வியாழன், 8 பிப்ரவரி, 2018

உலக காதலர் தினம் பிப்ரவரி 14.



உலக காதலர் தினம் பிப்ரவரி 14.

உலக காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான, தகவல்கள் கூறப்படுகின்றன. காலம் காலமாய் கூறப்பட்டு வரும் காதலர்தினக் கதைகள் தியாகம் நிறைந்தவை. அந்த கதைகளை காதலர் தினத்திற்காக பகிர்ந்து கொள்கிறோம்.

வேலண்டைன்ஸ் டே

வேலண்டைன்ஸ் டே என்று உலகமெங்கும் கொண்டாடப்படும் காதலத் தினம் வேலண்டைன் பாதிரியாரின் நினைவாக கொண்டாடப்படுகிறது என்பது நம்பிக்கை. கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர்.
திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்யவேண்டும் என்று துடித்தவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையை மீறி திருமணம் நடத்திவைத்தார் வேலண்டைன். இந்த உதவிக்கு மன்னன் மரணதண்டனையை பரிசளித்தார். இரண்டு மனங்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வேலண்டைன் கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள கதை இது.

சீனர்களின் காதலர் தினம்

சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட எழிலுடன் வந்து நின்ற அவளைப் பார்த்தவுடன், நுவூ காதல் கொண்டான். இந்த காதல் திருமணத்தில் முடிந்தது. விஷயம் தெரிந்த மன்னர் இருவரையும் பிரித்து வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.


கிருஸ்துவ விழா

பண்டைய காலத்தில் ரோமில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. இது பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 15 வரை கொண்டாடப்படும். வாழ்க்கை வளமாக அமைய கடவுளை வேண்டும் விழா இது. ரோம் நகரில் ஆடல் பாடல் என அமர்க்களப்படும். இதனை கி.பி 490 களிலி போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இதனை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், ஒரு கிருஸ்தவ விழாவின் மூலம் செயலிழக்கச்செய்யவும் போப் தீர்மானித்தார். எனவேதான் பிப்ரவரி 14ம் தேதியை புனித வேலண்டைன்நாள் என அறிவித்தார் என்றும் பலரால் நம்பப்படுகிறது.

பிரியமானவர்களுக்கு பரிசு

கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில் வேலண்டைன்ஸ் தினத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர். கிருஸ்துமஸ் காலத்தில் கிருஸ்துமஸ் தாத்தா வீடுகளில் பரிசு வழங்குவதைப் போல பிரியத்திற்குரியவர்களின் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல்லும் வழக்கம் இருந்துள்ளது. இவ்வாறு இனிப்புகளை வைப்பவர்கள் ஜேக் என்று அழைக்கப்பட்டனர்.
பாய் ஃப்ரண்ட், கேர்ள் ஃப்ரண்ட் டே
ஸ்வீடன் நாட்டில் இந்தநாளை “அனைத்து இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் காதலர் தினத்தை “நமோரோடோஸ் டயாடாஸ்” என்று அழைக்கின்றனர். இதற்கு அர்த்தம் பாய்ஃபிரண்ட் மற்றும் கேர்ள்ஃப்ரண்ட் தினம் என்பதாகும். ஸ்பெயினில் இந்த நாளை செயின்ட் வேலண்டைன் என்று அழைக்கின்றனர்.

நட்புக்கு மரியாதை

பின்லாந்து நாட்டில் வேலண்டைன்ஸ் டே சற்று வித்தியாசமானது. இது காதலர்களுக்கான தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ‘ஸ்டேவான்பாபியா’ என்று அழைக்கின்றனர். அதாவது இதற்கு நண்பர்கள் தினம் என்று பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை விமரிசையாக கொண்டாடுகின்றனர். நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும், பரிசுகள் கொடுப்பதும் என இந்த நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். எங்கெங்கோ இருக்கும் நண்பர்கள் எல்லாம் ஒன்றாக கூடி இந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடுவது சிறப்பம்சம்.

ஹாலிடே ஆஃப் செக்ஸ்

பிரேசில் நாட்டில் பிப்ரவரி 14 ம் தேதியை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கின்றனர். அந்த நாளை அமர்க்களப்படுத்துவார் பிரேசில் நாட்டினர். அபோல் அவர்களுக்கு காதலர் தினம் வேறு தனியாக ஒருநாள் உண்டு. அது ஜூன் 2 ம் தேதி அந்தநாளில் காதலர்கள் மற்றும் தம்பதியர் வாழ்த்து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் என சகலத்தையும் பரிமாறிக்கொள்வது வாடிக்கை


எப்படி வந்தது காதலர் தினம்?

பிப்ரவரி மாதம் பிறந்ததுமே சட்டென்று நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக இளைஞர்கள் பலர் பயன்படுத்திக் கொள்கின்றனர். லூப்பர்காலியா என்ற திருவிழாவை ரோமானியர்கள் கொண்டாடி வந்தனர். பிப்ரவரி 14ம் தேதி மத்திய இங்கிலாந்தில் பறவைகள் மூலம் ஜோடிகளைத் தேர்வு செய்த ஆங்கிலேய பழமைவாதிகளின் இந்த நாளையே காதலர் தினமாக கொண்டாடுவதாக சிலர் கூறுகின்றனர். இருப்பினும், ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கிளாடிஸ் மிமி ஆட்சி புரிந்தபோது, தனது படைவீரர்களுக்கு முட்டாள் தனமாக உத்தரவு பிறப்பிப்பானாம். இந்த அரசனின் நடவடிக்கையால் படையில் சேர பலர் தயங்கினர். திடீரென ஒருநாள் அவன் அமைச்சர்களை அழைத்தான். ‘ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று உடனே ஒரு அறிவிப்பு செய்யுங்கள். ஏற்கனவே நிச்சயித்த திருமணங்களும் ரத்து செய்யப்படுகிறது. இதை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலை துண்டித்து கொல்லப்படுவார்கள்’’ என்றானாம்.
இதை கேட்ட ரோமானியர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகினர். திருமணமானவர்கள் மனைவியை பிரிந்து வரத் தயங்குகிறார்கள். காதலிக்கும் வாலிபர்கள் காதலியை பிரிந்து வர தயங்குகின்றனர். இது இரண்டும் இல்லாவிட்டால் படையில் சேர்வார்கள் என்று அவன் நினைத்துள்ளான். பாதிரியார் வாலண்டைன் அரசனின் இந்த அறிவிப்பை மீறி இரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார். காதலிக்கு அனுப்பிய முதல் வாழ்த்து: இதையறிந்த மன்னன் வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்தான். மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் மலர்ந்துள்ளது. வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்த சிறைத் துறைத் தலைவன் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். அனைத்து காவலையும் மீறி அட்டை ஒன்றில் காகித அட்டை ஒன்றின் மூலம் செய்தி அனுப்பினார் வாலண்டைன். இந்த வரலாறு உண்மையாக இருக்குமானால், முதல் காதலர் வாழ்த்து இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இந்த கடிதத்தை படிக்கும் அதே நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரவதை செய்த பின் வாலண்டைனின் தலை துண்டிக்கப்பட்டது. அந்த நாள் 270வது வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி. வாலண்டைன் ரோம் மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார். ரோமானிய சர்ச்சுகள் ஐரோப்பியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த போது ‘பாகான்‘ விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது. இதுவே வாலண்டைன் தினமாகக் கொண்டாடப்பட்டது. சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் மி வாலண்டைனை புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


“காதலர் தினம் - சொல்லக் கூடிய சில தகவல்கள்”

Valantine என்ற பெயர் வந்ததற்குச் சுமாராக ஏழு கதைகள் உள்ளன. பின்னாளில் இந்த ஏழு கதைகள் அல்லது சம்பவங்கள் ஒரு கதையாக உள்வாங்கப்பட்டிருக் கலாம். புனித வலன்டைன் என்கின்ற கிறிஸ்தவ பாதிரியார் செய்து வந்த பிரசாரம் காரணமாக, மக்கள் இராணுவத்தில் சேரவேயில்லை என்றும், இதனால் கோபமுற்ற சக்கரவர்த்தி கிளோடியஸ் வலன்டைன் பாதிரியாரை சிறையில் அடைத்ததன் விளைவாக, சிறையில் வலன்டைன் பாதிரியார் இறந்தார் என்றும் அறியப்படுகின்றது. பாதிரியார் இறந்த விதம் குறித்தும் பல உப கதைகள் உண்டு. வலன்டைன் பாதிரியார் பல காதலர்களுக்கு துணை நின்று அவர்களுடைய காதலை நிறைவேற்றி வைத்தபடியால், அவர் காதலர்களின் அன்புக்குரிய பாதிரியாராக அறியப்பட்டார். பின்னாளில் புனித வலன்டைன் தினம் காதல் தினமாக அறியப்பட்டது.
தமிழர் வாழ்வில் ‘காதலர் தினம்’ என்ற ஒன்று தேவையா? அல்லது தமிழர் வாழ்வில் காதல் என்ற ஒன்று இல்லையா? என்று விதவிதமாகக் கேட்போரையும் சற்றுக் கவனிப்போம்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் காதலர் தினத்தைப் பழித்தும், இகழ்ந்தும் பேசி வருவதோடு, அது வெள்ளைக்காரனின் பண்பாடு என்று ஒதுக்கித் தள்ளுவதையும் இன்று நாம் பார்க்கின்றோம். காதலர் தினம் உண்மையில் மேல்நாட்டுப் பண்பாடா? தமிழன் எப்போதும் பேசித்தான் திருமணம் செய்தானா? தமிழனுக்கும் காதலுக்கும் காத தூரமா? என்றெல்லாம் கேள்விகள் எம்மவர் மனதில் எழுந்து கொண்டுதான் உள்ளன.
உண்மையைச் சொல்லப் போனால், காதல் விடயத்தில், காதலர் தின விடயத்தில் மேல்நாட்டவனுக்கு தமிழன் அப்பனல்ல, பாட்டனுமாவான்! அந்த அளவிற்குக் காதல் விடயத்தில் புகுந்து விளையாடியவன் தொல்தமிழன்! சங்ககால இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் ஏன் தொல்காப்பியத்திலும் காதலும் காதல் மணமும் எடுத்தாளப்பட்டுள்ளன. இந்தக் காதலர் தினத்தை ஒரு சாட்டாக வைத்து எம் பழம் தமிழர் மரபை நாமும் திரும்பிப் பார்ப்போம்!
தொல்காப்பியத்தில் வருகின்ற கற்பு என்கின்ற இடங்களை ஆராய்ந்தால் அது இல்லறம் என்கின்ற பொருளையே குறிக்கின்றது என ஆய்வாளர்கள் கூறுவார்கள். பத்துவிதமான திருமணங்கள் சங்க காலத்தில் நடந்ததாக நாம் அறியக்கூடியதாக உள்ளது.

1. களவுமணம்
2. தொன்றியல் மரபின் மன்றல்
3. பரிசல் கொடுத்து மணத்தல்
4. சேவை மணம்
5. திணைக் கலப்பு மணம்
6. ஏறு தழுவி மணமுடித்தல்
7. மடலேறி மணமுடித்தல்
8. போர் நிகழ்த்தி மணமுடித்தல்
9. துணல்கையாடி மணத்தல்
10. பலதார மணம்
இதில் களவு மணம் குறித்துச் சற்றுக் கவனிப்போம்.
களவியல் குறித்த பொருள் விளக்கச் சிந்தனை ஒரு நீண்ட பரிணாம வளர்ச்சியின் ஊடாகவே நிகழ்ந்துள்ளது. தமிழ் இலக்கண வரலாற்றில் தொல்காப்பியம் தொடங்கிச் சோழர் கால உரையாசிரியர் வரை இந்த சிந்தனைப் போக்கின் பரிணாமத்தை அறிந்து கொள்ள முடியும்.
தொல்காப்பியர் தமது நூற்பா ஆக்கத்தினை இரண்டு வழிகளில் மேற்கொண்டுள்ளார். முதலாவது-முன்னோர் கருத்தை ஏற்று மொழிவது. இரண்டாவது தாமே படைத்து மொழிவது. களவியலைப் பொறுத்தவரையில் அதன் பொருள் விளக்கத்தை தொல்காப்பியர் தானே படைத்து மொழிந்துள்ளார். ஆகவே தொல்காப்பியர் காலத்து முந்திய களவியல் பற்றிய பொருள் விளதக்கத்தை இப்போது அறிய இயலாமல் உள்ளது.
களவுக் காதல் வாழ்வை பல துறைகளாக அமைத்துச் சுவைபட சங்கப் புலவர்கள் பாடியுள்ளார்கள். காமம் நுகர்வதற்குரிய குமர்ப் பருவமடைந்த எங்கோ பிறந்த தலைவனும் தலைவியும், எதிர்பாராத விதத்தில் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு, ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கொண்டு காதல் கொள்வதனை, இயற்கைப் புணர்ச்சி என்று அக இலக்கணம் கூறுகின்றது. இவ்வாறு சந்தித்து மனமொன்றிய காதலர்கள், மீண்டும் சந்திக்க வேட்கை கொண்டு, முன்பு சந்தித்த இடத்தில், சந்தித்து மகிழ்ச்சி கொள்வது இடந்தலைப்பாடு என்று அழைக்கப்பட்டது. அந்தக் களவுக்கூடல் தலைவனின் தோழனின் உதவியால் நடைபெறும் என்றால் அது ‘பாங்கற் கூட்டம்’ என்றும், தலைவியின் தோழி வாயிலாக நிகழுமென்றால் அது ‘பாங்கியற் கூட்டம்’ என்றும் வழங்கப்பட்டது.
வேட்கை மிகுதியால், களவுக் காதலர்கள் இரவிலும் பகலிலும் தோழியின் துணையால் சந்தித்து, அளாவுதல் உண்டு. இவ்வாறு பகலில் நடைபெறும் காதலர் கூடல் பகற்குறி என்றும், இரவில் நடைபெறும் களவுக் கூடல் இரவுக்குறி என்றும் வழங்கப்பட்டது.
இங்கே ஒரு விடயத்தை நேயர்கள் கவனிக்க வேண்டும். சங்கக் காலத்துக் களவுக் காதல், கற்பு வாழ்விற்கு ஒரு வாயிலாக அமைந்தது. கற்பு என்பதற்கு, இல்லறம் என்ற பொருளையே தொல்காப்பியர் சொல்வது இங்கு கவனிக்கத்தக்கது. ஆகவே அக் களவுக்காதல் புனிதமானது. சங்கக் காலச் சமுதாயம் களவுக் காதலை மதித்தது. போற்றியது. கற்பு வாழ்வுக்கு அதாவது இல்லற வாழ்விற்கு வழி வகுத்துக் கொடுத்தது. சங்கக் காலக் களவுக் காதலின் நெறியைக் குறித்து --
‘களவொழுக்கம் தூயது, களவுக் காதலர் மனமாசற்றவர், மணந்து கொள்ளும் உள்ளத்தவர், களவுக்காதல் வெளிப்பட்ட பின்னரும் வாழ்பவர்’ --
என்று டாக்டர்- வ.சு.ப. மாணிக்கம் அவர்கள் கூறியதை இங்கே நினைவு கூருகின்றோம்.
களவுக் காதலர் மணம் புரிந்து, இல்லறம் என்னும் நல்லறம் இனிது நடத்தலைப் பற்றிக் கூறுவது கற்பொழுக்கம் ஆகும். அகத்தினைக் கூறும் தூய்மையான அறங்களுள் தலையானது, களவு வழிப்பட்ட கற்பு வாழ்க்கையாகும்.
‘காதல் என்பது இன்பத்துள் பேரின்பம், உணர்ச்சியுள் பேருணர்ச்சி, ஆற்றலுள் பேராற்றல், அடிப்படையுள் பேரடிப்படை எல்லோருக்கும் உரியது. நட்பினுள் இருபாலாரையும் இணைப்பது என்பதைச் சங்கத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள்’ என்று ஆய்வாளர் டாக்டர் -வ சு ப மாணிக்கம் அவர்கள் குறிப்பிடுகின்றார்.


தமிழன் காதலில் திளைத்த பின்பே இல்லறத்தை நாடியவன் என்பதற்கு, காமத்துப்பால் எழுதிய திருவள்ளுவரும் சாட்சிக்கு நிற்கின்றார். அறத்துப்பாலையும், பொருட்பாலையும் விட, காமத்துப்பாலில் நளினமும் இனிமையும் கூட இருப்பதை நேயர்கள் அறிவீர்கள். நறுக்குத் தெறித்தாற்போல் காதலைப் பற்றியும், காமத்தைப் பற்றியும் வள்ளுவர் கூறினாலும், அதிலிருக்கும் பொருளோ எல்லை கடந்தாக உள்ளது.
‘யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்’ - திருக்குறள் 1094
என்ற குறளில், தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நோக்கெதிர் நோக்குகின்றார்கள். தலைவியோ தனக்கே உரிய நாணத்தின் காரணமாக, நிலத்தை நோக்கினாள். தலைவன் பாராதவிடத்து, தலைவி அவனை நோக்கி மெல்லப் புன்முறுவல் செய்தாள். தலைவனுக்குத் தனது உள்ள-விருப்பை, தனது மலரும் முகத்தினால் வெளிப்படுத்தினாள். தலைவனும் தலைவியிடம் தோன்றிய புகுமுகம் புரிதல் மெய்ப்பாட்டால் , அவள் தன்னை மனப்பூர்வமாக விரும்புகின்றாள் என்பதனை அறிந்து கொண்டான் என்று, பார்வையினூடே காதலை படர விடுகின்றார் வள்ளுவர்.
வள்ளுவர் சுட்டிக்காட்டுகின்ற இன்னுமொரு தலைவியோ, வேறு விதப் பார்வையினால் தன் காதலை வெளிப்படுத்துகின்றாள். தலைவனை நேரடியாக நோக்காது, வேறொரு பொருளை நோக்குவதுபோல், முகம் காட்டிக் கொண்டு, ஒரு விழிப் பார்வையால், தலைவனை நோக்கித் தன்னுள்ளே மகிழ்ந்தாள் என்பதனை,
“குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
சிறக்கணித்தாள் போல நகும்.” – குறள் 1095
என்ற குறள் மூலம் வள்ளுவர் அழகாகச் சொல்லிக் காதல் இன்பத்தை வெளிக்கொண்டு வருகிறார்.
பண்டைத் தமிழனின் காதல் வாழ்க்கை முறை, பின்னர் ஆரியர் ஆக்கிரமிப்பின் பின்னர், மறையத் தொடங்கியது. பெண்ணடிமை மிக்க சடங்குகளும், வாழ்க்கை முறைகளும் தமிழன் வாழ்வைச் சீரழிக்க ஆரம்பித்தன. பண்டைத் தமிழர் காலத்தில், காதல் எவ்வவளவு வலுவாக இருந்தது என்பதற்கு ஒரு காரணத்தை எமது நேயர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். தமிழர்களுக்கு எதிராக எழுதப்பட்ட இராமாயணத்தை, தெள்ளு தமிழில் தேனூறும் சொல்பரப்பி, கம்ப நாடான் மொழி பெயர்த்தான். வால்மீகி இராமாயணத்தில் இல்லாத ஒரு காட்சியை, கம்பன் தனது கம்பராமாயணத்தில் காட்டுகின்றான்.
வில்லை முறித்துச் சீதையை மணப்பதற்காக ராமன் வருகின்றான். வில்லை முறிக்கின்றான். சீதையை மணக்கின்றான். இது வால்மீகி ராமாயணம். கம்பனின் இராமாயணத்திலோ, வில்லை முறிக்க வரும் இராமனை, மேல் மாடத்திலிருந்து சீதை பார்க்கின்றாள். இராமனும் அவளை நோக்குகின்றாள். இருவரது கண்களும் ஒருவரை ஒருவர், முதல் தடவையாக பார்க்கின்றன. காதல் வசப்படுகின்றன. உள்ளக் குறிப்புரைகளைக் கண்களால் பேசிக் கொள்கின்றன. ஒருவரது உள்ளத்தை, ஒருவர் உள்ளம் ஈர்க்கின்றது. இராமன் உள்ளத்தில் சீதையும், சீதை உள்ளத்தில் இராமனும் குடிபுகுந்தனர். தமிழர் காதல் பண்பாட்டின் அடிப்படையான புதுமுகம் புரிதல் மெய்ப்பாடு இங்கே கம்பனால் காட்டப்படுகின்றது. அதனைக் கம்பன் இவ்வாறு எழுதுகின்றார்.
“எண்ணரும் நலத்தினாள் இளையள் நின்றுழி
கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாமல் உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.”
“பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்
வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்”- (கம்பராமாயணம் - பாலகாண்டம் செய்யுள் 590 , 592)
தமிழன் காதலிக்காமல் திருமணம் செய்வதில்லை. எனவே கம்பர் இராமயணத்தைத் தமிழாக்கி, தமிழருக்குள் கொண்டு வரும்போது, இப்படி இடையில் ஒரு காதல் காட்சியைப் புகுத்தி, இராமன் சீதைத் திருமணத்தை, ஒரு காதல் வீரத் திருமணமாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் அன்று அவருக்கு இருந்தது. இது தமிழரின் காதல் வாழ்விற்கு ஓர் எடுத்துக் காட்டல்லவா?
இன்று நாம் புலம் பெயர்ந்துள்ள வெளிநாடுகளில், காதல் அடையாளமாகக் கொடுக்கப்படும் மலர்கள், எம் தமிழர் வாழ்விலும் பெரும் பங்கு வகித்தன என்பதும் ஒரு வரலாற்று உண்மை! தமிழ்நாட்டில் மலர்கள் மங்கையர் கூந்தலிலும், மனங்களிலும், இல்லங்களிலும் இன்றும்கூட முக்க்ய இடத்தை வகித்து வருகின்றன.
அன்புக்குரிய நேயர்களே! தமிழனின் கடல்போன்ற காதல் வாழ்வைச் சொல்வதற்காக, முக்குளித்து ஒரு துளியை மட்டும் இன்று சொல்ல முனைந்தோம். இந்தக் கட்டுரைக்குச் சங்கக் காலப் பாடல்கள், தொல்காப்பியம், திருக்குறள், கம்பராமாயணம் போன்றவற்றோடு;, சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், தொல்தமிழர் சமயம், குறுந்தொகை காட்டும் காதல் வாழ்க்கை போன்ற நூல்களும் உதவின. இது உங்கள் காதல் தீயை இன்னும் கொழுந்து விட்டெரியச் செய்யும் என்று நம்புகின்றோம்.


வியப்பூட்டும் வேலண்டைன் கதைகள் !

1. வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் நம்பும் கதை இது.
2. அமெரிக்கா இந்த ஆண்டைய காதலர் தினத்தை ஒரு ஹாலிவுட் திரைப்படத்துடன் கொண்டாடுகிறது. “வேலண்டைன்ஸ் டே” எனும் பெயரில் வெளியாகும் இந்தப் படத்தை பிரபல வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கிறது. ஜெஸிகா அல்பா, கேத்தி பேட்ஸ், ஜூலியா ராபர்ட்ஸ், ஜெஸிகா பேல் ஆகியோர் நடித்துள்ளனர். கேரி மார்ஷல் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் காதலும், காமமும் இழையோடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?
3. காதலர் தினத்தை யார் ரொம்ப ஆர்வமாய் வரவேற்பது ? காதலர்கள் என்பது உங்கள் பதிலென்றா அது தவறு. உண்மையில் காதலர் தினத்தை பெரிதும் எதிர்பார்ப்பது வியாபாரிகள் தான். வாழ்த்து அட்டைகள், பரிசுகள், சாக்லேட்கள், மலர்கள், சிடிக்கள், புத்தகங்கள் என அன்றைய தினத்தின் பிஸினஸ் பல பில்லியன் டாலர்கள். ஹால்மார்க் எனும் ஒரு நிறுவனம் காதலர் தினத்துக்காக வெளியிடும் வாழ்த்து அட்டைகளின் எண்ணிக்கை மட்டுமே ஆண்டுக்கு 20 கோடி !
4. அமெரிக்காவில் சராசரியாக இந்த காதலர் தினத்தன்று செலவாகும் ரோஜாக்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. பூக்களைப் போட்டி போட்டு வாங்குவது ஆண்கள் தான். 73 சதவீத விற்பனை அவர்களால் தான் நடக்கிறது. பூவுக்கே பூ கொடுக்கிறேன் என காதலுடன் பூ நீட்டுகிறார்கள் ஆண்கள். அப்படியானால் பெண்கள் ? வாழ்த்து அட்டைகள் வாங்குவதில் அவர்கள் தான் முதலிடத்தில் நிற்கிறார்களாம்!.
5. காதலர் தினத்தன்று சந்திக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வோம் எனும் நம்பிக்கை பண்டைக் காலத்தில் பரவியிருந்தது. அதனால் தன் மனதுக்குப் பிடித்தவரைச் சந்திக்க வேண்டுமே என பெண்கள் காத்திருப்பார்களாம். தனக்கு ஒரு காதலி கிடைப்பாளா என ஆண்களும் காதலர் தினத்தன்று அங்கும் இங்கும் அலைந்து திரிவார்களாம்.
6. கிரீட்டிங் கார்ட் பரிமாறும் வழக்கம் பதினேழாம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகி விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது கிளைவிட்டுப் பரவியது. இன்றைக்கு அது மிகப்பெரிய வணிகத் தளமாகவும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. உலக அளவில் கிறிஸ்மஸ் தினத்துக்கு அடுத்தபடியாக ஒரு பில்லியன் எண்ணிக்கை தாண்டி வாழ்த்து அட்டைகள் விற்பனையாவது காதலர் தினத்தில் தான். இமெயில், எஸ் எம் எஸ், இ-கார்ட், இண்டர் நெட் என ஹைடெக் வாசமடிக்கும் டிஜிடல் உலகம் இது. ஆனாலும் எந்த டெக்னாலஜியாலும் வாழ்த்து அட்டைகளை முழுமையாய் அழிக்க முடியவில்லை என்பது வியப்பு !
7. அமெரிக்கா போன்ற பல மேலை நாடுகள் வேலண்டைன்ஸ் தினத்தை காதலர்கள் மட்டும் கொண்டாடுவதில்லை. நண்பர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். வகுப்பறைகளையல்லாம் அலங்கரித்தும், ஆசிரியர்களுக்குப் பரிசுகள் கொடுத்தும் மாணவர்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் வேலண்டைன் நாளில் வாழ்த்து அட்டை வாங்குவதில் ஆசிரியர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது வியப்பான உண்மை. இதற்கான புண்ணியத்தைக் கட்டிக் கொள்பவர்கள் ஆறு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள்.
8. சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட பிறந்தமேனியாய் வந்து நின்ற அவளைப் பார்த்து, கண்டதும் காதல் கொண்டு, பின்னர் கல்யாணமும் செய்து கொள்கிறான் அவன். விஷயம் தெரிந்த மன்னருக்கு வந்ததே கோபம். இருவரையும் வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.
9. காதலர் தினத்தில் காதலர்கள் வாழ்த்துக்களும், கவிதைகளும் எழுதும் போது உலகப் புகழ் பெற்ற காதலர்களைப் போல நாம் வாழ வேண்டும் என குறிப்பிடுவது வழக்கம். அவர்கள் குறிப்பிடும் பட்டியலில் வருபவர்கள் பெரும்பாலும் இவர்களில் ஒருவர் தான். ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, ஹீர் – ரன்ஹா, கிளியோ பாட்ரா – மார்க் ஆண்டனி, ஷாஜஹான் – மும்தாஜ்.
10. காதலர் தினத்தை மையமாகக் கொண்டு எக்கச்சக்கமான மூட நம்பிக்கைகள் உலவி வருகின்றன. காதலியர் தங்கள் மனம் கவர்ந்தவர்களின் பெயர்களையெல்லாம் ஒரு பாத்திரத்தில் எழுதிப் போடுவார்கள். பாத்திரத்தைக் குலுக்கி எடுக்கும் போது வரும் பெயர் தான் அவளுடைய கணவன். இது பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவி வந்த பாப்புலர் வழக்கம்.


11. காதலர் தினத்தன்று காதலியின் கண்ணில் எந்தப் பறவை தென்படுகிறதோ அது அவளுடைய கணவனின் தன்மையைச் சொல்லும் என்பது காதலர் தினத்தன்று உலவி வந்த பண்டைய நம்பிக்கைகளின் ஒன்று. புறாவைக் காண வேண்டுமே என பெண்கள் பதறுவார்களாம். காரணம் புறாவைக் கண்டால் காதல் வாழ்க்கை ஆனந்தமாய் இருக்குமாம். கணவன் மிகவும் இரக்கமும், அன்பும், நேசமும் உடையவனாக இருப்பானாம் !
12. காதலர் தின பூக்களைப் பொறுத்தவரையில் சிவப்பு ரோஜாவுக்கு தான் முதலிடம். சிவப்பு ரோஜா சர்வதேச அளவில் காதல் மொழி பேசுகிறது. சிவப்பு ரோஜா கொடுத்தால் “காதல்” எனும் ஒரே மீனிங் தான் உலகெங்கும். சிவப்பு ரோஜா கொடுக்காத காதலர்கள், காதலியரின் பிரியத்துக்குரிய பூக்களைப் பரிசளிக்கிறார்கள். உலக அளவில் அதிகம் விற்கப்படுவதும், பரிமாறப்படுவதும், நேசிக்கப்படுவதும் சிவப்பு ரோஜாவே தான்.
13. ரோமில் பண்டைக்காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. வாழ்க்கை வளமாக வேண்டும் என பாகான் கடவுளை வேண்டும் விழா இது. பிப்பிரவரி 13 முதல் 15 வரை கொண்டாடப்படும் இந்த விழா ரோம் நகரில் மிகப் பிரபலம். இதை கி.பி 490 களில் போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இந்த விழாவை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், இதை ஒரு கிறிஸ்தவ விழா மூலம் செயலிழக்கச் செய்யவும் போப் தீர்மானித்தார். எனவே பிப்பிரவரி 14ம் நாளை புனித. வேலண்டைன் நாள் என அறிவித்தார் என்பது பொதுவாக நம்பப்படும் வரலாறு.
14. இலக்கியங்களில் தவிர்க்க முடியாதவர் சேக்ஸ்பியர். அவருடைய காதல் பாடல்கள் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவை. அவருடைய புகழ் பெற்ற காவியங்களில் ஒன்று ஹேம்லெட். அதில் “நாளை வேலண்டைன்ஸ் டே” என்று துவங்கும் ஒரு காதல் கவிதைப் பாகம் வருகிறது. நான்காவது பாகத்தின் ஐந்தாவது காட்சியில் வரும் இந்தப் பாடல் 1600 களில் வேலண்டைன்ஸ் டே பிரபலமாய் இருந்திருக்கிறது என்பதன் இலக்கியச் சாட்சிகளில் முக்கியமானது இது.
15. கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில் வேலண்டைன்ஸ் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வீடுகளில் பரிசுகள் தரும் வழக்கத்தை ஒத்திருக்கிறது இது. பிரியத்துக்குரிய வீடுகளின் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல்கின்றனர். அப்படி இனிப்புகளை வைப்பவர்களை “ஜேக்” என்று அழைக்கின்றனர். யார் இனிப்பை வைத்தது என்று தெரியாமல் பலர் அதை பயத்துடன் சாப்பிடுவதும் உண்டு.
16. பிரான்ஸ் நாட்டில் வேலண்டைன்ஸ் தினத்தை சிம்பிளாக புனித.வேலண்டைன் என்று அழைக்கிறார்கள். ஆனால் கொண்டாடுவதென்னவோ மற்ற நாடுகளைப் போலத் தான். ஸ்பெயினில் இந்த நாளை சேன் வேலன்டின் என்கின்றனர். ஸ்வீடனில் இந்த நாளை “எல்லா இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் இந்த நாளின் பெயர். டயா டாஸ் நமோரோடோஸ். அதாவது பாய்பிரண்ட் மற்றும் கேள் பிரண்ட் தினம் !
17. பின்லாந்தில் வேலண்டைன்ஸ் டே மிக வித்தியாசமானது. இது காதலர் ஸ்பெஷல் தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ஸ்டேவான்பாவியா என்று அழைக்கின்றனர். இதற்கு நண்பர்கள் தினம் என்பது பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இனிப்புகள், பரிசுகள், வாழ்த்து அட்டைகள் என எல்லாம் உண்டு. வேறு வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களெல்லாம் ஒரே இடத்தில் கூடி கும்மாளமடிப்பது இதில் ஹைலைட்.
18. பிப்பிரவரி 14ல் என்ன விசேஷம் என்று கேட்பார்கள் பிரேசிலில். அவர்களுக்கு நோ வேலண்டைன்ஸ் டே. ஆனால் அவர்கள் ஜூன் 2ம் தியதி காதலர் தினம் கொண்டாடுகிறார்கள். காதலர்கள் மற்றும் தம்பதியர்கள் வாழ்த்து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் இத்யாதி எல்லாவற்றையும் பரிமாறிக் கொள்ளும் நாள் இது. ஐயோ, அப்போ பிப்பிரவரி 14ல் ஒண்ணுமே இல்லையா என பதட்டப்படாதீர்கள். அந்த நாளை ஒட்டி அவர்கள் ஒரு விழா கொண்டாடுகிறார்கள். அதை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கிறார்கள் ! அப்புறம் என்ன ?
19. இந்தியாவுக்கும் காதலுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. இந்திய இலக்கியங்களில் காதல் மைய இடம் பிடிக்கின்றன. உலகையே பிரமிக்க வைக்கும் காதல் சின்னமான தாஜ்மஹால் இந்தியாவில் இருக்கிறது. உலகத்தின் முதல் செக்ஸ் கல்வி நூலான காமசூத்ராவின் பிறப்பிடமும் இந்தியாவே தான். இருந்தாலும் வேலண்டைன்ஸ் டே அன்று கலவரம், மண்டை உடைப்பு, சட்டை கிழிப்பு எல்லாம் நடப்பதும் நம் நாட்டில் தான். இத்தனை களேபரங்களையும் தாண்டி காதலர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. குறிப்பாக ஆசியாவில் காதலர் தின மார்க்கெட் அதிகம் உள்ள இடங்களில் முக்கிய இடம் இந்தியாவுக்கு.
20. சவுதி அரேபியாவில் காதலர் தினம் தடை மத அமைப்புகளால் தடை செய்யப்ட்டிருக்கிறது. இது இஸ்லாமிய சட்டங்களுக்கு விரோதமான விழா என்பது அவர்களுடைய நம்பிக்கை. இந்த விழா ஆண்களும் பெண்களும் சந்தித்து சில்மிசங்களில் ஈடுபட வழி வகுத்து விடும். ஏற்கனவே திருமணமான பெண்கள் சபலமடைய வழி வகுத்துவிடும் போன்றவையெல்லாம் அவர்கள் சொல்லும் காரணங்களில் சில. இருந்தாலும் திருட்டுத் தனமாக அங்கே காதலர் தினத்தைப் பலர் கொண்டாடுகின்றனர். ரகசியமாய் பூங்கொத்துகள் ஆர்டர் செய்து, அதை நள்ளிரவிலேயே மனசுக்குப் பிடித்தவர்களுக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள். பலர் இந்த நாளில் பெஹ்ரைன், எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்குப் பறந்து வேலண்டைன்ஸ் டே கொண்டாடி விட்டு சைலண்டாகத் திரும்பி விடுவதும் உண்டு.


21. “எனக்கொரு கேள் பிரண்ட் வேணுமடா” என காலம் காலமாகப் பாட்டுப் பாடியும் யாரும் மாட்டாத அப்பாவிகள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாள் இருக்கிறது. ஏப்பிரல் 14. அந்த நாளின் பெயர் பிளாக் டே, கருப்பு தினம். தென் கொரியாவில் இந்த விழா பிரபலம். அதாவது பிப்பிரவரி 14ம் நாள் எந்த பரிசும் கிடைக்கவில்லையே, எந்தக் காதலியும் கரம் கோர்க்கவில்லையே என புலம்பும் சிங்கிள் பார்ட்டீஸ் இரண்டு மாசம் கண்ணைக் கசக்கியபின் கொண்டாடும் விழா. இந்த விழாவில் கொரியன் நூடுல்ஸ் சாப்பிடுவது ஒரு முக்கிய அம்சம். அதற்கு ஊற்றப்படும் சாஸ் கருப்பு கலரில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் !
22. கிரீட்டிங் கார்ட் இல்லாமல் வேலண்டைன்ஸ் டே இல்லை எனும் நிலை தான் அமெரிக்காவில். வேலண்டைன் வாழ்த்து அட்டைகள் தான் பல வாழ்த்து அட்டை கம்பெனிகளையே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் விற்பனையாகும் வாழ்த்து அட்டைகளில் 25% வாழ்த்து அட்டைகள் வேலண்டைன் வாழ்த்து அட்டைகள் தான் எனப்து புள்ளி விவரக் கணக்கு.
23. செல்போனில் தனது காதலை வீடியோவாய் பதிவு செய்து உள்ளம் கவர்ந்த கள்வனுக்கோ கள்ளிக்கோ செல்போனிலேயே அனுப்பி விடுவது லேட்டஸ்ட் காதல் சொல்லும் முறை. சிலர் அதை அப்படியே அலேக்காக யூ டியூப் போன்ற இணைய தளங்களிலேயே பதிவு செய்து உலகுக்குத் தங்கள் காதலை உரக்கச் சொல்கிறார்கள்.
24. வேலண்டைன்ஸ் டே ஒரு நல்ல வியாபாரக் களம் என்பதைக் கண்டு முதலில் வாழ்த்து அட்டை உருவாக்கிய பெருமை எஸ்தர் ஏ ஹௌலாண்டா மவுண்ட் ஹோலியோக் –ஐச் சாரும். 1840ல் அமெரிக்காவில் இவர் வாழ்த்து அட்டைகள் உருவாக்கி விற்பனை செய்தார்.
25. ஜப்பானின் வேலண்டைன்ஸ் டே என்றாலே நினைவுக்கு வருவது சாக்லேட்! ஜப்பான் கடைகளெல்லாம் வேலண்டைன்ஸ் டேக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே சாக்லேட்களால் குவியும். வித விதமான வகைகளில், பாக்கெட்களில் விற்பனையாகும் சாக்லேட்களை வாங்குவது பெண்கள் தான். ஜப்பானில் பெண்கள் தங்கள் மனதுக்குப் பிடித்த எல்லா ஆண்களுக்கும் சாக்லேட் கொடுப்பார்கள். அதனால் யாராவது சாக்லேட் தந்தால் உடனே காதல் என்று டூயட் பாட முடியாது ! காதலர்களுக்குக் கொடுக்க பெண்கள் கடைகளிலிருந்து சாக்லேட் வாங்க மாட்டார்களாம். ஸ்பெஷலாக வீட்டிலேயே எக்ஸ்குளூசிவ் ஆக தயாராக்கி கையோடு ஊட்டியும் விடுவார்களாம்.
26. கொரியாவில் பிப்பிரவரி 14 தான் காதலர் தினம். காதலியர் தங்கள் காதலர்களுக்குச் சாக்லேட் பரிசளிப்பது தான் இந்த நாளின் விசேஷம். ஆனால் காதலர்கள் அந்த நாளில் காதலியருக்கு சாக்லேட் கொடுக்க மாட்டார்கள். என்ன கொடுமை இது என புலம்பிய கொரியா மார்ச் 14ம் தியதியை வயிட் டே, வெள்ளை தினம், என கொண்டாடுகிறது. இந்த நாளில் காதலர்கள் காதலியருக்கு சாக்லேட்களை வட்டியும் முதலுமாக வாங்கிக் கொடுக்கவேண்டும் !
27. காதலர் தினத்தின் இன்னொரு ஸ்பெஷல் டின்னர். மேலை நாடுகளைப் பொறுத்த வரையில் மங்கலான மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் காதல் வழியும் கண்களுடன் டின்னர் சாப்பிடுவது இந்த நாளின் முக்கிய அம்சம். கடற்கரை உணவகங்கள், கப்பல் ரெஸ்டாரண்ட்கள், மொட்டை மாடி ரெஸ்டாரண்ட்கள் போன்ற ஸ்பெஷல் இடங்கள் பல வாரங்களுக்கு முன்பே புக் ஆகி விடுமாம். வேலண்டைன் சாப்பாட்டின் போது ஷான்பைன் அருந்தாமல், வைன் அருந்தவேண்டும் என்பது எழுதப்படாத வழக்கம்.
28. அமெரிக்க ஆண்களில் 74 சதவீதம் பேர் வேலண்டைன்ஸ் டே கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் இந்த மூன்று நாட்களுக்கு அடுத்தபடியாக சாக்லேட் அதிகம் விற்பனையாவது வேலண்டைன்ஸ் டேயில் தான். சுமார் 1105 மில்லியன் டாலர்கள் பணத்தை சாக்லேட் வாங்கியே செலவழிக்கிறார்களாம்.
29. அமெரிக்க பெண்கள் தங்களுக்கு பாய் பிரண்ட் இல்லை என்பதை கொஞ்சம் கௌரவக் கொறச்சலாகப் பார்க்கிறார்கள். அதனால் பாய் பிரண்ட் இல்லாத பார்ட்டிகள் தங்களுக்குத் தாங்களே பூக்களை அனுப்பிக் கொள்கிறார்கள். அப்படியே வீட்டுக்கு டெலிவரி வரும் போது, ஓ.. மை ஸ்வீட் ஹார்ட் என பில்டப் கொடுத்து வாங்குகிறார்கள். அமெரிக்காவில் சுமார் 15 சதவீதம் பெண்களுக்கு இப்படித் தான் வேலண்டைன் பூக்கள் வருகின்றனவாம் !
30. ரிச்சர்ட் காட்பரியை வேலண்டைன்ஸ் தினத்தில் ஒரு முறை நினைவில் கொள்ளுங்கள். அவர்தான் 1800ல் முதன் முதலாக வேலண்டைன் சாக்லேட் பாக்ஸை அறிமுகப்படுத்தி வைத்தவர். அவர் ஆரம்பித்த பழக்கம் உலகெங்கும் பரவி விட்டது. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வோர் வேலண்டைன் தினத்திலும் செலவாகும் சாக்லேட் பாக்ஸ்களின் எண்ணிக்கை 3.6 கோடி !


31. ஓர்லான்ஸ் பகுதியின் மன்னனான சார்லஸ் 1415ல் லண்டன் சிறையில் கிடந்தார். சிறைத் தனிமையில் தனது மனைவியை ரொம்பவே மிஸ் பண்ணினார் மனுஷன். அதனால் ஒரு கவிதை எழுதி வேலண்டைன் தினத்தன்று மனைவிக்கு அனுப்பினார். அது தான் நமக்குத் தெரிந்த மிகப் பழமையான வேலண்டைன் காதல் கவிதை. அவர் போட்டது தான் இன்று மானே, தேனே பொன்மானே என எல்லோரும் எழுதித் தள்ளும் வேலண்டைன் கவிதைகளின் பிள்ளையார் சுழி.
32. வேலண்டைன்ஸ் தினத்தை விடுமுறை நாளாக்கி காதலர்களின் மனதில் லவ் வார்த்தவர் இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றி. 1537ல் இவர் வேலண்டைன் தினத்தை அதிகாரபூர்வ விடுமுறை நாளாக்கினார். எட்டாம் ஹென்றி மன்னன் காதல் விளையாட்டுகளில் அதீத ஆர்வம் உடையவர் என்பது தான் அதன் சீக்ரட் காரணம்.
33. காதலர் தினத்தில் காதலி சிணுங்குவாளோ இல்லையோ எல்லா செல்போன்களும் சிணுங்கோ சிணுங்கென்று சிணுங்கும். நல்ல வேளை கிரகாம்பெல் போனைக் கண்டு பிடித்தார். கிரகாம்பெல், காதலர் தினம், தொலைபேசி இந்த மூன்றுக்கும் ஒரு தொடர்பு உண்டு. தொலைபேசியின் காப்புரிமைக்காக 1876ம் ஆண்டு அவர் விண்ணப்பித்தார். அந்த நாள் பிப்பிரவரி 14 ! அட என்ன ஒரு தீர்க்கத் தரிசி அவர் !
34. காதலர் தின பரிசை யாரெல்லாம் வாங்குவார்கள் ? நீங்கள் சிந்தித்துப் பார்க்க முடியாத இடத்தில் இருப்பது செல்லப் பிராணிகள். மேலை நாடுகளில் 3 % செல்லப் பிராணிகள் தங்கள் எஜமானர்களிடமிருந்து காதலர் தின பரிசுகளைப் பெற்றுக் கொள்கிறதாம் !
35. வாழ்த்து அட்டைகள் தயாரிப்பதில் மிக முக்கியமான ஒரு நிறுவனம் ஹால்மார்க். ஹால்மார்க் நிறுவனத்தில் 1330 வகையான வேலண்டைன் ஸ்பெஷல் கார்ட் வகைகள் இருக்கின்றன. காமத்துப் பால் உட்பட 1330 குறள்கள் எழுதியவர் நமது வள்ளுவர். ஆனலும் இந்த 1330 க்கும் திருக்குறளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
36. ஐ லவ் யூ – என்றால் மனசுக்குள் மழையடிக்கும். ஆனால் ஐ லவ் யூ என்றால் மனதுக்குள் திகிலடித்த ஒரு நிகழ்வும் உண்டு. ஐ லவ் யூ எனும் ஒரு வைரஸ் 2000 ஆண்டில் முப்பது இலட்சம் கம்ப்யூட்டர்களுக்கு மேல் பாதித்து செயலிழக்க வைத்து விட்டது. ஐ லவ் யூ என்று தலைப்பிட்டு எந்த மெயில் வந்தாலும் மக்கள் அலறோ அலறென்று அலறினார்கள் ! கம்ப்யூட்டர் வைரஸ் வரலாற்றில் இந்த ஐ லவ் யூ வைரஸ் நிரந்தர இடத்தையும் பிடித்து விட்டது.
37. காதல் என்றாலே சட்டென மனதுக்குள் வரும் சிம்பல் இதயம். அதற்குப் பல காரணங்கள் உண்டு. இதயத்தில் ஆன்மா குடி கொண்டிருப்பதாக பண்டைக்காலத்தில் மக்கள் நம்பினார்கள். பலர் இதயத்தில் தான் அறிவும், உணர்ச்சியும் இருப்பதாக நம்பினார்கள். இதயத்தில் தான் உண்மை குடிகொண்டிருப்பதாக நம்பியவர்களும் உண்டு. சிவப்பு நிற இதயம் காதலின் இருப்பிடம் என கிரேக்கர்கள் நம்பினார்கள். அதனால் தான் மன்மத அம்பு இதயத்தில் பாய்ந்தால் தன்னிலை இழந்து காதல் வசப்பட்டு விடுவதாக பண்டைக்கால மக்கள் நம்பினார்கள். ஹார்ட் மேட்டர் இது தான்.
38. சேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் உலகப் புகழ் பெற்ற காதலர்கள். அந்தக் காதலர்கள் “வாழ்ந்த வெரோனா இத்தாலியில் உள்ளது. அங்கே ஒவ்வோர் காதலர் தினத்தன்றும் சுமார் ஆயிரம் காதல் கடிதங்கள் ஜூலியட்டுக்கு வருமாம். எல்லாம் ஜூலியட் மேல் காதல் கொள்ளும் இளைஞர்கள் எழுதிப் போடும் கடிதங்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக