புதன், 14 பிப்ரவரி, 2018

முன்னாள் மத்திய அமைச்சர் சத்தியவாணி முத்து பிறந்த தினம் பிப்ரவரி 15 , 1923 .


முன்னாள்  மத்திய அமைச்சர்  சத்தியவாணி முத்து பிறந்த தினம் பிப்ரவரி 15 , 1923 .

சத்தியவாணி முத்து (பி.: பெப்ரவரி 15 , 1923 - இ. நவம்பர் 11 , 1999 ) ஒரு இந்திய
அரசியல்வாதி மற்றும் செல்வாக்கான தலித் தலைவர். இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் ராஜ்ய சபை உறுப்பினர் மற்றும் மத்திய
அமைச்சராகவும் இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியின் உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர்
தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற சொந்தக் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அக்கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைந்து விட்டது.

தமிழக அரசியல் வாழ்க்கை

சத்தியவாணி முத்து 1949ல் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் உறுப்பினராக இருந்தார். 1953ல் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். 1959-1968 காலகட்டத்தில் திமுகவின் கொள்கை விளக்கச் செயலாளாராகப் பதவி வகித்தார். “அன்னை” என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், பெரம்பூர் தொகுதியிலிருந்து 1957ல் சுயேட்சையாகவும் 1967 மற்றும் 1971ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் போட்டியிட்டு மூன்றுமுறை வெற்றிபெற்றார். 1962 ல் பெரம்பூர் தொகுதியிலும் 1977 ல் உளுந்தூர்பேட்டைத் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோற்றுப்போனார்.  தேர்தல் தொகுதி வென்றவர் வோட்டுகள் கட்சி தோற்றவர் வோட்டுகள் கட்சி முடிவு
1957 பெரம்பூர்
1) பக்கிரிசாமி பிள்ளை
3) சத்தியவாணி முத்து
34,579
27,638
சுயேட்சை
சுயேட்சை
2) டி. எஸ். கோவிந்தசாமி
4) டி. ராஜகோபால்
31,806
23,682
காங்கிரசு
காங்கிரசு வெற்றி
1962 பெரம்பூர் டி. சுலோச்சனா 40,451 காங்கிரசு சத்தியவாணி முத்து 32,309 திமுக தோல்வி
1967 பெரம்பூர் சத்தியவாணி முத்து 40,364 திமுக டி. சுலோச்சனா 33,677 காங்கிரசு வெற்றி
1971 பெரம்பூர் சத்தியவாணி முத்து 49,070 திமுக டி. சுலோச்சனா 37,047 காங்கிரசு (ஓ) வெற்றி
1977 உளுந்தூர்ப்பேட்டை வி. துலுக்காணம் 26,788 திமுக சத்தியவாணி முத்து 19,211 அதிமுக தோல்வி
1984 பெரம்பூர் பரிதி இளம்வழுதி 53,325 திமுக சத்தியவாணி முத்து 46,121 அதிமுக தோல்வி
இவர் 1967 முதல் 1969 வரை தமிழக முதல்வர்
கா. ந. அண்ணாதுரை அமைச்சரவையில் அரிஜன நலத்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். தொடர்ந்து மு. கருணாநிதியின் அமைச்சரவையிலும் 1974 வரை அரிஜனநலத்துறை அமைச்சராக இருந்தார்.

தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக்கழகம்

சத்தியவாணி முத்து, அண்ணாத்துரையின் மரணத்துக்குப்பின் தாழ்த்தப்பட்டோர் நலனில் யாரும் அக்கறை காட்டவில்லை, புதிய திமுக தலவர் கருணாநிதி பாரபட்சம் காட்டுகிறார் என்ற குற்றஞ்சாட்டுடன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக விலிருந்து 1974ல் விலகினார். அவர் கூறியது,
“ ஹரிஜனங்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்குப் புதுக்கட்சி ஆரம்பிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அம்பேத்காருக்குப் பின் யாரும் தலித்துகளுக்காகப் முழுமனதாகப் போராடவில்லை... நாம் புதுக்கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சியாக அமர்ந்து தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடுவோம். அவர்கள் முடிவில்லாமல் நம்மை சுரண்டுவதையும் அவமானப்படுத்துவதையும் இனியும் அனுமதிக்க முடியாது.
இவர் 1974ல் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் 1977ல் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தனது கட்சியை இணைத்து விட்டார்.

மத்திய அமைச்சராக

சத்தியவாணி முத்து, ஏப்ரல் 3, 1978 முதல் ஏப்ரல் 2,1984 வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜ்ய சபை உறுப்பினராக இருந்தார். 1979ல்
இந்தியப் பிரதமர் சரண் சிங்கின் அமைச்சரவையில் பதவி வகித்தார். இவரும் பாலா பழையனூரும் தான் முதன்முதல் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற காங்கிரசல்லாத திராவிட கட்சியைச் சேர்ந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்.

நினைவுச் சின்னங்கள்
எண்ணூரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்கு “சத்தியவாணி முத்து நகர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்துக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.1970-களில் சென்னை,அண்ணாநகர் கிழக்குப்பகுதியில், இன்றைய காந்திநகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக்கு அருகே காங்கிரஸ் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள பகுதி (புதிய ஆவடி சாலை மற்றும் அண்ணாநகர் கிழக்கும் சந்திக்கும் இடம்) மணிவர்மா காலனி என்றும், அதையொட்டிய அண்ணாநகர் கிழக்குச் சாலையில் சத்தியவாணிமுத்து காலனி ( இது தி.மு.க. சார்பானது) என்றும் இரண்டு பகுதிகள் இருந்தன. அந்தக் காலனிகளை அப்புறப்படுத்திய இடத்தில்தான் இப்போது அரசினர் மருத்துவமனை இயங்கி வருகிறது.


முதல் பெண் தலித் அமைச்சர்

தமிழக அரசியல் வரலாற்றில் ஆட்சிப் பொறுப்பில் இடம்பெற்று, தலித் மக்களுக்காக ஒலித்த முதல் பெண் குரல் சத்தியவாணி முத்துவினுடையது. 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அந்தக் கட்சியின் உறுப்பினராக அவர் இருந்துவந்தார். குலக்கல்வித் திட்டத்துக்கு எதிரான தி.மு.க.வின் போராட்டங்களில் பங்கேற்று, சிறை சென்றிருக்கிறார். தொடர் கட்சிப் பணிகளின் அடுத்த கட்டமாக, தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
தாழ்த்தப்பட்டோர் மேம்பாடு
1957 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு தி.மு.க. சார்பில் இரண்டு முறை பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
அண்ணா தலைமையிலான தி.மு.க.வின் முதல் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சராகப் பதவி வகித்தார். அதற்குப் பிந்தைய கருணாநிதி ஆட்சியிலும் தாழ்த்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராகத் தொடர்ந்தார். அவரது காலத்தில்தான் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிப் பெண்கள், மாணவர்கள், குழந்தைகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
அவரது பதவிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதில் கவனம் செலுத்தினார்; தமிழகம் முழுவதும் 200 குழந்தை நல மையங்களும், மாவட்டச் சமூகநல மையங்களும் ஆரம்பிக்கப்பட்டன. இந்த மையங்கள் மூலம் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு வேலையும், கல்வியும் வழங்கப்பட்டன. 1970-ல் பெண்களுடைய சிறுசேமிப்புக்குப் பெரும் ஊக்கமளித்தார். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதிகளை உருவாக்குவதிலும் முனைப்பு காட்டினார்.
இடப்பெயர்வு
1973-ல் அவரது முயற்சியில்தான் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 508 மாணவர் விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டன. நல்ல நோக்கத்துடன் அவை ஆரம்பிக்கப்பட்டாலும், இன்றைக்கு அவை போதுமான அடிப்படை வசதிகளும் பராமரிப்பும் இன்றி இருப்பது அலட்சியத்துக்கான அடையாளம்.
இப்படித் தாழ்த்தப்பட்டோர், பெண்கள், மாணவர்கள் நலனில் தொடர்ச்சியான அக்கறையை வெளிப்படுத்திவந்தார் சத்தியவாணி முத்து. அதேநேரம் 1974-ல் கருணாநிதி ஆட்சியின் அமைச்சர் பதவியைத் துறந்து, கட்சியை விட்டும் விலகினார். ‘தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கி அவர் நடத்திவந்தாலும், 1977 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வென்ற பிறகு, அந்தக் கட்சியுடன் தா.மு.க. இணைக்கப்பட்டது.
அ.தி.மு.க.வில் சேர்ந்த பிறகு போட்டியிட்ட 1977, 1984 சட்டப்பேரவை தேர்தல்களில் அடுத்தடுத்துத் தோற்றாலும், இடைப்பட்ட காலத்தில் அக்கட்சியின் சார்பாக மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் காலத்தில் நாடாளுமன்றத்தின் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலக் குழு, வரதட்சிணைத் தடுப்பு, மதுவிலக்குச் சட்டங்களை அமல்படுத்தும் குழுக்களில் இடம்பெற்றுத் தன் கருத்துகளைத் தைரியமாக முன்வைத்தார்.
1979-ல் சரண் சிங் தலைமையிலான மத்திய ஆட்சியில் சத்தியவாணி முத்து அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அவரும் காரைக்காலைச் சேர்ந்த அரவிந்த பாலா பழனூரும் மத்திய அமைச்சரவையில் முதன்முதலாக இடம்பெற்ற திராவிடக் கட்சி ஒன்றைச் சேர்ந்த அமைச்சர்கள் என்ற பெருமையையும் பெறுகிறார்கள்.
தாழ்த்தப்பட்டோர் சார்பில் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்று, பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை நடைமுறைப்படுத்திய வகையிலும், பெண்கள் முன்னேற்றத்துக்குத் தொடர்ச்சியாகப் பங்களித்த வகையிலும் தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத முகம் சத்தியவாணி முத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக