வியாழன், 10 அக்டோபர், 2019

உலக பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11




உலக பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11 .

இன்றைய பெண் குழந்தைகள்..! நாளைய சாதனைப் பெண்மணிகள்…!     
பெண் குழந்தையைப் பாதுகாப்போம்: பெண்மையைப்  போற்றுவோம் ...!

 -த.புவனேஸ்வரி மகேந்திரன்,எம்.ஏ.எம்.எட்.,
இயக்குனர்,மதி கல்வியகம்,திருநெல்வேலி.

பெண் குழந்தைகள் வாழும் வீடு...அழகிய தேவதைகள் வாழும் வீடு..

பெண் குழந்தைகளை பெருமை படுத்தும் விதமாக  அக்டோபர் 11 ஆம் தேதி (இன்று) உலக பெண் குழந்தைகள் தினம் உலகம் முழுவதும்  கொண்டாடப்பட்டு வருகின்றது. பெண்களின் உரிமைகளை எடுத்துரைக்கவும், அவர்களின் சுதந்திரத்தை நிலைநாட்டவும்,  ஐ.நா. சபை 2011-ல் எடுத்தமுடிவின்படி அக்டோபர் 11, 2012-ல் முதல் சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. “பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்’’ என்பது இத்தினத்தின் மையக்கருத்து. பெண் குழந்தைகள் அதிகளவில் கல்வி பெறுவதற்கு, அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது.                                                             


''மங்கையராய் பிறப்பதற்கே நல்ல  மாதவம் செய்திட வேண்டுமம்மா''… என்று பெண்கள்  பிறப்பின்  சிறப்பு பற்றி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை  கூறியுள்ளார் .பெண்களை போற்றுவதற்கு கிடைத்தவாய்ப்புகள் அனைத்தையும், கவிஞர்களும்,புலவர்களும்,  நன்கு பயன்படுத்திவிட்டனர்.நம் இந்தியாவில் நதிகள் அனைத்திற்கும் பெண்களின் பெயரையே வைத்து பெண்மைக்கு பெருமை சேர்த்துள்ளனர் .நம்மைத் தாங்கும் பூமியை பூமாதேவி என்றும், நிலவை பெண்ணாக உருவகப்படுத்துவதும் காலம் காலமாக நடந்து வருகிறது.

தொல்காப்பியம், போன்ற இலக்கண நூல்கள் ,சங்க இலக்கியங்கள்,நீதி நூல்கள்,காப்பியங்கள் போன்ற நூல்களில் பெண்ணை- மனைவி, கிழத்தி, காமக் கிழத்தி, நல்லோள், காதலி, கிழவி, கிழவோள், பேடை, பெட்டை, பெடை, பெண், பாட்டி, தோழி, செவிலி, விறலி, பரத்தை, ஒண்டொடி மாதர், அரிவை, வாலிழை மகளிர், மகளிர், ஒளியிழாய், நறுநுதால், திருந்திழாய், நெட்டிருங்கூந்தலாள், நன்னுதால், கொய்தளிர்மேனியர், சுடர்நுதல் குறுமகள், மடமகள், அணிஇழையாள், கூந்தல் விறலியர், வளைமகள், மெல் இயல் மகளிர், சில் வளைவிறலி, மனைமாண் இனியோள், பொற்றொடி மகளிர், தென் தமிழ்ப் பாவை, கற்பின் கொழுந்தே!, பொற்பின் செல்வி, கனங்குழை மாதர், நறுநுதலாள், இல்லாள்,கட்கினியாள், தாயென்பாள், நற்பெண்டிர், பண்புடையாள், ஈன்றாள், மடவார், நிலைநின்ற பெண், இனியார் தோள் போன்ற சிறப்பான சொற்களை பாடல்வரிகளில் கையாண்டுள்ளனர் .


வாழ்க்கைக்குப் பெண்ணின் பங்கு மிகவும் முக்கியம் என்பதை அறிந்து , அன்றே சங்ககாலப்  புலவர்கள் பெண்களின் பெருமையயும், முக்கியத்துவத்தையும் பாடல்களாக  அமைத்தனர். இப்பாடல்கள் 2500 ஆண்டுகளாக மக்கள் மத்தியில்  பெண் பெருமை பேசிக்கொண்டு உயிருடன் உலாவி வரும் சீரினையும் காண்கின்றோம். இதே  போன்று சங்ககாலத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்பாற்  புலவர்கள் இருந்துள்ளனர் .

வரலாற்றில்   போற்றத்தகுந்தவகையில் ஔவையார் ,காக்கைப் பாடினியார்,ஆண்டாள்,வேலு நாச்சியார், ராணி லட்சுமிபாய் ,சாவித்திரி பாபுலே , சரோஜினி நாயுடு , ராணி மங்கம்மாள் ,விஜயலட்சுமி பண்டிட் ,டாகடர் .முத்துலட்சுமி , தில்லையாடிவள்ளியம்மை, அன்னைதெரசா ,இந்திராகாந்தி ,எம் .எஸ் .சுப்புலக்ஷ்மி ,  கல்பனா சாவ்லா  போன்றோர் சிறந்த சாதனை பெண்மணியாக  திகழ்ந்து  பெண்மைக்கே பெருமை சேர்த்துள்ளார் .

பத்தொன்பதாம் நுாற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர் மாயூரம் வேதநாயகர்  பெண்கள் முன்னேற்றத்திற்காக அவர்செய்திருக்கும் தொண்டுகள் அளவிட முடியாது.பெண்களின் முன்னேற்றத்திற்காக .1869-ல் பெண்களுக்கெனத் தனிப்பள்ளிஒன்றை மாயூரத்தில் சொந்த முறையில்தொடங்கி நடத்தினார்.

வேதநாயகாரின் 'பெண்மதி மாலை', 'பெண்கல்வி', 'பெண் மானம்' என்னும் நுால்களிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கான பலஅரிய சிந்தனைகள் இடம் பெற்றுள்ளன. தமிழில் பெண்கள் முன்னேற்றத்திற்காகப்பாடுபட்ட சான்றோர்கள் பட்டியலில்வேதநாயகருக்கு முதல் இடம் உண்டு.


பெண் என்பவள் சமூக வாழ்வில் ஒரு பிரிக்கமுடியாத அங்கம். அவள் இல்லையேல் வீடும், நாடும் இயங்க முடியாது . அவள் இயங்கும் சக்தியாகவும், இயக்குவிக்கும்சக்தியாகவும் காணப்படுகிறாள். வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களிலும், சங்ககாலங்களிலும்,அவளின் அறிவாற்றல், சிறப்புகள், பெருமைகள் போன்றவற்றை பல்வேறு  நூல்களின்   வாயிலாகஅறிகின்றோம்.பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலமாக வரலாற்றின் வளர்ச்சி காலத்தில், தனது  திறமையை யும், ஆற்றலையும்,வெளிப்படுத்தி சமூகத்தில் பெண்கள் சிறந்த நிலையை அடைந்துள்ளனர்  என்பது வெளிப்படையான உண்மை .பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில் ஏற்படும் மகிழ்ச்சியை  அளவிட  முடியாது.பெண் குழந்தைகளை 'மகாலட்சுமி' எனவும், 'ஏஞ்சல் ' எனவும், ‘பர்கத்‘ எனவும் அவரவர் மதம், இனத்திற்கு ஏற்பஒவ்வொரு வகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு உண்டு.

பழமைவாதம், மூடநம்பிக்கைகளை ஒரு காலிலும், தவறான எண்ணங்கள், புரிதல்களை மற்றொரு காலிலும் கட்டிக் கொண்டு பயணிக்காமல் எந்த திசையை நோக்கி பயணித்தால்,அவர்களை வழி  நடத்தலாம் என்று , நாம் அவர்களுடன்  பயணிக்க வேண்டும் . பெண் குழந்தைகள் தடம் மாறி செல்லாமலிருக்க , அவர்களையும் அவர்களின் உள்ளத்தின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு  அவர்களை நல்ல முறையில்  வழிநடத்த வேண்டும் .

இன்று பல சிறுமிகள் காதல்வசப்படுகிறார்கள்.  இதற்கு காரணம் பெற்றோர்கள்தான். சில பெற்றோர்கள் சுதந்திரமாக வளர வேண்டும் என்று குழந்தைகளின் நடத்தைகளை கண்டு கொள்ளமாட்டார்கள். இன்னும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையிடம்  மிகவும் கண்டிப்புடனும் நந்துகொள்வார்கள். இவை இரண்டுமே தவறு.குழந்தைகளிடம் சில நெறிமுறைகளோடும், நட்போடும்  பழக வேண்டும்.

 அதற்கு முதலில் அவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்க வேண்டும். அவர்களின் ஆண் நண்பர்களை அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் நட்பை ஆதரிக்க வேண்டும்.அதே நேரம்  அவர்களுக்கான எல்லையையும் அவர்களின் மனம்  நோகாதவாறு புரிய வைக்க வேண்டும்.உங்கள் பெண் குழந்தையின் மேல் நீங்கள்  முழு நம்பிக்கை  வைத்திருப்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதும் அவசியம். அப்போதுதான் அவர்களின் இன்பம், துன்பம், குழப்பங்கள்,முடிவு எடுத்தல்  போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வார்கள்.

 பெண் குழந்தையின்  உடல் பற்றியும், பாலியல் தீண்டல்களில் இருந்து அவர்களைப்  பாதுகாக்க அவர்களுக்குக் கற்றுத் தரவேண்டும். குழந்தைக்கு விபரம் தெரிந்ததுமே, அவர்களுக்கு ‘’குட் டச், பேட் டச்’’ பற்றிச் சொல்லி கொடுப்பது காலத்தின்அவசியமாகும். உங்களைச் சுற்றியிருக்கும்பெண் பிள்ளைகளை  நீங்கள் கொண்டாட வேண்டாம். அவர்களின் குழந்தைப் பருவக்கொண்டாட்டத்தை சிதைக்காமல் இருந்தால் போதுமானது. மேலும் நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் உங்களால் முடிந்த குறைந்தபட்ச பாதுகாப்பைக் கொடுத்து வாழவிடுங்கள். அதுவே அவர்களுக்கு  பெரிய வாழ்த்தாக அமையும்!.


இந்தியாவில் பெண் குழந்தைகளை வழிநடத்தும் விதம் காலம் காலமாக அன்புடனும், அரவணைப்புடனும் தொடர்கிறது. பெரியோரை மதிப்பது, சமூக சிந்தனைகளை வளர்ப்பது  போன்றவற்றை  பெண் குழந்தைகளுக்கு  கற்றுக்கொடுக்கிறோம்..

பெண் குழந்தைகளுக்கு நல்வழியை சிறந்த கல்வி மூலம் கற்று கொடுக்க வேண்டும்.அவர்களை சரியான பாதையில் கால் பதிக் வைத்து, அவர்களுடன் கை கோர்த்து,அவர்கள் செல்லும் பாதையை செம்மைப்படுத்தி, வழித்தடங்களில் இருக்கும் கரடு முரடுகளையும், முட்புதர்களையும்,அகற்றி விட்டாலே போதும். சிறந்த இலக்கை அடையும் சக்தி, பெண் குழந்தைகளிடம் உள்ளது.எந்த வித கேள்விகளுக்கும் அவர்களாவே  ஒரு சிறந்த திறன் மிக்க பதிலை தேர்ந்தெடுத்து. எந்த ஒரு சூழ்நிலையிலும்  சிக்கல்களை சமாளித்து  வெற்றி வாகை சூட சிறந்த சமூக சிந்தனையுடன் கூடிய கல்வி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். . கல்வி தான் சிறந்த பாதுகாப்பு என்பதை பெண்களுக்கு உணர்த்த வேண்டும்.

ஆறுதலாக இளைப்பாறும் மடி ஒருதாயாகவோ... தந்தையாகவோ... சிறந்த நண்பராகவோ... இருக்க வேண்டும் .என சொல்லி கொடுக்க வேண்டும். பெண்களை வெறும் கவர்ச்சிப் பொருளாகவும் , அழகுப்பதுமைகளாகவும்         பெண் குழந்தைகளை காட்டாமல்,தோல்வி கண்டாலும், துவண்டு போகாமல், அதை எதிர்த்துப்  போரிடும் குணத்தையும்,தன்னைத்  தானே செதுக்கிக் கொண்டு ஒரு குடும்பத்தையும்,சமூகத்தையும்  அவர்களால் மட்டுமே முன்னேற்ற முடியும் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.

பெண் குழந்தைகள் அழகுப்பதுமைகள் அல்ல... அறிவுச்சுடர்கள்.

இன்றைய  பெண் குழந்தைகள்..! நாளைய  சாதனைப்  பெண்மணிகள்…!

 பெண் குழந்தையைப் பாதுகாப்போம்: பெண்மையை போற்றுவோம் ...!


Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக