திங்கள், 25 நவம்பர், 2019

சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம் நவம்பர் 26.


சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம் : குரு தரும் ஹம்சயோகம் உடம்பை குண்டாக்கவும் செய்யுமாம்

அவனுக்கு என்னப்பா யோகக்காரன் என்பார்கள். இன்றைக்கு யோகக்காரர்கள் எந்த அளவிற்கு செல்வ செழிப்போடு இருக்கிறார்களோ அதே அளவிற்கு நோய்களாலும் பாதிக்கப்படுகிறார். நவ கிரகங்களின் சுப கிரகங்களான குருவும் சுக்கிரனும் ஒருவருக்கு ஹம்ச யோகம், மளாவியா யோகங்களை கொடுத்தாலும் கூடவே உடல் பருமனையும் சேர்த்தே கொடுப்பதாக சொல்கிறது மருத்துவ ஜோதிடம். சில பணக்கார்களுக்கு தொப்பை இருக்கும்போது அதை பணத்தொப்பை எனக் குறிப்பிடும் வழக்கம் இன்றளவும் இருக்கிறது. பணத்திற்கும் செல்வ செழிப்பிற்கும் காரகரான தனகாரக குருதான் கொழுப்பு சத்திற்கும் காரகர் என்பதை இதன் மூலம் அறியலாம்.

உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் உடல் பருமன் தினம் அனுசரித்த நிலையில் நவம்பர் 26ஆம் தேதியன்று பல நாடுகளில் சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்னையாகக் கருதப்படுகிறது. உடல் பருமனால் ஆண்டிற்கு 3 மில்லியன் மக்கள் உலகளவில் மரணமடைகின்றன. உடல் பருமனால் ஏற்படும் தீமையை விளக்கவே இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜாதக ரீதியாகவும் உடல் பருமனம் ஏற்படுகிறது. ஒருவரின் உடல் பருமனுக்கு குருவும், சுக்கிரனும் காரணமாகின்றனர். உடல் பருமனுக்கு ஜோதிட ரீதியாக ஏற்படும் காரணங்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

ஒபிசிட்டி எனப்படும் உடற்பருமன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளதாக மருத்துவத் தகவல்கள் எச்சரித்து வருகின்றன

ஒபிசிட்டி இன்று இந்தளவுக்கு அதிகரித்து வருவதற்குக் காரணம், மாறிவரும் வாழ்க்கை முறைதான் காரணம் என உடல் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். எல்லோருமே இன்றைக்கு ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளிடம் அடிமையாகிவிட்டனர். ஜங்க் ஃபுட் வகைகள், உடலின் கொழுப்பை அதிகரிக்கச் செய்து பலவிதமான நோய்களை இலவசமாகக் கொடுக்கின்றன.

ஒபிசிட்டி பிரச்சினை
உலகில், அனைவரும் மன அழுத்தத்துடன், அதிக உடல் எடையாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உடலில் பல நோய்கள் வருவதோடு, எதையும் சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. உலகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளம்வயதினர் உடல் பருமன் விரைவாக அதிகரித்து வருகிறது.

இதற்குக் காரணம் ஆணோ பெண்ணோ அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது நேரம் கெட்ட நேரத்தில் கண்டதை வாங்கி வயிற்றுக்குள் தள்ளுவது என மாறிவிட்டனர். இதனால் கொழுப்பு அதிகரிக்கிறது. அதிக நேரம் டிவி பார்ப்பது, பகலில் அதிக நேரம் தூங்குவதும் ஒபிசிட்டி ஏற்பட காரணமாகிறது.

உடல் பருமன்
உடல் பருமனாய் இருப்பதால், நீரிழிவு, இதய நோய், மாரடைப்பு, கீல்வாதம், சில புற்று நோய் வகைகள், மிகை இரத்த அழுத்தம், இளமையில் மிகை கொலஸ்ட்ரால் ஆகிய பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. உடல் பருமனுக்கும் நமக்கு ஏற்படும் நோய்களுக்கும் ஜோதிட ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன. உடல் பருமனுக்கு காரகர் குரு என்றும் ஊளைச் சதைக்கு காரகர் சுக்கிரன் என்றும் பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது.

குரு சுக்கிரன்
ஜோதிட ரீதியாக உடல் பருமனை ஏற்படுத்தும் பாவங்களாக கால புருஷனுக்கு போஜன ஸ்தானமான ரிஷபம் மற்றும் அதன் அதிபதி சுக்கிரன், ஜெனன ஜாதக இரண்டாம்பாவம், அதன் அதிபதி, கால புருஷனுக்கு ஒன்பதாம் பாவமான தனுசு மற்றும் அதன் அதிபதி, ஜெனன ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் மற்றும் அதன் அதிபதி லக்னத்தோடு தொடர்புகொள்ளும் போது உடல் பருமன் ஏற்படுகிறது என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. குருவும், சுக்கிரனும் லக்னதில் ஆட்சி பெற்று நிற்பது, உச்சம், மூல திரிகோணம், கேந்திர திரிகோணங்களில் நின்று லக்னத்தை பார்ப்பது, பஞ்ச மகா புருஷ யோகங்களில் குருவால் ஏற்படும் ஹம்ச யோகம், சுக்கிரனால் ஏற்படும் மாளவியா யோகம் ஆகிய யோகங்கள் பெற்று நின்று தனது தசா புத்தியை நடத்தும்போது உடல் பருமனும் ஊளைச் சதையும் ஏற்படுகின்றது. முக்கியமாகக் கொழுப்பின் காரகரே குரு தான் என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

குண்டாக்கும் குருபகவான்
ஒருவரின் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் லக்னாதிபதியாகவோ, இரண்டாம் ஸ்தானதிபதியாகவோ இருப்பது மற்றும் லக்னத்தையோ அல்லது இரண்டாம் ஸ்தானத்தையோ தொடர்பு கொள்ளும்போது ஜாதகருக்கு இனிப்புகளில் அதிகம் நாட்டம் ஏற்படும். அதனால் உடல் பருமன் ஏற்படும். லக்னம் நீர் ராசியான கடகம் அல்லது மீனமாகி அதில் குரு பகவான் ஆட்சி உச்சம் ஆகி நிற்பது அல்லது நீர் ராசியாகிய விருச்சிகமாகி அதை நீர் ராசிகளில் ஆட்சி உச்சம் பெற்ற குரு பார்ப்பது. இத்தகைய அமைப்பைப் பெற்றவர்கள் ஒருமுறை குண்டாகிவிட்டால் பின் மீண்டும் உடல் பருமனில் இருந்து விடுபடுவது என்பது மிகவும் கஷ்டமான விஷயமாகும்.

ராகு உடன் குரு சேர்க்கை
பொதுவாக குரு தான் இருக்கும் வீட்டின் காரகத்தை வளர்த்துவிடுவார் என்பது ஜோதிட விதி. அந்த வகையில் எந்த லக்னமானாலும், காலபுருஷனுக்கு ஐந்தாமிடமான சிம்மம் வயிறு பாகத்தையும் ஆறாமிடமும் அடி வயிற்றினை குறிக்கும் இடங்களாகும். குரு சிம்மத்தில் அல்லது ஜெனன ஜாதக ஐந்தாமிடத்தில் ராகுவோடு சேர்ந்து நிற்கும் போது மிகப்பெரிய வயிற்றுடன் கூடிய உடல் பருமன் ஏற்படுகிறது. ராகுவோடு சேராமல் தனித்து சிம்மத்தில் நிற்பது குறைந்த அளவிலாவது தொப்பை இருக்கும்.

சனியோடு குரு சேர்க்கை
கன்னி மற்றும் ஜனன ஜாதக ஆறாமிடத்தில் குரு நிற்பது முக்கியமாக லிவர் எனப்படும் கல்லீரல் பாதிப்பால் உடல் பருமன் ஏற்படும். மேலும் கன்னியில் குரு நிற்பவர்களுக்கு சர்க்கரை நோயும் சேர்ந்து வர இதுவே காரணமாகும். அதிலும் சனைச்சரனும் சேர்ந்துகொண்டால் நீரிழிவு மற்றும் உடல் பருமன் இரண்டும் சேர்ந்து அமைந்துவிடுகிறது.

குரு திசை ராகு புத்தி
ஒருவரின் ஜாதகத்தில் கும்ப லக்னத்தில் ராகு நின்று சிம்மத்தில் கேது நிற்கும்போது கால புருஷனுக்கு வயிறு பாகம் பாதிப்படைவதால் பானை போன்ற வயிறு ஏற்படுகிறது. ஜாதகத்தில் மேற்கண்ட கிரக நிலைகள் ஒருவருக்கு இருந்து குரு தசை ராகு புக்தி, குரு சாரம் பெற்ற ராகு தசை குரு புக்தி போன்றவை நடைபெறும் காலங்களில் உடல் பருமன் ஏற்படுகிறது.

பெண்களுக்கு உடல் பருமன்
பெண்களுக்குப் புத்திர காரக குரு பிரசவ காலத்திற்கு பிறகு உடல் பருமனை ஏற்படுத்துகிறார். பிரசவத்திற்கு முன் ஒல்லியாக இருந்தவர்கள் கூட ஒரு குழந்தையை பெற்றவுடன் உடல் பருமனடைவதை பார்க்க முடிகிறது. அதுவே நிரந்தரமாகி அப்புறம் குண்டம்மாக்களாக வளைய வருகின்றனர் பெண்கள். அதே நேரம் திருமணத்தின் போதே உடல் பருமனாக இருக்கும் பலருக்கும் குழந்தை பிறப்பது அரிதாகி விடுகிறது.


பத்தாம் வீட்டில் குரு சுக்கிரன்
ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் கர்ம ஸ்தானம் எனப்படும் பத்தாமிடத்தில் இருக்கும் கிரஹங்களை பொருத்து ஒருவரின் வேலை மற்றும் வாழ்க்கை முறை அமைந்துவிடுகிறது. பத்திலே ஒரு பாவி இருக்க வேண்டும் அல்லது ஒரு பாம்பாவது இருக்க வேண்டும் என்பது ஜோதிட சொலவடை. பத்திலே அசுப கிரஹங்கள் இருந்தால் அவர்கள் வேலை கடுமையான உடல் உழைப்புடன் அமையும். மாறாக குருவோ சுக்கிரனோ அமர்ந்துவிட்டால் அவர்களுக்கு வேலை வொயிட் காலர் ஜாப் எனப்படும் சொகுசு வேலையிலேயே நாட்டம் இருக்கும். இவர்களையே உடற்பருமன் அதிகம் தாக்குவதை காணலாம்.


திருச்செந்தூர் முருகனை வணங்குங்க
உடல் பருமனை ஏற்படுத்தும் கிரஹ நிலைகள் ஜாதகத்தில் கொண்டவர்கள் குருவின் காரகம் நிறைந்த இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகள் முக்கியமாக நெய் சேர்த்த உணவுகளை மற்றவர்களுக்கு அளிக்கவேண்டுமே தவிர அவர்கள் சாப்பிடக்கூடாது. ஆனால் குருவின் அம்சம் நிறைந்தவர்களை இனிப்பு சாப்பிடாமல் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாகும்.

யோகா செய்யுங்க
செவ்வாயின் காரகம் கொண்ட யோகா, உடற்பயிற்சி செய்வது போன்றவை உடல் பருமனை குறைக்க வழி செய்யும். கேதுவின் தானியமான கொள்ளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் பருமனை குறைக்கும். அழகன் எனப்படும் முருகப்பெருமானைத் திருச்செந்தூர் ஸ்தலத்தில் வணங்கலாம். கேதுவின் அதிதேவதையான விநாயக பெருமானுக்கு தோப்புக்கரணம் போட்டு வணங்கலாம்.

ஜீரண கோளாறு நீங்கும்
செவ்வாயின் காரகம் நிறைந்த வெள்ளைப் பூண்டினை அதிக அளவு சேர்க்கும்போது கொழுப்புச்சத்து கரைந்து உடல் பருமன் நோய் நீங்கும் என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. இது அனைத்து மருத்துவ முறையிலும் ஏற்கப்பட்ட ஒரு எளிய வழியாகும். மேலும் செவ்வாயின் காரகம் நிறைந்த இஞ்சி மற்றும் சுக்கு ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்ப்பது ஜீரண கோளாறுகளை நீக்கி உடல் பருமனை தடுக்கிறது.

ஆஞ்சநேயர் வழிபாடு
வாயு பொருட்கள், கிழங்குகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள் சனி குருவின் சேர்க்கையால் கொழுப்புச்சத்தை அதிகரிக்கிறது. எனவே அத்தகைய உணவுகளைத் தவிர்த்து தன்வந்திரி பகவானை வணங்கலாம். வாயு தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் வாயு மைந்தன் ஆஞ்சனேயனை வணங்குவதும் உடல் பருமனை குறைக்கும்.

கருஞ்சீரகம்
வயிறு சமந்த பிரச்னைகளை போக்கவும் உடல் பருமனை குறைக்கவும் மருத்துவ குணம் கொண்ட செவ்வாயின் காரகம் நிறைந்த கருஞ்சீரகம் பெருமளவு உதவுகிறது. கருஞ்சீரக கஷாயம் உடல் பருமனை குறைக்கும். குரு ஆதிக்கம் பெற்ற எலுமிச்சையை காலையில் வெறும் வயிற்றில் கதகதப்பான சுடு நீரில் தேன் கலந்து குடிப்பது மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து புத்துணர்ச்சியை அளிக்கிறது. குருபகவானை வணங்கினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்
Thanks Oneindia.
Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக