திங்கள், 29 ஜனவரி, 2018

ஜே. சி. குமரப்பா நினைவு தினம் ஜனவரி 30, 1960.


ஜே. சி. குமரப்பா நினைவு தினம் ஜனவரி 30, 1960.

ஜோசப் கொர்னலியஸ் செல்லதுரை குமரப்பா (சனவரி 4, 1892 - சனவரி 30, 1960) என்னும் முழுப்பெயர் கொண்ட ஜே. சி. குமரப்பா என்பவர் காந்தியத் தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் அமைத்துக் கொடுத்தவர் எனக் கருதப்படுபவர் ஆவார். தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழரான இவர், பட்டயக் கணக்கராக விளங்கினார். பின்னர் நிர்வாக மேலாண்மை, பொருளியல் ஆகிய துறைகளிலும் தகைமைகள் பெற்றார். காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்து பணியாற்றிய குமரப்பா, காந்தியடிகளால் தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகமான குஜராத் வித்யா பீடத்தில் பொருளாதாரப் பேராசிரியராகவும் இருந்தார். காந்தியின் "யங் இந்தியா " பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலும் இவர் பணிபுரிந்துள்ளார். ஜே.சி.குமரப்பா தனது ஓய்வுக் காலத்தில் மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரமம் வந்தார். அவர் சட்டப்பூர்வமாக 1956 ல் ஆசிரமத்தை பதிவு செய்து முதல் தலைவரானார்.
காந்தி நிகேதனில் இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக ஜே.சி. குமரப்பா கிராமிய தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனம் எனும் பெயரில் மகளிர் மற்றும் இளையோருக்குப் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

தியாகிகள் தினம் ஜனவரி 30 .


தியாகிகள் தினம் ஜனவரி 30 .

தியாகிகள் நாள் இந்திய விடுதலைக்காக தங்கள் உயிரை ஈந்த
விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுவதாகும். தேசத்தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி மறைந்த சனவரி 30 ஆம் நாள் ஆண்டுதோறும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இராமலிங்க அடிகளார் நினைவு தினம் ஜனவரி 30 , 1874.


இராமலிங்க அடிகளார் நினைவு தினம் ஜனவரி 30 , 1874.

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ( அக்டோபர் 5 , 1823 – சனவரி 30 , 1874 ) ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்.  "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.
சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர். வள்ளலாருக்கு எதிராக வழக்குமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆறுமுக நாவலர் .

பிறப்பு

இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள
மருதூரில் புரட்டாசி 19 (05.10.1823)இல் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு
பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர்
சென்னையில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.
பசியாற்றல்
அரிசி மூட்டைகள் இருக்கும் இராமலிங்க அடிகளால் உருவாக்கப்பட்ட தருமசாலை
இராமலிங்க அடிகள் 23–5–1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது பாராட்டுக்கு உரியதாகும். மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.


வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்

1. சிறந்த சொற்பொழிவாளர் .
2. போதகாசிரியர்.
3. உரையாசிரியர்.
4. சித்தமருத்துவர்.
5. பசிப் பிணி போக்கிய அருளாளர்.
6. பதிப்பாசிரியர்.
7. நூலாசிரியர்.
8. இதழாசிரியர்.
9. இறையன்பர்.
10. ஞானாசிரியர்.
11. அருளாசிரியர்.
12. சமூக சீர்திருத்தவாதி.
13. தீர்க்கதரிசி.
14. மொழி ஆய்வாளர் (தமிழ்).
சர்வ சமய சமரச சுத்த சன்மார்கம்
இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்ட சத்திய ஞான தர்ம சபையின் முக்கிய நுழைவாயில்,வடலூர்
எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். உண்மையான ஞானி என்பதால் சாதிய பாகுபாடுகளை சாடினார் அதனால் உயர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார், இருப்பினும் தொடர்ந்து தன் வழியே பயணப்ப்பட்டார்.
தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு
சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். 1867ஆம் ஆண்டில் சத்திய தரும சாலையையும் நிறுவினார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.
இவருடைய காலத்தில் இருந்தவர்கள்
ஆறுமுக நாவலர்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை
காஞ்சிபுரம் சபாபதி முதலியார்
இராமலிங்க அடிகள் கோட்பாடுகள்
இராமலிங்க அடிகள் கொள்கைகள்
1. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
2. புலால் உணவு உண்ணக்கூடாது.
3. எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
4. சாதி , மதம் , இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
5. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
6. எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
7. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
8. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
9. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
10. மத வெறி கூடாது .
அதாவது எந்த சமயத்தின் நிலைப்பாட்டையும், எல்லா மத நெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்கிறார்.
வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்
1. நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே.
2. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.
3. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.
4. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
5. பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே.
6. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
7. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே.
8. குருவை வணங்கக் கூசி நிற்காதே.
9. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே.
10. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
படைப்புக்கள்
வள்ளலார் பதிப்பித்தவை
1. சின்மய தீபிகை
2. ஒழிவிலொடுக்கம்
3. தொண்டமண்டல சதகம்
இயற்றிய உரைநடை
1. மனுமுறைகண்ட வாசகம்
2. ஜீவகாருண்ய ஒழுக்கம்
திருவருட்பா
இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. [5] இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டன. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறைப் பதிப்பு வெளியிட்டுள்ளார்.
அருள் விளக்க மாலைப் பாடல் (4174)
நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார்
இலைநீ விழித்திதுப்பார் என்றெனக்கு விளம்பியசற் குருவே

கண்டன நூல்கள்
வள்ளலார் எழுதிய திருவருட்பாவுக்கு எதிராக பல கண்டன நூல்கள் வெளிவந்தன. வள்ளலார் மேற்கொண்ட சமய சீர்திருத்தத்தால் அவரை அன்றைய
சைவவாதிகள் ஏற்கவில்லை. இதன் தொடர்ச்சியாக வள்ளலார் எழுத்துக்களையும் புறம் தள்ளினர். எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் செய்தனர். வள்ளலார் முன் வைத்த மாற்றுப் பண்பாட்டையும் மறுத்தனர். 1868 இல் சண்முகம் பிள்ளை என்பவரால் திருவருட்பா தூஷண பரிகாரம் என்னும் நூலின் வழி இவ்விவாதம் தொடங்க ஆரம்பித்தது. 1869 இல் போலியருட்பா மறுப்பு என்ற நூல் எழுதப்பட்டது; இது அருட்பா அல்ல, போலி அருட்பா என்று பல காரணங்களைக் கூறி இந்நூல் மறுத்தது. இதற்கு எதிராக 12 கண்டன நூல்கள் வெளிவந்தன.
1904 இல் நா. கதிரைவேற்பிள்ளை வள்ளலாருக்கு எதிராக இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலுக்கு மறுப்பாக ம.தி. பானுகவி என்பவர், 1905 இல் இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பண கண்டன நியாய வச்சிர குடாரம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். சைவ சமயத்தில் சீர்திருத்தம் செய்த வள்ளலாரை பழைமை வாதிகள் ஏற்றுக் கொள்ள மறுத்த நிகழ்வுகளாகவே இக்கண்டன நூல் போக்குகளைப் பார்க்கலாம்.

நினைவு அஞ்சல்தலை
இந்திய அரசு இவரது சேவையை கருத்தில் கொண்டு 2007 ஆகஸ்ட் 17ல் அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்தது.

மகாத்மா காந்தி நினைவு தினம் ஜனவரி 30, 1948.


மகாத்மா காந்தி நினைவு தினம் ஜனவரி 30, 1948.

மோகன்தாசு கரம்சந்த் காந்தி ( ஆங்கிலம் : Mohandas Karamchand Gandhi ,
குசராத்தி : મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை " என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.

வாழ்க்கை
இளமை
மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி
குஜராத்தி. மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி ; தாயார் பெயர் புத்லிபாய் ஆகும். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.
இளமை வயதில் காந்தியடிகள், வயது 7, 1876
பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார்.
தென்னாப்பிரிக்காவில்
இச்சமயம் தென்னாப்பிரிக்காவில்
ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது.
அங்குள்ள நாட்டல் (Natal) மாகாணத்தின்
டர்பன் (Durban) நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகொரு நாள்
பிரிட்டோரியா (Pretoria) செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் (Pietermaritzburg) தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.
தென்னாப்பிரிக்காவில் காந்தி (1906)
தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு
1894ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.
1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை , ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.
மும்பை துறைமுகத்தில்
1915 -ம் ஆண்டு ஜனவரி 9 ம் தேதி மும்பை துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில் அடியோடு உருமாறியிருந்தார். தழையத் தழையக் கச்சமிட்டுக் கட்டிய மில் வேட்டி, தொள தொள ஜிப்பா, அங்கவஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு சகிதம் ஒரு கத்தியவாரி விவசாயி உடையில் காட்சியளித்தார்.
அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய காந்தி - கஸ்தூரிபா தம்பதி வெளியே வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க, மிதவாத அரசியல் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு செய்திருந்தார். மேல் விரிப்பு திறந்த மோட்டார் காரில் காந்தியையும் அவரது மனைவியையும் அமரச் செய்து ஊர்வலமாக இட்டுச் சென்றார். (தற்போது இந்நாளை நினைவு கூர்ந்து
வெளிநாடுவாழ் இந்தியர் நாள் கொண்டாடப்படுகின்றது)
இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாள், 1915 ஜனவரி 12 அன்று பம்பாய் பெட்டார் சாலையில் மவுண்ட் பெடிட் வளாகத்தில் காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே , ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.

1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட  வழிமுறைகளையும்
சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.
உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை (மார்ச் 1930)
பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2 , 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன்
அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது; காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.
காந்தி-ஜின்னா (காங்கிரஸ்-முஸ்லீம்லீக் பேச்சுவார்த்தை)
காந்தியடிகளுடன் முகமது அலி ஜின்னா
வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது.
1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.
இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல்,
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.

உண்ணாநிலைப் போராட்டங்கள்

முதன்மை கட்டுரை: காந்திஜியின் உண்ணாநிலைப் போராட்டப் பட்டியல்
காந்திஜி இந்திய விடுதலைக்கும் , சமூக நீதியை வலியுறுத்தியும், சமய நல்லிணக்கதிற்கும், தீண்டாமைக்கு எதிராகவும், முழு மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள்
உண்ணாநிலைப் போராட்டங்கள் மேற்கொண்டார்.  அவற்றில் மூன்று முறை 21 நாட்கள் கொண்ட தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்தினார்.
மகாத்மா
காந்திக்கு மகாத்மா என்னும் கௌரவத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.

மறைவு

பிர்லா மாளிகை (காந்தி சமிதி)
மகாத்மா காந்தியின் அஸ்தி அலகாபாத் சங்கமத்தில் கரைப்பு காட்சி ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தியின் புதல்வர்கள் ராம்தாஸ் (கலசத்துடன்) மற்றும் தேவ்தாஸ் ஆகியோருடன்
மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு , ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை
காந்தி சமிதி தோட்டத்தில் நாதுராம் கோட்ஸே ஆல் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
நினைவு நாள்
ஜனவரி 30 இந்தியாவில் தியாகிகள் தினமாக நடத்தப்படுகிறது.
கொள்கைகள்
பகவத் கீதை , ஜைன சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார். சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார். இவர் தனது காமத்தை வெல்லும் பொருட்டு பல்வேறு சோதனைகளைச் செய்து வந்தார். அவை பெரும் விமரிசனத்திற்கு உள்ளாகின.அவரது பரிசோதனைகளை அவரது மனைவியின் அனுமதியுடன் தான் செய்தார். இவை இன்றளவும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் விமர்சிக்கப்படுகின்றன. வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
வேறுபாடுகள்
தாழ்த்தப்பட்டவர்களும் கோயிலுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என போராட்டங்கள் எழுந்த பொழுது, அனைவரும் இந்து மதத்தின் அறத்தைப் பேண வேண்டும் என காந்தி சொன்னார் என அம்பேத்கர் எழுதி உள்ளார். [6]
திருநெல்வேலி சைவ சித்தாந்த குருகுலப் பள்ளியில், சமூகத்தில் உயர்ந்த வகுப்பினர்க்கு தனி விடுதி, மற்றவர்க்கு தனி விடுதி என கடைபிடிக்கப்பட்டதை, இந்து மத அறத்தின்படி சரி என காந்தி வாதிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே, ஈ. வெ. இராமசாமி நாயக்கரை பேராய கட்சியிலிருந்து (congress party) வெளியேற முடிவெடுக்க தள்ளியது. இதனை ஒட்டி, பெங்களூரில் ஈ. வெ. இராமசாமி நாயக்கருக்கும் , காந்திக்கும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இக் கலந்தாய்விலும், காந்தி இந்து மத அறத்தின் தேவையை வலியுறுத்தியதால் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் பேராய கட்சியிலிருந்து வெளியேற முடிவெடுத்தார்.

சுயசரிதை
காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை, சத்திய சோதனை என்ற பெயரில் தமிழ் மொழியிலும் An Autobiography: The Story of My Experiments with Truth என்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் காந்தியின் நினைவுச் சின்னங்கள்
மகாத்மா காந்தி நினைவு மண்டபம்
கன்னியாகுமரி
மகாத்மா காந்தி அருங்காட்சியகம்-
மதுரை
தமிழ்நாடு அரசு காந்திக்கு அவரது தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது. மதுரையில் இராணி மங்கம்மாள் காலத்தில் அமைக்கப்பட்ட
கட்டிடத்தில் 1959 முதல் காந்தி
அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கரையில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் மார்பளவு சிலை ஒன்று வளாகத்திலும், மற்றொன்று அருங்காட்சியகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் பேர்கள் அமரக்கூடிய அளவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமும் நூலகமும் இங்குள்ளது.
மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருள்கள் ஏலம்
இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய சர்க்காவும், அவரது கடைசி உயிலும் 2013இல் லண்டனில் ஏலத்தில் விடப்பட்டது.அவரது சர்க்கா 1,10,000 பவுண்டுக்கும் (சுமார் ரூபாய் ஒரு கோடி), அவரது கடைசி உயில் 20,000 பவுண்டுக்கும் (சுமார் ரூபாய் 18 லட்சம்) ஏலம் போனது. இந்த ஏலம் பற்றி முன்னமே அறிந்திருந்தும் எந்த தடையும் இந்திய அரசு ஏற்படுத்தாதலால், அவை தனி நபர் வசம் செல்லும் மதிப்பற்ற நிலை அந்தப் பொருட்களுக்கு ஏற்பட்டது.

விமர்சனங்கள்
பகத்சிங்கின் தூக்குதண்டனை
பகத் சிங் கின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார். தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற
இந்தி திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாம்? என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டன.
கறுப்பின மக்களுக்கு எதிரான இனவாதம்
தென் ஆப்பிரிக்க காந்தி: பேரரசின் பல்லக்குப் பணியாளன் (The South African Gandhi: Stretcher-Bearer of Empire) என்ற நூலும்
தெய்வீக முகமூடிக்குப் பின்னால் உள்ள காந்தி (Gandhi Behind the Mask of Divinity) என்ற நூலும் பிற பல கட்டுரைகளும் காந்தியை அவரது தென் ஆப்பிரிக்க எழுத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்வைத்தும் கறுப்பின மக்களுக்கு எதிரான இனவாதியாகவும், வெள்ளை அரசுக்கு சார்பான ஆரிய பேரினவாதியாகவும் சித்தரிக்கின்றன, விமர்சிக்கின்றன.  எ.கா நற்றல் (Natal) நாடுளுமன்றத்துக்கு 1893 ஆம் ஆண்டு காந்திய எழுதிய ஒரு கடிதத்தில் பின்வருமாறு கூறுகிறார்:
“ I venture to point out that both the English and the Indians spring from a common stock, called the Indo-Aryan. … A general belief seems to prevail in the Colony that the Indians are little better, if at all, than savages or the Natives of Africa. Even the children are taught to believe in that manner, with the result that the Indian is being dragged down to the position of a raw Kaffir.” ”
“ இந்தியர்களும் ஆங்கிலேயர்களும் இந்தோ-ஆரியர்கள் என்ற ஒரே பொதுவான மூலத்தில் இருந்து வந்தவர்கள். ...கொலனிகளில் இந்தியர்கள் ஆப்பிரிக்க காட்டுமிராண்டிகளை விட மேம்பட்டவர்களாக கருதப்படவில்லை. குழந்தைகளும் இதனை நம்ப கற்பிக்கப்படுகிறார்கள். இதனால் இந்தியர்கள் பச்சைக் காப்புலிகளின் நிலைக்கு கீழே இழுக்கப்படுகிறார்கள். ”

முன்னாள் இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு. க. அழகிரி பிறந்த நாள்: 30 ஜனவரி, 1950.



முன்னாள் இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு. க. அழகிரி பிறந்த நாள்: 30 ஜனவரி, 1950.

மு. க. அழகிரி (பிறப்பு: 30 சனவரி, 1950) தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சர் மு. கருணாநிதி , தயாளு அம்மாள் ஆகியோரின் மூத்த மகன் ஆவார். 2009 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின் அமைக்கப்பட்ட மன்மோகன்சிங்கின் நடுவண் அமைச்சரவையில் இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் பதவி வகித்துள்ளார்.

இளமைக்காலம்
இவர் தனது தந்தையின் சொந்த ஊரான
திருக்குவளையில் 30-1-1950-ல் பிறந்தார். இவருடைய சகோதரர்கள் முன்னாள் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் , மு.க.தமிழரசு, தங்கை செல்வி. மு.க. அழகிரி, பள்ளிப்படிப்பை உள்ளூரிலேயே படித்தார். பி.ஏ.வரலாறு பட்டப்படிப்பை சென்னை பிரசிடென்சி கல்லூரியில் முடித்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான காந்தி என்பவரை இவர் மணந்துகொண்டார். இவர்களுக்குக் கயல்விழி, அஞ்சுகச்செல்வி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். துரை என்கிற தயாநிதி இவர்களது ஒரே மகன். மு.க.அழகிரி 1980-ம் ஆண்டு முரசொலி பத்திரிகையைக் கவனித்துக்கொள்வதற்காக, சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தார். அது முதல்
மதுரையிலேயே தங்கிவிட்ட அழகிரி, மதுரை சத்தியசாய் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.


அரசியல்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தார் . 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்தியப் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக மதுரை பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரான மறைந்த பி.மோகனை விட ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பொறுப்பு ஏற்று பணியாற்றியுள்ளார்.
குற்றச்சாட்டு
முன்னாள் தி.மு.க. அமைச்சர் தா. கிருட்டிணன் , 2003 மே மாதம் 20ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மு.க.அழகிரி உட்பட 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. முக்கிய சாட்சிகள் தமது முன்னைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியதனால் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரையும் 8-3-2008ஆம் தேதி சித்தூர் நீதிமன்றம் விடுவித்தது.

கட்சியிலிருந்து நீக்கம்
மார்ச் 25, 2014 ஆம் தேதியன்று கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு, திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார் அழகிர

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

ஈழத்தமிழர்களின் படுகொலையை, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக்கொண்ட கு. முத்துக்குமார் நினைவு தினம் ஜனவரி 29 , 2009


ஈழத்தமிழர்களின் படுகொலையை, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக்கொண்ட கு. முத்துக்குமார் நினைவு தினம் ஜனவரி 29 , 2009

கு. முத்துக்குமார் ( K. Muthukumar )(இறப்பு: சனவரி 29 , 2009 , அகவை 28)
ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதாக, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக்கொண்டவர் ஆவார். இவர்
சென்னையில் பெண்ணே நீ இதழுக்கு பத்திரிகையாளராக வேலை செய்து வந்தவர். அதற்கு முன்னர் உதவி இயக்குநர் ஆகவும் வேலை செய்தவர்.
தீக்குளிப்பு
தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம் ,
புலியநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞர் சென்னை
நுங்கம்பாக்கத்தில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு சனவரி 29 அன்று காலை வந்து திடீரென, ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்தார். அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்கன பிரசுரங்கள் காற்றில் பறந்தன. உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமரன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு உடனடியாக அவரை காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி இறந்தார்.
இறக்க முன்பு முத்துக்குமார் காவற்துறையினரிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், "இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். ஒன்றிய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் ஒன்றிய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது." என்று குறிப்பிட்டார் .
திமுக அரசைக் கண்டிப்பு
தீக்குளிக்க முன்னர் இவர் ஒரு நீண்ட மடல் வரைந்துள்ளார். அந்தக் கடித்ததில்
கருணாநிதி தலைமையில் அமைந்த
திமுக அரசை கடுமையாக விமரிசித்துள்ளார். அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிதுறப்பு சமர்பிப்பு ஒரு நாடகம் என்றும், "தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார்" என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசை கண்டிப்பு
வீரவணக்கம்
கு.முத்துக்குமாரின் மரணம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
தமிழகம் முழுக்க மாணவர்கள், பெண்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்குரைஞர் என பொதுமக்கள் அலை அலையாய் திரண்டு தங்கள் உணர்வுகளை வீரமரணத்தை ஒட்டி வெளிப்படுத்தினர். சேலத்தில் அனைத்து அமைப்பினரும் சேர்ந்து 30.01.2009 நடத்திய வீர வணக்க ஊர்வலம் மாலை 4 மணிக்கு அஸ்தம்பட்டியில் தொடங்கி ஊர்வலம் பழைய பேருந்து நிலையத்தில் முடிந்தது.
திரளான திருநங்கைகள் ,விடுதலை சிறுத்தைகள் பாட்டாளி மக்கள் கட்சி ,
பெரியார் திராவிடர் கழகம் , தமிழ்நாடு மாணவர் கழகம் , குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
'முடிந்தவரை போராடுங்கள்'
'என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்'; என்று அவரது கடிதத்தில் தெரிவித்திருந்தார். அதனால் அவரது இறுதி மரியாதை நிகழ்வில் தாமதம் ஏற்பட்டது.அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் பிடிவாதமாக இருந்தனர்.
முத்துக்குமாருக்கு மணிமண்டபம்
முத்துக்குமாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என “இளந்தமிழர் இயக்கம்“ என்ற அமைப்பு அறிவித்து, அதற்கான பணிகளை செய்து வருகின்றது. இது தொடர்பாக உலகத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்து முத்துக்குமாரின் தந்தை ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார்

வெள்ளி, 26 ஜனவரி, 2018

உலக பெரும் இன அழிப்பு நினைவு நாள் ஜனவரி 27.


உலக பெரும் இன அழிப்பு நினைவு நாள் ஜனவரி 27.

பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் ( International Holocaust Remembrance Day ) என்பது பெரும் இன அழிப்பினால் உயிரிழந்தவர்களுக்காக 27 சனவரி நினைவு கொள்ளப்படும் பன்னாட்டுநினைவு நாள் ஆகும். இப்பெரும் இன அழிப்பினால் நாட்சிப் படைகளினாலும் அதன் கூட்டாளிகளினாலும் 6 மில்லியன் யூதர்கள், 2 மில்லியன் நாடோடி இன மக்கள் (உரோமா மற்றும் சின்டி), 15,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் மில்லியன் கணக்கான ஏனையவர்கள் இனப்படுகொலையால் அழிக்கப்பட்டனர். இந்நாள், 42வது கூட்ட அமர்வின்போது 1 நவம்பர் 2005 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் 60/7 னால் உருவாக்கப்பட்டது. நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள் விடுதலை மற்றும் பெரும் இன அழிப்பு நிறுத்தப்பட்ட 60வது ஆண்டு நிறைவு நிகழ்வுக்காக 24 சனவரி 2005 அன்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைகளின் சிறப்பு அமர்வின் பின் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
27 சனவரி 1945 அன்று பெரும் நாட்சி மரண முகாமான அவுஷ்விட்ஸ் வதை முகாம் சோவியத் படைகளினால் விடுவிக்கப்பட்டது.

வியாழன், 25 ஜனவரி, 2018

இந்திய குடியரசு தினம் ஜனவரி 26


இந்திய குடியரசு தினம் ஜனவரி 26 

இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.


ஆங்கிலேயரின் ஆட்சி
ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.


இந்தியா சுதந்திரம் அடைதல்
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.
இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்
1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.


இந்தியக் குடியரசு தினம்
1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
குடியரசு என்பதன் பொருள்
குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தினக் கொண்டாட்டம்
இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.
இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.
வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!


இந்தியா ஒரு சகாப்தம்

மிகப்பெரிய இந்தியாவை ஆட்சி செய்ய நமக்கான சட்டத்தை நாமே இயற்றி நம்மை நாமே ஆட்சிசெய்ய வழிவகுத்த அரசியலமைப்பு சட்டம் 1950 ஜனவரி 26 - நாள் அன்று இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்த நாள் தான் இன்று குடியரசு என்பது மக்களாட்சி தத்துவத்தை நிலைநிறுத்தியது என்றும் சொல்லலாம்
நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வு நிச்சயமாக இரண்டு தினங்களின் போது இருக்கும். ஒன்று சுதந்திர தினம்; மற்றொன்று குடியரசு தினம். இந்த தினத்துக்கு என்ன வித்தியாசம்; எப்படி வந்தது; ஏன் கொண்டாடுகிறோம் என்பதை தெரிந்து கொள்வது நமது கடமை.
சுதந்திரம் என்று சொல்லும் போது, யாரிடம் இருந்தோ விடுதலை பெற்றிருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. பல ஆண்டுகளாக நாட்டை அடிமைப்படுத்தி, மக்களின் உரிமைகளை ஒடுக்கி, இயற்கை வளங்களை கொள்ளையடித்து ஒற்றுமையாக இருந்த மக்களையும் பிரித்து விட்டு, 1947 ஆக., 15ம் தேதி நள்ளிரவில் ஆங்கிலேயர் நமக்குவழங்கியது தான் சுதந்திரம். சுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தையில் ஓராயிரக்கணக்கான மக்களின் ஓய்வில்லா போராட்டம் ஒளிந்திருக்கிறது. பல தலைவர்கள், இன்னுயிரை வருத்தி பல ஆண்டுகளாக ஆங்கிலேயரின் பீரங்கிகளை எதிர்த்து நின்று போராடி, அடிமை தேசத்தை, சுதந்திர நாடாக உருவாக்கினார்கள். இதனை நினைவு படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆக., 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.நமக்கு அப்போது கிடைத்த சுதந்தரம் முழுமையானது அல்ல. ஏனெனில் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு, இந்தியாவுக்கு டொமினியன்அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். இதன்பின், இந்திய அரசியலமைப்பு 1949 நவ., 26ல்,இந்திய அரசியல் நிர்ணய சபையால்ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது.அன்று முதல் இந்தியாவில் மக்களாட்சி மலரத் தொடங்கியது. பிரிட்டிஷார் நியமித்த கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது.குடியரசு என்பதன் நேரடி பொருள் "மக்களாட்சி'. மன்னராட்சி இல்லாமல், தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். இவ்வாறு மக்களாட்சி நடைபெறும் நாடு, குடியரசு நாடு என அழைக்கப்படுகிறது.குடியரசு நாட்டின் தலைவர், குடியரசு தலைவர் அல்லது ஜனாதிபதி என அழைக்கப்படுகிறார். சில நாடுகளில் குடியரசு தலைவர் நேரடியாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறார். சில நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மூலம், குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இம்முறை தான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.


அரசியல் சாசனம்:

அரசியல் சாசனம் என்பது, ஒரு நாட்டின் சட்ட திட்டங்கள்மற்றும் நெறிமுறைகளைவிளக்கிப் பட்டியலிடும் ஆவணம். இந்திய சுதந்திரத்திற்குப் பின், குடியரசு நாடாக இந்தியாவை பிரகடனப்படுத்த, அரசியலமைப்பை உருவாக்கும் பணியை, ராஜேந்திர பிரசாத் தலைமையிலான, அரசியல்நிர்ணய சபை மேற்கொண்டது.இதன்படி, 1947, ஆக., 29ல், சட்ட வரைவுக்குழு உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அம்பேத்கர் தலைமையிலான7 பேர் கொண்ட குழு,2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் அயராத உழைப்பில், இந்திய அரசியல் சாசனத்தை எழுதி முடித்தனர். பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின், 1949, நவ., 26ல் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950, ஜன., 26ல் நடைமுறைக்குவந்தது. இந்த நாள் தான்குடியரசு தினம். இந்தியஅரசியல் சாசனத்தில் மொத்தம் 22 பகுதிகள், 448 ஷரத்துகள், 12 அட்டவணைகள்,98 திருத்தங்கள், 1 லட்சத்து17 ஆயிரத்து 369 சொற்கள்உள்ளன.
அந்த மூன்று வார்த்தைகள்:
இந்திய அரசியல் சாசனத்திற்கு முகவுரை வழங்கியவர், ஜவஹர்லால் நேரு. இதுஅரசியல் சாசனத்தின் நோக்கங்களை, தெளிவாக விளக்குகிறது. முகவுரை "இந்தியஅரசியலமைப்பின் திறவுகோல்' மற்றும் "அரசியலமைப்பின் இதயம்' எனபோற்றப்படுகிறது. முகவுரை இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமேதிருத்தப்பட்டது. 1976ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 42வது சட்டத் திருத்தத்தின்படி, "சமதர்மம்',"மதச்சார்பின்மை', "ஒருமைப்பாடு' என்ற மூன்று வார்த்தைகள் முகவுரையில் சேர்க்கப்பட்டன.
தேசிய கீதம் - சில சுவாரஸ்யங்கள்:
121 கோடி இந்திய மக்களின் தேசிய கீதம், ''ஜன கன மன' பாடல். ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய இந்தப் பாடல், முதன்முதலில் 1911 டிச.27 அன்று கோல்கட்டா காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.தற்போது நூற்றாண்டுகளை கடந்து அனைவரதுஉணர்விலும் கலந்துள்ளது.இப்பாடல் 1950 ஜன.24ல் தேசிய கீதமாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதை 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும். தேசிய கீதம், வங்க மொழியில் 'பாரத விதாதா', ஆங்கிலத்தில் 'தி மார்னிங் சாங் ஆஃப் இந்தியா' என அழைக்கப்படுகிறது.இந்தியத் தாயைவாழ்த்துவது போல இப்பாடல் அமைந்திருக்கும்.
ரவீந்திரநாத் தாகூர், இலக்கியத்துக்கான நோபல் பரிசுபெற்றவர். இவரே இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், வங்கதேசத்துக்கான தேசிய கீதத்தையும் இயற்றினார்.இருநாட்டுக்கு தேசிய கீதம் எழுதிய பெருமை, தாகூரைமட்டுமே சேரும். தேசியகீதம் இசைக்கப்படும் போது, அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். பெற்ற தாய்க்கு
கொடுக்கப்படும் மரியாதை,தேசிய கீதத்தை பாடும் போது இந்தியத் தாய்க்கு கொடுக்கப்படுகிறது.


முதல் குடியரசு தினம் எப்படி கொண்டாடப்பட்டது:
ராஷ்டிரபதி பவனில் உள்ள டர்பர் ஹாலில், 1950 ஜன., 26ம் தேதி காலை 10:18 மணிக்குஇந்தியா, குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அடுத்த 6நிமிடங்களுக்குப்பின், நாட்டின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் ராஜேந்திர பிரசாத், பதவியேற்றார். இவ்விழாவின் போது, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், நாட்டின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, குடியரசு மற்றும் அரசியலமைப்பு பற்றிய அறிக்கையை வாசித்தார்.பின் 10:30 மணிக்கு 21 குண்டுகள் முழங்க, நாடு குடியரசு அடைந்ததை, ஜனாதிபதி நாட்டு மக்களுக்குஅறிவித்தார்; தேசியக்கொடியையும் பறக்கவிட்டார். பின் ஜனாதிபதி குடியரசு தின உரை நிகழ்த்தினார். முதலில் இந்தியிலும், பின் ஆங்கிலத்திலும் பேசினார்.பின் மதியம் 2:30 மணியளவில் ராஷ்டிரபதி பவனில் இருந்து திறந்த வாகனத்தில் (தற்போதுபோன்று எவ்வித பாதுகாப்பும் இன்றி) இர்வின் மைதானத்துக்கு சென்றார். வழி நெடுக தேசியக்கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. மக்கள் 'ஜெய்' என
கோஷமிட்டனர். பின் இர்வின் மைதானத்தில் நடந்த அணிவகுப்பில் முப்படையினர் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் 3,000 அதிகாரிகள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். வெளிநாட்டு விருந்தினராக இந்தோனேசிய ஜனாதிபதி சுகர்ணோ அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சிகள் மாலை 3:45 மணிக்கு முடிந்தன.முதல் 4 குடியரசு தின (ராணுவ அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள்) நிகழ்ச்சிகள் வவெ?வேறு இடங்களில் (1950ல் இர்வின் மைதானம், 1951ல் கிங்ஸ்வாய், 1952ல் செங்கோட்டை, 1953ல் ராம்லீலா மைதானம்) நடந்தது. இதன் பின் 1955ம் ஆண்டில் இருந்து, தற்போது கொண்டாடப்படும் ராஜ்பாத்தில் அணிவகுப்பு நடக்கிறது.
யார் அதிகம் :
அதிக முறை, குடியரசு தின விழாவில்பங்கேற்ற ஜனாதிபதி என்ற பெருமையை ராஜேந்திர பிரசாத் பெறுகிறார். இவர் 13 குடியரசு தின விழாக்களுக்கு தலைமை வகித்துள்ளார்.
யார் குறைவு:
நாட்டின், 3வது ஜனாதிபதியாக இருந்த ஜாகிர் உசேன், குறைந்த பட்சமாக 2 குடியரசு தின விழாக்களுக்கு மட்டுமே தலைமை வகித்தார். காரணம் பதவியில் இருக்கும் போதே மறைந்தார்.
 ஜன.,26 ஏன்?
1930, ஜன., 26ல், லாகூரில் நடைபெற்றஇந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்,
இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றே தீர்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதன் நினைவாகவே, ஜன., 26ம் தேதியை, இந்திய குடியரசு தினமாக, அரசியல் நிர்ணய சபை முடிவு செய்தது.
சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்றவர்கள்
*அம்பேத்கர்
*கோபால்சாமி ஐயங்கார்
*அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
*கே.எம்.முன்ஷி
*சையது முகமது சாதுல்லா
*மாதவராவ்
* டி.பி.கைதான


குடியரசு தினம் பிறந்தது எப்படி?

இந்தியா சுதந்திரம் பெற்றது 1947, ஆகஸ்ட் 15 என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பே இந்தியா 'சுதந்திர தினம்' கொண்டாடியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
1930 ஆம் ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதி அன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என காந்தியடிகள் வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள்தான் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
காந்தியடிகள் அப்படி அறிவித்ததன் பின்னணி என்ன?
1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், 'பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை செயல்படுத்துவதற்கான போராட்டம் குறித்து காந்திஜியே முடிவுசெய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அந்தக் காலகட்டத்தில் நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவியது. வறுமை மக்களை வாட்டி எடுத்துக்கொண்டிருந்தாலும் சுதந்திர எழுச்சியும் கனன்றுகொண்டிருந்தது. அதன் விளைவாகப் பல வன்முறைப் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் மீண்டும் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினால் அது மேலும் வன்முறைக்கே வழிவகுக்கும் என்பதை காந்திஜி உணர்ந்தார்.
ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதற்கான வழிகள் குறித்து அவர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.
அதன் முதல் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அன்றைய தினம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதிமொழியின் வாசகம் இதுதான்:
"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."
சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள்தான் ஜனவரி 26. சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளைக் குடியரசு தினமாக, அதாவது மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட 26 நவம்பர் 1949இல் நேரு அமைச்சரவை முடிவு செய்தது. 1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.

புதன், 24 ஜனவரி, 2018

மொழிப் போர் தியாகிகள் தினம் ஜனவரி 25


மொழிப் போர் தியாகிகள் தினம் ஜனவரி 25 

மொழிப் போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்களது உயிரை நீத்துள்ளனர்.
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் 1960-களில்தான் உச்சத்தை எட்டினாலும், 1930-களிலேயே தொடங்கிவிட்டது. அனைத்து பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக 1938-ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையிலான சென்னை மாகாண அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகளார் உள்ளிட்டோர் வழிகாட்டுதலில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற நடராசன், உடல்குன்றி சென்னை சிறையில் உயிரிழந்தார். மொழிப் போராட்டத்தின் முதல் களப் பலி அவர்தான். அதைத் தொடர்ந்து கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்துவும்செ ன்னை சிறையில் உயிர் நீத்தார்.
நடராசன், தாளமுத்துவின் உயிரிழப்பை தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்ததால், இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணை 1940-ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது. ஆனால், 1965-ல் இந்திய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்று, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தலைமையிலான காங்கிரஸ் அரசின் அறிவிப்பால், மீண்டும் போராட்டம் உருவானது. அண்ணா தலைமையில் தி.மு.க.வின் போராட்டம் உக்கிரமானது. இதில், தீக்குளித்தும், குண்டடிப்பட்டும் மாணவர்கள், இளைஞர்கள் பலர் உயிரைவிட்டனர்.
போராட்டத்தால் நெருக்கடி அதிகரிக்கவே, வேறு வழியின்றி இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரும் என்ற முடிவுக்கு காங்கிரஸ் அரசு வந்தது. இதனால் மாணவர்களின் 50 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தின் தாக்கத்தால், 1967-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்ட்டு தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் ஆட்சியமைக்கவும், ஆட்சிக் கட்டிலுக்கு வெகு தூரத்தில் காங்கிரஸ் இருப்பதற்கும் இந்தி எதிர்ப்பு அடித்தளம் இட்டது என்றால் மிகையல்ல.

தேசிய வாக்காளர் நாள் ( National Voters' Day ) ஜனவரி 25.


தேசிய வாக்காளர் நாள் ( National Voters' Day )  ஜனவரி 25.

இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக
தேசிய வாக்காளர் நாள் ( National Voters' Day ) அனுசரிக்கபடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி "தேசிய வாக்காளர் நாள்" ஆகும். வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும். 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கபடுகின்றது.

பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் பிறந்த தினம் 25 சனவரி 1920.


பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் பிறந்த தினம் 25 சனவரி 1920.

பித்துக்குளி முருகதாஸ் ( Piththukkuli Murugadas , 25 சனவரி 1920 - 17 நவம்பர் 2015) பக்திப் பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர். உலகின் பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் செய்தவர் .

இளமைப்பருவம்

பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட முருகதாஸ் 1920 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் நாள் (சித்தார்த்தி வருடம், தைப்பூச திருநாளில்) கோவையில் சுந்தரம் ஐயர், அலமேலு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தாத்தா அரியூர் கோபாலகிருஷ்ண பாகவதர் (உஞ்சவிருத்தி பஜனை வித்வான்), பாட்டி ருக்மணியம்மாள். முருகதாசுக்கு பாட்டி ருக்மணியம்மாள் பக்திப் பாடல்களை சொல்லிக் கொடுத்தார். சகோதரி செல்லம்மாள், சகோதரர் கோபாலகிருஷ்ணன்.

பக்தி வழி

1936 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில்
இரமண மகரிஷியை சந்தித்த பின்னர், தான் பக்தி வழிக்கு வந்ததாக பேட்டி ஒன்றில் முருகதாஸ் கூறியிருந்தார்.
தென் ஆபிரிக்கா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, ரீயூனியன், ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் பக்தி இசைக் கச்சேரிகள் செய்திருக்கிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்தவர். 1940 ஆம் ஆண்டு இறுதியில் (இ)ரிசிகேசம் முதலான வடநாட்டுத் தலங்களுக்கு பாத யாத்திரை சென்றார்.
பாடிய பிரபல பக்திப் பாடல்கள்
அலை பாயுதே கண்ணா
கண்ணா .. மதுர மதுர வேணுகீத மோக
ஆடாது அசங்காது வா கண்ணா
திரைப்பட பக்திப் பாடல்கள்
நாடறியும் நூறுமலை நான் அறிவேன் சுவாமிமலை - தெய்வம் (திரைப்படம்)

விருதுகள்
சங்கீத சாம்ராட் - 1956 இல் சுவாமி சிவானந்தரால் வழங்கப்பட்டது
கலைமாமணி - 1984 இல் எம்.ஜி.ஆரால் வழங்கப்பட்டது
குரு சுராஜானந்தா விருது 1989 இல்
மதுர கான மாமணி - 1994 இல் இலண்டனில்
சங்கீத நாடக அகாடமி விருது 1998 இல்
தியாகராஜர் விருது - தில்லி தான்சேன் விழாவில்
தலைசிறந்த இசை தேவர் - சே செல்லீசு நாட்டில் வழங்கப்பட்டது.

மறைவு
2015 நவம்பர் 17 அன்று உடல் நலக் குறைவு காரணமாக தனது 95 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.


முருக பக்தர், பாடகர்

சிறந்த பாடகர், முருக பக்தர், சுதந்திரப் போராட்ட வீரரான பித்துக்குளி முருகதாஸ் (Pithukuli Murugadas) பிறந்த தினம் இன்று (ஜனவரி 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:


l கோவையில் (1920) பிறந்தவர். இயற்பெயர் பாலசுப்பிரமணியன். இரண்டரை வயதில் தாயையும், 7 வயதில் தந்தையையும் இழந்தார். இவருக்கு பல பக்திப் பாடல்களை சொல்லிக் கொடுத்தார் பாட்டி. கோவை பிக் பஜார் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் வீராசாமி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.


l பழநியில் உள்ள சித்தி வீட்டுக்கு அடிக்கடி செல்வார். ஒருமுறை, பழநி மலை வெட்டாற்றில் தண்ணீர் எடுக்கச் செல்லும் வழியில் உள்ள பஞ்சவர்ண குகைக்கு சென்றார். அங்கு அடிக்கடி சென்று, தியானம் செய்யத் தொடங்கினார். அங்குள்ள துறவிகள் முழங்கும் சரவணபவ மந்திரம் உபதேச மந்திரமாக இவரது மனதில் பதிந்தது.

l பிரம்மானந்த பரதேசியாரிடம் நாதயோகத்தை அக்கறையுடன் கற்றார். அவர்தான் இவருக்கு ‘பித்துக்குளி’ என்ற பெயரை சூட்டியதாக கூறப்படுகிறது. தாத்தா கோபாலகிருஷ்ண பாகவதரிடம் சங்கீதம் பயின்றார்.

l சிறந்த மாணவராக இருந்தாலும், ஆன்மிகம், விடுதலைப் போராட்டம் என்று ஈடுபட்டதால், படிப்பில் நாட்டம் செல்லவில்லை. 13 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்தினார். மெக்கானிக், சமையல் வேலை, ஹோட்டல் சர்வர் எனப் பல்வேறு வேலைகளைச் செய்தார். பழநியில் சித்தப்பா நடத்திய லாட்ஜில் சிறிது காலம் வேலை செய்தார்.

l உப்பு சத்தியாகிரகம், சுதேசி இயக்கம் உட்பட பல போராட்டங்களில் கலந்துகொண்டார். கைது செய்யப்பட்டு, சிறையில் பல சித்ரவதை களை அனுபவித்தார். ஏற்கெனவே விபத்தில் பாதிக்கப்பட்டிருந்த இவரது இடது கண்ணில் போலீஸார் தாக்கியதால், பார்வை பறி போனது. அதிலிருந்து கருப்புக் கண்ணாடி அணியத் தொடங்கினார்.

l சுயமாக முயன்று ஹார்மோனியம் வாசிக்கக் கற்றுக்கொண்டார். முருகன் மீது பல பக்திப் பாடல்களை இயற்றினார். இவருக்கு உபதேசம் அளித்து, ‘முருகதாஸ்’ என்ற பெயரை சூட்டினார் சுவாமி ராமதாஸ். பரமானந்த ஸ்வாமிகள் தனக்கு வைத்த ‘பித்துக்குளி’ என்ற பெயரையும் சேர்த்துக்கொண்டு, ‘பித்துக்குளி முருகதாஸ்’ ஆனார்.

l நாடு முழுவதும் 1940-களில் பாத யாத்திரை மேற்கொண்டார். கங்கை நதிக்கரையில் மணிக்கணக்கில் அமர்ந்து பாடுவார். மதுரா, பிருந்தாவனம், துவாரகை, மும்பை, பண்டரிபுரம், பீஜப்பூர் உள்ளிட்ட ஏராளமான புண்ணியத் தீர்த்தங்களை தரிசித்தார்.

l பின்னர் தமிழகம் திரும்பியவர், வெள்ளியங்கிரி மலைக் காட்டில் பல மாதங்கள் தியானத்தில் ஈடுபட்டார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் பக்தி இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார். கலைமாமணி, சங்கீத சாம்ராட், சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

l திருப்புகழ் பாராயணத்துக்கு பெயர்பெற்றவர். திரைப்படங்களிலும் பக்திப் பாடல்கள் பாடியுள்ளார். 1000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளார்.

l தனது கச்சேரிகள் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு ஏழை, எளியவர்களுக்கு உணவளித்து வந்தார். கடந்த நவம்பர் 17-ம் தேதி 95-வது வயதில் மறைந்தார். தீவிர முருக பக்தரான இவர், தைப்பூசத்தில் பிறந்து, கந்த சஷ்டியன்று மறைந்தது குறிப்பிடத்தக்கது.

பித்துக்குளி முருகதாஸ் பிறந்தநாள் இன்னிக்கு தான்

 சிறந்த பாடகர், முருக பக்தர், சுதந்திரப் போராட்ட வீரரான  பித்துக்குளி முருகதாஸ் பக்திப் பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர். உலகின் பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் செய்தவர்

சிறந்த பாடகர், முருக பக்தர், சுதந்திரப் போராட்ட வீரரான பித்துக்குளி முருகதாஸ் (Pithukuli Murugadas) பிறந்த தினம் இன்று (ஜனவரி 25). அவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் சில..
கோவையில் (1920) பிறந்தவர். இயற்பெயர் பாலசுப்பிரமணியன். இரண்டரை வயதில் தாயையும், 7 வயதில் தந்தையையும் இழந்தார். இவருக்கு பல பக்திப் பாடல்களை சொல்லிக் கொடுத்தார் பாட்டி. கோவை பிக் பஜார் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் வீராசாமி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.
பழநியில் உள்ள சித்தி வீட்டுக்கு அடிக்கடி செல்வார். ஒருமுறை, பழநி மலை வெட்டாற்றில் தண்ணீர் எடுக்கச் செல்லும் வழியில் உள்ள பஞ்சவர்ண குகைக்கு சென்றார். அங்கு அடிக்கடி சென்று, தியானம் செய்யத் தொடங்கினார். அங்குள்ள துறவிகள் முழங்கும் சரவணபவ மந்திரம் உபதேச மந்திரமாக இவரது மனதில் பதிந்தது.
பிரம்மானந்த பரதேசியாரிடம் நாதயோகத்தை அக்கறையுடன் கற்றார். அவர்தான் இவருக்கு ‘பித்துக்குளி’ என்ற பெயரை சூட்டியதாக கூறப்படுகிறது. தாத்தா கோபாலகிருஷ்ண பாகவதரிடம் சங்கீதம் பயின்றார்.
சிறந்த மாணவராக இருந்தாலும், ஆன்மிகம், விடுதலைப் போராட்டம் என்று ஈடுபட்டதால், படிப்பில் நாட்டம் செல்லவில்லை. 13 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்தினார். மெக்கானிக், சமையல் வேலை, ஹோட்டல் சர்வர் எனப் பல்வேறு வேலைகளைச் செய்தார். பழநியில் சித்தப்பா நடத்திய லாட்ஜில் சிறிது காலம் வேலை செய்தார்.
உப்பு சத்தியாகிரகம், சுதேசி இயக்கம் உட்பட பல போராட்டங்களில் கலந்துகொண்டார். கைது செய்யப்பட்டு, சிறையில் பல சித்ரவதை களை அனுபவித்தார். ஏற்கெனவே விபத்தில் பாதிக்கப்பட்டிருந்த இவரது இடது கண்ணில் போலீஸார் தாக்கியதால், பார்வை பறி போனது. அதிலிருந்து கருப்புக் கண்ணாடி அணியத் தொடங்கினார்.
சுயமாக முயன்று ஹார்மோனியம் வாசிக்கக் கற்றுக்கொண்டார். முருகன் மீது பல பக்திப் பாடல்களை இயற்றினார். இவருக்கு உபதேசம் அளித்து, ‘முருகதாஸ்’ என்ற பெயரை சூட்டினார் சுவாமி ராமதாஸ். பரமானந்த ஸ்வாமிகள் தனக்கு வைத்த ‘பித்துக்குளி’ என்ற பெயரையும் சேர்த்துக்கொண்டு, ‘பித்துக்குளி முருகதாஸ்’ ஆனார்.
நாடு முழுவதும் 1940-களில் பாத யாத்திரை மேற்கொண்டார். கங்கை நதிக்கரையில் மணிக்கணக்கில் அமர்ந்து பாடுவார். மதுரா, பிருந்தாவனம், துவாரகை, மும்பை, பண்டரிபுரம், பீஜப்பூர் உள்ளிட்ட ஏராளமான புண்ணியத் தீர்த்தங்களை தரிசித்தார்.
பின்னர் தமிழகம் திரும்பியவர், வெள்ளியங்கிரி மலைக் காட்டில் பல மாதங்கள் தியானத்தில் ஈடுபட்டார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் பக்தி இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார். கலைமாமணி, சங்கீத சாம்ராட், சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
திருப்புகழ் பாராயணத்துக்கு பெயர்பெற்றவர். திரைப்படங்களிலும் பக்திப் பாடல்கள் பாடியுள்ளார். 1000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளார்.
தனது கச்சேரிகள் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு ஏழை, எளியவர்களுக்கு உணவளித்து வந்தார். கடந்த நவம்பர் 17-ம் தேதி 95-வது வயதில் மறைந்தார். தீவிர முருக பக்தரான இவர், தைப்பூசத்தில் பிறந்து, கந்த சஷ்டியன்று மறைந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் பெண் வெளியுறவு அதிகாரி சி.பி.முத்தம்மா பிறந்த தினம் ஜனவரி-24


🥇 *இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண், முதல் பெண் வெளியுறவு அதிகாரி* சி.பி.முத்தம்மா *பிறந்ததினம்.*

🥇 கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டையில் பிறந்தவர். வனத்துறை அதிகாரியாக இருந்த தந்தை இறந்தபோது இவருக்கு வயது 9. தான் கஷ்டப்பட்டாலும் 4 குழந்தைகளையும் நன்கு படிக்கவைத்து நல்ல நிலைமைக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார் அம்மா.

🥇 மடிகேரியில் பள்ளிப் படிப்பு, சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார்.

🥇 3 முறை தங்கப் பதக்கம் வென்றார்.

🥇 வெளியுறவுத் துறையில் பணியாற்றவேண்டும் என்பது இவரது விருப்பம். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்ற நாட்டின் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

🥇 இவரது திறமையால் நாட்டின் முதல் பெண் வெளியுறவு அதிகாரியாக 1949-ல் பணியில் சேர்ந்தார். அளவுகடந்த ஆர்வம், துடிப்போடு பணியைத் தொடங்கினார்.

 🥇அன்றைய சூழலில் குடும்பப் பொறுப்பு பணித் திறனை பாதிக்கும் நிலை ஏற்பட்டால், பணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்றும் சட்டப் பிரிவில் கூறப்பட்டிருந்தது. பணி முதிர்வு, பதவி உயர்வு போன்றவற்றில் பெண்கள் உரிமை கோர முடியாது என்ற விதியும் இருந்தது.

🥇 *‘இதுபோன்ற சட்டங்கள் பெண்ணுரிமை, சமத்துவம், அரசியல் சாசனத்துக்கு எதிரானவை.*

🥇இந்த *பாலினப் பாகுபாடுகள் களையப்பட வேண்டும்’* என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் முத்தம்மா.

🥇 வழக்கை விசாரித்தவர் *நீதிபதி கிருஷ்ணய்யர். இந்த விதிகள் அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டது என்று அறிவித்த நீதிபதி, இவர் பதவி உயர்வுக்கு எல்லா வகையிலும் தகுதியானவர்* என்றும் தீர்ப்பு கூறினார்.

🥇 வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தீர்ப்பு, ஆணாதிக்க கருத்து கொண்ட விதிகளைத் திருத்தி எழுத ஒரு வாய்ப்பாக அமைந்தது.

🥇 நெதர்லாந்து நாட்டின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். பர்மா, இங்கிலாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவில் தூதரக உயர் பொறுப்புகளில் முதன்முதலாக நியமிக்கப்பட்ட பெண் இவர்தான்.

🥇 32 ஆண்டு அரசுப் பணிக்குப் பிறகு, 1982-ல் ஓய்வு பெற்றார்.

🥇ஆதரவற்றோர் இல்லம் கட்ட டெல்லியில் இருந்த தனது சொந்த நிலத்தில் 15 ஏக்கரை அன்னை தெரசாவுக்கு வழங்கியவர்.

🥇 *இந்திய ஆட்சிப் பணிகளில் பெண் அதிகாரிகளின் சமத்துவத்துக்காகப் போராடி அவர்களுக்கு சம உரிமை பெற்றுத்தந்த சி.பி.முத்தம்மா, 2009-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி தமது 85 வயதில் மறைந்தார்.*

செவ்வாய், 23 ஜனவரி, 2018

தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24


தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24

இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனை காக்கும் விதமாக ஜனவரி 24ஆம் தேதியை தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் 1996ஆம் ஆண்டு ஜனவர 24 ஆம் தேதி நம் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றார். அந்த நாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து இத்தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகள் பற்றிய தவறான கருத்துக்கள் அடியோடு போகவும்இ அவர்களது ஆரோக்கியம் சீர் படவும்இ அவர்கள் நல்ல ஊட்டச் சத்துமிக்க ஆகாரம் சாப்பிடவும் உதவுவது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்..


 குழந்தைத் திருமணங்களால் சிதையும் எதிர்காலம்:

‘உலகம் முழுவதும் நடக்கும் குழந்தைத் திருமணங்களால் பாதிக்கப்படும் சிறுமிகளில், மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவைச் சேர்ந்த சிறுமிகள்’ என்கிறது யுனிசெஃப் நிறுவனம்(ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்). குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படாவிட்டால், 2050-க்குள் நூறு கோடி சிறுமிகள் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படுவார்கள் என்ற அதிர்ச்சித் தகவலைத் தருகிறது அந்த நிறுவனம்.
2009-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஜனவரி 24-ம் தேதி, தேசிய பெண் குழந்தை தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு இந்தியத் தொழிற் கூட்டமைப்பும்(CII), யுனிசெஃப் நிறுவனமும் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து வளரிளம் பெண்களுக்கான ஒருநாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பெண்களும், பெண் குழந்தைகளும் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர். தாண்டவன், பெண் கல்வி துறைத் தலைவர் பாரதி ஹரிசங்கர், சிஐஐ-சிஎஸ்ஆர் தலைவர் ராணி முரளிதரன், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜி. பழனிதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குழந்தைத் திருமணங்கள்
இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் பெண்களின் நிலை உயர்ந்திருக்கிறது என்று யுனிசெஃப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் சமூக, பொருளாதாரக் காரணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைத் தமிழகப் பெண்கள் அடைந்திருக்கின்றனர் என்று சொல்லலாம். ஆனால், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் எதுவும் நடக்கவில்லை. கிருஷ்ணகிரி இதில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் தருமபுரி, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் 24 சதவீதப் பெண்களுக்கு பதினெட்டு வயதுக்கு முன்னால் திருமணம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கிறது யுனிசெஃப்பின் அறிக்கை.
நவீன பிரச்சினைகள்
குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படும் வளரிளம் பெண்கள் நவீன காலத்திற்கேற்ற நவீன பிரச்சினைகளையும் சந்திக்கின்றனர். “சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கியிருக்கும் வளரிளம் பெண்கள் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படும்போது அவர்களை அடையாளம் கண்டு உதவுவது சமூக அமைப்புகளுக்கு ஓரளவு எளிதாக இருக்கிறது. ஆனால், சமூக, பொருளாதார நிலைகளில் முன்னேறிய வளரிளம் பெண்கள் இதே பிரச்சினையால் பாதிக்கப்படும்போது அவர்களை அடையாளம் காணுவது எளிதானதாக இல்லை” என்று சொல்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ரீட்டா ஜான்.
தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் நடக்கும் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 25.5 சதவீதம் என்றால், நகரங்களில் அது 21.4 சதவீதமாக இருக்கிறது. கிராமங்களுக்கு இணையாக நகரங்களில் சமூக, பொருளாதாரத்தில் முன்னேறிய சூழலில் வசிக்கும் வளரிளம் பெண்களும் குழந்தைத் திருமணங்களால் பாதிக்கப்படுகின்றனர். “நகரங்களில் சிறுவயது திருமணத்தால் பாதிக்கப்படும் வளரிளம் பெண்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கான தளம் இன்னும் உருவாகவில்லை என்பதுதான் உண்மை. கல்வி, தொழில்நுட்பம், சுதந்திரம் என நகரத்தில் வசிக்கும் பெண்களுக்கு வசதிகள் இருந்தாலும் இந்தப் பெண்கள் தங்கள் பிரச்சினைகளைப் பேசுவதற்கான ஒரு தளத்தை விரைவில் உருவாக்க வேண்டும்” என்கிறார் பேராசிரியர் ரீட்டா ஜான்.
சர்வதேச பார்வை
குழந்தைத் திருமணத்தால் வளரிளம் பெண்கள் பாதிக்கப்படுவது உலகளவிலும் அதிகமாகவே இருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளுக்கு மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்படுத்துவது சவாலாகவே இருக்கிறது. “இந்தியாவில் 27 சதவீத பெண்களுக்குப் பதினைந்து வயதுக்குள் திருமணம் முடிந்துவிடுகிறது. இந்தப் பெண்கள் குடும்ப வன்முறை, குழந்தைப் பேறு சிக்கல், பிரசவகால மரணம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். சமீபத்தில், தருமபுரியில் நிகழ்ந்த சிசு மரணங் களுக்கு இந்தச் சிறுவயதுத் திருமண மும் ஒரு முக்கிய காரணம்” என்று சொல்கிறார் தமிழகக் குழந்தைகள் உரிமை ஆய்வகத்தின் மாநிலத் தலைவர் ஆண்ட்ரூ சேசுராஜ்.


தேசிய பெண் குழந்தைகள் தினம்
மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் நம் நாட்டின் முதல் பெண் பிரதம மந்திரியாக பதவி ஏற்ற நாள் ஜனவரி 24. வருடம் 1966. அந்த நாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
பெண் குழந்தைகள் பற்றிய தவறான கருத்துக்கள் அடியோடு போகவும், அவர்களது ஆரோக்கியம் சீர் படவும், அவர்கள் நல்ல ஊட்டச் சத்துமிக்க ஆகாரம் சாப்பிடவும் உதவுவது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமை. இதை நினைவுறுத்தும் வகையில் நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்கிறீர்களா? UNICEF நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி நம் நாட்டில் சுமார் 46% பெண் குழந்தைகள் இந்த இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. 15 வயதிலிருந்து 19 வயது வரை உள்ள சிறுமிகள் இந்த நோயால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சுமார் 6000 இந்திய சிறுமிகள் இரத்த சோகையாலும் ஊட்டச்சத்து பற்றாக் குறையாலும் இறந்து போகிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
சமீபத்தில் பெங்களூரில் இருக்கும் 15 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒரு அதிர்ச்சி செய்தியை சொல்லுகிறது. அதாவது சுமார் 45% பள்ளிச்சிறுமிகள் இரத்த சோகை நோயின் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று! அவர்களது ஹீமோகுளோபின் அளவு 10% க்கும் குறைவாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அளவுப்படி இது 12:12 என்ற அளவில் அதாவது 12 வயது சிறுமிக்கு 12% ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.
இரத்த சோகை நோய் என்பது என்ன?
நமது இரத்தத்தில் இருக்கும் சிகப்பு அணுக்களில் இருக்கும் புரதச் சத்து தான் ஹீமோகுளோபின் என்பது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பிராண வாயுவை இந்த ஹீமோகுளோபின் தான் கொண்டு செல்லுகிறது.
நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய குறைந்த பட்ச அளவு:
HB % அதிக பட்சம்….. 14.08 gm %
ஆண்கள ………………………. 13.00 gm %
பெண்கள் ……………………… 11.00 gm %
கர்ப்பிணி பெண்கள் …………… 10.00 gm %
குழந்தைகள் …………………………. 12.00 gm %
பள்ளி செல்லும் வயதினர் … 12.00 gm %
முதியோர்கள் 10.00 gm %
இந்த அளவின்படி ஹீமோகுளோபின் இல்லாத போது இரத்த சோகை நோய் ஏற்படும். நம் நாட்டில் இரும்புச் சத்து குறைப்பாட்டால் பெண்கள் பாதிக்கப் படுவது கவலைக்குரிய விஷயம். 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவிடுவது, பருவமடையும் போது போஷாக்கான ஆகாரம் சாப்பிடாமல் அல்லது கிடைக்காமல் போவது ஆகியவை பிற்காலத்தில் அவர்கள் இரத்த சோகை நோய்க்கு ஆளாவதற்கும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பிறக்கும் போதே இரத்த சோகைக்கு ஆளாகவும் காரணம்.
இளம் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு சரிவர ஊட்டச் சத்து கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள். தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பின்படி இனபெருக்கக் காலம் (reproductive age) என்று சொல்லப்படும் வயதில் (15-49) இருக்கும் பெண்களில் 56.2% பேர்கள் இரத்த சோகை உள்ளவர்கள். கர்நாடகத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 69.5%. இதனால் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலமும் பாதிக்கப்படுகிறது.
மேலும், மெலிந்த உடல் அமைப்பு (size zero) வேண்டும் என்பதற்காக சாப்பாட்டை குறைப்பதும், பசி வேளையில் “ஜங்க் பூட்” (junk food) என்று சொல்லப்படும் சத்து குறைந்த உணவுப் பொருட்களை உண்பதும் இளம் பெண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. பதின்வயது (teen age) என்பது பெண்கள் பருவமடையும் வயது. அவர்களது இனப் பெருக்க காலமும் அப்போதுதான் தொடங்குகிறது.
இந்தக் கால கட்டத்தில் இளம் பெண்களுக்கு நல்ல போஷாக்கு மிக்க உணவும், உடல் சுகாதாரத்தில் மிகுந்த அக்கறையும் தேவைப்படும். சரியான போஷாக்கான சாப்பாடு சாப்பிடாமல், சத்து இல்லாத ஜங்க் பூட்” (junk food) சாப்பிடுவது அவர்களுக்கு இரும்புச் சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அத்துடன் புரதச் சத்து, மாவுச் சத்து பற்றாக்குறையும் சேர்ந்து அவர்களுக்கு இரத்த சோகையை உண்டு பண்ணுகிறது. இந்தப் பெண்கள் கருவுறும்போது இந்தக் குறை அவர்களது கர்ப்பத்தையும், அதன் பின் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கிறது.
இளம் பெண்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை கொடுக்க வேண்டும். இனப்பெருக்க காலத்தில் அவர்களுக்கு இருக்க வேண்டிய உடல் ஆரோக்கியம் பற்றியும் அறிவுறுத்தல் அவசியம்.
இரத்த சோகையை போக்கக்கூடிய உணவு வகைகள்:
பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், தோலுடன் சாப்பிட கூடிய பழ வகைகள் மற்றும் டிரை ப்ரூட்ஸ் எனப்படும் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, முதலியவற்றில் உள்ள இரும்புச் சத்து நமக்குத் தேவையான ஹீமோகுளோபின் இரத்தத்தில் உண்டாக உதவும்.
எள் மற்றும் வெல்லத்தில் அதிக இரும்பு சத்து இருக்கிறது. எலுமிச்சை சாறில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து குடிக்கலாம். எள்ளுருண்டை, எள்ளு பொடி, எள்ளு சாதம் ஆகியவற்றில் இரும்பு சத்து இருப்பதால் பெண் குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுக்கலாம்.
எள் பிடிக்கவில்லை என்றால் தினமும் ஒரு சிறிய கட்டி வெல்லம் சாப்பிடலாம். இதனால் நமக்கு தினசரி இரும்பு சத்து கிடைக்கும்.
இரும்பு மாத்திரைகள் சாப்பிடலாம். உணவுடனோ, எலுமிச்சை அல்லது சாத்துக்குடி சாறுடனோ சாப்பிடலாம். இந்த சாறுகள் இரும்புச் சத்தை நம் உடல் உறிஞ்ச உதவுகின்றன.
பெண் குழந்தைகளைக் காப்போம்!

புதன், 17 ஜனவரி, 2018

பொதுவுடமைத் தலைவர் ப. ஜீவானந்தம் நினைவு தினம் - ஜனவரி 18 ,1963 .



பொதுவுடமைத் தலைவர் ப. ஜீவானந்தம் நினைவு தினம் - ஜனவரி 18 ,1963 .

ப. ஜீவானந்தம் ( ஆகஸ்ட் 21 , 1907 - ஜனவரி 18 ,1963 ) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக,
சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை
நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர்.
பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.
வைக்கம் சத்தியாக்கிரகம் , சுசீந்திரம் தீண்டாமை இயக்கம் , சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர்.
1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டத்தார் - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து.
இளம் வயதில் அவரைக் கவர்ந்தது மகாத்மா காந்தியின் கொள்கைகள். அந்த நாளில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸ் என்பவரோடு ஜீவா நெருங்கிப் பழகினார். சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார். நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது படிக்கும்போதே முதல் கவிதையை எழுதினார். அந்தக் கவிதை காந்தியையும், கதரையும் பற்றியது.
பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார். "ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார். காந்திய வெளியீடுகளைப் படித்தார்.
ஜீவானந்தம், அரசியலில் எதிரணியில் இருந்த காமரஜரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இந்திய சுதந்திரத்திற்குப் பிற்காலங்களில் உடுத்த மாற்றுடை இல்லாத வறுமை நிலையிலும் வாழ்ந்தவர்.

ஒத்துழையாமை இயக்கத்தில் இணைதல்
காந்தியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது. காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர்
திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது. அவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது. அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார்.
பகத் சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. வன்முறையில் நம்பிக்கையற்றவராயிருப்பினும் பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை அவரால் ஏற்க முடியவில்லை. ஜீவா சீறி எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது.
சிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்?" என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா.
ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக ஜீவாவைக் கைதுசெய்து, கை - கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க சோசலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.
ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் தந்தை மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் அவர் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17.
வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி ஏற்றிருந்தார். ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை. அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார்.
கடலூர் சட்டமன்றத் தொகுதி ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.
இதழாசிரியராக
ஜீவாவின் இறுதிக்காலச் செயல்பாடுகளில் முதன்மையாகக் கருதத்தக்கது அவரது ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ உருவாக்கம் என்று கூறமுடியும் (1961). கொள்கையைப் பரப்ப "ஜனசக்தி" நாளிதழைத் தொடங்கிய ஜீவா, "தாமரை" என்ற இலக்கிய இதழை 1959 இல் தொடங்கினார். அதில், பொதுவுடமைக் கொள்கைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் "தமிழ் மணம் பரப்ப" என்று பாராட்டி கவிதைகள் எழுதினார். 1933 இல் ஜீவா எழுதிய "பெண்ணுரிமை கீதாஞ்சலி" என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல்.
அப்போதிலிருந்து இந்த நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.
பொதுவுடமைக் கட்சியில் இணைதல்
ஜீவா பொதுவுடமைவாதியாகச் செயல்படுவதற்கு அடிப்படையாக அமைந்த காலச்சூழல் 1935 - 39 ஆகும். இக்காலங்களில்தான் ‘ஜனசக்தி’ இதழ் உருவாக்கப்பட்டது (1937). ‘தொழிலாளர் பாதுகாப்புக் கழகம்’ எனும் பெயரில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய அமைப்பின் மூலம் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் உருவாயின. இவற்றின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர்.
இரண்டாம் உலகப்போர் உருவாவதற்கான ‘பெரும் அழுத்தம்’ உருவாகும் சூழலில் கம்யூனிஸ்டுகளால் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர், விவசாய இயக்கங்களின் எழுச்சி பிரித்தானிய அரசு எந்திரத்தைத் தூக்கியெறிவதற்கான அடிப்படைகளை உருவாக்கிற்று. இதனை அடி மட்டத்தில் சாத்தியப்படுத்தியவர்களாகக் கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள்.
ஜீவா 1930களில் தன்னை சுயமரியாதை இயக்கத்தவனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். இந்தியக் காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு 1932 இல் சிறையில் அடைக்கப்பட்டார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் பலர் சிறையில் இருந்தனர். சிறை ஜீவாவின் சிந்தனைப்போக்குகளை மாற்றியது. ‘சிறையிலிருந்து நான் வெளிவரும்போது, கம்யூனிசக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவனாகவே வெளியே வந்தேன்’ என்று ஜீவா எழுதுகிறார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கேற்றார்.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலங்களில் (1939-42) பம்பாயிலும் சிறையிலும் தனது பெரும்பகுதியான நாள்களை ஜீவா கழித்தார். இக்காலங்களில், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதற்கான செயல்பாடுகளில் தோழர்களோடு இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். 1948 இல் கம்யூனிஸ்ட் கட்சித்தடை செய்யப்பட்டபோது இலங்கைக்குச் சென்று செயல்பட்டார். இக்காலங்களில் மார்க்சியக் கல்வி பயிலுவதை முதன்மைப்படுத்திக் கொண்டார். சோசலிசச் சரித்திரம், சோசலிசத் தத்துவம் சார்ந்த மூல நூல்களை வாசித்த அனுபவம் சார்ந்து, தமிழில் அப்பொருண்மை குறித்து எழுதினார்.
மார்க்சிய கருத்துகளைத் தமிழில் சொல்வதற்கு ஜீவா பல புதிய சொல்லாட்சிகளை உருவாக்கியுள்ளார். 1940 களின் இறுதி ஐம்பதுகளின் தொடக்கத்தில் ஜீவா எழுதிய ‘சோசலிசச் சரித்திரம்’ மற்றும் ‘சோசலிசத் தத்துவம்’ எனும் சிறு நூல்களைத் தொடர்ந்து அத்துறை சார்ந்த சோவியத் நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன.
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, மற்றும் அதன் தொழிலாளர் பாதுகாப்புக் கழகம், சுயமரியாதை சமதர்மக்கட்சி ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஜீவாவிற்கு உருவானது. ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் இக்காலங்களில் ஏற்றிருந்தார்.
ஈ.வெ.ராவோடு கருத்துமுரண் ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அ. ராகவன், நீலாவதி, இராமநாதன் உள்ளிட்டவர்களோடு இணைந்து ‘சுயமரியாதைச் சமதர்மக் கட்சி’யை உருவாக்கினார். அவ்வியக்கத்தின் இதழ்களாகவே ‘சமதர்மம்’ மற்றும் ‘அறிவு’ ஆகியவை செயல்பட்டன. அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது (1936), டாங்கே அம்மாநாட்டின் தலைமையுரையை நிகழ்த்தினார். இவ்வகையில் காங்கிரசிலிருந்து வெளியே வந்து, சோசலிசக் கருத்தாக்கம் சார்ந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜீவா விரும்பினார். இதற்கு முரணாக ஈ.வெ.ரா. செயல்படுவதாகக் கருதினார். குறிப்பாக அக்காலங்களில் நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சியுடன் ஈ.வெ.ரா. கொண்டிருந்த தொடர்பை, ஜீவா ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு எதிராகச் செயல்பட்டு காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்காரராகச் செயல்பட்டார். இந்தப் பின்புலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பெயரில் ஜனசக்தியை வார இதழாக வெளிக்கொண்டு வந்தது (1937).
சட்டமன்றத்தில் ஜீவா
சென்னை வண்ணாரப்பேட்டைத் தொகுதியிலிருந்து வென்று
சட்டமன்றத்திற்கு சென்றார் ஜீவா. 1952 முதல் 1957 வரை அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.1957, 1962 சட்டமன்ற தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டாலும் வெற்றிப்பெற முடியவில்லை. [2]
மதுவிலக்கு பற்றிய விவாதம்
1952 ஜூலையில் மதுவிலக்கு பற்றிய விவாதம் சபையில் நடந்தது. மது அருந்தக் கூடாது என்று காந்திஜி கூறினார் என்றார்கள் காங்கிரஸ்காரர்கள். ஜீவாவோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
வள்ளுவர் கூறியிருக்கிறார் என்றார். நஞ்சுண்பார்கள் உண்பவர் என்கிற குறளைக் கையாண்டார். அதே நேரத்தில், பிரச்சனையை தர்க்க ரீதியாகவும், நடைமுறை சார்ந்தும் அலசினார். பல நூற்றாண்டுகளாக இப்படி மதுவிலக்கு வற்புறுத்தப்பட்டும் ஏன் அதை ஒழிக்க முடியவில்லை என்கிற கேள்வியை எழுப்பினார். இவ்வளவு காலமாக முடியாதது ஒரு சட்டத்தால் மட்டும் முடிந்து விடுமா என்றார். முடியவில்லை என்பதற்கு அரசு தரப்பில் தரப்பட்டிருந்த புள்ளி விபரங்களைச் சுட்டிக் காட்டினார். மதுவிலக்கு சட்டத்தை மீறுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடி வருவதை எடுத்துக் காட்டினார். [2]
பிச்சைக்காரர்கள் பற்றி
ராஜாஜி ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது, பிச்சைக்காரர்கள் பெருகிப் போனார்கள். இது பற்றி சட்டமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது தலையிட்டு பேசிய ராஜாஜி தனது ஆட்சிக்கு முன்பு ஊரில் பிச்சைக்காரர்களே இல்லையோ என்று கேலியாகக் கேட்டார். அதற்கு ஜீவா கூறியது -
எம்.ஆர். ராதாவுக்கு ஆதரவாக
குலக் கல்வித் திட்டத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து ராஜாஜி பதவி விலக, 1954 ஏப்ரலில் காமராஜர் முதலமைச்சர் ஆனார். அந்த ஆண்டு இறுதியில் நாடகங்களை நெறிப்படுத்துவதாகச் சொல்லி அரசு ஒரு மசோதாவைச் சபையில் தாக்கல் செய்தது. குறிப்பாக நடிகவேள்
எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைத் தடை செய்வதற்காகவே இப்படியொரு மசோதாவைக் கொண்டு வந்தார்கள். புனிதமானவர்கள் என்றும், தெய்வாம்சம் என்றும் பலரால் நெடுங்காலமாகப் போற்றப்பட்ட புராணப் பாத்திரங்களை அவமதிப்பதை மத உணர்ச்சியைப் புண்படுத்துவதைத் தடுப்பதே மசோதாவின் நோக்கம்என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. [2] இதற்கு ஜீவா தந்த பதிலடி மிக நுணுக்கமானது .
ஜீவாவின் நூல்கள்
மதமும் மனித வாழ்வும்
சோஷலிஸ்ட் தத்துவங்கள்
புதுமைப்பெண்
இலக்கியச்சுவை
சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்
மொழியைப்பற்றி
ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு
மேடையில் ஜீவா (தொகுப்பு)
சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா
கலை இலக்கியத்தின் புதிய பார்வை
தேசத்தின் சொத்து (தொகுப்பு)
ஜீவாவின் கூற்றுக்கள்
“ எனக்கு உங்களுடைய அபின் தேவையில்லை. காரணம், அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கத்தாருடைய துன்பங்களையும் துயரங்களையும் நிலை நிறுத்த அல்ல, ஆனால் ஆளும் வர்க்கத்தாருடைய மீத மிச்சங்கூட இல்லாத ஒரு புதிய சமுதாய அமைப்பைப் படைக்கவே நான் விரும்புகிறேன். அழகும் நிறைவும் கொண்ட ஒரு வாழ்வை சுவர்க்கத்திலன்று, இந்த மாநிலத்திலேயே நிர்மாணிப்பதற்காவே நான் பணிபுரிகிறேன். எல்லாவிதமான அடக்கல், ஒடுக்கல், அடிமைத்தனங்களையும், சுரண்டல் சூறையாட்டங்களையும் இந்தப் பூமண்டலத்திலிருந்து துடைத்து எறிந்துவிட்டு, மனிதனுடைய சிறந்த இன்பத்திற்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாத பெளதிகச் சூழ்நிலைகளையும், சாதனங்களையும் படைக்கவே நான் போராடுகிறேன். மனிதத் தன்மையின் மாண்புகளைக் காலடியில் தள்ளி மிதித்துத் துவைக்கும் எல்லா பிற்போக்குத் தீமைகளுக்கும் எதிர்டையான இந்த அறப்போரில் எனது பொருள்முதல்வாதமும், எனது நாத்திகவாதமும் மாபெரும் சக்தியையும், உணர்ச்சிப் பெருக்கையும் ஊட்டுகின்றன. நான் ஒரு நாத்திகன், காரணம், நான் மனிதனை நேசிக்கிறேன். ”
நான் ஒரு நாத்திகன் - ஜீவா
நினைவகங்கள்
தமிழ்நாடு அரசு ப.ஜீவானந்தம் நினைவைப் போற்றும் வகையில்
கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோயிலில் பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு ப.ஜீவானந்தம் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்ப்பட்டுள்ளது.
ஜீவானந்தம் அரசு மேனிலைப் பள்ளி, புதுச்சேரி
இவரின் பெயரால் புதுச்சேரியில்
ஜீவானந்தம் அரசு மேனிலைப் பள்ளி பெயரிடப்பட்டுள்ளது.

பாட்டாளிகளின் தோழன் ஜீவா!

சுதந்திர போராட்ட வீரராக, பொதுவுடமை போராளியாக, மிகச் சிறந்த பேச்சாளராக விளங்கிய தோழர் ஜீவாவின் பிறந்த நாள் இன்று.
தமிழகத்தில் பொதுவுடமை கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய பொதுவுடமை போராளி தோழர் ஜீவா, பொது வாழ்வில் நாற்பது வருடம் ஈடுபட்டு, பல்வேறு சிறைகளையும், சோதனைகளையும் தாங்கிய தியாகி. தன்னுடைய ஆயுள் காலத்தில் பத்து வருடங்கள் சிறையில் கழித்த இவர், காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க பற்றாளராக, பொதுவுடமை இயக்க தலைவராக செயலாற்றியவர்.
ஜீவா என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் ப.ஜீவானந்தம்,
நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ம் ஆண்டுகளுக்கு இதே நாளில் பட்டத்தார்--உமையம்மாள் தம்பதியினரின் மகனாக பிறந்தார். இயற்பெயர் சொரிமுத்து.
சிறு வயதிலேயே காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஜீவா, ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே கவிதைகளும், நாடகங்களும்
எழுதி நடிக்கவும் செய்தார். தமிழிலக்கியம் மீது தனி ஆர்வம் கொண்டிருந்தார். பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். குடியரசு, ஜனசக்தி, பகுத்தறிவு, புரட்சி, தாமரை ஆகிய இதழ்களுக்கு புரட்சிகரமான கட்டுரைகளும், கவிதைகளையும் படைத்தவர்.
பொதுவுடமை மேடைகளில் முதல் முறையாக தமிழ் கலாச்சாரத்தோடு கலந்துரையாடல் தமிழிலக்கியம் பேசியவர் ஜீவா. தமிழோடு சேர்த்து கட்சியையும் வளர்த்தார். காங்கிரஸ் ஆட்சியில் கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப்பட்டபோது, ஜீவா தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். ஜீவாவிற்கு பொதுவுடைமை ஒரு கண் என்றால், மேடையில் இலக்கிய முழக்கம் செய்வது இன்னொரு கண் போல.
இலக்கிய மேடைகளில் ஜீவா ஏறினால், அவரது பேச்சை ரசிக்க அக்காலத்தில் இளைஞர்கள் திரண்டுவருவர். ஒரு தேர்ந்த தமிழறிஞர் போல அவர் நாவாடுவதை தமிழறிஞர்களும் பெரிதும் ரசிப்பர். அக்காலத்தில் அது எல்லா தலைவர்களுக்கு கிடைக்காத பேறு.
Advertisement
இளமையில் கடலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகளாகிய கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்டார். இவரது மறைவிற்குப்பின் 1948 ஆம் ஆண்டு பத்மாவதி என்பவரை கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குமுதா, உஷா, உமா என்ற மகள்களும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.
பெரியாரோடு இணைந்து வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு தீண்டாமைக்கு எதிராக போராடியவர் ஜீவா.
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலக் கட்டத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக வெகுண்டெழுந்தார். அனல் கக்கும் பேச்சால் அன்றைய இளைஞர்களின் மனதில் புரட்சிக் கனலை மூட்டினார். சிறையிலிருந்தபடி பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய 'நான் ஏன் நாத்திகனானேன்?' எனும் நூலை தமிழில் மொழி பெயர்த்தார். அதை வெளியிட்டவர் பெரியார். பரபரப்பான இந்த நுாலை வெளியிட்டதற்காக, ஜீவாவின் கை கால்களை கட்டி விலங்கிட்டு, திருச்சி முழுவதும் வீதி வீதியாக இழுத்துச் சென்று சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.
1930 களில் தன்னை சுயமரியாதை இயக்கத்தினராக அடையாளப்படுத்திக் கொண்ட ஜீவா, காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பொதுவுடமை தோழர்களுடன் சிறை சென்றார். வெளிவரும்போது தீவிர பொதுவுடமையாளனாக வெளிவந்தார்
கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய தோழர் ஜீவா, சீனாவின் இந்திய படையெடுப்பை கடுமையாக எதிர்த்தார். சீனா, இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சிலில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் முக்கிய பங்கு ஜீவாவினுடையது.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் (1939--1942) பம்பாயிலும் சிறையிலும் தன் பெரும்பகுதியை செலவிட்டார். 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது இலங்கைக்கு சென்று செயலாற்றினார்.
1952- ம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். சட்ட மன்றத்தில் தனது பேச்சால் மற்ற தலைவர்கள் அனைவரையும் கவர்ந்தார் ஜீவா. அதுவரை பொதுமக்களை கவர்ந்த ஜீவாவின் பேச்சால், தலைவர்களும் ஈர்க்கப்பட்டனர். எதிராளியையும் பேச்சால் தன் வசப்படுத்தும் தனித்துவம் மிக்கவராக ஜீவா விளங்கினார். ஜீவா சட்டமன்றத்தில் நிகழ்திய உரை "சட்டப்பேரவையில் ஜீவா" என்று நூலாகவும் வெளிவந்துள்ளது.
எதிரணியில் இருந்தாலும் அனைத்து தலைவர்களுடனும் நட்பு பாராட்டியவர் ஜீவா. காமராஜரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். நகைச்சுவை மேதை கலைவாணரின் பெருமதிப்பிற்குரியவராக ஜீவா இருந்தார். தலைமறைவு வாழ்க்கையில் ஜீவாவின் பெரும்பகுதி நேரம் கலைவாணரின் பாதுகாப்பில் கழிந்தது.
இலக்கியத்தின் பால் தீராக தாகம் கொண்ட ஜீவா, தனது இறுதி காலத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தை துவங்கினார். இலக்கியத்தை மையப்படுத்தி 'தாமரை' இலக்கிய இதழை தொடங்கினார். 'ஜனசக்தி' நாளிதழையும் தொடங்கினார்.
தன் இறுதிக்காலம் வரை மக்களிடையே வாழ்ந்த ஜீவா, வறுமையிலேயே கழித்தார். ஜீவாவின் இறுதிக்காலம் வறுமையிலேயே கழிந்தது. ஒருமுறை அப்போதைய முதல்வர் காமராஜர் சென்னையில் ஜீவா வசித்துவந்த பகுதியில் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். காமராஜரின் உதவியாளர், திறப்பு விழா நடக்கும் இடத்தின் அருகேதான் ஜீவாவின் வீடு இருப்பதாக போகிற போக்கில் சொல்ல அதிர்ந்தார் காமராஜர். காரணம் அது ஒரு குடிசைப்பகுதி.

நிகழ்ச்சி முடிந்து ஜீவாவின் வீட்டுக்கு சென்ற காமராஜர், அவரது எளிமையான வீட்டை கண்டு இன்னும் அதிர்ந்துபோனார். அத்தனை சாதாரணமாக இருந்தது அந்த வீடு. அலுவலகம் திரும்பிய காமராஜர் உடனடியாக ஜீவாவிற்கு விடுதலைப் போராட்ட வீரர் ஒதுக்கீட்டில் அரசு வீட்டை ஒதுக்கும்படி உத்தரவிட்டார். ஆனால் ஜீவா அதை ஏற்க மறுத்தார்.
"என் வாழ்நாள் முழுவதும் இந்த பாட்டாளி மக்களுக்காக உழைத்தேன். என் இறுதிக்காலமும் அத்தகைய மனநிலையிலேயே கழிய வேண்டும். அவர்களிடமிருந்து என்னை தனித்துக்காட்டும் எந்த விஷயமும் எனக்கு தேவையில்லை" என மறுத்தார் நேர்மையாளர் ஜீவா.
இத்தனை மக்கள் ஆதரவுடனும் பெரும்தலைவர்களுக்கு பிடித்தமானவராக இருந்தாலும், துாய்மையான தலைவனாக எளிமையாகவும் இறுதிவரை நேர்மையாக தன் பொதுவாழ்வினை அமைத்துக்கொண்டார் தோழர் ஜீவா.
உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18- ம் நாள் இயற்கை எய்தினார் ஜீவா. ஜீவாவின் பொன்னுடலுக்கு கட்சி மாச்சர்யமின்றி தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னாளில் மத்திய அரசு அவர் தபால் தலையை வெளியிட்டு கவுரவம் செய்தது.
மதமும் மனித வாழ்வும், புதுமைப் பெண், மேடையில் ஜீவா, தேசத்தின் சொத்து, கலை இலக்கியத்தின் புதிய பார்வை ஆகியவை ஜீவா தொடர்பான நுால்கள்.
இவரது நினைவாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மணிமண்டபம் அமைத்து பெருமை சேர்த்துள்ளது தமிழக அரசு. புதுச்சேரியில் இவரது நினைவாக அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஜீவானந்தம் என பெயரிட்டது புதுவை அரசு. பாட்டாளிகளின் குரலாய் ஒலித்த தோழர் ஜீவாவின் வாழ்வு என்றும் மக்களிடையே சிறந்து விளங்கும்.


ப. ஜீவானந்தம் 10

மகாத்மா காந்தியால் ‘இந்த தேசத்தின் சொத்து’ என்று பாராட்டப்பட்டவரும் பொதுவுடமைக் கொள்கைக்காகப் பாடுபட்டவருமான ப. ஜீவானந்தம் நினைவு
 தினம் இன்று . அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார் (1907). அந்த கிராம தெய்வத்தின் பெயரான சொரிமுத்து என்ற பெயரை பெற்றோர் இட்டனர். இளம் வயதிலேயே எழுத்தாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். ஒன்பதாவது படிக்கும் சமயத்தில் இவர் எழுதிய முதல் கவிதையே காந்தியையும் கதரையும் பற்றியது.
l பத்தாம் வகுப்பு படித்த சமயத்தில் ‘சுகுணராஜன் அல்லது சுதந்திரவீரன்’ என்ற நாவலை எழுதினார். அடுத்து ‘ஞானபாஸ்கரன்’ என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து, நடித்தார். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறைகூவலால் ஈர்க்கப்பட்டார்.
l அந்நியத் துணிகள் பகிஷ்கார இயக்கத்தின்போது தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் பிரச்சார உரையை கேட்ட இவர், அன்றிலிருந்து கதராடை அணியத் தொடங்கினார். தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். மகனின் போக்கு தந்தைக்குப் பிடிக்கவில்லை. இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. தன் கொள்கைக்காக வீட்டைத் துறந்தார் இந்த இளைஞர்.
l அப்போது 17 வயதுதான். 1932-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். சிறையில் இவரது சிந்தனைப்போக்கு மாறியது. கம்யூனிசக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். அந்தசமயத்தில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதை சகித்துக்கொள்ள முடியவில்லை. சீறி எழுந்தார்.
l அனல் கக்கும் இவரது பேச்சு இளைஞர்களை எழுச்சியடைய வைத்தன. சிறையிலிருந்தபோது பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். அதற்காக இவரைக் கைது செய்து கை, கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர் போலீஸார்.
l இவரது 40 ஆண்டுகால பொதுவாழ்வில் ஏறக்குறைய 10 ஆண்டு கள் சிறையில் கழிந்தது. நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு சூழல்களில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களுக்காக இவர் எழுதிய பாடல்களும் ஊர் ஊராகச் சென்று இவர் ஆற்றிய உரைகளும் தொழிலாளர்களை எழுச்சிபெறச் செய்தன.
l மார்க்சிய கருத்துகளை தமிழில் கூற பல புதிய பதங்களை உருவாக்கினார். 1940களின் இறுதியிலும் 50களிலும் ஜீவா எழுதிய ‘சோஷலிச சரித்திரம்’ மற்றும் ‘சோஷலிச தத்துவம்’ ஆகிய நூல்களைத் தொடர்ந்து ஏராளமான சோவியத் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.
l ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றிருந்தார். சென்னை வண்ணாரப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 1952 முதல் 1957 வரை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். 1959-ல் ‘தாமரை’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கினார்.
l 1961-ல் ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இயக்கம், போராட்டம், சிறை என்று பொதுவாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் இலக்கியத் திறனையும் தக்கவைத்துக் கொண்டவர். ‘புதுமைப் பெண்’, ‘இலக்கியச் சுவை’, ‘மதமும் மனித வாழ்வும்’, ‘சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.
l தமிழக அரசு இவரது நினைவைப் போற்றும் வகையில் நாகர் கோவிலில் பொதுடைமை வீரர் ப. ஜீவானந்தம் மணிமண்டபம் அமைத்துள்ளது. புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தன்னலம் கருதாமல் இளைய தலை முறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ப. ஜீவானந்தம், 1963-ம் ஆண்டு தமது 55-ம் வயதில் மறைந்தார்.



மாமனிதனின் வரலாறு

எல்லோரும் சமம்; எல்லோரும் நிகர்; எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று கருதுகிற துடிப்புமிக்க சிறுவன் அவன். எதற்கும் அஞ்சாதவன். நாகர்கோயிலில் உள்ள கோட்டாறு உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம், தன்னுடன் பயிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் மாணிக்கத்துடன் மிகுந்த நட்பு கொண்டிருந்தான். அது தீண்டாமை சகதி ஊறியிருந்த காலம் என்பதால், ஆலயப் பிரவேச உரிமை தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மறுக்கப்பட்டு இருந்தது.
இதை உணர்ந்திருந்த சிறுவன், தன் நண்பனை தீண்டாமை தாண்டவமாடிய உயர் சாதியினர் வசிக்கும் தெரு வழியாக அங்குள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்றான். இதை அறிந்த ஆதிக்க சாதியினர் சிறுவனை அழைத்து விசாரித்தனர்; கடிந்துகொண்டனர்; இறுதியாக மிரட்டவும் செய்தனர். ஆனால், சிறுவன் எதற்கும் அஞ்சுவதாக இல்லை. அதனால் சிறுவன் தாக்கப்பட்டான். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவன் கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டதால் சிறுவனது தந்தைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதில் கோபமுற்ற தந்தை சிறுவனை கடுமையாக தண்டித்தார்; கட்டுப்பாடுகள் விதித்தார். தான் செய்தது நியாயமே என்று உணர்ந்த சிறுவன் தந்தையின் கட்டுப்பாடுகளுக்கு சுனங்கினான். அதனால், வீட்டைவிட்டு வெளியேறுவதென முடிவு செய்தான்; வெளியேறினான்.
இந்தச் சம்பவம்தான் பின்னாளில் பெரியார் தலைமையில் நடைபெற்ற சாதிய அடக்குமுறைக்கு எதிரான வைக்கம் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் அவரை பங்குகொள்ளச் செய்தது.
அது வேறு யாருமல்ல. சொரிமுத்து என்று அழைக்கப்பட்டு பின்னாளில் ஒரு மாமனிதனாக உருவான மக்கள் தலைவன் ஜீவானந்தம்தான் அந்தச் சிறுவன்.
இவ்வாறு சமத்துவத்துக்கு ஆதரவாகவும் தீண்டாமைக்கு எதிராகவும் பள்ளிப் பருவத்திலேயே ஜீவானந்தம் குரல் கொடுக்க ஆதிக்க சாதியினரின் மனோபாவம் வழிவகுத்துக் கொடுத்தது.
காங்கிரஸ் இயக்கத்தின் கோட்பாடுகளின் மீது பிடிப்பு கொண்டிருந்தார் ஜீவா. அதனால், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில், காங்கிரஸ் இயக்கத் தலைவர்களில் ஒருவரான வ.வே.சு அய்யரால் நடத்தப்பட்டு வந்த ஑பரத்வாஜ்ஒ ஆஸ்ரமத்தில் ஆசிரியராக சேர்ந்தார். ஆனால், அங்கு பிராமண வகுப்பு மாணவர்களுக்கு தனியாகவும் பிற சாதி மாணவர்களுக்கு தனியாகவும் உணவு பரிமாறப்பட்டதைக் கண்டு கொதித்தார். அப்போது, ஜீவாவும் பெரியாரும் காங்கிரஸ் இயக்கத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தனர். இந்தக் கொடுமைக்கு எதிராக இருவரும் குரல் கொடுத்தனர்.
காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் இதை விவாதத்துக்கு கொண்டு வந்தார். இருந்தும் காந்திஜி, ராஜாஜி போன்ற வர்ணாசிரமவாதிகளால் விவாதம் தோற்றுப்போனது. இதனால், கோபமுற்ற பெரியார் காங்கிரஸிலிருந்து விலகி ஑சுயமரியாதைஒ இயக்கத்தைத் தொடங்கினார்.
ஜீவா, ஑பரத்வாஜ்ஒ ஆசிரமத்திலிருந்து விலகி சிராவயல் ஆசிரமத்தை தொடங்கினார். இங்கு, பலரின் எதிர்ப்பையும் மீறி தீண்டாமைக்கு எதிராகப் போராடினார். அவரோடு, தடையை மீறி கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட மண்ணடி மாணிக்கமும் ஜீவாவின் ஒப்பற்ற நண்பர் சி.பி.இளங்கோவும் ஆசிரமப் பணியில் ஈடுபட்டனர். தன் தோழர்கள் இருவரோடு சேர்ந்து சேரிகளில் ஜீவா கல்விப் பணி ஆற்றினார்.
ஜீவாவுக்கு இருந்த காந்திய சுதேசியக் கொள்கைப் பற்றுதலின் காரணமாக ஆசிரம மாணவர்களுக்கு காந்திய நிர்மாணத் திட்டத்தோடு தேவாரம், திருவாசகம், திருக்குறள், நிகண்டு மற்றும் பாரதியார் பாடல்கள் பயிற்றுவிக்கப்பட்டன. சிராவயல் ஆசிரமம் நடத்தி வந்த காலத்தில் சங்ககால இலக்கியம் முதல் மகாகவி பாரதி வரையிலான எல்லா நூல்களையும் படிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும், ஜீவா வாய்ப்பு ஏற்படுத்திக்கொண்டார்.
முன்பு சேரன்மாதேவியில் ஏற்பட்ட கசப்பான அனுபவமும் தமிழ் மீது இருந்த பற்றும், ஜீவாவை வடமொழி எதிர்ப்பாளராகவும் தூய தமிழ்வாதியாகவும் மாற்றிவிட்டன. தூய தமிழ் உணர்வால் தனது ஑ஜீவானந்தம்ஒ என்ற பெயரை ஑உயிர் இன்பன்ஒ என மாற்றிக்கொண்டார்.
காங்கிரஸ் இயக்கத்தில் செயல்பட்டுக்கொண்டு இருந்த ஜீவா, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் பங்காற்றி வந்தார். அப்போது, தனித் தமிழ் ஆதரவாளரான வேதாச்சலம் (எ) மறைமலையடிகளின் தொடர்பு ஏற்பட்டு, அவர் மீது அளவுக்கடந்த அன்பு செலுத்தத் தொடங்கினார்.
ஒரு முறை மறைமலையடிகளைத் தேடி அவர் வீட்டுக்கு சென்றிருந்தபோது, அவர் ஆங்கிலத்தில் பேசியதைக் கண்டு திடுக்கிட்ட ஜீவா, வறட்டுத் தமிழ்வாதம் கூடாது என்பதை அப்போது உணர்ந்தார்.
ஜீவா, சிராவயல் ஆசிரமம் நடத்தி வந்த சமயம், அவர் தலைமையாசிரியராக இருந்த ஒரு பள்ளிக்கு வ.உ.சிதம்பரம் பிள்ளை வருகை புரிந்தார். அச்சமயம், பள்ளி மாணவர்கள் கை ராட்டிணத்தில் நூல் நூற்றுக்கொண்டு இருந்தனர். அப்போது, ஆணாதிக்க மனோபாவம் கொண்டிருந்த வ.உ.சி., அதைப் பார்த்து,
஑஑ஆண்களை நூல் நூற்க வைக்கும் இந்தப் பள்ளியின் செயல்பாடு முட்டாள் தனமானதாக இருக்கிறது. வாளேந்த வேண்டிய கரங்கள் ராட்டைச் சுற்றுவதை என்னால் சகிக்க முடியவில்லைஒஒ என்று சினமுற்று அவர் சொன்ன கருத்தை ஜீவானந்தம் எதிர்த்தார். ராட்டைச் சுற்றுவதும் ஒரு தேசபக்த செயல்தான் என்றும், வ.உ.சி.யின் கூற்று முறையானதல்ல என்றும் வாதாடினார்.
அன்று மாலை அதே பகுதியில் வ.உ.சி. தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஑பெண்களும் விடுதலையும்ஒ என்ற தலைப்பில் ஜீவா உரை நிகழ்த்தினார். உணர்ச்சிப் பொங்க அவர் ஆற்றிய அந்த உரையைக் கேட்டு வியந்துபோன சிதம்பரம் பிள்ளை பெண்கள் மீது தான் கொண்டிருந்த ஆணாதிக்க மனப்பாங்கை மாற்றிக்கொண்டதோடு மட்டுமல்லாமல், ஑஑அஞ்சுபவர்களும் கெஞ்சுபவர்களும் சுதந்திரத்தைப் பெற முடியாது. ஜீவானந்தம் போன்ற சிலர் இருந்தாலே போதும் நாடு விடுதலை அடைந்துவிடும்ஒஒ என்று கூறினார்.
1927&ம் ஆண்டு தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த காந்தியடிகள் ஜீவா நடத்திக்கொண்டிருந்த சிராவயல் ஆசிரமத்துக்கு வந்தார். ஜீவா, தன் கையாலேயே நூற்று வைத்திருந்த பத்தாயிரம் கெஜம் நூலை காந்திக்கு வழங்கினார். அன்போடு வழங்கிய அந்த நூலைப் பெற்றுக்கொண்ட காந்தி ஜீவாவைப் பார்த்து,
஑உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறதுஒ என்று கேட்டார்.
ஜீவா, ஑இந்தியாதான் என் சொத்துஒ என்று பதில் சொல்லவும்,
காந்தி, ஑இல்லை இல்லை, நீங்கள்தான் இந்தியாவின் சொத்துஒ என்று ஜீவாவின் சுதேசியத்தையும் தேச பக்தியையும் பாராட்டினார்.
இப்படி, தேசிய உணர்வும் சுதேசிய உணர்வும் கொண்டவர் ஜீவா என்பதற்கு இந்தச் சம்பவம் சாட்சியாக இருக்கிறது. இது, இன்றளவும் பலராலும் பேசப்பட்டும் மேற்கோள்காட்டப்பட்டும் வருகிற சம்பவமாகும்.
1929&ல் நெல்லிக்குப்பத்தில் நடந்த சாதி ஒழிப்பு மாநாட்டில் ஜீவா பங்கேற்றார். அதே ஆண்டில் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் கலந்துகொண்டார். இந்த ஆண்டுதான் சிராவயலில் இருந்த ஆசிரமம் பக்கத்து ஊரான நாச்சியார்புரத்துக்கு மாற்றப்பட்டது. நாச்சியார்புரத்தில் இருக்கும்போதுதான் அவருக்கு பெரியாரோடு தொடர்பு ஏற்பட்டது. குருகுலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அதே வேளையில், சுயமரியாதை இயக்க மாநாடுகளிலும் கூட்டங்களிலும் பங்கேற்று தன் கருத்துக்களை வெளியிட்டார். இதே ஆண்டில் அரசால் நடத்தப்பட்ட மதுவிலக்கு பிரசார கமிட்டியிலிருந்து போதைப் பழக்கத்துக்கு எதிராக ஜீவா பிரசாரம் செய்தார்.
1930&ம் ஆண்டு வாக்கில் ஈரோட்டில் சுயமரியாதை இயக்கத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. ஜீவாவும் அந்த மாநாட்டில் பங்கேற்றார். வெள்ளை ஏகாதிபத்திய அரசின் ஏகபோக கொடுங்கோன்மையை எதிர்க்கும் தீர்மானத்தை ஆதரித்து, ஜீவா ஆவேசம் பொங்க உரை நிகழ்த்தினார். மாநாட்டில் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய அவர்,
஑஑சாதி, மத விவகாரங்களில் மட்டும் நமது சுயமரியாதையைப் பாதுகாத்துக்கொண்டால் போதாது. அரசியல் விவகாரங்களிலும் நாம் நமது சுயமரியாதையைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்ஒஒ என்று சுயமரியாதை இயக்கத்தையும், தேச விடுதலை இயக்கத்தையும் இணைத்துப் பேசினார்.
இதன்பின்பு, 1931&ம் ஆண்டு ஜீவா கோட்டையூர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே ஜீவாவின் முதல் அரசியல் பிரவேசம் என்று சொல்லலாம்.
பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாக பங்கு கொண்டிருந்த ஜீவா தேச விடுதலைப் போராட்டத்திலும் அதே வேகத்தோடும் வீரியத்தோடும் ஈடுபட்டார். 1932&ம் ஆண்டு சட்டமறுப்பு இயக்கம் தீவிரமடைந்திருந்த சமயம், காரைக்குடியில் ஜீவா தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டது. எனவே, சட்டமறுப்பு இயக்க ஆதரவுக் கூட்டங்களில் ஜீவாவின் கருத்தாழமிக்க பேச்சு மக்கள் மத்தியில் உயிர் பெற்று எழுந்தது. இதைக் கண்டு அஞ்சத் தொடங்கிய அரசு, 7.1.1932 அன்று ஜீவா காரைக்குடிக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது, மறுநாள் முதல் அவர் எங்கும் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு சட்டம் போட்டது. ஜீவா, அந்தச் சட்டத்தை உடைத்தார். மறுநாள் கோட்டையூரில், தடையை மீறிப் பேசிய ஜீவா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இது ஜீவாவுக்கு முதல் சிறைவாசமாகவும் புதிய அனுபவமாகவும் அமைந்துபோனது. இது பல மாற்றங்களை நிகழ்த்தப்போகிறது என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.
இந்தச் சிறை வாசத்தின்போது, பகத்சிங்கின் தோழர்களான பூதகேஸ்வ தத், குந்தலால் ஆகியோரையும், வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜி ஆகியோரையும் சந்தித்தார். இவர்களுடன், சோஷலிஸம், கம்யூனிஸம் போன்ற சித்தாந்தங்கள் பற்றியும், சோவியத் யூனியன் பற்றியும் நிறையவே பேசவேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது. அதோடு நின்றுவிடாமல் அரியபல பொதுவுடமைப் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பும் சிறையில் அவருக்கு கிடைத்தது. இந்தப் புத்தகங்கள், அவர் உள்ளத்தில் ஊறிக்கொண்டு இருந்த பொதுவுடமைக் கருத்துக்களுக்கு உரம் சேர்ப்பதாக இருந்தன. 1932 ஜனவரியில் ஒரு காங்கிரஸ்வாதியாக சிறை புகுந்த ஜீவா நவம்பரில் ஒரு கம்யூனிஸ்ட்டாக திரும்பினார்.
1932&ன் இறுதியில் பெரியார், சுயமரியாதை இயக்க ஊழியர் கூட்டத்தை சிங்காரவேலர் தலைமையில் கூட்டினார். இந்தக் கூட்டத்தில்தான் ஜீவாவுக்கு சிங்காரவேலருடன் நெருக்கம் ஏற்பட்டது. அதன் மூலம் விஞ்ஞான சோஷலிஸம், கம்யூனிஸம், நாத்திகம் ஆகியவற்றைப் பற்றி புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. மட்டுமல்லாமல், 1932&லிருந்து 1932 வரை சிங்காரவேலரின் நூலகத்திலிருந்த பொதுவுடமை நூல்களை வாசிப்பதற்கும் அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டது.
1933&ம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை எழும்பூர் ஒயிட்ஸ் மெமோரியல் ஹாலில் பெரியார், சிங்காரவேலர், ஜீவா ஆகியோர் பங்கு பெற்ற நாத்திகர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டைத் தொடர்ந்து, நாத்திகக் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக சுமார் 200 பாடல்களை ஜீவா எழுதியதாக தெரிகிறது.
இந்தச் சூழ்நிலையில், வர்ணாசிர தர்மத்தையும், சோஷலிஸ சமூகமல்லாத ராம ராஜ்யத்தையும் ஆதரித்துவரும் காந்தியை புறக்கணிக்க வேண்டும் என்று ஜீவா அறைகூவல் விடுத்தார். 1934 ஜனவரி மாதம், தான் நடத்தி வந்த ஑புரட்சிஒ ஏட்டில் ஑நாத்திகப் பிரசாரம்ஒ என்ற கட்டுரையை ஜீவா எழுதினார். ஏப்ரல் இதழில் ஑குருட்டு முதலாளித்துவமும் செவிட்டு அரசும்ஒ என்ற கட்டுரை எழுதியதும் பயந்துபோன அரசு புரட்சி இதழை தடை செய்தது. அதற்கு பதிலாக ஑பகுத்தறிவுஒ என்ற பத்திரிகை வெளிவந்தது.
1934&ம் ஆண்டு ஜீவாவின் வாழ்வில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. அதற்குமுன் இளைஞர்கள் பலர் வேதனையில் இருந்த நேரம். கோபத்தில் கொந்தளித்த காலம். ஜீவாவை இப்படி பார்த்த ஒரு மாணவர், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு கம்யூனிஸ்டாக வளர்ந்தார். அவர் பெயரை பின்னால் தெரிந்துகொள்வோம். அதற்குமுன் அவரே அந்த நிகழ்வை விவரிக்கிறார்...
஑஑பொள்ளாச்சியில் பள்ளி மாணவனாக இருந்தபொழுது ஜீவாவை முதன்முறையாகப் பார்த்தேன்.
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. வாலிபர் உலகம் கொதித்தெழுந்த கோலம். காந்திஜி கடமையில் தவறிவிட்டார் என்று அவருக்கு இளைஞர்கள் கருப்புக் கொடி பிடித்து, ஆர்ப்பாட்டம் செய்த நேரம் அது.
கொந்தளிப்பு மிகுந்த இச்சூழலில் நான் ஜீவாவைக் கண்டேன். சர்க்கஸிலிருந்து தப்பி ஓடிய ஒரு கொடிய விலங்கினைச் சங்கிலியிட்டு, நாற்புறமும் இழுத்துப் பிடித்துக்கொண்டு, எச்சரிக்கையாக கூண்டுக்கு நடத்திச் செல்வது போன்று, ஜீவாவை போலீஸார் சங்கிலியிட்டு இழுத்துச் சென்றனர். கோவை ஜில்லாவில், ஒரு சப்ஜெயில் பாக்கியில்லாமல் அவர் இழுத்தடிக்கப்பட்டார்.
அவர் அவ்வளவு பயங்கரமான மனிதரா? பகத்சிங்கின் தோழரா? பின் ஏன் அரசாங்கம் அவரைக் கண்டு இப்படி அஞ்சுகிறது? இளம் உள்ளத்தில் அக்காட்சி எழுப்பிய ஐயம் இது.
ஆளவந்தாராலும் ஒடுக்கமுடியாத உருக்கு உள்ளம் படைத்த ஒரு வீரனின் படம் இளம் உள்ளங்களில் பசுமரத்தாணி போல் பதிந்தது. ஒரு லட்சிய வீரனைக் கண்கூடாகக் கண்டுவிட்ட பெருமிதம் உள்ளத்தை நிரப்பிற்று.
தூக்கு மேடை ஏறினார் பகத்சிங் தேசத்துக்காக; அந்த பஞ்சாப் சிங்கம் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட வண்ணம், தான் ஒரு கொள்கை வீரனுங்கூட என்பதை வெளிப்படுத்தும் வகையில், ஑நான் ஏன் நாத்திகன் ஆனேன்?ஒ என்ற கடிதத்தை எழுதினார்.
ஹிந்துஸ்தான் சோஷலிஸ்டுக் குழுவின் திலகமான பகத்சிங்கின் இந்த வீர காவியத்தை தமிழ்ப்படுத்தி தமிழ் மக்களுக்குத் தந்தமைக்காக சங்கிலியும் சப்ஜெயிலும் ஜீவாவுக்குக் கிடைத்தன.ஒஒ என்று கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான கே.பாலதண்டாயும் கூறுகிறார்.
பகத்சிங்கின் ஑நான் ஏன் நாத்திகன் ஆனேன்?ஒ என்ற கடிதத்தை தமிழில் மொழி பெயர்த்தமைக்காக ஜீவா கைது செய்யப்பட்டபோதே அந்த நூலை ஑பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடுஒ மூலம் வெளியிட்டமைக்காக பெரியாரும் கைது செய்யப்பட்டார்.
பின்னர், பெரியார் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். ஜீவா இதற்கு சம்மதிக்கவில்லை. கட்சியின் முடிவு என்று சொல்லவே தன் நிலையை மாற்றிக்கொள்ள நேரிட்டது. உள்ளக் குமுறலுடன் மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு வெளியே வந்தவர், ஜோலார் பேட்டையிலிருந்து ஑சமதர்மம்ஒ என்ற பத்திரிகையை வெளியிட்டார். அதில், ஑மன்னிப்பும் எனது நிலையும்ஒ என்று தலையங்கம் எழுதினார். இதன் காரணமாக ஜீவாவுக்கும் பெரியாருக்குமான இடைவெளி மேலும் அதிகரித்தது.
அதே ஆண்டு அக்டோ பரில், தமிழ்நாட்டில் உள்ள நாத்திகர்களை ஒன்றுபடுத்த வேண்டும் என்று நினைத்து ஑சென்னை ராஜதானி நாத்திகர்கள் சங்கம்ஒ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஑சமதர்மம்ஒ பத்திரிகையின் வாயிலாக சங்கத்தின் நோக்கங்களை வெளியிட்டார். ஆனால், மீண்டும் அரசு தனது கைவரிசையை காட்டியது. சமதர்மம் பத்திரிகை தடைப்பட்டது.
சுயமரியாதை இயக்கத்துக்குள் பொதுவுடமைக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை எதிர்த்து இயக்கத்திலிருந்த முக்கிய தலைவர்கள் வெளியேறினர். பெரியார், சோஷலிஸ்ட் கருத்துக்களைப் பிரசாரம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று அரசு அடக்குமுறையை ஏவியது; பெரியார் பொதுவுடமைப் பிரசாரத்தை நிறுத்தினார்.
இதனால், சுயமரியாதை இயக்கம் பிளவை சந்தித்தது. ஜீவா உள்ளிட்ட பலர் சுயமரியாதை இயக்கத்தைவிட்டு வெளியேறி, ஑சுயமரியாதை சமதர்மக் கட்சிஒ அல்லது ஑சுயமரியாதை சோஷலிஸ்ட் கட்சிஒ என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
சுயமரியாதை சோஷலிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாட்டுக்கு கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ.டாங்கே வந்தார். மாநாட்டில் சுயமரியாதை சோஷலிஸ்ட் கட்சியைக் கலைத்துவிட்டு அனைவரும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைய வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் பேரில் ஜீவாவும் மற்ற இடதுசாரி சிந்தனையாளர்களும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.
1936&ம் ஆண்டு, நவம்பர் மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு சேலத்தில் நடைபெற்றது. ஜீவா, அதன் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். ஜீவாவின் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி செயல்படத் தொடங்கியது.
ஜமீன் ஒழிப்புத் தீர்மானம்
1937&ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது. இந்த வெற்றி பெறுவதற்கு ஜீவா பெரிதும் உழைத்தார்.
அதே ஆண்டு, வத்தலகுண்டுவில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில், அ. இ. காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தேர்வு நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி என்பது மிகவும் உயரிய பதவியாகும். அந்தப் பதவிக்கு அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் ராஜாஜி, சத்யமூர்த்தி, காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் போட்டியிட்டனர். இருந்தபோதும், ஜீவா அனைவரைவிடவும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1937&ம் ஆண்டு விக்கிரமசிங்கபுரத்திலிருந்தும், 1938&ம் ஆண்டு பாளையங் கோட்டையிலிருந்தும் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் மாநாட்டில், ஜமீன் ஒழிப்புத் தீர்மானம் கொண்டுவரப் பட்டது. தீர்மானத்தை எதிர்த்த சிலர், ஑மாநாடு நடைபெறுவதற்காக சில ஜமீன்தார்களும் பொருளுதவி செய்திருப்பதால், இப்படிப்பட்ட தர்மவான்களான ஜமீன்தார்கள் ஒழிப்பு அவசியமில்லைஒ என்று பேசலானார்கள். தீர்மானத்தை ஆதரித்தவர்கள்கூட அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ஏதோ பெரிய பாவம் ஒன்றை செய்யப் போவது போலவே பலர் எண்ணிக்கொண்டு பேசினார்கள்... ஑ஜமீன்களை ஒழிக்க வேண்டுமானால் மிகமிகத் தாராளமாக நஷ்டஈடு கொடுக்கவேண்டும்; அதுவே நீதி, நேர்மை, நியாயம், தர்மம்ஒ என்று என்னவெல்லாமோ பேசினார்கள்.
ஒட்டி உலர்ந்த வயிற்றுடன் குழிவிழுந்த கண்ணுடன் & வாழ வழியற்று சுதந்திரமாக மூச்சு விடக்கூட வக்கற்று நடைப் பிணமாகக் கிடந்து உழலும் விவசாயி ஒருபுறம்! தேசப்பற்று அணுவளவும் இல்லாமல் & சுரண்டல் வேட்டைக்காரர்களாக விளக்கும் ஜமீன்தார்கள் மற்றொரு புறம்! ஜீவா பேசத் தொடங்கினார். ஜீவா, இதை எதிர்த்துப் பேச ஆரம்பித்தபோது, பேசுவதற்குக் கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது என்று சொல்லி தலைவர் மணியடித்தார். ஆனால், கூட்டம் ஜீவாவை பேசவைக்க வேண்டும் என்று குரல் எழுப்பவே, வேறு வழியின்றி ஜீவானந்தம் பேசுவதற்கு அனுமதி வழங்கவேண்டிய நிலைக்கு கூட்டத் தலைவர் தள்ளப்பட்டார். ஜீவா பேசி முடித்தார். தர்மம் பேசியவர்கள் தலைகுனிந்தார்கள். அவர்கள் கட்டி முடித்து, மேல் மினுக்கி வைத்திருந்த விவாத மாளிகையை ஜீவாவின் பேச்சு பொடி சூரணமாக ஆக்கியது. ஆனாலும், இறுதி வெற்றி ஜீவாவை ஏமாற்றிவிட்டது. நஷ்டஈடு பற்றி மறுப்பு குறிப்பு எழுதி வைத்தார் ஜீவா. மாநாட்டை ஒட்டி நடந்த பொது மேடையில் இதுபற்றி ஜீவா பேசவில்லை. அது கட்சியின் கட்டளை!
இந்தச் சூழ்நிலையில், நாடுமுழுக்க தொழிற்சங்கங்கள் அமைத்து தொழிலாளர்கள் போராட ஆரம்பித்திருந்தனர். தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களுக்கு ஜீவா, பாட்லிவாலா, பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் தலைமை தாங்கினர்.
பசுமலை மகாலட்சுமி மில் போராட்டம்
1937&ம் ஆண்டு மதுரை, பசுமலையில் உள்ள மகாலட்சுமி மில்லில் தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தச் சங்கத்துக்கு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தலைவராகவும் ஜீவா மற்றும் டி.எல்.சசிவர்ணம் துணைத் தலைவர்களாகவும் இருந்தனர். சங்கம் தொடங்கப்பட்டதும் தொழிலாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் குதித்தனர்.
ஏற்கனவே, பசும்பொன் தேவர் மீது ராஜாஜிக்கு தனிப்பட்ட முறையில் மனஸ்தாபம் உண்டு. அதைக் காரணம் கொண்டு, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கருத்தில் கொள்ளாமல் தேவர் மீது இருந்த மனத்தாங்கலால் போராட்டத்துக்கு தடை விதித்தார் முதலமைச்சர் ராஜாஜி.
இதைத்தொடர்ந்து, ஜீவாவும் ராமமூர்த்தியும் போராட்டத்தைக் கையிலெடுத்தனர்.
வேலை நிறுத்தத்தின் எதிரொலி தமிழகம் முழுவதும் ஒலித்தது. தலைவர் முத்துராமலிங்கத் தேவர் சிறை வைக்கப்பட்டதினால் அது மிகவும் சூடேறியிருந்த சமயம். பாதுகாப்பு கருதி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஆண்கள் பலர் சிறை வைக்கப்பட்டனர். எனவே, மறியலை பெண்கள் நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. போராட்டத்துக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அதில், பெண்களே பாதிக்கும்மேல். கூட்டத்தில், ஜீவா பேசத் தொடங்கினார்... அவர் பேசப்பேச பெண்கள் தனித்தனியாகக் கூடி விவாதித்தனர். தொடர்ந்து அவர் பேச்சைக் கேட்டப் பெண்கள் கிளர்ந்தெழுந்தனர்.
மறுநாள் மறியல் துவங்கியது. பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். போலீஸார் தடியடி நடத்தினர். பலருக்குப் படுகாயம். பலருக்கு சிறை வாசம். போராட்டத்தில் ஜீவாவுக்கு பலமாக தாக்கு. ஜீவா தாக்கப்பட்டதைக் கண்டு, ஆவேசம் கொண்டு கொதித்த முத்தம்மாள் என்ற பெண், ஜீவாவைத் தாக்கிய காவல் துறையின் துணை ஆய்வாளரை விளக்கு மாற்றாலேயே வாங்கிவிட்டார். இது தொழிலாளர்கள் ஆண்&பெண் பேதம் இன்றி ஜீவா மீது வைத்திருந்த அன்பைக் காட்டுகிறது.
பின்னர், போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென்று நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தது. சமரச உடன்படிக்கையில் ஜீவா கையெழுத்திட்டார். பசுமலை மில் போராட்டம் வெற்றி கண்டது.
இந்தப் பின்னணியில், தொழிலாளர்களுக்கு வழிகாட்டவும், சோஷலிஸ்ட் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் ஒரு ஊடகம் தேவை என்பதை உணர்ந்த ஜீவா 1937&ம் ஆண்டு ஑ஜனசக்திஒயை தொடங்கினார்.
஑ஜனசக்திஒ பத்திரிகை வெளிவந்தவுடன், அதில் வந்த செய்திகள் அரசை உலுக்கியது. இதனால், அச்சக உரிமையாளர் காவல் துறையினரின் மிரட்டலுக்கு ஆளானார். எனவே, தன்னால் தொடர்ந்து பத்திரிகை அச்சடித்துக் கொடுக்கமுடியாது என்று கைவிரித்துவிட்டார். வேறு அச்சகத்தாரும் பத்திரிகையை அச்சடிக்க மறுத்துவிட்டனர். ஆகவே, பத்திரிகை மூன்றாவது இதழோடு தற்காலிகமாக நின்றுபோனது.
அரசின் கண்களில் மண்ணைத்தூவி கம்யூனிஸ்ட்கள் சொந்தமாக அச்சகத்தை தொடங்கினர். இதனால், 1938&ம் ஆண்டு ஏப்ரல் 6&ம் தேதி ஑சோஷலிஸ்ட் வாரப்பத்திரிகைஒ என்ற முத்திரையுடன் 1939&ம் ஆண்டு செப்டம்பர் 16&ம் தேதி வரை ஑ஜனசக்திஒ வெளிவந்தது.
1938&ம் ஆண்டு ராஜபாளையத்தில் காங்கிரஸ் அரசியல் மாநாடு நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாடு நடக்கும் இடத்துக்கு எதிரிலேயே காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் மாநாடும் நடைபெற்றது.
மாநாட்டில் ஜீவானந்தம் தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்தும் போலீஸ் அடக்குமுறையை எதிர்த்தும் குரல் எழுப்பினார். அவரது ஆவேசமான பேச்சைக் கேட்க ஆவலாக இருந்த மக்கள் மாநாட்டுத் தடுப்பையும் மீறி உள்ளே வர ஆரம்பித்துவிட்டனர். அதனால், தடுப்பு அகற்றப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜீவாவின் பேச்சைக் கேட்க அனுமதிக்கப்பட்டனர்.
1939&ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டியில், தொழிலாளர் போராட்டம் நடத்திய ஜீவா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படு ஓராண்டுக்கு கட்சியை விட்டு அவர் நீக்கப்பட்டார். இதனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவியையும், சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவியையும் அடியோடு ராஜினாமா செய்தார் ஜீவா.
1940, இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம் ஜீவா மங்களூர் சென்று கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.வி.காட்டேவைச் சந்தித்தார். ஏற்கனவே, யுத்த எதிர்ப்புப் பிரசாரத்தின் காரணமாகச் சீற்றம் கொண்டிருந்த வெள்ளை ஏகாதிபத்திய அரசு ஜீவாவை நாடு கடத்த தீர்மானித்தது. கம்யூனிஸ்ட்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. பலர் தலைமறைவாகிவிட்டனர். பகிரங்கமாகச் செயல்பட்ட ஜீவா உள்ளிட்டத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
ஒரு கட்டத்தில், சென்னை மாகாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ஜீவா, காரைக்காலுக்குச் சென்றார். உலக யுத்தத்தில் ஆங்கில அரசும் பிரஞ்சு அரசும் சேர்ந்திருந்தமையால் பிரஞ்சு அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பாண்டிச்சேரி பிரதேசத்துக்குள் ஜீவா அனுமதிக்கப்படவில்லை. எனவே, ஜீவா பம்பாய் புறப்பட்டார். அங்கு தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் பணியாற்றினார். யுத்த எதிர்ப்பு இயக்கமும் தொழிலாளர் எதிர்ப்பு இயக்கமும் சேர்ந்தது. அலை அலையாக பொங்கி எழுந்த மக்களின் யுத்த எதிர்ப்பு இயக்கத்தைக் கண்டு ஆங்கில ஏகாதிபத்தியம் நடுநடுங்கியது; கம்யூனிஸ்ட்களை ஒடுக்கியது; வேட்டையாடியது.
தனது அரசியல் வாழ்வின் முதற்பகுதியில் தேச விடுதலைப் போராட்டத்திலும், சாதியக் கொடுமைக்கு எதிராகவும் குரலெழுப்பி பேர் பெற்றிருந்த ஜீவா, கம்யூனிஸ்ட் தலைவராக நாஞ்சில் நாட்டில் நுழைந்தார். தனது உணர்ச்சிமிக்க சொற்பொழிவுகள் வாயிலாகவும் இலக்கிய உரைகள் மூலமாகவும் பொதுவுடமை கருத்துக்களை நாஞ்சில் நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்ளவும், தேச விடுதலை நோக்கி அவர்களை இட்டுச் செல்லவும் ஜீவா அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்.
1942, தமிழகமெங்கும் பாரதிக்கு ஜீவா விழா எடுத்தார். அது பாரதியின் மீது கடும் விமர்சனம் இருந்து வந்த காலகட்டமாகும். ஆனால், அந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளித்த ஜீவா பாரதியை உயர்த்திப் பிடித்தார். பாரதி இன்று மறைக்கப்படாமல் இருப்பதற்கு ஜீவாவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஜீவா பங்கேற்ற கூட்டங்களில் திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யரின் ஆட்சி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராட்சியும் விமர்சனத்துக்கு உள்ளானதால் ஜீவா கைது செய்யப்பட்டார்.
ஆறு மாதம் சிறை தண்டனைக்குப் பிறகு, 1943 ஏப்ரல் மாதம் ஜீவா விடுதலையானார்.
1942&ல் ஜீவா மீது விதிக்கப்பட்டிருந்த தடை 1945 அக்டோ பர் 5 அன்று சென்னை மாகாண அரசால் வாபஸ் பெறப்பட்டது. ஜீவா சென்னை திரும்பினார்.
இந்திய வரலாற்றில் 1946&ம் ஆண்டு மறக்கமுடியாத ஆண்டாகும். நாட்டின் புதிய சக்தியாக தொழிலாளர்களும் ராணுவமும் ஒன்று சேர்ந்திருந்த நேரம். இரண்டாம் உலக யுத்தம் சோவியத் யூனியனுக்கு சாதகமாக அமைந்ததால், இந்த வெற்றி காலனி நாட்டு மக்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 17&ம் நாள் இந்திய கடற்படையில் போராட்டம் மூண்டெழுந்தது. 18&ம் நாள் பம்பாய் துறைமுகத்தில் முகாமிட்டிருந்த இருபது போர்க் கப்பல்களுக்கும் இந்தப் போராட்டம் பரவலாயிற்று. 19&ம் நாள் போராட்டக் குழுவினர் பம்பாய் நகரத்தில் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மாலுமிகளின் இந்தப் போராட்டம் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியது. 20&ம் நாளன்று கப்பல் படையினரின் எழுச்சியை அடக்குவதற்காக பிரிட்டிஷ் ராணுவம் பம்பாய் வந்தது. நாடெங்கும் பரவிய கப்பல் படை எழுச்சி, 21&ம் தேதியன்று போராட்டத்துக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட்களை அறை கூவல் விடுக்கச் செய்தது.
இந்தப் போராட்டத்தில் 300 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1700 பேர் படுகாயமடைந்தனர். மாலுமிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், முஸ்லிம்லீக் கட்சியும் போராட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தின. கடைசியில் பிப்.22&ம் தேதி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கப்பற்படை எழுச்சியின்போது முன்னணி வகித்த தொழிலாளர்கள் மீதும், தொழிலாளர் கட்சிகள் மீதும் வெள்ளை அரசு கொடும் ஒடுக்குமுறை நடத்தியது. மாகாண அரசுகள் கம்யூனிஸ்ட்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு சிறையில் அடைத்தன. கட்சியின் கட்டுப்பாட்டால் ஜீவா போன்ற தலைவர்கள் 1946 நவம்பர் முதல் 1947 ஆகஸ்ட் வரை தலைமறைவாக இருக்க நேர்ந்தது.
தலைமறைவு வாழ்க்கையின்போது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, டி.கே.எஸ். சகோதரர்கள் போன்ற கலைஞர்களும் குத்தூசி குருசாமி போன்ற திராவிட இயக்கத் தலைவர்களும் ஜீவாவுக்கு அடைக்கலம் தந்தனர்.
ஒருவழியாக 1947, ஆகஸ்ட் 15&ம் நாள் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறை முடிவுக்கு வந்தது. மக்கள் ஆரவாரித்தனர். இந்த ஆட்சி மாற்றத்தை ஜீவா வரவேற்கிறார்...
஑஑வீழ்ந்தது யூனியன் ஜாக்! உயர்ந்தது மூவர்ணக் கொடி!ஒஒ
அதே ஆண்டில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பத்மாவதி என்ற பெண்ணை ஜீவானந்தம் மறுமணம் செய்கிறார். தனது புதிய வாழ்க்கையை தாம்பரம் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் தொடங்குகிறார். தன் வாழ்வின் இறுதிநாட்கள் வரை அந்த குடிசையிலேயே வாழ்ந்தார். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் குடிசையை மாற்றவில்லை.
ஒரு முறை கூட்டம் ஒன்றுக்காக அப்பகுதிக்கு வந்த அன்றைய முதலமைச்சர் காமராஜர், ஜீவாவின் குடிசையைப் பார்த்து வறுந்தி, மாடி வீடு கட்டித்தருவதாக கூறியிருக்கிறார். ஆனால். ஜீவா அதை ஏற்கவில்லை. இங்கிருக்கிறவர்கள் எல்லாம் எப்போது மாடி வீட்டில் வசிக்கத் தொடங்குகிறார்களோ அப்போது, தானும் மாடி வீடு கட்டிக்கொள்வதாக கூறி காமராஜரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.
1948&ம் ஆண்டு கல்கத்தாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய இரண்டாவது மாநாடு நடைபெற்றது. அதில் இந்திய அரசை எதிர்த்து ஆயுதப்புரட்சியில் இறங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், கம்யூனிஸ்ட் கட்சியை அரசு தடை செய்தது. கட்சியின் தலைவர்களையும் ஊழியர்களையும் கைது செய்யத் தொடங்கியது. இதனால், ஜீவா இலங்கை சென்று பி.ஜே.பிள்ளை என்ற பெயரில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பீட்டர் கெனிமன் வீட்டில் இருந்தார்.
ஜீவா வந்திருக்கிறார் என்ற தகவலை அறிந்த இலங்கை தமிழ்ச் சங்கத்தினர், அவரை சங்கத்தில் பேச அழைப்புவிடுத்தனர். அங்கும் ஜீவாவின் பேச்சைக் கேட்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஓராண்டுக்குப் பிறகு ஜீவா தமிழகம் திரும்பி தலைமறைவு வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
1949&ம் ஆண்டு ஜீவா மீண்டும் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் கம்யூனிஸ்ட்கள் துப்பாக்கியால் சுடப்பட்டனர். ஜீவாவும் தாக்குதலுக்கு ஆளானார்.
1952&ம் ஆண்டு சென்னை சட்டசபைக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஜீவா வடசென்னை வண்ணாரப்பேட்டை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வுபெற்ற ஜீவா, சட்டமன்றத்தில் தமிழிலேயே பேசினார். முதன் முதலில் சட்டமன்றத்தில் தமிழில் பேசியவர் அவரே. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு நேரம் வரையறுக்கப்பட்டு இருந்தபோதும், ஜீவாவுக்கு மட்டும் அதிக நேரம் பேச அனுமதி வழங்கப்பட்டது. அவரது பேச்சில் அவ்வளவு உண்மையும் வசீகரமும் இருந்தன.
1953&ம் ஆண்டு முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தை அமல்படுத்தலானார். குலக்கல்வி திட்டம் என்பது ஆரம்பப் பள்ளி மாணவர்கள், காலை வேளையில் பாடங்கள் படிக்க வேண்டும். மாலை வேளையில் பெற்றோர் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்ட வேலைகளைப் பழக வேண்டும். அதாவது, செருப்பு தைக்கிறவர் பிள்ளை செருப்பு தைக்கப் பழகவேண்டும். நாவிதரின் பிள்ளை முடிதிருத்தப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதுதான் குலக்கல்வி திட்டம். இந்தக் கல்வி முறை வர்ணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதத்துக்கு வந்தபோது பலத்த எதிர்ப்புக்கு உள்ளானது. ஜீவா, இந்தத் திட்டத்துக்கு எதிராக பேசினார். ஑இது மாணவர்களை சாதிய சிமிழுக்குள் அடைக்கும் முயற்சிஒ என்றார். ஆளுங்கட்சி அல்லாத அனைத்துக் கட்சிகளின் எதிர்ப்பாகவும் அது மாறியதால் திட்டம் கைவிடப்பட்டது.
1955&ம் ஆண்டு ஜீவா சென்னை பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1959&ம் ஆண்டு ஑தாமரைஒ என்ற கலை இலக்கிய இதழை ஜீவா தொடங்கினர். பொதுவுடமை இலக்கியத்துக்கு அது ஒரு தூணாய் விளங்கியது. இன்றும் தாமரை வெளிவந்துகொண்டு இருக்கிறது.
சோவியத் யூனியன் மீது நீங்காத பற்றுக் கொண்டிருந்த ஜீவாவுக்கு அந்த நாட்டைப் பார்க்கும் பேறு கிட்டியது. 1962&ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற உலக சமாதானக் கவுன்சிலின் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜீவா ரஷ்யா சென்றார். மாநாடு முடிந்து, இந்தியா வந்த ஜீவாவுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.
இந்தியா&சீனா எல்லைத் தகராறு முற்றி, அது எல்லைப் போராக வளர்ச்சி பெற்றிருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்த கருத்து வேறுபாடு தீவிரமடைந்திருந்த நேரம். அதாவது, கட்சிக்குள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேருவது, எதிர்ப்பது என்பது பற்றி கடுமையான விவாதம் ஏற்பட்டிருந்தது.
ஜீவா, சீனாவின் நடவடிக்கையை எதிர்த்து தீவிரமாகப் பிரசாரம் செய்து வந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அப்போது இருந்துவந்த சூழல் ஜீவாவை மனதளவில் பெரிதும் பாதித்தது. அந்த நேரத்தில் எது நடக்கக் கூடாது என்று அவர் நினைத்தாரோ அது நடந்தேவிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது.
இந்தக் காலகட்டத்தில்தான் ஜீவா, தனது முதல் மனைவி காங்கிரஸ் எம்எல்ஏ குலசேகரதாஸின் மகள் கண்ணம்மாவுக்குப் பிறந்த தனது மூத்த மகள் குமுதாவை சந்திக்கிறார். அது ஓர் அதிர்ச்சிகரமான ஆச்சர்யகரமான சந்திப்பு.
பிறந்த நாள் முதலாய் தாயை இழந்து, தந்தையின் இன்முகத்தைப் பார்க்காது இருந்த குமுதா அப்போதுதான் முதன்முறையாக தன் தந்தையைப் பார்க்கிறாள். அந்தநேரத்தில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் குமுதா படித்துக்கொண்டிருந்தாள்.
தாயை இழந்து, தாத்தாவின் வீட்டில் வளர்ந்து, தாயின் தந்தையையும் தாயையுமே பெற்றோர்களாக நினைத்து வந்த குமுதாவுக்கு 17 வயதுக்குப் பிறகுதான், தான் பிறந்தவுடனே தாயை இழந்ததையும், தனது தந்தை பொதுவுடமைத் தலைவர் ஜீவாதான் என்பதையும் நண்பர்கள் வாயிலாகவும் உறவினர்கள் வாயிலாகவும் அறிகிறாள். அதன்பின்னர் தந்தையை காணவேண்டும் என்ற ஆவல் அவளுக்கு மேலிடுகிறது.
நெடுநாளாக தந்தையை பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டே கனவில் இருக்கிறாள். கனவு ஒருநாள் பலிக்கிறது.
ஆசிரியப் பயிற்சிப் பள்ளியிலிருந்தவள் தந்தையை பார்த்துவிடுவதென்று தீர்மானிக்கிறாள். சரி, அதற்கு என்ன செய்வதென்று யோசித்தவள் ஑முதன்முறையாக தந்தையைச் சந்திக்கப் போகிறோம். தனியாக எப்படிப் போவது?ஒ என்று தயங்கி, உடன் தன் தோழியையும் அழைத்துக்கொண்டு ஑ஜனசக்திஒ அலுவலகத்திற்கு பயணப்படுகிறாள் உத்தமர் ஜீவாவின் மகள்.
அலுவலகத்தில் நுழைந்ததும் சிறிதுநேரம் தந்தைக்காக காத்திருப்பு...
தந்தை வருகிறார்...
அவருக்கோ இவர்கள் யார் என்றே தெரியாது.
பார்த்தார் இருவரையும்...
஑யாரம்மா... என்ன வேண்டும்?ஒஒ என்று குமுதாவின் தோழியைப் பார்த்து ஜீவா கேட்கிறார்.
அதற்கு அவள், ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் இருந்து வருவதாகவும். அவரை பார்க்க வந்திருப்பதாகவும் ஜீவாவிடம் கூறுகிறாள்.
ஜீவா மீண்டும் முதல் கேள்வியையே குமுதாவிடமும் கேட்கிறார்.
குமுதா ஜீவாவைப் பார்க்கிறாள். அழுகிறாள்...
஑என்னம்மா என்ன வேண்டும். ஏன் அழுகிறாய்...ஒ என்று ஜீவா கேட்கிறார்.
பதில் சொல்ல வாயெடுத்தாலும், இத்தனை ஆண்டுகாலமாக தந்தையை பார்க்காது இருந்த மகளுக்கு முதன்முறையாக அவரைப் பார்த்ததும் துக்கம் தொண்டையை அடைத்துவிட்டது.
தன் மகளிடம்தான் பேசிக்கொண்ரு இருக்கிறோம் என்பதை அறியாத அப்பாவைப் பார்த்து, குமுதா விம்முகிறாள்...
பின்...
஑஑எனது தாத்தாவின் பெயர் & குலசேகரதாஸ், எனது அன்னையின் பெயர் & கண்ணம்மா, நான் உங்களின் மகள்ஒ என்று எழுதி, ஒரு துண்டு சீட்டை ஜீவாவிடம் நீட்டுகிறாள்.
அதைக் கண்ட ஜீவா துடிதுடித்துப்போய், கண்களில் நீர் சுரக்க பதில் சொல்ல முடியாமல் அதே துண்டு காகிதத்தில், ஑஑என் மகள்ஒஒ என்று எழுதுகிறார்.
பின், தந்தையும் மகளும் கண்ணிராலும் அன்பாலும் அளவளாவுகிறார்கள்.
அந்தக் குமுதாதான் ஜீவாவின் இறுதிக் காலம் வரை இருந்து அவரது உடலை பேணிக்காத்தவர். மேலும், இரண்டாவது மனைவியான பத்மாவதியின் மூலம் உமா, உஷா, மணிக்குமார் என்ற மூன்று பிள்ளைகள் ஜீவாவுக்கு.
1963&ம் ஆண்டு ஜனவரி 16&ம் நாள் ஜீவா ஜனசக்தி, தாமரை பத்திரிகைகளின் பணிகளை முடித்துவிட்டு, தாம்பரத்தில் உள்ள தனது குடிசைக்குத் திரும்புகிறார். மறுநாள் இரவு 11 மணியளவில் மார்பு வலியால் மயங்கி விழுந்துவிடுகிறார். அப்போது அவர் மனைவி பத்மாவதி உடன் இல்லை. கடலூரில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜீவா மயக்கம் தெளிந்து, தான் மருத்துவமனையில் இருப்பதை தன் மனைவிக்கும் காமராஜருக்கும் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டு சற்றுக் கண்ணயர்ந்தவர் அப்படியே தூங்கிவிட்டார்.
மறுநாள்,
ஐயோ... என்ன ஆனது..? ஜீவா போய்விட்டாரா..!ஒ என்று ஜீவாவின் மரணச் செய்தி கேட்ட தமிழகம் கண்ணீர் வடித்தது.
பிராட்வே(பாரிமுனை)யில் உள்ள சென்னை துறைமுகத் தொழிலாளர் சங்க அரங்கத்தில் பொது மக்கள் பார்வைக்காக ஜீவாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. காட்டுத் தீ போல் பரவிய மரணச் செய்தியால் மக்களும் பல்வேறு கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் ஜீவாவுக்கு அஞ்சலி செலுத்த ஓடோ டி வந்தனர்.
இறுதி ஊர்வலத்தில் மக்கள் அலைகடலென திரண்டனர். கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என்று பாகுபாடற்று பலரும் ஜீவாவின் உடல் அடக்கத்துக்கு வந்திருந்தனர்.
ஜீவா பலருடன் கொள்கை முரண்பாடு கொண்டிருந்த போதிலும்கூட, இறுதிவரை அவர் யாருடனும் மனதளவில் வருத்தம் கொண்டிருக்கவில்லை. எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துவதையே அவர் விரும்பினார்.
அவரது மரணத்தை தாங்க முடியாத எழுத்தாளர்கள், கவிஞர்கள் எழுத்தஞ்சலி செலுத்தினர். புரட்சிக் கவி பாரதிதாசனோ தன் வாஞ்சையான எழுத்தால், தேராதவர்களை உடல் தேற்றினார். ஆறாதவர்களை மனம் ஆற்றினார். அதனால், ஜீவன் போனாலும் ஜீவா போகவில்லை என்று சிலர் ஆறுதல் கொண்டனர்.
பாரதிதாசன் எழுதினார்...
஑஑தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார்
தீங்குவரக்கண்டும் சிரித்திடுவார் & யாங்காணோம்
துன்பச் சுமை தாங்கி! சீவானந்தம் போன்ற
அன்புச் சுமை தாங்கும் ஆள்.ஒஒ