திங்கள், 25 மே, 2020

உலக ஆமைகள் தினம் மே 23


உலக ஆமைகள் தினம் மே 23.

உலக ஆமைகள் தினம் இன்று?முழு விவரம்.

ஆமைகள் தினமின்று
நிதானத்திற்காக பெயர் போன ஆமைகள், பெரும்பாலும் அனைத்து தட்ப வெப்ப சூழலிலும், வாழக் கூடிய இந்த ஆமை, ஒரு உயிரினம் என்பதிற்கும் மேல் கலை, இலக்கியம் எனப் பலப் பரிமாணங்களில் வலம் வருகிறது.

அழிந்து வரும் உயிரினமான ஆமைக்கு ஆமைகள் தினம் கொண்டாடுவதன் மூலம், அவற்றின் அத்தியாவசியத்தை உறுதிப்படுத்துவதாக அமையும். இது ஆமைகளைப் பாதுகாக்க மற்றும் செல்லப் பிராணிகளாகப் பராமரிக்க ஊக்குவிப்பதாக அமையும். 1990ஆம் ஆண்டு அமெரிக்க ஆமை மீட்புக் குழுவை சூசன் டெல்லம் மற்றும் மாஷல் தாம்ப்ஸன் என்னும் தம்பதியினர் தோற்றுவித்தனர். விலங்குகளின் மீது ஆர்வம் கொண்ட இந்த தம்பதியினர், 2000ஆம் ஆண்டிலிருந்து, ஆமை தினத்தைக் கொண்டாடுவதன் மூலம், இந்தப் பிராணியை அழிவிலிருந்து மீட்கும் பொருட்டு விழிப்புணர்வு உண்டாக்குவதைப் பணியாகக் கொண்டுள்ளார்கள்.

இதுவரையில் அமெரிக்க ஆமை மீட்புக் குழு, 3000 ஆமைகளைப் பராமரிப்பு இல்லங்களில் சேர்த்திருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளைப் பராமரிப்பதிலும், கைவிடப்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட ஆமைகளின் நலனிலும் இக்குழு அக்கறைக் காட்டுகிறது.

ஆமை தினம் பல்வேறு இடங்களில் வெவ்வேறு முறைகளில் கொண்டாடப்படுகிறது. ஆமைகள் போல உடை அணிந்து கொள்வது, நெடுஞ்சாலைகளில் வழி தவறிச் சென்ற ஆமைகளை மீட்டு அவற்றின் வாழ்விடங்களில் சேர்ப்பது, என்பதில் இருந்து, வகுப்பறைகளில் மாணவர்களுக்கு ஆமைத் தொடர்பான கைவினைப் பொருட்களை செய்வதன் மூலம் அவர்களுக்கு ஆமைகளைக் குறித்து அறிவாற்றலை வளர்ப்பது என பலவகையாகக் கொண்டாடப்படுகிறது.

கடல் ஆமைகள், குறிப்பாக பால் ஆமை என அழைக்கப்படும் ஆலிவ் ரிட்லி வகையைச் சேர்ந்த ஆமைகளை காப்பாற்றுவதில் நம் சென்னை முக்கிய பங்களிப்பைத் தருகிறது. மன்னார் வளைகுடா, வங்கக் கடலில் வாழும் அரிய உயிரினம் ஆமைகள். இதில் சித்தாமை, அலுங்காமை, பச்சை ஆமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை என, பல வகைகள் உள்ளன. சாதுவான குணம் கொண்ட ஆமைகள், 300 ஆண்டுகள் வாழக்கூடியவை.

கடல் மைல்:கடல் பாசிகள், மீன் குஞ்சுகளை உணவாக உட்கொண்டு, சுவாசிக்கும் போது கடல் நீரை மாசுபடுத்தாமல், சுத்திகரித்து வெளியேற்றும் தன்மை கொண்டதால் ஆமையை, ‘கடல் சுத்தி கரிப்பான்’ என, மீனவர்கள் அழைக்கின்றனர்.

ஆமைகள் மணிக்கு, 3 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது என்பதால் எளிதில் சுறா, திமிங்கலத்திற்கு இரையாகின்றன;

1972ஆம் ஆண்டு வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் படி அழிந்து கொண்டிருக்கும் இனமாக அறிவிக்கப்பட்டது. மீன் பிடிப்பு, எண்ணெய் கசிவு , கரையோர முன்னேற்றத் திட்டங்கள் மேலும் பலக் காரணங்களால் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இந்த இனத்தை பாதுகாக்க சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல விழிப்புணர்வுப் பேரணிகள் மற்றும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

மாணவர் கடலாமை பாதுகாப்பு கூட்டமைப்பு என்பது 1971ஆம் ஆண்டு ரோமுலஸ் வித்தேகர் மற்றும் வள்ளியப்பனால் தொடங்கப்பட்டது. இது பின்னர் சென்னை பாம்புப் பண்ணை மற்றும் வனத் துறையால் தொடர்ந்து நடத்தி வரப் படுகிறது. இந்தக் கூட்டமைப்பில் மாணவர்கள் யார் வேண்டுமானாலும் இணையலாம். இதுவரையில் 22,000 ரிட்லி இன சிறிய ஆமைகளை இக்குழுவினர் காப்பாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு இரவும் கடற்கரைக்கு சென்று முட்டைகளையும் ஆமைக்கூடுகளையும் மீட்டெடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள்.

இந்த ஆமை தின நடைபயணம் நீலாங்கரையில் இருந்து பெசண்ட் நகர் வரையில் ஏழு கிலோ மீட்டராக கடைப்பிடிக்கப்படிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக