வெள்ளி, 10 ஏப்ரல், 2020

உலக உடன்பிறந்தோர் தினம் மார்ச் 10. 'ஒற்றைக் குழந்தை என்று வருந்தாதீர்கள்... இதை ஃபாலோ செய்யுங்கள்!'




உலக உடன்பிறந்தோர் தினம் மார்ச் 10.
'ஒற்றைக் குழந்தை என்று வருந்தாதீர்கள்... இதை ஃபாலோ செய்யுங்கள்!'

 #WorldSiblingDay

இன்று (மார்ச் 10) உலக உடன்பிறந்தோர் தினம். ஒரு வீட்டில் ஏழு குழந்தைகள், ஆறு, நான்கு என்பது சுருங்கி இரண்டு என்பதாகி... தற்போது ஒரு குழந்தை என்கிற நிலைக்கு வந்திருக்கிறோம். பெற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தும் பொருளாதார நெருக்கடி, பார்த்துக்கொள்ள ஆள் இல்லா நிலை, நிலையில்லா வேலை ஆகியவற்றை மனதில் கொண்டு ஒன்றே போதும் என்கிற மனநிலைக்குப் பெரும்பாலான பெற்றோர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இரண்டு பேர் இருக்கும் வீட்டில் ஷேரிங்கில் ஆரம்பித்து ஸ்நாக்ஸ் வரை ஒவ்வொன்றுக்கும் சண்டை வருதல் இயல்பு. அதன் மூலமே, அன்பும், விட்டுக்கொடுத்தலும் கற்று வந்தவர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள்.

 கடைசிக் காலத்தில் எனக்குப் பிறகு உனக்குன்னு ஒருத்தன்/ஒருத்தி இருக்கா. எதாவது பிரச்னைன்னா அவள்/அவன் பாத்துப்பா என்று பெற்றவர்கள் சொல்லி வளர்த்தார்கள். அதில் உண்மையும் உண்டு. தற்போது காலம் ஒற்றைக் குழந்தை என்பதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது... எனவே, இருக்கும் ஒற்றைக் குழந்தையை ராஜா, செல்லம் என்று கொஞ்சிக்கொண்டிருக்கிறோம். அது சரிதானா... அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்து பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகளுக்கான உளவியல் நிபுணர் ஜெயந்தினி.

''ஏன் இரண்டு குழந்தைகள் அவசியம்?''

 ''மனக்கஷ்டம், சந்தோஷம், விட்டுக்கொடுத்தல் என வாழ்வின் கடைசி காலம் வரை துணை என்கிற ஒன்றுக்காகவே இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள். நிஜமாகவே நல்ல விஷயம்தான். நாம் நம் பிரச்னை, பொருளாதாரம், பார்த்துக்கொள்ள ஆள் இல்லை என்று நம்மை மட்டும் சிந்தித்தே பல முடிவுகளை எடுக்கிறோம். நம் சந்ததிகளுக்கு உறவுகளையும், அன்பையும் கொடுக்க இரு குழந்தைகள் அவசியம் தேவை, இந்த உலகத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், குழந்தை என்பது... ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் மட்டுமே பெற்று வளார்க்க வேண்டிய விஷயம். சில விஷயங்களை இழந்தால் தப்பில்லை நம் பிள்ளைகளுக்காக'' என்ற மருத்துவர் ஒற்றைக் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்கள் வளர்ப்பு விஷயத்தில் எதைக் கடைப்பிடிக்கலாம் என்பது பற்றி பேசினார்.

''இந்தக் காலத்தில் நாம் நம் பிள்ளைகளை தெருவிலோ அல்லது அப்பார்ட்மென்ட் தரை தளத்திலோ விளையாட அனுமதிப்பதில்லை. அவர்கள் நாலு சுவர் எனும் வீட்டுக்குள்தான் அதிக நேரம் இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டும், இருப்பதைப் பிடுங்கிக் கொண்டு விளையாடுவார்கள். விளையாட ஆள் இல்லை என்றால், இரு குழந்தைகள் மட்டும் விளையாடுவார்கள். அதனால், ஒற்றைக் குழந்தை வைத்திருப்பவர்கள் மற்ற குழந்தைகளோடு அதிக நேரம் விளையாட, பேச, குதூகலிக்க விடுங்கள். அதே சமயம்...

'' 'நீ தான் எங்கள் இளவரசன், நீ தான் எங்கள் இளவரசி' என்கிற ரேஞ்சில் அதீத செல்லத்தைக் கொடுக்காதீர்கள். இரண்டு பேர்தான் சம்பாதிக்கிறோமே, பிள்ளை கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கலாம் என்கிற தவற்றை செய்யாதீர்கள்.  'நான் கேட்டதெல்லாம் கிடைக்கும்' என்கிற எண்ணம் பிள்ளைகள் மனதில் வளராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இரண்டு பிள்ளைகள் இருந்தால்தான் விட்டுக் கொடுக்கிற மனப்பான்மையைக் குழந்தையிடம் வளர்க்க முடியும் என்பதில்லை.ஒற்றைக் குழந்தைகள் இருக்கும் வீட்டில்... இன்று அப்பாவுக்குப் பிடித்த பூரி டிபன் செய்து நாம் மூவரும் ஷேர் செய்யலாம்... நாளைச் செல்லத்துக்கு பிரியாணி, நாளை மறுநாள் அம்மா செல்லத்துக்கு இட்லி என்று அன்பாக, அழகாக ஷேரிங் என்பதைக் குழந்தை மனதில் பதிய வையுங்கள்.

 அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இட்லியும், பூரியும் பிடிக்கும் என்பதை உங்கள் பிள்ளைகள் மனதில் பதிய வையுங்கள். உங்கள் குழந்தை அதிகம் தொடாத பொம்மைகளை, அவர்களிடம் கொடுத்த அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டி குழந்தைகளிடமோ அல்லது நடைமேடையில் குடும்பம் நடத்துபவர்களிடமோ தரச் சொல்லுங்கள். மெதுவாக அவர்கள் மனதில் விசேஷ தினங்களின்போது முதியோர் இல்லங்களுக்குச் சென்று வருவதைப் பழக்கமாக்குங்கள்.

அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனப்பான்மை, பெரியவர்களை மதிக்க வேண்டும், கஷ்டம் என்பது என்ன... என்பதை உணர வையுங்கள். வீட்டில் ரோஜாப் பூக்கள் வாங்கி ஒன்று உனக்கு, இன்னொன்று வீட்டில் வேலைப் பார்க்கிற அக்காவுக்கு என்று, அவர்கள் கையாலேயே அதை கொடுக்கச் சொல்லலாம். பண்டிகைகளுக்கு டிரெஸ் வாங்கும்போது உங்கள் அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டியின் குழந்தைக்கும் ஒரு ஃபிராக் வாங்கி, அதை உங்கள் மகள் கையாலேயே செக்யூரிட்டியிடம் கொடுக்கச் சொல்லலாம். சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போகும்போது கட்டாயம் பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அந்த வீட்டில் இருக்கிற ஒற்றைக் குழந்தையுடன் உங்கள் பிள்ளை சேர்ந்து விளையாடுவதன் மூலம், ஒரு உடன்பிறவாத அக்காவோ, தங்கையோ கிடைக்கலாம்.''
நன்றி விகடன்.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக