ஞாயிறு, 18 ஜூன், 2017


உவமைக் கவிஞர் சுரதா நினைவு தினம் - ஜூன் 19 , 2006 .

சுரதா ( நவம்பர் 23 , 1921 - ஜூன் 19 , 2006 ) தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை
சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

வாழ்க்கைக் குறிப்பு
சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.
தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-சண்பகம் அம்மையார் ஆவர். பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.

பாரதிதாசனுடன் தொடர்பு
1941 சனவரி 14 இல் பாவேந்தர்
பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.
கவிதை இயற்றல்
சுரதாவின் சொல்லடா என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது.
பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார் , கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார்.
நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த தலைவன் இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார். அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதினார். கவிஞர் திருலோகசீதாராமின் சிவாஜி இதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.
திரைப்படத் துறையில்
சுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.ச.கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். 1944 ஆம் ஆண்டு
மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார். மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார்.
சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், 'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு', மற்றும் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' ஆகியவை. 100 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.
எழுத்துப்பணி
சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம் . இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார். 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.
1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.
1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).
பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் கருதத்தகும் கவிஞர் சுரதா, பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார். உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார்.
தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.
பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.
பெற்ற சிறப்புகள்
1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.
1978 இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.
தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).
1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.
1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.
1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.
1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.
1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.
சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.
29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச்சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.
சுரதாவின் கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. சுரதாவின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மறைவு
இவர் தன்னுடைய 84ம் வயதில் 20.06.2006 அன்று சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.
குடும்ப உறுப்பினர்கள்
சுரதாவுக்குச் சுலோசனா என்ற மனைவியும், கல்லாடன் என்ற மகனும் உள்ளனர். இவரின் மருமகள் பெயர் இராசேசுவரி கல்லாடன். பெயரர்கள் இளங்கோவன், இளஞ்செழியன் என இருவர்.
சுரதாவின் படைப்புகள்
தேன்மழை (கவிதைத் தொகுப்பு, 1986)
துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)
சிரிப்பின் நிழல் (பாடல் தொகுப்பு)
சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)
அமுதும் தேனும் , 1983
பாரதிதாசன் பரம்பரை (தொ.ஆ), 1991
வினாக்களும் சுரதாவின் விடைகளும்
உதட்டில் உதடு
எச்சில் இரவு
எப்போதும் இருப்பவர்கள்
கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
சாவின் முத்தம்
சிறந்த சொற்பொழிவுகள்
சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)
சுவரும் சுண்ணாம்பும்
சொன்னார்கள்
தமிழ்ச் சொல்லாக்கம்
தொடாத வாலிபம்
நெஞ்சில் நிறுத்துங்கள்
பட்டத்தரசி
பாவேந்தரின் காளமேகம்
புகழ்மாலை
மங்கையர்க்கரசி
முன்னும் பின்னும்
வார்த்தை வாசல்
வெட்ட வெளிச்சம்.


கவியரங்குகளுக்கு புது வடிவம் கொடுத்த ‘உவமைக் கவிஞர்’ சுரதா (Suratha) நினைவு தினம் இன்று ஜூன்  19.). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) 1921-ல் பிறந்தார். இயற்பெயர் ராஜகோபாலன். பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்கள் கற்றார். பாவேந்தர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்று கொண்டவர்.
l பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாகக் கொண்டு ‘சுப்புரத்தினதாசன்’ என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். இதன் சுருக்கமான ‘சுரதா’ என்ற பெயரில் இலக்கியப் படைப்பாளியாக பரிணமித்தார்.
l செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர் என்பதால் ‘உவமைக் கவிஞர்’ என போற்றப்பட்டார். பாரதி தாசனை 1941 ஜனவரியில் சந்தித்தார். அவருடன் சில காலம் தங்கியிருந்து, அவரது கவிதைகளைப் படியெடுத்தல், அச்சுப் பணி, நூல் வெளியீடு போன்றவற்றில் உறுதுணையாக இருந்தார்.
l ‘மங்கையர்க்கரசி’ திரைப்படத்துக்கு 1944-ல் வசனம் எழுதினார். ‘அமுதும் தேனும் எதற்கு’, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்பது போன்ற சாகாவரம் பெற்ற பாடல்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.
l புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘தலைவன்’ இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது பல சிறுகதைகள் எழுதினார். ‘சிவாஜி’ இதழில் கவிதைகள் எழுதினார். இது பின்னர் கவிதைத் தொகுப்பாக வெளியிடப்பட்டது.
l முதல் நூலான ‘சாவின் முத்தம்’ 1946-ல் வெளிவந்தது. 1955-ல் ‘காவியம்’ என்ற வார இதழைத் தொடங்கினார். ‘இலக்கியம்’, ‘ஊர்வலம்’, ‘விண்மீன்’, ‘சுரதா’ என பல கவிதை இதழ்களை வெளியிட்டார். நடிகைகளின் வாழ்க்கையைப் படம்பிடித்துக்காட்டும் வகையில் ஆனந்த விகடன் இதழில் 1971-ல் வெளிவந்த இவரது கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
l உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையைத் தொடங்கியவர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவியரங்குகளை தலைமையேற்று நடத்தியவர். வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், படகுக் கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம் என புதுமையான கவியரங்குகளை நடத்தி இளைஞர்களிடம் கவிதை ஆர்வத்தை ஏற்படுத்தினார்.
l யாரையும் பின்பற்றி எழுதுவதில் உடன்பாடு இல்லாதவர். இவரது கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மருதுபாண்டியர் உள்ளிட்ட வரலாற்று நாயகர்கள் குறித்த அரிய தகவல்களை புத்தக வடிவில் ஆவணப்படுத்தியுள்ளார். பல நூல்களாக இருந்த பாரதிதாசன் கவிதைகள் இவரது முயற்சியால் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டது.
l தமிழக அரசின் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருது, மகாகவி குமரன் ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகள், பரிசுகள் பெற்றவர். மலேசியாவில் 1987-ல் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
l இவரது தமிழ்த் தொண்டை கவுரவித்து சென்னையில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. முதன்முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்திய பெருமைக்கு உரியவர். கவிதை படைப்பதை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த ‘உவமைக் கவிஞர்’ சுரதா 85-வது வயதில் (2006) மறைந்தார்.


‘ ‘ந டுவிரல்போல் தலைதூக்கு – நம்
நாட்டாரின் இன்னலைப் போக்கு!’’ - என தன்னுடைய முதல் கவிதையிலேயே முத்திரை வரிகளைப் பதித்தவர் உவமைக் கவிஞர் சுரதா. அவருடைய பிறந்த தினம் இன்று.
புதுப்புது உவமைகளைப் புகுத்தியவர்!
மகாகவி பாரதியாரின் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன், தன் பெயரை மாற்றிக் கொண்டதைப்போல... ராஜகோபாலன் என்னும் தம் பெயரை, சுப்புரத்தின தாசன் என மாற்றிக் கொண்டார். இதன் சுருக்கம்தான்‘சுரதா’என மாறியது. சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்கள் கற்ற சுரதா, பாரதிதாசனிடம் சீடனாகச் சேர்ந்து அவருடைய எழுத்துப் பணிக்கு உதவினார்.

அந்தக் காலத்தில் அரசவைக் கவிஞராக விளங்கிய நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையுடன் பல மாதங்கள் தங்கியிருந்து அவருடைய எழுத்துப் பணிக்கு உதவினார். இதன்மூலம் சிறந்த இலக்கியவாதியாய் தமிழ் உலகுக்கு அறிமுகமானார். யாரையும் பின்பற்றி எழுதுவதில் உடன்பாடு இல்லாதவர்; செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர்; மரபுக் கவிஞரான இவர், தம்முடைய பாடல்களில் புதுப்புது உவமைகளைப் புகுத்திப் புகழ் பெற்றார். இதன் காரணமாக சிறுகதை எழுத்தாளர் ஜெகசிற்பியால், ‘உவமைக் கவிஞர்’ எனப் பாராட்டப்பட்டார்.
புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘தலைவன்’ இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1955-ல் ‘காவியம்’ என்ற வார இதழைத் தொடங்கினார். ‘இலக்கியம்’, ‘ஊர்வலம்’, ‘விண்மீன்’, ‘சுரதா’ என பல கவிதை இதழ்களை வெளியிட்டார். நடிகைகளின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் ‘ஆனந்த விகடன்’ இதழில் 1971-ல் வெளிவந்த இவரது கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. மருது பாண்டியர் உள்ளிட்ட வரலாற்று நாயகர்கள் குறித்த அரிய தகவல்களை புத்தக வடிவில் ஆவணப்படுத்தினார். பல நூல்களாக இருந்த பாரதிதாசன் கவிதைகளை ஒரே தொகுப்பாக மாற்றினார்.

உவமைகளைக் கற்பனையுடன் தந்தவர்!
இவர், மாநிறத்தை, ‘கறுப்பின் இளமை’ என்றார்; பல்லியை, ‘போலி உடும்பு’ என்றார்; அழுகையை, ‘கண் மீனின் பிரசவம்’ என்றார். நீர்க்குமிழிகளை, ‘நரைத்த நுரையின் முட்டை’ என்றார்; வெண்ணிலவைச் ‘சலவை நிலா’ என்றார். இப்படி அவருடைய கவிதைகள் அனைத்திலும் உவமைகள் வாரி இறைக்கப்பட்டிருக்கும். ‘நாணல்’ என்ற திரைப்படத்தில், ‘விண்ணுக்கு மேலாடை’ என்று தொடங்கும் பாடலில்... ‘மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழல்’ என்று கதாநாயகன் பாடுவார். அதற்கு, ‘மண்ணுக்கு மேலாடை வண்ண மயில் இருட்டு’ என்று கதாநாயகி பதிலளிப்பார். காரணம், நிழலுக்கும்... இருட்டுக்கும் கவிஞர் இங்கே வேறுபாடு கண்டிருப்பதை நாம் காண முடிகிறது. ஆம், நிழல் என்பது இடம் மாறக் கூடியது. இருட்டு என்பது மண்ணில் நிரந்தரமாக தொடரக்கூடியது. இப்படி இடம் மாறக்கூடிய நிழல் எப்படி மண்ணின் மேலாடையாக இருக்க முடியும் என்பதே கவிஞர் சொல்லும் பதில் ஆகும். இதுபோன்ற உவமைகளைக் கற்பனையுடன் கலந்து தந்தவர் சுரதா என்றால் மிகையாகாது. இதே பாடலில், பதினொன்றைக்கூட... பத்துக்கான மேலாடை என்றே வர்ணிக்கிறார்.
வாழ்க்கையின் தத்துவம்!
‘நீர்க்குமிழி’ திரைப்படத்தில், ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்று ஆரம்பிக்கும் பாடலில்... வாழ்க்கையைப் பற்றி இப்படிச் சொல்லியிருப்பார்.
‘ பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்!’
ஒவ்வொரு கட்டுரைகளிலும் முகவுரையும், முடிவுரையும் இருப்பதுபோல... வாழ்க்கையிலும் இதுபோன்ற உவமைகளைப் புகுத்திப் பாடல்கள் எழுதியவர் சுரதா. அந்தப் பாடலின் இறுதியில்,
‘ வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை!’ என்று வாழ்க்கையின் தத்துவத்தை உணர்வுபூர்வமாக உணர்த்தியிருப்பார்.
உவமைகள் மூலம் தன்னுடைய கவிதைகளையும், பாடல்களையும் எழுதிய சுரதாவை... வாலிபக் கவிஞர் வாலி, ‘‘அவன் உரைக்காத உவமையில்லை... அவனுக்குத்தான் உவமையில்லை’’ என்று புகழ்ந்தார்.
‘ முதன்முதலில்’ சுரதா!
1942-ம் ஆண்டு சுய மரியாதை கருத்துகளைப் பரப்பும் வகையில் நாடகக்குழு ஒன்று இயங்கி வந்தது. இந்த நாடகக் குழுவினரால் பாரதிதாசன் இயற்றிய நாடகம் ஒன்று தமிழகம் எங்கும் நடத்தப்பட்டது. இதில், அமைச்சர் வேடத்தில் சுரதா நடித்தார். வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத அவர், நாடகத்தில் நடித்து அசத்தினாராம். ‘முதன்முதலில்’ என்னும் வார்த்தைக்குச் சொந்தக்காரராக விளங்குபவரும் உவமைக் கவிஞர் சுரதாதான். வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலா கவியரங்கம், படகு கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம் என விதவிதமாக கவியரங்க நிகழ்ச்சிகளை முதன்முதலில் நடத்தி இளைஞர்களைக் கவிதை பக்கம் சாயவைத்தவர் சுரதா.
முதன்முதலில் கவிதைகளில் திரைப்படச் செய்திகளைத் தந்து இதழ் நடத்தியவரும், அதிக கவியரங்கங்களில் பங்கேற்ற கவிஞரும் இவரே. 1944-ல் ‘மங்கையர்க்கரசி’ என்னும் திரைப்படத்துக்கு உரையாடல் எழுதினார். இந்தத் திரைப்பட உரையாடல்தான், ஒரு திரைப்படத்தின் கதை, வசன நூலாக முதன்முதலில் வெளிவந்தது. இதன்மூலம், குறைந்த வயதில் ‘முதன்முதலில்’ திரைப்பட உரையாடலை எழுதியவர் என்ற பெருமையைப் பெற்றார். தமிழக அரசு, ‘முதன்முதலில்’ ஏற்படுத்திய பாவேந்தர் விருதைப் பெற்றவரும் சுரதாதான். 20-ம் நூற்றாண்டுக் கவிஞர்களில் முதன்முதலில் ராஜராஜன் விருதைப் பெற்றவரும் இவரே. ‘தேன்மழை’ நூலுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. 1956-ல், ‘பட்டத்தரசி’ என்கிற சிறு காவியத்தை வெளியிட்டார். 16 பக்கங்கள் கொண்ட பரபரப்புக்குரிய அந்த நூலின் முன்னுரைக் கவிதையை ஒரு மணிநேரத்தில் எழுதி முடித்து சாதனை படைத்தார். ‘முரசொலி’ இதழில் அவர் எழுதிய கவிதைகள் எழுச்சியும், வேகமும் பெற்றன. இதன் பிறகு சுரதா பரம்பரை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் அதிக அளவில் உருவாகினர்.
சுரதாவின் படைப்புகள்!
‘சாவின் முத்தம்’, ‘சுவரும் சுண்ணாம்பும்’, ‘துறைமுகம்’, ‘சிரிப்பின் நிழல்’, ‘அமுதும் தேனும்’, ‘உதட்டில் உதடு’, ‘எச்சில் இரவு’, ‘எப்போதும் இருப்பவர்கள்’, ‘தொடாத வாலிபம்’, ‘நெஞ்சில் நிறுத்துங்கள்’, ‘மங்கையர்க்கரசி’, ‘முன்னும் பின்னும்’, ‘வார்த்தை வாசல்’, ‘வெட்ட வெளிச்சம்’ ஆகியவை உவமைக் கவிஞர் சுரதாவின் படைப்புகளாகும். இவரது கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.
கலைமாமணி, மகாகவி குமரன் ஆசான் உட்பட எண்ணற்ற விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்ற உவமைக் கவிஞர் சுரதா, தமிழறிஞர்கள் பிறந்த ஊர்தோறும் சென்று அங்குள்ள மண்ணை எடுத்து மண் கலயத்தில் சேர்த்து வந்தார். ‘‘அவற்றைத் திரட்டி என்ன செய்யப் போகிறேன் என்பது ஒரு கனவு’’ எனக் கூறி வந்தவர், அதனை நிறைவேற்றாமலேயே மறைந்துவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக