ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

உலக திருமண தினம் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை


உலக திருமண தினம் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை.

உலக திருமண தினம் 1986ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. திருமணம் என்பது ஒரு சமூக, சட்ட உறவுமுறையாகும். திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. திருமண பந்தத்தை உறுதிப்படுத்தி, தியாகத்துடன் வாழ்வதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.


திருமணமாம் திருமணமாம்...

திருமணம் என்பது முற்றுகையிடப்பட்ட கோட்டை. கோட்டைக்கு வெளியில் இருப்பவன் உள்ளே செல்லவும், உள்ளே இருப்பவன் வெளியில் வரவும் துடிப்பாங்கன்னு  ஒரு சினிமா வசனமுண்டு. திருமணமென்பது ஒதுக்கி தள்ளுமளவுக்கு   பயங்கரமானதுமல்ல! வாழ்ந்து பார்த்திடலாம்ன்னு அசால்ட்டா இறங்குமளவுக்கு சுலபமானதுமல்ல!


திருமணம்’ன்ற  வார்த்தைக்கு   தெய்வீகம் வாய்ந்த இணைதல்ன்னு பொருள். இரு மனங்கள் இணைதல்ன்னும் பொருள்படும். ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரையொருவர் தனக்குத்தான் பாத்தியம் என எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும்கூட இனிப்பாக்க வல்லது இவ்வுறவு. இந்த திருமணத்தின்மூலம் மாமனார், மச்சினர், நாத்தனார், மச்சினன், மச்சினிச்சி, மகன், மகள்ன்னு புதுபுது உறவுகளை தரக்கூடியது திருமணம். இதைவிட புனிதமான உறவும் இல்லை நெருக்கமான உறவும் இல்லை, இது ஒரு தெய்விகமான உறவுன்னு சொன்னா அது மிகையுமில்லை!!

ஆதிக்காலம் தொட்டு திருமண முறை நம்மிடையே இல்லை. பறந்து விரிந்திருந்த இயற்கையை தன்னகப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தபின்னே பொன், பொருள், நிலம் மாதிரி பெண் இனத்தையும் தனதாக்கிக்கொள்ள முனைந்தபோது திருமணம் உருவானது. பொருள் சேரச்சேர தனக்குண்டான சொத்துக்கள் வெளியாட்கள் வசம் போய்விடக்கூடாதென வாரிசு முறை உண்டானது. வாரிசு முறை வந்தபின் தன் பிள்ளை எதுவென அடையாளப்படுத்திக்கொள்ள ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலை உண்டானது. மருத்துவமுறையும், ஆரோக்கிய சிந்தனையும் உண்டானபின்  ஒருவனுக்கு ஒருத்தின்னு உண்டானது.


திருமணத்தில் பலவகை இருக்கு. கற்பு மணம், களவு மணம், கடிமணம், கந்தர்வ மணம், பதிவு மணம்,... இப்ப டிக்டாக் மணம்ன்னு பட்டியல் நீளுது.  இன்னிக்கு புனிதமா சினிமாக்களிலும், நம் திருமணங்களில் கா(க)ட்டப்படும் தாலி பண்டைய தமிழர்  திருமணங்களில்  கிடையாது.  இதுக்கு உதாரணமா ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடலையே சொல்லலாம். மெட்டி அணிவித்தல், காசி யாத்திரை, அருந்ததி பார்த்தல், அக்னி வலம்வருதல்ன்னு திருமண சடங்கினை பற்றி கனவு கண்ட ஆண்டாள் தாலி கட்டுவதை பத்தி பாடவே இல்ல. பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகுதான் தாலி பற்றிய குறிப்புகள் நமக்கு கிடைக்குது.  தாலம் பனை ன்ற பனை ஓலையில் இன்னாரது மகனான இவன், இன்னாரது மகளான இவளை, இன்னார் முன் மணந்ததாய் குறிப்பெழுதி, கையொப்பமிட்ட சுருள் ஒன்றையே மணமகள் கட்டப்பட்டது. அதனாலாயே தாலின்னு பேர் வந்தது. பனை ஓலை சுருள் அடிக்கடி பழுதானதால் உலோகத்தால் ஆன தாலி உண்டானது.

ஆண் நிமிர்ந்து நடந்தே பழக்கப்பட்டவன், அப்படி நிமிர்ந்து நடப்பவனுக்கு எதிரில் வரும் பெண்ணின் கழுத்து தெரியும். அதில் தாலி இருந்தா கல்யாணம் ஆன பெண்ன்னு ஒதுங்கி போவான். அதேமாதிரி தலைக்குனிந்து நடக்கும் பெண்ணுக்கு எதிரில் வரும் ஆணின் கால்தான் தெரியும். எதிரில் இருப்பது திருமணம் ஆன ஆண்ன்னு சொல்லி அவள் விலகிப்போவாள். காலப்போக்கில் அஞ்சு கிராம் மெட்டியை சுமக்கமுடியாம அதையும் பெண்ணுக்கு போட்டுவிட்டாங்க. ஆனா, இன்னிக்கும் எங்க ஊர் திருமணங்களில் ஆணுக்கும் மெட்டி அணிவிப்பாங்க. திருமணம் முடிஞ்ச சிலநாட்களில் அந்த மெட்டியை கழட்டிடுவாங்க :-(. அதேமாதிரி முன்னலாம் புரோகிதர் வச்சுலாம் கல்யாணம் நடத்தினதில்ல. இன்னிக்கும் வட தமிழகத்தில் சில இனத்தவரில் புரோகிதர் வழக்கமில்லை.

ஒருவனை வீழ்த்தனும்ன்னா அவனுக்கு ஆசைய உண்டாக்கனும்ன்ற சினிமா வசனத்துக்கேற்ப திருமண வாழ்க்கை கொண்டாட்டமாதான் இருக்கும்ன்னு ஆசைக்காட்டவோ அல்லது இப்படி கொண்டாட்டமாதான் இருக்கும்ன்னு  அறிவுறுத்தவோ பல சடங்குகள் நடத்தப்படுது. இதுலாம் வெறும் சடங்குகள் மட்டுமில்லை. அந்த சடங்குகளில் பல அர்த்தங்கள் இருக்கு. இனி தமிழர் திருமண சடங்கில் சிலவற்றை  பார்க்கலாம்...

பந்தகால் நடுவது..
பந்தகால் நடுவதுதான் திருமண நிகழ்ச்சியின் முதல் சடங்கு. இது மூன்று அல்லது ஐந்து நாட்கள் முன்னதாக நடக்கும். பந்தல் அமைப்பதின் நோக்கம், அழகுக்காகவும், திருமணதின்போது மேலிருந்து அழுக்குப் பொருட்கள், பல்லி போன்றன விழுந்து, அபசகுனமாகிடாமல் இருக்க உண்டானது. பந்தகால் நட வேரில்லாமலும் துளிரும் தன்மையுடைய பூவரசம் மரத்தை வெட்டி நட வேண்டும். மரத்தின் நுனியில் முனை முறியாத மஞ்சள், 12 மாவிலைகள்,பூ மூன்றையும் இணைத்துகட்டி, சிறுகுழியில் வெள்ளி நாணயம்,  பூ, நவ தானியம் இவற்றை போட்டு பந்த கால் நடனும். கற்பூரம், சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைத்து. பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி,மஞ்சள்,குங்குமத்தை மேல் நோக்கி தடவி குங்குமம் வைக்கவேண்டும். மாவிலை , நவதானியம் , வெள்ளி நாணயம் , பூ , தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும்.  பஞ்சபூதங்களுக்கும் திருமணத்தை பற்றி அறிவித்து, அவற்றின் ஆசிகளை பெறுவதே இதன் நோக்கமாகும். பந்தலை கமுகு, வாழை, தென்னை ஓலை, பனை, மாவிலைகளால் அலங்கரிப்பாங்க.

வாசலில் வாழைமரம் கட்டுவது..
திருமணம் நடைப்பெறும் சத்திரம், வீடுகளில் வாழைமரம் கட்டுவது வாழைமரம் ஒருமுறைதான் குலைபோடும். அதுபோல் எமது வாழ்விலும் திருமணம் ஒருமுறைதான் என்பதை உணர்த்துவே வாழைமரம் கட்டப்படுது. அதுமட்டுமில்லாம வாழைமரத்தின்ன் இலை, பூ, காய், கனி, தண்டு என அனைத்து பாகமும் அடுத்தவருக்கு உதவும். அதுபோல் ஒருவருக்கு ஒருவர் துணையாய் இருக்கனும். வாழை காற்றில் உள்ள தீயசக்திகளையும் நஞ்சினையும் ஈர்க்கும் சக்தி கொண்டது. வாழையடி வாழையாக வாழை மரம் தழைத்து வருவது போல, நமது சந்ததியும் பெருக வேண்டும் என்பதாகும்.
சில பகுதிகளில் வாழைமரத்தோடு பாக்கு, தென்னங்குலை, பனங்குலையும் கட்டப்படுது. பாக்கு கொத்து கொத்தாய் காய்க்கும். அதுப்போல உறவுகள் கூடி வாழ்வதே சிறப்பு என உணர்த்தவும்,  தென்னை மரம் கற்பகத்தரு. இது நூற்றாண்டு காலம் வாழும். அதுமாதிரி நூறாண்டுகாலம் அடுத்தவர் பயனுற வாழவேண்டுமென உணர்த்தவே இந்த ஏற்பாடு.

முளைப்பாலிகை..
திருமண வீட்டில் மூன்று அல்லது ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றி நவதானியங்களையிட்டு வளர்ப்பாங்க. விதை முளைத்து வரும் வேளையில் பார்த்தால் ஆண் உயிரணு போல தோணும். அந்த விதையை, பெண் அம்சமான பூமியில் விதைத்தால் ஒரு உயிர் வளரும்.  ஆண், பெண் சேர்க்கையால் வரும் உயிரைப்போலவே பயிரும் கொண்டாடப்படனும்ன்னுதான் இந்த ஒரு ஏற்பாடு.

கலப்பரப்பு அல்லது சம்பந்தம் கலத்தல்..
மணமகள் அழைப்பின்போது,  சேலை, மாலை, வரிசை தட்டோடு, பானகம், மோரும் இரு பானைகளில் எடுத்துக்கொண்டு சென்று மணமகளின் சேலையை விரித்து( இப்ப ஜமுக்காளம்) அதில் இரு வீட்டாரும் எதிரெதிராய் அமர்ந்து சந்தனம், குங்குமமிட்டு, மாலை மாற்றி, இருவேறு சூழல், பழக்கவழக்கம் என மாறுப்பட்ட இரு குடும்பங்கள் ஒருவருக்கொருவர் உறவாய் கலந்ததுக்கு அடையாளமாய் இனிப்பான பானகத்தண்ணீரையும், புளிப்பான மோரும் கலந்து குடிப்பாங்க.

ஆணைக்கால் அல்லது முகூர்த்தக்கால்  நடுதல்..
மன்னர் காலத்தில் திருமண வைபவங்களுக்கு அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவாங்க. எல்லாத் திருமணங்களுக்கும் அரசனால் போகமுடியாதே! அதனால்  தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால்ன்னு ஆனது.   அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப்பட்டதுன்னு அர்த்தம்.  திருமணப் பந்தலில் கலியாண முருங்கை மரக்கிளை  வெட்டி அதன் மேல்நுனியில் 5 மாவிலைகளை  மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, பட்டுத்துண்டில் நாணயத்தை முடித்து பெரியவர் ஒருவர் அத்தடியை நிலத்தில் ஊன்றியதும் அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்டுவார்கள். அதனடியில் நவதானியத்தொடு பவளம் அல்லது நவமணிகள் இட்டு நீர் பால் ஊற்றி (3 அல்லது 5சுமங்கலிப் பெண்கள்) மரத்திற்குத் திருநீறு, சந்தனம், குங்குமம் சார்த்தி, இத்திருமணம்  வளரவேண்டும் என்று நினைத்து கும்பத்தண்ணீரை ஊற்றுவர்.

பெண் அழைப்பு..
முன்னலாம்  திருமணம் மணமகன் வீட்டில் நடக்கும். வெளியூரிலிருந்து வரும் பெண்ணை, இந்த பெண்ணைதான் இன்னார் மணக்கப்போறன்னு ஊருக்கு தெரியப்படுத்தவே இந்த ஏற்பாடு. சிலசமயம் பெண்வீட்டிலும் திருமணம் நடக்கும். மணமகனை ஊருக்கு அறிமுகப்படுத்தவே இந்த ஏற்பாடு.

கும்பம் வைத்தல்..
கும்பம் இறைவனது திருஉடம்பின் அடையாளம் .இறைவன் முன் இத்திருமணம் நடைப்பெறுகின்றது என உணர்த்தவே இந்த சடங்கு.

காப்புக்கட்டுதல்..
திருமணத்தில் நல்லவர், கெட்டவரென பலரும் கலந்திருப்பர். அவர்களால் எந்தவித தீட்டுக்களோ இடையூறுகளோ துக்கங்களோ மணமக்களை பாதிக்காதிருக்கவே மஞ்சள் கயிற்றில் விரளி மஞ்சளை கோர்த்து காப்பு கட்டப்படுது. மஞ்சள் சிறந்த கிருமி நாசினி உலகுக்கே தெரியும்.

ஹோமம் வளர்த்தல்..
அரச, புங்க, சந்தனம், வேம்பு, வேங்கை, பட்டை, பொரி, அவல், பேரிச்சை, பச்சை கற்பூரம்.. என பலவகை பொருட்கள் ஹோமத்தில் இடப்படும். இந்த பொருட்கள்  சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது ஹோமப்புகை உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் .

தாரை வார்த்தல்..
’தாரை’ன்னா நீர். நீருக்கு தீட்டில்லை. தெய்வத்தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்றனர்.  என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உங்கள் வீட்டுக்கு மருமகளாகவும், உன் மகனுக்கு மனைவியாகவும் மனதார  கொடுக்கின்றேன் “ என மணமகளின் பெற்றோர் , தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு – மகள் ( மருமகள் ) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என ஏற்றுக்கொள்ளும் சடங்கு இது.


பாதபூஜை...
பெற்று வளர்த்த பெற்றோருக்கு மரியாதை செய்யும் விதமாய் பாதபூஜை செய்யப்படுது.
பால், தயிர், நீர் கொண்டு செய்யப்படும் இந்த நீர் நூறு கங்கை நீருக்கு சமம்.

தாலி கட்டுதல்..
இன்றிலிருந்து நீ என்னவள், நான் உனக்கு பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் சுகதுக்கங்களில் பங்கெடுப்பேன் என உணர்த்தவே இந்த சடங்கு...

கெட்டி மேளம்
திருமண சடங்கின்போது மேளம் நாதஸ்வரம் ஒலிக்கவிடுவது சபையில் கூடியிருப்போரின் அமங்கலச்சொல், தும்மல், இருமல் மாதிரியான அபசகுன ஓசை மணமக்கள் காதில் விழாமல் இருக்கவே கெட்டி மேளம் ஒலிக்கவிடப்படுது.

விளக்கு பிடித்தல்
சில திருமணங்களில் தாலி கட்டும்போது மணமகனின் சகோதரி அல்லது அத்தை மணமக்கள் பின்னிருந்து விளக்கு பிடிப்பர். இத்திருமணத்திற்கு விளக்கு பிடித்தவர் சாட்சி என சொல்லவெ இந்த சடங்கு. .

மாலை மாற்றுதல்..
நெஞ்சை தொட்டிருக்கும் மாலையை மூன்றுமுறை மாற்றிக்கொள்வது, இருவரும் மனங்களை பரிமாறிகொள்வதன் அடையாளம்..

தாலிக்கட்டியபின்  மணமகன் மணமகளின் உசந்தலையில் குங்குமம் வைப்பது. இனி இவள் தன் கணவனுக்கே உரியவள் என எடுத்துக்காட்ட..

அட்சதை
மஞ்சள் கலந்த அரிசி அட்சதை எனப்படும். மணமக்களை தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமையவும் ஆசீர்வதிப்பதன் அடையாளம்.
tamil wedding
கைப்பிடித்தல்
இன்பம் துன்பம், செழுமை ஏழ்மை, இளமை முதுமை என அனைத்திலும்  ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என சொல்வதே கைத்தலம் பற்றுதல்.

அம்மி மிதித்தல்
பெண்ணின் வலதுகாலை  மணமகன் கையால் தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி போடுவது ஒரு சடங்கு. எந்த நிலையிலும் இந்தக் கல்லைப் போல் நிலையாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண்ணிற்கு கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் ஒருசேர உணர்த்தும் சடங்கு. கல் எப்படி எதையும் தாங்குமோ அது போல் வாழ்கையிலும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என உணர்த்துது.

அருந்ததி பார்த்தல்..
தாலிக்கட்டி,  முடித்து, அக்னியை வலம்வந்தபின் இருவரையும் கூட்டிக் கொண்டு மண்டபத்தின் வடக்கு வாசலுக்கு வந்து வானத்தில் இருக்கும் நடத்திரங்களுக்குப் பூஜை செய்து அருந்ததியைக் காண்பிப்பர். இப்பலாம் மணமேடையிலேயே காண்பிக்கப்படுது. “நிரந்தரக் கற்பு நடசத்திரமாக மின்னுவேன்” என பெண் உறுதி எடுத்திக்கொள்ளும் சடங்கு இது. அதுமட்டுமில்லாம சப்த ரிஷி மண்டலம் எனும் ஏழு நட்சத்திரக்கூட்டம் இருக்கும். அதில் ஆறாவது நட்சத்திரம் வசிஷ்டர். அவருக்கு அருகிலேயே அருந்ததி நட்சத்திரம் இருக்கும். இரு நட்சத்திரம் இருந்தாலும் நாம் பார்க்கும்போது ஒரே நட்சத்திரமாய் தெரியும். கணவன், மனைவி இருவராய் தனித்து இருந்தாலும்  ஒருவராய் ஒற்றை கருத்துடையவராய் இருக்கனும்ன்னு சொல்லும் சடங்கு இது.

மறுவீடு..
முன்பின் அறிமுகமில்லாத வீட்டுக்கு மணமகளை(னை) ஒற்றை ஆளாய் திடுதிப்புன்னு அனுப்பமுடியுமா?! அதனால் மறுவீடுன்னு மூன்றுமுறை சொந்தங்கள் சூழ போய் வருவாங்க.  இந்த நாளில்தான் சீர்வரிசை, பண்டம்லாம் கொடுத்து அனுப்புவாங்க. இப்ப மண்டபத்துலயே முடிச்சுக்குறாங்க.  மறுவீட்டில் மாப்பிள்ளை, பெண்ணும் சந்தனம் தடவி குங்குமம் இட்டு பால் பழம் சாப்பிட்டு சின்ன சின்ன விளையாட்டுகளில் ஈடுபடுவாங்க. அது எதுக்குன்னா, இன்னிக்கு மாதிரி திருமணம் நடந்த அன்னிக்கே சாந்திமுகூர்த்தம் நடத்தி தாம்பத்தியத்துல ஈடுபடுத்த மாட்டாங்க. இந்த சின்ன விளையாட்டுகளால், ஒருவருக்கொருவர் உடல் ஸ்பரிஷம் ஏற்பட்டு கூச்சம் மறையும். அதுக்கப்புறம் தாம்பத்தியத்தின்போது கூச்சம் இருக்காது. அதுக்காகவே சந்தனம் தடவுறது, குங்குமம் வைக்குறது, கணையாழி எடுப்பது, அப்பளம் உடைக்குறது, பொன்னூஞ்சல் ஆடுறதுன்ன்னு சின்ன சின்ன விளையாட்டுகள் நடத்தப்படுது.

விருந்து..
நமக்காக, நம் அழைப்பை ஏற்று பல்வேறு இடர்களுக்கிடையில் வந்து திருமணத்தில் கலந்துக்கிட்டு, மணமக்களை வாழ்த்தி நம் மனசை நிறைய வைத்த சொந்தங்களின் வயிறு நிறைக்க அறுசுவை உணவை பரிமாறுவது..

அவரவர் இடம்,  பழக்கவழக்கம், இனம், மதம் சார்ந்து சடங்குகள் மாறினாலும் அத்தனை சடங்கின் நோக்கம் திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்.இரு உடல்களை இணைச்சு வைக்கும் நோக்கம் மட்டுமே அங்கில்லை. இரு மனங்களையும் இணைச்சு, அதன்மூலம் நல்வாரிசுகளை பெற்றெடுத்து இரண்டு குலம் தழைக்க உண்டானதே இந்த திருமணம் முறை. திருமணத்துக்கு வெறும் உடல் தகுதி, சொத்து, நகை மட்டும் போதாது. மனசளவிலும் தயாராகனும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகனும்.  ஒரு திருமணம் தோற்குதுன்னா அங்க இரு பிடிவாதக்காரர்கள்தான் காரணமே தவிர, எங்கோ இருக்கும் ஒன்பது கிரகங்கள் இல்லைன்ற வார்த்தை 100% உண்மை.  இதை உலகுக்கு உணர்த்தவே ,
உலக திருமண தினம் 1986ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக