செவ்வாய், 4 ஜூன், 2019

அருள் நிறைந்த ரமலான் பண்டிகை!


அருள் நிறைந்த ரமலான் பண்டிகை!

‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா.

இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையே, அவர்களின் உறுதியான நம்பிக்கை. அப்படியான நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை முறையில் ஈகைத் திருநாள் 'ரம்ஜான் பண்டிகை', மற்றும் தியாகத் திருநாள் 'பக்ரீத் பண்டிகை' என ஆண்டுதோறும் இஸ்லாம் மார்க்கத்தில் இரண்டு பண்டிகைகள் மட்டுமே பெருநாளாக கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு. அதில் ஒன்று, ரமலான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ரமலான் மாதத்தைப் பொறுத்தவரை எல்லா இஸ்லாமியர்களுக்குமே, அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், சாத்தான்கள் விலகி ஓடும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும், நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் திருக்குர் ஆன், இப்பூவுலகில் அருளப்பட்ட மாதம் என அனைத்தும் அருள் நிறைந்த மாதமாக இருப்பதால், சிற்சில காரணங்களுக்காக ஒரு சிலர் தவிர அனைவருமே நோன்பு இருக்க என்றுமே தவறுவதில்லை.

பரிசு பரிசுப்பெட்டியில் தான் வரும் னு யார் சொன்னது?ராயல் சுந்தரம் லைப்லைன் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி, அன்பு மற்றும் நம்பிக்கையின் உண்மையான பரிசு.

நம் வாழ்வில் அகமும்-புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சியாகவே இந்த நோன்பு அனுசரிக்கப்படுகிறது. சொர்க்கத்தில் ரய்யான் என்ற சொர்க்க வாசல் குரானில் உண்டு. ரமலான் மாதத்தில் கண்ணியமாக நோன்பு இருந்தவர்கள் மட்டுமே இந்த வாசல் வழியாக அழைக்கப்படுவார்கள் என்பது இஸ்லாம் மத நம்பிக்கை. இந்த ரமலான் மாதத்தில் பயிற்சி பெற்றவர்கள், அடுத்து வரும் பதினோரு மாதங்களுக்கு பலன் அனுபவிப்பார்கள். அவர்கள் நேர்மை தவறும்பொழுது, இந்த ரமலான் மாதத்தில் பட்டினியாகக் கிடந்ததைத் தவிர வேறு எந்த நன்மையும் அவர்கள் செய்யவில்லை என்பது பொருளாகிவிடும்.

தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்பதே ரமலான் மாத்தில் பின்பற்றப்படவேண்டிய கொள்கைகள். அப்படி இருக்கும்பொழுதுதான், மனது தூய்மையை நாடும் என்பது அதன் மறைபொருளாக இருக்கிறது. அதாவது அதிகாலை முதல், மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல், பிற தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்ற தத்துவதை உணர்த்துகிறது. இந்த மாதத்தில் நன்மைகள் செய்யாதவர்கள் எல்லாவிதமான நன்மைகளையும் இழந்தவர் என்றும், பாவமன்னிப்புக் கேட்காதவர்கள் அல்லாஹ்வின் அருளைவிட்டு வெகு தொலைவில் இருப்பவர்கள் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

நோயின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் மற்றும் முதுமை உள்ளிட்ட பிற காரணங்களால் நோன்பினை அனுசரிக்க முடியாதவர்கள், ஒவ்வொரு நோன்பிற்குப் பதிலாக ஒரு ஏழைக்காவது உணவளிக்க வேண்டும் என்று திருக்குர் ஆனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் நோன்பின் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. புவியியல் அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல்பிறை தோன்றுவதற்கேற்ப அந்நாடுகளில் ரம்ஜான் கொண்டாடப்படும்.

சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளில் ரம்ஜான் கொண்டாடிய மறுநாள்தான் இந்தியாவில் ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் சிறப்பு தொழுகைகளுடன் இன்று ரம்ஜான் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மனித வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், கணக்கு இருக்கிறது. நாம் செய்யும் நன்மை தீமைகள், நம் இறப்பிற்குப் பிறகு நம்மை வந்து சேரும். அதனால் அல்லாஹ்வின் கட்டளைப்படி நாம் திருக்குர் ஆன் படி வாழ்ந்தால், நம்மிடையே மறுமலர்ச்சியை உருவாக்கி, ஆரோக்கியமான நல்ல சமுதாயத்தை உருவாக்கிவிடலாம் என்பது ஆழமான நம்பிக்கை.

இஸ்லாமிய சகோதரர்களுக்கு இனிய ரமலான் தின வாழ்த்துக்கள்!!!
நன்றி விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக