ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

உலக ஆட்டிசம் தினம் ஏப்ரல் 02 World Autism Awareness Day


உலக ஆட்டிசம் தினம் ஏப்ரல் 02 World Autism Awareness Day 

உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் ( World Autism Awareness Day ); ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. மதியிறுக்கம் என்பது, பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோயாகும். இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதியிறுக்கம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும், எந்த முறையில் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

2017 கருபொருள்

"சுய அதிகாரம் மற்றும் சுய தீர்மானம் நோக்கி"


அன்புக்கு அடங்கும் ஆட்டிசம்: இன்று உலக ஆட்டிசம் தினம் ஏப்ரல் 02.

உங்கள் குழந்தையைக் கூப்பிட்டால் திரும்பிப் பார்க்க வில்லையா? உங்கள் முகம் பார்த்துச் சிரிக்கவில்லையா? மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடவில்லையா?மழலைச் சொல் பேசவில்லையா?அல்லது ஏதேனும் சில வார்த்தைகளை அர்த்தமில்லாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் 'ஆம்' என்று பதில் சொன்னால் உங்கள் குழந்தைக்கு 'ஆட்டிசம்' பாதிப்பு இருக்க அதிகவாய்ப்பு இருக்கிறது.
ஆட்டிசம் என்றால் என்ன?
ஆட்டிசம் என்பது குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி குறைவதால் ஏற்படுகிற நோய் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும் மூளைவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலில் தான் ஆட்டிசக் குழந்தைகளைச் சேர்த்திருக்கிறது. ஆனால், ஈஈஜி, சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் எனப் பல பரிசோதனைகளில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளையைப் பரிசோதித்த போது அவர்களுக்கு மூளை பாதிப்பு இல்லை என்கிற உண்மை தெரியவந்தது. இது குழந்தைகளைப் பாதிக்கின்ற மூளை நரம்பு வளர்ச்சி சார்ந்த கோளாறுகளில் ஒன்று. இது பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைளைத்தான் அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் தற்போது ஒரு லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரப்படி ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளது. இது குழந்தையின் மொழித் திறன், பேச்சுத்திறன், சமூகத் திறன், ஒருங்கிணைப்புத்திறன் போன்ற நரம்பு சார்ந்த செயல்பாடுகளை வெகுவாக பாதிக்கிறது. இவர்களுக்கு அறிவு இருக்கும்.ஆனால் அந்த அறிவைப் பயன்படுத்தவோ, வெளிப்படுத்தவோ வழிதெரியாது. இவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை இவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அந்தப்புரிதலை நமக்குப் புரியவைப்பதற்கான மொழிதான் தெரியாது.
ஏன் வருகிறது?
ஆட்டிசம் குறைபாடு ஒரு பரம்பரைக் கோளாறு. குழந்தையின் மரபணுவில் தோன்றும் பிழை காரணமாக இது ஏற்படுகிறது. நெருங்கிய உறவில் திருமணமான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மிகவும் தாமதமான திருமணம், தாமதமான குழந்தைப் பேறு, நீரிழிவு நோய் போன்றவை பெண்ணிடம் காணப்பட்டால் அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிக்கு ருபெல்லா வைரஸ் தாக்கினால், தைராய்டு பிரச்னை இருந்தால் அல்லது போலிக் அமிலச்சத்து குறைவாக இருந்தால் குழந்தைக்கு இந்தக் குறைபாடு வரலாம். கர்ப்பிணியிடம் காணப்படும் மனஅழுத்தம், மது அருந்தும் பழக்கம், புகைபிடித்தல், வலிப்பு நோய் மற்றும் மன நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிடுதல் போன்ற காரணிகள் இந்தக் குறைபாடு ஏற்படுவதை ஊக்குவிக்கின்றன. குழந்தையின் வயிற்றில் ஏற்படுகிற வளர்சிதை மாற்றப் பிரச்சினைகளும் இந்தக் குறைபாட்டை ஏற்படுத்தலாம் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
அறிகுறிகள் என்ன?
தாய் பாலூட்டும் போது தாயின் கண்களைப் பார்க்காது. ஆறு மாதம் ஆனால் கூட தாயின் முகம் பார்த்துச் சிரிக்காது. ஒன்பது மாதம் கடந்த பிறகும் ஒலி எழுப்பினால் அல்லது பெயரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காது. கண்ணில்படும் பொருள்களை ஆர்வமாகப் பார்க்காது; அவற்றைத் தனக்கு விளையாடத் தரும்படி கேட்காது. டாட்டா காட்டுதல் போன்ற கை அசைப்பு இருக்காது. மழலைப் பேச்சு பேசாது. மற்ற குழந்தைகளுடன் விளையாட முயற்சிக்காது. குழந்தையின் வளர்ச்சிப்படிகளில் தாமதம் ஏற்படுவதும்உண்டு. மேற்சொன்ன அறிகுறிகள் தெரிந்தால் போகப் போகச் சரியாகிவிடும் என்று பெற்றோர்கள் எண்ணிவிடக்கூடாது. அதே வேளையில் இவற்றில் ஒருசில அறி குறிகளை மட்டும் வைத்துக் கொண்டு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளது என்றும் கணித்துவிடக்கூடாது. பல அறிகுறிகள் இருந்து குழந்தையின் இயல்பான திறமைகள் பாதிக்கப்படுகின்றன என்றால் அப்போது குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆட்டிசம் உள்ள குழந்தைக்கு மூன்று வயதுக்கு முன்னரே மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சைகளை மேற்கொண்டால் அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகம்.
என்ன சிகிச்சை?
ஆட்டிசத்துக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமிலை. அன்பு ஒன்றே மருந்து. இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போது தான் நம்மை நெருங்கி வருவார்கள். அதனால் இவர்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும். பூங்கா, கோவில், கடற்கரை, பொருட்காட்சி என்று பல இடங்களுக்கு இவர்களை அழைத்துச் செல்லவேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பல் தேய்த்தல், குளித்தல், சாப்பாடு, தூக்கம் என அன்றாடப் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தபயிற்சி தர வேண்டும். குழந்தைக்குப் புரிகிற விதமாக நிறையப் பேச வேண்டும். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஸ்கேட்டிங் போன்ற பயிற்சிகள் தரப்பட வேண்டும். இப்பயிற்சிகள் அவர்களின் உடல்திறனை அதிகப்படுத்துவது மட்டுமன்றி, தன்னுடைய வேலைகளைத் தானே சுயமாகச் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கையைத் தரும். உளவியல் சார்ந்த பயிற்சிகள், கல்விக்கான பயிற்சிகள், அறிவுத்திறன் பயிற்சிகள் என்று பலவற்றை முறைப்படி தர வேண்டும். இந்தக் குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர், லேப்டாப், அலைபேசி, டிவி போன்ற எலெக்ட்ரானிக் கருவிகளில் ஈர்ப்பு அதிகமாக இருக்கும் ஆனால், இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு இவர்களைப் பெரிதும் பாதிக்கும். எனவே கவனமாக இதைத் தவிர்க்கவேண்டும்.
- டாக்டர்.கு.கணேசன்.தினமலர்.


ஏப்ரல்-2 உலக ஆட்டிசம்(Autism) தினமாக உலக முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை முடக்கு நோயே ஆட்டிசம்(Autism) என்று அழைக்கப்படுகிறது.
மத்திய அரசு, மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலில்தான் இவர்களைச் சேர்த்திருக்கிறது. ஆனால், எம்.ஆர்.ஐ, சி.டி.ஸ்கேன், இ.சி.ஜி.எனப் பல்வேறு சோதனைகளில், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளையைப் பரிசோதித்துப் பார்த்தபோது, இது மூளைபாதிப்பு அல்ல என்பது தெரியவந்துள்ளது.
இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளைவிட நான்கு மடங்கு அதிகமாக ஆண் குழந்தைகளைத் தாக்குகிறது இந்த ஆட்டிசம்.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட அநேகமான குழந்தைகளைப் பார்த்தால் தங்களைப் பராமரிப்பவர்களைவிட தங்களைச் சுற்றி இருக்கும் சடப்பொருட்கள் மீதே பாசமாக இருப்பார்கள். இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலும் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2003-ஆம் ஆண்டு ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக இருந்தது. இன்று ஒன்றரை கோடியாக அதிகரித்துள்ளது.
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்த 6 மாதத்தில் செய்ய வேண்டிய சிறிய செயல்களைக் கூட செய்யாமல் இருக்கும். அதாவது தாயின் முகத்தை அடையாளம் காணுதல், சிரித்தல், மழலையின் ஒலி எழாமல் இருப்பது, அருகில் நின்று கூப்பிட்டாலும் எந்த சலனமும் இல்லாமல் இருப்பது, பொம்மைகளோடு கூட விளையாட மறுத்தல், கைகளில் ஒரு தன்மை இல்லாமல் போவது இவை ஆட்டிசம் நோயின் அறிகுறிகள்.
ஆட்டிசம் ஒரு நோய் அல்ல; மனவளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு என்று கூறலாம். மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்புகொள்ள இயலாது செய்யும் ஒருகுறைபாடு.
தன்னைச் சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் கவலைப் படாமல், தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கிக் கொண்டு அதில் மூழ்கி கிடப்பார்கள்.
ஸ்பெக்ட்ரல்டிஸ் ஆர்டர்(spectral-order) என்று ஆங்கிலத்தில் இந்த நோய் அழைக்கப்படுகிறது. இந்த நோய் பாதித்த குழந்தைகள் மற்றவர்களுடன் உறவைப் பேணமுடியாது, மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாடுதல் போன்ற சாதாரண விஷயங்களில் கூட ஈடுபடமுடியாது. பொதுவாக ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு பேச்சு வருவதில் சிக்கல் ஏற்படும். சிலருக்கு நல்லமுறையில் பேச்சு வருவதும் உண்டு. ஆட்டிசம் பாதித்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று எந்த ஒரு வரையறையும் இருப்பதில்லை.
இந்நோய்க்கு என்ன காரணம் என்று இதுவரை மருத்துவ உலகம் உறுதியாக கண்டுபிடிக்கவில்லை. மேலும் இந்நோய்க்கு முறையான சிகிட்சை முறையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் இன்னும் 2 ஆண்டிற்குள் ஆட்டிசம் நோயை குணப்படுத்தும் சிகிட்சை முறை கண்டுபிடிக்கப்படும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றார்கள்.


68 குழந்தைகளில் 1 குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிப்பு

பிறக்கும் 68 குழந்தைகளில், ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறது என வி கேன் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஏப்ரல் 2-ம் தேதி கடை பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நீலாங்கரையில் உள்ள ஆட்டிசம் குழந்தைகள் படிக்கும் வி கேன் பள்ளி சார்பில் ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் மாநகராட்சி ரிப்பன் கட்டிடம், போலீஸ் டிஜிபி அலுவலக கட்டிடம், எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்ளிட்ட 23 கட்டிடங்கள் நீல நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. யூரோ பிக்ஸ் பள்ளியின் உதவியுடன் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பெரம்பூர், போரூர், தி.நகர், நொளம்பூர் ஆகிய இடங்களில் நடந்த விழிப்புணர்வு பேரணிகளில் மழலையர் வகுப்பில் பயிலும் குழந்தைகள் கலந்துகொண்டனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக வி கேன் அறக்கட்டளை நிறுவனர் கீதா ஸ்ரீகாந்த், வி கேன் பள்ளியின் ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட் டாக்டர் பா.சுகுமார் ஆகியோர் கூறியதாவது:
ஆட்டிசம் ஒரு நோய் இல்லை. குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு. மரபணு கோளாறு, கர்ப்பக்கால நோய் தொற்று, குறைமாத பிரசவம் போன்ற வற்றால் ஆட்டிசம் குறைபாடுடன் குழந்தைகள் பிறக்கிறது. இந்த குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பேசுவதிலும், பழகுவதிலும், ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதிலும் பிரச்சினை இருக்கும். இந்த குறைபாட்டை ஒன்றரை வயதில் கண்டுபிடித்துவிட்டால், அந்த குழந்தைகளின் பிரச்சினைகளை சரிசெய்து விடலாம்.
ஒரு கோடி குழந்தைகள் பாதிப்பு:
உலகம் முழுவதும் சுமார் 1 கோடி குழந்தைகள் ஆட்டிசம் குறை பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 198 குழந்தைகளில், ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 68 குழந்தைகளில், ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றது. ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந் தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆட்டிசம் பாதிப்புடன் குழந்தை பிறப்பதை தடுக்கவும், ஆட்டிசம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதி ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.


இன்று ஏப்ரல் 2ம் திகதி சர்வதேச ஆட்டிசம் (மதியிறுக்கம் - Autism) விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகின் பொருளாதார வளங்களாலும், ஆற்றலாலும் நன்கு வளர்ச்சி அடைந்த நாடுகளாக கருதப்படுபவற்றில் அமெரிக்காவில் 166 பேருக்கு ஒருவருக்கும், சுவிற்சர்லாந்தில் 100 பேரில் ஒருவருக்கும் இந்த ஆட்டிசம் குறைபாடு காணப்படுகிறது. அப்படியாயின் நீங்கள் வசிக்கும் நாடுகளின் நிலை என்ன? ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய புள்ளிவிபரத்தை அறிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறீர்களா?
இன்றைய ஆட்டிசம் தினத்தை யொட்டிய சிறப்பு பதிவு இது.
ஆட்டிசம்' குறைபாடுகள் பற்றி பொதுவாக நிலவும் தவறான கருத்துக்களை நீக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட்டு வரும் wecanindia.org எனும் சமூக அமைப்பின் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட இக்கட்டுரை அவர்களுக்கான நன்றிகளுடன் இங்கு மீள்பிரசுரிக்கப்படுகிறது. - 4தமிழ்மீடியா குழுமம்
'ஆட்டிசம்' என்பது என்ன? அது ஒரு நோய் அல்ல; மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு - Development disability! மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு பேச்சு மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு. பிறந்த மூன்று வருடங்களுக்குள் ஒரு குழந்தையிடம் தென்படத் துவங்கும் 'ஆட்டிசம்' என்ற இந்தக் குறைபாட்டிற்கு உடல்ரீதியான அறிகுறிகள் கிடையாது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் சுற்றி இருக்கும் எதைப் பற்றிய சிந்தனையுமே இல்லாது தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கிக் கொண்டு அதில் அமிழ்ந்து கிடப்பார்கள். இன்னதென்று வகைப்படுத்த இயலாது பல வித அசாதாரணமான பாதிப்புகளை உண்டாக்கும் 'ஆட்டிசம்' மருத்துவரீதியாக ஒரு Spectral Disorder என அழைக்கப்படுகிறது. தூய தமிழில் இது தற்புனைவு ஆழ்வு என குறிப்பிடப்படுகிறது.
ஆட்டிசத்தின் தன்மைகள் :
சமூக வாழ்வுக்கு தேவையான ஆற்றல்கள் இல்லாமை
இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள் சமவயது உடைய குழந்தைகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அதை மேலும் வளர்க்கும் வழிமுறைகளை அறியாதவர்களாக இருப்பார்கள். அதற்காக நல்ல உறவை உருவாக்கிக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை என்று கூறிவிட முடியாது; அதற்கான வழிமுறைகள் அவர்களுக்கு தெரியாது, அவ்வளவுதான்! சமூக உறவுகளை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல்கள் அவர்களுக்கு கற்றுத் தருவது முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பணி ஆகும்.
தொடர்புகொள்ளும் ஆற்றல்கள் இல்லாமை
'ஆட்டிச'த்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பு கொள்ளும் ஆற்றல்கள் இல்லாதவர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் பேசும் திறன் அற்றவர்கள். அப்படியே ஒருக்கால் பேசும்திறன் இருந்து மொழி ஆற்றலும் வாய்க்கப்பெற்றவர்கள் கூட அவற்றை திறம்பட கையாளும் வழி தெரியாதவர்களாகத்தான் இருப்பார்கள். மேலும் பேச்சு மற்றும் முகபாவங்கள் சைகைகள் மூலம் தங்கள் எண்ணங்களை உணர்த்துவதற்கோ, அல்லது மற்றவர்கள் உணர்த்துவதை புரிந்துகொள்ளவோ இயலாதவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
விளையாட்டுகளுக்கான திறனோ ஆர்வமோ இல்லாமை
சாதாரணமாக விளையாட்டின் மீது குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வமும் கற்பனைத் திறனும் 'ஆட்டிச’க் குழந்தைகளிடம் காணப்படுவதில்லை. தன்னை ஒரு மிருகமாகவோ, பறவையாகவோ பாவித்துக் கொண்டு அவற்றின் நடை,உடை பாவனைகளை விளையாட்டில் புகுத்தி மகிழும் (PRETEND PLAY) கற்பனைத்திறன் இல்லாதவர்கள் இவர்கள். புலனியக்க ஒருங்கிணைப்பில் உள்ள கோளாறினால் (Disorder of Sensory Integration) சிறிதும் சலிப்படையாமல் தொடர்ந்து ஒரே மாதிரியான விளையாட்டுகள், அங்க அசைவுகளில் இந்தக் குழந்தைகள் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகள் பொதுப்படையானவை, நபருக்கு நபர் மாறுபடக்கூடியவை. 'ஆட்டிச'த்தினால் பாதிக்கப்படும் ஒரு நபர் அந்தக்கோளாறு இருப்பதையே அறியாது தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பதுண்டு. இந்தக் குறைபாட்டினால் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறவர்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.
ஆடிசத்தினால் பாதிக்கப்படுபவர்கள் யார்?
இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி மக்களைப் பீடிக்கும் 'ஆட்டிசம்' பெண்களை விட ஆண்களையே பெரும்பாலும் தாக்குகிறது. குடும்ப வருமானம், வாழ்க்கைத்தரம், கல்வி என்ற எந்த பாகுபாடும் அதற்குக் கிடையாது. இன்று சுமார் 20 லட்சம் இந்தியர்கள் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 'Downs Syndrome’ என்ற மூளை வளர்ச்சி சம்பந்தப்பட்ட குறைபாட்டை விடவும் அது பரவலாகக் காணப்படுகிறது என்றாலும், பல துறைகளிலுள்ள படித்தவர்கள் கூட 'ஆட்டிசம்' பற்றியோ, அந்தக் குறைபாடுள்ள நபர்களை கையாளும் முறை பற்றியோ அறியாதவர்களாக இருக்கிறார்கள். அறிகுறிகளை கவனித்து முறையான பரிசோதனைகளுக்குப் பின் அதற்கான சிகிச்சை முறைகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்கு வழி செய்வது பற்றி யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.
ஆட்டிசத்தின் அறிகுறிகளைக் கண்டறிதல்
ஆரம்பக் கட்டத்திலேயே 'ஆட்டிசம்' இருப்பதை பரிசோதித்து கண்டறிதல் சிகிச்சைக்கும், மறுவாழ்வு திட்டங்களை மேற்கொள்வதற்கும் மிக அவசியமானது. மற்ற நோய்களைப் போல் படிப்படியாக ஆய்ந்து அறிய உதவும் முறையான பா¢சோதனைகள் மற்றும் உடல்ரீதயான அறிகுறிகள் 'ஆட்டிச'த்திற்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குழந்தை நடந்துகொள்ளும் விதத்தை வைத்து அதற்கு இருக்கும் அல்லது இல்லாத சில தன்மைகளை கவனித்துதான் ' ஆட்டிசம்' இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதோ சில உதாரணங்கள்:
நடத்தை ரீதியான அறிகுறிகள்
கண்ணோடு கண் நோக்காது பேசுதல், பழகுதல்
கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்க்காது இருத்தல்
ஒருவர் சொன்னதையே திரும்ப சொல்லுதல்
தாமதமாகப் பேசத் தொடங்குதல்
விளையாட்டில் நாட்டமின்றி இருத்தல்
முகபாவம், சைகை மூலம் எண்ணங்களை உணர்த்தவோ / உணரவோ அறியாதிருத்தல்
சமவயதுள்ள நபர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் அல்லது அந்த உறவை நீடிக்கச் செய்யும் வழிமுறைகள் அறியாதிருத்தல்
தீர்வு
எதனால் 'ஆட்டிசம்' ஏற்படுகிறது என்பது சரிவரத் தெரியவில்லை. தாய், தந்தையரின் பரம்பரையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருத்தல், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துகளின் குறைபாடு, 'செக்ரடின்' என்ற ஹார்மோன் குறைபாடு என பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் 'ஆட்டிசம்' ஒரு நோய் அல்ல என்பது மட்டும் உறுதி. எனவே அதற்கு மருந்து என்பது கிடையாது. ஆனால் ஆரம்பக்கட்டத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் முறையை முழுமையான பயிற்சிகள் மூலம் மாற்றி அமைத்து அவர்கள் வாழ்க்கையை முழுமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் செய்துகொள்ள உதவலாம்.
இதற்கான வழிமுறைகள் குறைபாடுகளின் தன்மையைப் பொறுத்தும், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பொறுத்தும் வேறுபடும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே இந்தக் குறைபாட்டைக் கவனித்து ஆவன செய்வது பெரிதும் உதவும் என்றாலும் அதற்காக தாமதமாகச் செய்தால் பலன் இருக்கப்போவதில்லை என்று அசட்டையாகவும் இருந்து விடவும் கூடாது. தாமதமாகவாவது செயல்படுவது, செயல்படாமலேயே இருப்பதைக் காட்டிலும் சிறந்ததல்லவா?
தகவல் மூலம் : http://wecanindia.org/tabout_wecan.html
சென்னை கோட்டுபுரத்தில் இயங்கும் இவர்களது அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு நீங்களும் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக