புதன், 13 நவம்பர், 2019

இந்தியா குழந்தைகள் தினம் நவம்பர் 14


இந்தியா குழந்தைகள் தினம் நவம்பர் 14

இந்தியாவில் குழந்தைகள் நாள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால் குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அழைத்தனர். எனவே அவரது நினைவாகவும் அவரது விருப்பத்தின் பேரிலும் அவரது பிறந்த நாளான நவம்பர் 14 இந்தியக் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.


உலகமெங்கும் குழந்தைகள் தினம் எப்போது, எப்படிக் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

ஐ.நா-வின் யுனிசெஃப் எனும் குழந்தைகள் நல அமைப்பு நவம்பர் 20, உலகக் குழந்தைகள் தினம் என அறிவித்துள்ளது. குழந்தைகள் நலனுக்காகக் கருத்தரங்குகள் தொடங்கி, பரப்புரை எனப் பல்வேறு நிலைகளில் உலகத் தலைவர்களுக்கு, குழந்தைகள் நலம் குறித்து கொள்கை முடிவுகள் எடுக்கச் சொல்லி வலியுறுத்துவது வரை பலவற்றைச் செய்கிறது. உலக மக்களிடையே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கு நிகரான அனைத்து வாழ்வியல் உரிமைகளும் சட்டமாக்கப்பட வேண்டும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து #GoBlue என்ற பிரசாரத்தை நடத்திவருகிறது. நீல நிறத்தைக் குழந்தைகள் உரிமை காப்பதற்காக அடையாளப்படுத்துகிறது இந்த அமைப்பு. யுனிசெஃப்புக்கு இந்தியாவின் நல்லெண்ணத் தூதர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். இன்று கொண்டாடப்படும் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, #GoBlue பிரசாரத்துக்காக, ராஷ்ட்ரபதி பவன், ஐ.நா சபை கட்டடம், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் போன்ற இந்தியாவின் முக்கியக் கட்டடங்கள் நீல நிறத்தில் ஒளிரப்போகின்றன. இந்த ஆண்டு யுனிசெஃப் முதல் முறையாக 14 வயதான குழந்தை நட்சத்திரம் மில்லி பாபி பிரவுனை அதன் நல்லெண்ண தூதராக நியமித்திருக்கிறது.


இதைத் தாண்டி உலகில் ஏறத்தாழ 85 நாடுகளில் குழந்தைகள் தினம் என்று வெவ்வேறு தினங்களில் பிரத்தியேகமாகக் கொண்டாடப் படுகின்றது. அப்படி உலக நாடுகளில் எல்லாம் குழந்தைகள் தினம் என்று..? எதற்காக, எப்படிக் கொண்டாடப்படுகிறது, என்ன சுவாரஸ்யங்கள் இருக்கின்றன என்று சற்று ஆராய்ந்தேன். என் ஆராய்ச்சி முடிவுகள் பின்வருமாறு:

இந்தியா: நவம்பர் 14, இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினம் என்றாலே அனைவரும் நினைவலை ரயிலேறி பள்ளி நாள்களுக்குச் சென்றுவிடுகிறோம். அன்று மட்டும் சீருடை தவிர்த்து கலர் உடை அணியலாம், பள்ளியில் இனிப்பு வழங்கப்படும். நேரு மாமா புகழ் பாடும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும், சில பள்ளிகளில் எல்லாம் ஆசிரியர்கள் ஆடிப் பாடி கலைநிகழ்ச்சிகள் நடத்துவர். பெரிதாக வகுப்புகள் நடக்காது, வாழ்த்து ஒலிகளால் அன்றைய தினம் முழுவதும் நிறைந்திருக்கும், நண்பர்களுக்குள் யார் முதலில் வாழ்த்துவது என்ற போட்டி நடக்கும். இப்படிப் பல்வேறு நினைவுகளுடன், அனைவரின் உள்ளே இருக்கும் குழந்தைத் தன்மையை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள். இன்று `ஹாப்பி சில்ட்ரன்ஸ் டே’ என்ற வாட்ஸ்அப் குறுஞ்செய்தியுடன், இந்த நாள் வழக்கமாகக் கடந்துவிடுகிறது. இப்போதெல்லாம் குழந்தைகள்கூட அந்த நாளைப் பெரிதாகக் கொண்டாடுவதில்லை. காரணம், அவர்கள் வாழ்க்கைக்குள் யூடியூப் வீடியோக்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், மொபைல் கேம் இப்படி பலவிஷயங்கள் நிறைந்திருக்கின்றன. சில்ட்ரன்ஸ் டே அளிக்கும் சிறிய சந்தோஷங்களை எல்லாம் அவர்கள் பெரிதாய் ரசிப்பதில்லை.

பல்கேரியா: ஜூன் மாதம் 1-ம் தேதி இங்கு குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு விழிப்பு உணர்வுக்காகக் குழந்தைகள் தினத்தன்று வாகனங்களில் விளக்குகளைப் பகலிலும் எரியவிட்டுக்கொண்டே வண்டி ஓட்டுவது இங்கு வழக்கம்.

டொக்லியு தீவுகள்: அக்டோபர் மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தன்று, இங்கு குழந்தைகள் வெள்ளை உடை அணிவது வழக்கம். மற்றொரு சிறப்பம்சமாக அன்று முழுவதும் குழந்தைகளுக்குப் பெற்றோர் சேவை செய்து மகிழ்கின்றனர். "அப்பா அதை எடுங்க, அம்மா இதைப் பிடிங்க" என்று பெற்றோரை வேலை வாங்குவது குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான்.

சிலி: பொம்மைகள் வாங்குவதற்கு என்றே ஒரு நாள் இருந்தால் எப்படி இருக்கும்? சிலியில் குழந்தைகள் தினத்தன்று குட்டீஸ் விரும்பும் பொம்மைகள் வாங்கித் தருவதையே கொண்டாட்டமாக வைத்திருக்கின்றனர். இங்கு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது குழந்தைகள் தினம்.

கனடா: நவம்பர் 20, குழந்தைகள் நலத்தைப் பற்றிய சட்டங்களைப் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நாளாகவும் அவர்கள் முன்னேற்றத்துக்கு உகந்த சட்ட வரைவுகளை அறிமுகம் செய்யும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

எகிப்து: நவம்பர் 20, எகிப்தில் இது பெரும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது, தெருக்களில் எல்லாம் அலங்கரிக்கப்பட்டு, ஆங்காங்கே நாட்டுப்புற நடனங்கள், காலை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான பொம்மைகள் என விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஜப்பான்: இதிலும் ஜப்பானியர்கள் வித்தியாசம்தான். ஜப்பானில் மட்டும் இரண்டு குழந்தைகள் தினங்கள் கொண்டாடப்படுகின்றன. மார்ச் 3, பெண் குழந்தைகளுக்காகவும் மே 5, ஆண் குழந்தைகளுக்காகவும் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகள் தினத்தன்று மக்கள் ஹெய்ன் வகை பொம்மைகளால் வீடுகளை அலங்கரித்து கொண்டாடுகின்றனர். ஆண் குழந்தைகள் தினத்தன்று மீன் வடிவப் பட்டங்களைப் பறக்க விட்டு கொண்டாடுகின்றனர்.

மெக்ஸிகோ: மெக்ஸிகோவில் ஏப்ரல் 30-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பள்ளிகளில் எல்லாம் ஒரே விளையாட்டு மயமாகவே இருக்கும். மேலும் மெக்ஸிகோவின் சிறப்பு குழந்தைகள் தினத்தன்று மிக அடர்த்தியான வண்ணங்களில் குழந்தைகள் ஆடை அணிவது ஆகும். வசந்த காலத்தை, புது தொடக்கத்தை அனுசரிப்பதற்காக இது செய்யப்படுகிறது.

பராகுவே: குழந்தைகள் தினத்தைப் பொறுத்தவரை மிக வித்தியாசமாக, கொண்டாட்டமாக இல்லாமல் நினைவு அஞ்சலி செலுத்தும் நாளாக இங்கு கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 16-ம் தேதி, 'அகோஸ்டா நு' (Battle of Acosta Ñu) என்னும் போரின்போது 20,000 வீரர்களை எதிர்த்து 6 - 15 வயது சிறுவர்கள் 3,500 பேர் போரிட்டதை நினைவுகூரும் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பெரு: இங்குக் குழந்தைகளின் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது வர்த்தக நிறுவனங்கள். அனைத்துக் கடைகளிலும் நமது ஆடி மாதம்போல சிறப்புச் சலுகைகளும் தள்ளுபடி விலைகளும் இன்று கொடுக்கப்படுகிறது. பெரு நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகள் தினம் ஷாப்பிங் தினமாகவே கொண்டாடப்படுகிறது என்று சொல்லலாம்.

இப்படி ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமாக இந்தக் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடி வருகின்றன. கொண்டாட்டங்கள் என ஒரு தினத்தை தாண்டி, குழந்தைகளைக் கொண்டாட கற்றுக்கொள்ள வேண்டும் நாம். அற்புதமானவர்கள் குழந்தைகள், அறியா பருவம் எனத் தவறாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அனைத்தையும் அறிந்துகொள்ளும் பருவத்தில் இருப்பவர்கள் குழந்தைகள். அதைப் புரிந்துகொள்வதே குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தைத் தாண்டிய நமது கடமை.


குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்...

நவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். அத்தகைய சிறப்பு மிக்க குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்களை பார்க்கலாம்.

நவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். இதை நமது தேசம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். உலகின் சிறப்பு வாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம். எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என்று பெரியவர்கள் கூறும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். அத்தகைய சிறப்பு மிக்க குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்...

* வெள்ளை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். கள்ளமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் நவம்பர் 14-ம் நாள் இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு.

* 1889 நவம்பர் 14-ந் தேதி அலகாபாத்தில் நேரு பிறந்தார். பிரதமராக நேரு இருந்த போது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். இடைவிடாத பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

* நேரு, அரசியல் துறையில் தேர்ச்சியும், ஞானமும், அனுபவமும் எத்தனை பெற்றிருந்தும், உள்ளத்தால் குழந்தை மனதையும் பெற்று இருந்ததால், குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.

* உலகிலேயே அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா விளங்குகிறது. குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். அவரது சிறந்த புகைப்படங் களுள் ஒன்று, குழந்தைகளோடு அவர் இருப்பதாக உள்ளது.

* இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற உண்மையை தெளிவுபடுத்துவதற்காக குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம் என பல போட்டிகள் நடத்தப்படுகிறது.

* இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்துக் குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம்.

* 1925-ம் ஆண்டு ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.




* 1954-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டது. இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

* குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவர்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள்.

* நாட்டின் முன்னேற்றத்திற்கு, அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். குழந்தைப் பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இடையே சகோதரத்துவம், உதவும் மனப்பான்மை வளரும்.

* ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் தத்தம் குறைபாடுகளை நீக்கிவிட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், மனநிலையையும் கூர்மையாக கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு எப்படியெல்லாம் பாடத் திட்டங்கள் அமைய வேண்டும், எப்படி போதிக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த சிறப்பான அணுகுமுறையானது குழந்தைகளின் நாளைய ஆக்கப்பூர்வமான சாதனைகளுக்கு அடிப்படையாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .

*꧁☬@☬꧂* *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக