திங்கள், 15 ஜூன், 2020

உலக மூத்தோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம் ஜூன் – 15



 
உலக மூத்தோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம் ஜூன் – 15

*(World Elder Abuse Awareness Day)*

உலகளவில் 60 வயதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை 1995ஆம் ஆண்டில் 542 மில்லியனாக இருந்தது. 

இது 2025இல் 1.2 பில்லியனாக அதாவது இரு மடங்காக உயரப்போகிறது.

சுமார் 4 முதல் 6 சதவீதம் முதியோர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை.

இதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

முதியவர்களை மரியாதையுடன் நடத்த ஐ.நா. இத்தினத்தை அறிவித்துள்ளது.
~_,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,_

ஞாயிறு, 14 ஜூன், 2020

உலக காற்று தினம் ஜூன் 15:


உலக காற்று தினம் ஜூன் 15: 

காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.

நம் முன்னோர்கள் இயற்கையையே தெய்வமாக எண்ணி வணங்கினர். பஞ்ச பூதங்களான காற்று,நீர்,நிலம்,ஆகாயம், நெருப்பு இவற்றின் தொகுப்புதான் உலகமாகும்.
மனித நாகரீகம் வளர வளர இயற்கையும் சீர்கேடு அடைய ஆரம்பித்துள்ளது. இயற்கையை சீரழித்தது, உயிரினங்களில் மனிதன் மட்டும்தான். மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அழித்தான். மரங்களை வெட்டி காடுகளை அழித்து மனைநிலங்களாக மாற்றினான். நிலத்தைத் தோண்டி நிலக்கரி பெட்ரோல் எடுத்து, இயற்கையை நாசப்படுத்தினான். நிலத்தடி நீரை உறிஞ்சி நீர் இல்லாமல் வறண்ட பிரதேசமாக மாற்றினான். மனிதன் ஐம்பூதங்களையும் பாழாக்கியதன் விளைவுதான் பூமி வெப்பம், பூகம்பம், சுனாமி, வறட்சி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள். இந்த பஞ்ச பூதங்களின் பாதிப்பு தான் மனிதனை பல நோய்களுக்கு ஆளாக்கியுள்ளது.

இயற்கையை நாம் எந்தளவுக்கு மாசு படுத்தியுள்ளோம் என்பதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கொஞ்சமாவது அறிந்து கொள்வோமா?

உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்றுதான். காற்று எங்கும் நிறைந்த பொருள். இதனை கண்ணினால் பார்க்க முடியாவிடினும், இதன் செயலால் இதனை உணர்ந்து கொள்கிறோம். ஆறு அறிவுடைய மனிதன் முதல் ஓரறிவுடைய தாவரம் வரை உள்ள ஒவ்வோர் உயிருக்கும் காற்று இன்றியமையாததாகும். இக்காற்று இல்லையென்றால் எந்த உயிரும் வாழ முடியாது. காற்றோட்டமில்லாத இடத்திலும், மக்கள் நிறைந்த இடத்திலும் நச்சுக்காற்று மிகுந்திருக்கும் ஆதலால் அங்கு அதிக நேரம் தங்குவதற்கு சிரமமாக இருக்கும். ஒருவேளை தங்க நேரிட்டால் தூய காற்றை சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறும்.

உயிர்கள் வாழ்வதற்கு உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அவசியம்வேண்டியவைதான். ஆனாலும் உணவின்றி சில நாட்களும், நீரின்றி சிலமணிநேரங்களும் உயிர்வாழ நம்மால் முடியும். ஆனால் தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. எனவே உயிர் வாழ்க்கைக்கு தூய காற்று இன்றியமையாதது. உயிரினங்கள் தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடுமிகவும் முக்கியமாகும். தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்-டை-ஆக்ஸைடு என்றகரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற் சாலையாக இருந்த காடுகளை அழித்ததன்விளைவுதான் காற்றில் கரியமில வாயுவின் ஆதிக்கம் அதிகரித்தது. மேலும் எண்ணற்ற தொழிற் சாலைகளின் புகை, வாகன புகை என பல வகைகளில் காற்றுமாசடைந்து வருவதால் இயற்கை சீர்கெட்டு, மனித இனமும் ஆரோக்கியமின்றி அலைந்து கொண்டிருக்கிறது - நெருங்கிய வீடுகள், பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தல், செங்கல் சூளைகள்,சுண்ணாம்புக் காளவாய்கள்,இரசாயன தொழிற்சாலைகள், புகையை ஏற்படுத்தும் காட்டுத்தீ போன்றவற்றால் வரும் புகையால் காற்று மண்டலம் மாசடைந்துள்ளது. இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்று. தாவரங்களுக்கும் காற்று தேவை.

உயிரினங்கள், தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை- ஆக்ஸைடு மிகவும் முக்கியம்.

தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்- டை -ஆக்ஸைடு என்ற கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன.நாட்டின் வளர்ச்சிக்காக அழிக்கப்பட்ட காடுகள், தொழிற்சாலைகளின் அதிகரிப்பு, வாகனப் புகை போன்ற பல காரணங்களினால் காற்று மாசடைகிறது. காற்றின் ஆற்றலைக் கொண்டாடும் தினம் இது. காற்றின் ஆற்றல், காற்றை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

காற்று மாசுபாட்டால் தாவரங்கள், நிலம், நீர், நினைவுச் சின்னங்கள், கட்டடங்கள் முதலியவையும் பாதிக்கப் படுகின்றன. வளி, காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துகிறோம். எனினும் அறிவியலில் இவை வேறுவேறாகப் பொருள் கொள்ளப்படுகின்றன. தட்பவெப்பவியலில், காற்று அதன் வலு, வீசும் திசை ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடப்படும்.

காற்று (wind) : வளி மண்டலத்தில் வளி (Gas) பெருமளவில் நகர்வதே காற்று.

மாசு அடைந்த காற்றைச் சுவாசிப்பதால் என்ன ஆகும்?

கண் எரிச்சல்
தலைவலி
தொண்டைக்கட்டு
காய்ச்சல்
காச நோய்
ஆஸ்துமா
சுவாசக் கோளாறு
நுரையீரல் புற்றுநோய்
உரிய வயது முதிர்வுக்கு முன் இறப்பு (Premature Death)
சூரியக் காற்று (Solar Wind): விண்வெளியில் சூரியனில் இருந்து வளிமங்கள் வெளியேறிச் செல்வது.

கோள் காற்று (Planetary Wind): கோள்களில் இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்களின் வெளியேற்றம்.

வன் காற்று (Gust): குறுகிய நேரம் நிலைக்கும் மிகவும் வேகமாக வீசும் காற்று.

சூறாவளி (Squall): நீண்ட நேரத்துக்கு வீசும் பலமான காற்று.

காற்று வேகமானி (அனிமோ மீட்டர் -/ Anemometer): காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி. சுழலும் கிண்ண அமைப்பு கொண்ட காற்று வேகமானிகளே பொதுவாகப் பயன்படுகின்றன.

தமிழில் பண்டைக்காலத்திலிருந்தே வெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுக்கு தனித்தனி பெயர் இடப்பட்டு உள்ளது.

வாடை - வடக்கில் இருந்து வீசும் காற்று

சோழகம் - தெற்கில் இருந்து வீசும் காற்று

கொண்டல் - கிழக்கில் இருந்து வீசும் காற்று

கச்சான் (காற்று) - மேற்கில் இருந்து வீசும் காற்று

ஓசோன் படலம்: வாயு மண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் சூரியனிலிருந்து வருகிற ஆபத்தான புற ஊதாக் கதிர்களை தடைசெய்கிறது.

அதிகவேக விமானங்கள் வெளியிடும் அதிகப்படியான நைட்ரஜன் ஆக்ஸைடுகளும், குளிர்சாதனப் பெட்டி,

தீயணைப்பான் போன்றவற்றிலிருந்து வெளிவரும் வாயுக்களின் மூலமாகவும் ஓசோன் படலம் சிதைக்கப்படுகிறது.

இதன் விளைவாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது.

காற்றின் தரம்: காற்றில் உள்ள தூசி, புகை போன்ற நுண்துகள்களைக் (Fine Particles) கொண்டு அதன் தரம் அளவிடப்படுகிறது. 'PM 2.5', 'PM 10' என்று 2 வகையாக காற்றின் தரத்தை நிர்ணயிக்கின்றனர்.

காற்றின் தோழன்: மரங்கள் கார்பன்டை ஆக்ஸைடை ஆக்சிஜனாக மாற்றுகிறது. மரங்களை வெட்டுவதால் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது. இதனால் காற்று மாசு ஏற்படுகிறது.

வாகனங்கள்: வாகனப் புகை மூலமாக வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, பிற வாயுக்கள் காற்றில் நச்சுப் படலத்தை ஏற்படுத்தி சூழலைப் பாதிக்கின்றன

அமில மழை: தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கந்தகம், நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற வாயுக்களால் அமில மழை பெய்யும்.

இதனால் மண்ணின் அமிலத் தன்மை அதிகமாகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் விவசாய உற்பத்தித்திறன் பாதிக்கப்படும்.

காற்றைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?

வீடுகளில் சமையலுக்கு தரமான எரிபொருள், சாண எரிவாயு பயன்படுத்தலாம். குப்பைகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வாகனங்களில் புகை வெளியேறும் அமைப்பை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். பொது வாகனப் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும்.

எரிபொருள் தட்டுப்பாடு, காற்று மாசு, சாலை நெரிசல் போன்றவற்றை இது குறைக்கும்.

தொழிற்சாலைகளின் புகை வடிகட்டிகள், சுத்திகரிப்புக் கலன்கள் அமைக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, தூசி போன்ற கழிவுப் பொருள்கள் காற்றில் கலந்து மாசடைவதைத் தடுக்கலாம்.

பூமியைச் சூழ்ந்துள்ள வளி மண்டலம் பல வாயுக் கலவை உடையது.

வளி மண்டலத்தில் நிறைந்துள்ள வாயுக்கள்

79% நைட்ரஜன்

20% ஆக்சிஜன்

3% கரியமில வாயு

1% இதர வாயுக்கள்

காற்று திசை காட்டி: காற்று எங்கிருந்து உருவாகிறது என்பதைக் காட்டுகிறது.

காற்று மாசு ஏற்படுத்துபவை:

தொழிற்சாலைகள் > நைட்ரஜன், கந்தக ஆக்சைடு, புகை

பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் > ஹைட்ரோ கார்பன்

உலோகத் தொழிற்சாலைகள் > உலோக நுண்துகள்கள்

ரசாயனத் தொழிற்சாலைகள் > கரிமச் சேர்மங்கள்

வாகனங்கள் > கார்பன் மோனாக்சைடு

விட்டுக்கு ஒரு மரம் நடுவோம் !!! காற்று மாசடைவதை தடுப்போம் !!

உலகக் காற்று தினம் (World Wind Day) ஜூன் 15.


உலகக் காற்று  தினம் (World Wind Day) ஜூன் 15.

உலகக் காற்று நாள் (World Wind Day) ஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது.இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.

2012

2012 ஆம் ஆண்டு, காற்றாற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

உலக ரத்த தான தினம் ஜுன் 14


உலக ரத்த தான தினம் ஜுன்  14

உலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. ரத்தப் பிரிவுகளான A, B, O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
ரத்த தானம் என்பது இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்குவதை பொருள்படுத்தி நிற்கின்றது. இந்த தானத்தின் மூலம் சகல வழங்குநரும் பெருநரும் இதன் பிரதிபலன்களை அவர்களுடைய வாழ்நாளிலேயே அனுபவிக்கிறார்கள். விபத்தினாலோ, யுத்த அனர்த்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அளவிற்கு அதிகமான குருதி வெளியேற்றத்தினாலும், சத்திரசிகிச்சைகளின் போது குருதி தேவைப்படுமிடத்தும் மற்றும் குருதி மாற்றுச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும்போதும் குருதியை தானமாக பெறுபவர்கள் பயன் அடைகிறார்கள். குருதியின் தேவை எச்சந்தர்ப்பத்தில் தேவைப்படும் என்பதை திட்டவட்டமாகக் குறிப்பிட முடியாது.

அதேநேரம், குருதியைப் பெறுபவர் தன் உயிரை மீளப் பெற்றுக் கொள்வதினூடாக நன்மையடைவதைப் போலவே ரத்த தானம் செய்பவர்களும் மறைமுகமாக நன்மையடைகின்றார்கள். இவர்களின் சிறிய செயற்பாடு சில சந்தர்ப்பங்களில் ஒரு உயிரைக் காப்பதற்கு உதவும் மனோநிலை இவர்களிடம் வளர்கின்றது. மறுபுறமாக ரத்த தானம் செய்பவர்களின் உடலில் புதிய குருதி உற்பத்தி செய்யப்படுவதால் அவர்களும் ஆரோக்கியமான வாழ்வை அனுபவிக்கிறார்கள். இந்த உண்மையை ரத்த தானம் செய்வோர் என்ற வட்டத்திற்கு அல்லது எல்லைக்கு வெளியே இருந்து பார்ப்போர் புரிந்து கொள்வதில்லை.

உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் ரத்த தானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதற்காகவே வேண்டியாகும். உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியபோதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை. இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தமே வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் நோயாளி மரணிக்கவும் கூடும்.

2009ம் ஆண்டில் இத்தினத்தின் கருப்பொருள் இரத்தம் வழங்களின் பாதுகாப்பையும், தன்னிறைவையும் செம்மைப்படுத்தி எவ்வித ஊதியமோ, வெகுமதியோ இன்றி சுயமாக தொண்டு செய்யும் நோக்குடன் ரத்த தானத்தை ஊக்குவிப்பதாகும். வருடாவருடம் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் 81 மில்லியனுக்குக் கூடிய அலகுகளை ரத்த தானமாக வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு மனிதருக்கும் என்றோ ஒருநாள் இரத்தத்தின் மூலம் சிகிச்சைச் செய்ய தேவை ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் மிகவும் பயபக்தியுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. அதேநேரம், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை பிரகாரம் உலக சனத்தொகையில் ஒரு வீதத்துக்கும் குறைவானவர்களே ரத்த தானத்தை செய்கின்றனர். எல்லா நோயாளர்களுக்கும் தேவையான இரத்தம் மூலமான சிகிச்சையை உத்தரவாதப்படுத்தி வழங்க ரத்த தானம் செய்வோரின் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது.

மேலும் உலக மக்கள் வழங்கும் ரத்த தானம் ஆண்டுதோறும் 81 மில்லியன் அலகுகளுக்கும் அதிகமாக இருந்த போதிலும் இதில் 38 வீதமான பங்களிப்பினையே வளர்முக நாடுகளில் வழங்கப்படுகின்றது. ஆனால், உலக சனத்தொகையின் 82வீதமானோர் வளர்முக நாடுகளில் வாழ்கின்றனர். இந்நிலையில் இந்நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் மக்களுக்கு பல்வேறுபட்ட வகைகளில் புரிந்துணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றது.

அன்று முதல் இன்றுவரை இன மத மொழி வேறுபாடின்றி உலகெல்லாம் வாழும் அனைத்து மக்களும் மாற்றுக்கருத்தின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு தானம் ரத்த தானமாகும். ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் வைத்தியத்துறை அடைந்துள்ள முன்னேற்றத்தின் காரணமாக குருதிதிரவ இழைய தானம், உடல் உறுப்பு தானம் போன்ற தானங்களும் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியடைந்துள்ளன. இந்த வெற்றிக்குரிய முக்கியமான காரணம் தானம் செய்யும் கருணையுள்ளம் கொண்ட கொடையாளிகளின் இதயத்தில் இவையும் முக்கிய இடத்தை பிடித்துவிட்டன என்பதேயன்றி வேறு எதுவும் இல்லை.

சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முத‌ல் 350 மில்லிலீட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். பொதுவாக 17 - 60 வயதுக்கிடைப்பட்ட சுகதேகிகளால் ரத்த தானம் செய்ய முடியும்.

இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும். தானமாக அளித்த இரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும். இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும். இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.

உடலில் இருந்து இரத்தம் எடுக்க 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இரத்த தானம் அளித்த பிறகு 10, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கச் சொல்லி பிறகுதான் அங்கிருந்து அனுப்புவார்கள். எனவே மொத்தமாகவே இரத்த தானம் அளிக்க 30 நிமிடங்கள் போதும். இரத்த தானம் அளித்த பிறகும் கூட அவரவர் தங்களது அன்றாட வேலைகளில் எப்போதும் போல் ஈடுபடலாம். எந்த சிக்கலும் இருக்காது.

இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. சர்க்கரை நோய், காசரோகம், எய்ட்ஸ் போன்று இரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது. மேலும் 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.

உலக இரத்தான தினத்தின் பிரதான குறிக்கோள்களாக பின்வருவன அமைகின்றன:-

எந்தவொரு வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி ரத்த தானத்தை வழங்குவோருக்கு நன்றி செலுத்துதல்.

நெருக்கடியான சூழ்நிலையில் உயிர்காக்கும் விலைமதிப்பற்ற வளத்தினை ஒழுங்காக வழங்கும் அற்புதமான விசேடமான தொண்டர் அணியைச் சேர்ந்தவர் என்ற மனநிலையை ரத்த தானம் புரிவோருக்கு ஏற்படுத்துதல்.

சுகதேகியாக உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் எவ்வித வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத்தான நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்கமளித்தல்.

ஒரு குடும்ப அங்கத்தவருக்கு இரத்தம் தேவைப்பட்ட சந்தர்ப்பத்தில் ரத்த தானம் செய்தவரை தொடர்ந்தும் இத்தகைய தொண்டர் பணியில் ஈடுபட ஊக்குவித்தல்.

ரத்த தானம் செய்வோருக்கு எவ்வாறு சுகமான வாழ்வினை மேற்கொள்ள முடியும், எவ்வாறு தமது இரத்தத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பது பற்றி அறிவுறுத்துதல்.

உலக ரத்த தான இயற்கை நிகழ்ச்சிகள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுதல்.

ஐக்கிய இராச்சியத்தில் பொதுமக்கள் பெருந்தன்மையுடன் ரத்த தானம் செய்கின்றார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இங்கிலாந்திலும், பிரேசிலிலும் நிச்சயிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக தேசிய இரத்த சேவை நிறுவனம் தினமும் 9000 இரத்த அலகுகளை சேகரிக்கின்றது என்றும், கடந்த வருடம் 1.3 மில்லியன் மக்களிடமிருந்து 2.3 மில்லியன் இரத்த அலகுகளை சேகரித்து வழங்கியமையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்றும் அற்றிக்கைகளில் குறிப்பிடுகின்றது.

எனவே, இது விஷயமாக நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ரத்த தானம் என்பது ஒரு உயிரைக் காக்க நாங்கள் வழங்கும் பங்களிப்பு. இந்த உணர்வினை இத்தினத்தில் உறுதியாக எமது மனங்களில் பதித்துக் கொள்வோம்.

சனி, 6 ஜூன், 2020

உணவு பாதுகாப்பு தினம் ஜூன் 07.


உணவு பாதுகாப்பு தினம் ஜூன் 07.

இன்று ஜூன் 07ஆம் தேதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 10 பேரில் 1 பேர் அசுத்தமான உணவை சாப்பிடுவதால் நோய்வாய்ப்படுகிறார்கள் என அறிவித்துள்ளது. உணவுப் பாதுகாப்பு முறைமைகளை ஒழுங்காக கையாளுவதன் மூலம் எமக்கான உணவு சுத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் பெற்றுக்கொள்ள இயலும். இது குறித்து உலக சுகாதார அமைப்பு எளிய ஐந்து வழிமுறைகளை தந்துள்ளது.


1. எப்போதும் தூய்மை

நாம் சமையலறைக்குள் நுழைவதற்கு முன்பு, கைகளை கழுவுவதும், சமைக்கும் போது எல்லா நேரங்களிலும் தூய்மையையும் சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

2. பதப்படுத்தப்பட்ட மற்றும் சமைக்காத உணவுகளை பிரிப்பது

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சமைக்காத உணவுகளிலிருந்து வெவ்வேறு கொள்கலன்களில் வைப்பது நல்லது. இது இரண்டில் ஏதேனும் மாசுபடுவதற்கான அபாயத்தைத் தடுக்கும்.

3. நன்றாக சமைக்கவும்

எந்தவொரு கிருமிகளையும் கொல்லவும், ஊட்டச்சத்தை அதிகரிக்கவும், உணவு பரிமாறுவதற்கு முன்பு முழுமையாகவும் ஒழுங்காகவும் சமைக்கப்படல் வேண்டும்.

4. உணவு வகைகளுக்கு தகுந்த வெப்பநிலை

வேவ்வேறு வகையான உணவுகளுக்குத் தகுந்தாற்போல் வேவ்வேறு முறைகளில் அவைகளை சேமிக்க வேண்டும். (பாதுகாக்க வேண்டும்). உணவு சேமிப்பு இடம் மற்றும் வெப்பநிலை வாரியாகவும்; உணவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.

5. சுத்தமான நீர் மற்றும் பாதுகாப்பான மூலப்பொருட்களைப் பயன்படுத்துங்கள்

சமையலின் போது பாதுகாப்பான மூலப்பொருட்களும், சுத்தமான பாத்திரங்கள் மற்றும் சுத்தமான நீரை எல்லா நேரங்களிலும் பயன்படுத்துங்கள்.

இந்த வழிமுறைகளை நாம் அடிக்கடி செய்வோர் ஆயினும் இந்த நோய் பேரிடர் காலத்தில் மீண்டும் கூடுதல் அவதானமாக உணவுகளை பாதுகாப்பாக வைத்திருப்பது அதனை உட்கொள்வோர் அனைவரினதும் கடமையாகும். மேலும் ஊரடங்கு காலத்தில் புதிதாக தங்களது திறமைகளை வெளிப்படுத்த சமையலைறைகளுக்குள் நுழைந்திருப்பவர்கள் உணவை பாதுகாக்கும் இந்த ஐந்து முக்கிய வழிமுறைகளை தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள், தெரிந்திருந்தால் வாழ்த்துக்கள். வாருங்கள் உணவை பாதுகாப்பாக உட்கொள்வோம்!

 

நுகர்வோர்கள் இனிப்பு மற்றும் கார வகைகளை உணவு அங்காடிகளில் வாங்கும் பொழுது கடை பிடிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு முறைகள் :-

1. அதிகப்படியான செயற்கை வண்ண நிறமிகள் (Artificial Colouring Agent) கொண்டு இனிப்பு பொருட்கள் இருந்தால் வாங்குவதை தவிர்த்தல் வேண்டும்.


2. இனிப்பு வகைகளை பரிசு பொருட்களாக பேக்கிங் செய்து விற்பனை செய்யும்பொழுது. அதில் பால் வகையான இனிப்புகளை மற்ற இனிப்புகளோடு கலந்திருந்தால் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஏன் என்றால், பாலால் செய்யப்பட்ட இனிப்புகளின் சேமிக்கும் நிலை மற்றும் காலாவதியாகும் தேதி மாறுபடும். எனவே, அது குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.


3. ஈக்கள் மொய்க்கும் வண்ணம் இனிப்பு மற்றும் கார வகைகள் இருந்தால் வாங்குவதை தவிர்த்தல் வேண்டும்.


4. துர்நாற்றம் வீசும்; இனிப்பு மற்றும் கார வகைகளை தவிர்த்திட வேண்டும்.


5. உணவு அங்காடிகளில் வாங்கும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு முறையான ரசீது பெற்றிருத்தல் வேண்டும்.


6. உணவு கையாளும் பணியாளர்கள் தூய்மையான ஆடைகள் அணிந்தும் நகங்களை சீர்செய்தும், தலைகவசம், கையுறையுடன் இனிப்பு கார வகைகளை கையாளுகின்றனரா என்பதை உறுதி செய்தல் வேண்டும்.


7. இனிப்பு கார வகைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய். நெய் விபரங்களை தகவல் பலகையாக உணவு விற்பனை கூடத்தில் வைத்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.


8. நுகர்வோர் இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை கூடங்களில் பொட்டலமிட்டு வாங்கும் பொழுது உணவு சேமிப்புக்குரிய தரத்துடன் (Food Grade containerlPacking Mpterial) உள்ள பிளாஸ்டிக் கொள்கலன்களில் வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும்.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் ஜூன் 6, 2004.


தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் 
ஜூன் 6, 2004.
   
உலகெங்கும் கிட்டத்தட்ட 7,000 மொழிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. உலக மொழிகளை ஆய்வுசெய்தபோது ஆப்பிரிக்கக் கண்டத்திலும் இந்தியாவிலும்தான் அதிக மொழிகள் பேசப்படுகின்றன எனத் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் சுமார் 1,600 மொழிகள் பேசப்படு கின்றன. அவற்றில் 22 மொழிகளை இந்தியாவின் ஆட்சி மொழிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அவற்றில் சம்ஸ்கிருதமும் தமிழும் அடங்கும்.

சம்ஸ்கிருதத்தின் பழைமை எல்லோரும் அறிந்த ஒன்று. அதில் இந்தியாவின் தொன்மையான பல இலக்கியங்கள் உள்ளன. தமிழின் தொன்மைகுறித்த விவாதம் கடந்த 150 ஆண்டுகளில்தான் விரிவடைந் திருக்கிறது.

அறிஞர் கால்டுவெல் திராவிட மொழிகளை ஒப்பிட்டு 1856-ல் ஒரு ஆங்கில நூலை எழுதினார். அதில் தமிழின் தொன்மையை விளக்கினார். அது உலக அளவில் விவாதிக்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக, பேராசிரியர் பரிதிமாற் கலைஞர் தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என 1902-ல் கோரிக்கை விடுத்தார். அதன் பிறகு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புகளும் அறிஞர்களும் இது தொடர்பாகப் பல முயற்சிகளை எடுத்தனர். அதன் விளைவாக, இந்திய அரசால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட நாள் இன்று.

செம்மொழி என இந்திய அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ்தான். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 - ம் ஆண்டில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தியாவில் தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆட்சிமொழியாகத் தமிழ் இருக்கிறது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இடம்பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது குறிப்பிடத் தக்கது.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் ஜூன் 6-



தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் ஜூன் 6.
“ஆங்கிலம் பேசும் அமெரிக்க நாட்டு பேராசிரியராகிய நான் ஹார்வேடு பல்கலைக்கழகத்தில் வடமொழியில் பட்டம் பெற்றேன். லத்தீன், கிரேக்க செம்மொழிகளை அறிந்து கற்றேன். கிழக்காசிய மொழிகள் துறையில் பணியாற்றியதால் இந்திய மொழிகள், பிற ஆசிய மொழிகளின் இலக்கியச் சிறப்புகளையும் அறிந்தேன். பன்மொழிப் புலமையின் பின்னணியில் செம்மொழி தகைமையைச் சீர்தூக்கும் தகுதி எனக்கு உண்டு. செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட மொழிகளில், தமிழ் சிறப்பான இடம் பெற்றுள்ளது என்பதை எந்த தயக்கமுமின்றி உறுதியாக என்னால் எடுத்துச் சொல்ல முடியும். இந்தியா பெருமை மிக்க நாடு, இந்து சமயம் உலகச் சமயங்களில் சிறந்த ஒன்று என்று புதிதாக வாதாடுவதைப் போலத்தான் தமிழ் செம்மொழிதான் என்று உலகம் ஏற்றுக்கொண்ட உண்மையை நிலை நிறுத்துவதாகும்.”

இவ்வாறு அறிஞர் ஜார்ஜ் ஆர்ட் எழுதியது வரலாற்றில் நிற்கும் வைரச் சொற்களாகும்.

தொன்மைச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் வகையில் 1500 முதல் 2000 ஆண்டுகள் வரலாற்று பெருமிதம் கொண்டதாகவும், காலப்பழமையும், இலக்கண முழுமையும், இலக்கியச் செழுமையும் ஒரு மொழி கொண்டிருக்க வேண்டும் என்று இந்திய அரசு வரையறுத்துச் செம்மொழி தகுதியை வழங்கியது. அந்த வகையில் இன்றைய நிலையில் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒரியா முதலிய ஆறு மொழிகளையும் செம்மொழிகளாக உலகிலேயே இந்திய நாடுதான் அறிவித்துள்ளது.

2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி தமிழுக்கு செம்மொழி தகைமை வழங்கும் ஆணையை மத்திய அரசு வழங்கியது. இன்றைய நன்னாளில்தான் 15 ஆண்டுகளுக்கு முன்னர் 6-6-2004 அன்று நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய இந்திய குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், “தமிழ் செம்மொழியாக இனிப் பொன்னொளியோடு மின்னி மிளிரும்” என்று அறிவித்தார். இந்த புகழ் மொழி தமிழறிஞர்களையும், தமிழ் ஆர்வலர்களையும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களையும், தமிழக அரசு தொடங்கி, தமிழர் வாழும் அரசுகளையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக மைசூரில் செயற்பட்ட செம்மொழி தமிழாய்வு பிரிவு, தமிழ்நாட்டில் சென்னை மாநகரிலேயே அமைந்தது.

இந்திய மொழிகள் நடுவண் நிறுவனம் என்பது இந்திய நாட்டின் இரண்டொரு மாநிலங்களில் தலைநகரங்களில் தலைமை நிலையத்தைக் கொண்டிருந்தது. தென்னக மொழிகளை ஆய்வு செய்யும் மொழிகள் நிறுவனமாக மைசூர் நடுவண் நிறுவனம் அமைந்து இருந்தது.

மொழியியல் சார்ந்த தலைப்புகளில் அறிஞர்களைக் கொண்டு ஆய்வுப்பணிகளை ஆற்றியது. தமிழார்வம், தமிழ் இலக்கியச் செறிவு முதலியன இடம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. மத்திய அரசோ, செம்மொழி என்ற முழக்கத்தின் அடிப்படையே விளங்காமல் கண் தெரியாதவனுக்கு துதிக்கை உலக்கையாக தெரிந்தது போல மைசூர் நிறுவனத்தில் தமிழ் மொழிப்பிரிவில் இந்த பொறுப்பை ஒப்படைத்தார்கள். மைசூர் நிறுவனத்தின் கிளைக்குச் செம்மொழிக்கென வழங்கப்பட்ட தொகை திகைப்பைத் தந்தது. இது முதற்கோணலாயிற்று.

நான்கு கூட்டங்கள் போல, தமிழக செம்மொழி நிறுவனத்தின் சார்பில் மைசூரிலேயே நடந்தன. தமிழகத்தின் தலைநகரில் அல்லவா இந்த நிறுவனம் அமைய வேண்டும் என்று அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி வலியுறுத்தியதால், மைசூரில் இருந்த ஒரு பிரிவைச் சென்னைக்கு அனுப்பி நிறுவனத்தைத் தொடங்கச் சொன்னார்கள்.

இந்த கோட்பாட்டு பின்னணியில் ஏற்பட்ட குழப்பத்தால் செம்மொழி நடுவண் நிறுவனத்தில் மொழியியலாளர்களே இடம் பெற்று ஆராய்ச்சிகளைச் சென்னையிலும் தொடங்கினார்கள். தமிழக அரசு இந்த நோக்கையும், போக்கையும் மாற்ற முனைந்தது. தமிழக அரசுக்கே முழுப்பொறுப்பையும் வழங்குவதற்கு மத்திய அரசு தடையாக நின்றது.

செம்மொழி பெருமிதத்துக்காகவே 500 கோடி ரூபாய் செலவில் ஐந்து நாள் மாநாடு கோவையில் உலகத்தமிழ் மாநாடு ஒத்தநிலையில் மாபெரும் மாநாடாக நடந்தது. தமிழக முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி தாமே தம் கடின உழைப்பையும், உறுதியையும், கரைகாணாத் தமிழ்க்காதலையும் காட்டிய மாநாடாக திகழ்ந்தது. இந்திய குடியரசு தலைவரே நேரில் வந்து நெஞ்சுருக பாராட்டி வாழ்த்தினார். கருணாநிதி தாம் பெற்ற தமிழ் வெற்றியாக தன் செலவில் ஒரு கோடி ரூபாய் தமிழறிஞர் விருதளிப்புக்கென வழங்கியதையும் நினைவு கூரலாம். அந்த கோப்பு டெல்லிக்கும், சென்னைக்குமாக மிதிபட்டுத் தேக்கமுற்றது.

செம்மொழி தமிழாய்வு நிறுவனம், மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழ் மக்கள் எதிர்பார்த்து ஏங்கிப்பெற்ற ஆய்வு நிறுவனமாகும். அறிஞர்கள் கண்ட கனவுகள் பல. ஆய்வுக்களங்களோ எண்ணற்றவை. அந்த நாளிலேயே வாழிய செந்தமிழ் என்று பாரதியார் தம் மொழிப்பற்றையும், நாட்டுப்பற்றையும், இனப்பற்றையும் ஒன்றாக இணைத்துச் செம்மொழி நிறுவனத்துக்கு அடிகோலினார். நாளும் முயன்ற நல்லறிஞர்களையும், அரசையும் கட்சிக் கண்ணோட்டத்திலேயே காணும் போக்கும் படர்ந்தது.

தாயில்லாத சவலைப் பிள்ளையாக நாளும் ஒரு கவலையும், பொழுதும் ஒரு அவலமும் கொண்டு அழும் குரல் எல்லை தாண்டித் டெல்லியின் காதில் எட்டுவதில்லை. மாநில தலைநகரில் உள்ள வேறு எந்த நடுவண் நிறுவனமும் இத்தகைய புறக்கணிப்பால் தவிக்கவில்லை.

ஒரு பல்கலைக்கழகத்தை கட்டிக்காத்த துணைவேந்தரும், புகழ் வாய்ந்த கல்லூரியின் முதல்வரும், நல்லறிஞரும் துணைத்தலைவராக இருந்தும் தினையளவும் சிக்கல் தீரவில்லை. துணைத்தலைவருக்கு அடையாறு ஐ.ஐ.டி தலைவரைப் போன்ற அதிகாரங்களை வழங்கியிருக்க வேண்டாமா? நாடாளும் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியாக இன்று பதவியேற்று இருக்கும் ரமேஷ் பொக்ரியால் நாடு புகழும் கவியரசராவார். உத்தரகாண்ட் மாநிலம் ஆண்ட முதல்- அமைச்சருமாக இருந்தவர். கவியரசர்களுக்குத்தான் மொழியின் அருமையும், பெருமையும் நன்றாக தெரியும் என்று நம்புகிறார்கள். அந்த வாய்ப்பை வலியுறுத்தும் கடமை தமிழக அரசையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சாரும்.

செம்மொழி நிறுவனம் செழித்தோங்கும் நிறுவனமாக மலர வேண்டும். நிறுவனம் ஒரு பல்கலைக்கழகம் போல உருப்பெறுவதற்கு இடமும் வழங்கப்பட்டு வளமனைகள் வளர்ந்து வருகின்றன. செம்மொழி நிறுவனத்திற்காக, தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக சென்னை, பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. “செம்மொழி என்னும் போதினிலே சிந்தும் அழுகுரல் விழுகுது காதினிலே” என்று சொல்லும் நிலைமை துடைக்கப்பட வேண்டும். பொங்கும் மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடும் நன்னாளாக செம்மொழி நாள் அமைய வேண்டும்.
- முனைவர் அவ்வை நடராசன், முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.

புதன், 3 ஜூன், 2020

உலக சைக்கிள் தினம் ஜூன் 03.


உலக சைக்கிள் தினம் ஜூன் 03.

'உலக சைக்கிள் தினம்'- சைக்கிளில் வந்து மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஹர்ஷவர்தன்!

சைக்கிள்.. நிச்சயம் இந்த வார்த்தையை கடக்காமல் யாரும் வளர்ந்திருக்க முடியாது. ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கியச் சாதனமாக இருந்த இது, இன்று பெரும்பாலும் உடற்பயிற்சி சாதனமாகத் தான் மாறி விட்டது. ஆனாலும், சமீபகாலமாக சைக்கிள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. காரணம் ஒன்று உடல் ஆரோக்கியம். குறைந்த நேரத்தில் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்க முடியும். உடல் எடையை எளிதாக குறைக்க உதவும்.

இரண்டாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு. பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் நிறைய சுவாசப் பிரச்சினைகள் உருவாகின்றன. சைக்கிளால் இந்த பாதிப்பைக் குறைக்க முடியும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், சைக்கிள் ஓட்டுவது என்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
சரி, ஏன் இப்போது சம்பந்தமில்லாமல் சைக்கிளைப் பற்றி இப்படி மானே, தேனே என பேசிக் கொண்டிருக்கிறோம் எனக் கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது. இன்று ’உலக சைக்கிள் தினம்’.



அமெரிக்காவைச் சேர்ந்த லெசுச்செக் சிபிலிசுக்கி என்ற பேராசிரியர் தனது சமூகவியல் மானவர்களுடன் இணைந்து உலக மிதிவண்டி நாளை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த வேண்டும் என பரப்புரை செய்தார். அவரது முயற்சிக்கு 56 நாடுகள் ஆதரவளிக்க, ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதியை உலக மிதிவண்டி நாளாக அறிவித்தது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை.

எந்தக் காலத்திலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானது சைக்கிள். நம் முன்னோர்கள் ஒவ்வொரு பொருளையுமே நமது உடலை வலிமையாக்கும் பொருட்டே உருவாக்கினர். ஆனால் நாம் தான் நாகரீகம், நவீனம் என்ற பெயரில் அவற்றை தொலைத்து வருகிறோம். இது சைக்கிளுக்கும் பொருந்தும்.

சைக்கிள் வரலாறு:

பதினேழாம் நூற்றாண்டில் பொழுதுபோக்காக பிரான்ஸைச் சேர்ந்த கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte mede de Sivrac) உருவாக்கியது தான் சைக்கிள். இரண்டு மரத்துண்டுகளை வைத்து விளையாட்டுத்தனமாக சைக்கிளுக்கு அவர் உருவம் கொடுத்தார். அப்போது அவருக்குத் தெரியாது, பின்னாளில் இது பூமிக்கு எவ்வளவு தேவையான பொருளாக உருமாறப் போகிறது என்று.

தான் உருவாக்கிய அமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி, 1791ம் ஆண்டு மரச் சைக்கிள் ஒன்றை உருவாக்கினார் கோம்டி. இந்த சைக்கிளுக்கு பெடல்கள் கிடையாது. காலால் தரையை உந்தித் தள்ளி தான் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும்.

கோம்டி உருவாக்கிய இந்த மாடல், ‘The Celerifere’ என்று அழைக்கப்பட்டது. இதில் திசைமாற்றி, மிதி இயக்கி, தடை என எதுவுமே கிடையாது. 1794ம் ஆண்டு தனது கண்டுபிடிப்பை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்தார் கோம்டி.
இதன் பிறகு மிதிவண்டியை இன்னும் மேம்பட்ட வசதிகளுடன் உருவாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர் மக்கள். அவர்களில் ஒருவர் தான் ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் ( karl Von Drais). இவர் 1817ம் ஆண்டு மரத்தினால் திசைமாற்றியுடன் கூடிய முதல் மிதிவண்டியை உருவாக்கினார். சுமார் 30 கிலோ எடை கொண்டதாக அந்த சைக்கிள் இருந்தது.

இந்த சைக்கிள் 1818- ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட மிதிவண்டி இதுதான்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனின் கண்டுபிடிப்புகள் மெருகேறுவது வழக்கமான விசயம்தானே. சைக்கிளும் அதற்கு விதிவிலக்கல்ல. அதுவரை மரத்தால் மட்டுமே செய்யப்பட்டு வந்த மிதிவண்டிகளுக்கு மாற்றாக, லண்டனைச் சேர்ந்த டென்னிஸ் ஜான்சன் (Denis Johnson) என்ற கொல்லர் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி சைக்கிளைத் தயாரிக்க முயற்சி செய்தார். 1818-ஆம் ஆண்டு அவர் சில குறிப்பிட்ட பாகங்களில் உலோகப்பொருளை பயன்படுத்தி புதிய சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். அதன் நேர்த்தியான தோற்றம் மற்றும் எளிதில் உருளக்கூடிய சக்கரம் ஆகியவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், டென்னிஸ் செய்த சைக்கிளிலும் பெடல் எனப்படும் மிதி இயக்கி இல்லை. உலகின் முதல் பெடல்களைக் கொண்ட மிதிவண்டியை, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் (Krikpatric Macmillan) என்பவர் உருவாக்கினார். 1839ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அவரது சைக்கிள் அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்ததால், வரலாற்றில் சைக்கிளைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமை கிர்க்பாட்ரிக்கிற்குக் கிடைத்தது. ஆனால் இந்த சைக்கிளில் பின்புறச் சக்கரம், முன்புறச் சக்கரத்தைக் காட்டிலும் அளவில் சற்று பெரிதாக இருந்தது.

அதனைதொடர்ந்து மேம்பட்ட மிதிஇயக்கி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றார் பிரான்ஸைச் சேர்ந்த எர்னெஸ்ட் மிசாக்ஸ் (Ernest Michaux). அவரது தீவிர உழைப்பின் பலனாக 1863-ஆம் ஆண்டு கிராங்ஸ் மற்றும் பால் பியரிங்க்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்ட மிதிஇயக்கி ஒன்றைத் தயாரிப்பதில் வெற்றிகொண்டார். முந்தைய சைக்கிள்களை விட மிசாக்ஸ் கண்டுபிடித்த சைக்கிளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. காரணம் அதனை பயன்படுத்தும் முறை எளிதாக்கப்பட்டது தான்.

தனது சைக்கிளுக்கு மக்களிடம் வரவேற்பை வணிக ரீதியாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார் மிசாக்ஸ். தனது பெயரிலேயே 1868ம் ஆண்டு சைக்கிள் கம்பெனி ஒன்றை அவர் ஆரம்பித்தார். உலகிலேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட சைக்கிள் கம்பெனி இது தான்.
மைல்கல்:

சைக்கிளில் ஒவ்வொரு பாகமாக மேம்படுத்தப்பட்டு வந்தாலும், சக்கரம் என்னவோ மரத்தால் ஆனதாகவே இருந்தது. இதற்கும் ஒரு தீர்வு கண்டார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஸ்டெர்லி. பென்னி பார்த்திங் (Penny farthing) என்ற கொல்லருடன் இணைந்து, சைக்கிளின் சக்கரங்களையும் அவர் உலோகத்தில் உருவாக்கினார். இவர்களது முயற்சியின் விளைவாக 1872ம் ஆண்டு பெண்களும் பயன்படுத்தும் வகையிலான புதிய நேர்த்தியான சைக்கிள்கள் உருவானது. பெண்களுக்கென்று மூன்று மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட சைக்கிள்கள் இந்த காலகட்டத்தில் விற்பனைக்கு வந்தது.

1876ம் ஆண்டு சைக்கிள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும். அந்த ஆண்டு தான், ஹென்றி லாசன் (Henry Lawson) என்ற இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் பல்சக்கரம் (Sprocket) மற்றும் இயக்கி சங்கிலி (Drive Chain) போன்றவற்றை உருவாக்கினார். இந்த கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த வாகன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.

இப்படியாக ஒவ்வொரு மாற்றங்களாய் பெற்று, 1885ம் ஆண்டு சான் கெம்பு இசுட்டார்லி (John Kemp Starley) என்பவர் புதிய மிதிவண்டி ஒன்றை உருவாக்கினார். இவர் தான் இன்றைய நவீன சைக்கிளின் தந்தை என அழைக்கப்படுகிறார். அவர் வடிவமைத்த மாடலைத் தான் இன்று நாம் பயன்படுத்துகிறோம்.

ஹர்க்குலீஸ்:

சைக்கிள் பல்வேறு காலகட்டங்களில் பல மாற்றங்களுக்குப் பிறகு நல்லதொரு வடிவம் பெற்றது. மக்கள் பெருமளவில் அதனை போக்குவரத்திற்குப் பயன்படுத்தத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து சர் எட்மண்டு கிரேன் (Sir Edmund Crane) என்பவர், 1910ம் இங்கிலாந்தில் எர்க்குலீஸ் (Hercules) சைக்கிள் கம்பெனியைத் துவக்கினார். படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் சைக்கிளைக் கொண்டு சென்ற பெருமை எர்க்குலீஸுக்கே சேரும்.

 

எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உதவியதால், சைக்கிளின் தேவை நாளுக்கு நாள் ஆரம்பித்தது. புதிய புதிய சைக்கிள் கம்பெனிகள் முளைக்கத் தொடங்கின. ஆனால், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தனது உடல் உழைப்பைக் குறைக்க நினைத்த மனிதன், படிப்படியாக சைக்கிளை முன்மாதிரியாகக் கொண்டு மோட்டார் சைக்கிள்களை உருவாக்கினான். அதன் வளர்ச்சி தான் இன்று சைக்கிளை இருந்த இடம் தெரியாமல் அழித்து விட்டது.

ஆனால், உலகிற்கே சவால் விடும் வகையில் வாகனப் பெருக்கங்களின் காரணமாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால், சீனா, நெதர்லாந்து போன்ற மேலை நாடுகளில் போக்குவரத்திற்கான முதன்மை வாகனமாக சைக்கிளுக்கு மாறி வருகின்றனர். அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளிலும் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் சைக்கிளையே பயன்படுத்துகிறார்கள்.

சைக்கிள் 2.0 :

ஆனால் நம் நாட்டில் போக்குவரத்திற்குப் பயன்படுத்த சைக்கிளை உடற்பயிற்சிக்கான ஒரு கருவியாக மாற்றி வைத்திருக்கிறோம். இது நிச்சயம் சைக்கிளின் 2.0 வெர்சன் என்று தான் சொல்ல வேண்டும். வீட்டிற்குள் ஒரே இடத்தில் சைக்கிள் போன்ற இயந்திரத்தில் உடற்பயிற்சி செய்வதைவிட இயற்கையான சூழலில் நிஜ சைக்கிளை ஓட்டுவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தற்போது இந்த விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். சென்னை போன்ற மாநகரங்களில் காலை அல்லது இரவு நேரத்தில், போக்குவரத்து குறைந்த சாலைகளில் பலர் சைக்கிளில் செல்வதைப் பார்க்க முடிகிறது. அதுவும் உடற்பயிற்சிக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சைக்கிள்கள் தான் என்றாலும், இப்படியாவது அதனை பயன்படுத்துகிறார்களே என நிம்மதி அடைய முடிகிறது.

கால் பாதத்தில் இருந்து, மூளை வரை உடலின் அத்தனை உறுப்புகளையும் இயங்க வைப்பது சைக்கிள். இதனால் அரைமணி நேரம் சைக்கிள் ஓட்டினாலே 300 கலோரி கொழுப்பு எரிக்கப்படுகிறது. இதன் மூலம் சர்க்கரை அளவை சீராக்க முடியும் என்பது இனிப்பான செய்தி.
சைக்கிள் பகிர்வு திட்டம்:

உலக சைக்கிள் தினத்தையொட்டி இன்று டெல்லியில் 8 கிமீ தூர சைக்கிள் பந்தயம் நடைபெறுகிறது. உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் ஒன்றாக டெல்லி உள்ளது. எனவே, அங்கு வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக சைக்கிளை பயன்படுத்தவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதோடு, சைக்கிள் பகிர்வு திட்டம் அங்கு தொடங்கப்பட உள்ளது. டெல்லி முழுவதும் 50 இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு மையங்களிலும் 10 முதல் 20 சைக்கிள்கள் இருக்கும். ஒரு மணி நேரத்துக்கு ரூ.10 என்ற கட்டண அடிப்படையில் அந்த சைக்கிள்களை பொதுமக்கள் பயன்படுத்தலாம். பின்னர், ஏதேனும் ஒரு சைக்கிள் மையத்தில் சைக்கிளை ஒப்படைக்க வேண்டும்.

முன்னுதாரணமாக மாறிய மத்திய அமைச்சர்:

சைக்கிள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹர்ஷவர்தன், இன்று காலை சைக்கிளில் வந்து பொறுப்பேற்றுக் கொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில்,

‘என் மீது நம்பிக்கை வைத்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி. மக்களின் ஆரோக்கியமே மோடி அரசின் முக்கிய நோக்கமாகும். சைக்கிளிங் எனக்கு பிடித்த விளையாட்டு. சைக்கிளில் செல்வது எளிமையாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கும். காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த இது சிறந்த வழி’ எனத் தெரிவித்துள்ளார். அதோடு, தான் சைக்கிளில் பயணம் செய்யும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மோடி அரசின் பதவியேற்பு விழாவிற்கு, பாஜக எம்.பிக்கள் மற்றும் கட்சியினர் பலர் சைக்கிளில் சென்றது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 1 ஜூன், 2020

உலக பாலியல் தொழிலாளர்கள் தினம் ஜூன் 02.



உலக பாலியல் தொழிலாளர்கள் தினம் ஜூன் 02.

தேனீக்கள் தீண்டத் துடிக்கும் தனது தேகத்தை, வானவில்லுக்கே வண்ணம் தரும் தன்னுதடை, தன் தாய் தந்துபோன உயிர்நாடியை, சொந்தங்களோடு கழிக்க வேண்டிய அந்திப்பொழுதை, எவனோ ஒருவன் தரும் காசுக்காக விற்கிறாள் அவள். அவள் விற்பது உடலை மட்டுமல்ல. தனது ஆசைகளை, இன்பங்களை, சொந்தங்களை, காதலை. ஆனால் அவள் கற்பை விற்பதை மட்டும்தான் பார்க்கிறது இச்சமூகம். அதனால் தான் அவளுக்கு இந்தப் பெயரையும் வைத்துள்ளது – பாலியல் தொழிலாளி என்று. 

அவளின் மொத்த அங்கத்தையும் கூறு போட்டு அருந்தும் ஆணினம் அவளை மனித பிறப்பாய் பார்ப்பதில்லை போல. எத்தனை எத்தனை இன்னல்களை அவள் இங்கு சந்திக்க வேண்டியுள்ளது. அவளுக்கு எதிராக நடக்கும் தீண்டல்கள், பலாத்காரங்கள், கொலைகள், அவளை பூனையிடமிருந்து உயிரைக் காக்க ஓடும் எலியைப் போல் இன்று ஓடவைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவ்வுலகில் அவளின் நலனைப் பற்றிக் கவலைப்படும் சில உயிர்களும் பிறந்துள்ளன.

அவளை வன்கொடுமைகளிலிருந்து காப்பாற்ற நினைக்கும், அவளுக்கு குரல் கொடுக்கவும், போராடவும் தயாராய் இருக்கும் ஒருசிலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவளைப்பற்றி மக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்நாள் – சர்வதேச பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினம்.



ஆண் இனமும் விதிவிலக்கல்ல

2012-ம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பின் படி, உலகம் முழுதும் சுமார் 4 கோடி பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். அதில், அமெரிக்காவில் மட்டும் 10 லட்சம் பேர் உள்ளனர். 75 சதவிகிதம் பாலியல் தொழிலாளர்களின் வயது 13-25. இதைக் கண்டு ஏளனம் செய்ய ஆண்களுக்கு ஒன்றுமேயில்லை. காரணம் சுமார் 80 லட்சம் ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உலகின் பல நாடுகளில் பாலியல் தொழில் அனுமதியுடனேயே நடக்கிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. நமது நாட்டில் கூட பாலியல் தொழில் செய்வது குற்றம் என்று சட்டத்தில் இல்லை. உடலுறவுக்கு ஒருவரை அழைப்பதே குற்றம். அப்படியிருக்கையில் அதிகார வர்க்கம் முதற்கொண்டு பொதுஜனம் வரை இவர்களை இழிக்காதவர்களும் தாக்காதவர்களும் இல்லை. அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கு 29 டாக்சி டிரைவர்கள் கொல்லப்படுகின்றனர். அதேபோல் மதுபானக் கடை பெண் ஊழியர்களில் ஒரு லட்சத்துக்கு 4 பேர் கொல்லப்படுகின்றனர். ஆனால் பாலியல் தொழில் செய்பவர்களில் ஒரு லட்சத்துக்கு சுமார் 204 பேர் கொல்லப்படுகின்றனர். காரணம் அவர்களை பாதுகாக்கவும், குரல் கொடுக்கவும் யாரும் இல்லை என்பதே. 

இன்று நாம் டிராபிக் போலீசிடம் லஞ்சம் கொடுப்பதற்கும், பொறியியல் கல்லூரிகளில் லட்சங்களில் டொனேஷன் கொடுக்கவும் காரணங்கள் சரியானது என்று கருதுகிறோம். ஒவ்வொருவரின் செயலுக்கும் தவறுக்கும் காரணம் உண்டென்றில், அவர்கள் இந்நிலைக்குத் தள்ளப்படவும் காரணம் உண்டுதானே? அக்காரணம் அறிந்து கொள்ளவும், அதைப் புரிந்து கொள்ளவும் இங்கு யாரும் தயாராய் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.



பிச்சை எடுப்பவர்களுக்கும், கடன் வாங்குபவர்களுக்கும் மட்டுமல்ல இவர்களுக்கும் உடல்நிலை சரியில்லாத தாய் தந்தை, கஷ்டப்படும் குடும்பம் என எல்லோமும் உண்டு. குடும்பப் பிரச்னைகளுக்காக எங்கெங்கோ திரிந்து யாரும் உதவாத நிலையில், இவர்கள் கண்களில் பணத்தைக் காட்டுவது ஏனோ காமத்தின் எதிர்ப்பார்ப்பில் திரியும் ஒரு கொடிய மிருகம்தான். உயிர்கொல்லி நோய்கள் தாக்கும் என்று தெரிந்திருந்தும் ஒருத்தி அதைச் செய்கிறாள் என்றால் அவள் நிச்சயம் எதிர்பார்ப்பது உடல் சுகம் அல்லவே. அவளுக்கான வாய்ப்பும் அன்பும் மறுக்கப்பட்டதால்தானே அவள் அந்த முள் பாதையை தேர்ந்தெடுக்கிறாள். உறவினர்களால் கைவிடப்பட,  பெண்ணுக்கான அடையாளங்கள் முழுமையடையாத நிலையிலும் கூட பல சிறுமிகள் இதற்கு முற்படுகிறார்கள். ஏன் இந்தக் கொடுமை. யார்தான் இவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அளிப்பது? 



பெண்களே ஒதுக்காதீர்கள்

பாலியல் தொழில் செய்யும் பெண்களை மற்ற பெண்களே ஏளனமாய் நினைப்பதுதான் பெரும் கொடுமை. இவ்வுலகில் புலி, பூனை, மண்புழு என எந்தவொரு உயிரும் மனிதன் வாழ முக்கியம் என்கின்றனர் வல்லுனர்கள். அதில் எந்த உயிர் இல்லாவிட்டாலும் அதுவும் மனிதனின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். இன்று பாலியல் தொழிலாளிகள் என்று ஒதுக்கப்படும் இவர்கள் இல்லை என்றால் குடிப்பழக்கத்திற்கும், போதைப்பழக்கத்திற்கும் ஆளான,  ஆண்களின் வக்கிர வடிகால் விபரீத விளைவுகளை அல்லவா உருவாக்கும்? 

கடந்த 10 ஆண்டுகளில் ஆண்களின் கொடூர தாக்குதலால் காயமடைந்து பலியான பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரங்களில். அமெரிக்காவில் பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் டிசம்பர் 17-ம் நாள் ‘பாலியல் தொழிலாளர்களுக்கெதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ஐரோப்பாவில் இதற்கென அமைப்புகள் பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றன.

சிவப்புக் குடை சின்னம் பாலியல் தொழிலாளர்களின் வன்கொடுமைக்கு  எதிரான சின்னமாக கடைபிடிக்கப்படுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் நிவாரண நிதிக்கு மும்பையைச் சார்ந்த பாலியல் தொழிலாளர்கள் இணைந்து 1 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். அவர்களுக்கும் எல்லா மனித உணர்வுகளும் காலாவதி ஆகாமல் உள்ளது. நாம் தான் அவர்களை நம்மில் ஒருவராக ஏற்க மறுக்கின்றோம். மனிதம் என்பது எல்லோரையும் ஏற்றுக் கொள்வதுதான்.

இனியாவது அவர்களிடத்திலும் கொஞ்சம் அன்பு செலுத்துவோம். அவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுப்போம். அதற்கான உறுதியை இந்த உலக பாலியல் தொழிலாளர்கள் நாளில் மேற்கொள்வோம்! 

திங்கள், 25 மே, 2020

உலக ஆமைகள் தினம் மே 23


உலக ஆமைகள் தினம் மே 23.

உலக ஆமைகள் தினம் இன்று?முழு விவரம்.

ஆமைகள் தினமின்று
நிதானத்திற்காக பெயர் போன ஆமைகள், பெரும்பாலும் அனைத்து தட்ப வெப்ப சூழலிலும், வாழக் கூடிய இந்த ஆமை, ஒரு உயிரினம் என்பதிற்கும் மேல் கலை, இலக்கியம் எனப் பலப் பரிமாணங்களில் வலம் வருகிறது.

அழிந்து வரும் உயிரினமான ஆமைக்கு ஆமைகள் தினம் கொண்டாடுவதன் மூலம், அவற்றின் அத்தியாவசியத்தை உறுதிப்படுத்துவதாக அமையும். இது ஆமைகளைப் பாதுகாக்க மற்றும் செல்லப் பிராணிகளாகப் பராமரிக்க ஊக்குவிப்பதாக அமையும். 1990ஆம் ஆண்டு அமெரிக்க ஆமை மீட்புக் குழுவை சூசன் டெல்லம் மற்றும் மாஷல் தாம்ப்ஸன் என்னும் தம்பதியினர் தோற்றுவித்தனர். விலங்குகளின் மீது ஆர்வம் கொண்ட இந்த தம்பதியினர், 2000ஆம் ஆண்டிலிருந்து, ஆமை தினத்தைக் கொண்டாடுவதன் மூலம், இந்தப் பிராணியை அழிவிலிருந்து மீட்கும் பொருட்டு விழிப்புணர்வு உண்டாக்குவதைப் பணியாகக் கொண்டுள்ளார்கள்.

இதுவரையில் அமெரிக்க ஆமை மீட்புக் குழு, 3000 ஆமைகளைப் பராமரிப்பு இல்லங்களில் சேர்த்திருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளைப் பராமரிப்பதிலும், கைவிடப்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட ஆமைகளின் நலனிலும் இக்குழு அக்கறைக் காட்டுகிறது.

ஆமை தினம் பல்வேறு இடங்களில் வெவ்வேறு முறைகளில் கொண்டாடப்படுகிறது. ஆமைகள் போல உடை அணிந்து கொள்வது, நெடுஞ்சாலைகளில் வழி தவறிச் சென்ற ஆமைகளை மீட்டு அவற்றின் வாழ்விடங்களில் சேர்ப்பது, என்பதில் இருந்து, வகுப்பறைகளில் மாணவர்களுக்கு ஆமைத் தொடர்பான கைவினைப் பொருட்களை செய்வதன் மூலம் அவர்களுக்கு ஆமைகளைக் குறித்து அறிவாற்றலை வளர்ப்பது என பலவகையாகக் கொண்டாடப்படுகிறது.

கடல் ஆமைகள், குறிப்பாக பால் ஆமை என அழைக்கப்படும் ஆலிவ் ரிட்லி வகையைச் சேர்ந்த ஆமைகளை காப்பாற்றுவதில் நம் சென்னை முக்கிய பங்களிப்பைத் தருகிறது. மன்னார் வளைகுடா, வங்கக் கடலில் வாழும் அரிய உயிரினம் ஆமைகள். இதில் சித்தாமை, அலுங்காமை, பச்சை ஆமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை என, பல வகைகள் உள்ளன. சாதுவான குணம் கொண்ட ஆமைகள், 300 ஆண்டுகள் வாழக்கூடியவை.

கடல் மைல்:கடல் பாசிகள், மீன் குஞ்சுகளை உணவாக உட்கொண்டு, சுவாசிக்கும் போது கடல் நீரை மாசுபடுத்தாமல், சுத்திகரித்து வெளியேற்றும் தன்மை கொண்டதால் ஆமையை, ‘கடல் சுத்தி கரிப்பான்’ என, மீனவர்கள் அழைக்கின்றனர்.

ஆமைகள் மணிக்கு, 3 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது என்பதால் எளிதில் சுறா, திமிங்கலத்திற்கு இரையாகின்றன;

1972ஆம் ஆண்டு வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் படி அழிந்து கொண்டிருக்கும் இனமாக அறிவிக்கப்பட்டது. மீன் பிடிப்பு, எண்ணெய் கசிவு , கரையோர முன்னேற்றத் திட்டங்கள் மேலும் பலக் காரணங்களால் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இந்த இனத்தை பாதுகாக்க சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல விழிப்புணர்வுப் பேரணிகள் மற்றும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

மாணவர் கடலாமை பாதுகாப்பு கூட்டமைப்பு என்பது 1971ஆம் ஆண்டு ரோமுலஸ் வித்தேகர் மற்றும் வள்ளியப்பனால் தொடங்கப்பட்டது. இது பின்னர் சென்னை பாம்புப் பண்ணை மற்றும் வனத் துறையால் தொடர்ந்து நடத்தி வரப் படுகிறது. இந்தக் கூட்டமைப்பில் மாணவர்கள் யார் வேண்டுமானாலும் இணையலாம். இதுவரையில் 22,000 ரிட்லி இன சிறிய ஆமைகளை இக்குழுவினர் காப்பாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு இரவும் கடற்கரைக்கு சென்று முட்டைகளையும் ஆமைக்கூடுகளையும் மீட்டெடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள்.

இந்த ஆமை தின நடைபயணம் நீலாங்கரையில் இருந்து பெசண்ட் நகர் வரையில் ஏழு கிலோ மீட்டராக கடைப்பிடிக்கப்படிகிறது.

சனி, 16 மே, 2020

மே 17 இன்றைய வரலாறு


இன்றைய வரலாறு... உலக உயர் இரத்த அழுத்த தினம் !
சாதனையாளர்கள் இவ்வுலகை விட்டு சென்றாலும், அவர்கள் செய்த மாபெரும் சாதனைகளையும்,

கண்டுபிடிப்புகளையும் Pனுகு வடிவில் அறிந்துகொள்ள

இங்கே கிளிக் செய்யுங்கள் !உலக தொலைத்தொடர்பு தினம்



👉 உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைத்தொடர்பு துறையும் ஒன்றாகும். தகவல் தொடர்புக்கென முதன்முதலாக 1865ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி அன்று பாரிசில் பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம் நிறுவப்பட்டது.

👉 பின்பு, உலக தொலைத்தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கம் துவங்கப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.

👉 இணையம் மற்றும் புதிய தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக தொலைத்தொடர்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

👉 மேலும், இச்சங்கம் உலகம் முழுவதும் தொலைத்தொடர்பை ஏற்படுத்தி, உலக மக்களிடம் ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளது.உலக உயர் இரத்த அழுத்த தினம்


👉 உலக சுகாதார நிறுவனம் கார்டியோவாஸ்குலர் நோயினால் (இருதய நோய்) ஏற்படும் இறப்பு விகிதத்திற்கான முக்கிய காரணமாக உயர் இரத்த அழுத்தத்தைக் குறிப்பிட்டிருக்கிறது.

👉 உலகத்தில் உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்களில், 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய நிலை குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

👉 இது சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தவே, உலக சுகாதார நிறுவனம் உயர் இரத்த அழுத்தம் குறித்து 2005ஆம் ஆண்டில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியது என்பதுடன் ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் தேதியை உலக உயர் இரத்த அழுத்த தினமாக அறிவித்திருக்கிறது.எட்வர்டு ஜென்னர்


💉 பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் 1749ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இங்கிலாந்தின் பெர்க்லே நகரில் பிறந்தார்.

💉 1765ஆம் ஆண்டு ஜான் ஃபியூஸ்டர் என்ற மருத்துவர் கவ் பாக்ஸ் (ஊழற-pழஒ) நோய் உள்ளவர்களுக்கு பெரியம்மை வராது என்ற கட்டுரை எழுதி லண்டன் மருத்துவக் கழகத்திற்கு அனுப்பினார்.

💉 பிறகு இவர் பெரியம்மைக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் 20 ஆண்டுகாலம் ஆராய்ச்சி மேற்கொண்டார்.

💉 பின்பு கவ் பாக்ஸ் கிருமிகளை மென்மைப்படுத்தி ஊசிமூலம் ஒருவரது உடலில் செலுத்தினால் அவரை பெரியம்மை தாக்காது என்பதை நிரூபித்தார். ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக அம்மை ஊசி போட்டார்.

💉 இயற்கையையும், மனிதகுலத்தையும் அளவுகடந்து நேசித்த மற்றும் கோடிக்கணக்கான உயிர்களைக் காத்தவருமான ஜென்னர் 1823ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1897ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இந்தி இலக்கியத்திற்கு புதுவடிவம் கொடுத்த தீரேந்திர வர்மா உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் பிறந்தார்.

வியாழன், 14 மே, 2020

உலக குடும்ப தினம் மே 15.


உலக குடும்ப தினம் மே 15.

சிட்டுக்குருவிக்கும் சிறு கூடு உண்டு. குடும்பத்திற்காக கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றும். இரையை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும். சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு குடும்பம். அது அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் சமுத்திரம். இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து… தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழ்கிறோம். காலத்தின் கட்டாயமாய்… இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் “விரிசல்’ உருவாகிறது. இதைக் கவனத்தில் கொண்டுதான் ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.

family day may 15

“இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு தினம் கடைப் பிடிக்கப்படுகிறது என்பதைக் கூட வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக் மூலம் அறிந்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருப்பது வேதனையிலும் வேதனை. ஆம்.. இளைய தலைமுறையினரின் மெத்தனப்போக்கு, தான்தோன்றித் தனம், கட்டுப்பாடில்லா வாழ்க்கை முறை போன்றவை தற்போது அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. காதல், திருட்டு, வன்முறை போன்றவற்றால் பிஞ்சு மனம் நஞ்சாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதற்கு பெற்றோரின் அலட்சியமே காரணம். மேலும் சீரழிந்து வரும் கலாசார மாறுபாடும் இது போன்ற சம்பவங்களுக்கு அடிக்கல்லாக அமைந்துவிடுகிறது. கணவன், மனைவி உறவில் விரிசல், மாமியார், மருமகளிடையே நல்லிணக்கம் இல்லாமை போன்றவற்றால் காலம் காலமாக கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமத்திலும், நகரத்திலும்கூட கட்டுப்பாடான வாழ்க்கை முறை, பெற்றோருக்கு அடங்கிய பிள்ளைகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை என நன்றாகவே இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக இவை அனைத்துமே புறந்தள்ளப்பட்டு நேர்மாறாகி விட்டன.மாறிவரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி இவற்றின் தாக்கம் மெல்ல மெல்ல நம்மையும் மாற்றிவிட்டது. இதனால்தான் கொலை, கொள்ளை, தீவிரவாதம் போன்ற கொடும் செயல்கள் நடந்துவருகின்றன. இதை உடனே தடுப்பதுடன், மனநல ஆலோசனை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கூட்டுக்குடும்ப வாழ்க்கையைப் பொருத்தவரை வீட்டில் மூத்தவர்கள் இருப்பதால் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுடன், கட்டுப்பாடும் நிறைந்திருக்கும். இதனால் உள்ளூர பயம் மேலோங்கும். ஆனால், இன்றோ பலரும் தன்னிச்சையாக வாழவும், முடிவுகளை மேற்கொள்ளவும் கற்றுக்கொண்டுவிட்டனர்.தாய், தந்தை கண்டிப்புடன் இருப்பதால் குழந்தைகளைச் சிறப்பாக வளர்க்க முடிகிறது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் வேலைக்குச் செல்ல நேரிடும்போது குழந்தைகளைப் பொறுப்பாக யாரும் கவனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

அத்துடன் அவர்கள் என்ன படிக்கிறார்கள், எங்கு செல்கிறார்கள் போன்றவற்றைக் கவனிக்கக்கூட நேரமிருப்பதில்லை. எனவே பலர் கணினி, அலைபேசி, இணையதளம், திரைப்படம், நண்பர்களுடன் கேளிக்கை, விருந்து என்று திரியநேரிடுகிறது. இதே கூட்டுக் குடும்ப வாழ்க்கையாக இருந்தால் அரவணைப்பும், கண்டிப்பும் கிட்டும்.இன்றுள்ள இளம் தலைமுறையினரில் 90 சதவிகிதம் பேருக்கு தங்களது பெற்றோரைத் தவிர, வேறு உறவு முறைகளைத் தெரியவாய்ப்பே இல்லை.

உறவினர்கள் வீட்டு விசேஷங்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதற்கு இவர்களுக்கு நேரமோ, வாய்ப்போ கிடைப்பதில்லை.
பெரும்பாலான நேரங்களை தனிமையிலும், பொழுதுபோக்கு அம்சங்களிலுமே கழிக்க நேரிடுகிறது. இதனால் மன அழுத்தம், வெறுப்பு, நிம்மதியின்மை போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன. தங்களுடைய குறைகளையோ, நிறைகளையோ மனம் விட்டு யாரிடமும் பேச முடிவதில்லை. குறைந்தபட்சம் தான் செய்வது சரியா, தவறா என்று முடிவெடுக்கக்கூடத் தெரிவதில்லை.

இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. தவறான வழிகளை நாட நேரிடுகிறது.தனிக்குடித்தனம் என்றால் யாரும் நம்மைத் தட்டிக் கேட்க மாட்டார்கள், சுதந்திரமாக இருக்கலாம் என்ற பரவலான கருத்து நிலவுகிறது. இது முழுக்க முழுக்க தவறு. எல்லாமே நமது செயல்களில்தான் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் கூட்டு வாழ்க்கை ஏன் தேவை என சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் அதில் உள்ள நிறைகளை உணர முடியும்.

இதைவிட மற்றொரு அழுத்தமான காரணத்தை மனதில் கொண்டால் கூட்டுக் குடும்பவாழ்க்கை முறை அவசியம் என்ற எண்ணம் ஏற்படும். நாளுக்குநாள் அதிகரித்துவரும் விலைவாசியைக் கணக்கில்கொண்டு பார்க்கும்போது, தனிக்குடித்தனம் இருப்பவர்கள் கூட்டுக் குடும்பத்தில் சேரும்போது அவர்களுக்கு பலவகைகளிலும் சிக்கனம் உண்டாகும்.

அதிலும் முன்னரே குறிப்பிட்ட இன்டர்நெட் வாழ்வியல் முறையில், சமூக வலைதளங்களில் மட்டும் தான் உறவுகள் கூட்டாக இருக்கின்றன. அதாவது ஃபேஸ் புக், வாட்ஸ்-அப்களில் குரூப் உருவாக்கி அதில் ஓர் குடும்பமாக வாழ்கின்றனரே தவிர, கூட்டு குடும்பமாக வாழ்வது என்பது அதிசயமாக இருக்கின்றது. அதிலும் ஃபிளாட்டுகள் வந்தவுடன் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்துவிட்டது கூட்டு குடும்ப வாழ்வியல் முறை. தாத்தா, பாட்டி, பெரியப்பா, மாமா, அத்தை, பேரக்குழந்தைகள், என்ற வாழ்வியல் முறை மிகவும் இன்பமானது என்பதை மறந்தே போ விட்டோம்.முன்னெக்காம் கோடை விடுமுறைகளில் மட்டுமே ஒன்றாக இருந்தவர்கள் சிலர் இருந்தன்றனர். அதையும் கூட தற்போதைய ஸ்மார்ட் ஃபோன்கள் கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்து வருகிறது. ஷாப்பிங் மால், பார்ட்டி கிளப், தியேட்டர், பார்க், பீச் இதையெல்லாம் தாண்டி நிறைய சந்தோசங்களும், நன்மைகளும் கொண்டக் குடும்ப வாழ்க்கையை நினைவூட்டும் தினமின்று மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்

திங்கள், 11 மே, 2020

உலக செவிலியர் தினம் மே 12 !


செவிலியர்கள் இன்னொரு 'தாய்'.. உலக செவிலியர் தினம் இன்று கொண்டாட்டம்

உலக செவிலியர் தினம் மே 12 !

செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; ஒரு வகை தொண்டு! ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு! சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்பு தன்மையுடன் ஆற்றும் மகத்தான சேவையே செவிலியர் பணி.

ஒரு காலத்தில் செவிலியர் சேவை கவுரவமான, மரியாதைக்குரிய பணியாக கருதப்படவில்லை. மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்களே செவிலியர் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அதுமட்டுமல்ல, அந்தக் காலத்தில் உயர்ந்த செல்வ குடும்பங்களில் சமையல்காரிகளாகவும் கூட செவிலியர்கள் வேலை செய்யவேண்டிய நிலை இருந்தது. இந்த நிலைமையை மாற்றி செவிலியர்களுக்கென சமுதாயத்தில் மதிப்பை உருவாக்கியவர்தான் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்.


நவீன தாதியல் முறை

இங்கிலாந்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து, பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக தன்னை செவிலியர் பணியில் ஈடுபடுத்தி கொண்டவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். நவீன தாதியியல் முறையை உருவாக்கி செவிலியர் பயிற்சி பள்ளியையும் தொடங்கியவர். 1844, டிசம்பரில் லண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதி ஒன்றில் உயிரிழந்த ஏழையின் மரணமே இவரது பாதையை புரட்டி போட்டது. வறியவர்களுக்கென்று யாருமே உதவி புரிய இல்லையே? என்று மனம் நொந்து போனார். இதனைத் தொடர்ந்து பிளாரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். அதுமுதல் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அவரது அக்கறை நீண்டுகொண்டே சென்றது.

கை விளக்கேந்திய காரிகை

அதன் முத்தாய்ப்பாக அமைந்தது ஒரு சம்பவம். 1854-ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. கிரிமியன் போரில் பாதிக்கப்பட்ட படைவீரர்கள் குத்துயிரும் குலையுயிருமாக வீழ்ந்து கிடந்தனர். அவர்களுக்கு யாருமே உதவ முன்வரவில்லை. இறக்கும் தருவாயில் பலர் முனகலுடன் இருந்தனர். அந்த ராணுவ மருத்துவமனைக்கு 38 செவிலியருடன் சென்றார் பிளாரன்ஸ். வசதி குறைவுகள் அங்கு காணப்பட்டாலும் தன்னால் முடிந்தவரை ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை வழங்கினார். உயிரிருக்கு போராடிய முழு படையையும் தன்னிடமிருந்த குறைந்த மருத்துவ வசதி மற்றும் நிறைந்த அன்பிலும் குணப்படுத்தினார். அந்த இரவு வேளைகளில் கையில் விளக்கு ஒன்றை ஏந்திய வண்ணம் நோயாளிகளிடம் சென்று நலம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார். தங்களை காக்க 'விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்த தேவதை' என ராணுவ வீரர்கள் நைட்டிங்கேலை கவுரவித்தனர். அதனால்தான் அவர் "கைவிளக்கு ஏந்திய காரிகை" என்றும் அழைக்கப்பட்டார்.

உணர்வுபூர்வமான தருணம்

அவர் பிறந்த மே 12-ஆம் நாளே உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. செவிலியர்களுக்கென்றே தனி மரியாதையும், கண்ணியத்தையும் உருவாக்கி கொடுத்தவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். அவர் இல்லாவிட்டால் செவிலியர் துறை இந்த அளவுக்கு இவ்வளவு காலம் நீண்டு வளர்ந்திருக்காது. அதனால் அவரை நினைவுகூர்ந்து இன்றைய தினத்தில் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் (Westminster Abbey) செவிலியர்கள் அந்த மாளிகையில் ஒன்று கூடுவர். அப்போது விளக்கு ஒன்று ஏற்றப்பட்டு அது செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும். அதாவது ஒரு செவிலியரிடம் இருந்து மற்றொருவருக்குத் தமது அறிவையும், அனுபவத்தையும், மனித நேயத்தையும் தோள் மாற்றம் செய்வதே இதன் அர்த்தம். இது ஒரு உன்னதமான உணர்வுப்பூர்வமான தருணமாகும்.


செவிலியர்கள் - இன்னொரு தாய்
இதேபோல, தமிழகம் உட்பட உலகின் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும், செவிலியர்கள் அனைவரும் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏந்தி, சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் நோயாளிகளிடம் நடந்து கொள்வோம்; நோயாளிகளுக்கு மதிப்பளிப்பது, நோயாளிகளின் உடல் நலத்தில் அக்கறையுடன் செயல்படுவது என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்றுக் கொள்வார்கள். ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள்தான் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் மறுக்க முடியாததுமான விஷயம் ஆகும். "செவிலியர்கள் - இன்னொரு தாய்"!! அவர்களது பணி என்றும் போற்றத்தக்கது!! மதிக்கத்தக்கது!! வணங்கத்தக்கது!!

சர்வதேச செவிலியர் தினம் மே 12.


 சர்வதேச செவிலியர் தினம் மே 12.

தன்னலமற்ற சேவை.. செவிலியர் பணியே.. உங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம்..!!
சாதனையாளர்கள் இவ்வுலகை விட்டு சென்றாலும், அவர்கள் செய்த மாபெரும் சாதனைகளையும்,

 சர்வதேச செவிலியர் தினம்

சர்வதேச செவிலியர் தினம் மே 12ஆம் தேதி 1965ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. இத்தினம் அர்ப்பணிப்புடனும், சேவை மனப்பான்மையுடனும் செவிலியர்கள், நம் சமூகத்திற்கு ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்பை நன்றியுடன் நினைவுக்கூற இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மேலும், செவிலியர்கள் பின்பற்ற வேண்டிய நவீன நடைமுறைகளை உருவாக்கி தந்தவரான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்



செவிலியர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் (குடழசநnஉந Niபாவiபெயடந) 1820ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் பிறந்தார்.

இவர் 1850ஆம் ஆண்டு லண்டனில் பணிபுரிந்த போது ரஷ்யப் பேரரசுக்கும், பிரிட்டிஷ் பேரரசுக்கும் இடையே ஏற்பட்ட போரில் காயமடைந்த வீரர்களுக்காக சேவையாற்றினார்.

இவர் 1883ஆம் ஆண்டு விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருதை பெற்றார். மேலும், 1907ஆம் ஆண்டு ஆர்டர் ஆஃப் மெரிட் (ழுசனநச ழக ஆநசவை) எனும் விருதையும் பெற்றார். இவர் இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிவரை சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிய இவர் 1910ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
👉 1895ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி சிறந்த தத்துவ ஆசிரியர், பேச்சாளர், எழுத்தாளரான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பிறந்தார்.
💐 1949ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி சோவியத் ஒன்றியம், பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.
✍ 1881ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி வட ஆப்பிரிக்காவில் துனீசியா, பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ்வந்தது.


ஞாயிறு, 10 மே, 2020

மே 11 இன்றைய வரலாறு... தேசிய தொழில்நுட்ப தினம் !



தேசிய தொழில்நுட்ப தினம்



👉 இந்திய அரசு 1998ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி ஆப்ரேஷன் சக்தி என்ற பெயரில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. மொத்தம் ஐந்து அணுவெடிப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து சோதனையும் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

👉 இதன்மூலம் உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதனை அங்கீகரிக்கும் விதமாக மே 11ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது. மேலும், அறிவியல் துறையில் சாதனை செய்தவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக இத்தினத்தில் விருதுகள் வழங்கப்படுகின்றன.சுத்தானந்த பாரதியார்


✍ கவியோகி, மகரிஷி எனப் போற்றப்பட்ட சுத்தானந்த பாரதி 1897ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி சிவகங்கையில் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன்.

✍ இவர் சிறுவயதிலிருந்தே கவிதை எழுதுவது மற்றும் ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். சுத்தானந்தம் என பெயரிட்டு சித்தர் ஒருவர் இவருக்கு தீட்சை வழங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் மிகவும் பிரபலமானவை. மேலும், இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

✍ இவர் தேசியச் சிந்தனைகளைத் தூண்டும் பல பாடல்களை இயற்றினார். பல சீர்திருத்தப் பணிகளையும் செய்துள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் ராஜராஜன் விருது இவரது பாரத சக்தி நூலுக்குக் கிடைத்தது.

✍ ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்மநேயர் நாம் என்பதை உலகுக்கு உணர்த்திய இவர் 1990ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1909ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி தமிழில் பல வெற்றிப் படங்களை தந்த அமெரிக்க இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் பார்ட்டன் நகரில் பிறந்தார்.


வெள்ளி, 8 மே, 2020

அன்னையர் தினம் மே மாதம் 2 வது ஞாயிறு க்கிழமை


அன்னையர் தினம் மே மாதம் 2 வது ஞாயிறு

அன்னையர் நாள் (Mother's day) விடுமுறை தினம் அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது.  இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. அவற்றில் பல, நவீன விடுமுறை தினத்தை விட மிகவும் பழமையானது (எ.கா. ஐக்கிய இராச்சியத்தில் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படுகின்றது). தந்தையர் தினம் தந்தைகளைப் போற்றுகின்ற விடுமுறை தினமாகும்.

அன்னையர் நாள்
Mother's Day
Mothers Day card.png
அன்னையர் தின வாழ்த்து அட்டை
கடைபிடிப்போர்
பல நாடுகள்
வகை
வணிக
நாள்
பிராந்தியரீதியாக மாறுபடும்
தொடர்புடையன
தந்தையர் தினம், பெற்றோர் நாள், குழந்தைகள் நாள்
விடுமுறை தினமானது இறுதியில் மிகவும் வணிக மயமாக்கப்பட்டுள்ளது. அதன் நிறுவனர் அன்னா ஜார்விஸ் உள்ளிட்ட பலரும் அதை "ஹால்மார்க் விடுமுறை தினம்" என்று கருதினர். அது மிகப்பேரளவிலான வணிகப் பயன்பாட்டினைக் கொண்ட ஒன்று. அன்னா தான் விடுமுறையை உருவாக்குவதற்கு உதவியதிலிருந்து மாறி, இறுதியில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.[1][2]

வரலாற்று முன்நிகழ்வுகள் தொகு
லாம்பர்ட்ஸ்[யார்?] இந்த நாளானது பண்டைய கிரேக்கத்தில் அன்னை வழிபாட்டின் மரபிலிருந்து வழங்கப்பட்டதாகக் கருதினார். இது கிரேக்க கடவுளர்களின் தாயான சைபெலேக்கு நடத்தப்படும் விழாவாகும். இந்த திருவிழாவானது ஆசியா மைனரில் சமஇரவு நாள் அன்றும், ரோமில் மார்ச் ஐடஸில் இருந்து (மார்ச் 15) மார்ச் 18 வரைக்குள் கொண்டாடப்படுகின்றது.

பண்டைய ரோமன் வேறொரு விடுமுறை தினமான மேட்ரோனலியாவையும் கொண்டுள்ளது. அது ஜூனோவுக்கு அரிப்பணிக்கப்பட்டது. இருப்பினும் அன்னையர்கள் இந்த நாளில் பரிசுப்பொருட்களை வழங்கினர்.

ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றில் பல நீண்டகாலத்திய மரபுகள் இருந்தன. அங்கு குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக் கிழமையை தாய்மை மற்றும் அன்னையர்களைக் கௌரவப்படுத்த ஒதுக்கி வைத்திருந்தனர். அதுவே தாய் ஞாயிறு எனப்பட்டது. தாய் ஞாயிறு கொண்டாட்டங்கள் ஆங்கிலிக்கர்கள் உட்பட கிறிஸ்துவப் பெரும்பான்மையுள்ள பல பகுதிகளில் கிறிஸ்துவ நாட்காட்டியின் பகுதியாகவே உள்ளன. மேலும் கத்தோலிக்க நாட்காட்டியானது அதனை லயேட்டர் ஞாயிறு என்று குறிப்பிடுகின்றது. கன்னி மேரியையும் "மாதா தேவாலய"த்தையும் கௌரவிக்க லெண்ட்டில் நான்காவது ஞாயிறு கொண்டாடப்படுகின்றது. மரபு ரீதியாக இந்த நாளானது, அன்னைக்கு பரிசுகளை அளித்து சமைத்தல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற பெண்களின் குறிப்பிட்ட மரபு ரீதியான வீட்டுவேலைகளை குடும்பத்தின் பிற உறுப்பினர்களிடம் ஒப்படைத்து விட்ட சைகையைக் கொண்டு பாராட்டுதலைக் குறிக்கின்றது.[சான்று தேவை]

அன்னையர் தினத்தில் இன்னமும் சிறப்பாக, பல நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகின்றது.

ஜூலியா வார்டு ஹோவே அவர்களால் வழங்கப்பட்ட "அன்னையர் தின அறிவிப்பானது" அமெரிக்காவில் அன்னையர் தினத்தைக் கொண்டாட முந்தைய அழைப்புகளில் ஒன்று. 1870 ஆம் ஆண்டில் எழுத்திலான ஹோவேயின் அன்னையர் தின அறிவிப்பானது, அமெரிக்க குடியுரிமைப் போர் மற்றும் பிராங்கோ-புரூஸ்சியன் போர் ஆகியவற்றின் படுகொலைக்கான எதிர் விளைவானது.அந்த அறிவிப்பானது, பெண்கள் அவர்கள் சார்ந்த சமுதாயங்களை அரசியல் அளவில் வடிவமைக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தனர் என்ற ஹோவேயின் பெண்ணிய நம்பிக்கையுடன் பின்னப்பட்டது.

உச்சரிப்பு தொகு
1912 ஆம் ஆண்டில், அன்னா ஜார்விஸ் "மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை" மற்றும் "அன்னையர் தினம்" ஆகிய வாக்கியங்களைப் பதிவுசெய்து அன்னையர் தின சர்வதேச அமைப்பை உருவாக்கினார்.[1][3]

"She was specific about the location of the apostrophe; it was to be a singular possessive, for each family to honour their mother, not a plural possessive commemorating all mothers in the world."[1]

இது உச்சரிப்பாக U.S. விடுமுறை தின சட்ட உருவாக்க அதிகாரிகள் கூட்டத்தில் அமெரிக்க ஒன்றிய அதிபர் உட்ரோ வில்சன் அவர்களாலும், அமெரிக்க ஒன்றிய காங்கிரஸ் அறிவிப்புக்களினாலும்,[4][5] மற்றும் பிற அமெரிக்க ஒன்றிய அதிபர்கள் அவர்களின் அறிவிப்புகளின் மூலமும் பயன்படுத்தப்பட்டது.[6]

ஆங்கில மொழியின் பொதுவான பயன்பாடானது, மேம்போக்காக "Mother's Day" என்று ஒருமையைக் குறிக்க உச்சரிக்கத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது, இருப்பினும் "Mothers' Day" (பன்மைக்கு) கேட்டறியத் தேவையில்லை என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலுமான தேதிகள் தொகு
படிமம்:Moederdag (1925).ogvஊடகத்தை ஓடவிடு
நெதர்லாந்தில் அன்னையர் தினம் (1925)
அமெரிக்க ஒன்றிய விடுமுறை தினத்தை பிற நாடுகளும் கலாச்சாரமும் ஏற்றுக்கொண்டதால், ஐக்கிய இராச்சியத்தில் தாய் ஞாயிறு மற்றும் கிரீஸில் உள்ள கோயிலில் பாரம்பரிய இறை வழிபாடு போன்ற தாய்மையைப் பெருமைப்படுத்த ஏற்கனவே கொண்டாட ஏற்றதாக இருந்த தேதி மாறியது. சில நாடுகளில் இந்தத் தேதியானது கத்தோலிக்க நாடுகளில் உள்ள கன்னிமேரி தினம் அல்லது இஸ்லாமிய நாடுகளில் இறைத்தூதர் முகமதுநபியின் மகள் பிறந்ததினம், போன்று பெரும்பான்மையான மதத்தின் தனித்தன்மையாக இருந்த தேதிகளுக்கு மாற்றப்பட்டது. பிற நாடுகளில், பொலிவியாவில் அங்கு நடைபெற்ற குறிப்பிட்ட போரில் பங்குபெற்ற பெண்களின் பிறந்த தேதிகளைப் பயன்படுத்துவது போன்று வரலாற்றுத் தேதிகளுக்கு மாற்றப்பட்டது. முழுமையான பட்டியலுக்கு "சர்வதேச வரலாறும் பாரம்பரியமும்" பிரிவைக் காண்க.

குறிப்பு: சர்வதேச பெண்கள் தினத்தை அன்னையர் தினத்திற்குப் பதிலாகக் கொண்டாடும் நாடுகள் குத்துவாள் '†' குறியீட்டில் குறிக்கப்பட்டுள்ளன
.
சர்வதேச வரலாறும் பாரம்பரியமும் தொகு
பெரும்பாலான நாடுகளில், அன்னையர் தினம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மதிப்பிடப்பட்ட விடுமுறை தினத்திலிருந்து வருவிக்கப்பட்டு சமீபத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இது பிற நாடுகள் மற்றும் கலாச்சாரங்களால் ஏற்கப்பட்ட பொழுது, அது வேறுபட்ட அர்த்தங்களை அளித்தது. வேறுபட்ட நிகழ்வுகளுடன் (மதங்கள், வரலாறு அல்லது புராணம்) தொடர்புடையதாக இருந்தது. மேலும் வேறுபட்ட தேதி அல்லது தேதிகளில் கொண்டாடப்பட்டது.

பல நாடுகளில் தாய்மையைப் போற்றும் கொண்டாட்டங்கள் ஏற்கனவே இருந்தன. அவற்றின் கொண்டாட்டங்கள் தங்கள் சொந்த அன்னைக்கு கார்னேஷன் மலர்கள் மற்றும் பிற பரிசுப்பொருட்களை வழங்குதல் போன்ற பல நீட்டிக்கப்பட்ட அம்சங்களை அமெரிக்க ஒன்றிய விடுமுறை தினத்திலிருந்து ஏற்றுக்கொண்டன.

கொண்டாட்டங்களின் நீட்சியானது பெரிதும் வேறுபடுகின்றது. சில நாடுகளில், தாயாக உள்ள ஒருவர் அன்னையர் தினத்தைக் கொண்டாடவில்லை எனில் அது குற்றமாகும். பிறவற்றில், இது நன்கறிந்த சிறிய விழாவாக முக்கியமாகக் குடியேறியவர்களால் கொண்டாடப்படுகின்றது அல்லது வெளிநாட்டு கலாச்சாரத்தின் (ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்களின் ஒப்பீடு) அம்சமாக ஊடகத்தால் வழங்கப்படுகின்றது.

மதம் தொகு
கத்தோலிக்கத் திருச்சபையில், விடுமுறை தினமானது கன்னி மேரியின் பெருமதிப்புடன் வலிமையான தொடர்புடையது.[22]

இந்து பாரம்பரியம், இதை "மாதா தீர்த்த ஆயுன்ஷி" அல்லது "தாய் அரைத்திங்கள் புனிதப் பயணம்" என்று அழைக்கின்றது. மேலும் இது இந்து மக்கள்தொகை அதிகமுள்ள, குறிப்பாக நேபாளத்தில் கொண்டாடப்படுகின்றது.

நாடுகள் தொகு
ஆப்பிரிக்க நாடுகள் தொகு
பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் அன்னையர் தினக் கருத்தை பிரிட்டிஷ் பாரம்பரியத்திலிருந்து ஏற்றுக்கொண்டன. இருப்பினும் முன்னாளில் ஐரோப்பிய சக்திகளால் ஆப்பிரிக்கக் குடியேற்றத்தைக் கொண்ட ஆப்பிரிக்கக் கண்டத்தில் பல வேறுபட்ட கலாச்சாரங்களிடையே அன்னைகளைப் போற்றும் பல திருவிழாக்களும் நிகழ்ச்சிகளும் உள்ளன.

வங்கதேசம் தொகு
வங்கதேசத்தில் அன்னையர் தினம் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளானது அரசாங்கம் மற்றும் அரசுசாரா அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட விவாத நிகழ்ச்சிகளுடன் கடைப்பிடிக்கப்படுகின்றது. வங்கதேச சமூகத்தில் அன்னையர்கள் வகிக்கும் முக்கியப் பங்கை அடையாளப்படுத்துவதன் நோக்கமாகக் கொண்ட ரத்னகர்வா மா விருதை சில அன்னையர்கள் வழங்குகின்றனர். அன்னைகள், அவர்களின் குழந்தைகள் பின்னாளில் நாட்டின் சிறந்த குடிமகன்களாக வர பாராட்டும்படி சிறப்பான முறையில் வளர்த்ததற்காக கிராண்ட் ஆசாத் ஹோட்டல் வழங்கிய விருதைப் பெற்றனர். மேலும், தலைநகரில் அந்த தினத்தைக் குறிக்க வரவேற்பு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. தொலைக்காட்சி சேனல்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின மற்றும் செய்தித்தாள்கள் அந்த தினத்தைக் குறிக்க சிறப்பு அம்சங்களையும் பத்தியையும் வெளியிட்டன. வாழ்த்து அட்டைகள், மலர்கள் மற்றும் தாயின் சிறப்பை குழந்தைகளுக்கு காண்பிக்கும் பரிசுப்பொருட்கள் ஆகியவை கடைகளிலும் சந்தைகளிலும் இருந்தன.

பொலிவியா தொகு
பொலிவியாவில் அன்னையர் தினம் மே 27 அன்று கொண்டாடப்படுகின்றது. இது நவம்பர் 8, 1927 அன்று கரோனில்லா போரின் நினைவைக் கொண்டாட சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டது. இந்தப் போரானது தற்போதைய நகரான கொக்ஹபம்பாவில் மே 27 1812 அன்று நடைபெற்றது. இந்தப் போரில், பெண்கள் நாட்டின் விடுதலைக்காகச் சண்டையிட்டு ஸ்பானிஷ் இராணுவத்தால் வதைக்கப்பட்டனர்.

கனடா தொகு
கனடாவில் பொது விடுமுறை தினம்#பிற சடங்குகள் என்பதைக் காண்க.
அன்னையர் தின விடுமுறை தினமானது, புனித காதலர் தினம், புனித பாட்ரிக் தினம், தந்தையர் தினம் மற்றும் ஹாலோவீன் போன்று கனடாவில் கடைப்பிடிக்கப்படுகின்றது.[சான்று தேவை] பெரும்பாலும் அனைத்து அம்சங்களிலும் இது, அமெரிக்க ஒன்றிய அன்னையர் தினத்தை ஒத்திருக்கின்றது.

சீனா தொகு
சீனாவில் அன்னையர் தினம் மிகவும் பிரபலமாகி இருக்கின்றது. மேலும் கார்னேஷன்கள் என்பது மிகவும் பிரபலமான பரிசு மற்றும் அதிகம் விற்பனையாகும் மலர் வகையாக உள்ளன.[23] 1997 ஆம் ஆண்டில், இது ஏழைத் தாய்மார்களுக்கு, குறிப்பாக சீனாவின் மேற்குப்பகுதியில் உள்ள கிராமப்புற ஏழைத் தாய்மார்களின் உதவும் நாளாக அமைக்கப்பட்டது.[23] சீனாவின் கம்யூனிஷக் கட்சியின் பத்திரிக்கையான பீப்பிள்ஸ் டெய்லி பத்திரிக்கையில் ஒரு கட்டுரையானது, "அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டிருந்த போதிலும், சீனாவிலுள்ள மக்கள் எந்தவிதத் தயக்கமின்றி விடுமுறை எடுத்துக்கொள்கின்றனர். ஏனெனில் இது தேசத்தின் பாரம்பரிய நன்னெறிகளுடன் சீராகச் செல்லுகின்றது -- பெற்றோர்களுக்கு மூத்தோர் மற்றும் மகளுக்குரிய பற்றுடன் மரியாதை செய்கின்றது" என்று விவரித்தது.[23]

சமீப காலத்தில் சீனாவின் கம்யூனிஷ கட்சியின் உறுப்பினர் லி ஹங்கியூ, மேங்க் ஸீயின் தாயான மேங்க் மூ அவர்களின் நினைவாக அன்னையர் தினத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்குமாறு பரிந்துரைக்கின்றார். அவர் சீன அன்னையர் திருவிழா ஊக்குவிப்பு அமைப்பு என்று அழைக்கப்பட்ட ஒரு அரசு சாரா அமைப்பை 100 கன்ஃப்யூசியல் அறிஞர்கள் மற்றும் நன்னெறிகளின் விரிவுரையாளர்களின் ஆதரவைக் கொண்டு உருவாக்கினார்.[24][25] மேற்கத்திய கார்னேஷன் மலர்களைக் கொண்ட பரிசுப் பொருட்களுக்குப் பதிலாக, பண்டைய காலத்தில் குழந்தைகள் வீட்டில் விட்டுச்சென்ற பொழுது சீன தாய்மார்களால் வளர்க்கப்பட்ட லில்லி மலர்களைப் பயன்படுத்தவும் அவர்கள் கூறினர்.[25] இது குறைந்த எண்ணிக்கையிலான நகரங்கள் தவிர மீதி இடங்களில் இன்னமும் அதிகாரப்பூர்வமற்ற திருவிழாவாக உள்ளது.

கிரீஸ் தொகு
கிரீஸில் அன்னையர் தினமானது, ஆலயத்தில் இயேசு பற்றிய விளக்கக்காட்சியைக் கொண்ட கிழக்கத்திய பாரம்பரியம் திருவிழா தினத்தினை ஒத்திருக்கின்றது. இந்த திருவிழா தினத்தில் தியோடோகோஸ் (கடவுளின் தாய்) முக்கியமாகத் தோன்றியதிலிருந்து ஜெருசலேமிலுள்ள ஆலயத்திற்கு இயேசு கிறிஸ்துவை கொண்டுவருவது வரையில், இந்த திருவிழா தினமானது அன்னையர்கள் தொடர்புடையது.

இந்தியா தொகு
தேசிய அளவில் அன்னையர் தினம் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.[26]

பத்தரே பிரபு திருவிழாவானது அதே நாளில் பம்பாய் மற்றும் இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் (உறுதியாக கொங்கன் மற்றும் மேற்கத்திய மலைத்தொடர்களின் கீழே அமைந்துள்ள மாவட்டங்கள்) மட்டுமே கொண்டாடப்படுகின்றது. இது பிறந்து ஒரு வருடம் மட்டுமே வாழ்ந்து இறந்த குழந்தைகளின் தாய்மார்கள் பற்றிய புராணக்கதையை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது மிகவும் தகவல் தொடர்பற்ற தூரமான இடத்தில் தோன்றியது. இருந்த போதிலும் இதுவும் "அன்னையர் தினம்" என்றழைக்கப்படுகின்றது. இதற்கும் அமெரிக்க ஒன்றியத்திலிருந்து நகலாக வந்து நாடு முழுவதும் கொண்டாடப்படும் நவீன கொண்டாட்டத்திற்கு தொடர்பின்றி இருக்கின்றது. பத்தரே பிரபு பிரிவினர் இந்த விடுமுறையை எப்போதும் கொண்டாடுகின்றனர்.[26]

ஈரான் தொகு
20 ஜூமாடா அல்தானியில், முகமதுவின் மகள் பாத்திமாவின் பிறந்த தினமாகக் கொண்டாடப்படுகின்றது.[27] இது பின்னர் ஈரானியப் புரட்சி தினமாக மாறியது. இதற்கான காரணம், பெண்ணிய நடவடிக்கைகளை குறைத்து குடும்பத்தின் பாரம்பரிய மாதிரிகளுக்கான முன்மாதிரியை வழங்க முயற்சிப்பதாகக் கொள்கைப்படுத்தப்பட்டுள்ளது.[28][29] இது முன்னதாக ஈரானிய நாட்காட்டியில் ஷா சகாப்தத்தில் 25 அசார் ஆக இருந்தது[சான்று தேவை]

ஜப்பான் தொகு
ஜப்பானில் அன்னையர் தினம் தொடக்கத்தில் ஷோவா காலம் நடைபெற்ற போது பேரரசி கோஜூன்வின் (பேரரசர் அக்கிஹிட்டோவின் தாயார்) பிறந்த தினமாக அனுசரிக்கப்பட்டது. தற்போது இது வணிகப்படுத்தப்பட்ட விடுமுறை தினமாக உள்ளது. மக்கள் வழக்கமாக கார்னேஷன் மற்றும் ரோஜா போன்ற மலர்களை பரிசாக அளிக்கின்றனர்.

மெக்சிகோ தொகு
அல்வரோ அப்ரேகன் அரசாங்கம் 1922 ஆம் ஆண்டில் அமெரிக்க ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்து, அதே ஆண்டு எக்ஸெல்சியர் செய்தித்தாளைக் கொண்டு அதை பெரிதும் முன்னிலைப்படுத்தும் பிரச்சாரத்தை உருவாக்கியது.[30] பழமை விரும்புகிற அரசாங்கமானது, குடும்பங்களில் அன்னைகளின் மிகுந்த தனித்தன்மை வாய்ந்த பாத்திரத்தை வலியுறுத்த இந்த விடுமுறையைப் பயன்படுத்த முயற்சித்தது. முன்னிலைப்படுத்தும் பெண்ணின் இந்த இயல்பற்ற உருவகம் இனப்பெருக்கத்தை விடவும் மிகுந்த மதிப்பு மிக்கதாக இல்லை என்று சமதர்மவாதிகளால் விமர்சிக்கப்பட்டது.[30]

1930களின் இடைக்காலத்தில், லாசரோ கார்டேனஸ் அரசாங்கம் விடுமுறை தினத்தை "நாட்டுப்பற்றுத் திருவிழா"வாக வழங்கியது. கார்டேனஸ் அரசாங்கம் விடுமுறை தினத்தை வாகனமாகப் பயன்படுத்த முயற்சித்த பல்வேறு விளைவுகள்: குடும்பங்கள் தேசிய வளர்ச்சியில் பங்குபெறுவதன் முக்கியத்துவத்தை குறிப்பிடுதல், மெக்சிகர்கள் தங்களது தாய்களின் மீது கொண்டிருந்த பற்றுறுதியிலிருந்து நன்மையைப் பெறுதல், மெக்சிகன் பெண்களின் மூலமாக புதிய படிப்பினைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அவர்களின் மீது தேவாலயம் மற்றும் கத்தோலிக்க உரிமை கொண்டிருந்த தாக்கத்தைக் குறைத்தல்.[31] அரசாங்கம் பள்ளிகளுக்கு விடுமுறையை வழங்கியது.[31] இருப்பினும், திரையரங்க நாடகங்கள் அரசாங்கத்திடமிருந்து வந்த கண்டிப்பான வழிமுறைகளை தவிர்த்துவிட்டு, அவை மதம்சார்ந்த ஐகான்கள் மற்றும் தீம்களைக் கொண்டு நிரப்பின. அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மாறாக "தேசிய கொண்டாட்டங்கள்" "சமய விழாக்களாக" மாறின.[31].

அதிபர் மானுவேல் அவிலா காமக்கோ அவர்களின் மனைவி சோலேதத் ஓரோஸ்கோ கார்சியா, 1940களின் போது இந்த விடுமுறை தினத்தை பரப்பி, அதை முக்கியமான தேசம் வழங்கிய கொண்டாட்டமாக உருவாக்கினார்.[32] 1942 ஆம் ஆண்டில் கொண்டாட்டமானது வாரம் முழுவதும், அனைத்துப் பெண்களும் தங்களது அடகு வைக்கப்பட்ட தையல் எந்திரங்களை எந்தவித பணமும் செலுத்தாமல் மாண்டே டே பியாதத்திடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்புடன் கொண்டாடப்பட்டது.[32]

ஓரோஸ்கோவின் ஊக்குவிப்பைத் தொடர்ந்து, 1941 ஆம் ஆண்டில் விடுமுறை தின விழிப்புணர்வை ஏற்படுத்த கத்தோலிக்க தேசிய சைனர்கிஸ்ட் யூனியன் (UNS) தொடங்கப்பட்டது.[33] மெக்சிகன் புரட்சிக் கட்சியின் (தற்போது PRI) உறுப்பினர்கள், சொந்தமாக வைத்துள்ள கடைகளுக்கு அன்னையர் தினத்தில் செல்லும் ஒடுக்கப்பட்ட வர்க்கப் பெண்கள், அவர்களில் கடையிலிருந்து இலவசமாக எடுத்துச் சென்று அதை அவர்களின் குடும்பங்களுக்குக் கொடுக்கலாம். இது பொருள் நிலைக் கொள்கை மற்றும் அடித்தட்டு வர்க்கத்தின் இயலாமை இரண்டையும் வலியுறுத்துவதாகவும், நாட்டின் பரவியுள்ள சமுதாயப் பிரச்சினையை மீண்டும் வலுவூட்டும் படியாக உள்ளதாகவும் சைனர்கிஸ்ட்கள் கவலையடைந்தனர்.[34] தற்போது இந்த மாதிரியான விடுமுறை தினத்தை மிகவும் பழமையானதாக நாம் பார்க்கும் அதே வேளையில், 1940களில் UNS அமைப்பானது அந்த விடுமுறை தினத்தை அந்த நேரத்தில் நிகழ்ந்திருக்கின்ற நவீனமாக்கலின் மிகப்பெரிய தொடக்கத்தின் ஒரு பகுதியாகப் பார்த்தனர்.[35] இந்த பொருளாதார நவீனமயமாக்கல் அமெரிக்க ஒன்றிய மாதிரிகளை பாதிப்பாகக் கொண்டு இது தேசத்தால் வழங்கப்பட்டது. மெக்சிகன் சமுதாயத்தில் முதலாக்கம் மற்றும் பொருள் நிலைக் கொள்கையை விதிக்கும் முயற்சி என்பதற்கான மேலும் ஒரு ஆதாரமாகக் காணும் போது மட்டுமே இந்த விடுமுறை தினமானது அமெரிக்க ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதற்கான காரணம் விளங்குகின்றது.[35]

மேலும், UNS மற்றும் லியோன் நகரின் கிளர்க் ஆகியோர் விடுமுறை தினத்தை சமயச் சார்பின்மையாக மாற்றும் விளைவு மற்றும் வீட்டில் பாரம்பரியச் செயல்பாடுகளிலிருந்து ஆண்களின் அடக்குமுறைகளில் நீண்டகாலமாக இருக்கும் பெண்களை விடுவித்து, சமூகத்தில் பெண்களின் மிகுதியான செயல்பாட்டை ஊக்குவிக்கும் விளைவுகளைக் கண்டனர்.[35] அவர்கள் விடுமுறை தினமானது கன்னி மேரிக்குச் செய்யும் சமயச் சடங்குகளை சமயச் சார்பின்மையாக மாற்றும் முயற்சியை பல விடுமுறை தினங்களில் கிறிஸ்துவத்தை மாற்றும் மிகப்பெரிய முயற்சிகள் வாயிலாகக் கண்டனர். அவர்கள் இதை மறுக்க பெரிய அளவிலான மக்கள் கூட்டத்தின் மூலம் முயற்சித்தனர். சமயம் சார்ந்த பெண்களை தேசம் வழங்கிய நிகழ்ச்சிளுக்கு உதவிபுரிய கேட்டு அவற்றை "மறுவடிமைக்க" முயற்சித்தனர்.[36] 1942 ஆம் ஆண்டில், சோலேதத்தின் விடுமுறை தினத்தின் மிகப்பெரிய கொண்டாட்டங்கள் நடைபெற்ற அதே நேரத்தில், கிளர்க் லியோன் நகரில் கன்னிமேரியின் 210 ஆவது கொண்டாட்டத்தை பெரிய அணிவகுப்புடன் ஏற்பாடு செய்தது.[36]

1940 களில் மெக்சிகன் அரசாங்கம் அன்னையர் தின தாக்கத்தின் விளைவுகள் உட்பட அதன் புரட்சியை விட்டுவிட்டது என்ற ஒருமித்த கருத்து ஆராய்ச்சியாளர்களிடையே நிலவியது.[33] இப்பொழுது மெக்சிகோவில் விடுமுறை தினமானது அன்னையர் மற்றும் கன்னி மேரி தினங்களாகக் கொண்டாடப்படுகின்றன.

தற்போது "தியா டே லாஸ் மாட்ரேஸ்" என்பது மெக்சிகோவில் ஒவ்வொரு ஆண்டும் மே 10 அன்று அதிகாரப்பூர்வமற்ற விடுமுறை தினமாக உள்ளது.[37]

நேபாளம் தொகு
"மாதா தீர்த்த ஆயுன்ஷி" என்பது "தாய் புனிதயாத்திரை அரைத்திங்கள்" என மொழிமாற்றப்பட்டது. இது பைஷாக் மாதத்தின் இருண்ட அரைத்திங்களில் (ஏப்ரல்) வருகின்றது. இந்தத் திருவிழாவானது அமாவாசை நேரத்தில் வரும். இது, "மாதா தீர்த்த ஆயுன்ஷி" என அழைக்கப்படுகிறது, ஏனெனில்: “மாதா” என்பதன் பொருள் அன்னை; “தீர்த்தா” என்பதன் பொருள் புனிதயாத்திரை. இந்தத் திருவிழாவானது நினைவு தினமாக மற்றும் வாழும் அன்னையர்களை வணங்கியும் பரிசில் வழங்கியும் மரியாதை செய்யும் பொருட்டு அல்லது பேறு அடைந்து அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் அன்னையர்களை நினைவு கூரும் பொருட்டு கடைபிடிக்கப்படுகின்றது. காத்மண்டு பள்ளத்தாக்கினை நோக்கி கிழக்குப் பக்கமாக மாதா தீர்த்தக் கிராமத்தின் மேம்பாட்டுக் கமிட்டியின் புற எல்லையில் அமைந்துள்ள மாதா தீர்த்த யாத்திரைக்குச் செல்வது நேபாளத்தில் பொதுவாக உள்ள மற்றொரு பாரம்பரியம் ஆகும்.

இந்த புனித யாத்திரை சம்பந்தமான ஒரு புராணக்கதை உள்ளது. பழங்காலத்தில் கடவுள் கிருஷ்ணரின் தாய் தேவகி சுற்றிப்பார்க்க வீட்டைவிற்றுச் சென்றுவிட்டார். அவர் நிறைய இடங்களைப் பார்த்துவிட்டு வீடு திரும்ப வெகுநேரம் ஆனது. தனது தாய் அங்கு இல்லாததால் கிருஷ்ணர் மிகுந்த வருத்தமடைந்தார். எனவே அவர் வெளியே சென்று பல இடங்களில் அவரது தாயைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக, அவர் "மாதா தீர்த்த குண்டா"வை அடைந்தபொழுது, அங்குள்ள குளத்தின் நீர்வெளியேறும் பகுதியில் அவரது தாய் குளித்துக் கொண்டிருப்பதைக் பார்த்தார். கிருஷ்ணர் தனது தாயைக் கண்டவுடன் மிகுந்த சந்தோஷமடைந்து, அவர் இல்லாததால் தனக்கு ஏற்பட்ட சோகங்களைப் பற்றி விளக்கினார். தாய் தேவகி கிருஷ்ணரிடம், "ஓ! மகனே கிருஷ்ணா கவனி, இனி இது சமயப்பற்றுள்ளவர்கள் ஏற்பாடு செய்து தங்களது இறந்த அன்னையர்களை சந்திக்கும் இடமாக இருக்கும்” என்று கூறினார். எனவே, அதிலிருந்து இந்த இடம் இறந்த அன்னையின் மீது பற்றுள்ளவர்கள் அவர்களைக் காண புனித யாத்திரை செய்யும் இடமாக இது குறிக்கப்பட்டதைப் புராணங்கள் நம்புகின்றன. பற்றாளர் அவரது தாயின் உருவத்தை குளத்தின் உள்ளே தெரிவதைக் கண்டு தானும் அங்கே வீழ்ந்து இறப்பதும் நிகழ்ந்துள்ளதாக புராணம் நம்புகின்றது. இன்னமும் அங்கு சிறிய குளம் உள்ளது. அதே போல் தற்போதும் அங்கு நடைபெறக் கூடாது என்பதற்காக குளத்தைச் சுற்றிலும் இரும்புக் கம்பியினால் ஆன வேலி இடப்பட்டுள்ளது. வழிபாட்டிற்குப் பின்னர், யாத்திரையில் அந்நாள் முழுவதும் திருவிழா கோலத்தில் பாடல் மற்றும் ஆடலுடன் கொண்டாடப்படுகின்றது. இந்தப் பழங்கதைகளைப் படித்த பெரியவர்கள் வழியில் வந்துள்ளது போன்று, இது நடைபெற்றதற்கான ஆதாரம் எதுவுமில்லை.

தாய்லாந்து தொகு
தாய்லாந்தில் அன்னையர் தினமானது தாய்லாந்தின் அரசியான ஸ்ரீகிட் பிறந்த நாளில் (12 ஆகஸ்ட்) கொண்டாடப்படுகின்றது.[38] இது தாய்லாந்தின் பிரதம மந்திரி பிரேம் தின்சுலனோந்தா அவர்களால் தாய்லாந்தின் ராஜ குடும்பத்தை முன்னிறுத்தும் பிரச்சாரத்தின் பகுதியாக 1980களில் கொண்டாடத் தொடங்கப்பட்டிருக்கின்றது. தந்தையர் தினம் அரசனின் பிறந்த நாளில் கொண்டாடப்படுகின்றது.

ரோமானியா

ரோமானியாவில் இது, அன்னையர் தினம் மற்றும் மகளிர் தினம் என இரண்டு தனித்தனி விடுமுறை தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

பிரிட்டன் மற்றும் அயர்லாந்து தொகு
பிரிட்டன் மற்றும் அயர்லாந்து ஆகியவற்றில், தாய் ஞாயிறு லெண்ட் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக் கிழமையில் வருகின்றது. அதாவது மிகச்சரியாக பெரிய ஞாயிறுக்கு மூன்று வாரங்கள் முன்பு வருகின்றது (2009 இல் மார்ச் 22). இது வருடம் ஒருமுறை மாதா தேவாலயம் சென்றுவருதல் என்ற 16 ஆம் நூற்றாண்டு கிறிஸ்துவ நடைமுறையிலிருந்து தோன்றியதாக நம்ப்படுகின்றது. பெரும்பாலான அன்னையர் இந்த நாளில் அவர்களின் குழந்தைகளை ஒருங்கிணைக்கின்றனர் என்பது இதன் பொருளாகும். பெரும்பாலான வரலாற்று அறிஞர்கள், பயிற்சி பெறும் இளைஞர்கள் மற்றும் அடிமைப்பணி செய்யும் இளம்பெண்கள் அவர்களின் எஜமானர்களால் அந்த வாரத்தில் அவர்களின் குடும்பங்களைக் காணும் பொருட்டு விடுவிக்கப்படுகின்றனர்.  சமயச்சார்பின்மையின் விளைவால், அது இப்பொழுது வேறொருவரின் அன்னைக்கு பாராட்டித் தெரிவிக்க முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும் அது இன்னமும் பல தேவாலயங்களால் வரலாற்று ரீதியில், இயேசு கிறிஸ்துவின் அன்னையான மேரியை வழிபடுதல், அதே போன்று பாரம்பரியக் கோட்பாடான 'மாதா தேவாலயம்' ஆகியவற்றுடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

தாய் ஞாயிறானது முன்னதாக 1 மார்ச் அன்றும் (பெரிய ஞாயிறு 22 மார்ச் அன்று வரும் வருடங்களில்), இறுதியாக 4 ஏப்ரல் அன்றும் (பெரிய ஞாயிறு 25 ஏப்ரல் அன்று வரும்பொழுது) வரலாம்.

அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் கனடாவில் அன்னையர் தினம் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகின்றது.

வியட்நாம்

வியட்னாமில் அன்னையர் தினம் லே வூ-லான் என்றழைக்கப்படுகின்றது. அது lலூனார் நாள்காட்டியில் ஏழாவது மாதத்தின் பதினைந்தாவது நாளில் கொண்டாடப்படுகின்றது. வாழும் அன்னையர்களைக் கொண்ட மக்கள் அவர்களுக்கு நன்றி செலுத்துவர், இறந்தவிட்ட அன்னையர்களைக் கொண்ட மக்கள் அவர்களின் ஆன்மாவிற்காகப் பிராத்திப்பார்கள்.[சான்று தேவை]

வணிகமயமாக்கல் தொகு
முதல் அதிகாரப்பூர்வ அன்னையர் தினத்திற்கு ஒன்பது ஆண்டுகள் கழித்து, அமெரிக்க ஒன்றிய விடுமுறை தினத்தின் வணிகமயமாக்கலானது மிகவும் மலிவாகிவிட்டது. அன்னா ஜார்விஸ் அவராகவே வணிகமாக மாறிய அந்த விடுமுறை தினத்தின் முக்கிய எதிர்ப்பாளராக மாறினார். அவரின் பரம்பரை உடைமை மற்றும் மீதமுள்ள வாழ்க்கை அனைத்தையும் கொண்டாட்டத்தின் முறைகேடாகத் தான் கண்டதை எதிர்த்துப் போராட செலவளித்தார்.[

பின்னர் அன்னையர் தினப் பயன்பாட்டின் வணிக மற்றும் பிற வெளிப்பாடுகள் அன்னாவை சினமூட்டியது. அவர் தனது விமர்சனங்களை அவரது காலம் முழுமையும் வெளிப்படையாகத் தெரியும்படி வெளியிட்டார். அவர் தனிப்பட்ட கடிதங்களை எழுத மிகவும் சோம்பேறித் தனமாக்குகின்ற வாழ்த்து அட்டைகளை வாங்கும் நடைமுறையை விமர்சித்தார். 1948 ஆம் ஆண்டில் அன்னையர் தினத்தின் வணிகமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியைச் சீர்குலைத்ததற்காக கைது செய்யப்பட்டார். "இதுமாதிரி நடக்கும் என்று தெரிந்திருந்தால் நான் இந்த நாளைத் தொடங்கியிருக்க மாட்டேன், ஏனெனில் அது கட்டுப்பாடின்றி சென்றுவிட்டது ..." என்று அவர் இறுதியாகத் தெரிவித்தார்.

வணிக ரீதியில் மிகவும் வெற்றிபெற்ற அமெரிக்க ஒன்றிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக அன்னையர் தினம் தொடர்ந்து வருகின்றது. தேசிய உணவுவிடுதி கூட்டமைப்பு கணிப்பின் படி, அன்னையர் தினமானது இப்பொழுது அமெரிக்காவில் உணவுவிடுதியில் இரவு விருந்துக்கு ஆண்டின் மிகவும் பிரபலமான நாளாக இருக்கின்றது.[41]

எடுத்துக்காட்டாக, IBISWorld என்ற வணிக ஆராய்ச்சி வெளியீட்டு நிறுவனத்தின் கணிப்பின் படி, அமெரிக்கர்கள் ஏறக்குறைய மலர்களுக்கு 2.6 பில்லியன் டாலர்களும், ஸ்பா சிகிச்சைகள் போன்ற விரும்பிய பரிசுப் பொருட்களுக்கு 1.53 பில்லியன் டாலர்களும் மற்றும் பிற வாழ்த்து அட்டைகளுக்கு 68 மில்லியன் டாலர்களும் செலவு செய்வர்.[42]

அன்னையர் தினமானது 2008 ஆம் ஆண்டில் அன்னையர்களுக்கான மோதிரங்கள் போன்ற பரிசுப் பொருட்களுடன் அமெரிக்க ஒன்றிய நகைத் தொழில்துறையின் ஆண்டு வருமானத்தின் 7.8% ஐ உருவாக்கியது.[43]

விடுமுறை தினமானது மலர் வழங்கும் துறை மற்றும் பிற வணிகத் தொழில்துறை ஆகியவற்றின் ஆதரவும் தொடர்ச்சியான முன்னெடுப்பும் இல்லை எனில் வாடிவிடும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வரும் குழந்தைகள் தினம் மற்றும் மதுஒழிப்பு தினம் போன்ற பிற புரோட்டஸ்டண்ட் விடுமுறை தினங்கள் அதே அளவிலான பிரபலத்தைக் கொண்டிருக்கவில்லை