செவ்வாய், 10 ஏப்ரல், 2018

மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே பிறந்த தினம் ஏப்ரல் 11 , 1827.


மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே பிறந்த தினம் ஏப்ரல் 11 , 1827.

மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே ( மராத்தி: जोतीबा गोविंदराव फुले
ஆங்கிலம் : Mahatma Jyotirao Govindrao Phule )
இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதி . சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர்.
ஆங்கிலேயர் ஆட்சியை விரும்பியவர்களுள் இவரும் ஒருவர். 1857
சிப்பாய்க் கலகத்தை இவர் உயர் சாதி இந்துக்கள் உண்டாக்கிய கலகமாகவே பார்த்தார்.
1873 ஆம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் இணைந்து இவர் சத்ய சோதக் சமாஜம் (பொருள்: உண்மையைத் தேடுவோரின் சமூகம்) எனும் அமைப்பைத் துவங்கினார். ஆனால் இவரது மறைவுக்குப் பின் இந்த இயக்கம் காங்கிரசுடன் கரைந்தது.

முழுப் பெயர் ஜோதிபா கோவிந்த ராவ் புலே
பிறப்பு ஏப்ரல் 11 , 1827
கட்கன், சதாரா , மஹாராஸ்டிரா , இந்தியா .
இறப்பு நவம்பர் 28, 1890 (அகவை 63)
பூனே , மஹாராஸ்டிரா, இந்தியா
காலம் 19 ஆம் நூற்றாண்டு தத்துவம்
பகுதி இந்தியா
சிந்தனை மரபுகள் இந்திய தத்துவம்
முக்கிய ஆர்வங்கள் நன்னெறி , சமயம், மனிதநேயம்


வாழ்க்கை

அக்கால வழக்கப்படி இவர்தன் 13 ஆம் அகவையில் சாவித்ரிபாய் (9 அகவை) அவர்களுடன் 1840இல் திருமணம் நடந்தது. ஜோதிராவ் புலே அவர்கள் தனது துணைவி சாவித்ரிபாய் புலே அவர்களைச் சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஒரு பிராமண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.

பெண் உரிமை போராளி

மனுதர்மம் எல்லாப் பெண்களையும், சாதி வித்தியாசம் பாராமல் அடிமைகளாக (தாஸா) அல்லது சூத்திரர்களாக நடத்துகிறது. சூத்திராதி சூத்திரர்கள் என்ற தனது கணிப்பில் பெண்களையும் புலே இணைத்தார். 1842 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான அவரது முதல் பள்ளிக் கூடத்திற்கு சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை. குழந்தைகளைக் கருவிலேயே கலைக்க வேண்டிய நிலையிலோ அல்லது பிறந்த பின் அவற்றைக் கொல்ல வேண்டிய நிலையிலோ உள்ள விதவைப் பெண்களுக்கான இல்லத்தை 1863 ஆம் ஆண்டில் நிறுவினார். 1864 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாரஸ்வத் பிராமண விதவையின் மறுமணத்தில் முக்கியப் பங்கு புலேயினுடையது. 1882 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பெண் விடுதலை பற்றிய தவறான கருத்துக்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரையான, ஆண் பெண் பற்றிய ஒப்பீடு (ஸ்திரீ புருஷ்துலானா) என்பதை எதிர்த்து குரல் கொடுத்தவர் புலே மட்டுமே.


சமூக சீர்திருத்தத்தின் தந்தை ஜோதிபாபூலே...

புலே ஒரு முதல் சூத்திர அறிஞர். அவரே தன்னைப் பற்றி மதிப்பீடு செய்ய விரும்பியது போல பெண்பால் பற்றிய கேள்விகளை முதலில் ஆராய்ந்தவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. இந்தப் பிரச்சினையில் அடித்தளமான மனித நேயப் பார்வை கொண்டால் போதும் என்ற மனநிலையை இந்திய மறுமலர்ச்சியின் சமூக சீர்திருத்தவாதிகள் பலரும் கொண்டனர். அவர்களது அணுகுமுறை வரலாற்று நோக்கமும், தாராளமனப்பாங்கும் முற்போக்கும் கொண்டதாக இருந்தது. அவர்களது பிரச்சாரத்திலும், செயலிலும் மேல் ஜாதியினரின் வெறுப்பு மேலோட்டமாக வெளிப்பட்டது. ஆனால் தனது சமகாலத்தவரை விட புலே மிகவும் முற்போக்காக இருந்தார் எனத் தெரிகிறது.
மனுசாஸ்திரம் எல்லாப் பெண்களையும், ஜாதி வித்தியாசம் பாராமல் அடிமைகளாக (தாஸா) அல்லது சூத்திரர்களாக நடத்துகிறது. சூத்திராதி சூத்திரர்கள் என்ற தனது கணிப்பில் பெண்களையும் புலே இணைத்துள்ளார். 1842 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான அவரது முதல் பள்ளிக் கூடத்திற்கு சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை. குழந்தைகளைக் கருவிலேயே கலைக்க வேண்டிய நிலையிலோ அல்லது பிறந்த பின் அவற்றைக் கொல்ல வேண்டிய நிலையிலோ உள்ள விதவைப் பெண்களுக்கான இல்லத்தை 1863 ஆம் ஆண்டில் நிறுவினார்.
ஒரு பிராமண விதவையின் மகனை தனது மகனாக புலே தத்தெடுத்தார். 1864 ஆம் ஆண்டில் நடைபெற்ற சரஸ்வட் பிராமண விதவையின் மறுமணத்தில் முக்கிய பங்கு புலேயினுடையது. பிராமண சாஸ்திரத்தின் படி அக்காலத்தில் விதவைகள் தங்களது தலையை மொட்டையடித்துக் கொள்ள வேண்டும். மனித நேயமில்லாத இந்தப் பழக்கத்தை எதிர்த்து சவரத் தொழிலாளிகளின் வேலை நிறுத்தத்தை நடத்தினார், தாராபாய் ஷிண்டே..
1882 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பெண் விடுதலை பற்றிய தவறான கருத்துக்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரையான, ஆண் பெண் பற்றிய ஒப்பீடு (ஸ்திரீ புருஷ்துலானா) என்பதை எதிர்த்து குரல் கொடுத்தவர் புலே மட்டுமே.
பெண்களின் பிரச்சினையை பிராமண சூத்திராதி சூத்திரர்களின் பிரச்சினையாக புலே பார்க்கவில்லை. தனது சத்திய தர்மாபுஸ்தக் என்ற நூலில் எல்லா பெண்களும், ஆண்களும் ஒன்றே (சர்வ எகாண்டர் ஸ்திரீபுருஷ்) என்று பேசுகிறார். ஆண் – பெண் இருவருக்கும் பொதுவாக சமமான மனித உரிமைகள் தேவை என்று கூறும்போது, ஆண் – பெண் (ஸ்திரி – புருஷ்) என்று வேறுபாட்டினை காட்டும்படியான சொல்லைப் பயன்படுத்துகிறார். மனிதம் என்று பொதுவான வார்த்தையை உபயோகப்படுத்தவில்லை என்று கெய்ல் ஓம்வெட் சுட்டிக் காட்டுகிறார். இந்தியாவிலேயே இதுபோல் முதன் முதலாக செய்தவர் புலே மட்டுமே.
ஆண் வழிச் சமுதாயம் பற்றி புலே பேசவில்லை. ஆண் – பெண் ஏற்றத்தாழ்வு நிலை பற்றியும் கருத்துக் கூறவில்லை. ஆனால், பிராமணிய சமூக வாழ்நிலையில் இருந்த பெண்களின் நிலையோடு ஒப்பிட்டு கருத்துக்கள் கூறியுள்ளார்.
பிராமணிய அதிகாரம் முடிவடையும் காலத்தில் ஆண் – பெண் சமத்துவம் ஏற்படும் என்று வெளிப்படையாகக் கூறாவிடினும் அந்தக் கருத்தினையே மறைமுகமாக கோடிட்டுள்ளார். சூத்திராதி சூத்திரர்களை அடிமைப்படுத்திய மிகப் பெரிய சூழ்ச்சியின் ஒரு பகுதியே பெண்களையும் அடிமைப்படுத்தியது என்பது இக்கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
வெவ்வேறு ஜாதியின் அடிப்படையில் பெண்களை இயக்க ரீதியில் திரட்டும் தற்போதைய போக்கினை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு தலித் பெண்ணைப் போலவே பிராமணப் பெண்ணும் ஒரு சூத்திராதி சூத்திரர் என்று எண்ணினார். பெண்ணடிமைக்குரிய அடிப்படைக் காரணமாக வர்ணாஸ்ரமல்லாது பால் வேறுபாட்டை மட்டுமே காரணமாகக் கொண்ட அவரது கருத்து மிகப் புதுமையாக இருந்தது.
குடும்பம் என்ற ஏற்பாடு சமூகத்தின் மைய நிலையாக இருந்தது போல சமூகத்தில் அடக்குமுறைக்கும் மையமாக இருந்தது என்றே புலே நம்பினார். அதன் அடிவேர்கள் ஜாதிய முறையில் கிடைக்கும். வர்ணாசிரமம் பற்றிய புலேயின் கருத்துக்கள் உண்டு. ஆனால் ஆண் வழிச் சமுதாய முறையினால் ஆண் – பெண் இருபாலரின் ஏற்றத் தாழ்வும், பெண்ணடிமையும் ஏற்பட்டன என்ற எண்ணங்கள் அவரிடம் இல்லை.
19 ஆம் நூற்றாண்டில் மிக அதிகமான சீர்திருத்தவாதிகள் பெண்களின் பிரச்சினைகளான விதவை திருமணம், குழந்தை திருமணத்தை தடை செய்தல், சதி என்ற பழக்கத்தை தடை செய்தல், பெண்களுக்கு கல்வி உரிமை முதலியவற்றை கையிலெடுத்துள்ளனர். புலேயும் அவர்களில் ஒருவர். இளம் மணப்பெண் திருமணம் செய்து போகும் குடும்பத்தின் ஒப்பந்த ஊழியராக செல்கிறாள் என்ற கருத்தினை நோக்கி தனது வாதத்தைக் கொண்டு சென்றார்.
ஒட்டுமொத்தமாக மாற்றம் செய்ய முடியாவினும் திருமணமும் குடும்ப வாழ்க்கை முறையும் சில மாற்றங்களுக்காவது உட்பட வேண்டும் என்று புலே நம்பினார். பரம்பரையாக பின்பற்றப்படும் திருமண சடங்குமுறைகளை மாற்றி அமைப்பது பற்றி சத்யதர்ம புஸ்தக் என்ற நூல் அலசுகிறது. புலேயைப் பின்பற்றி பல சமூக சீர்திருத்தவாதிகளும் திருமண சடங்குகளைப் பற்றியே சிந்தித்து செயல்பட்டனர் என்று கெய்ல் ஓம்வெல்ட் கூறுகிறார். தனது சுயமரியாதை இயக்கத்தின் ஒரு பகுதியாக சுயமரியாதைத் திருமணங்களாக மாற்றியவர் ஈ.வே.ரா. பெரியார். நாட்டின் சில பகுதிகளில், தேசிய இயக்கத்தின் ஒரு அம்சமாக காந்திய கொள்கையின் வழியில் கல்யாணங்கள் நடைபெற்றன.
பண்டித ரமாபாய் கிறித்தவத்திற்கு மதமாற்றம் செய்ததற்கு ஆதரவாக புலே இருந்தது பற்றி நாம் விளக்கியுள்ளோம். பால் சார்ந்த ஒரு அம்சத்தை அந்த ஆதரவில் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் பிராமண பரம்பரை வழக்கத்திலிருந்து விடுதலையாகும் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தார்.
ஒரு பெண் தனது அடிமைத்தளத்திலிருந்தும், பிராமண வழக்கங்களிலிருந்தும் வெளியில் வருவதற்கான தனது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதே அவருக்கு முக்கியம். பிராமணியத்தை எதிர்த்த சூத்திரர்களின் புரட்சியாகவே அதைக் கண்ணுற்றார். சூத்திராதி சூத்திரர்களின் போராட்டத்தின் அடிப்படையாக பெண்ணுரிமையை நிலை நாட்டுவதும் அமையும் என்பதே புலேயின் எண்ணமாக இருந்தது.

மராட்டிய இலக்கியத்தின் வரலாற்று ஆசிரியர்கள் பலரும் புலேயைப் பற்றி குறிப்பிடுவதில்லை. இது மிகவும் விநோதமாகவும் வருத்தமாகவும் உள்ளது. புலேயின் உரைநடை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பேச்சு வழக்கு மொழியை அவர் உபயோகம் செய்தது, அவரது கோர்வையான கருத்துரையாடல்களில் வந்து விழுந்துள்ள மிகவும் காட்டமான சொல்லாடல்கள், அவரது கவிதைகள் (18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தி இலக்கிய கவிஞர் துர்காராமின் தாக்கம் உள்ளவை) மராட்டிய சமூக இலக்கிய விமர்சனங்களுக்கு இட்டுச் சென்ற பக்தி இலக்கிய கவிதைகள் குறித்த அவரது ஆய்வு என்ற பல அம்சங்கள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இவற்றில் ஏதோ ஒரு சிலவற்றை குறிப்பிடுபவர்களும் பிராமணர்கள் புலேயின் கருத்துக்களில் கவலை கொள்ளவில்லை என்று எடுத்துக் காட்டவோ அல்லது மராட்டியத்தில் முதன் முதலில் அரசியல் விவாதம் செய்யும் நாடகமாகிய திருத்திய ரத்னைவை எழுதியவர் என்று சொல்வதற்கும் அவரது பெயரை உபயோகப்படுத்தியுள்ளார்.
பால் சந்திர நமதா என்பவர் புலேயின் புலமை பற்றி எழுதிய கட்டுரையைத் தவிர்த்து, அவரது எழுத்துக்ள் மீதான அக்கறை கொண்ட விமர்சனங்கள் இல்லை என்றே கூறலாம். மராட்டியத்தில் நிரப்பப்பட வேண்டிய ஒரு இடைவெளி இது. ஆனால் அந்த வேலையை நிறைவு செய்வதல்ல நமது நோக்கம். ஆனால் நமது கருத்துப் பதிவுகளை வரிசையாக இங்கே எடுத்துரைக்கலாம்.
உரையாடல் வடிவத்தில் எழுதுவது புலேக்கு மிகவும் பிடிக்கும். அவரது மிகப் பல நூல்களும், குறிப்பாக ஒரு நாடகமும், இந்த இலக்கிய வடிவத்தில் உள்ளன. ஒருபுறத்தில் மேற்கத்திய பழக்கமான கிரேக்க எழுத்துப் பரம்பரையையும் அவருக்குப் பிடிக்காவிடினும், உபநிடதங்களில் உள்ள வழக்கத்தையும் இது இணைப்பதாக இருந்தது. பாத்தாஸ் என்பவர்கள் இது போன்ற உரையாடல் வடிவத்தை பயன்படுத்தியுள்ளனர். 1909 ஆம் ஆண்டில் வெளியான காந்தியின் இந்து சுயராஜ்ஜியம் என்ற புத்தகம் இந்த உரையாடல் வடிவத்தில் வெளியான முதல் பெரிய இந்திய நூல் என்றாகிறது.
அவருடைய காலத்தில் அவரது மொழி உபயோகம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. அவருடைய மராட்டிய மொழியின் துள்ளலையும் முரட்டுத்தனத்தையும் அவ்வளவு எளிதாக மொழி மாற்றம் செய்ய முடியாது. நமது மொழி பெயர்ப்பாளர்கள் துணிவோடு இப்படிப்பட்ட ஒரு சோதனையை மேற்கொண்டுள்ளனர். இலக்கிய மராட்டியத்தை விடவும் பேச்சு மொழியையே அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். அடிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக இயக்கத்தை கட்டியதால் தனது எழுத்துக்களின் மூலம் முதன் முதலில் பொது ஜனத்தை அடைய முயன்றார். அவர்களுக்காக பேசும் போது அவர்களது பேசும் மொழியை உபயோகப்படுத்தினார் என எதிர்பார்க்கலாம். ஆனால் புலே இன்னும் கொஞ்சம் ஆழமாகவே சென்றார். பொது ஜனக் கல்விக்காக அவர் எழுதாத போது கூட வழமையான மராட்டிய மொழி போல் இல்லாமல் வித்தியாசமாக அவரது காலத்தில் தோற்றம் அளித்தது. உண்மையான மராட்டிய மொழி சமஸ்கிருத மொழி கலந்த பிராமணீய தாக்கம் கொண்டதாக இல்லாமல் பொது ஜனங்களின் மொழியாகவே இருக்க வேண்டும் என்று புலே அதற்கு மறு உருவம் கொடுப்பதில் கவனமாக இருந்தார்.
இந்த இடத்தில் மிக ஆர்வம் தரும் இன்னுமொரு கருத்தினை பதிவு செய்தல் வேண்டும். புலேயின் தனிப்பட்ட உதாரணம் தவிர மற்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு மராட்டிய நூல்களில் ஏழை முகமதிய விவசாயியோ அல்லது கைத்தொழிலாளியோ பேசப்படவில்லை. ஒவ்வொரு முறையும் இடம் கிடைக்கும் போதெல்லாம், ஏழை மராட்டிய முகமதியன் பேசிய வார்த்தைகள் அல்லது சொல்லாடல்களை புலே உபயோகப்படுத்தினார். ராணடேக்கு எழுதிய கடிதத்தின் கடைசி வரி இதற்கு நல்ல உதாரணமாகும்: எப்படியாவது இந்த முதியவனின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளவும் தீர்க்கதரிசி முகம்மது பற்றி ஒரு கவிதை எழுதினார். நம் காலத்தைச் சேர்ந்த மத அடிப்படைவாதிகள் உட்படுத்தும் கடுமையான தத்துவக் கொள்கைகளுக்கான பரீட்சையில் இந்தக் கவிதை வெற்றி பெறாது. ஆனால் முகம்மது இஸ்லாம் மதத்தில் தாராளமான முற்போக்கான சாரத்தைக் காட்டியவர் என்பது புலேயின் கருத்து.
தற்கால சமூக உண்மையை மொத்த ரூபத்தில் கண்டு உணரும்படியான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்று புலே முயன்றார். சமூக மாற்றத்தை உருவாக்க வல்லவர் எவரும் செய்வதைப் போலவே இறந்த காலம் மற்றும் நிகழ் காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். இரு ஜாதி சமூகக் கட்டமைப்பை தூக்கி எறிவதற்காக அதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள முயன்றார். பிராமணர்களைப் போல சமகாலத்தில் கிறிஸ்தவ மத சேவகர்கள் பழைமைவாதிகளாகவோ எதிர்ப்பாளர்களாகவோ இருக்கவில்லை என்று அவர் நினைத்தது ஒரு உதாரணம். மத சேவகர்கள் இன உணர்வோடும் காலனியாதிக்கத்திற்கு ஆதரவாகவும் எப்படியெல்லாம் எந்த காரணங்களுக்காக அப்படி இருந்தனர் என்பது பண்டித ராமபாய் எதிர்நோக்கிய பிரச்சினை. இதுபோன்ற கேள்வியை புலே எழுப்பவில்லை.
திருத்திய ரத்னாவில் சிலை வழிபாட்டிற்கு எதிரான கடுமையான வாதத்தைக் காணலாம். ஒரு கிறித்துவ மதசேவகரை சிலைகளை உடைப்பவராக, அதுவும் கிறித்துவ சிலைகளல்லாது இந்து சிலைகளை உடைப்பராக மாற்றியுள்ளார். பக்தி இயக்கத்தையும், அதிலிருந்த உருவ வழிபாட்டினையும் புலே பெரிது பண்ணவில்லை. சில நூல்களில் புலேயால் தாக்கப்பட்ட தியானேஷ்வர் உருவ வழிபாட்டினை எதிர்த்துக் கவிதைகள் எழுதியுள்ளார். மராட்டிய சூத்திராதி சூத்திரர்களின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமான பழக்கங்களை தாக்குவது போல் அவர் தனது வாதங்களை அமைக்கவில்லை. மத சேவகர்களின் செயல்பாட்டினை சரிவர முழுமையாகப் புரிந்து கொள்ளாததால் வந்த விளைவு. ஏகாதிபத்தியம் பற்றியும் காலனியாதிக்கம் பற்றியும் அவர் கொண்டிருந்த புரிதல் இத்தோடு தொடர்புடையது.
மிகவும் கவனமாக ஆராய வேண்டிய ஒரு கேள்வியும் உள்ளது. ஏகாதிபத்தியம் பற்றிய வாதங்கள் இன்றைய மகாராஷ்டிரத்தில் இல்லையென்றே சொல்லலாம். காரல் மார்க்ஸ் புரிந்து கொண்டது போல் இந்தியாவில் ஆங்கில ஆட்சியைப் பற்றி புலே ஓரளவு புரிந்திருந்தார். 1853 ஆம் ஆண்டில் மார்க்ஸ் இவ்வாறு எழுதினார், இந்தியாவில் இங்கிலாந்து இரண்டு வகையான சேவை செய்ய வேண்டியுள்ளது. ஒன்று அழிக்கும் பணி. அதாவது பழைய ஆசிய சமூக முறையை அழித்தொழிப்பது. மற்றொன்று ஆக்கும் பணி.
அதாவது இந்தியாவில் மேற்கத்திய சமுதாயத்திற்கான பொருளாதார அஸ்திவாரத்தை அமைப்பதுதான் ஆங்கிலேய ஆட்சியின் எதிர்கால விளைவாக இருக்கும் என மார்க்ஸ் எழுதினார். ஆனால் ஆங்கில ஆட்சியில் இந்தியாவின் எதிர்காலம் பற்றி புலே சிந்தித்தார். பிராமண சமூக அமைப்பை முற்றிலுமாக ஆங்கில ஆட்சி முறை அழிக்க முடியும் என்றால் அது வரவேற்கக் கூடியதாக இருக்கும் என அவர் கருதினார். புதிய சமத்துவ சமூகத்திற்குரிய நிர்வாக பொருளாதார ரீதியான அடித்தளத்தை ஆங்கில அரசாட்சி அமைத்து தரும் என்று நம்பினார். கட்டாயமாக அது நடந்தே தீரும் என்பதில் அவ்வளவு நிச்சயம் அவருக்கில்லை. ஆதலால் அவர் நம்பினார் என்ற சொல் உபயோகப்படுத்தப்படுகிறது. மக்களுடைய தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஆங்கில அரசின் செயல்பாடு எரிச்சலூட்டும் வகையில் மிகவும் காலம் தாழ்த்துவதாக இருந்தது பற்றிய கருத்தில் ஓரளவிற்கு அவரிடம் ஒரு இரட்டைத் தன்மை காணப்பட்டது. மார்க்ஸ் மற்றும் புலே இரண்டு வேறுபட்ட கோணத்திலிருந்து கண்டு கொண்ட அதனது அழிக்கும் சக்தி மிக முக்கியமானது. அதையே இருவரும் எதிர்பார்த்தனர். ஏகாதிபத்தியம் பற்றிய புலேயின் கருத்து சரித்திர கண்ணோட்டத்தில் அமைந்தது என்று வாதிடலாம்.
ஏகாதிபத்தியம் தர்க்கத்திற்குரியதாக புலே கருதவில்லை. ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் கீழ்மட்ட மக்களிடம் அன்பாக இல்லை என்றும் நினைக்கவில்லை. ஆங்கில சட்ட அமைப்பில் புலே நம்பிக்கை கொண்டிருந்தார். விவசாயிகளிடமும், தொழிலாளர்களிடமும் சுரண்டல் தன்மையைக் காட்டுவதிலும் அநியாயமாக நடப்பதிலும் கொஞ்சமும் ஆங்கில சட்டத்துறை குறைத்துக் கொள்ளவில்லை. அவரது காலத்திலேயே ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து நடந்த சூத்திராதி சூத்திரர்களின் கிளர்ச்சியில் அவருக்குள்ள அவநம்பிக்கை ஆங்கில அரசின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வத்தை காட்டுகிறது. இதற்கு ஒரு எடுத்துக் காட்டாக உமாஜிநாயக் தலைமையில் நடந்த கிளர்ச்சியைக் கூறலாம்.
பிராமண தேசியத்தின் உயர்ந்தோர் கூட்டத்தைப் பற்றி பற்றி கெய்ல் ஓம்வெட் கூறும் கருத்துக்கள் இதுபோல அமைந்துள்ளன. பி.டி. ராணடே இப்புத்தகத்தைப் பற்றிய தனது விமர்சனத்தில் ஒரு கேள்வியை எழுப்புகிறார், இது ஒரு மார்க்சிய கண்ணோட்டத்தின் படியான ஆய்வா? மார்க்சியம் புரிவதற்குரிய மூலமாகவும் அதுவே மிகச்சரியான கொள்கையாகவும், மனித சமூகத்தை புரிந்து கொள்ளவும், மாற்றவும் வல்லது என ஒம்வெட் எண்ணுவதால் இந்தக் கேள்வி மிகவும் சரியானது. இன்னும் ஆழமான ஒரு கேள்வியும் எழலாம். பிராமண உயர்ந்தோர் கூட்டம் எந்த வகையில் தேசியமாகும்? பிராமண உயர்ந்த அறிவு ஜீவிகள் என்ற வேறுபாட்டினை ஒருவர் ஏற்றுக் கொண்ட போதிலும், அதே பக்கத்தில் மற்ற வகுப்பினர்களும், உழைக்கும் மக்களும் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டியது அவசியமாகிறது. உதாரணமாக வாசுதேவ் பாதக் என்ற பிராமணன் ரொமோசிஸ் உடன் சேர்ந்து இயங்கியதை புலே பொருட்படுத்தவில்லை. அதன் விளைவாக புலேயும் அவரது தோழர்களும் சீடர்களும் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தைப் பற்றிய மிதமான கருத்துக்களைக் கொண்டனர். இறுதியாக தேசிய இயக்கத்தின் அடிப்படையை இழந்தனர்.
இதே போன்ற நிகழ்வினை இன்றும் நாம் காணலாம். இன்றைய நிலையில் இன்னும் மோசமான சூழ்நிலையாக உள்ளது. இன்றைய தேசிய அறிவு ஜீவிகள் தங்களது கொள்கைகளில் உலகமயமாகியும் உலகம் தழுவிய கண்ணோட்டம் கொண்டுள்ள சூழலில் வாழ்ந்து வருகின்றோம். வெளிறிய கண்கள் கொண்ட சிவந்த மக்கள் என்று பிராமணர்களைப் பற்றிய புலேயின் கருத்து இன்றும் உபயோகமாக உள்ளது. உள்ளூர் பிராமணர்கள் உலகலாவிய பிராமணர்களுடன் உறவாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சூத்திராதி சூத்திரர்களிடையே ஏகாதிபத்தியம் பற்றிய கவனம் குறைந்து கொண்டே வருகிறது. அறிவு ஜீவிகள் ஏகாதிபத்தியத்தை ஒரு பிரச்சினையாக கருதுவது இல்லை. உள்ளூர் பிராமணர்கள் வாஷிங்டன் பிராமணர்களின் விளையாட்டை விளையாடுகிறார்கள். ஆனால் உள்ளூர் பிராமணர்களுக்கும் பிறநாட்டு பிராமணர்களுக்கும் உறவு எதுவுமில்லை என்று நடித்துக் கொண்டே சூத்திராதி சூத்திரர்களும் இந்த விளையாட்டை ஒட்டியே செல்கின்றனர். சூத்திராதி சூத்திரர்களுக்காக பரிந்து பேசிய சமூக அரசியல் இயக்கங்கள் இவர்களை ஒன்று சேர்ப்பதற்காக வேலை செய்துள்ளனர். ஒரு புதிய கண்ணோட்டமும் கூடுதல் செரிவான கொள்கைப் பிடிப்பும், ஏகாதிபத்தியம் குறித்து எழுந்தால் மட்டுமே புலேயின் கருத்தோட்டம் உபயோகம் உள்ளதாகவும், மாற்றங்களுக்கு உதவுவதாகவும் அமையும் என்று பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
மராட்டிய சமுதாய இயக்கங்களுக்கும், ஒன்றுபட்ட இடதுசாரிகளுக்குமுள்ள உறவு பற்றியும் இதுபோலவே பேச வேண்டியுள்ளது. இடதுசாரிகள் தேவையில்லாதவர்கள் என்ற கருத்தை நிலை நிறுத்துவதற்காக புலேயையும் அம்பேத்காரையும் உபயோகப்படுத்துகிறார்கள். சரத் பட்டீல் தனது எழுத்துக்களில் மார்க்ஸ், புலே மற்றும் அம்பேத்காரை இணைத்துப் பேசுகிறார்.
நமது சமுதாயத்தில் உள்ள உண்மையான பிரச்சினை வலதுசாரிகளின் வெறித்தனமான குறுகிய நோக்கு காரணமல்ல. இடதுசாரிகளின் வளைந்த கொடுக்காத, மரபு பிறழாத தன்மையே முக்கிய காரணம் என்கிறார். ஏகாதிபத்தியம் பற்றி மிகவும் அரிதாகவே பேசுகிறார். மகாராஷ்டிரத்திலுள்ள இன்றைய சமூக அரசியல் குழுக்களின் நிலையும் இதுபோலவே உள்ளது என்பதும் உண்மை.
இந்த மாதிரியான அணுகுமுறை மிக முக்கியமான ஒரு கருத்தை நழுவவிடுகிறது. ஒரு அமைப்பை உருவாக்குபவரோடு எப்படி தொடர்புபடுத்துவது? இன்றைய பிரச்சினைகளோடு அந்த அமைப்பினைப் பற்றிய விளக்கம் செய்தல் வேண்டும். ஏகாதிபத்தியம் குறித்த புலேயின் மிதவாத கருத்துக்களை ஒதுக்காமல் புலேயின் பிற கருத்துக்களுக்கு உருப்படியாக விளக்கம் கூற முடியாது.

பிரச்சினையின் உண்மை இதுதான். சமுதாயத்தை அடிப்படையிலிருந்தே உருமாற்றம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற அத்துனை ஆற்றல்களுக்கும் உரியவர்கள் சூத்திராதி சூத்திரர்கள். அவர்களை எதிர்த்து நிற்பவர்கள் பிராமணர்கள். தேசியத் தலைவர்களை பிராமணர்கள் என்று பழிசொல்லும் தவறுகளும், அதுபோல கம்யூனிஸ்ட்டுகளை பிராமணக் கம்யூனிஸ்ட் என்று பெயரிடும் தவறுகளும் நிறுத்தப்படுவதற்கு இந்தக் கருத்தினை புரிந்து கொள்ள வேண்டும். எதிர்வரும் தடைகளை பார்க்காவிடில், எல்லா இயக்கங்களும் தேவையற்றவை என்ற நிலை உருவாகும். படைப்புத் திறன் கொண்டவர், முற்போக்குவாதி என்ற கண்ணோட்டத்தோடு புலேயின் நூல்கள் வாசிக்கப்பட வேண்டும்.

அமைப்புக்களை உருவாக்குபவர்கள் இவ்வாறே புரிந்து கொள்ளப்பட வேண்டும். அவரது கூடாரம் மிக பரந்து பட்டது. வேகம் கம்பீரமானது. அவரது காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளின் தன்மைகளின் படியே அதைக் கொள்கை ரீதியாகப் பார்த்தார். மதம், வர்ணாசிரமம், சடங்குகள், மொழி, இலக்கியம், ஆங்கிலேயே ஆட்சி பழங்கதைகள், ஆண் – பெண் சமத்துவம், விவசாயத்தில் விளைச்சலுக்குரிய பிரச்சினைகள். இந்தப் பட்டியல் இன்னும் அதிகரிக்கலாம். இவ்வளவு பெரிய பட்டியலை வெளியிட்ட இந்திய நபர் 19ஆம் நூற்றாண்டில் யாருமில்லை. அப்படியெனில் புலே ஒரு சமூக சீர்திருத்தவாதியா? இல்லை என்பதே இதற்குரிய பதில். பரந்த மனம் கொண்ட மனித தேசியவாதியாக மட்டும் இருந்தால் கூட சமூக சீர்திருத்தவாதியாக முடியும். ஆனால் புலே புரட்சியாளர். இந்திய சமுதாயத்தில் இருந்த வகுப்புப் பிரிவுகளை அடையாளம் கண்டு கொண்ட அறிஞர்களில் முக்கியமானவர். அவருக்கென்று முழுமை யான ஒரு அமைப்பு ரீதியான கருத்துக்களை கொண்டிருந் தார். துவை வர்னிக் என்ற இந்திய சமூக கட்டமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து, அதில் சூத்திராதி சூத்திரர்கள் சமூகப் புரட்சியை வழிநடத்தும் செயல் வல்லவர்கள் என்று கண்டார்.


ஓ, இறைவனே. உன்னுடைய உண்மையான மதத்தை எங்களுக்குக் கற்றுக் கொடு. அதன்படியே வாழ, நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஒருவர்தான் உயர்ந்தவர் மற்றவர்கள் ஒன்றுமில்லாதவர்கள் என்பதாக இருக்கும் மதத்தை, இந்த பூமியை விட்டே அகற்றிவிடு. அப்படியொரு மதத்தைப் பெருமையாகக் கருதும் போக்கையும் அகற்றிவிடு.
நண்பர்களே, இன்றைய காலகட்டத்திற்குக் கூட பொருத்தமாக இருக்கும், இக்கடிதம் எழுதப்பட்ட ஆண்டு என்ன தெரியுமா? 1855. நம்ப முடியவில்லைதானே? நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை.
இன்றைக்கு 160 ஆண்டுகளுக்கு முன், இக்கடிதத்தை எழுதியவர் ஒரு பெண். பெயர்
முக்தா பாய் . மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, தீண்டத் தகாத சமூகத்தைச் சார்ந்தவர்.
இதுபோன்று ஒரு கடிதத்தை எழுத, அதுவும் அக்காலத்தில் எழுத, எவ்வளவு துணிச்சல் தேவை.
இலட்சக் கணக்கான, பிற தாழ்த்தப் பட்ட, தீண்டத் தகாத வகுப்பினைச் சேர்ந்த மக்களுக்குக் கிடைக்காத, கிட்டாத அறிவும், தெளிவான பார்வையும், போராட்ட குணமும், முக்தா பாய்க்குக் கிடைக்கக் காரணம், அவர் படித்த பள்ளியும், அதனை நடத்தியவரும்தான்.
அவர்தான்
ஜோதிராவ் புலே.
ஜோதிராவ் புலே 1827 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் நாள், மகாராஷ்டிராவின், புனேயில் பிறந்தவர். இவரது தந்தை கோவிந்த ராவ்.
கோவிந்த ராவும் அவரது சகோதரர்களும் மலர் வியாபாரம் செய்து வந்தமையால், புலே என்னும் பெயர் அவர்களோடு ஒட்டிக் கொண்டது.
ஜோதிராவ் ஒரு வயதிலேயே தாயை இழந்தார். தொடக்கக் கல்வியை மட்டும் பயின்று, தந்தையின் கடைக்கு வேலைக்கு வந்து விட்டார். பதிமூன்று வயதிற்குள் திருமணமும் முடிந்து விட்டது.
ஜோதிராவின் உடல் கடையில் வேலை பார்த்தாலும், உள்ளமோ கல்வியைத் தேடி பூ போல் வாடியது.
ஜோதிராவின் கற்கும் ஆர்வத்தை உணர்ந்த, அவரது தந்தையின் நண்பர்கள் இருவர், உதவிட முன் வந்தனர்.
ஒருவர் முஸ்லிம், மற்றொருவர் கிறித்தவர்.
ஜோதிராவ் 1841 இல் புனேயில் உள்ள ஸ்காட்டிஸ் உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.
1847 இல் புலே படிப்பை முடித்தபோது, ஒரு திடமான முடிவில் இருந்தார்.
எக்காரணம் கொண்டும் அரசு வேலைக்குச் செல்லக் கூடாது.
சிறு வயது முதலே, மனிதர்களை மனிதர்களாக வாழ விடாத, சாதிய ஒடுக்கு முறைகளைக் கண்டும், அதனால் மனம் நொந்தும் வாழ்ந்தவர்தான் புலே.
சமூகத்தில் ஒரு பிரிவினர் உயர் நிலையிலும், மற்ற பிரிவினர் கீழ் நிலையிலும் இருப்பதற்கான சித்தாந்த விளக்கத்தை, நியாயத்தை, சாதியம் அளிப்பதை கண் கூடாகக் கண்டார்.
இந்நிலையினை எப்படி மாற்றுவது என்று சிந்தித்தார். செழிப்பான, பண பலம் மிக்க, படைபலம் மிக்க, உயர் சாதியினருடன், ஒன்றுமற்ற, நிராதரவான, தாழ்த்தப் பட்ட மக்களால் எப்படி போரிட முடியும். போரிடுவது என்றால், எந்த ஆயுதத்தைப் பயன் படுத்தி போரிடுவது என ஆழ்ந்து ஆராய்ந்தார்.
முடிவில் ஜோதிராவ் புலே, ஓர் வலிமைமிகு பேராயுதத்தைக் கண்டு பிடித்தார்.
கல்வி.
கல்வி இல்லை என்றால் அறிவு இல்லை. அறிவு இல்லை என்றால் ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இல்லை என்றால் ஊக்கம் இல்லை. ஊக்கம் இல்லை என்றால் ஆக்கம் இல்லை. எனவே கல்வி இன்மையே, இந்த சீர்கேட்டிற்குக் காரணம் என உணர்ந்தார்.
தான் செய்ய நினைத்ததை முதலில் தன் வீட்டில் இருந்தே தொடங்கினார். தன் மனைவி சாவித்திரி பாய்க்கு, தானே ஆசிரியராய் இருந்து கல்வி கற்பித்தார்.
1851 இல் பெண்களுக்கான ஒரு பள்ளியைத் தோற்றுவித்தார். கணவன், மனைவி இருவருமே பள்ளியை நடத்தினர். மேலும் இரு பள்ளிகளைத் தொடங்கினார்.
பள்ளிகள் பலவற்றைத் தொடர்ந்து தொடங்கிய போதிலும், புலேயின் மனம் அமைதியின்றித் தவித்துக் கொண்டே இருந்தது.
பெருமளவிலான பெண்கள் கல்வி அறிவு அற்றவர்களாக இருக்கும் பொழுது, ஒரு சில பள்ளிகளால், எந்தவொரு பெரிய மாற்றத்தினையும் கொண்டு வர இயலாது என்பதை உணர்ந்திருந்தார்.
படிப்பறிவற்றவர்கள் பெருகியிருப்பதற்கு யார் காரணம்? பள்ளிகளை அதிகரிப்பது எப்படி? எப்படி அப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடம் அளிப்பது? கேள்விகள் தொடர்ந்து எழுந்த போதிலும், விடைகளையும் கண்டு பிடித்தார். அரசாங்கத்தின் முன் வேண்டுகோளாய் வைத்தார்.
குறைந்தது 12 வயது வரையிலாவது, ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப் பட வேண்டும்.
தனியார் கல்வித் திட்டத்தை கடுமையாக எதிர்த்த புலே, நீண்ட காலத்திற்கு கல்வி அமைப்பு முழுவதும் அரசாங்கத்தின் வசமே இருக்க வேண்டும் என்றார்.
மக்கள் மொழியில் அவர்களுக்குப் பயன்படும் வகையில் பாடத் திட்டங்கள் இருக்க வேண்டும்.
எண், எழுத்து இரண்டையும் எழுத, படிக்க பழக்க வேண்டும். கணக்கு, பொது வரலாறு, பொது புவியியல், இலக்கணம் ஆகியவற்றில் தொடக்க நிலை அறிவினை அனைவரும் பெற்றாக வேண்டும்.
மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், ஒரு பிரிவினரை ஒடுக்கும் வழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. தீண்டாமை இன்னும் ஒழிந்தபாடில்லை.
கல்வி அறிவு அனைவருக்கும் கிடைத்து விடவில்லை. பெண்கள் இன்னும் சமத்துவத்தை எட்டிப் பிடிக்க வில்லை.
புலே இன்றும் தேவைப்படுகிறார்.
தாழ்த்தப் பட்டவர்கள் மட்டுமல்ல, ஒடுக்கப் பட்டோரின் விடுதலையை, இலட்சியமாகக் கொண்ட ஒவ்வொருவரும், ஏந்த வேண்டிய ஆயுதங்கள் என மூன்றினை, புலே குறிப்பிடுகிறார்.
அதிகாரம், கல்வி, அறிவியல்
நண்பர்களே, மூன்று ஆயுதங்களையும் ஏந்திப் போராடுவதே, ஜோதிராவ் புலே அவர்களுக்குச் செலுத்தப்படும் உண்மை அஞ்சலியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக