செவ்வாய், 24 செப்டம்பர், 2019

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11.


சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 
அக்டோபர் 11.

பெண் குழந்தைகள்... பெண் தெய்வங்கள்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

இன்றைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது அநீதி. பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011 டிச., 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, அக்., 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. "பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து.

உலகில் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்கவேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம், அவர்கள் மட்டுமல்லாமல் சமூகமும் முன்னேறும். இருபது ஆண்டுகளுக்கு முன், பெண் குழந்தைகளுக்கு கல்வி என்பது மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இன்று ஓரளவுக்கு மாணவிகளும் கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இருப்பினும் இன்றும் சில நாடுகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. அவர்கள் பள்ளி செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு வருமானம், பாதுகாப்பு, கலாசாரம், கல்வி நிறுவனம் ஆகியவை காரணம்.


என்ன செய்வது:

பெண் குழந்தைகள் அதிகளவில் கல்வி பெறுவதற்கு, அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது.


* பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தேவையான, போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துதல். படிக்கும் குழந்தைகளுக்கு வங்கிகள் மூலம் உதவித்தொகை வழங்குதல்.


* பெண் குழந்தைகளுக்கும் தொழில்நுட்ப கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளித்தல்.


* பாலின சமத்துவத்தை வலியுறுத்துவது, குழந்தை திருமணத்தை அறவே ஒழிப்பது, குடும்பங்களில் மாணவர்களுக்கு சமமாக மாணவிகளுக்கும் அனைத்து சலுகைகள் வழங்குதல்.


* தொழில்நுட்ப கல்வி , கிராமப்புற மாணவிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்தல்.

கண்ணின் மணியே... கண்ணின் மணியே! - இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்'

என்ற பாரதியார் வரிகளுக்கு ஏற்ப பெண்கள் பல்வேறு துறைகளில் சிகரங்களை தொடுகின்றனர். சில கிரிமினல்களால், பெண் குழந்தைகள் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். பெண் குழந்தைகளை சிசுவிலேயே அழிக்கும் செயலும்வேதனை தருகிறது.

பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், உரிமைகளை காத்தல் மற்றும், சாதனைகளை அங்கீகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்., 11ல், சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 'அறிவார்ந்த பெண் படைகளுடன்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம், இந்த சமூகம் முன்னேறும். இன்றும் சில நாடுகளில் பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும்.
பாலின விகிதம் :


இந்தியாவில் 2011 சென்சஸ் படி, 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் உள்ளனர். ஆனால் 1 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 914 என மிக குறைவாக உள்ளது. இது 2001ல் 927 ஆக இருந்தது. அதே போல தமிழகத்தில் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 995 பெண்களாக உள்ளது. 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாலின விகிதம் 946 ஆக உள்ளது. இதிலிருந்து பெண் குழந்தைகள் காக்கப்பட வேண்டிய அவசியம் புரிகிறது. 'மருமகள் தேவைப்படும் போது, மகள் வேண்டாமா?' என்பதை சிந்திக்க வேண்டும்.

வானிலை மாறுகிறது:


பெண் சிசுக்கொலைகளுக்கு, 'வரதட்சணையே' முக்கிய காரணம். திருமணத்துக்கு பணம் சேர்க்க வேண்டும் என்பதால் பெண் குழந்தைகளை சுமையாக கருதினர். தற்போது இதில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. வரதட்சணை கேட்காமல் திருமணம் செய்யும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இது பரவலாக வேண்டும். அப்போது பெண் குழந்தை சுமையல்ல, வரம் என்பது அனைவருக்கும் புரியும்.

என்ன செய்யலாம்:

* பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தருதல்.
* பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல்.
* பெண் குழந்தைகள் மீதான உடல், மனம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை முற்றிலும் தடுத்தல்.
* படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு, சுயதொழில் அல்லது வேலைவாய்ப்பு பயிற்சி அளித்தல்.
* பாலின சமத்துவத்தை வலியுறுத்துவது, குழந்தை திருமணத்தை அறவே ஒழிப்பது குடும்பங்களில் மகன்களுக்கு சமமாக மகள்களையும் நடத்த வேண்டும்.



மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணி பாட்டிற்க்கிணங்க பெண் குழந்தைகள் தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டுவருகின்றது.

பெண்களின் உரிமைகளை எடுத்துரைக்கவும் அவர்களின் சுதந்திரத்தை நிலைநாட்டவும் ஐ.நா. சபை 2011-ல் எடுத்த முடிவின்படி அக்டோபர் 11, 2012-ல் முதலாவது சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. “பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்’ என்பது இத்தினத்தின் மையக்கருத்து.

பெண்குழந்தைகள் அதிகளவில் கல்வி பெறுவதற்கு, அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பெற்றோர்களின் பங்கு முக்கியம். வீட்டை விட்டு வெளியே செல்கிற பெண் குழந்தைகள் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எத்தகைய பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதை கட்டாயம் கற்றுத்தர வேண்டும்.

இந்தக் காலத்தில் ஆணும், பெண்ணும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலை வந்து விட்டது. வேலைக்கு போகிறோம், சாம்பாத்திக்கிறோம், என்று சொல்லிக்கொண்டு பெண் குழந்தைகளை அலட்சியமாக விட்டு விடுதல் கூடாது.

பெண் குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தாய்மார்கள் கவனிக்க வேண்டும். அதற்கென்று எதற்கெடுத்தாலும் கண்டிப்பு கூடாது. பெண்குழந்தைகளுக்கு கற்றுத்தருவது போல் ஆண் குழந்தைகளையும் சிறுவயது முதலே விழிப்புணர்வுடன் வளர்க்க வேண்டும்.

பெண் குழந்தைகளை 18 வயது நிறைவதற்கு முன் திருமணவாழ்கையில் தள்ளப்படுவது தவறு. இவை இன்று சதவிகித அளவில் குறைந்தாலும் இன்றளவும் சரியான தீர்வினை எட்டவில்லை.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 336 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்றப்பிரிவு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லிப்பால் கலாச்சாரமும், கரும்பலகை இல்லா மாநிலமும் இன்றளவும்  இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றன. இவை தடுக்கப் பட்ட போதிலும் இன்னும் வேர்கள் களையவில்லை. எனவே பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளை போல் சமமாக நடத்தி அவர்களின் வாழ்விற்கும் நாமும் துணையாக நிற்போம்.


இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

பாலின பாகுபாட்டை நீக்கி, பெண் குழந்தைகளுக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இன்று சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்படுகிறது.
 
சென்னை: பாலின பாகுபாட்டை நீக்கி, பெண் குழந்தைகளுக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இன்று சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்படுகிறது.
பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களது திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்தது. அதன்படி கடந்த 2012ஆம் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி முதல் சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பெண் குழந்தைகளைப் பாதுகாத்து போற்றும் வகையில் இன்று நான்காவது சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்படுகிறது. இது, தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிர்த்து போராடுவதற்குப் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவை தேவை என்பதை உணர்த்தும் வகையில் அமைகிறது.


சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் பிறப்புரிமையை நிலைநாட்டவும், பாலியல் வன்முறையில் இருந்து பெண் குழந்தைகளை காக்கவும் சட்டங்கள் இயற்றபட்டு கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.


இந்நிலையில், பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை முன்னேற்றும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. சமூகத்தில் பெண்கள் அவமதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும், மதிக்கபட வேண்டும் என்பதை உறுதிமொழியாக ஒவ்வொருவரும் ஏற்றால் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடும் வன்முறையும் குறையும்.


பெண் குழந்தைகளை.. பெண் குழந்தைகளாக வாழ விடுங்களேன்! #WorldGirlChildDay

இன்று உலக பெண் குழந்தைகள் தினம்! பெண் குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்யவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும்,  19- 12- 2011 அன்று ஐ.நா சபை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக  அறிவிக்கப்பட்டது.

இன்றைய தினம் ஃபேஸ்புக், ட்விட்டரில் #SaveGirlChild என்று பதிவுகள் போடும் முன், உங்களைச் சுற்றி இருக்கும்  பெண் குழந்தைகளுக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். நம் சிறுமிகள் எத்தனை ஆபத்துகளுக்கு நடுவில் வளர்ந்து வருகிறார்கள் என்பதை, தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்..!

எனக்கு புரிகிறது.. இந்த நாள் மட்டும் அல்ல. பெண்களுக்கான எந்த நாள் என்றாலும், அவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை பற்றி பேசிக்கொண்டே இருப்பது படிக்கும் உங்களுக்கு அலுப்பையும், கசப்பையும் தரலாம். ஆனால் இன்று உலகில் சுமார் 1.1 பில்லியன் சிறுமிகள் இருக்கிறார்கள். அவர்களின் பெரும்பாலான சிறுமிளை பாலியல் ரீதியாக மனித மிருகங்கள் சீரழிக்கிறார்கள். இந்த அவலம் மறையும்வரை, இந்தக் கசப்புக்கு நீங்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டும். காரணம், எந்த மனிதன் எப்போது மிருகமாகிறான் என்பது யாராலும் யூகிக்க முடிவதில்லை.



நவீன குழந்தைத் திருமணம் பற்றி தெரியுமா?

பெண் கல்விக்கு முக்கியத் தடையாக இருப்பது குழந்தைத் திருமணம். சீனாவைத் தவிர, உலகில் வளர்ந்த நாடுகளில் 18 வயதில் இருக்கும் மூன்று பெண் குழந்தைகளில் ஒருவருக்கு திருமணம் நடக்கிறது. இதனால் அவர்களுக்குக் கல்வி தடைப்பட்டு, கணவரால் பதின் வயதில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி, இளம் வயதில் தாயாகி, உடலாலும் மனதாலும் பெரியளவில் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்குகிறார்கள் பெண் குழந்தைகள்.

இப்போது கல்வியின் முக்கியத்துவம் பற்றிய புரிதல் பரவலாகி இருப்பதால், பெண் பிள்ளைகளை வீட்டுக்குள் முடக்கி வைப்பதில்லை. பரவலாக, பெண் பிள்ளைகள் படிக்க வீட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், கல்லூரி செல்லும்போது காதலித்து விடுவார்களோ என்று பயந்து, பூப்படைந்தவுடன் அவர்களுக்குத் திருமணம் முடித்துவிடுகிறார்கள். இதுதான் குழந்தைத் திருமணத்தில் ஏற்றப்பட்ட நவீன மாற்றம்.

உங்கள் பெண் குழந்தைக்கு என்ன தற்காப்புக் கலை தெரியும்?

இன்று டிவி ஷோக்களின் மோகத்தால் பாட்டு, நடன வகுப்புகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகள் அதிகம். தவறில்லைதான். ஆனால், அதைவிட குழந்தையின் பாதுகாப்புதான் முதல் தேவை. குறைந்தபட்சம் தன்னைத் தற்காத்துக்கொள்ள, பெண் குழந்தைகளுக்கு கராத்தே, குங்பூ போன்ற எதாவது ஒரு தற்காப்புக் கலை கற்றுக்கொடுப்பது அவசியம். இதனால் பாதுக்காப்புடன், அந்தப் பெண் குழந்தைகள்  தைரியமும், தன்னம்பிக்கையும் கிடைக்கப்பெற்று, வாழ்வையும், சமூகத்தையும் துணிச்சலுடன் எதிர்கொள்வார்கள்.




அதிகரிக்கும் இளம் வயது காதல்!


சிறுமிகள் பதின் வயதில் அவர்களுக்கு ஏற்படும் கிளர்ச்சியை காதல் எனத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். ''சமீபத்தில் 12 வயதுச் சிறுமி ஒருத்தி, 'என் எதிர்காலக் கணவரைப் பற்றின கனவு எனக்கு இருக்காதா?' என்று கேட்டபோது நான் அதிர்ச்சியாகிவிட்டேன்'' என்கிறார்,  மனநல மருத்துவர் பீனா. “இப்போது குழந்தைகளுக்கு குழந்தைப் பருவமே இல்லாமல் போய்விட்டது. அந்தக் கேள்வியைக் கேட்ட குழந்தையைபோல், இன்று பலர சிறுமிகள் காதல்(!) வசப்படுகிறார்கள்.  இதற்குக் காரணம் பெற்றோர்கள்தான். சிலர், 'நான் ரொம்ப சோஷியலா பழகுறேன்' என்று, குழந்தையிடம் அனைத்தையும் வெளிப்படையாகப் பேசுவார்கள். இன்னும் சிலர் தங்கள் குழந்தையிடம் ராணுவ ஆட்சி செலுத்துவார்கள். இவை இரண்டுமே தவறு.

குழந்தைகளிடம் சில நெறிமுறைகளோடு, நட்போடு பழக வேண்டும். அது கடினம்தான். இருப்பினும் சரியாகச் செய்தே ஆகவேண்டும். அதற்கு முதலில் அவர்கள் பேசுவதை காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களின் ஆண் நண்பர்களை அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் நட்பை ஆதரிக்கும் அதே நேரம், அவர்களுக்கான எல்லையையும் அவர்களின் மன நோகாதவாறு புரியவைக்கவேண்டும்.

உங்கள் பெண் குழந்தையின் மேல் உங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதும், அதைக் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவதும் அவசியம். அப்போதுதான் அவர்களின் இன்பம், துன்பம், குழப்பங்கள் போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வார்கள்.

குட் டச், பேட் டச்... கற்றுக்கொடுங்கள்!

பெண் குழந்தையின் உடல் பற்றியும், பாலியல் தீண்டல்களில் இருந்து அதைப் பாதுகாக்கவும் அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். குழந்தைக்கு விபரம் தெரிந்ததுமே, அவர்களுக்கு குட் டச், பேட் டச் பற்றிச் சொல்லிக்கொடுப்பது காலத்தின் அவசியம்'' என்கிறார் உளவியல் நிபுணர் நப்பின்னை.

''ஆண்கள், பெண்களுக்கு எதிரானவர்களே!"

''2014ல் 1,565 பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார்கள். இதில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளின் எண்ணிக்கை 1,110. தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளில் 60% - 68% பெண் குழந்தைகள் மீது நடந்தப்படுபவையே. பெண் குழந்தைகளை வேட்டையாடும் சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம். தங்களுக்கு நடக்கும் வன்முறையை வெளியில் சொல்லமுடியாத சூழலை சிறுமிகளுக்கு நாம் கொடுத்திருப்பதுதான் கொடூரத்தின் உச்சம்.

வெளியில் சொல்லக்கூடாது என்ற மிரட்டல் ஒரு பக்கம் என்றால், பாதிக்கப்படும் பெண்களையே குற்றவாளியாகப் பார்க்கும் இந்தச் சமூகத்தின் குருட்டுப் பார்வை இன்னொரு பக்கம். பாலியல் வன்முறைக்கு ஆடைதான் காரணம் என்றால், சிறுமிகளையும் சேலையால் போர்த்த வேண்டுமா? பின் தொடர்ந்து வருவது, தவறான ஜாடை காட்டுவது, தொடுவது, அநாகரிகமாகப் பேசுவது என பலதரப்பட்ட வன்முறைகளை பெண்களும் பெண் குழந்தைகளும் எதிர்கொள்கிறார்கள்" என்கிறார் சமூக ஆர்லவர் எவிடன்ஸ் கதிர்.

''நீதிமன்றங்களில் தண்டனை பெறும் பாலியல் வன்முறைகள் வெறும் 19% தான். இதில் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் 3% கூட இல்லை. பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்ட பெண் பிள்ளைகளில்  80 % பேருக்கு 20 நாட்களுக்குப் பிறகுதான் பரிசோதனை நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தவுடனேயே எச்சில், நகம், முடி, காயங்கள் போன்ற நுணுக்கமான தடயங்கள் ஆராயப்படுகின்றன. இங்கு அதுபோன்று இல்லை என்பதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணை மனதளவில் மீட்கும் கவுன்சிலிங்கூட சரியாகக் கொடுக்கப்படுவதில்லை.

பாலியல் கொடுமைகள் மட்டுமல்ல... குழந்தைத் திருமணம், பெண் கருக்கொலை, பெண் சிசுக்கொலை, ஆணவக் கொலைகள் என இன்றும் கிராமப்புறங்களில் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல... உலகத்தின் எல்லா நாடுகளிலும் பெண் பிள்ளைகளுக்கு எதிரான வன்முறைகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. வன்முறையின் அளவுகோல் வேறுபடுமே தவிர, பெண் இனத்தை நசுக்காத சமூகம் இந்தப் பூமியில் இல்லை.

நான் உட்பட் எல்லா ஆண்களுமே பெண்களுக்கு எதிரானவர்களாக ஏதோ ஒரு நேரத்தில் மாறிவிடுகிறார்கள். அது காந்தி, பெரியார், பாரதியார், அம்பேத்கார் என யாராக இருந்தாலும் பொருந்துகிறது. அவர்கள் பெரிய புரட்சி செய்திருக்கலாம்.  ஆனால் அனைவருமே ஏதோ ஓர் இடத்தில், 'நான் ஆண்' என்ற ஒரு திமிரான மனோபாவத்தை வெளிப்படுத்திவிடுகிறோம். எங்களுக்குத் தெரியாமலேயே அந்த எண்ணம் எட்டிப்பார்த்துவிடுகிறது. ஓர் ஆண் பிறந்து இறப்பதற்குள் தனக்குள் இருக்கும் ஆணாதிக்க மனோபாவத்தின் சதவிகிதத்தை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்'' என்கிறார் எவிடன்ஸ் கதிர்.

பெண் பிள்ளை கடத்தல்!


பெரும்பாலும் 10 - 16 வயதுடைய சிறுமிகளை மையப்படுத்தி கடத்தல்கள் நடக்கின்றன. இந்தச் சிறுமிகளை மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் பாலியல் தொழிலுக்காகவும், ஆபாச படங்கள் எடுக்கவும் பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம், 20 மாவட்டங்களில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையைவிடக் குறைவாக உள்ளது.  உங்களுக்குத் தெரிந்து குழந்தை கடத்தல், பாலியல் வன்முறை, பெண் சிசுக்கொலை, குழந்தைத் திருமணம், படிக்கத் தடை என்ற செயல்பாடுகள் நடந்தால்.. உடனே  1098 என்ற எண்ணுக்குத் தெரியப்படுத்துங்கள்.

இப்போது புரிகிறதா... உங்களைச் சுற்றியிருக்கும் பெண் பிள்ளைகள், எவ்வளவு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறார்கள் என்பது. அவர்களை நீங்கள் கொண்டாட வேண்டாம். அவர்களின் குழந்தைப் பருவக் கொண்டாட்டத்தை சிதைக்காமல் இருந்தால் போதுமானது. நீங்கள் முன் பின் அறியாத பெண் பிள்ளைகள் உட்பட, நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் உங்களால் முடிந்த குறைந்தபட்ச பாதுகாப்பைக் கொடுத்து வாழவிடுங்கள். அதுவே பெரிய வாழ்த்தாக அமையும்!


வந்தாள் மகாலட்சுமியே...! இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் !

'வந்தாள் மகாலட்சுமியே!
இனி என்றும் அவள் ஆட்சியே...'

என பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில் ஏற்படும் குதுாகலத்தை யாராலும் அளவிட முடியாது.பெண் குழந்தைகளை 'மகாலட்சுமி' எனவும் 'ஆதி பராசக்தி' எனவும் அவரவர் மதம், இனத்திற்கு ஏற்ப ஒவ்வொரு வகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு உண்டு. பழமைவாதம், உணர்வுகளை ஒரு காலிலும், தவறான எண்ணங்கள், புரிதல்களை மற்றொரு காலிலும் கட்டிக் கொண்டு பயணிக்காமல் பெண்ணுக்கு பெண்ணை எதிரியாக்காமல்... எந்த திசை நோக்கி பயணித்தால் அவர்களை வழிநடத்தலாம் என்று எண்ணி அந்த பெண் குழந்தைகள் தடம் மாறி கீழே விழுவதை விட, அவர்களையும் அவர்களின் உள்ளத்தின் உணர்வுகளையும் புரிந்து கொண்டும், தெரிந்து கொண்டும் அவர்களுடன் நாம் பயணிக்க வேண்டும்.

இந்தியாவில் பெண் குழந்தைகளை வழி நடத்தும் விதம் காலம் காலமாக அன்புடனும், அரவணைப்புடனும் தொடர்கிறது. வாசலில் கோலமிடுவது முதல் பெரியோரை மதிப்பது வரை எந்த ெவளிநாட்டினராலும் சொல்லி கொடுக்க முடியாத, சொல்லி கொடுக்காத சமூக சிந்தனைகளையும் பெண் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிறோம்.சில ஆண்டுகளாக மேற்கத்திய கலாசார போர்வையில் கம்ப்யூட்டர், மொபைல் போன் மூலம் அவர்கள் தற்காலிகமாக பாதை மாறலாம்.

ஆனால் அவர்களின் அடிமனதில் ஒளிந்திருக்கும் நம் கலாசாரம் மற்றும் பண்புகள் ஆன்மிக பலத்துடன் ஆழமாக பதிந்து இருப்பதால் அவர்களால் அவர்களை பாதுகாத்து கொள்ள முடிகிறது.ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் இந்த பெண் குழந்தைகளை பேணி காக்கும் வகையில் நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். எந்த நேரத்திலும், எந்த காலத்திலும் பெண் குழந்தைகளை நாம் கொண்டாட மறுப்பதில்லை. நவராத்திரி காலத்தின் போது பெண்கள் கொலு வைப்பது அவர்களின் முழு ஆளுமை திறனை வளர்த்து கொண்டு வரத் தான். கொலு வைப்பதன் மூலம் ஒரு பெண் குழந்தைக்கு தேவையான நல்ஒழுக்கம், பண்பு, பணிவு, ஆன்மிக வாழ்க்கை நெறி, உழைப்பு, ஆளுமை, கட்டுப்பாடு, கலாசாரம் போன்றவற்றை புரிய வைக்கிறோம்.

கல்வியும், ஆளுமையும் அவசியம் :

பெண் குழந்தைகளுக்கு நல்வழியை சிறந்த கல்வி மூலம் எளிதாக தந்து விடலாம். அவர்களை சரியான பாதையில் கால் பதிக்க வைத்து, அவர்களுடன் கை கோர்த்து, அவர்கள் பயணிக்கும் பாதையை பெற்றோர் உருவாக்கி கொடுக்க வேண்டும். செல்லும் பாதையை செம்மைப்படுத்தி, வழித்தடங்களில் இருக்கும் கரடுமுரடுகளையும், முட்புதர்களையும் அகற்றி விட்டாலே போதும். சிறந்த இலக்கை அடையும் சக்தி பெண் குழந்தைகளிடம் உள்ளது.நரியோடு தான் வாழ்க்கை எனில் ஊளையிட கற்று கொடுக்க வேண்டும்... பருந்துடன் தான் வாழ்க்கை எனில் அதை விட ஒரு சிறந்த உயரத்தை அடைய கற்று கொடுக்க வேண்டும். எந்த வித கேள்விகளுக்கும் அவளாகவே ஒரு சிறந்த திறன் மிக்க பதிலை தேர்ந்தெடுத்து... எந்தவித சூழ்நிலை சிக்கிலிலிருந்தும் சிறப்பாக ெவளிவந்து வெற்றி வாகை சூடும் ஒரு சிறந்த சமூக சிந்தனையுடன் கூடிய கல்வி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். கல்வியில், வழிகாட்டுதலில் பயிற்றுவிப்பதில் கஷ்டப்படுத்தாத சிறந்த வழிமுறைகளை கற்று கொடுக்க வேண்டும். கல்வி தான் சிறந்த பாதுகாப்பை பெண் குழந்தைகளுக்கு தரும்.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு:

பொதுவாக பெண் குழந்தைகள் எல்லாவித சூழ்நிலையையும் புரிந்து கொள்ளும் பக்குவத்தை அறிய வைப்பது நல்லது. ஆறுதல் தரும், சுகமான இளைப்பாறும் மடியை யார் மூலம் பெறுவது என உறுதிபட சொல்லி தெரிய வைக்க வேண்டும். அந்த இடம் தான் தன் கோபதாபங்களையும், விருப்பு வெறுப்புகளையும் ெவளிப்படுத்தும் இடமாக வைத்து கொள்ள கற்று கொடுக்க வேண்டும். அந்த இடம்... அந்த மடி... ஒரு தாயாகவோ... தந்தையாகவோ... சிறந்த நண்பராகவோ... உண்மையான பண்பான நபராகவோ இருக்க வேண்டும் என சொல்லி கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் தான் போலி எது? அசலுடன் கூடிய உண்மை எது? என அறிந்து புதை மணலில் சிக்காமல் தீர்க்கமாக முடிவு எடுக்கும் வகையில் பெண் குழந்தைகளை தயார் செய்ய முடியும்.

அடிப்படை வசதிகள் தேவை:

கல்விக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு அடிப்படை வசதிகளும் தேவைகளும், அரசு தரும் வெற்று இலவசங்களை விட முக்கியமான தேவை. அதை அரசுகள் புறக்கணிக்க கூடாது.வெறும் கவர்ச்சி மற்றும் அழகுப்பதுமைகளாக பெண் குழந்தைகளை காட்டாமல் தோல்வி கண்டாலும் அதை எதிர்த்து போரிடும் குணத்தை கற்று கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளை பல வித பொறுப்புகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ வைக்க முடியும். மகாராணியாகவும், சிறந்த நாயகியாகவும் தன்னை தானே செதுக்கி கொண்டு ஒரு குடும்பத்தையும், ஒரு பாரம்பரியத்தையும், ஒரு சமூகத்தையும் அவள் ஒருவரால் மட்டும் துாக்கி வைத்து போற்ற முடியும். அதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.பெண் குழந்தைகள் அழகுப் பதுமைகள் அல்ல... அறிவின் ஜோதிகள். ஊக்குவிப்போம். நல்திசை காட்டுவோம். நல்வழி நடத்துவோம்.


பெண் குழந்தையைப் பாதுகாப்போம்: கற்பிப்போம்
   

ஆணும் பெண்ணும் சமம் தான் என்பது நமது மந்திரம்

“பெண் குழந்தை பிறந்த நாளை எல்லோரும் கொண்டாடுகிறோம். நமது மகள்களின் பிறப்பையும் நாம் சமமான பெருமிதத்துடன் கொண்டாடுவோம். உங்கள் பெண்குழந்தை பிறந்தநாள் விழாவை கொண்டாடும் நேரத்தில் அவளுக்காக 5 மரக்கன்றுகளை நடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

பிரதமர் நரேந்திமோடி தான் தத்தெடுத்த ஜெயபூர் கிராமத்தில் நாட்டு மக்களுக்கு சொன்ன வேண்டுகோள் தான் இது.

பெண் குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம் (பி.பி.பி.பி) திட்டம் அரியானா மாநிலம் பானிபட்டில் 2015ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திரமோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. பெண்குழந்தை பிறப்பு விகிதக்குறைபாடு, மற்றும் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், மத்திய மனிதவள மேம்பாடு ஆகிய மூன்று அமைச்சகங்களின் ஒத்துழைப்போடு இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டத்தின் பிரதான அம்சமே பெண் குழந்தையை கருவிலே முன்கூட்டி கண்டறிந்து சிசுவதை செய்வதை தடுக்கும் சட்டமான பி..சி. மற்றும் பி.என்.டி.டி. சட்டத்தினை முழுமையாக அமல்படுத்துவதாகும். அதாவது, தேசிய அளவில் பெண்குழந்தை குறித்த விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும். பெண்குழந்தை பிறப்பு வீதம் குறைவாக உள்ள 100 மாவட்டங்களை தேர்வு செய்து பெண் குழந்தையின் தேவை குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து பிரச்சாரம் செய்வது ஆகியவை முக்கிய அம்சமாகும். இதுபோன்று பெண்குழந்தைகள் குறித்து மக்கள் மனதில் உள்ள எண்ணத்தினை மாற்றுதல், உணர்வுப்பூர்வமாக்குதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சமுதாய அடிப்படையிலான ஆதரவை திரட்டுதல் ஆகியவையும் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சமாகும்.


பெண்குழந்தைகள் குறித்து இந்திய சமுதாயத்தில் ஊறிகிடக்கும் மனப்போக்கை மாற்றுவது தான் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முக்கிய முயற்சியாக உள்ளது. அரியானா மாநிலத்தில் பிபூர் கிராமத்தலைவர் “பெண்குழந்தையுடன் சுயபடம்” ( செல்பி) எடுக்கும் திட்டத்தினை தொடங்கி வைத்ததை பிரதமர் நரேந்திரமோடி தனது மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பாராட்டி உள்ளார். இந்திய மக்கள் ஒவ்வொருவரும் இதுபோன்று தங்கள் மகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு உலக அளவில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலும் உலகின் பிறபகுதிகளிலும் உள்ள இந்தியர்கள் அனைவரும் இதுபோன்று செல்பி போட்டோக்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் இது பெண்குழந்தைகளை பெற்றுள்ளவர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பெண்குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, பலதுறை சார்ந்த மாவட்ட அளவிலான செயல் திட்டங்களும் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் அது சார்ந்த பயிற்சிகள், முதல் நிலை பணியாளர்களுக்கும் மாவட்ட அளவில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு (2015) மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 9 முறை அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரேதசங்களையும் உள்ளடக்கி இத்தகைய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சில உள்ளூர் முயற்சிகள்

பெண் குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம் திட்டத்தின் கீழ், பித்தோரோகர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவர்களின் கல்விக்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அங்கு இதற்காக மாவட்ட முனைப்புக்குழு மற்றும் வட்ட முனைப்புக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெண்குழந்தை பிறப்பு விகிதாச்சாரத்தினை சமன்படுத்துவதற்கான கட்டமைப்பு பணிகளை இந்த அமைப்புகள் அழகாக தடம்போட்டு கொண்டு செல்கின்றன. சமுதாயத்தில் ஆழமாக ஊடுருவிச்சென்று இந்த திட்டத்தின் சிறப்பினை மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகளையும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் செயல்படுத்துகிறது இந்த அமைப்புகள். அரசு துறை ஊழியர்கள், இராணுவப் பள்ளிகள், மற்றும் இதர பள்ளிக்கூடங்களின் ஒத்துழைப்போடு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பேரணிகள் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம் கற்பிப்போம், திட்டத்தின் தாக்கத்தினை அதிகரிப்பதற்காக பித்தோரோகர் மாவட்டத்தில் தெரு முனை நாடகங்களும் அதிக அளவில் நடத்தப்பட்டுள்ளன. கிரமாங்களில் மட்டும் இந்த தெரு முனை நாடகங்கள் நடத்தப்படவில்லை, மக்கள் கூடும் சந்தைகளிலும் நடத்தப்பட்டு, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்.

பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை நாடகங்களில் காட்சி சார்ந்த கதையாக மக்களிடம் எடுத்துச் செல்லும் போது, அவர்கள் அதை உணர்வுப்பூர்வமாக புரிந்து கொள்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கான பிரச்சினைகள், அவர்களின் கஷ்டங்கள், வாழ்க்கையில் அவள் சந்திக்கும் பிரச்சினைகள் ஆகியவையும் இந்த தெரு முனை நாடகங்களில் எடுத்துச் சொல்லப்படுகிறது. இது தவிர, கையெழுத்து பிரச்சாரம், உறுதிமொழி கூறுதல் மற்றும் உறுதியேற்பு நிகழ்ச்சி, பெண் குழந்தைகள் பாதுகாப்போம், கற்பிப்போம் திட்டத்தின் தகவல்கள் முதுநிலை கல்லூரி மாணவர்கள் 700 பேர் மற்றும் இராணுவத்தினர் வாயிலாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் மன்சா மாவட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம் என்ற ஆர்வம் தூண்டி விடப்பட்டுள்ளது. உங்கள் கனவுக்காக ஒருநாள் வாழ்வோம் என்ற திட்டத்தின் கீழ் அந்த மாவட்ட நிர்வாகம் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு முன்மொழிவு விண்ணப்பங்களை கொடுத்துள்ளது. இதன்படி, அந்த மாணவிகள் தாங்கள் விருப்பம் போல டாக்டர், போலீஸ் அதிகாரி என்ஜினீயர் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஒருநாள் செலவிட முடியும்.

இந்த முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 70க்கும் மேற்பட்ட மாணவிகள் இதுவரை இத்தகைய தொழில் வல்லுநர்களுடன் ஒரு நாளை மகிழ்ச்சியுடன் செலவிட்டுள்ளனர். அவர்களின் தொழில் சார்ந்த சூழலை அவர்கள் உணர்ந்துகொள்ள முடிகிறது.. அத்துடன் அவர்களுடைய எதிர்கால வேலை வாய்ப்புக்கான முடிவுகளை எடுக்கும் நல்ல வாய்ப்பாகவும் இது அமையும்.


பெண் குழந்தை ஒரு பாக்கியம்


பெண் குழந்தை பிறப்பதை விரும்பாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். பெண் குழந்தை என்றாலே அது ஒரு பாரம்,குடும்ப தலைவருக்கு பொருளாதார சுமை என்று எண்ணுகிற மக்கள், அத்தகைய சிந்தனை இஸ்லாத்திற்கு வெளியில் நின்று கொண்டு தான் நமது உள்ளத்தில் ஏற்பட வேண்டுமே தவிர, ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு இத்தகைய எண்ணமே நம் மனதில் எழக்கூடாது என்பதை உணர வேண்டும்.

இந்த உலகில் ஐம்பது வருடமோ அறுபது வருடமோ வாழ்ந்து விட்டு மரணிக்கும் நாம், இயன்ற வரை மறுமை வெற்றிக்காக பல காரியங்களை செய்கிறோம். தொழுகிறோம் நோன்பு நோற்கிறோம், ஏழைகளுக்கு உணவளிக்கிறோம் சகாத் வழங்குகிறோம், இன்னும் ஏராளமான நல்லறங்களை செய்கிறோம்.
இதை செய்வதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது ஒன்றே ஓன்று தான். அது மறுமையில் அல்லாஹ் நம்மை அன்பு பார்வை பார்க்க வேண்டும். அல்லாஹ் நம்மை நல்லவன் என்று அங்கீகரிக்க வேண்டும்.
இந்த எண்ணத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்தக்கூடிய நாம், அல்லாஹ்வும் அவன் தூதரும் எதையெல்லாம் செய்யுமாறு சொல்லியுள்ளார்களோ , அதை இயன்றவரை செய்யக்கூடியவர்களாகவும் எதை விட்டெல்லாம் தவிர்ந்து கொள்ள சொல்கிறார்களோ அதை எல்லாம் விட்டு தூரமாகி கொள்பவர்களாகவுமே தான் நாம் வாழ வேண்டும்.

இந்த உலகில் ஒரு சில நல்லமல்களை செய்து விட்டு மரணித்து விடும் நாம், நமது மரணத்திற்கு பிறகும் நமக்கு நன்மையை ஈட்டு தரக்கூடிய ஒன்றை இந்த உலகில் விட்டு செல்கிறோம் என்றால் அது நமது குழந்தைகள் !


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்று செயல்கள் தவிர மற்ற அனைத்துமே நின்று விடுகின்றன.
1. நிலையான தர்மம். 2. பிறருக்கு பயன்பெறும் வகையில் அவன் கற்றுக்கொடுத்த கல்வி. 3. அவனுக்காக பிரார்த்தனை செய்கிற நல்ல குழந்தைகள்.
முஸ்லிம் 3358

எந்த குழந்தையாக இருந்தாலும், அவர்களை நாம் அன்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்ப்போம் என்றால், நாம் மரணித்த பிறகும் நமக்காக அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், சொர்க்கத்தில் ஒரு அடியானின் தகுதியை உயர்த்துவான். யா அல்லாஹ், இது எனக்கு எப்படி கிடைத்தது? என்று அவன் கேட்கும் போது, உனக்காக உன் குழந்தை பாவ மன்னிப்பு கேட்டது அதனால் தான், என்று அல்லாஹ் விடையளிப்பான்.
அஹ்மத் 10202

அத்தகைய பாக்கியம் நமக்கு கிடைப்பதற்கு நாம் எந்த வகையிலாவது உழைக்க வேண்டுமா பாடுபட வேண்டுமா?? எதுவும் இல்லை, நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தாலே போதும்.

குழந்தைகள் நமக்கு கிடைத்த பாக்கியமாக நாம் கருத வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கும் போது, பெண் குழந்தைகளை நாம் வெறுப்பது என்பது, நபியை விட்டு நாம் விலகி செல்கிறோம் என்பதையே காட்டும்.


இவ்வாறு தாங்கள் பெற்ற பெண் குழந்தைகளை கண்டு வெறுப்பு அடைகிற பெற்றோர்களை அல்லாஹ் கடுமையாக சாடுகிறான்.


அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (6:140)

என்று கண்டிக்கிற அல்லாஹ், இன்னொரு வசனத்தில்

அவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்கு கூறப்பட்ட கேட்ட செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து வாழ்கிறான்.இழிவுடன் இதை வைத்துக்கொள்வதா அல்லது மண்ணில் புதைத்து விடுவதா? (என்று எண்ணுகிறான்). கவனத்தில் கொள்ளுங்கள் அவன் தீர்பளிப்பது மிகவும் கேட்டது. (16:58)

என்று கூறுகிறான்.

பெண் குழந்தைகளை வெறுப்பதோ அதனால் கவலைப்படுவதோ, அதை இழிவானதாக கருதுவதோ, அதை கொலை செய்து விடவதோ அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய பாவமான காரியமாக இருக்கிறது.

இதை கண்டிப்புடன் சொன்ன அல்லாஹ், பெண் குழந்தை பிறந்த செய்தியை பற்றி சொல்கிற போது அது ஒரு நற்செய்தி என்கிறான் !!

பெண் குழந்தைகளை வெறுப்பவர்கள் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். பெண் குழந்தைகள் நமக்கு பாரமாக இருக்கும் என்றால், அல்லாஹ் அதை நற்செய்தி என்று சொல்வானா?? அப்படியானால் நிச்சயம் அதில் ஏதோ ஒரு நற்செய்தி இருக்கத்தான் செய்யும்.

ஹதீஸ்களில் இதற்கு விடை கிடைக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள் முஸ்லிம் 5127


முதல் ஹதீஸில், நல்ல சாலிஹான குழந்தைகள் நமக்காக பிரார்த்தனை செய்வதன் மூலம் சொர்க்கத்தில் நம் அந்தஸ்து உயர்த்தப்படுகிறது என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், இந்த ஹதீஸில், பெண் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து ஆளாக்கும் போது அதுவே நாம் சொர்கத்திற்கு செல்வதற்கு காரணமாகி விடுகிறது என்பதை விளக்குகிறார்கள் என்றால், நாம் எந்த அளவிற்கு பெண் குழந்தைகளை அன்புடனும் பாசத்துடனும் வளர்க்க வேண்டும் என்பதை புரிய வேண்டும்.

இந்த பெண் குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்று கொள்கிறார்களோ, அவர்கள் நரகம் சென்று விடாமல் தடுக்கும் தடையாக இந்த குழந்தை இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 5995

அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்த கூடிய ஒரு முஸ்லிம், என்றைக்கும் தனது குழந்தைகளை, அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அன்புடனும் பாசத்துடனும் வளர்த்து, அதன் மூலம் சொர்க்கம் செல்லவே ஆசைப்பட வேண்டும்.

பொருளாதார சுமை அதிகரிக்கும் என்று எண்ணி கூட நமது பெண் குழந்தைகளை கொன்று விடகூடாது.


வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் என்று அல்லாஹ் 17:31 வசனத்தில் எச்சரிக்கிறான்.

இந்த எச்சரிக்கையோடு சேர்த்து நமக்கும் நமது குழந்தைக்கும் தேவையானவற்றிற்கு அல்லாஹ் பொறுப்பு என்கிற வாக்குறுதியையும் தருகிறான்.

நமக்கும் நமது குழந்தைக்கும் தேவையானவற்றிற்கு அல்லாஹ் பொறுப்பு என்று அவன் வாக்குறுதி தந்து விட்ட பிறகு, அதை பொருட்படுத்தாமல் நாம் செயல்படுவது அல்லாஹ்வின் வாக்குறுதியை கூட நாம் மதிக்காதது போல ஆகும் என்பதையும் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

பெண் குழந்தைகளை நமக்கு கிடைத்த பாக்கியமாக கருதி வளர்ப்போம், மறுமையில் வெற்றி பெறுவோம்.

இன்று உலக பெண் குழந்தைகள் தினம்:

தலைசிறந்த பெண்ணியவாதிகளின் 12 கூற்றுகள்!

கடந்த 2012-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மூலம், அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக உருவாக்கப்பட்டது. பெண் குழந்தைகளை இன்னமும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை முன்னிலைப்படுத்த உருவாக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளால் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை ஆறாவது ஆண்டு பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

பிறந்த குழந்தை முதற்கொண்டு கற்பழிக்கப்பட்டு வரும் அவலத்தை நாம் தினமும் காண்கிறோம். கல்வி, வேலை, திருமணம் என அனைத்திலும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் அளவில்லாதவை. வளர்ந்த நாடுகள் முதல் வளராத நாடுகள் வரை அனைத்திற்கும் இது பொருந்தும். எனவே, பெண் குழந்தைகளை கொண்டாடுவதற்காகவே இந்த தினம் உள்ளது.


இதை நாமும் கொண்டாடும் வகையில், தலைசிறந்த பெண்ணியவாதிகளின் கூற்றுகளை இங்கே பார்க்கலாம்,

“பெண்கள் தங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்று ஆண்கள் பயப்படுகிறார்கள். ஆண்கள் தங்களை கொல்கிறார்கள் என்று பெண்கள் பயப்படுகிறார்கள்.” – Margaret Atwood

“பெண்கள் சக்திபடைத்தவர்கள், பயங்கரமானவர்கள்.” – Audre Lorde

“பெரும்பாலான வரலாற்றில், அடையாளம் இல்லாத பெண் ஒருவள் இருக்கிறாள்.” – Virginia Woolf

“பெண்ணியம் என்பது பெண்களை வலிமையாக்குவதற்கு இல்லை. பெண்கள் ஏற்கனவே வலிமையானவர்கள் தான். உலகம் அந்த வலிமையை உணர்ந்துகொள்ளும் விதத்தை இது மாற்றியது.” – G.D. Anderson

“பெண்ணியத்தால், எந்தவொரு பெண்ணுக்கும் வேலை கிடைத்துவிடப்போவதில்லை. எல்லா இடங்களிலும் வாழும் பெண்களின் வாழ்க்கையை மேலும் அழகாக்கவே.” – Gloria Steinem

“மறைந்து போவதிலும், அழிந்து போவதிலும் நான் எப்போதும் ஆர்வம் காட்டுவதில்லை.” – Laverne Cox

“பெரியவர்களுக்கு தான், சிறு பெண் பிள்ளைகள் அழகாக தோன்றுகிறார்கள். சக பிள்ளைகளிடையே அவர்கள் அழகானவர்களாக பார்க்கப்படுவதில்லை. அவர்கள் வாழ்க்கை அளவிலானவை.” – Margaret Atwood

“நான் எதையாவது சாதிக்க முடியும் என்ற உண்மையை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் நானே என்னை கட்டுப்படுத்த போவதில்லை.” – Dolly Parton

“வழிநடத்தும் பெண்கள், படிக்கவேண்டும்.” – Laura Bates

“தங்களை தாங்களே வெறுக்காத சிலர், பெண்ணைச் சுற்றி இருக்கும் போது, உண்மையில் அசௌகரியமாக உணருகிறார்கள். இதனால், நீங்கள் சற்று தைரியமானவராக இருக்க வேண்டும்.” – Mindy Kaling

“தைரியம், தியாகம், தீர்மானம், அர்ப்பணிப்பு, கடினத்தன்மை, இதயம், திறமை, தைரியம். சிறிய பெண் பிள்ளைகள் இவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனர்.” – Bethany Hamilton

“ஒரு ஆணால் எல்லாவற்றையும் அழிக்க முடிகிறது எனில், ஏன் ஒரு பெண்ணால் அதை மாற்ற முடியாது?” – Malala Yousafzai


Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக