திங்கள், 14 செப்டம்பர், 2009

பகுத்தறிவு பகலவன்...

பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. ராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்[1]. இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக்கராணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையே, அந்த மூடநம்பிக்கைக்கு காரணமாக இருப்பது கடவுள் நம்பிக்கை, கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமைவாயந்த திராவிடர்களை பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் பெரியார் எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காக செய்த புரட்சிகரமான செயலகள், மண்டிகிடந்த சாதிய வேறுபாடுகளை குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு பெரியார் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளார். இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் "புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்மற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பலத் தாக்கங்களை ஏற்படுத்தியவை.


இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.ராமசாமி நாயக்கர், தந்தை பெரியார் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார்.

இளமைக் காலம்

பெரியார் செப்டம்பர் 17, 1879, ஈரோடு வெங்கட்ட ராமசாமி நாயக்கர் எனும் இயர் பெயர் கொண்டவராய் தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார் இவரின் தந்தை வெங்கட்ட (நாயக்கர்) மிக வசதியான வணிக பின்னணியை கொண்டவர். இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்ன தாயம்மாள் ஆவார். இவரின் உடன் பிறந்தோர் தமையனரான கிருஷ்ணசாமி, தமக்கைகள் கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி ஆவார்கள். பின்னாளில் இவர் தந்தை பெரியார் [4]என மரியாதையுடன் தமிழர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். 1929, இல் பெரியார் சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில், தன் பெயரின் பின் வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்கு பின்னாள் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார். பெரியார் மூன்று திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவராவார். அவரின் தாய்மொழி கன்னடம் ஆகும். பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை, ஐந்து வருடங்கள் மட்டுமே கல்வி பயின்றார். அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தந்தையின் வணிகத்தொழிலை 12 ஆம் வயது முதல் மேற்கொண்டார். தன்தந்தையின் விருந்தோம்பலில் திளைத்திருந்த வைணவப் ப்ண்டிதரின் உபதேசங்களை கேட்கும்படி தன்தந்தையால் பெரியார் பணிக்கப்பட்டிருந்தார். அதன்படி அப்பண்டிதர் அளிக்கும் உபதேசங்களை மிக ஆர்வமுடனும், அவரின் இந்து புராண இலக்கிய உபதேசங்களில், புராணக் கதைகளில் எழுந்த சந்தேகந்தங்களையும் துடுக்குடன் அவ்விளவயதிலேயே வினவினார். அன்று எழுந்த கருத்து வேற்றுமைகளே பின்னாளில் இந்து ஆரிய எதிர்ப்புக் கோட்பாடுகளை மேற்கொள்ள வழிகோலின. பெரியார் வளரும்பொழுதே சமயம் என்பது அப்பாவி மக்களின் மீது வஞ்சகத்துடன், அவர்களை சுரண்டுவதற்காக போற்றபட்ட போர்வையாக போர்த்தப்பட்டுள்ளதை களையவேண்டுவது தனது தலையாய கடமை என்ற எண்ணத்தையும், மூடநம்பிக்கைகளிலிருந்தும், சமயகுருமார்களிடமிருந்தும்  இம்மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார்.

பெரியாரின் 19 வது வயதில் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம் சிறு வயது முதல் நேசித்த, 13 வயது நாகம்மையாரை மணந்து கொண்டார். நாகம்மையார் தன் கணவரின் புரட்சிகரமான செயல்களுக்கு தன்னை முழுவதுமாக ஆட்படுத்திக்கொண்டார். இருவரும் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபடலானார்கள். திருமணமான இரு வருடங்கள் பெண் மகவை ஈன்றெடுத்தார், அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்தது. அதன் பிறகு அவர்களுக்கு பிள்ளைப் பேறு இல்லை.

காசி யாத்திரை


1904 இல் பெரியார் இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் காசிக்கு யாத்திரிகராக காசிவிசுவநாதரை தரிசிக்க சென்றார், அங்கு நடக்கும் மனிதாபிமனமற்ற செயல்கள், பிச்சை எடுத்தல், கங்கை ஆற்றில் மிதக்கவிடப்படும் பிணங்கள்  போன்ற அவலங்களையும், பிராமணர்களின் சுரண்டல்களையும் கண்ணுற்றவரானார். இதனிடையே காசியில் நடந்த ஒரு நிகழ்வு அவரின் எதிரிகால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. பிரமாணரல்லதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் யாத்திரிகர் அன்னசத்திரத்தில் பெரியாருக்கு பிரமணரல்லாதார் என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டது. இந்நிலைகண்டு மிகவும் வருத்தவமுற்றவரானார் இருப்பினும் பசியின் கொடுமை தாளமாட்டாமல் பிரமாணர் போல் பூணூல் அணிந்து வலிந்து தன்னை ஒரு பிராமணர் என்று கூறிஉள்நுழையமுயன்றார். ஆனால் அவர்மீசை அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது. பிராமணர் யாரும் இந்து சாத்திரத்தின்படி இவ்வளவு பெரிய மீசை வைத்திருப்பதில்லை என்று கோயில் காவலாளியால் வலிந்து தள்ளப்பட்டு வீதியில் விழுந்தார். பசித்தாளமால் வீதியின் குப்பைத்தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவுகளை வேறுவழியில்லாமல் உண்டு பசியைப் போக்கிகொண்டார். பிரமணரால்லாதார் கட்டிய அன்னசத்திரத்தில் பிரமணரல்லாதாருக்கு உணவு வழங்க பிரமணர்களால் மறுக்கப்படுகின்றதே என்ற நிலைமையை எண்ணி வருந்தினார். இந்து சமயத்தின் வேற்றுமை காணும் (வர்க்கபேத) உணர்வினை எதிர்க்கும் நோக்கத்தை அன்றே புனிதமான காசியில் தன்மனதில் இருத்திக்கொண்டார். அதன் விளைவாக அதுவரை இறைப்பற்றுள்ளவாரக இருந்த பெரியார் காசி யாத்திரைக்குப் பின் தன்னை ஒரு இறைமறுப்பாளராக (நாத்திகராக) மாற்றிக்கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் (1919-1925)

பெரியார் 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இணைவதற்கு முன் தான் வகித்து வந்த அனைத்து பொதுப்பதவிகளையும் விட்டு விலகினார். அவர் வகித்து வந்த முக்கியப் பதவிகளான ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியை துறந்தது மட்டுமில்லாது, தன்னை முழுமனத்துடன் காங்கிரசு பேரியக்கத்துக்காக ஒப்படைத்துக் கொண்டார். காந்தியின் கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டதுமட்டுமில்லாமல், பிறரையும் உடுத்தும்படி செய்தார், கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார், வெளிநாட்டுத் துணைவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார். தீண்டாமை அடியொடு ஒழித்தார். 1921 இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக பெரியார் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனைப் பெற்றார். அம்மறியலில் அவரும் அவர் துணைவி நாகம்மையார் மற்றும் அவர் தமக்கையார் கலந்து கொண்டனர். இதன் பலனாக அன்றைய ஆங்கில அரசு நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் செய்ததினால் கைது செய்யபட்டார். 1922 இல் பெரியார் சென்னை இராசதானியின் (மதராஸ் இராஜதானி) காங்கிரஸ் கட்சித் தலைவராக (தற்பொழுது -தமிழநாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் என்று பெயர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் திருப்பூர் கூட்ட கூட்டத்தில் அரசு பணிகளில், கல்வியில் இடஒதுக்கீட்டை அமல் படுத்த, காங்கிரஸ் கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத்தீவிரமாக முன்னிருத்தினார். அவரின் முயற்சி அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களின் வர்க்கபேத மற்றும் வேற்றுமை கொண்டு பிறசாதியினரை (இனவேற்றுமை) பார்க்கும் தன்மையால் தோல்வியுற்றுது. அதனால் 1925 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

வைக்கம் போராட்டம் (1924-1925)

கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகரில் பின்னாளில் திருவாங்கூர் என்று மாற்றப்பட்ட நகரில் உள்ள கோயில்களில் தீண்டாமை கொடுமை நிலவியது. கோயில்களில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்கள் நுழையத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. கோயில் இருக்கும் விதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்த்து. 1924 இல் சாதி எதிர்ப்புகள் வலுத்திருந்த சமயமாதலால் சாதி எதிர்ப்பு (சத்தியாகிரகம்) போராட்டம்.காந்திய வழியில் நடத்த வைக்கம் சிறந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏப்ரல் 14 அன்று பெரியார் அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட்டத்தில் ஒன்றாக கலந்து கோண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டனர். காந்தியின் அறிவுறுத்தலின் படி இப் போராட்டத்தில் கேரளாவைச் சாரதாவர்கள், இந்து சமயம் சாராதவரகள் கலந்து கொள்ளவில்லை. பெரியார் கைது செய்யபட்ட போதிலும் பெரியாரின் தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் இச்சட்டம் விலக்கிகொள்ளப்பட்டது. அதுமுதல் பெரியார் வைக்கம் வீரர் என தமிழ் மக்களால் அழைக்கப்படலானார். பல சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட பெரியாருக்கு கிடைக்காத பெயரும், புகழும் இப்போராட்டத்தின் மூலம் கிடத்தது சற்று மிகைப்படுத்தப்பட்டதாகவே அறிஞர்கள் கருதுகின்றனர் .

சுயமரியாதை இயக்கம்

பெரியார் மற்றும் அவரின் தொண்டர்கள் தொடர்ந்து நெடுங்காலமாக அரசாங்கத்தினரிடம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்க கோரி முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பல்ர் இந்தியாவின் விடுதலைக்காக போராடிவந்தபொழுதிலும் இவர்கள் சமூக விடுதலைக்காகப் போராடி வந்தனர். சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்தில் பிரமணரல்லாதோர் தாம் பழம்பெரும் திராவிடர்கள். என்றப் பெருமையுடன் வாழவும், அதை உணரவும், நாம் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டவும் உருவாக்கப்பட்டது. சுயமரியாரியாதை இயக்கம் 1925 இல் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கை பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திக்குரிய மூடபழவழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதை தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையினிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன. பகுத்தறிவு சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின. பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாக பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது.

• சுயமரியாதையாளர்கள் பிரமாணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர்[18].

• ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது.

• கலப்புத் திருமணமுறையையும், கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.

• அளவில்லா குழந்தைகள் பெறுவதை தடுத்து குடும்ப கட்டுபாட்டை 1920 களிலேயே இதை வலியுறுத்தியது[.

• கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும் (பெண்களை கோயில் தாசிகளாக, பொது மகளிராக ஆக்கி அடிமைப்படுத்தும் முறை), குழந்தை திருமணத்தையும் தடை செய்தது.

• இதனினும் முக்கிய கொள்கையாக அரசு நிருவாகப் பணி, கல்வி இவற்றில் இடவொதுக்கீடு முறையை கடைப்பிடிக்க மதராஸ் அரசு நிருவாகத்தை (தமிழ்நாடு உட்பட) 1928[18] லேயே வலியுறுத்தியது.

இந்த பரப்புரை மற்றும் தத்துவங்கள் முழுநேர செயல்பாடுகளாக பெரியார் 1925 இலிருந்து செயல்படுத்தி வந்தார். இதை பரப்புவதற்கு ஏதுவாக குடியரசு நாளிதழை 1925 முதல் துவக்கி அதுமுதல் பரப்பி வந்தார். ஆங்கிலத்தில் ரிவோல்ட் என்ற நாளிதழ் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காக பிரசாரம் செய்தார். சுயமரியாதை இயக்கம் வெகு வேகமாக மக்களிடையை வளர்ந்தது. மக்களின் ஆதரவையும் நீதிக்கட்சித் தலைவர்களின் மூலமாகப் பெற்றது. 1929 இல் சுயமரியாதையாளர்கள் மாநாட்டை பட்டுக்கோட்டையில் எஸ்.குருசாமி மேற்பார்வையில் மதராஸ் இராசதானி சார்பில் நடைபெற்றது. சுயமரியாதையாளர்களின் தலைமையை கே.வி.ஆழகிரிசாமி ஏற்றார். இம்மாநாட்டைத் தொடர்ந்து அன்றைய மதராஸ் இராசதானியின் பல மாவட்டங்களில் சுயமரியாதையாளர்களின் கூட்டங்கள் நடைபெற்றது. இதற்கான பயிற்சி பட்டறையாக, பயிற்சி களமாக ஈரோடு மாநகரம் செயல்பட்டது. இதன் நோக்கம் சமுதாய மறுமலர்ச்சிக்காக மட்டுமில்லாமல் சமுதாயப் புரட்சிக்காகவும், இதன் மூலம் விழிப்புணர்வு பெற்ற புதிய சமுதாயத்தை உருவாக்க வழி செய்தது .

வெளிநாடு சுற்றுப்பயணம் (1929-1932)

1929 இல் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேயாத் தமிழர்களின் அழைப்பை ஏற்று மனைவி நாகம்மாளுடன் கப்பலில் ஏறி மலேயாச் சென்றார் அங்கு சுமார் 50000 மக்களுக்கு மேற்பட்டுத் திரண்டு வரவேற்ற மக்களிடையே சுயமரியாதை கருத்துக்களை விளக்கிப் பேசினார். தைப்பிங், மலக்கா, கோலாலம்பூர், கங்கைப்பட்டாணி போன்ற இடங்களிலும் சென்று தமது கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். பின் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு டிசம்பர் 1931 இல் சக சுயமரியாதையாளர்களான எஸ்.ராமநாதன் மற்றும் ஈரோடு ராமுவுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். எகிப்து, கிரிஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு 3 மாதம் வரை பயணம் மேற்கொண்டார். இந்த பயணங்களின் முடிவில் இந்தியா திரும்பும் வழியில் இலங்கைக்கும் பயணம் செய்தபின், 1932 நவம்பர் 1 அன்று இந்தியாத் திரும்பினார். இச்சுற்றுபயணங்கள் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைளுக்கு மேலும் மெருகூட்டி அவற்றின் செயல்பாடுகளை மேலும் வலுவடையச் செய்தன. ரஷ்யாவின் பொதுவுடமைக் (கம்யூனிசம்) கொள்கை இவருடையக் கொள்கையை ஒத்ததாகவே இருந்தது. பலவிடங்களில் பெரியாரின் கருத்துக்கள் மார்க்சியத்தின் சமூகப் பொருளாதாரக் கருத்துக்களுடன் ஒத்துபோவதாக இருந்தது ஆனால் தனியார் முதலாளித்துவத்தை முற்றிலும் ஒழிப்பதில் உடன்பாடில்லை.பெரியார் திரும்பியதும் உடனே மார்க்சியத் தலைவர் எம்.சிங்காரவேலு செட்டியாருடன் சமூக அரசியல் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். இதன் மூலம் பெரியாரின் கொள்கை சோசலிசத்துடன் கூடிய சுயமரியாதைக் கொள்கையாக மாறிற்று. இதனால் தமிழகத்தில் பெரும் வளர்ச்சியையும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தையும் உருவாக்கிட இதுவே காரணமாயிற்று.

இந்தி எதிர்ப்பு

1937 இல் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில் இந்தி கட்டாய மொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தி எதிர்த்து போராட்டமாக வெடித்தது.  நீதிக்கட்சியின் தமிழ் தேசியவாதிகளான சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மற்றும் பெரியார் இப்போராட்டத்தினை முன்னின்று நடத்தினர். இப்போராட்டம் 1938 இல் பல்ர் கைது செய்யப்பட்டு சிறையில் இராஜாஜி அரசால் அடைக்கப்பட்டவுடன் முடிவுற்றது. அதே வருடம் தமிழ்நாடு தமிழருக்கே என்றே முழக்கமும் ஊரெங்கும் முழங்கியது . இதை முதன்முதலில் முழக்கமிட்டவர் பெரியார், பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து அவர் இவ்வாறு முழக்கமிட்டார். இது ஆரியர்கள், திராவிடர்களின் பண்பாடுகளை ஊடுருவிச் சிதைக்க திட்டமிடும், அபாயகரமான தந்திரச் செயல் என குறிப்பிட்டார்.இந்தியை ஏற்றுக்கொளவது இந்தி பேசும் வட இந்தியர்களிடமிருந்து, தமிழர்களை பிரித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வழிவகுத்துவிடும். இந்தி தமிழர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல், அவர்கள் நெடுங்காலமாக பாதுகாத்துவரும் பண்பாட்டையும் சிதைத்து விடும். தமிழை இனிமேல் பயன்படுத்த முடியாத நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுவிடுவார்கள் என்று பெரியார் வலியுறுத்தினார்.தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1948, 1952, மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் நடந்தன.

நீதிக்கட்சித் தலைவராக (1938-1944)

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற அரசியல் கட்சி 1916 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. பிராமணர்களுக்கு எதிராகவும், அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்திற்கு எதிராகவும் துவக்கப்பட்டது. இக்கட்சியே, பின்னாளில் நீதிக்கட்சி என பெயர்மாற்றம் பெற்றது. பிராமணர் அல்லாதவர்களின் சமூக நீதி காத்திடவும், அவர்களின் கல்வி, அரசு அதிகாரத்தில் பங்கெடுப்பு போன்றவற்றை வலியுறுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது. அக்கட்சி, பிரமணரல்லாதாரை அல்லது பார்ப்பனரால்லாதவர்களை ஒடுக்க, பிராமணர்கள் அல்லது பார்ப்பனர்கள் பின்பற்றி வந்த வர்ணாசிரம தத்துவத்தை முற்றிலும் எதிர்த்தது.

1937 இல் இந்தி கட்டாயப் பாடமாக மதராஸ் மாகாணப் பள்ளிகளில் அரசால் திணிக்கப்பட்டபோது, பெரியார் தனது எதிர்ப்பை நீதிக்கட்சியின் மூலம் வெளிப்படுத்தினார். 1937 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக திராவிட இயக்கத்திற்கு கணிசமான மாணவர்களின் ஆதரவு கிட்டியது. பின்னாட்களில் இந்தி எதிர்ப்பு தமிழக அரசியலில் பெரும் பங்கு வகித்தது. இந்தியை ஏற்றுக்கொள்வதால் தமிழர்கள் அடிமைப்படுவார்கள் என்ற காரணத்தால் முற்றிலும் எதிர்க்கப்பட்டது. நீதிக்கட்சிக்கு மிகுதியான மக்களாதரவு இல்லாததினால் மிகவும் நலிவடைந்திருந்தது. 1939 இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த பெரியார் விடுதலையானதும் அக்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார். அவரின் தலைமையில் கட்சி சிறப்புடன் வளர்ச்சி கண்டது. இருப்பினும், கட்சியின் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தமையால் பலர் பெரியாரின் தலைமையின் கீழ் ஈடுபட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினர் .

திராவிடர் கழகம் உருவாதல் 

1944 இல் நீதிக்கட்சித் தலைவராக பெரியார் முன்னின்று நடத்திய நீதிக்கடசிப் பேரணியில் திராவிடர் கழகம் எனப் பெரியாரால் பெயர் மாற்றப்பட்டு அன்று முதல் திராவிடர் கழகம் என அழைக்கப்பட்டது. இருப்பினும் பெரியார் நீதிக்கட்சியைத், திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றியதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து மாற்று அணியை, நீதிக்கட்சியின் நீண்ட அனுபவமுள்ளவரான, பி.டி. ராஜன், தலைமையில் துவக்கப்பட்டு 1957 வரை அம்மாற்று அணி செயல்பட்டது. திராவிடர் கழகத்தின் கொள்கை நகரமக்களிடமும், மாணவ சமுதாயத்தினரிடமும் வெகு விரைவாகப் பரவியது. இக்கட்சியின் கொள்கைகளும் இதன் சார்ந்த செய்திகளும் வெகு விரைவிலேயே கிராமத்தினரிடமும் பரவியது. பார்ப்பன புரோகிதர்களின் அடையாளங்களான இந்தி மற்றும் சமயச்சடங்குகள் தமிழ் பண்பாட்டுக்கு விரோதமானவை என அடையாளம் காணப்பட்டு விலக்கிவைக்கப்பட்டன. அவ்வடையாளங்களின் பாதுகாவலர்களாக விளங்கும் பார்ப்பனர்கள், இந்நிலையை எதிர்த்து வாய் மொழித் தாக்குதல்களை தொடுக்கலாயினர்  . 1949 முதல் திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்படலாயினர். திராவிடர் கழகம் தலித்களுக்கு எதிராக பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டனர். பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் இவைகளில் தனிக்கவனம் செலுத்தினர்.

அண்ணாதுரையுடன் கருத்து வேறுபாடு


1949 இல் பெரியாரின் தலைமைத் தளபதியான கஞ்சிவரம் நடராசன் அண்ணாதுரை பெரியாரிடமிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) (Dravidan Progressive Federation), என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார் இந்த பிரிவு பெரியார் மற்றும் அண்ணாதுரையிடம் நிலவிய இருவேறு கருத்துக்களே காரணம் என்க கூறப்படுகின்றது. பெரியார் திராவிடநாடு அல்லது தனித்மிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார் ஆனால் அண்ணாதுரை தில்லி அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியைப் பெறுவதில் அக்கரை காட்டினார். அவர்கள் கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பினர். பெரியார் தன்னுடைய கட்சியின் இலட்சியங்களாகவும், தனது இலட்சியங்களாகவும் முன்னிருத்திய சமுதாய மறுமலர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, முடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்றவற்றை அரசியல் காரணங்களுக்காக சிறிதும் விலகிநிற்க அல்லது விட்டு கொடுக்க அவர் விரும்பவில்லை. ஆகையால் பெரியார் தனது கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற விருப்பமில்லை என்பதை அவரின் கட்சியின் அதிருப்தியடைந்த தொண்டர்களிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்து அவர்களை சமாதானப்படுத்தினா. பெரியாரிடமிருந்து பிரிந்து போகும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள், ஜூலை 9, 1948 அன்று பெரியார், தன்னை விட 40 வயது இளையவரான மணியம்மையாரை மறுமணம் புரிந்த்தை காரணம் காட்டி கட்சியிலிருந்து அண்ணாதுரைத் தலைமையில் விலகினர் . அண்ணாதுரை விலகும் பொழுது தன்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கியத் தலைவனை வணங்கி கண்ணிர்விட்டு பிரிகின்றோம் என்று கூறிப் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்த காரணத்தினால் பெரியார் அவர்களின் திமுக கட்சியை கண்ணீர்துளி கட்சி என அதுமுதல் வர்ணிக்கலானார்.

இறுதி காலம்

1956 இல் சென்னை மெரினாவில் இந்து கடவுளான ராமரின் உருவப்பட்ம்எரிப்பு போராட்டத்தை பெரியாருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த பி.கக்கன் அவர்களால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பெரியார் அப்போராட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்[ 1958 இல் பெரியார் மற்றும் அவரது செயல்வீரர்கள் பெங்களூரில் நடைபெற்ற அனைத்திந்திய அலுவலக மொழி மாநாட்டில் கலந்துகொண்டனர். அம்மாநாட்டில் பெரியார் ஆங்கிலத்தை, இந்திக்கு மாற்றுதலான அலுவலக மொழியாக அரசாங்கத்திடம் வலியுறுத்திக் பெற்றுக்கொள்ள வலியுறுத்தினார். 1962 இல் பெரியார் தனது கட்சியான திராவிடர் கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக கி.வீரமணியை முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும் விதத்தில் நியமித்தார். ஐந்தாண்டுகளுக்குப்பிறகு பெரியார் வடஇந்தியா சுற்றுப்பயணம் மூலம் சாதியங்களை ஒழிக்கப் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரின் இறுதி கால நெருக்கத்தில் அவருக்கு யுனஸ்கோ விருது இந்திய கல்வி அமைச்சர் , திரிகுனா சென் அவர்களால் சென்னையில் (மதராசில்), ஜூன் 27, 1973 அன்று வழங்கப்பட்டது.

மறைவு

பெரியாரின் கடைசி கூட்டம் சென்னை, தியாகராய நகரில், டிசம்பர் 19, 1973 அன்று கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் சமுதாயத்தில் அனைவரும் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துகொண்டார். அதுவே அவரின் கடைசிபேச்சு ஆகும். குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்றப் பெரியார், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், உறுதியான பகுத்தறிவுச் சிற்பி என அனைவராலும் போற்றப்பட்ட பெரியார், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 24, 1973 அன்று தனது 94 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

 வாழ்க்கை வரலாறு

• 1879 : செப்டெம்பர் 17, ஈரோட்டில் பிறந்தார். பெற்றோர்: சின்னத்தாயம்மை-வெங்கட்ட நாயக்கர்

• 1885 : திண்ணைப்பள்ளியில் சேர்ந்தார்.

• 1891: பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார்

• 1892 : வாணிபத்தில் ஈடுபட்டார்

• 1898 : நாகம்மையை (அகவை-13) மணந்தார்.

• 1902 : கலப்புத்திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமயத்தினர், சாதியினருடன் சேர்ந்து விருந்துண்டார்.

• 1904 : ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார். (அக்குழந்தை ஐந்தாம் மாதத்தில் இறந்தது. பின்னர் குழந்தையே இல்லை.)

• 1907 : பேராய இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோட்டில் கக்கல் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து மீட்புப்பணியாற்றினார்.

• 1909 : எதிர்ப்புக்கிடையில் தங்கையின் மகளுக்கு கைம்மைத் திருமணம் செய்துவைத்தார்.

• 1911 : தந்தையார் மறைவு

• 1917 : ஈரோடு நகரமன்றத்தின் தலைவரானார்.

*நன்றி- விக்கிப்பீடியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக