புதன், 26 செப்டம்பர், 2018

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த தினம் செப்டம்பர் 27.


தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த தினம் செப்டம்பர் 27.

சி. பா. ஆதித்தனார் (1905 - 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ்
நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார். எனினும், காந்தியின் தலைமையில்
இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார்.

இளமைக் காலம்
சொந்த ஊர் காயாமொழி ( திருச்செந்தூர் தாலுகா - தூத்துக்குடி மாவட்டம் )
ஆதித்தனாரின் தந்தையார் பெயர் சிவந்தி ஆதித்தர். தாயார் கனகம் அம்மையார். தந்தையார் ஒரு வழக்கறிஞர். மிகவும் வசதியான குடும்பம் அவர்களுடையது. தனது மகனையும் வழக்கறிஞராக ஆக்க விரும்பிய சிவந்தி ஆதித்தர், அவரை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு படிக்கும்போதே இதழியல் தொடர்பான பகுதி நேர வேலைகளைச் செய்துள்ளார். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள், செய்திகள் முதலியவற்றை எழுதிப் பணம் சம்பாதித்ததாக அவரே எழுதியுள்ளார்.
இலண்டனில் இருந்தபடியே
சுதேசமித்திரன் போன்ற தமிழ் நாட்டுப் பத்திரிகைகளுக்கும், வட இந்தியா,
தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் வெளிவந்த சில பத்திரிகைகளுக்கும் செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் அனுப்பியுள்ளார்.
1933 ஆம் ஆண்டில் இவரது திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் கோவிந்தம்மாள். பின்னர் சென்னை திரும்பிய அவர், பெரியாரின்
சுயமரியாதைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அக்காலத்தில் பெரியாரின் குடியரசுப் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். எனினும் தனது பிற்கால நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டும் நோக்கில் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கே வழக்கறிஞராகப் பணிபுரிந்து நல்ல வருமானம் பெற்றார். 1942 ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ் நாடு திரும்பினார்.
பத்திரிகைப் பணி
இவர் தொடங்கிய முதல் பத்திரிகை
தமிழன் என்னும் வார இதழ் ஆகும். 1942 ஆம் ஆண்டில் இதை அவர் தொடங்கினார். அதே ஆண்டிலேயே நவம்பர் மாதத்தில்,
தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழையும் அவர் தொடங்கினார். இது மதுரையில் இருந்து வெளிவந்தது. தனது இதழியல் முயற்சிகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்த அவர், மாலை மலர் என்னும் மாலைப் பத்திரிகையையும், ராணி என்னும் வார இதழையும் தொடங்கினார். 1947 ஆம் ஆண்டில் தினத்தாள் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து அதனைச்
சேலத்தில் இருந்து வெளியிட்டார். அடுத்த ஆண்டில், திருச்சி , சென்னை ஆகிய இடங்களிலிருந்து முறையே
தினத்தூது , தினத்தந்தி ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன.
தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்த ஆதித்தனார், அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள் வாசிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த மொழி நடையைத் தவிர்த்து, சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார். இதனால் பரந்த அளவில் தமிழ் நாட்டில் வாசிப்புப் பழக்கம் பரவ வழிவகுத்தார். அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில் கூட, செய்திகளை வாசிக்கும் போக்கு வளர இவரது இதழியல் முயற்சிகள் வழி வகுத்தன.
மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் கீழ்
ராணி முத்து என்னும் வெளியீட்டை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுத் தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய போக்கு ஒன்றிற்கு ஆதித்தனார் வித்திட்டார்.
சமூகவியல் நோக்கிலும், இவரது பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1947 ஆம் ஆண்டில் நாடு விடுதலை பெற்றபோது மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான சமகால அரசியல் அறிவை வளர்த்துக்கொள்வதில் இவரது இதழியல் முயற்சிகள் பெரும் பங்காற்றின.
அரசியலில் ஆதித்தனார்
இவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததுமே ”நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கினார். ஆதித்தனார் பல போராட்டங்களிலும் பங்குபெற்றுள்ளார். சில சமயங்களில் இதற்காகச் சிறை சென்றும் உள்ளார். 1947 முதல் 1953 ஆம் ஆண்டுவரை தமிழக மேலவை உறுப்பினராகவும், பின்னர் 1957 முதல் 1962 வரை தமிழ் நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1964 இல் அவர் மீண்டும் மேலவை உறுப்பினர் ஆனார். 1967 ஆம் ஆண்டு இவர் சட்டப் பேரவையின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1969ஆம் ஆண்டு இவர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இவருடைய அரசியல் சார்பு காலத்துக்குக் காலம் மாறியபடியே இருந்து வந்தது. நேதாஜி
சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தை ஆதரித்ததில் இருந்து,
இந்திய தேசிய காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், தனித் தமிழ்நாடு கோரிக்கை எனப் பல அரசியல் நிலைகளையும் அவர் எடுத்துள்ளார்.
மறைவு
இவர் தனது 76 ஆம் வயதில் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி காலமானார்.


தமிழ் இதழியல் முன்னோடி
தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவரும் தினத்தந்தி நாளிதழைத் தொடங்கியவருமான சி.பா.ஆதித்தனார் (Si.Ba.Adithanar) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி என்ற கிராமத்தில் பிறந்தார் (1905). தந்தை, வழக்கறிஞர். சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன் என்பது இவரது முழுப்பெயர். ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பக்கல்வியும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலைப் பட்ட படிப்பும் பயின்றார்.
*கல்லூரியில் படிக்கும்போது ‘தொழில் வெளியீட்டகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி, மெழுகுவர்த்தி செய்வது எப்படி?, தீப்பெட்டித் தயாரிப்பது எப்படி? ஊதுபத்தி தயார் செய்வது எப்படி? உள்ளிட்ட பல நூல்களை எழுதி வெளியிட்டார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
*‘சுதேசமித்ரன்’, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ மற்றும் லண்டனிலிருந்து வெளிவந்த ‘ஸ்பெக்டேட்டர்’ வார இதழ் ஆகியவற்றில் கட்டுரைகள் எழுதினார். இந்தியா திரும்பியவுடன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் சிங்கப்பூர் சென்று பணியாற்றினார்.
*1942-ல் தமிழகம் திரும்பினார். முதன்முதலில் ‘மதுரை முரசு’ என்ற வாரம் இருமுறை இதழையும், பின்னர் ‘தமிழன்’ என்ற வார இதழையும் தொடங்கினார். யாருக்கும் அஞ்சாமல் உண்மை செய்திகளை வெளியிட வேண்டும் என்ற கொள்கையுடையவர். இதனால் இவரது பத்திரிகையை ஆங்கில அரசு தடை செய்தும்கூட தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாதவர்.
*1942, நவம்பர் மாதம், மதுரையில் ‘தினத்தந்தி’ நாளிதழை வெளியிட்டார். தொடர்ந்து, ‘மாலை மலர்’ என்ற மாலைப் பத்திரிகையையும் ‘ராணி’ என்ற வார இதழையும் தொடங்கினார். 1947-ல் ‘தினத்தாள்’, ‘தினத்தூது’ ஆகிய பத்திரிகைகளையும் தொடங்கினார்.
*எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள், கருத்துப் படங்கள் உள்ளிட்ட உத்திகளைக் கையாண்டார். ‘ஒரு படம் ஆயிரம் சொல்லுக்குச் சமம்’ என்ற சீனப் பழமொழிக்கேற்ப தனது நாளிதழில் ஏராளமான படங்களுடன் செய்திகளை வெளியிட்டார்.
*அனைத்துவிதமான செய்திகளையும் வெளியிட்டு அனைவரும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும் நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்ளவும் உதவினார். மாதம் ஒரு நாவல் என்ற திட்டத்தின் கீழ் ‘ராணி முத்து’ என்ற இதழை ஆரம்பித்தார்.
*காகிதம் கிடைக்காத காலத்தில் தொழிலாளர்களுடன் சேர்ந்து காகிதக் கூழ் காய்ச்சி, அதைக் காகிதமாக மாற்ற கடுமையாக உழைத்தார். மாணவர்களுக்கு என ‘வெற்றி நிச்சயம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி கல்வியை வளர்த்தார்.
*தமிழரசுக் கட்சி, நாம் தமிழர் இயக்கங்களைத் தொடங்கி தமிழ் மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். 1942 முதல் 1953 வரை தமிழக சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், 1957 முதல் 1962 வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1967-ல் சபாநாயகராகவும், 1969-ல் தமிழக அமைச்சரவையில் கூட்டுறவு மற்றும் விவசாய அமைச்சராகவும் பணியாற்றினார்.
*‘இதழாளர் கையேடு’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்நூல் இதழாளர்களுக்கு இன்றும் பயன்படும் நூலாக விளங்குகிறது. ‘தமிழ்ப் பேரரசு’ என்ற நூலும் எழுதியுள்ளார். இவரது பெயரில் இரண்டு தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்ப் பத்திரிகை உலகில் புரட்சிக்கு வித்திட்ட சி.பா.ஆதித்தனார், 1981-ம் ஆண்டு 76-வது வயதில் மறைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக