைப்பற்றியது
ஜூன் 14- இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், விஜய் நடவடிக்கை வெற்றி அடைந்ததாக அறிவித்தார்; பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர இந்திய அரசு பல நிபந்தனைகளை முன்வைத்தது
ஜூன் 26- கார்கில் பிரச்சனை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியவர்கள் கார்கிலில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக