வெள்ளி, 16 மார்ச், 2018

தேசிய தடுப்பூசி தினம் மார்ச் 16.

 

தேசிய தடுப்பூசி தினம் மார்ச் 16.

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்றால், உரிய நேரத்தில் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது அவசியம். இந்நிலையில், இன்று நாடு முழுவதும் தேசிய தடுப்பூசி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 16ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தட்டம்மை தடுப்பூசி தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
முதன்முதலாக 1995ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. அன்றிலிருந்து தேசிய தடுப்பூசி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் முயற்சிக்காகவும், அதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 2007-2015ஆம் ஆண்டுகளில் தட்டம்மையால் ஏற்படும் குழந்தை மரணங்கள் 79 சதவிகிதம் தடுப்பூசியால் குறைந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்த தட்டம்மை தடுப்பூசியை குழந்தை பிறந்த 9வது மாதத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். 15வது மாதத்தில் MMR என்ற தடுப்பூசியையும், இதன் பூஸ்டர் தடுப்பூசியை 4 முதல் 6 வயதுக்குள்ளும் போட்டுக்கொள்ள வேண்டும்.
தற்போது தமிழகத்தில் ஒன்பது மாதக் குழந்தை முதல் 15 வயது சிறுவர்கள் வரை சுமார் 1.76 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 28ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், சமூக வலைதளங்களில் தடுப்பூசி குறித்த தவறான செய்திகள் வெளியாகி இந்த தடுப்பூசியைப் போடலாமா, வேண்டாமா என பெற்றோர்கள் குழப்பத்தில் இருந்தனர். இதையடுத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நேற்றுடன் இந்த தடுப்பூசி முகாம் நிறைவுபெற்றது. மேலும் மருத்துவமனை, அங்கன்வாடி மையங்களில் ஒரு வாரம் தொடர்ந்து போடப்படும் என்று, பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.


தடுப்பூசியும் அதன் பின் இருக்கும் அரசியலும்...! #MustRead
:பா.நரேஷ்

எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு எம்.ஆர் தடுப்பூசி (தட்டம்மை – ரூபெல்லா வேக்ஸின்) போட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் தடுப்பூசி போட வேண்டாம் என்று பரவும் செய்திகள் ஒருபுறம் "தடுப்பூசி போடுவதில் தவறு இல்லை. அவசியம் போடுங்கள்" எனச் சொல்லும் மருத்துவர்கள் மறுபுறம் என குழம்பித்தவிக்கிறார்கள் பெற்றோர். இப்படி, இந்த தேசத்தின் குழந்தைகளின் உடல்நலத்தை வைத்து நடைபெறும் இந்தப் பனிப்போர் குறித்து அரசு தரப்பில் இருந்து சரியான பதில் இல்லை. மக்களிடம் ஏற்பட்டுள்ள பீதியைப் போக்காமல் வலுக்கட்டாயமாக தடுப்பூசியைத் திணிப்பது சற்றும் அறமற்ற செயல். தடுப்பூசி என்ற திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் சரியானது என்பதால் ஊடகங்கள் உட்பட அனைத்து தரப்பிலிருந்தும் இதற்கான வரவேற்பு இருந்தது. ஆனால், தற்போது தற்காப்பு மருத்துவம் என்பதை கடந்து வணிக காரணங்களுக்காக தடுப்பூசிகள் போடப்படுகின்றன என்று பல்வேறு தரப்புகளிலிருந்து கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தடுப்பூசி ஏன் தேவை? என்பதற்கான வலுவான ஆதாரங்களைச் சொல்லி, பெற்றோரின் பயத்தையும் சந்தேகத்தையும் நிவர்த்தி செய்து, அவர்களின் சம்மதத்துடன் இந்த பல்ஸ் கேம்பை நடத்துவதே சரியாக இருக்க முடியும் என்று நடுநிலையான சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள். இந்தத் தடுப்பூசி அரசியல் என்பதுதான் என்ன? ஏன் திடீரென தடுப்பூசிக்கு எதிராக மக்கள் பேசத்தொடங்கி உள்ளார்கள்? இதன் பின்னணி என்ன என்று பார்ப்போம்!

தடுப்பூசி, தடுப்பு மருந்து என்றால் என்ன?
பொது நல மருத்துவர் மற்றும் இதய நோய் நிபுணருமான டாக்டர் ஆர்.கனகசபாபதியிடம் பேசினோம். ‘‘தடுப்பூசி, தடுப்பு மருந்து என்பவை நோய் ஏற்படுத்தும் கிருமிகளை செயல் இழந்த நிலையில் உடலுக்குள் செலுத்துவதாகும். இந்த செயல் இழந்த நோய் கிருமிகள் நம் உடலுக்குள் நுழைந்ததும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும். இந்த பாதிப்பானது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தது. இந்த கிருமிகள் செல்களில் தங்கிவிடும். மலம், சிறுநீர் என்று எந்த வகை கழிவுகளாகவும் வெளியேறாது. மேலும், இவர்களுக்கு தடுப்பூசி போட்ட உடன் எந்தப் பாதிப்பு இல்லாவிட்டாலும், சில வருடங்கள் கழித்து பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். அது இந்த தடுப்பு மருந்தினால்தான் ஏற்பட்டதா என்பதுகூடத் தெரியாது. இதை புரியும்படி சொல்வதானால் ,நம் உடல் நமக்கான உணவை மட்டுமே ஜீரணிக்கும். ஒரு புலியானது புல்லை தின்றால் ஜீரணம் செய்ய இயலாமல் போகும். அதுபோல், தடுப்பூசியில் உள்ள கிருமிகள் நமக்கான உணவு கிடையாது. அவை, அந்நியப் பொருட்கள் (Foreign bodies) அவற்றை நம் உடல் ஜீரணித்துக்கொள்ளாது. அது நம் செல்களுக்குள் தங்கியிருந்து, பின்விளைவுகளை ஏற்படுத்தும். இதனை உலகில் பல மருத்துவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டவுடன் குழந்தைகளுக்கு போலியோ ஏற்பட்ட சம்பவம் நம் இந்தியாவிலேயே நிகழ்ந்துள்ளது’’ என்று எச்சரிக்கிறார்.
இதுகுறித்து பொதுநல மருத்துவர் சுந்தராஜனிடம் கேட்டோம், "தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்வது நல்லது. இது பாதுகாப்பானது. எந்த வயதினரும் போடலாம். இந்த தடுப்பூசி போட்டுக்கொள்வதால் சிறு சிறு பக்க விளைவுகள் இருக்கும். அதாவது காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். ஆனால், தடுப்பூசிகளின் பலன்களோ அதிகம். தடுப்பூசினால்தான் பெரியம்மை, போலியோ, சின்னம்மை போன்ற நோய்கள் கட்டுப்படுத்தபட்டன.
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், தடுப்பூசி குறித்து பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்." என்கிறார்.


இதற்குமுன் தடுப்பூசிகளை எதிர்த்தது யார்?
தடுப்பூசிகளுக்கு எதிரான குரல் ஏன் ஆரம்பித்தது தெரியுமா? அனைத்துக்கும் அமெரிக்காவை வியந்து பார்க்கும் நாம், தடுப்பூசி சேதத்துக்கான தேசிய இழப்பீட்டுத் திட்டம் (The National Vaccine Injury Compensation Program) என்று ஒரு நடவடிக்கை அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டதைப் பார்க்கத் தவறிவிட்டோம். தடுப்பூசிகளால் பாதிப்படைந்தோர், இறந்துபோனோருக்கு எனத் தனி நீதிமன்ற அமைப்பு அமெரிக்காவில் இயங்குகிறது. தடுப்பூசிகளால் உறுப்புச் செயலிழப்பு, மரணம், இயங்கவே இயலாத வகையிலான முடக்கம் ஆகியவை அமெரிக்காவில் அதிகரித்ததை அடுத்து, அந்த அரசு இந்த வழக்குகளுக்காகவே தனிச் சட்ட அமைப்பை உருவாக்கியுள்ளது. மிக முக்கியமாக, ஆட்டிசம் எனப்படும் மன இறுக்கம் குழந்தைகளைப் பாதிப்பதற்குத் தடுப்பூசிகளும் முக்கியக் காரணம் என்பதை அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்க தடுப்பூசி இழப்பீட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் இறுதிப் பத்தி, இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘மார்ச் 1, 2010-ம் ஆண்டு நிலவரப்படி, தடுப்பூசிகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக மொத்தம் 13,330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில், 5,617 வழக்குகள் ஆட்டிசம் தொடர்பானவை. இவற்றில் 7,397 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அவற்றில், 2,409 வழக்குகளில் மனுதாரர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது’. அதாவது, தடுப்பூசியால் பாதிப்புகள் நிகழ்ந்துள்ளதை ஏற்றுக்கொண்டதோடு, அதற்கு இழப்பீடும் வழங்கியிருக்கிறது அமெரிக்க அரசு. மேலும், தொழில் புரட்சியில் வாய்பிளக்கவைக்கும் ஜப்பான் அரசு, எம்எம்ஆர் (MMR) தடுப்பூசியை குழந்தைகளுக்குப் போட்டபோது... கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால், அந்த அரசாங்கம் அடியோடு அதைத் தடை செய்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக, இத்தனை நாட்கள் நாம் தெய்வமாக வழிபட்ட போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்த சாபின், ‘‘சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட பின்னரும்... அரசு ஆவணங்களை உற்றுநோக்குகையில் இந்த மருந்தால், பெரும் அளவு பலன் ஏதும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது’’ என்றார். (பார்க்கவும்: 'தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள்' எனும் புத்தகம்) அதாவது, ‘போலியோ சொட்டு மருந்தினால்தான் போலியோ என்ற நோய் அற்றுவிட்டது எனும் கூற்றைப் பொய்’ என்று அதனை கண்டுபிடித்தவரே கூறியிருக்கிறார்.
மேலும், இந்தப் போலியோ சொட்டு மருந்து நம் குழந்தை களுக்கு ஏற்படுத்திய பாதிப்புகளை நாம் மறந்திருக்க மாட்டோம். 2002-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட பிறகு 26 குழந்தைகளுக்கு போலியோ ஏற்பட்டது. இதன் பிறகு உலக சுகாதார நிறுவனத்திடம், இந்த மருந்தின் தரம் குறித்து கேள்வி எழுப்பியபோது, அதில் 17 வகை கலப்படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. 2008-ம் ஆண்டு தமிழகத்தில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டபோது ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 10 குழந்தைகள் இறந்துபோயின. இதனை அடுத்து, இந்தியத் தடுப்பு மருந்து பிரிவின் தலைவரான மருத்துவர் ஜேக்கப் புலியேல், ‘இந்திய சூழலுக்குச் சொட்டு மருந்து சரிப்பட்டு வராது’ என்று தெரிவித்திருந்த உலக சுகாதார நிறுவனம், திடீரென்று இங்கு தீவிர போலியோ முகாமுக்குப் பரிந்துரை செய்தது யாரால்... எதனால்’’ என்று கேள்வி எழுப்பினார்
(சான்றுகள்:
1) http://www.downtoearth.org.in/blog/indias-poliofree-status-a-cruel-joke-43847
2) https://scroll.in/pulse/803485/if-india-is-polio-free-why-are-children-still-getting-paralysed-by-the-polio-virus
3) http://www.moneylife.in/article/stop-unnecessary-vaccination-eminent-doctors-scientists-to-the-pm/39645.html )
தேவையற்ற தடுப்பூசி போடுவதை நிறுத்துங்கள் எனவும், இதனால் குழந்தை மரணங்கள் அதிகளவில் நிகழ்ந்துள்ளது எனவும் 2014 ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த பல மருத்துவர்களும் , விஞ்ஞானிகளும் அடங்கிய குழு பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தனர். அதில் தமிழ்நாட்டில் இந்த தடுப்பூசிகளால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதையும் அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளனர்.மேலும், ஹெபடைட்டிஸ் பி வாக்ஸின் (Hepatitis B vaccine) என்று போடப்பட்ட பென்டாவேலன்ட் (Pentavelant) தடுப்பூசியால் குழந்தைகளுக்கு எந்த பயனும் இல்லை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குழுவில் டாக்டர்.தி.எம்.ஹெட்ஜ், டாக்டர்.ஜேகோன் புலியேல் போன்ற தலைசிறந்த மருத்துவர்கள் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு நடந்த பிறகும் இன்றுவரை நமது அரசு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்திவருகிறது. நாமும் அந்தச் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தி வருகிறோம் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. எந்தப் பயனும் இல்லை என்று தெரிந்த பின்னும் எதற்காக இந்தச் சொட்டு மருந்து? தடுப்பு மருந்துகள், மருந்துத் தயாரிப்பாளர்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்குமே லாபம் தரக்கூடியதாக உள்ளன. குழந்தைகளின் மருந்துகளில்கூட அரசியல் செய்து சம்பாதிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
"ஆங்கில மருத்துவம் படித்த அனைவருமே தடுப்பூசியை ஆதரிக்கிறார்கள். மரபு வழி மருத்துவர்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள் என்ற மூட நம்பிக்கை ஒருபுறம் பரப்பப்படுகிறது. ஆனால், இது உண்மையில்லை. அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான ஆங்கில மருத்துவர்கள் தடுப்பூசியை எதிர்க்கிறார்கள். டாக்டர் வில்லியம் ட்ரெப்பிங், டாக்டர் டெட் கோரன் . .என்று பெரும் படையே அங்கு உண்டு. இந்தியாவிலும் தடுப்பூசிக்கு எதிரான ஆங்கில மருத்துவர்கள் அதிகம். டாக்டர். ஃபஸ்லுர் ரஹ்மான், டாக்டர். சித்திக் ஜமால், டாக்டர். ஜேக்கப் புலியேல், டாக்டர். சத்யமாலா, டாக்டர்.ஹெக்டே, டாக்டர் புகழேந்தி . . . என்று தொடரும் மருத்துவர்கள் தடுப்பூசிகள் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். அதன் விளைவுகள் மோசமானவை என்று எச்சரிக்கவும் செய்துள்ளார்கள்." என்கிறார் அக்குஹீலர் உமர்ஃபாருக்.
தடுப்பூசிகளுக்கு ஆதரவாக இருக்கும் மருத்துவர்கள்கூட, ‘‘தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படுவது உண்மைதான். ஆனால், தடுப்பூசிகள் இல்லாவிட்டால்... நோய்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற முடியாது’’ என்று கூறுகின்றனர். ஆனால், இன்றுவரை தடுப்பூசிகளால்தான் மக்கள் நோய்களில் இருந்து காப்பாற்றப்பட்டனர் என்றோ, இந்த வகை தடுப்பூசிகளினால் நோய்கள் இல்லாமல் போய்விட்டன என்றோ சொல்வதற்கு அதிகாரப்பூர்வமான அறிவியல் ஆராய்ச்சிகள் ஏதும் இல்லை என்பதே நடைமுறை உண்மை. மேலும், தடுப்பூசி போடப்படாததால் மக்கள் இறந்தனர் என்ற அதிகாரபூர்வச் செய்திகள் இல்லை. இப்போது இந்த எம்.எம்.ஆர் தடுப்பூசியை இந்திய அரசு இன்னும், தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சேர்க்கவில்லை. தமிழகத்தில் தடுப்பூசி முகாம் முடிந்த பின்னர்தான், அவ்வாறு செய்ய இருப்பதாக அரசு அலுவலர் கூறியுள்ளார். தேசிய தடுப்பூசித் திட்டத்தில்கூட இணைக்கப்படாத ஊசியை நம் குழந்தைகளின் மீது திணிப்பது, பரிசோதனை முயற்சியா என்ற கேள்வியைப் பெற்றோர்கள் எழுப்புகின்றனர். “எங்கள் குழந்தைகள் சோதனை எலிகள் அல்ல. தயவுசெய்து அவர்களை விட்டுவிடுங்கள்’’ என்று பெற்றோர்கள் தவிக்க ஆரம்பித்துவிட்டனர். இன்னொரு கொடிய விஷயம் என்னவென்றால், இந்தத் தடுப்பூசிகளினால் ஏற்படும் பாதிப்புகள் நீண்டகால அளவு இடைவெளியில் வெளிப்படும் என்பதால், அவை தடுப்பூசிகளினால் ஏற்பட்ட பக்கவிளைவுகள்தான் என்று நமக்கே தெரியாமல் போய்விடும் அவலம் இருக்கிறது.


இதுவரை அதிகமாகப் பரவிவந்த நோய்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த தடுப்பூசியானது, இப்போது தமிழகத்தில் அதிகம் இல்லாத மீசல்ஸ் மற்றும் ரூபெல்லா நோய்களுக்குக் கொடுக்கப்படுவது ஏன்? ‘வெடித்துச் சிதறி பரவக்கூடிய’ (Widespread and strongly communicable disease) என்ற வகையறாக்குள்ளேயே வராத நோய்களுக்கு எதற்காக இந்தத் தடுப்பூசி? இனிமேல் வரக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையினால்தான் கொடுக்கிறோம் என்றால், இந்தத் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்குக் கண்டிப்பாக இந்த நோய் வராது என்று உறுதியளிக்க மறுப்பது ஏன்? இந்தத் தடுப்பூசிகளால் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது என்று, இன்றுவரை வாய்வழி அறிக்கைகளை மட்டுமே விட்டுக்கொண்டு இருப்பது ஏன்? இதற்கான அறிவியல் சான்றுகளைக் காண்பித்தால் மக்கள் தெளிவடைவார்கள்தானே?
பெற்றோர்களுக்கான செய்தி:
இந்தத் தடுப்பூசியைக் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது கிடையாது. இந்திய மருத்துவச் சட்டத்தின்படி, கட்டாயமாகத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற சட்டம் எதுவும் இல்லை. (இணைப்பு: தமிழக அரசின் தகவல் ஆணையம்: Vaccine RTI). எனவே, தடுப்பூசி வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை பெற்றோர்களுக்கே உள்ளது. உங்கள் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் போடப்படும் தடுப்பூசி வேண்டாம் என்றால், நீங்கள் பள்ளி நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதி அதைத் தடுத்துக்கொள்ளலாம். அரசாங்கம் தடுப்பூசி குறித்த இத்தனை குற்றங்களுக்குப் பதில் சொல்லும் முன், உங்கள் குழந்தைகளின் நலனுக்கு அதிகாரபூர்வமாக உத்தரவாதம் தரும்முன், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்று நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
பி.கு: பிற நாடுகளில் உள்ளதுபோல தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நீதிமன்றமோ, இழப்பீட்டுச் சட்டங்களோ நம் நாட்டில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
- பா.நரேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக