வியாழன், 25 ஜனவரி, 2018

இந்திய குடியரசு தினம் ஜனவரி 26


இந்திய குடியரசு தினம் ஜனவரி 26 

இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.


ஆங்கிலேயரின் ஆட்சி
ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.


இந்தியா சுதந்திரம் அடைதல்
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.
இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்
1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.


இந்தியக் குடியரசு தினம்
1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
குடியரசு என்பதன் பொருள்
குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தினக் கொண்டாட்டம்
இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.
இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.
வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!


இந்தியா ஒரு சகாப்தம்

மிகப்பெரிய இந்தியாவை ஆட்சி செய்ய நமக்கான சட்டத்தை நாமே இயற்றி நம்மை நாமே ஆட்சிசெய்ய வழிவகுத்த அரசியலமைப்பு சட்டம் 1950 ஜனவரி 26 - நாள் அன்று இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்த நாள் தான் இன்று குடியரசு என்பது மக்களாட்சி தத்துவத்தை நிலைநிறுத்தியது என்றும் சொல்லலாம்
நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வு நிச்சயமாக இரண்டு தினங்களின் போது இருக்கும். ஒன்று சுதந்திர தினம்; மற்றொன்று குடியரசு தினம். இந்த தினத்துக்கு என்ன வித்தியாசம்; எப்படி வந்தது; ஏன் கொண்டாடுகிறோம் என்பதை தெரிந்து கொள்வது நமது கடமை.
சுதந்திரம் என்று சொல்லும் போது, யாரிடம் இருந்தோ விடுதலை பெற்றிருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. பல ஆண்டுகளாக நாட்டை அடிமைப்படுத்தி, மக்களின் உரிமைகளை ஒடுக்கி, இயற்கை வளங்களை கொள்ளையடித்து ஒற்றுமையாக இருந்த மக்களையும் பிரித்து விட்டு, 1947 ஆக., 15ம் தேதி நள்ளிரவில் ஆங்கிலேயர் நமக்குவழங்கியது தான் சுதந்திரம். சுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தையில் ஓராயிரக்கணக்கான மக்களின் ஓய்வில்லா போராட்டம் ஒளிந்திருக்கிறது. பல தலைவர்கள், இன்னுயிரை வருத்தி பல ஆண்டுகளாக ஆங்கிலேயரின் பீரங்கிகளை எதிர்த்து நின்று போராடி, அடிமை தேசத்தை, சுதந்திர நாடாக உருவாக்கினார்கள். இதனை நினைவு படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆக., 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.நமக்கு அப்போது கிடைத்த சுதந்தரம் முழுமையானது அல்ல. ஏனெனில் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு, இந்தியாவுக்கு டொமினியன்அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். இதன்பின், இந்திய அரசியலமைப்பு 1949 நவ., 26ல்,இந்திய அரசியல் நிர்ணய சபையால்ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது.அன்று முதல் இந்தியாவில் மக்களாட்சி மலரத் தொடங்கியது. பிரிட்டிஷார் நியமித்த கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது.குடியரசு என்பதன் நேரடி பொருள் "மக்களாட்சி'. மன்னராட்சி இல்லாமல், தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். இவ்வாறு மக்களாட்சி நடைபெறும் நாடு, குடியரசு நாடு என அழைக்கப்படுகிறது.குடியரசு நாட்டின் தலைவர், குடியரசு தலைவர் அல்லது ஜனாதிபதி என அழைக்கப்படுகிறார். சில நாடுகளில் குடியரசு தலைவர் நேரடியாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறார். சில நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மூலம், குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இம்முறை தான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.


அரசியல் சாசனம்:

அரசியல் சாசனம் என்பது, ஒரு நாட்டின் சட்ட திட்டங்கள்மற்றும் நெறிமுறைகளைவிளக்கிப் பட்டியலிடும் ஆவணம். இந்திய சுதந்திரத்திற்குப் பின், குடியரசு நாடாக இந்தியாவை பிரகடனப்படுத்த, அரசியலமைப்பை உருவாக்கும் பணியை, ராஜேந்திர பிரசாத் தலைமையிலான, அரசியல்நிர்ணய சபை மேற்கொண்டது.இதன்படி, 1947, ஆக., 29ல், சட்ட வரைவுக்குழு உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அம்பேத்கர் தலைமையிலான7 பேர் கொண்ட குழு,2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் அயராத உழைப்பில், இந்திய அரசியல் சாசனத்தை எழுதி முடித்தனர். பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின், 1949, நவ., 26ல் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950, ஜன., 26ல் நடைமுறைக்குவந்தது. இந்த நாள் தான்குடியரசு தினம். இந்தியஅரசியல் சாசனத்தில் மொத்தம் 22 பகுதிகள், 448 ஷரத்துகள், 12 அட்டவணைகள்,98 திருத்தங்கள், 1 லட்சத்து17 ஆயிரத்து 369 சொற்கள்உள்ளன.
அந்த மூன்று வார்த்தைகள்:
இந்திய அரசியல் சாசனத்திற்கு முகவுரை வழங்கியவர், ஜவஹர்லால் நேரு. இதுஅரசியல் சாசனத்தின் நோக்கங்களை, தெளிவாக விளக்குகிறது. முகவுரை "இந்தியஅரசியலமைப்பின் திறவுகோல்' மற்றும் "அரசியலமைப்பின் இதயம்' எனபோற்றப்படுகிறது. முகவுரை இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமேதிருத்தப்பட்டது. 1976ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 42வது சட்டத் திருத்தத்தின்படி, "சமதர்மம்',"மதச்சார்பின்மை', "ஒருமைப்பாடு' என்ற மூன்று வார்த்தைகள் முகவுரையில் சேர்க்கப்பட்டன.
தேசிய கீதம் - சில சுவாரஸ்யங்கள்:
121 கோடி இந்திய மக்களின் தேசிய கீதம், ''ஜன கன மன' பாடல். ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய இந்தப் பாடல், முதன்முதலில் 1911 டிச.27 அன்று கோல்கட்டா காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.தற்போது நூற்றாண்டுகளை கடந்து அனைவரதுஉணர்விலும் கலந்துள்ளது.இப்பாடல் 1950 ஜன.24ல் தேசிய கீதமாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதை 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும். தேசிய கீதம், வங்க மொழியில் 'பாரத விதாதா', ஆங்கிலத்தில் 'தி மார்னிங் சாங் ஆஃப் இந்தியா' என அழைக்கப்படுகிறது.இந்தியத் தாயைவாழ்த்துவது போல இப்பாடல் அமைந்திருக்கும்.
ரவீந்திரநாத் தாகூர், இலக்கியத்துக்கான நோபல் பரிசுபெற்றவர். இவரே இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், வங்கதேசத்துக்கான தேசிய கீதத்தையும் இயற்றினார்.இருநாட்டுக்கு தேசிய கீதம் எழுதிய பெருமை, தாகூரைமட்டுமே சேரும். தேசியகீதம் இசைக்கப்படும் போது, அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். பெற்ற தாய்க்கு
கொடுக்கப்படும் மரியாதை,தேசிய கீதத்தை பாடும் போது இந்தியத் தாய்க்கு கொடுக்கப்படுகிறது.


முதல் குடியரசு தினம் எப்படி கொண்டாடப்பட்டது:
ராஷ்டிரபதி பவனில் உள்ள டர்பர் ஹாலில், 1950 ஜன., 26ம் தேதி காலை 10:18 மணிக்குஇந்தியா, குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அடுத்த 6நிமிடங்களுக்குப்பின், நாட்டின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் ராஜேந்திர பிரசாத், பதவியேற்றார். இவ்விழாவின் போது, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், நாட்டின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, குடியரசு மற்றும் அரசியலமைப்பு பற்றிய அறிக்கையை வாசித்தார்.பின் 10:30 மணிக்கு 21 குண்டுகள் முழங்க, நாடு குடியரசு அடைந்ததை, ஜனாதிபதி நாட்டு மக்களுக்குஅறிவித்தார்; தேசியக்கொடியையும் பறக்கவிட்டார். பின் ஜனாதிபதி குடியரசு தின உரை நிகழ்த்தினார். முதலில் இந்தியிலும், பின் ஆங்கிலத்திலும் பேசினார்.பின் மதியம் 2:30 மணியளவில் ராஷ்டிரபதி பவனில் இருந்து திறந்த வாகனத்தில் (தற்போதுபோன்று எவ்வித பாதுகாப்பும் இன்றி) இர்வின் மைதானத்துக்கு சென்றார். வழி நெடுக தேசியக்கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. மக்கள் 'ஜெய்' என
கோஷமிட்டனர். பின் இர்வின் மைதானத்தில் நடந்த அணிவகுப்பில் முப்படையினர் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் 3,000 அதிகாரிகள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். வெளிநாட்டு விருந்தினராக இந்தோனேசிய ஜனாதிபதி சுகர்ணோ அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சிகள் மாலை 3:45 மணிக்கு முடிந்தன.முதல் 4 குடியரசு தின (ராணுவ அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள்) நிகழ்ச்சிகள் வவெ?வேறு இடங்களில் (1950ல் இர்வின் மைதானம், 1951ல் கிங்ஸ்வாய், 1952ல் செங்கோட்டை, 1953ல் ராம்லீலா மைதானம்) நடந்தது. இதன் பின் 1955ம் ஆண்டில் இருந்து, தற்போது கொண்டாடப்படும் ராஜ்பாத்தில் அணிவகுப்பு நடக்கிறது.
யார் அதிகம் :
அதிக முறை, குடியரசு தின விழாவில்பங்கேற்ற ஜனாதிபதி என்ற பெருமையை ராஜேந்திர பிரசாத் பெறுகிறார். இவர் 13 குடியரசு தின விழாக்களுக்கு தலைமை வகித்துள்ளார்.
யார் குறைவு:
நாட்டின், 3வது ஜனாதிபதியாக இருந்த ஜாகிர் உசேன், குறைந்த பட்சமாக 2 குடியரசு தின விழாக்களுக்கு மட்டுமே தலைமை வகித்தார். காரணம் பதவியில் இருக்கும் போதே மறைந்தார்.
 ஜன.,26 ஏன்?
1930, ஜன., 26ல், லாகூரில் நடைபெற்றஇந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்,
இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றே தீர்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதன் நினைவாகவே, ஜன., 26ம் தேதியை, இந்திய குடியரசு தினமாக, அரசியல் நிர்ணய சபை முடிவு செய்தது.
சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்றவர்கள்
*அம்பேத்கர்
*கோபால்சாமி ஐயங்கார்
*அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
*கே.எம்.முன்ஷி
*சையது முகமது சாதுல்லா
*மாதவராவ்
* டி.பி.கைதான


குடியரசு தினம் பிறந்தது எப்படி?

இந்தியா சுதந்திரம் பெற்றது 1947, ஆகஸ்ட் 15 என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பே இந்தியா 'சுதந்திர தினம்' கொண்டாடியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
1930 ஆம் ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதி அன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என காந்தியடிகள் வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள்தான் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
காந்தியடிகள் அப்படி அறிவித்ததன் பின்னணி என்ன?
1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், 'பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை செயல்படுத்துவதற்கான போராட்டம் குறித்து காந்திஜியே முடிவுசெய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அந்தக் காலகட்டத்தில் நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவியது. வறுமை மக்களை வாட்டி எடுத்துக்கொண்டிருந்தாலும் சுதந்திர எழுச்சியும் கனன்றுகொண்டிருந்தது. அதன் விளைவாகப் பல வன்முறைப் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் மீண்டும் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினால் அது மேலும் வன்முறைக்கே வழிவகுக்கும் என்பதை காந்திஜி உணர்ந்தார்.
ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதற்கான வழிகள் குறித்து அவர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.
அதன் முதல் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அன்றைய தினம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதிமொழியின் வாசகம் இதுதான்:
"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."
சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள்தான் ஜனவரி 26. சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளைக் குடியரசு தினமாக, அதாவது மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட 26 நவம்பர் 1949இல் நேரு அமைச்சரவை முடிவு செய்தது. 1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக