புதன், 15 ஜனவரி, 2020

பொங்கல் - தமிழர்களின் தனிப்பெரும் திருநாள்




பொங்கல் - தமிழர்களின் தனிப்பெரும் திருநாள்

#பண்டைய நாள் முதல்
#போகிப் பண்டிகை
#தைப் பொங்கல்
#மாட்டுப் பொங்கல்
#காணும் பொங்கல்

திருநாளின் நோக்கம்
அறிமுகம்
தமிழர்கள் பல விழாக்களைக் கொண்டாடினாலும், தை முதல் நாளன்று கொண்டாடப்படும் தைப் பொங்கல்தான், தமிழர்களின் தனிப்பெரும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழர்களின் பாரம்பரிய, பண்பாட்டு விழாவாகும். தமிழர்கள், நன்றி செலுத்துவதில் தன்னிகரற்றவர்கள். உழைப்பாளிகளாகிய அவர்கள் இயற்கைக்கும், பிற உயிர்களுக்கும் நன்றி செலுத்துவதற்காக வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

பண்டைய நாள் முதல்
தமிழர்கள், தோன்றிய காலம் முதல், இயற்கையை வழிபட்டு, வணங்கி தாங்கள் வாழ்வதற்கு வளங்களைக் கொடுப்பதால் மகிழ்ச்சியுடன் தைப் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். சங்க காலத்திலேயே, பொங்கல் நோன்பு இருந்ததற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. சங்க காலத்தில், விவசாயமே, மக்களின் தொழிலாக இருந்தது. மண்ணை நம்பியே மக்களுக்கு மும்மாரி மழை தேவை. மழை பெய்தால், பயிர் செழிக்கும். நாடு கொழிக்கும். இதனை மனதில் வைத்துத்தான், தை நோன்பை சங்ககாலப் பெண்கள் கடைபிடித்தார்கள். மார்கழியில் தொடங்கிய நோன்பை, தை முதல் நாள் முடிப்பார்கள். தங்கள் பயிர் செழிக்க உதவிய பகலவனுக்கும், மண்ணுக்கும் (பூமிக்கும்), உழுத கால்நடைகளுக்கும், பால் வழங்கிய பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அனைத்தையும் சுத்தப்படுத்தி, அலங்கரித்து புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர். பொங்கல் திருநாள், வேளாண்மையைத் தொடர்புபடுத்தியே நடத்தப்படுகிறது.

"மணிமேகலை" காப்பியத்தில், இந்திர விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்ட அக்காலத்தில், காவிரி பூம்பட்டினத்தில், மன்னர்கள், மக்களுக்கு முரசறைந்து, பொங்கல் விழா வரவிருப்பதை அறிவிப்பார்கள். அக்காலத்தில் பொங்கல் விழா 28 நாட்கள் வரை நடந்திருக்கிறது. அதாவது 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதற்கு ஏற்ப, ஏறக்குறைய தை மாதம் முழுவதும் கொண்டாடியிருக்கிறார்கள்.

இப்போது போகி, அன்று, பழையனவற்றைக் கழித்து, வீட்டை, தெருவைச் சுத்தப்படுத்துவது போல, அப்போதும் செய்திருக்கின்றனர். அவர்கள் செய்ததைத்தான் காலங்காலமாக கடைப்பிடித்து வருகிறோம். வீதிகளைச் சுத்தப்படுத்தி, புதுமணல் பரப்புவர்.

காவல் தெய்வம், இஷ்டதெய்வம், ஊரின் பொது தெய்வம் என அனைத்துத் தெய்வங்களுக்கும் பூஜைகள் செய்தனர். மழைக்கு உரிய தெய்வம் இந்திரன். இந்திர வழிபாட்டால், மாதம் மும்மாரி பொழியும் என்று நம்பினர். உலக உயிருக்கு ஒளி கொடுத்து, ஆதார சுருதியாக இருக்கும் சூரியனை வணங்கி, கொண்டாட்டத்தைத் தொடங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதோடு வாழ்வின் நோக்கம் & மக்களின் பசி, நோய் நீங்க வேண்டும். பகைமை மறைய வேண்டும். உறவுகள் மலர வேண்டும் என்பதுதான்.

ஆடிப்பட்டம் தேடி விதைத்து ஐப்பசியில் மழை பொழிய, உழைப்பால் விளைவித்த நெல்லை மார்கழியில் சேகரித்து, தங்கள் உழைப்பின் பயனை நுகரும் நாளே, தைத் திருநாள். புறநானூறு, ஐந்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, கலித் தொகையில், 'தை'க்கு சிறப்பு தெரிவித்து பாடல்கள் உள்ளன. பொங்கல் திருநாள் தற்போது நான்கு நாள் பண்டிகையாக, தமிழர்கள் உலகில் வாழும் பகுதிகளில் எல்லாம் கொண்டாடப்படுகிறது.

போகிப் பண்டிகை
'பழையன கழிதலும், புதியன புகுதலும்' தமிழரின் மரபு. மார்கழி மாதத்தின் இறுதி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுகிறார்கள். அந்நாளில் வீட்டில் உள்ள பழைய பொருட்-களைக் கழித்து, வீட்டை சுத்தமாகத் துடைத்து, வர்ணம் தீட்டி, புதுப் பொலிவோடு மாற்றுவார்கள். இப்படிச் செய்யும் மாற்றம், வாழ்வில் ஏற்றம் தரும் என்பது நம்பிக்கை. இதில் பழைய பொருட்களை, தேவையற்றவைகளை தீயிட்டுக் கொளுத்துவது சேர்ந்துவிட்டது. இது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்று வலியுறுத்தப்படுவதால் 'போகி கொளுத்துவது' கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

இது ஆரோக்கியமான விஷயம். இப்போது 'தூய்மை இந்தியா' நாடெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்நாளிலேயே 'தூய்மை இல்லத்தை தொடங்கி வைத்தவர்கள், அதற்காக ஒரு விழாவினைக் கொண்டாடுபவர்கள் தமிழர்கள் என்பது பெருமைதானே!

தைப் பொங்கல்
தை முதல் நாளில், அதிகாலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, சூரியனை வழிபட்டு வாசலில் கோலமிட்டு, புதுப்பானை வைத்து, புது அரிசியிட்டு, பொங்க வைப்பார்கள். தலைவாழையிலையில், நிறைகுடம் வைத்து, விளக்கேற்றுவர். சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைக்கும் வழக்கமும் உண்டு. கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கறிகள், பழங்கள் வைத்து வீட்டில் உள்ள அனைவரும் கூடி நின்று, 'பொங்கலோ... பொங்கல்' என முழக்கம் இடுவர். பின்னர் பொங்கலை எடுத்து சூரியனுக்குப் படைத்து, உற்றார், உறவினர், சுற்றத்தாருக்குக் கொடுத்து, அதன்பின்னே குடும்பத்தார் உண்பார்கள். 'மகிழ்வித்து மகிழ்' என்னும் தமிழனின் பண்பாட்டை வெளிப்படுத்தும் நிகழ்வு இது.

மாட்டுப் பொங்கல்
தமிழனின் உழவுக்கும், தொழிலுக்கும் உறுதுணையாக இருப்பது ஆவினங்களே, அந்த ஆவினங்களுக்கு நன்றி கூறும் திருநாளாக இது கொண்டாடப்படுகிறது. அதோடு பண்டைய தமிழனின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டும் அன்று நடைபெறும். கால்நடைகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, அலங்கரித்து, அவைகளுக்கு பொங்கலிட்டு, 'பட்டி பெருக, பால் பானை பொங்க, நோவும், பிணியும் தொழுவோடு போக' என்று முழக்கமிட்டு, மாடு, பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர். கிராமத்து வீதிகளில் ஜல், ஜல், சலங்கை ஒலிகளோடு, மாடுகள் உலா வருவது, மகிழ்ச்சியையும், எழுச்சியையும் கொடுக்கும். பிற உயிரையும், தன் உயிராக நினைக்கும், உயர், தமிழர் பண்பாடே மாட்டுப் பொங்கல்.

காணும் பொங்கல்
மனிதனை சமூக விலங்கு என்பர். காரணம், மனிதனும் கூடி வாழ்பவன்தான்-. கூடி வாழ்ந்தால், கோடி நன்மை என்பதைப் புரிந்து கொண்டவர்கள் தமிழர்கள். உற்றார், உறவினர்களை, காணும் பொங்கலன்று, கண்டு, பரிசளித்து மகிழ்வர். அதோடு குடும்பத்தார், சுற்றத்தார் புடை சூழ நகரை வலம் வருதலும் காணும் பொங்கலன்று நடக்கும் உன்னத நிகழ்ச்சியாகும். வீட்டை விட்டே வெளியே செல்லாதவர்கள் கூட, காணும் பொங்கலன்று வெளியே வந்து, வெளியுலக மகிழ்ச்சியை அனுபவிப்பர்.

திருநாளின் நோக்கம்
பொங்கல். இது ஒரு தமிழர் இனத் திருவிழா. சாதி, சமயம் மற்றும் பல வேறுபாடுகளை மறந்து, கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்த குடியின் அடையாள, பண்பாட்டு விழாவாக பொங்கல் திகழ்கிறது. உழைப்பின் மகிமையை ஊருக்கு, உலகுக்கு சொல்லும் விழா, பொங்கல் விழா, இது இயற்கையோடு இயைந்த மூத்த குடியின் திருநாள். இத்தகைய பொங்கல் விழாவினை ஏன் கொண்டாடுகிறோம் என்பதனை கவிஞர் வாணிதாசன், தனது கவிதையில் மிக அழகாகக் குறிப்பிடுகிறார். மண்ணிடை விரிந்த வானிடைச் சூழ்ந்த மழைக் களிர் வாடையை வீழ்த்தி விண்ணிடை எழுந்த புதுக்கதிர் கண்டோம் வெளியெலாம் விளைவினைக் கண்டோம்! பண்ணிடைக் கலந்த தமிழ்ச் சுவை போல மனத்திடைப் பரந்ததே இன்பம்! கண்ணிடை மகிழ்ச்சி கருத்திடைத் தெளிவு கண்டனம் வாழ்த்துவோம் பொங்கல்என! மனிதன் உயிர் வாழ உணவு தேவை. நமது முக்கியமான உணவுப் பொருள் அரிசி. இதனை விளைவித்து, அறுவடை செய்து, வையத்து உயிருக்கெல்லாம் சோறிடும், அறுவடைத் திருநாளான பொங்கல் விழா போற்றத் தகுந்ததல்லவா! பொங்கல் நன்றி தெரிவிக்கும் விழா, மேற்கு நாடுகளிலும், நமது பொங்கல் போன்றே, நன்றியைத் தெரிவிப்பதற்காக ஒரு விழா, கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில், தை முதல் நாளைப் போன்று (ஜனவரி 14, 15 வாக்கில்) சங்கராந்தி கொண்டாடுகிறார்கள். சூரியன், தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் நுழைந்து, உத்தரயானத்தில் சஞ்சரிக்கும் காலம் தொடங்கிறது. இதுவே மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.

உலகெங்கிலும் மக்கள் விழாக்களைக் கொண்டாடுவதன் நோக்கம். இயந்திர கதியிலான தங்கள் இயல்பு வாழ்க்கையில் சோர்வு நீங்கி, சுறுசுறுப்படைவதற்காகத்தான். தேக்கமான வாழ்க்கைக்கு வடிகாலாக இருப்பவைகளே விழாக்கள். விழாக்கள் கொண்டாடப்படுவதன் மூலம், புத்துணர்வும், புது எழுச்சியும், புதிய நம்பிக்கையும் பிறக்கிறது. காலைக் கதிரவன் அன்றைய நாளின், நம்பிக்கையின் அடையாளம். விழாக்கள், வாழ்க்கை வாழ்வதற்கே என்ற மகிழ்ச்சியின் அடையாளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக