திங்கள், 26 மார்ச், 2018

உலக நாடக அரங்க தினம் ( World Theater Day ) மார்ச் 27


உலக நாடக அரங்க தினம் ( World Theater Day )  மார்ச் 27 .

உலக நாடக அரங்க நாள் ( World Theater Day ) ஆண்டுதோறும் மார்ச் 27 ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு தேசிய, பன்னாட்டு நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நாளின் முக்கிய நிகழ்வாக, உலக மட்டத்தில் புகழ் பெற்ற ஒரு நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும், உலக கலாச்சார அமைதி பற்றியும் செய்தி ஒன்றை விடுப்பார். இவ்வாறான முதலாவது செய்தியை 1962 ஆம் ஆண்டில் பிரான்சிய எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான சான் காக்டோ விடுத்தார்.


எக்காலத்திலும் அழியாது நாடக கலை

சினிமாவின் படையெடுப் புக்கு முன்பு, தமிழர்களின் வாழ்வில் பின்னி பிணைந்திருந்தது நாடகம் மட்டுமே. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில், நாடகத்தின் தாக்கம் எப்படி இருந்தது என்பதற்கு இந்த சம்பவங்களை உதாரணம் சொல்வார்கள். ‘நல்லதங்காள்’ நாடகம் நடந்துகொண்டிருந்தது. கண்ணீர் சிந்தவைக்கும் நாட கம். நல்லதங்காளுக்கு 7 குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையையும் தாலாட்டு பாடியபடி கிணற்றில் வீசுவாள் நல்லதங்காள்.
ஒரு கிராமத்தில் இந்த நாடகம் நடந்த போது, நல்லதங்காளாக நடித்த பெண், ஒரு குழந்தையை மட்டும் தாலாட்டு பாடாமல் கிணற்றில் போட்டாளாம். நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கொதித்து விட்டார்கள். எப்படி தாலாட்டு பாடாமல் குழந்தையை கிணற்றில் போடலாம் என்று கேட்டு மேடை ஏறிவிட்டார்கள். கிணற்றில் போட்ட குழந்தையை எடுத்துக் கொடு த்து, தாலாட்டு பாடியபின் போட சொன்னார்களாம். இன்னொரு சம்பவம். பாலாமணி அம்மாள், ‘தாரா சசாங்கம்‘ என்ற நாடகத்தை நடத்தினார். இதில் நடித்தவர்கள் பெண்கள் மட்டுமே. இந்த நாடகத்தில், கதாநாயகிக்கு கதாநாயகன் எண்ணெய் தேய்க்கும் காட்சி ஒன்று உண்டு. அந்தக் காட்சியில் நாயகி உடை அணிந்திருக்க மாட்டாள்.
இதைப் பார்க்க ஏகப்பட்ட கூட்டம். திருச்சியில் இருந்து இந்த நாடகத்துக்காக, ‘பாலாமணி ஸ்பெஷல்’ என்ற ரயில் விடப்பட்டதாம். நாயகியாக நடித்தவர் ஸ்கின் உடை அணிந்திருந்தார் என்பது அவர்களுக்குத் தெரியாது. 1940 வரை புராணம், சமஸ்கிருதக் காவியங்கள், சமுதாயச் சிந்தனை நாட்டுப்பற்று போன்ற வையே நாடகங்களில் இருந்தன. பின்னர் சுதந்திர வேட்கையை உணர்த்தும் விதமான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. தமிழ் நாடக மேடைகளில் சீர்திருத்த நாடகங்களை அறிமுகம் செய்தவர் பம்மல் சம்பந்த முதலியார்.
மேடை நாடகங்களில் உரைநடைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் இவர். தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படும், சங்கரதாச சுவாமிகள், ‘சமரச சன்மார்க்க சபை’ என்ற நாடகக் குழுவை உருவாக்கியவர். இதில், கிட்டப்பா நடித்து புகழ்பெற்றார். விஸ்வநாத தாஸின் ‘வள்ளித் திருமணம்‘ நாடகம் அப்போது புகழ்பெற்ற நாடகம். முருகன் வேடத்தில் வந்த விஸ்வநாத தாஸ், மேடையில் உச்சபட்சக் குரலில் பாடிக்கொண்டிருந்தபோதே உயிர் பிரிந்துவிட்டது. சினிமா வந்த பிறகு நாடகத்துக்கான மவுசு குறைய ஆரம்பித்தது. பாஸ்கர தாஸ், பூமி பாலக தாஸ், உடுமலை நாராயண கவி போன்ற நாடக வாத்தியார்கள், ஸ்டூடி யோக்களுக்கு தங்களை இடம் மாற்றினார்கள். நாடக கம்பெனிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன.
இப்போது நாடகங்கள் முற்றிலும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நாடக கம்பெனிகள் இருந்தாலும் அதற்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது. ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் போன்றோர் காமெடி நாடகங்களை நடத்தி வருகின்றனர். இது ஓரளவு வெற்றிகரமாக சென்றாலும் முழுமையான வரவேற்பு இல்லை. ‘தியேட்டர் ஆஃப் மகம்‘ மூலம் தொடர்ந்து தமிழ்நாட்டிலும், வெளிநாட்டிலும் நாடகம் நடத்தி வருகிறார் மதுவந்தி அருண். ‘சக்தி’, ‘சிவசம்போ’ நாடகங்களை தொடர்ந்து தற்போது, ‘பெருமாளே’ என்ற நாடகத்தை நடத்தி வரும் அவரிடம், இன்றைய நாடகம் பற்றி பேசியபோது... ‘’நாடகம் நலிந்து போய்விட்டது.
நாடகக் கலை மறைந்து போய்விட்டது என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். எங்கள் குடும்பம் கல்வி நிறுவனங்களை நல்ல நிலையில் நடத்தி வருகிறது. நான் நினைத்தால் சினிமாவுக்கோ, தொலைக்காட்சிக்கோ சென்றிருக்க முடியும். ஆனால் நாடகத்தைத் தேர்வு செய்திருக்கிறேன். இன்றைய இளை ஞர்களிடம் நாடகத்திற்கு வரவேற்பு இருக்கிறது. சபாக்களில் நாடகம் போட்டால் இளைஞர்கள் அதிகமாக வருகிறார்கள். எனது அப்பா (ஒய்.ஜி.மகேந்திரன்), எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் போன்றவர்கள் சினிமாவிலும் நாடகத்திலும் பயணிக்கிறார்கள்.
பாலிவுட்டில் நசிருதீன் ஷா உள்பட பல திரைப்பட கலைஞர்கள் நாடகத்தில் நடிக்கிறார்கள். ஹாலிவுட் நடிகர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள நாடகத்தில் நடிக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமா நட் சத்திரங்கள் மட்டும் நாடகம் என்றால் விலகிப் போகிறார்கள். குறைந்தபட்சம் அவர்கள் நாடகம் பார்க்கவாவது வரவேண்டும். கிராமங்களில் திருவிழாக்களில் நாடகம் போட்ட கலைஞர்கள் இன்று வாழ்க்கையையே போராட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார வசதி இல்லை.
நாடகத்திற்கு மக்களின் ஆதரவு குறைவாக இருக்கிறது. ஆனால் அந்த கலைஞர்கள் இன்னும் கலை தாகத்தோடு இருக்கிறார்கள். முன்பு இருந்த நிலையை ஒப்பி டும்போது இப்போது சற்று மாற்றம் வந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. வெளிநாட்டில் உள்ளவர்கள், சினிமாவை விட பத்து மடங்கு நாடகத்தின் மேல் மதிப்பும், ஆர்வமும் கொண்டிருக்கிறார்கள். நாடக கலைஞர்களை கொண்டாடுகிறார் கள். நாடகம் ஒன்றில்தான் பாராட்டோ, திட்டோ நேருக்கு நேர் கிடைக்கும். அதிலிருக்கும் த்ரில்லே தனி. நாடக கலை அழிகிற கலையாக இருந்திருந்தால் சினிமா வந்த பத்து ஆண்டுக்குள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். என் தலைமுறை வரை அது வந்திருக்கிறது என்றால் எந்த காலத்திலும் அழியாத அற்புத கலை நாடக கலைதான்’’ என்கிறார் மதுவந்தி அருண்.


உலக அரங்க தினமும் (World Theater Day) அது தொடர்பான சிந்தனைகளும்
அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம், காதலர் தினம் என்று வருஷம் முழுதும் ஏதாவது ஒரு நாள் எது குறித்தாவது அல்லது யார் குறித்தாவது கொண்டாடப் பட்டு வருகிறது. சில பரவலாக அறியப் படுகின்றன. சில நேர் மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ அதன் சர்ச்சைத் தன்மையைப் பொருத்து ஊடகங்களாலேயே பிரபலப் படுத்தப் படுகின்றன. சில அப்படி ஒன்று இருப்பதே அறியப்படாமல், உலகின் எங்கோ சில மூலைகளில் சின்னச் சின்னக் குழுக்களால் மட்டுமே அனுசரிக்கப் பட்டு நமக்கும் தெரியாமல் நம்மைக் கடந்து போய் விடுகின்றன. அந்த அளவில், ஒவ்வொரு வருஷமும் மார்ச் இருபத்தேழாம் நாள் ‘உலக அரங்க தினமாக’(World Theater Day) அறிவிக்கப் பட்டு உலகின் பல நாடுகளில் நடனம், நாடகம் போன்ற நிகழ்கலைகளின்(Performing Arts) வழியாக விளம்பரங்களோ, ஆர்ப்பாட்டங்களோ எதுவும் இன்றிக் கொண்டாடப் பட்டு வருவது, நிகழ்கலைத் துறை சார்ந்த ஆர்வலர்களிலேயே நிறைய பேருக்குத் தெரியாது.
சர்வ தேச அரங்கப் பயிலகம்(International Theater Institute) என்ற அமைப்பு யுனெஸ்கோவுடன் இணைந்து, உலகெங்கிலும் உள்ள முன்னணி நாடக, நாட்டிய வல்லுனர்களால், நிகழ்கலைத் துறைகளில் ஈடுபடுவோரின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் முக்கிய நோக்கோடு, 1948-
ஆம் ஆண்டு பாரீசில் ஆரம்பிக்கப் பட்டது.
இதன் அடுத்த கட்டச் செயல்பாடாக, 1961-இல், ஹெல்சிங்கியில் நடந்த ITI-இன் ஒன்பதாவது உலக சம்மேளனத்தின் போது, ஃபின்லாந்தின் தேசீய அரங்கவியல் தலைவரும், ஃபின்னிஷ் மொழியின் முன்னணி நாடகாசிரியருமான கார்லோ ஆர்வி கிரிமா என்பவர் உலக அரங்க தினம் ஒன்றை ஏற்படுத்தி, அந்த நாளில் உலகெங்கும் உள்ள ITI-மையங்களில் நாடகம், நாட்டியம் போன்ற அரங்கவியல் நிகழ்வுகளை நிகழ்த்திக் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். அது 1962-
ஆம் ஆண்டு செயல் வடிவம் பெற்றது.
1962-ஆம் வருஷம் மார்ச்-27 ஆம் நாள் பாரீசில் துவங்கிய ‘தியேட்டர் ஆஃப் நேஷன்ஸ்’ திருவிழாவை நினைவு கூறும் வகையில் அந்த தினத்தையே ஒவ்வொரு வருஷமும் உலக அரங்க தினமாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதை ஒட்டி, அந்த நாளில் வெவ்வேறு உலக நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட நூறு ஐ.டி.ஐ. மையங்களில் நாடகம், நாட்டியம், இசை-நாடகம், மற்றும் அந்தந்தப் பிரதேசத்தின் கிராமீய நிகழ்கலைகள் முதலியவை விமரிசையாக நிகழ்த்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது..
\இந்த உலக அரங்க தினத்தின் முக்கியமானதும் கவனத்துக்குரியதுமான அம்சம், ஒவ்வொரு வருஷமும் இந்த நாளில், சர்வதேசத் தரம் வாய்ந்த எழுத்தாளர் ஒருவரின் மூலம் உலக அரங்க தினச் செய்தி என்று ஒன்று வெளியிடப் படுவதாகும்.. முதலாம் ஆண்டுச்செய்தி(1962), நாடகம் மட்டும் அல்லாது, கவிதை, ஓவியம், நாவல், சினிமா என்று பல்துறைகளிலும் முத்திரை பதித்த ஃபிரெஞ்சு இலக்கியகர்த்தாவான Jean Cocteau என்பவரால் வெளியிடப்பட்டது.
இந்தச் செய்தி-ஆசிரியர்களின் வரிசையில், ஆர்தர் மில்லர், பீட்டர் ப்ரூக், பாப்லோ நெருடா, ரிச்சர்ட் பர்டன், யூஜின் அயனஸ்கோ, மார்டின் எஸ்லின், எட்வர்ட் ஆல்பி, கிரீஷ் கர்னார்ட் போன்றோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இந்த ஆண்டின் செய்தியை அளித்திருக்கும் Dario Fo ரொம்பவுமே விசேஷமானவர். 1997-ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் இந்த ஃபோ. அமைப்பு சாரா இடது சாரி நாடகாசிரியரான இவர், நாடக நடிகையும் பெண்ணிய வாதியுமான தனது மனைவி
Franca Rame–உடன் இணைந்து இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய கால கட்டத்தில் இத்தாலி முழுவதும் தனது அதிகார-எதிர்ப்பு நாடகங்களை நிகழ்த்திப் பரபரப்பை உண்டு பண்ணியவர்.
இவரது நாடகங்கள், இத்தாலியில் பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளின் மறுமலர்ச்சி-இயக்கக் காலத்தில் பிரபலமாக இருந்த ‘காமெடியா டெல் ஆர்ட்டீ’ என்ற நாடோடித் தெருநாடகக் குழவினரின் அங்கத(Satire) நாடக வகையைச் சேர்ந்தவை. அவற்றின் மூலம் சமகால அரசியல், சமூக, மத அமைப்புக்களை நையாண்டி செய்ததாலும், இத்தாலியின் பாசிச அதிகார மையத்தைக் கேள்வி கேட்டதாலும் இவர் அரசின் கோபத்துக்கு ஆளானார். இவரது நாடகக்குழு பல வருஷங்களுக்குத் தடை செய்யப் பட்டது.
1970-இல், அமைப்பை எதிர்த்துக் கலகம் செய்த ஓர் இத்தாலிய ரயில்வே தொழிலாளி போலீஸ் காவலில் கொலை செய்யப்பட்டு, அதை வெறும் விபத்தாய்ச் சித்தரித்து மூடி மறைக்க முயற்சிகள் நடந்த போது,
‘ஒரு கிளர்ச்சிக்காரனின் அகால மரணம்’(The Accidental Death of an Anarchist) என்ற நாடகத்தை எழுதி, ஃபோ இத்தாலி முழுதும் மேடை ஏற்றினார். ஃபோவின் இத்தகைய கடும் அரசியல் விமர்சன நடவடிக்கைகளால் எல்லாம் கோபம் கொண்ட இத்தாலிய போலீஸ், நாடக நடிகையும் இவரது மனைவியுமான ஃப்ராங்கா ரேமைக் கடத்திக் கொண்டு போய் ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைத்துப் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தியது. இது நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்குள்ளேயே மீண்டும் மேடையில் தோன்றிய ரேம் இன்னும் அதிக ஆவேசத்தோடும் புது உத்வேகத்தோடும் பாசிச எதிர்ப்புத் தனி-வசனங்களை(Monologue) மேடைகளில் நடித்துக் காட்டி அரசின் நரம்புகளை அதிர வைத்தார்.
(கிட்டத்தட்ட இதற்கு இணையான சம்பவம் இந்தியாவிலும் நடந்தது. 1989-ஆம் ஆண்டு, டில்லியருகே, ஒரு தெரு நாடக நிகழ்வின் போது தெருநாடகக் கலைஞர் சஃப்தார் ஆஸ்மி ஓர் அரசியல் கட்சிக் குண்டர்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூர சம்பவம் நடந்து முடிந்த இரண்டாவது நாளே, மனம் தளராத அவரது மனைவி மொல்லாய்ஷ்ரீ ஆஸ்மி அதே இடத்தில், பாதியில் நின்று போன அதே நாடகத்தைத் தைரியமாக மீண்டும் நடத்திக் காட்டினார்.) ஒத்த எண்ணங்களும், மன இணக்கமும், அசாத்தியக் கொள்கை உறுதியும் கொண்ட இத்தகைய நாடகத் தம்பதியர், உலக நாடக வரலாற்றில் மிகவும் அபூர்வமாகவே தென்படுகிறார்கள்.
அந்த அளவில் டேரியோ ஃபோவின் இந்த ஆண்டைய உலக அரங்க தினச் செய்தி இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதில், அவர் எப்படிக் கத்தோலிக்க மத அமைப்பு, தனது மறுமலர்ச்சி எதிர்வினைகளாகப் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் ‘காமெடியா’ தெருநாடகக் குழுவினரை இத்தாலியை விட்டே ஓடஓட விரட்டியது என்பதையும், அப்போதிருந்த போப்பாண்டவர் எப்படி மற்ற மத குருமார்களின் தூண்டுதலின் பேரில் ரோம் நகரத்து Tordinona நாடக அரங்கைத் தகர்த்தெறிய உத்தரவிட்டார் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார்.
அந்தக் காலகட்டத்தில் நாடகம் என்பது சமயத்துக்கு எதிரானதும், அபசாரமானதும், ஆபாசமானதும், யாருக்கும் பயனற்றதுமான மக்களைத் திசை திருப்பும் மலிவான ஒன்றாகவே சித்தரிக்கப் பட்டிருந்தது. அதனால் அப்போது அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு அதன் வளர்ச்சி கவலையை அளித்தது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக இன்றைய மாறிவரும் உலகச் சூழலில் நாடகம் பற்றி எவரும் லட்சியம் கூடப் பண்ணுவதில்லை என்கிற விஷயம் ஃபோவை மிகவுமே வேதனை கொள்ளச் செய்கிறது. ஒரு மிகப் பெரிய ‘கலாச்சார நெருக்கடி’க்கு ஆளாகி இருக்கும் இன்றைய சிக்கல் மிகுந்த வாழ்க்கைச் சூழலில், அழிந்து கொண்டிருக்கும் அரங்கத்தை மீட்டெடுத்து, அன்றைய காமெடியா டெலார்ட்டீயைப் போலவே மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் இன்றைய இளம் நாடகக் காரர்கள் முனைப்பாக இருக்க வேண்டியது எந்த அளவுக்கு அவசியம் என்பதே ஃபோ விடுக்கும் செய்தியின் சாராம்சமாகும்.
உலக அரங்க தினம் கொண்டாடப் படுவதென்பது ஒரு கலை வடிவை அழியாமல் காப்பாற்றிக் கொடுப்பது, அல்லது அன்றைய நாளில் மக்களைப் பொழுது போக்கு நிகழ்ச்சிகளால் மகிழ்விப்பது என்கிற மாதிரியான வெறும் ஒரு அடையாள நிகழ்வாய்க் குறுகி விடாமல் பார்த்துக் கொள்வதிலேயும் ஐ.டி.ஐ. கவனமாக இருக்கிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஐ.டி.ஐ.-ஜெர்மனியும் ஐ.டி.ஐ.-சூடானும் இணைந்து, 2004-இல் சூடானின் உள்நாட்டுப் போர் வெடித்திருந்த பழங்குடிப் பகுதிகளில் போய்த் தெரு நாடகங்களை நிகழ்த்தியது. அது மட்டுமல்லாமல் அந்தப் பிரதேசத்தில் அதுவரை சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு பழங்குடி மக்களிலிருந்தே ஆட்களைத் திரட்டி, அவர்களை அந்த நாடகங்களில் பங்கேற்கிறவர்களாகவும், பார்வையாளர்களாகவும் ஈடுபடுத்தியது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இப்படிப் பங்கேற்றவர்களில் இரண்டு தரப்பையும் சேர்ந்த போர் வீர்களும். போலீஸ்காரர்களும் கூட இருந்தனர். இத்தகைய கலை நிகழ்ச்சிகளின் போது, இரண்டு தரப்பினரும் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
இந்த வகையில் உலக அரங்க தினம், பிற தினங்களைப் போலன்றிப் பல தளங்களில் வேறுபட்டுத் தனித்து நிற்கிறது. இது அருகிக் கொண்டிருக்கும் ஒரு கலை வடிவைப் பாதுகாப்பது என்ற அளவோடு மட்டும் நின்று விடாமல், அதை மண்ணும் மாந்தரும் பயன் பெறுமாறு எப்படி வளர்த்தெடுப்பது என்பதிலும் நமக்கு அக்கறை இருக்கிறது. சங்க காலத்தில், சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு மன்னர்களிடையே போய்க் கவிதை பாடிப் போரை நிறுத்திய புலவர்களைப் பற்றியெல்லாம் நாம் படித்திருக்கிறோம். தனி மனிதச் செயல்பாடான கவிதைக்கே அத்தனை ஆற்றல் இருக்கும் பட்சத்தில், ஒருங்கிணைந்த குழுச் செயல்பாடான நாடகத்திற்கு அதை விட இன்னும் அதிக ஆற்றல் இருக்க வேண்டும். ஆனால், இந்தக் கலை வடிவின் மொத்த உள்-ஆற்றலையும் சமூகம் சரியாய்ப் பயன் படுத்திக் கொண்டதா என்பது சந்தேகமே.
Theater என்னும் சொல்லை நாடகம் என்று மொழி பெயர்ப்பது சரியாகப் படவில்லை. அப்படிச் செய்தால், அது மேடை நாடகம் போன்ற ஒரு குறிப்பிட்ட வடிவத்தையே சுட்டும் சொல்லாகக் குறுகி விடுகிற அபாயங்கள் உண்டு. மாறாக, அது நாடகம், நாட்டியம், இசை-நாடகம்(Opera), நிழல்க்கூத்து(Shadow theater),
பாவைக்கூத்து(puppet theater),
தெருக்கூத்து(Folk Theater) என்று பல விரிந்த வெளிகளில் பரவி நிற்பதால்,
Theater-ஐ அரங்கம் என்றே எழதுவது சரி என்று தோன்றுகிறது. இந்த அரங்கம் என்னும் சொல் நான்கு புறமும் சுவர்கள் சூழ்ந்த ஒரு மூடிய கான்க்ரீட் கூடமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உயிரற்ற சுவர்களுக்குப் பதிலாக, அது நாலாபுறமும் உயிருள்ள மக்களே சூழ்ந்த திறந்த வெளியாகத் தோற்றம் கொள்வதும் இதில் சாத்தியம் என்பதால், ‘அரங்கத்தின்’ வீச்சு இன்னும் அதிக ஆற்றல் கொண்டதாகிறது.
உலகில் நாடகம் தோன்றிய விதம் பற்றிய சுவாரஸ்யமான புராணக் கதை ஒன்று இருக்கிறது. பிரம்மன் ஐந்தாவது வேதமாக நாட்டிய சாஸ்திரத்தை உருவாக்கி, அதைப் பரத முனிவரிடம் கொடுக்க, அதைப் பெற்றுக் கொண்ட பரதரும் தனது நூறு புத்திரர்களையும், பிரம்மன் அனுப்பிய சில தேவலோகத்துக் கந்தர்வர்களையும் வைத்து உலகின் முதல் நாடகத்தை அரங்கேற்றுகிறார். அதன் பார்வையாளர்களாகத் தேவர்களும், அசுரர்களும் மனிதர்களும் அரங்கில் கூடி யிருக்கின்றனர்.
நாடகத்தின் போக்கு தேவர்களுக்கு சாதகமாக இருக்கவே அசுரர்கள் கோபம் கொண்டு நடிகர்களின் பேச்சு, உடல் இயக்கம் முதலியவற்றைத் தங்களது மாய சக்தியால் செயலிழக்கச் செய்து நாடகத்தைத் தொடர முடியாமல் செய்து விடுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த தேவர்கள் அசுரர்களைத் தாக்க, நாடகம் பாதியில் நின்று போய்க் கலகத்தில் முடிகிறது. இந்த சமயத்தில், நாட்டிய சாஸ்திரத்தைப் பரதரிடம் கொடுத்த பிரம்மன் தலையிட்டு, அசுரர்களை அழைத்துப் பேசி, நாடகத்தின் மேன்மைகளைப் பிரசங்கம் செய்து, நாடகத்தைத் தொடர்ந்து நடத்த விடுமாறு அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
இந்தக் கதையைத் தனது ‘உலக அரங்க தினச் செய்தி’யில்(2002) மேற்கோள் காட்டும் கிரீஷ் கர்னார்ட், தொடர்ந்து இவ்வாறு எழுதுகிறார். “அதற்கப்புறம் அந்த நாடகம் தொடர்ந்து நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், நாடகாசிரியன், நடிகன், பார்வையாளன் ஆகிய மூவரும் இடைவெளியற்ற ஒரு தொடர்ச்சியாய் ஒன்றிணைந்து உருவாக்கும் ஒரு நாடகத்தில் இவற்றில் எந்த ஒன்று ஸ்திரத் தன்மை இழந்து வெடிக்கிற போதும் அது அந்த நாடகத்தின் போக்கையே மாற்றி எழுதி விடுகிறது. இந்த அதிசயம் வேறு எந்த ஊடகத்திலும் சாத்தியம் இல்லை."
உடுக்கையிலிருந்து ஓசையும், ஓசையிலிருந்து இசையும், இசையிலிருந்து நாட்டியமும், நாட்டியத்திலிருந்து நாடகமும் பிறந்ததாய்ச் சொல்லும் சுவையான பழந்தமிழ்ப் பாடல் ஒன்று இருக்கிறது. அப்படியானால், அடுத்த கட்டமாக நாடகத்திலிருந்து என்ன பிறக்கும்? பரதர் நிகழ்த்திய முதல் நாடகத்தில் நேர்ந்தது போல் கலகமும் பிறக்கலாம். அல்லது, சூடானின் கலகப் பிரதேசங்களில் நிகழ்த்தப் பட்ட நவீன நாடகங்களில் நேர்ந்த மாதிரித் தீர்வுகளும் பிறக்கலாம். (அவை தற்காலிகமானவயாக இருந்தாலும் கூட). கலகம் இன்றித் தீர்வுகள் இல்லை. கேள்விகள் இன்றிக் கலகம் இல்லை. கேள்வியிலிருந்தே கலகம் பிறக்கிறது. கலகத்திலிருந்தே தீர்வு பிறக்கிறது. அந்த அளவில். கேள்வி, கலகம், தீர்வு அனைத்துமே ஏதோவொரு விதத்தில் எதிர்வினைகளே. இந்த எதிர் வினைகள் தான் அரங்கத்தை, எத்தனை சோதனைகளுக்கிடையேயும், எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.


மார்ச் 27. உலக அரங்காற்று தினம்
அ.ராமசாமி.

இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள் சர்வதேச அரங்காற்று நிறுவனம்(International Theatre Institute) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 - ஆம் தேதியை  உலக அரங்காற்று தினமாக (world Theatre day ) கொண்டாடி வருகிறது. 1961 இல் சர்வதேச அரங்காற்று நிறுவனத்தின் தலைவராக இருந்த ஆர்வி கிவிமா, பின்லாந்தில் செயல்பட்ட அந்நிறுவனத்தின் சார்பில் அரங்காற்று நிகழ்வுகளுக்காக ஒரு தினத்தைக்  கொண்டாட வேண்டும் என முன் மொழிந்தார். 1961 இல் கூடிய அரங்காற்றுக் கலைஞர்களின் மாநாட்டில் அந்த நாள் மார்ச் 27 என உறுதி செய்யப்பெற்றது. கிவிமாவின் முன்மொழிதலை ஏற்றுக் கொண்ட ஸ்காண்டிநேவிய மையம் ஒவ்வோராண்டும் பெருமையோடு நடத்திக் கொண்டு வருகிறது. அந்த நிறுவனத்தோடு உலகத்தின் பல்வேறு மூளை முடுக்குகளில் செயல்படும் நாடகக்காரர்களும் இணைந்து கொண்டு அந்த நாளைக் கொண்டாடத் தவறுவதில்லை.
புதிய நாடகங்களை நிகழ்த்துதல், கருத்தரங்குகள்,  மாநாடுகளை நடத்துதல் என அரங்கியலாளர்கள் திட்டமிடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டிற்கான  அரங்கியல் செய்தியை அளிப்பதற்கு ஒரு அரங்கியலாளனைத்  தேர்வு செய்வது தான் அந்த நாளின் முக்கியத்துவம். தேர்வு செய்யும் பொறுப்பைத் தன்வசம் வைத்திருக்கும் சர்வதேச அரங்காற்று நிறுவனம் யாரைத் தேர்வு செய்கிறது என ஒவ்வொரு அரங்கியலாளனும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். தேர்வு செய்யப்பட்டவர் உலக சமாதானப் பண்பாட்டிற்கு அரங்கியல் ஆற்றவேண்டிய செய்தியை வழங்குவார்.
இந்த நாளை ஒவ்வொரு நாட்டிலுமுள்ள அரங்க விரும்பிகளும் நாடக நிகழ்வுகளின் தொடக்கமாக நினைக்கின்றனர். அதன் முனைப்பு காட்டுபவர்கள் பாரிஸ் நகரத்தினர். இப்போது ஏறத்தாழ 100 கிளைகளைக் கொண்டிருக்கும் சர்வதேச அரங்காற்று நிறுவனங்கள் அந்நாளைக் கொண்டாடத் தவறுவதில்லை.முதல் ஆண்டிற்கான(1962) செய்தியை எழுதியவர் பிரெஞ்சு நாட்டின் ழான் காக்தோ. அந்த நிகழ்வு நடந்தது ஹெல்சிங்கியில். அவரைத் தொடர்ந்து அரங்காற்று தினச் செய்தியை வழங்கியோர் பட்டியல் வருமாறு:
1962 - ழான் காக்டௌ
1963 - ஆர்தர் மில்லர்
1964 லாரன்ஸ் ஒலிவர் -ழான் லூயிஸ் பர்ரோல்
1965 - யாரோ / யார் வேண்டுமானாலும்
1966 _ ரெனெ மாஹெ ( யுனெஸ்கோவின் இயக்குநர்)
1967 - ஹெலன் வெய்கல்
1968 - மிகுயெல் ஏஞ்சல் ஆஸ்ட்ரியஸ்
1969 - பீட்டர் புரூக்
1970 - டி. சாஸ்டகோவிச்
1971- பாப்லோ நெருடா
1972 - மவுரிஷ் பிஜார்ட்
1973- லூசினோ விஸ்கோண்டி
1974 - ரிச்சர்ட் பர்டன்
1975 - எலைன் ஸ்டீவர்ட்
1976- யூஜின் அயனெஸ்கோ
1977 - ரடு பெலிகன்
1978 - தேசியச் செய்தி
1979 -  தேசியச் செய்தி
1980 -  ஜனுச் வார்மின்ஸ்கி
1981 - தேசியச் செய்தி
1982- லார்ஸ் அப்மல்ம்போர்க்
1983- அமடோவ் மக்தர் ம்பொவ் (யுனெஸ்கோ இயக்குநர்)
1984 - மிகைல் ட்சரெவ்
1985 - அந்த்ரெ லூயிஸ் பெரினெட்டி
1986 - வொலெ ஷொயுங்க
1987- அண்டொனியொ களா.  Antonio GALA
1988- பீட்டர் புருக்
1989 - மார்டின் எஸ்லின்
1990 - கிரில் லவ்ரோவ்
1991 - பெடரிக்கோ மேயர்  (யுனெஸ்கோ இயக்குநர்)
1992 - ஜார்ஜ் லவெல்லி - ஆர்த்ரோ உஸ்லர் பெய்ட்ரி
1993 -எட்வர்ட் ஆல்பி
1994- வல்லெவ் ஹவெல்
1995 - ஹம்பெர்டோ ஒர்ஸ்னி
1996 - ஷாடல்லா வான்னொஸ்
1997- ஜ்யெங் ஓக் கிம்
1998 - சர்வதேச அவைக்காற்று நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டின் செய்தி
1999 -விக்டிஸ் ஃபின்பகடடோட்டிர்
2000 - மைக்கேல் ட்ரெம்ப்ளே
2001 - லகோவோஸ் கம்பனெல்லிஸ்
2002 - க்ரிஷ் கர்னாட்
2003 - டன்க்ரெட் டோர்ஷ்ட்
2004- ஃபாதியா எல் அஸ்ஸெல்
2005- அரிய்னெ ம்னொச்கினெ
2006 - விக்டர் ஹ்யுகோ ரஸ்கொன் பண்டா
2007 - சுல்தான் பின் மொகம்மது அல் ஹாஸிமி
2008 - ராபர் லெபச்
2009 - அகஸ்டோ போவெல்
2010 - ஜுடி டென்ச்
2011 - ஜெசிகா எ. காஹ்வா
2012 ஜான் மால்கோவிச்
2013 டெரியோ போ
2014 -ப்ரெட் பெய்லி.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் அரங்கியல் ஆளுமையால் எழுதப்படும் நாடகதினச் செய்தி 20க்க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி ஆக்கம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னால் வாசிக்கப்படும். வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் என அனைத்து ஊடகங்கள் மூலம் பரப்படும் அரங்கியல் செய்தியை அனைத்துக் கண்டத்து மக்களும் கேட்டுப் பரிமாறிக் கொள்ளும்போது அன்பையும் அமைதியையும் பரிமாற்றம் செய்யும் உணர்வு நிலையை உருவாக்குவார்கள். இந்த ஆண்டுச் செய்தியையார் வழங்கப்போகிறார்கள்.?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக