சனி, 3 பிப்ரவரி, 2018

உலகப் புற்றுநோய் நாள் ( World Cancer Day ) பிப்ரவரி 4.


உலகப் புற்றுநோய் நாள் ( World Cancer Day ) பிப்ரவரி 4.

உலகப் புற்றுநோய் நாள் ( World Cancer Day ) என்பது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். உலகப் புற்றுநோய் நாள் 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் ( Union for International Cancer Control ) என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் இறப்பு வீதம், மற்றும் புற்றுநோய்த் தாக்கத்தை 2020 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்களவு குறைத்தலே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.


உலகப் புற்று நோய் தினம்!

 இன்று உலக புற்று நோய் தினம். செல்வந்த நாடுகளின் நோய் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்த புற்றுநோய் இன்று உலகில் அனைத்து நாடுகளையும் மிகமோசமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.
2012இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் 1 கோடியே 41 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 82 லட்சம் பேர் புற்று நோயால் மரணமடைகின்றனர்.
3 கோடியே 26 லட்சம் நோயாளிகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 5 வருடங்களாக சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.
பிப்ரவரி 4ம் தேதி
சர்வதேச ரீதியில் உலக புற்று நோய் தினம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. 2014ம் ஆண்டுக்கான இத்தினத்தின் தொனிப்பொருள், 'மாயத்திரையை அகற்றி உண்மையைப் பாருங்கள்' என்பதாகும். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது.
புற்று நோய் விழிப்புணர்வு
நோய் பற்றிய முழு தகவல்களையும் தருவது, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை இத்தினத்தின் எதிர்பார்ப்பாகும். இத்தினத்தை உலக புற்று நோய் கட்டுப்படுத்துதல் கூட்டமைப்பு (Union for International Cancer Control, UIIC) முன்னின்று நடத்துகிறது. இந்த புற்று நோய் தினம் 1933ஆம் ஆண்டு ஜெனிவா நகரில் உலக புற்று நோய் மையத்தின் மூலமாக (WICC) ஏற்படுத்தப்பட்டது.
கட்டுப்பாடற்று செல்கள் பெருகுவதே புற்று நோய்
புற்றுநோய் என்பது (Cancer) கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி ஏனெய தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும், எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
மரபிகளில் ஏற்படும் மாற்றங்கள்
புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை சுருக்கமாக நோக்குவோமாயின் கலங்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது.
புகைப்பழக்கம்...
புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள், புற்றுநோய் ஏற்படும் வாய்புள்ள பணியில் ஈடுபடுதல், எச்.ஐ.வி நோய் தொற்று, சில வேளைகளில் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.
அறிகுறிகள்
புற்று நோய் தொடர்பான அறிகுறிகளில் சில- உடலில் உள்ள உறுப்புகளில் ஒருவித தடிப்பு மற்றும் வீக்கம், உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும் மாற்றங்கள், ஆறாத புண்கள், தொடர் இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல், மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் மாற்றம், தொடர்ந்த அஜிரணம் மற்றும் உணவை விழுங்குவதில் பிரச்சனை ஏற்படுதல், உடல் எடையில் மாற்றம், இயல்புக்கு மாறான ரத்தபோக்கு மற்றும் ரத்த கசிவு, நோயின் தன்மைக்கேற்ப அறிகுறிகள் மாற்றமடையலாம்.
மரணத்தைத் தள்ளிப் போடலாம்
புற்றுநோய் தவிர்க்கப்பட முடியாத போதிலும் சரியான நேரத்தில் உரிய சிகிச்சை முறையை ஆரம்பிப்பதன் மூலம் மரணத்தை தள்ளிப்போட முடியும். ஆகையினால், புற்றுநோய்க்கு ஆளான ஒருவர் இனிமேல் தன்னால் எதுவுமே செய்ய இயலாது என்ற எண்ணத்தை கைவிட வேண்டும்.
விழிப்புணர்வு அவசியம்
சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடல் இருந்தால் புற்றுநோய்களிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். புற்றுநோய்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படக் கூடியவையாகவேயுள்ளன. புகைபிடிப்பதை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மதுப்பழக்கத்தை, போதைப் பொருட்களை தவிர்த்தல் போன்ற அடிப்படை விடயங்களின் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து விடமுடியும்.
அதிகரிக்கும் நோயாளிகள்
இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதன்படி வருடாந்தம் புற்றுநோய் சிகிச்சைகளுக்காக 25 ஆயிரம் பேர் புதிதாக தம்மை பதிவு செய்து கொள்வதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்தது. இவர்களுள் ஆண்டு தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் புற்றுநோயினால் உயிரிழந்ததாகவும் பணியகத்தின் வைத்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை, புற்றுநோய்க்கு உள்ளானவர்கள் இறுதிக் கட்டத்தில் சிகிச்சைக்காக வைத்தியர்களை நாடி வருவதே வைத்தியசாலைகளிலிருந்து தமக்கு கிடைக்கும் பொதுவான முறைப்பாடு எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
நவீன சிகிச்சை முறைகள்
தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நவீன சிகிச்சை முறைகள் இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதனால் எம்மால் நோயாளிகளை முன்னரை விடவும் அதிகமாகவே குணப்படுத்த முடியுமெனவும் வைத்தியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மீண்டும் பழைய தோற்றத்தைப் பெறலாம்
சிகிச்சையின்போது ஏற்படக்கூடிய உருவ மாற்றம், தலைமயிர் கொட்டுதல், உடல் இளைத்தல் ஆகிய அனைத்தும் தற்காலிகமானவையேயாகும். குறுகிய காலத்தில் அவர் மீண்டும் பழைய தோற்றத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும். ஆகையினால் சமூகத்திற்கு வெட்கப்பட அல்லது அஞ்சியோ சிகிச்சைகள் ஆரம்பிப்பதனை காலம் தாழ்த்தவோ அல்லது தவிர்ப்பதோ பிழையான கொள்கையெனவும் புற்றுநோய் குணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முழுமையான உடற்பரிசோதனை
இலங்கையில் 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் தமது பிரதேச செயலகத்திலுள்ள மருத்துவ அதிகாரிகள் அலுவலகத்தில் இலவசமாக முன்னெடுக்கப்படும் முழுமையான உடல் மருத்துவ பரிசோதனைக்கு கட்டாயமாக சமுகமளிக்க வேண்டுமெனவும் வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களை தவிர்த்துக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தனர்.
மார்பகப் புற்றுநோய்
பெண்களுக்கு அதிகமாக மார்பக புற்றுநோயும், இரண்டாவதாக கர்ப்பப்பை புற்றுநோயுமே பாரிய அச்சுறுத்தலாகவுள்ளன. புற்றுநோய் சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஷிரந்திக்கா வித்தான கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் வருடந்தோறும் 2 ஆயிரம் பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு உள்ளாவதாக கூறினார்.


உயிரிழப்பு அதிகரிப்பு
மார்பக புற்றுநோய்க்கு உள்ளாவோரில் 470 பேர் வருடந்தோறும் உயிரிழப்பதாகவும் சுமார் 12 ஆயிரம் பெண்கள் முறையான சிகிச்சைகளுடன் தொடர்ந்தும் உயிர் வாழ்வதாகவும் அவர் கூறினார். 2030 ஆம் ஆண்டளவில் வருடத்திற்கு 4 இலட்சத்து 30 ஆயிரம் பேர் கர்ப்பப்பை புற்றுநோயினால் உயிரிழக்கலாமெனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை வருடந்தோறும் கர்ப்பப்பை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பேர் புதிதாக இனங்காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மார்பகத்தை அகற்றாமலேயே
இக்காலத்தில் நோயின் உண்மையான பரிமாணத்தை அறியவும், அது பரவியுள்ள இடங்களை அறியவும், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், பெட் ஸ்கேன், எலும்பு ஸ்கேன், மொமோகிராம், சிடி ஸ்கேன் போன்றவை உதவியாக உள்ளன. புற்று நோய் ஒரு உறுப்பை பாதித்துவிட்டால், அந்த உறுப்பை அகற்றாமல், நோயைக் குணப்படுத்துவதே நவீன மருத்துவத்தின் இலக்காகும்
நோய் முற்றிய நிலையில் விழிப்புணர்வு
புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் அரைவாசிக்கும் அதிகமானோர் நோய் முற்றிய நிலையிலேயே தமக்கு புற்றுநோய் இருப்பதை தெரிந்து கொள்கின்றனர். எனவே இது தொடர்பில் மக்களும் கவனம் செலுத்தி தமக்கு ஏற்படும் நோய்களின் போது வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால் காலதாமதம் செய்யாது உடனடியாகவே மருத்துவமனைகளை நாடவேண்டும்.
இன்றைய புற்றுநோய் தினத்தில் நாம் சில விடயங்களை நாம் கருத்திற்கொள்வோம்.
சமூகத்தின் தாக்கம்
புற்றுநோய் என்பது சுகாதாரத்துடன் மட்டும் தொடர்புடை விடயம் என நினைக்கிறோம். ஆனால் அது சுகாதாரத்துடன் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின், ஒரு நாட்டின் அபிவிருத்தியில், மனித உரிமைகளில் என அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது.
உலகப் பிரச்சினை
புற்றுநோய் என்பது உலக பிரச்சினை. அனைத்து வயதினரையும் அனைத்து, சமூக பிரிவுகளையும், அனைத்து நாடுகளையும் அது தாக்குகிறது.
முடிந்தளவு குணப்படுத்தலாம்
புற்றுநோய் என்பதை ஒரு மரண தண்டனையாக சிலர் என நினைக்கின்றார்கள். ஆனால் புற்றுநோயை முடிந்தளவு குணப்படுத்த முடியும். மூன்றாம் கட்டத்தை கடந்த பின்னர் கூட குணப்படுத்த முடியும் என்கிறது நவீன மருத்துவ சிகிச்சைகள்.
விதி அல்ல...
புற்றுநோயை சிலர் என் விதி என நினைக்கின்றார்கள். ஆனால் நீங்கள் போதுமான அறிவையும், விழிப்புணர்வையும் வளர்த்துக்கொண்டால் உலகில் புற்றுநோயை 30% வீதம் தடுத்துவிட முடியும் என்பது தான் உண்மை.
ஆரோக்கியமாக வாழ பழகுவோம்
எனவே இவற்றை கருத்தில் கொண்டு புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், எந்தவித அச்சமுமின்றி இன்றே அருகில் உள்ள மருத்துவரை நாடுவோம். எமது சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்வோம். ஆரோக்கியமாக வாழ்வதை வாழ்நாள் பழக்கமாக கொள்வோம்..



சிறப்பு தினங்கள்... சிறப்பு கட்டுரைகள்...

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, மருத்துவம் செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, புற்றுநோயால் ஏற்படும் சமூக ஒதுக்கத்தை நீக்குவது, புற்றுநோயை எதிர்த்து போராடுவது போன்றவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதியன்று சர்வதேச புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தனிநபர், குடும்பம் மற்றும் சமுதாயத்தின் மீது ஏற்படும் புற்றுநோய் தாக்கத்தின் பளுவைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு மக்கள் அனைவரையும் வலிமைப்படுத்துவதும் இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கமாக உள்ளது.
மரபியல் பிறழ்ச்சி போன்ற மரபியல் சார்ந்த காரணிகள், சூழலியல் காரணிகள் அல்லது அறியப்படாத காரணிகளாலும் புற்றுநோய் உருவாகலாம். இவற்றில் சிலவற்றைத் தடுக்கலாம், சிலவற்றைத் தடுக்க இயலாது. ஆனால், சில புற்றுநோய்களை ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் புகையிலை, மது போன்ற ஆபத்துக் காரணிகளைத் தவிர்ப்பதன் மூலம் வராமல் தடுக்கலாம்.
வேதிச்சிகிச்சை, கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன மருத்துவ முன்னேற்றங்களைக் கொண்டு புற்றுநோயைக் குணப்படுத்தலாம். முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், மருத்துவத்தின் மூலம் நோயாளியால் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடியும்.தற்போது உலகளவில் புற்றுநோய் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. இது அதிகமாக பேசப்படும் ஒரு பயங்கரமான நோயாகவும், மரண பயத்தோடு இணைந்த நோயாகவும் கருதப்படுகிறது.
புற்றுநோய்க்கு மருத்துவத்தின் மூலம் முழுமையான ஒரு தீர்வு கிடைக்காவிட்டாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் இந்த நோயோடு இணைந்துள்ள சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்துக் காரணிகளை நம்மால் குறைக்க முடியும். நோய் குறித்த சொந்த அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும். ஆரம்பக்கட்ட நோய் கண்டறிதல் மூலம் உரிய சிகிச்சைகள் அளித்து உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம்.
தேசிய குடற்புழு நீக்கும் தினம் (National Deworming Day)
தேசிய குடற்புழு நீக்கும் தினத்தை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் 2015-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கத் தொடங்கியது. அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் பிப்ரவரி 10-ஆம் நாள் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.1 முதல் 19 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்து அவர்களுக்கு நல்ல உடல்நலமும் சிறந்த வாழ்க்கையும் அளிப்பதே இந்நாளை அனுசரிப்பதன் முக்கிய நோக்கமாக உள்ளது.
குடற்புழுக்களை நீக்கும் பூச்சி மருந்து இலவசமாக பள்ளிகளிலும் அங்கன்வாடி மையங்களிலும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் 1 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 24.1 கோடி சிறுவர்கள் மாசு கலந்த மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று ஆபத்துடன் வாழ்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இப்படி மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று (Soil-transmitted helminths-STH) ஒருவருடைய வளர்ச்சியிலும், உடல் உருவாக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
STH தொற்றுள்ள நபரின் ஊட்டச்சத்து நிலையில் ஏற்படும் பாதிப்புகள்
* மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று ஏற்பட்டுள்ள நபரின் ரத்தம் மற்றும் திசுக்களை அந்த புழுக்கள் உண்பதால் அந்த நபர்
களுக்கு இரும்பு மற்றும் புரத இழப்பு உண்டாகிறது.
* இந்த புழுக்கள் குடலில் ஊட்டச்சத்து உறிஞ்சலைப் பாதிக்கின்றன. உருண்டைப் புழுக்கள் குடலுக்குள் வைட்டமின் ஏ-வை பெறுவதற்கு போட்டியிடுகின்றன.
* சில வகை குடற்புழுக்களால் பசியின்மை உண்டாகிறது. இதனால் ஊட்டச்சத்து உள்ளெடுப்பில் குறைபாடும், உடல்தகுதிக் குறைவும் ஏற்படுகின்றன.
* இவ்வகை புழுக்களால் வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு ஏற்படும் ஆபத்துகளும் அதிகரிக்கிறது.
STH தொற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்
* மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று களைக் கட்டுப்படுத்துவதற்கு, சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.
* உணவு உண்பதற்கு முன்னும், கழிவறையைப் பயன்படுத்திய பின்னும் சோப்பு மற்றும் நீரைப் பயன்படுத்தி கைகளை சரியான முறையில் கழுவ வேண்டும்.
* பாதுகாப்பான காலணிகளை அணிய வேண்டும்.
* பச்சைக் காய்களையும் பழங்களையும் சுத்தமான நீரில் நன்கு கழுவி உண்ண வேண்டும்.
* திறந்த வெளியில் மலம் கழிக்காமல் கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
* கை மற்றும் கால்களிலுள்ள நகங்களை வெட்டிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை சரியான முறையில் கடைபிடிப்பதன் மூலம் குடற்புழு தொற்றினைத் தடுத்து ஆரோக்கியமாக வாழலாம்.
பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார விழிப்புணர்வு தினம் (Sexual and Reproductive Health Awareness Day)
பாலியல் மற்றும் இனப்பெருக்கப் பிரச்னைகள் பற்றிய கல்வியை மக்களுக்குப் புகட்டி பால்வினை நோய் பரவலைக் குறைப்பதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. பால்வினைத் தொற்று நோய்கள் பெரியளவிலான பொது சுகாதாரப் பிரச்னைகளில் ஒன்றாகத் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்த பிரச்னைகளைத் தடுப்பதற்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்வுகள், பிரச்சாரங்கள் மேற்கொள்வதோடு, அந்த பிரச்னைகள் தீவிரமடையாதவாறு தடுத்து உயிர்களைக் காப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
‘பால்வினை சுகாதாரம் என்பது ஒரு நபரின் உடல், மனம் மற்றும் சமூகநல நிலை போன்றவற்றை உள்ளடக்கியது’ என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
பாலுறவை நேர் சிந்தனையோடும் கண்ணியத்தோடும் அணுக வேண்டும். இன்பம் அளிப்பதோடு பாதுகாப்பான அனுபவமாகவும் அந்த பாலுறவு இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அதில் வற்புறுத்தலும், பாரபட்சமும், வன்முறையும் கண்டிப்பாக இருக்கக்கூடாது.
பால்வினை சுகாதாரம் என்பது பரந்துபட்ட ஒன்றாகும். அதற்குள் பல சவால்களும் பிரச்னைகளும் அடங்கியுள்ளன. பால்வினை சுகாதாரம் சம்பந்தமான மனித உரிமைகள், உடலுறவு இன்பம், பாலுணர்வு மற்றும் நிறைவு, பால்வினைத் தொற்று நோய்கள், இனப்பெருக்கப் பாதைத் தொற்று மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் போன்ற நோய்கள், வன்முறை, பெண்ணுறுப்பு சிதைத்தல், பாலியல் செயலிழப்பு, பாலியல் சுகாதாரத்தோடு தொடர்புடைய மனநலம் போன்ற அனைத்துமே கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகளாக இருக்கிறது.
பாலியல் மற்றும் இனவிருத்தி சம்பந்தப்பட்ட சுகாதாரப் பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கவும், அந்தரங்க ஆலோசனை சேவைகளுக்காகவும் தேசிய மக்கள்தொகை நிலைத்தன்மை நிதியம் ஒரு தொலைபேசி இணைப்பைத் தொடங்கியுள்ளது. இனப்பெருக்க சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் குழந்தைகள் நலம் பற்றிய அதிகாரப்பூர்வமான தொலைபேசி தகவலைப் பெற விரும்புபவர்கள் 1800-11-6555 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இத்தொலைபேசி உதவி தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கிடைக்கிறது. பால்வினை சுகாதாரம், பால்வினை நோய்கள், கருத்தடை, கர்ப்பம், மலட்டுத்தன்மை, கருக்கலைப்பு, பின் மாதவிடாய்நிலை, பருவமடைதல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு, ஆண்கள் மற்றும் பெண்களின் இனப்பெருக்க மண்டலம் செயல்படும் விதம் குறித்தும் உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழு விளக்கமளிக்கிறது.நட்பு வட்டம், வலைத்தளம், வாய்வழி செய்தி பரிமாற்றத்தைக் காட்டிலும் சரியானதொரு இடத்திலிருந்து பெறும் ஆலோசனையாக இருப்பதால் பொதுமக்கள் இச்சேவையை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக