செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

பெண் போராளி தில்லையாடி வள்ளியம்மை பிறந்த தினம் பிப்ரவரி 22 .


பெண் போராளி தில்லையாடி வள்ளியம்மை பிறந்த தினம் பிப்ரவரி 22 .

தில்லையாடி வள்ளியம்மை (பெப்ரவரி 22, 1898 - பெப்ரவரி 2, 1914) இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு பெண் போராளி.


வாழ்க்கை வரலாறு

தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898 ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற ஊரைச் சார்ந்த முனுசாமி, மங்களத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். நெசவுத் தொழிலாளியான முனுசாமி, பிரித்தானிய ஆட்சியில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகன்ஸ்பர்க் நகரில் ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார். அங்கு தான் வள்ளியம்மை பிறந்தார்.


தில்லையாடி காந்தி நினைவுத் தூண்

1913 -ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தென்னாப்பிரிவிக்காவில் வசித்து வந்த இந்தியர்களுக்கு பிரித்தானியர்களால் விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்து நடத்திய அறப்போராட்டத்தில் கலந்துகொண்டு ஆட்சியாளர்களுக்கு எதிராகத் துணிந்து போராடினார். 1913 -ஆம் ஆண்டு திசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் விடுதலை செய்யப்பட்ட போதும் போராட்டக் குழுவினரின் கோரிக்கை நிறைவேறாத நிலையில் வெளியே வர மறுத்து, பின்னர் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி இரத்தான பின்பே விடுதலையை ஏற்று வெளியே வந்தார். பதினாறே ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரை "பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள்தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்" என காந்தி பாராட்டியுள்ளார்.

நினைவு மண்டபம்

தில்லையாடியில் உள்ள வள்ளியம்மை நினைவு மண்டபம்
தமிழ்நாடு அரசு தில்லையாடி வள்ளியம்மையின் ஈகத்தைப் போற்றும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடியில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. காந்தி தில்லையாடிக்கு 1-5-1915 அன்று வருகை தந்து அமர்ந்த இடத்தில் நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது. அதன் எதிரில் தான் தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு தில்லையாடி வள்ளியம்மையின் மார்பளவு சிலை ஒன்று முன் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது நூலகத்துறை மூலம் ஒரு நூலகம் செயல்பட்டு வருகின்றது.

நூற்றாண்டு நினைவு[தொகு]
தரங்கம்பாடி மற்றும் தில்லையாடிக்கு செல்வதற்காக மகாத்மா காந்தி, கஸ்தூரிபாயுடன் 1915 ஏப்ரல் 29ம் தேதி இரவு தூத்துக்குடி எக்ஸ்பிரசில் மயிலாடுதுறைக்கு வந்து, மறுநாள் அங்கிருந்து இரட்டை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தரங்கம்பாடிக்கு வந்தார். டேனிஷ் கோட்டை மைதானத்தில் அவருக்கு சத்தியாகிரக வாதிகளும், பொதுமக்களும் வரவேற்பு அளித்தனர். மே 1ம் தேதி தரங்கம்பாடியிலிருந்து தில்லையாடிக்கு சென்றார். தில்லையாடி பகுதியை சேர்ந்த பலர், தென் ஆப்பிரிக்காவில் காந்தியுடன் அறப்போராட்டத்தில் பங்கேற்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர் தில்லையாடி வள்ளியம்மை. இவரின் பெற்றோர் தில்லையாடியை சேர்ந்தவர்கள். தில்லையாடியில் காந்திஜி அமர்ந்து பொதுமக்களிடம் பேசிய இடத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. .[1] காந்தி தில்லையாடிக்கு வந்ததன் நூற்றாண்டு நினைவு விழா தில்லையாடி தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் 1.5.2015 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.தில்லையாடியில் காந்தி நினைவு ஸ்தூபி அருகில் தற்போது அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு நினைவுக் கல்வெட்டு திருப்பனந்தாள் காசிமட இணை அதிபரால் திறந்துவைக்கப்பட்டது.


ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த வீராங்கனை

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு 16 வயதில் உயிர்நீத்த தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை (Thillaiyadi Valliammai) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# மயிலாடுதுறை அடுத்த தில்லையாடியை சேர்ந்த நெசவுத் தொழிலாளி முனுசாமி. தென் ஆப்பிரிக்காவில் வியாபாரம் செய்து வந்தார். அவரது மகளாக தென்ஆப்பிரிக்காவில் (1898) பிறந்தார் வள்ளியம்மை. அங்குள்ள காலனி அரசின் பெண்கள் பள்ளியில் பயின்றார்.

# சிறு வயதிலேயே தன்னைச் சுற்றி நிகழும் சமுதாயப் போக்குகளை உன்னிப்பாக கவனித்தார். தென்ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு பிரிட்டீஷாரால் விதிக்கப்பட்ட வரி மற்றும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து 1913-ல் காந்தியடிகள் போராட்டங்கள் நடத்தினார். காந்திஜியின் சொற்பொழிவுகள் இந்த இளம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விடுதலைக் கனலை மூட்டின.

# போராட்டங்களில் இவரும் பங்கேற்கத் தொடங்கினார். ஒருமுறை ஆங்கிலேய அதிகாரி ஒருவர் காந்தியை நோக்கி துப்பாக்கியை நீட்டியபோது, ‘முதலில் என்னை சுடு பார்க்கலாம்’ என முன்னே போய் நின்றாராம் வள்ளியம்மை.

# ‘தேவாலயங்களில் கிறிஸ்தவச் சடங்குப்படி நடத்தப்படும் திருமணங்கள் மட்டுமே செல்லும்’ என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து ஜோகன்னஸ்பர்க்கில் மகளிர் சத்தியாகிரகப் படை அணி திரண்டது. அதில் பங்கேற்றவர்களுக்கு இயன்றவரை தொண்டு செய்தார்.

# தடையை மீறி டிரான்ஸ்வால் முதல் நடால் நகர் வரையிலான அணிவகுப்பை தொடங்கினர். நகர எல்லைக்குள் நுழைந்த அனைவரும் கைது செய்யப்பட்டு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தினால் விடுதலை என்றபோது அது சத்தியாகிரகத்துக்கு இழுக்கு என துணிச்சலுடன் மறுத்தார்.

# ‘சொந்த கொடிகூட இல்லாத நாட்டின் கூலிகளுக்கு இவ்வளவு வெறியா?’ என்றார் ஓர் ஆங்கிலேய அதிகாரி. உடனே தனது சேலையைக் கிழித்து அந்த அதிகாரியின் முகத்தில் எறிந்த வள்ளியம்மை, ‘இதுதான் எங்கள் தேசியக் கொடி’ என்றாராம்.

# சுகாதாரமற்ற சிறை வாழ்க்கையாலும், சிறு பெண் என்றும் பாராமல் சிறையில் கடுமையாக வேலை வாங்கியதாலும், இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரை விடுவிக்க அரசு முடிவு செய்தது. விடுதலையாக மறுத்த வள்ளியம்மை, கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பிறகே வெளியே வந்தார். பின்னர் 10 நாட்கள் நோயுடன் போராடியவர், 1914 பிப்ரவரி 22-ம் தேதி தனது பிறந்தநாளன்றே உயிர்நீத்தார்.

# ‘இந்தியாவின் ஒரு புனித மகளை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் கடமையைச் செய்தவர். மனோபலம், தன்மானம் மிக்கவர். அவரது இந்த தியாகம் இந்திய சமூகத்துக்கு நிச்சயம் பலன் தரும்’ என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார் காந்திஜி.

# பல ஆண்டுகளுக்கு பிறகு, தில்லையாடிக்கு வந்த காந்திஜி, அந்த ஊர் மண்ணை கண்ணில் ஒற்றிக்கொண்டு கண்கலங்கினார். ‘பலன் கருதாமல் தியாக உணர்வுடன் போராடி வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மைதான் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்கு உரியவர்’ என்று புகழாரம் சூட்டினார்.

# வள்ளியம்மையின் தியாகத்தைப் போற்றும் வகையில், தில்லையாடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பொது நூலகமும் செயல்பட்டுவருகிறது.
நன்றி-விக்கிப்பீடியா ,தி இந்து தமிழ் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக