ஞாயிறு, 30 ஜூன், 2019

தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 1.


தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 1.
(National Doctors' Day)

சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) ஆகும். இந்த நினைவு நாள் கொண்டாடப்படும் தேதி காரணங்களைப் பொறுத்து நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. சில நாடுகள் இதை விடுமுறை தினமாகவும் அறிவிக்கிறது. பெரும்பாலும் மருத்துவ நிறுவனங்களே இத்தினத்தைக் கொண்டாடுகின்றன.


மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படும் வரலாறு

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.


உயிர் காப்பவர்களுக்கு ஒரு சல்யூட்..!

உலகில் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் ஒரு நபர் உண்டு என்றால், அவர் மருத்துவராகத்தான் இருப்பார்கள். அவர்களைப் போற்றி பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் மருத்துவர்கள் தினம் (Doctor's Day)   கொண்டாடப்படுகிறது.

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ல பாங்கிபோர் என்ற ஊரில் 1882, ஜூலை 1-ம் தேதி பிறந்தவர் பிதான் சந்திரா ராய் (Dr. Bidhan Chandra Roy). ஏழைகள் மேல் மிகவும் அன்பு கொண்ட பி.சி.ராய், மருத்துவப் பணிக்கே தன்னை அர்ப்பணித்தவர்.


இவர் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு நெருக்கமானவாராக இருந்தவர். காந்தியுடன் இணைந்து நாட்டு விடுதலைக்காகவும் போராடியதோடு மட்டுமல்லாது, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் இருந்தார். அத்துடன் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்  அமைச்சராகவும் பொறுப்பு வகித்து மக்கள் சேவையாற்றினார்.

தன் வீட்டையே ஏழைகளுக்கான மருத்துவமனை கட்ட கொடுத்த டாக்டர் பி.சி.ராய், முதல் அமைச்சராக இருந்த காலத்தில்கூட ஏழைகளுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்தவர்.

இவர், தான் பிறந்த தேதியான (1962-ம் ஆண்டு) ஜூலை 1-ம் தேதியிலே மரணம் அடைந்தார்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மார்ச் 30-ம் தேதி டாக்டர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என்றபோதிலும், டாக்டர் பி.சி.ராயின் நினைவாக இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.


இவரின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவை செய்பவர்களுக்கு 1976-ம் ஆண்டு முதல்  டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.

மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர் காப்பவர்கள் டாக்டர்கள். ஆனால், அவர்களின் ஆயுள் சராசரி மக்களை விட குறைவாக இருக்கிறது என்கிறது இந்திய மருத்துவக்  கழகத்தின் (ஐ.எம்.ஏ) ஆய்வு முடிவு.


இந்தியாவில் மருத்துவர்களின் சராசரி வயது 55 முதல் 59 ஆண்டுகளாக இருக்கிறது.  இது பொது மக்களின் ஆயுளை விட 10 ஆண்டுகள் (சாதாரண மக்களின் ஆயுள் 69  முதல் 72 ஆண்டுகள்) குறைவாகும்.

அதிக மன அழுத்தம், உடல் செயல்பாடு குறைந்த சொகுசு வாழ்க்கை, உடற்பயிற்சி  இல்லாமை, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்,ஒழுங்கற்ற சாப்பாட்டு  வேளைகள் போன்றவை மருத்துவர்களின் ஆயுளைக் குறைத்து வருகிறது.

தங்களுக்காக மட்டுமல்லாது, மற்ற உயிர்களை காப்பாற்றவேண்டும் என்ற பொது நலனும்  அடங்கி இருப்பதால், மருத்துவர்கள் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்!
நன்றி விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக