திங்கள், 15 ஜனவரி, 2018

திருவள்ளுவர் தினம் ஜனவரி 15.



திருவள்ளுவர் தினம் ஜனவரி 15.

திருவள்ளுவர் தினம் வந்தது எப்போது?

திருவள்ளுவர். திருக்குறளை எழுதி தமிழுக்கு பெருமை சேர்த்தவர். அவர் எப்போது பிறந்தார் என்பது குறித்து பல் வேறுபட்ட கருத்துக்கள் நிலவிவருகின்றன.
அணுவைத் துளைத்து அதில் ஏழ் கடலைப் புகுத்தி குறுகத்தரித்த குறள் என்ற பெருமை கொண்டது திருக்குறள்.
திருக்குறள் தந்த திருவள்ளுவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15-ம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவள்ளுவராண்டு எப்போது துவங்கியது, திருவள்ளுவர் எப்போது பிறந்தார் உள்ளிட்ட தகவல்களை தருகிறார் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர்க.சுப்ரமணியம்.
தமிழாண்டு:
காலம், மிகவும் இன்றியமையாதது. வள்ளுவர் காலம் அறிதல் என்று ஒரு அதிகாரமே வரைந்துள்ளார். இறந்த கால ம், நிகழ் காலம், வருங்காலம்எனப் பொதுவாகக் காலத்தை பிரிப்பர். முக்காலமும் உணர்ந்த ஞானி என்று அழைக்கப் பெறுவது அனைவரும் அறிந்த ஒரு தொடர். குடும்பம், ஊர், நகர்உலகம், சமுதாயம் பற்றிய நிகழ்வுகளைக் கணக்கிட காலம் இன்றியமையாத ஒன்று.
நமது முன்னோர் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை,ஊழி என வரையறை செய்துள்ளனர். 60 நாழிகை கொண்டது ஒரு நாள். நாளை வைகறை, காலை,நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் எனப் பிரித்தனர்.
ஆண்டை இளவேனில், முதுவேனில, கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறு பகுதிகாளாகப் பிரித்தனர். தொடர் ஆண்டுமுறை நம் நாட்டில் வழக்கத்தில்இல்லை.
60 ஆண்டுகளான பிரபவ முதல் அட்சய வரை இடையில் புகுந்த ஆண்டுகள். இவை தமிழாண்டுகள் இல்லை. ஆரிய முறை ஆண்டுகளாகும்.
திருவள்ளுவர் ஆண்டு:
பிரபவ ஆண்டு முறையில் தமிழ் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு அழிவும், இழிவும் உண்டானதை எண்ணிப் பார்த்து நுண்ணறிவுடையஅறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921-ம் ஆண்டு சென்னைரப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடிஆராய்ந்தனர்.
திருவள்ளுவர் இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் எனவும், அவர் பெயரில் தொடராண்டைப் பின்பற்றுவது சாலச் சிறந்தது என்றும்,அதையே தமிழாண்டு எனக் கொள்வது என்றும் முடிவுகட்டினர். இந்த முடிவை அனைத்து மக்களும் ஏற்றுக் கொண்டு பின்பற்றத் தொடங்கினர்.
மேற்கண்ட முடிவைச் செய்தவர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார். தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாண சுந்தரனார், தமிழ்க் காவலர் சுப்பிரமணிணியப்பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை. நாவலர் நா.மு. வெங்கடசாமி நாட்டார்., நாவலர் சோம சுந்தர பாரதியார். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் ஆவர்.
திருவள்ளுவர் ஆண்டின் முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமை ஏழும் - வழக்கில் உள்ளவை.
திருவள்ளுவரின் காலம் கி.மு. 31. ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. 2001+ 31 = 2032. இப்பொழுது திருவள்ளுவர் ஆண்டு2032 ஆகும்.
தைத் திங்களில் தான் உழவர்களின் விளை பொருள் களஞ்சியத்துக்கு வருகிறது. பொருளாதாரத் திட்டம் வகுக்கும் காலம் தை. கிராமத்தினர் - ஊர்ச்சொத்தை குத்தகைக்கு விடும் காலமும் தை திங்களே ஆகும்.
தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971 முதல் ஏற்று 1972 முதல் அரசிதழிலும் வெளியிட்டு - தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர்ஆண்டு பின்பற்றப் பெற்று வருகின்றது.
எனவே உலகிலுள்ள 10 கோடித் தமிழ் மக்களும் தமிழர் மானம் காத்திட திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்ற வேண்டும். கடிதங்கள், அழைப்பிதழ்கள்ஆவணங்கள் ஆகியவற்றில் திருவள்ளுவர் ஆண்டினையே பின்பற்ற வேண்டும்.
திருவள்ளுவர் தமிழ் மொழியில் குறளை எழுதியதாலும், தமிழரானதாலும் குறளையும் வள்ளுவரையும் ஏற்றுக் கொள்ளவும் பிற மொழியினர்தயங்குகின்றனர். ஆனால் அவருடைய பொதுமையை உணர வேண்டும். ஓரிடத்திலேனும், தமிழ் என்றோ, தமிழ் நாடு என்றோ,முவேந்தர் என்றோதிருக்குறளில் குறிப்பிடவில்லை.
அவர் கூறும் கருத்துக்கள் உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப் பெற்றுள்ளதால் - திருக்குறள் உலகமறை என்று மதிக்கப் பெறும் உயரியநூலாகும்.
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தினாற் போல சிறிய குறட்பாக்களில் பெரிய செய்திகள் அடங்கி உள்ளன.
60 ஆண்டு முறை பயனற்றது. -60 ஆண்டு முறையை ஆரியர் தமக்குள்ள செல்வாக்கால் தமிழரசரிடம் புகுத்தினர்.
இப்போது வழங்கும் பிரபவ - அட்சய ஆகிய வருடங்கள் சாலி வாகனன் என்பவரால் (கனிஷ்கர்களால்) கி.பி. 78-ல் ஏற்பட்டவை.
60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதாலும் மிகக் குறுகியதினாலும் வரலாற்று நூலுக்குப் பயன்பட்டது. பிரபவ என்றால் எந்தப் பிரபவஎன்று கூற முடியாததால் இந்த கால அளவு இன்மை பற்றித் தமிழுக்கு ஒரு குறையும் இல்லை.
வழக்கில் உள்ள 60 ஆண்டு முறை சரியில்லை. இதைப் பின்பற்றுவது மானக்கேடு என அறிஞர்களும் - பகுத்தறிவுப் பகலவன் பெரியாரும், பேரறிஞர்அண்ணாவும் கூறியுள்ளனர். எனவே தமிழப் பெருமக்கள் தை முதல் நாளைத் திருவள்ளுவர் பிறந்த நாள் என்றும் தை 2 ஆம் நாளைத் திருவள்ளுவர் நாளென்றும்கொண்டாடுக.


திருவள்ளுவர் தினத்தில் மயிலாப்பூர் ஆலயத்தில் திருவிழா..!

வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத வள்ளுவப் பெருந்தகையின் பிறந்த இடம் சென்னை மயிலாப்பூரில் உள்ளது. மயிலாப்பூர் சம்ஸ்கிருதக் கல்லூரிக்குப் பின்புறமாக உலகப் புகழ் பெற்ற வள்ளுவரின் அவதாரத்தலம் அவரது கோயிலாக அமைந்துள்ளது. வள்ளுவர், வாசுகி தம்பதியருக்கு தனித்த அழகிய சந்நிதியும் வள்ளுவர் தோன்றிய இலுப்பை மரத்தின் தண்டுப்பகுதியும் இங்கு அமைந்துள்ளது. உலகெங்கும் இருக்கும் தமிழ் ஆர்வலர்களின் போற்றுதலுக்குரிய தலமான திருவள்ளுவரின் ஆலயத்தில் வரும் ஜனவரி 15-ம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி பல சிறப்பு நிகழ்ச்சிகளும் அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற உள்ளன.

ஜனவரி 15-ம் தேதி திங்கள்கிழமை அன்று காலை 10 அளவில் கடவுள் வாழ்த்தும் போட்டிகளும் நடக்க உள்ளது. `வள்ளுவப்பெருந்தகை பெரிதும் வலியுறுத்துவது தனிமனித மேம்பாடா சமூக மேம்பாடா' என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றமும் நடைபெற உள்ளது. அன்றிரவு 7 மணி அளவில் வள்ளுவப்பெருமான், வாசுகி அம்மையார் சிறப்பு வீதி உலாவும் மேளதாளங்கள் முழங்க நடைபெற உள்ளது.
தமிழரின் தனிப்பெரும் தெய்வப் புலவரான பொய்யாமொழிப் புலவர் ஐயன் வள்ளுவரை அவரது தினத்தில் சென்று தரிசித்து பலன் பெறுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக