புதன், 21 ஜூன், 2017



உலக இசை தினம் ஜூன் 21 (21 Jun)

நாடு, மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. இசை இல்லாமல் வாழ முடியாது. இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வு. பெரும்பாலனவர்களின் கவலையை தீர்க்கும் மருந்து; சிறந்த பொழுதுபோக்கு அம்சம். வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப் படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது. தோற்றம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றி விட்டது. ஆரம்பத்தில் இசை என்பது மனிதன், பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம் உருவானது. இன்றைய இசையின் நிலை, பல பரிமாணங்களை கடந்து தொழில்நுட்பத்தை சார்ந்து புதிய பாதையில் பயணிக்கிறது. இசைகள் பலவிதம் ஒவ்வொன்றும் புதுவிதம் பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கிளாசிக்கல் (இலக்கிய) இசை, கற்பனை இசை மற்றும் நவீன இசை என பல பரிமாணங்கள் உருவாகின. உலகில் ஒவவொரு நாடும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு பல வகையான இசைகளை இசைக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள் உலகளவில் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் இரு விதமான இசைகள் தான் பின்பற்றப்படுகிறது. ஒன்று வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை, மற்றொன்று தென்னிந்தியாவின் கர்நாடாக இசை. இசை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். கலாச்சாரத்தை சீரழிக்கும் இசை உருவாவதை துவக்கத்திலேயே தடுக்க வேண்டும். இசை மனங்களை இணைக்கிறது இசை எனும் கலை மட்டும் தோன்றியிருக்காவிட்டால், மனிதன் காட்டுமிராண்டியாகவே காடுகளிலும் குகைகளிலும் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பான் என்பது சிதார் இசைமேதை பண்டிட் ரவிசங்கரின் வார்த்தைகள். அதேபோல் "போர் நாடுகளைப் பிரிக்கிறது, இசை மனங்களை இணைக்கிறது" என்று இசைப்பிரியர்கள் பெருமையாகக் கூறுவது ஒன்றும் பீற்றல் அல்ல. உண்மையும் அதுதான். அப்படிப்பட்ட இசையை போற்றிப் பாராட்டுவதுடன் பாதுகாக்கவும் வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உலகில் உள்ள 32 நாடுகளில் ஜூன் 21ஆம் தேதியை உலக இசை தினமாகக் கொண்டாடுகிறார்கள். வாழ்வியல் நீரோட்டங்களில் இசைக்கென்று தனியிடம் கொடுத்துள்ளன ஆசிய, ஐரோப்பிய நாடுகள். இந்தப் பட்டியலில் இடம்பெறாத நாடுகள் எல்லாம் இசைக்கு எதிரிகள் என்ற முடிவுக்கு யாரும் வந்து விடக்கூடாது. அந்நாடுகளில் தங்கள் வசதிக்கேற்ப, கலாசாரத்துக்கேற்ப வேறு தினங்களில் இசை தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். சங்கராந்தி உதாரணமாக அர்ஜெண்டினாவில் வசந்தம் தொடங்கும் முதல் நாளான செப்டம்பர் 21 அன்று இசை தினம் கொண்டாடப்படுகிறது. உலகின் முதல் இசை தினம் பிரான்சில் 1982ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. 1976ஆம் ஆண்டில் அமெரிக்க இசைக் கலைஞர் இந்த ஆலோசனையை பாரீஸில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சியில் முன்வைத்தார். கோடையில் பூமத்திய ரேகையை விட்டு சூரியன் வெகுதொலைவில் இருக்கும் நாளன்று இரவு முழுவதும் இசைக் கொண்டாட்டங்களை நடத்தி மகிழ்ந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்த நாளை இந்திய நாட்டில் சங்கராந்தி என்று கூறுகிறார்கள். இந்தக் கொண்டாட்டங்கள் இசைக்கு எல்லையில்லை என்பது உண்மை என்று கூறுவது போல் பிரான்சுடன் நின்று விடவில்லை. உலக நாடுகள் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நாட்கள் தான் மாறுபடுகின்றன. எப்படிக் கொண்டாட வேண்டும்? உலக இசை தினத்தன்று தெருவெங்கும் இலவச இசைக்
கச்சேரிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று இசை தின வழிகாட்டல்கள் கூறுகின்றன. ஆனால் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அப்படி கச்சேரிகள் நடப்பதாக தகவல்கள் இல்லை. கடவுளும் இசையும் கோவில்களில் கூட இலவசமாக பாட மறுக்கும் இந்திய இசைக் கலைஞர்கள் இதற்கு சம்மதித்து வருவார்களா என்று தெரியவில்லை. இந்திய இசைக்கு ஒரு தனி பாரம்பரியம் உண்டு. ஆன்மீகத்திலும், ஆரோக்கியத்திலும், விவசாயத்திலும் அதற்கு ஒரு பங்கு உண்டு என்று கூறுவார்கள். ஆன்மீகத்தில் கண்ணன் ஒரு முரளிதரன் ஆவார். பெயருடன் கலந்த இசை முரளி என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். தரன் என்பதற்கு அணிந்திருப்பவர் என்று அர்த்தம். எனவே புல்லாங்குழல் வைத்திருக்கும் கண்ணனை முரளிதரன் என்று ஆன்மீகவாதிகள் அழைக்கிறார்கள். தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படும் சிவனின் கையில் வீணையும், ருத்திரன் என்று அழைக்கப்படும் சிவனின் கையில் உடுக்கையும் இருப்பதை நாம் காண முடிகிறது. சரஸ்வதியின் கையில் வீணையும், நாரதரின் கையில் தம்புராவும் இருப்பதை இன்று நாம் ஓவியங்களிலும், சிலைகளிலும் காண முடிகிறது. தேவாரம், திருவாசகம், பாசுரங்கள், திருப்பாவை ஆகிய அனைத்தும் தமிழும் இசையும் கலந்த இசைக்கருவூலங்கள். வாழ்வுடன் அர்த்தப்படும் ராகங்கள் ஆன்மீகத்தில் இசையின் பங்கு பற்றி ஏராளமாகக் கூறலாம். தாலாட்டு முதல் ஆவி அடங்கிய பின் பாடப்படும் ஒப்பாரி வரை இசை ரத்த அழுத்தத்திற்கு நீலாம்பரி, மன அழுத்தத்திற்கு லதாங்கி, ஞாபகமறதிக்கு ரேவதி என்று பலராகங்கள் இசை மருத்துவமாகப் பயன்படுகின்றன. தான்சேனின் வரலாற்றில் தீபக் என்ற ராகத்தைப் பாடி அணைந்திருந்த விளக்குகளை எரிய வைத்தார் என்றும் கூறப்படுகிறது. நாதஸ்வர இசையால் தாவரங்களை நன்கு விளைய வைக்க முடியும் என்று அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. இந்திய நாட்டில் இசை இல்லாத இடம் இருக்க முடியாது. குழந்தை பிறந்தவுடன் பாடப்படும் தாலாட்டு முதல் ஆவி அடங்கிய பின் பாடப்படும் ஒப்பாரி வரை இசை இல்லாத வாழ்வியல் நிகழ்வுகள் இல்லை என்று கூறும் அளவுக்கு இசை இந்தியா உள்ளிட்ட ஆசியநாடுகளின் பண்பாட்டில் பின்னிப் பிணைந்தது. திக்கெட்டும் தமிழ்த் திரையிசை திரை இசைப்பாடல்கள் பற்றி கூறவே வேண்டாம். துன்பம் நேர்கையில் யாழெடுத்துப் பாடி இன்பம் சேர்க்கமாட்டாயா என்று தொடங்கி ஒரு நாள் போதுமா, இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்று எத்தனை பாடல்கள் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன. இசை தமிழர்களின் வாழ்வில் இணைந்து விட்ட ஒரு கலை இந்திய திரையுலகில் மாஸ்ட்ரோ பட்டம் பெற்ற இளையராஜாவும், ஆஸ்கர் விருது பெற்ற ரஹ்மானும் தமிழர்கள் என்பது நமது நெஞ்சை நிமிர்த்துகின்றன. இசை மனிதனின் வாழ்வோடு இணைந்த ஒன்று. இசையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. இசை தமிழர்களின் வாழ்வில் இணைந்து விட்ட ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் யாரும் இல்லை.உலக இசை தினத்தில் சில மணி நேரம் இசையைக் கேட்டு மனம் மகிழ்வோம். மனிதர்கள் இசைபட வாழ இசை அவசியமானதொன்றாகும்.


இசை, மனிதனை மட்டுமல்ல, இறைவனையும் மயக்கும் தன்மை கொண்டது. தேவார மும்மூர்த்திகளின் இசை கேட்க, சிவபெருமான் நடத்திய நாடகங்கள் சுவையானவை… நாகப்பட்டினம் அருகிலுள்ள வேதாரண்யம் சிவாலயம், ஒரு காலத்தில் சில காரணங்களால் மூடப்பட்டது. அவ்வூருக்கு சம்பந்தரும், திருநாவுக்கரசரும் வந்தனர். கதவு அடைக்கப்பட்டிருந்ததால், கோவிலுக்கு பக்கவாட்டு வாசல் வழியாக பக்தர்கள் சென்று வந்ததைக் கண்டு,
அவர்கள் வருத்தம் அடைந்தனர். கதவு திறக்க வேண்டுமென சம்பந்தர் ஒரே ஒரு பாட்டைத் தான் பாடினார்; கதவு திறந்தது. மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்று இறைவனை வழிபட்டனர். திறந்த கதவை அடைக்க அவர்களால் முடியவில்லை; எனவே, கதவை மூடுவதற்காக, தொடர்ச்சியாக, 11 பாடல்கள் பாடினார் நாவுக்கரசர்; கதவு மூடிக் கொண்டது.
“சம்பந்தரே… நீங்கள் ஒரே பாட்டில் கதவைத் திறந்து விட்டீர்கள். உங்கள் சக்தியின் முன், நான் மிகச் சாதாரணமானவன் என்பதை நிரூபிக்க நினைத்த சிவன், என்னை, 11 பாடல்கள் பாட வைத்து விட்டான்…’ என, தன்னடக்கத்துடன் சொன்னார் நாவுக்கரசர்.
“நாவுக்கரசரே… தாங்கள் நினைப்பது தவறு. என்னுடைய, ஒரு பாட்டே இறைவனுக்கு சலித்து விட்டது போலும்; அதனால், அவன் கதவைத் திறந்து விட்டான். உங்கள் பாடல்களைக் கேட்க, கேட்க தேனாய் தித்தித்ததால் தான், அவன் உங்களை தொடர்ந்து பாட வைத்திருக்கிறான்…’ என்றார் சம்பந்தர்.
இப்படி, இசை கேட்க ஆசைப்பட்டு, சிவபெருமான் ஒரு லீலையை நிகழ்த்தினார்; மற்றொரு நிகழ்வும் சுவையானது… சுந்தரர் எனும் வாலிபருக்கு, திருமணம் முடிவானது. மணவறைக்கு வந்து விட்டாள் மணப்பெண். தாலி கட்டும் வேளையில் முதியவர் வேடத்தில் நுழைந்தார் சிவன். திருமணத்தை தடுத்து நிறுத்திய அவர், “இந்த மணமகன் எனக்கு அடிமை என, இவனது முன்னோர் சாசனம் எழுதித் தந்துள்ளனர். இவனோ திருமணம் செய்து, தப்பிக்க எண்ணுகிறான். இவனை என்னுடன் அனுப்புங்கள்…’ என்றார்; மறுத்தார் சுந்தரர்.
“இந்தக் கிழவன் ஒரு பித்தன்; அதனால் தான், பைத்தியம் பிடித்து என்னை அடிமை என்கிறான்…’ என்று கத்தினார்; ஆனால், முதியவர் தகுந்த ஆதாரங்களைக் காட்டியதால், ஊர்ப் பெரியவர்கள் சுந்தரரை முதியவருடன் அனுப்பி வைத்தனர். திருவெண்ணெய்நல்லூருக்கு அவரை அழைத்துச் சென்று, சிவலிங்கத்துடன் ஐக்கியமாகி விட்டார். இதைக்கண்டு ஆனந்த மடைந்த சுந்தரர், “இறைவா… நீயா என்னை அடிமை கொண்டது…’ என மகிழ்ந்தார். அப்போது, சிவன் அவர் முன் தோன்றி, தன்னைப் பாடும்படி, வேண்டினார். எப்படி பாடுவது என சுந்தரர் கேட்கவே, “நீ என்னை பித்தன் என திட்டினாய். அந்த வார்த்தையை முதலாவதாகக் கொண்டே பாடு…’ என சொல்லவே, “பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா…’ என பிரபலமான பாடலைப் பாடினார். இவரே சிவபெருமானை, “ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே…’ என்று பாடியுள்ளார்.
தியாகராஜர் எனும் இசைமேதை, ராமபிரானை வாழ்த்திப் பாடிய கீர்த்தனைகள் பேரின்பம் தருபவை. சங்கீத மாணவர்கள் தியாகராஜருக்கு தேன் அபிஷேகம் செய்கின்றனர். இங்கு வந்து அரங்கேற்றம் செய்பவர்கள் ஏராளம். இவரது ஆராதனை விழாவில், பஞ்சரத்ன கீர்த்தனைகளை பிரபல இசைக் கலைஞர்கள் பாடுவர். தியாகராஜர் இந்த கீர்த்தனைகளை பாடிய போதுதான், ராமபிரான் அவருக்கு காட்சி கொடுத்தார். உலக இசை தினத்தன்று, இசையால்
இறைவனைப் பாடிய மாணிக்க வாசகர், அருணகிரியார், நக்கீரர், குமரகுருபரர் உள்ளிட்ட இசைஞானிகளின் பாடல்கள், மழை போல் நம் இல்லங்களை நனைக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக