புதன், 21 டிசம்பர், 2016

அன்னை சாரதா தேவி பிறந்த தினம் டிசம்பர் 22 .


அன்னை சாரதா தேவி பிறந்த தினம் டிசம்பர் 22 .

அன்னை சாரதா தேவி (ஆங்கிலம்:Sarada Devi, வங்காள: সারদা দেবী; இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க) (22 திசம்பர் 1853 – 20 சூலை 1920), ஆன்மிகவாதியும், இராமகிருஷ்ணரின் மனைவியும் ஆவார். இராமகிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியத் தூணாக இருந்தவர்.

இளமைக்காலம்

ஜெயராம்பாடியில் சாரதா தேவியின் வீடு (நடுவில்)
அன்னை சாரதா தேவி கல்கத்தாவில் ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் 1853 டிசம்பர் 22 ஆம் நாள் ராமசந்திர முகர்ஜிக்கும் சியாமா சுந்தரி தேவிக்கும் முதல் குழந்தையாகப் பிறந்தார். இவர் பள்ளி சென்று படித்ததில்லை என்ற போதும் பிற்காலத்தில் தமது சொந்த முயற்சியால் சிறிது படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.

ஐந்து வயதில் இவர், ராமகிருஷ்ணரின் வாழ்க்கைத் துணைவியானார். தமது கணவரைப் பலர் பைத்தியக்காரர் என்று கூறுவதால் வருத்தப்பட்டு அவருக்கு உதவி செய்ய வந்தார். அங்கு ராமகிருஷ்ணரின் ஆன்மிக வாழ்விற்குத் துணையாக அவருக்கும், அவரைக் காண வரும் பக்தர்களுக்கும் சமைப்பது, அவரது வழிகாட்டுதலில் ஆன்மிக சாதனைகளில் ஈடுபடுவது என்று ஆன்மிகப் பணிகளைச் செய்தார்.

சங்க ஜனனி
சுவாமி விவேகானந்தர், அன்னை சாரதா தேவியை ’சங்க ஜனனி’ என்று குறிப்பிடுவார். ஸ்ரீராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர், 1888 ஏப்ரல் மாதம் கயைக்குச் சென்ற அன்னை, அங்கு உள்ள சன்னியாசிகளுக்கு உள்ள மட வசதிகளை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் துறவிச் சீடர்கள் இருந்த ஏழ்மை நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்து வருந்தி அழுதார். அவர், ஸ்ரீராமகிருஷ்ணரிடம் "..உமது பெயரில் அனைத்தையும் துறந்த என் பிள்ளைகள் உணவுக்காகப் பிச்சையெடுப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உம்மிடம் எனது பிரார்த்தனை இதுதான்: உமது பெயரைச் சொல்லிக் கொண்டு உலகைத் துறப்பவர்களுக்குச் சாதாரண உணவும் உடையும் கிடைக்க வேண்டும். அவர்கள் உமது உபதேசங்களையும் லட்சியங்களையும் மையமாகக் கொண்டு ஓரிடத்தில் ஒன்றுகூடி வசிக்க வேண்டும். உலக வாழ்க்கையில் துன்புற்ற மக்கள், அவர்களிடம் வந்து உமது அமுதமொழிகளைக் கேட்டு ஆறுதல் பெற வேண்டும். அதற்காகவே அல்லவா நீர் வந்தீர்! அவர்கள் அலைந்து திரிவதைக் காண என்னால் சகிக்க முடியவில்லை" என்று பிரார்த்தித்தார். இவ்வாறு தமது பிரார்த்தனை மூலம் ராமகிருஷ்ண இயக்கத்திற்கு முதல் விதையை இட்டார். அதனாலேயே ’சங்க ஜனனி’ (இயக்கத்தை தோற்றுவித்தவர்) எனப் போற்றப்படுகிறார்.

பெண் கல்வி
அன்னை சாரதா தேவி பெண் கல்வியை ஊக்குவித்தார். நிவேதிதையின் மறைவுக்குப் பின்னரும் அவர் ஆரம்பித்த பெண்கள் பள்ளி தொடர்ந்து நடைபெறக் காரணமானவர்.

கடைசி உபதேசம்
1919 இறுதியிலிருந்து அவரது உடல் ஆரோக்கியம் குன்றியது. அவரது நோய் கடுமையான காய்ச்சல் (Kala-azar) என்று கல்கத்தாவில் கண்டு பிடிக்கப்பட்டது. தமது வாழ்நாளின் இறுதிநாள் 1920 ஜூலை 20 வரை அவர் இந்த நோயால் அவதிப்பட்டார். ”மகளே, யாரெல்லாம் வந்திருக்கிறார்களோ, யாரெல்லாம் வரவில்லையோ, இனி யாரெல்லாம் வரப்போகிறார்களோ, அந்த என் பிள்ளைகளுகெல்லாம் என் அன்பைத் தெரிவித்துவிடு.என் நல்லாசிகள் அவர்களுக்கு எப்போதும் உண்டு” என்று தமது கடைசி உபதேசத்தை அளித்தார்.


ஆன்மிகவாதி, ராமகிருஷ்ணரின் துணைவி

ராமகிருஷ்ண இயக்கத்தின் ஆணிவேராகத் திகழ்ந்து ஏராளமான சீடர்களை ஆன்மிகப் பாதையில் வழிநடத்திய அன்னை ஸ்ரீ சாரதா தேவி (Sri Sarada Devi) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# மேற்குவங்க மாநிலத்தின் ஜெயராம்பாடி கிராமத்தில் (1853) பிறந்தார். தந்தை கோயில் பூசாரி. பள்ளிக்குச் சென்று பயின்றதில்லை. இளம் வயதிலேயே தனித்தன்மையுடன் விளங்கினார்.

# கழுத்து வரை நிற்கும் தண்ணீரில் இறங்கி, பசுக்களுக்குப் புல் வெட்டி வருவார். வயலில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பார். பருத்தித் தோட்டத்தில் தாயுடன் சேர்ந்து பருத்தி எடுப்பார். ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டபோது, அப்பா பத்திரப்படுத்தி வைத்திருந்த அரிசியை எடுத்து சமைத்து, ஏழைகளுக்குப் பரிமாறி, பசியாற்றினார்.

# வீட்டில் தெய்வீகச் சூழல் நிலவியதால், இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும் ஆன்மிகத்தையும் கற்றார். ஆன்மிக உரைகள், புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். பின்னாளில் சிறிது படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.

# அந்நாள் வழக்கப்படி ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இவரை பால்ய விவாகம் செய்து வைத்தனர். ஆன்மிகத் தேடலில் மூழ்கிய பரமஹம்சரைப் புரிந்துகொள்ளாத கிராமத்து மக்கள், ‘பாவம் இந்த அப்பாவி சிறுமியை, மனநிலை சரியில்லாதவருக்கு கட்டிவைத்துவிட்டார்களே’ என்று பரிதாபப்பட்டனர். அதனால் அச்சமடைந்தார்.

# நேரில் சென்று கணவரைப் பார்த்த பிறகு, அவர்கள் கூறியது உண்மையல்ல என்று தெளிந்தார். கணவர் இறைவடிவம் என்பதை உணர்ந்து, அவரையே குருவாக ஏற்றார். தானும் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். இவரை உலக நாயகியான அம்பிகையாகப் போற்றி, பூஜித்தார் பரமஹம்சர்.

# சாதாரண கிராமத்துப் பெண்ணாக கணவனைத் தேடி வந்த இவர், ‘அன்னை சாரதாதேவி’யாக மாறினார். சீடர்கள், பக்தர்களுக்கு தானே சமைத்து பரிமாறுவார். அவர்கள் சாப்பிடும்போது அருகில் அமர்ந்து விசிறிவிடுவார். சீடர்களுக்கு தீட்சை அளிக்கும்போது, ஆச்சார நியமங்களைவிட தூய்மையான பக்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்.

# இறுதி நாட்களில் ராமகிருஷ்ணர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, அருகே இருந்து கண்ணும் கருத்துமாக பணிவிடை செய்தார். பரமஹம்சரின் மறைவுக்குப் பிறகு, சீடர்களை சிறப்பாக வழிநடத்தினார்.

# ஒருமுறை கயாவுக்கு சென்றவர் அங்குள்ள மடங்களில் துறவிகளுக்கு இருந்த வசதிகளையும், ராமகிருஷ்ணரின் சீடர்கள் சிரமப்படுவதையும் ஒப்பிட்டுப் பார்த்து வருந்தினார். ‘என் பிள்ளைகளுக்கு நல்ல உணவு, உடை, தங்குவதற்கு இடம் வேண்டும். அவர்கள் அலைந்து திரிவதைக் காண சகிக்கவில்லை’ என்று பரமஹம்சரிடம் மானசீகமாக பிரார்த்தித்தார். இதுதான் ராமகிருஷ்ண இயக்கம் தோன்றுவதற்கான அஸ்திவாரம்.

# அன்னையின் அருளாசியுடன் கங்கைக் கரையில் உள்ள பேலூரில் ராமகிருஷ்ண மடம் 1898-ல் தொடங்கப்பட்டது. ‘சங்க ஜனனி’ என்று இவரைப் போற்றினார் விவேகானந்தர்.

# ‘மன நிம்மதி வேண்டுமானால் பிறரிடம் குறைகாணாதீர்கள். உங்கள் தவறுகளைப் பாருங்கள். மொத்த உலகையும் உங்கள் சொந்தமாக்கிக்கொண்டு பழகுங்கள். யாருமே அந்நியர் அல்ல. அனைவரும் என் குழந்தைகளே. மொத்த உலகமும் உங்கள் சொந்தம்’ என்று உபதேசித்தார். அனைவருக்கும் அன்பு, கருணை, ஆசியை வாரி வழங்கிய அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் 67-வது வயதில் (1920) மறைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக