திங்கள், 5 ஜூன், 2017

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பிறந்த தினம் ஜுன் 5 , 1896.



கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பிறந்த தினம் ஜுன்  5 , 1896.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் ( Muhammad Ismail , முஹம்மது இஸ்மாயில் சூன் 5 , 1896 - ஏப்ரல் 4 , 1972 ) சாகிபு இந்தியாவின் பெரும் முசுலிம் தலைவர்களுள் ஒருவர். காயிதே மில்லத் என்ற உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள்.

குடும்பம்

திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் பிறந்தவர். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முசுலிம் மதத் தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இசுமாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயாரே அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார். இவர் மனைவியின் பெயர் சமால் கமீதாபீவி. இவரின் ஒரே மகன் சமால் முகம்மது மியாகான்.
பிரிட்டிசு இந்தியாவில்
தனது பி. ஏ. பொதுத்தேர்வை எழுதாமல்
மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினார். இந்தியாவில் முசுலிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லாகான் அகில இந்திய முசுலிம் லீக் என்ற கட்சியை ஆரம்பித்தார். அவருக்குப் பின்னர் முகமது அலி சின்னா , அதனை நடத்தி வந்தார், ஜின்னாவுக்கும் இந்தியப் பிரிவினைக்கும் முஸ்லிம் லீகின் பெரும் தலைவர்களுள் ஒன்றாக இருந்த இவர், ஆற்றிய உதவி அளப்பரிது. பாகிஸ்தான் தோற்றதற்குப்பின், காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவரானார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
சுதந்திர இந்தியாவில்
1947 இல் பாகிஸ்தான் உருவானபோது அங்கு புலம் பெயராமல் அதிக எண்ணிக்கையில் முசுலிம்கள் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காகக் கட்சிப் பெயரில் இருந்த "அகில" என்பதை நீக்கிவிட்டு 1949-ல்
இந்தியன் யூனியன் முசுலிம் லீக் என்று மாற்றினார் இசுமாயில். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள இராசாசி மண்டபத்தில் நடந்தது. காயிதே மில்லத் நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்தார்.



இந்திய அரசியல்

அனைத்துக் கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சிப் பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.
1945 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார்.
1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
1946 முதல் 52 ஆம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா ,
மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.
1967ல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார்.

தொழில்துறை

அரசியலில் கவனம் செலுத்தியதோடு, தொழிற்துறையிலும் காயிதெ மில்லத் புகழ் பெற்று விளங்கினார். தோல் பொருட்கள் மற்றும் இறைச்சி ஏற்றுமதி மற்றும் விற்பனையில் கொடிகட்டி பறந்தார். தொழிற்துறையில் புகழ் பெற்றதால் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம், சென்னை வர்த்தகத் துறை, தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், தொழில் திட்டக்குழு, சுங்கவரிக் கழகம், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை உட்பட ஏராளமான அமைப்புகளில் உறுப்பினராக விளங்கினார்.
சென்னை மாநில இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத் தலைவராக 1946-ம் ஆண்டு முதல் 1972-ம் ஆண்டு வரை இருந்தார். மத்திய தோல் மற்றும் தோல் பொருட்கள் குழுத் தலைவராகவும், தென்னிந்திய தோல் வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவராகவும் இருந்தார். தென்னிந்திய இசுலாமிய கழகத்தின் துணைத் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தார்.

மறைவு.
"காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25 ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை
ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குடல் புண் நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 1972, ஏப்ரல் 5 நள்ளிரவு 1.15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் காலமானார். அவரது உடல் அன்று காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக
ராயப்பேட்டையில் உள்ள
புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் உட்படப் பல அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா மசூதியில் இசுமாயில் சாகிபின் உடல், இசுலாமிய மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது.
நினைவாக
காயிதே மில்லத்தில் மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு “காயிதே மில்லத் நாகைப்பட்டினம் மாவட்டம்” என்று பெயர் சூட்டியது. பின்னர் 1996ல் அரசு பேருந்துக் கழகங்கள், மாவட்டங்களிலிருந்து தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டபின்னர் அதன் பெயர் நாகப்பட்டினம் மாவட்டம் என்று மாற்றப்பட்டு விட்டது. 2003ஆம் ஆண்டு அவர் நினைவாக தமிழக அரசு ஒரு மணிமண்டபத்தைக் கட்டியுள்ளது. காயிதெ மில்லத்தின் பெயர் தற்போது தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்டுள்ளது. காயிதே மில்லத் அரசினர் பெண்கள் கல்லூரி, சென்னை மற்றும் காயிதே மில்லத் கலைக் கல்லூரி, மேடவாக்கம், சென்னை ஆகியவை அவற்றுள் சில. காயிதே மில்லத் நினைவாக சென்னையில் காயிதே மில்லத் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.



ஜூன் 5: கண்ணியமிகு காயிதே மில்லத் பிறந்த தின சிறப்பு பகிர்வு..

கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் திருநெல்வேலி பகுதியில் உள்ள பேட்டை என்கிற ஊரில் அரசர்களுக்கு துணி விற்றுக்கொண்டு இருந்த மதத்தலைவரான மியாகான் ராவுத்தர் அவர்களின் மகனாக பிறந்தார். இளமைக்காலத்திலேயே தந்தையை இழந்து அன்னையின் அரவணைப்பில் அவர் வளர்ந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு கல்லூரி பட்டப்படிப்பு தேர்வை புறக்கணித்தார். பின்னர் முஸ்லீம் லீக் அமைப்பில் இணைந்து செயல்பட்டார்.
விடுதலைக்கு பின்னர் டிசம்பர் மாதத்தில் 1948 இல் கராச்சியில் முஸ்லீம் லீக் கட்சி பாகிஸ்தான் பகுதிக்கு ஒன்று என்றும்,இந்தியாவிற்கு இன்னொன்று என்றும் உடைந்தது. அங்கே பாகிஸ்தான் பகுதியின் தலைவராக திகழ்ந்த லியாகத் அலிகான் ,"உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் காயிதே மில்லத் அவர்களே ! எப்பொழுதும் உதவக்காத்திருக்கிறோம்" என்ற பொழுது ,"எங்களுக்கான தேவைகளை,சிக்கல்களை நாங்களே தீர்த்துக்கொள்வோம். எங்களுக்கு என்று ஒரு தேசமிருக்கிறது. நீங்கள் எங்களுக்கு செய்கிற உதவி ஏதேனும் இருக்குமானால் அது பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள்,சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை பாதுகாப்போடு பார்த்துக்கொள்வது தான் !: என்று கம்பீரமாக சொல்லிவிட்டு நடந்தார்.

இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் உறுப்பினராக செயல்பட்டார். அப்பொழுது எது தேசிய மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்கிற விவாதம் எழுந்தது. பழமையான மொழியே தேசிய மொழியாக வேண்டும் என்கிற வாதம் வைக்கப்பட்ட பொழுது அமைதியாக எழுந்த காயிதே மில்லத் அவர்கள் இப்படி பேசினார் :
" ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். . இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். . இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ ( Part XIV A Languages – Page : 1471 to 1474 – Date 14th September 1949 – Vol : IX)
தேவிக்குளம்,பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளாவுக்கு போய் சேரும் என்கிற சூழல் நிலவிய பொழுது காமராஜர் அவர்கள் அவை இந்தியாவில் தானே இருக்கிறது என்று சொல்லிவிட இவரோ நாடாளுமன்றத்தில் தனது கட்சிக்கு கேரளாவில் தான் செல்வாக்கு அதிகம் என்று தெரிந்திருந்த பொழுதும் அஞ்சாமல் ,"தேவிக்குளம்,பீர்மேடு ஆகிய பகுதிகளை கேரளாவுக்கு கொடுக்க வேண்டும் என்று இங்கே கேட்கிறார்கள். அவை எல்லையோர பகுதிகள். தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகள். அங்கே அவர்கள் வந்துவிட்டு போகிறவர்கள் என்று அப்பகுதி அரசு சொல்கிறது. பின்னர் எவ்வாறு கடந்த தேர்தலில அவர்கள் அங்கே பெரும்பான்மையாக ஓட்டளித்தார்கள் என்று விளக்க முடியுமா ? அப்பகுதி தமிழகத்தோடு தான் இணைக்கப்பட வேண்டும் !" என்று முழங்கினார்.
சீனா மற்றும் பாகிஸ்தான் உடன் போர் நேர்ந்த பொழுது இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் பாரத தேசத்துக்காக போராடுவார்கள் எங்களின் ஆதரவு முழுமையாக அரசுக்கு உண்டு என்றவர்,சீனா இந்தியாவை தாக்கிய பொழுது ,"சீனாவுக்கு எதிராக முதல் எதிரியாக என்னுடைய பெயரை பதிந்து கொள்ளுங்கள். என் மகனையும் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கிறேன்." என்று நாடாளுமன்றத்தில் தன்னுடைய தேசபக்தியை பதிவு செய்தார். பாகிஸ்தானில் இருந்து வருகிற அகதிகளை கண்டுகொண்ட அரசு மலாய்,பர்மா மற்றும் இலங்கையில் இருந்து வரும் அகதிகளிடம் கரிசனத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.


நேரு அவர்கள் முதல் தேர்தலில் காங்கிரஸ் சின்னத்தில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று இவரைக்கேட்டு கொண்ட பொழுது நாங்கள் தனித்தே நிற்போம் என்று தன்மானத்தோடு சொன்னார். அடுத்தடுத்து மூன்று நாடாளுமன்ற தேர்தல்களில் மஞ்சேரி தொகுதிப்பக்கம் வாக்கு கேட்க ஒருமுறை கூட போகாமலே வெல்கிற அளவுக்கு அவர் செல்வாக்கு கொண்டவராக இருந்தார். இத்தனைக்கும் அவர் தேவிக்குளம்,பீர்மேடு சிக்கலில் தமிழகத்துக்கு ஆதரவான நிலையை எடுத்தார் என்பதை கவனிக்க வேண்டும்.
அண்ணாவின் கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இணைத்து காங்கிரஸ் தோல்வியடைவதை உறுதி செய்கிற வித்தையை அவர் சாதித்தார். அவர் எளிமையின் உச்சமாக இருந்தார். கட்சிக்கு என்று சேர்கிற நிதியில் பைசாவைக்கூட தனக்கென்று அவர் செலவு செய்து கொண்டதில்லை. அவரின் கட்சி அலுவலகத்துக்கு அவர் எப்படி வந்து சேருவார் தெரியுமா ? க்ரோம்பேட்டையில் இருக்கும் எளிய வீட்டில் இருந்து தொடர்வண்டியில் ஏறி பீச் நிலையம் வந்து சேர்ந்து அங்கிருந்து ரிக்சாவில் மண்ணடி போய் சேர்வார்.
மிலாதுநபி விழா நடந்து கொண்டிருந்தது. ஒரு திராவிட இயக்க பிரமுகர் இந்து மத வழிபாட்டு நம்பிக்கையை விமர்சித்து பேசிக்கொண்டு இருந்தார். அவரின் பேச்சை உடனே முடிக்க செய்த கண்ணியமிகு காயிதே மில்லத் இப்படி விளக்கம் தந்தார் ,இது புனிதமிகுந்த மிலாது விழா மேடை. இதில் நபிகள் நாயகத்தின் சிறப்பு, இஸ்லாத்தின் மேன்மை பற்றி மட்டுமே பேசவேண்டும். பிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேலி செய்து பேசக் கூடாது. இஸ்லாமிய மார்க்கம் ‘பிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேவலம் செய்து பேசாதீர்கள்’ என்று அறிவுறுத்தியிருக்கிறது" என்று அறிவித்தார்.
பதினான்கு கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி இஸ்லாமிய பிள்ளைகள் கல்வியறிவு பெற வழிகோலினார். மேல்சபை,சட்டசபை,லோக் சபா என பல்வேறு ஆட்சி பீடங்களில் பதவி வகித்தாலும் அவரிடம் சொந்தமாக கார் கூட கிடையாது. எளிமை,தேசபக்தி,மொழிப்பற்று,மக்கள் செல்வாக்கு என்று அனைத்தையும் ஒருங்கே பெற்றிருந்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களை அவரின் பிறந்தநாளன்று (ஜூன் ஐந்து ) நினைவு கூர்வோம்.
நன்றி விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக