திங்கள், 18 ஜூன், 2018

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள்: ஜூன் 19, 1970.


அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்  ராகுல் காந்தி பிறந்த நாள்: ஜூன் 19, 1970.

ராகுல் காந்தி அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேருவின் குடும்பத்தில் பிறந்த சோனியா காந்தியின் மகன் ஆவார். இவர் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். செல்வாக்கு மிக்கக் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதிலேயே தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கி, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமாகவும், நம்பிக்கை நாயகனாகவும் பார்க்கப்படும் ராகுல் காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியல் பங்களிப்பை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜூன் 19, 1970
பிறப்பிடம்: புது தில்லி, இந்தியா
பணி: அரசியல்வாதி
நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

ராகுல் காந்தி அவர்கள், 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் நாள் இந்தியாவின் தலைநகரமாக விளங்கும் புது தில்லியில், இந்தியாவின் முன்னால் பிரதமராக மந்திரியான ராஜீவ்காந்திக்கும், தற்போதைய காங்கிரஸின் தலைவராக இருக்கும் சோனியா காந்திக்கும் மகனாகப் பிறந்தார். இவர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேருவின் கொள்ளு பேரனும், இந்திராகாந்தியின் பேரனும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய ஆரம்பக் கல்வியை, நியூ தில்லி மாடர்ன் பள்ளி மற்றும் டூன் பள்ளியில் தொடங்கிய அவருக்கு, இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணங்களுக்காக வீட்டிலிருந்தபடியே படிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகு, புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். 1989 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததும், ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். அமெரிக்காவில் ஃபிளோரிடா மாநிலத்தில் உள்ள ரோல்லின்ஸ் கல்லூரியில் சேர்க்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் படிப்பைத் தொடர்ந்த அவர், பி.ஏ இளங்கலைப் படிப்பில் பட்டம் பெற்றார். பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இணைந்த அவர், ட்ரினிட்டி கல்லூரியில் சேர்ந்து, எம்.ஃபில் பட்டம் பெற்றார்.
ஆரம்ப காலத்தில் மேற்கொண்ட பணிகள்
வெற்றிகரமாகத் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்து, லண்டனில் உள்ள மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம், மற்றும் கண்காணிப்புக் குழுமத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து வந்த அவர், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, இந்தியா திரும்பினார். 2002 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர், மும்பையில் பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறை நிறுவனத்தை நடத்திவந்தார்.


அரசியல் வாழ்க்கை

2003 ஆம் ஆண்டுக்கு பிறகு, அவ்வப்போது தனது தாயாருடன் பொது நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு வந்த ராஜீவ்காந்தி அவர்கள், அரசியலில் தன்னுடைய வருகையை மார்ச் 2004 ஆம் ஆண்டு அறிவித்தார். இதன் அடிப்படையில் 2004 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், தனது தந்தையின் தொகுதியான அமேதியில் (உத்திரப்பிரதேச மாநிலம்) போட்டியிடுவதாக அறிவித்தார். ராகுல்காந்தி, தன் குடும்பத்தின் திடமான ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று, யாருமே எதிர்பாராத வகையில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்தியப் பாராளுமன்ற உறுப்பினரானார்.
அவ்வப்போது காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும், ஊடகங்களும் இவரை வருங்கால காங்கிரஸ் கட்சித் தலைவர் என சித்தரித்தாலும், எதைப்பற்றியும் கவலைப் படாமல், தனது தொகுதி பிரச்சனைகளிலும், உத்திரப்பிரதேச அரசியலில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். இருந்தாலும், தேர்தல் காலக்கட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவர், 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதோடு மட்டுமல்லாமல், ‘இளைஞர் காங்கிரஸ் அமைப்பிற்கும்’, ‘இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பிற்கும்’ செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். மேலும், இளைஞர் காங்கிரசை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட அவர், 2008 ஆம் ஆண்டு ஒரு நேர்காணல் தேர்வை நடத்தி, இந்திய இளைஞர் காங்கிரசை வழிநடத்தும், ஆலோசகர்களை நியமிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டார்.
இந்திய தேசிய காங்கிரசின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று, அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர், 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட சுமார் 3,30,000 –க்கும் மேற்பட்டட வாக்குகளைப் பெற்று, மீண்டும் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.
ராகுல்காந்தியின் தனித்துவமான அரசியல் நடவடிக்கைகள்
அரசியலில் ஈடுபட்ட துவக்கத்தில், மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வாழும் இடங்களில் தங்கி, உணவருந்தி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், அவர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, விரைவில் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிவருகிறார்.
குறிப்பாக சொல்லப்போனால், தந்தை ராஜீவ்காந்தி இறப்பிற்குப் பிறகு, அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை இவரால்தான் நிரப்ப முடியும் என்று பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் நம்பும் அளவிற்கு செல்வாக்குப் பெற்ற தலைவராக உருவெடுத்திருக்கிறார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.


ராகுல் காந்தி...எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன?

1885ல் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சி. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் சுதந்திரத்துக்கு முந்தைய காங்கிரஸில் திரும்பிய திசையெங்கும் பெருந்தலைவர்களாக வலம் வந்தனர். நாடு விடுதலை அடைந்த பின்னர் நேரு மறைவைத் தொடர்ந்து காமராஜர் காங்கிரஸ் தலைவராக இருந்தார்.
காமராஜர் தாம் பிரதமர் நாற்காலியில் அமராமல் லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமராக்கினார். தமிழகத்தில் காமராஜர் தோல்வியை சந்திக்க தொடங்கிய காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை இந்திராவின் பிடிக்குள் போனது. காங்கிரஸ் பிளவுகளை சந்தித்த போதும் இந்திராவின் காங்கிரஸாகவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இருந்தது.

ராஜீவ் மரணமும் சோனியாவும்

இந்திரா படுகொலைக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் தலைதூக்க பார்த்தனர். ஆனால் இந்திராவின் மகன் ராஜீவ் வசமே காங்கிரஸ் போனது. ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் சோனியா காந்தி உடனே தலைமை ஏற்கவில்லை. ஆனாலும் மெல்ல மெல்ல மீண்டும் இந்திரா குடும்பத்தின் கைகளுக்கே காங்கிரஸ் சென்றது. கடந்த 19 ஆண்டுகாலமாக சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார்.
தலைவராகிறார் ராகுல்காந்தி
இந்நிலையில் தான் நேரு குடும்பத்து மற்றொரு வாரிசான ராகுல்காந்தி மிகப்பெரும் தலைவர்கள் வகித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை அடுத்த மாதத்தில் ஏற்க உள்ளார். அண்மையில் ராகுல்காந்தி அமெரிக்காவிற்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து 2019 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராக உள்ளதாக கூறினார்.
ராகுல் முன் இருக்கும் சவால்
ஆனால் நிஜத்தில் ராகுல் காந்திக்கு அது ஒரு சவாலான விஷயமே ஏனெனில் 18 மாதங்களுக்குள்ளாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஏற்ப கட்சியின் கட்டமைப்பை அவர் மாற்றியமைக்க வேண்டும். 2014ம் ஆண்டு முதலே காங்கிரஸ் கட்சி சரிவான பாதையில் தான் இருக்கிறது.
வாக்கை அதிகரிக்கலாம்
எனினும் காங்கிரஸ் கட்சி மீதான நம்பகத்தன்மையை கொண்டு வர ராகுலுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வாய்ப்பு அளித்திருக்கிறது. ஏனெனில் வளர்ச்சி மந்தநிலை, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு விவகாரம் உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டால் கட்சி வாக்கு விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மோடியை எதிர்க்கும் மாற்று சக்தி

மற்றொரு புறம் சோனியாகாந்தி 19 ஆண்டுகள் கட்சியை வழிநடத்திய போது சுமார் 10 ஆண்டுகள் அந்தக் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. எனவே தலைவராக பொறுப்பேற்கும் ராகுல்காந்திக்கு அந்த நெருக்கடியும் உள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் ராகுல்காந்தி அரசியலில் இருக்கிறார். 2013 முதல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி தன்னை எப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கான மாற்று சக்தி என்பதை மக்களுக்கு நிரூபிப்பார் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

சட்டசபை தேர்தல்கள்

தலைவராகும் ராகுலுக்கு உடனடியாக இருக்கும் அடுத்தடுத்த 2 தேர்வுகள் என்றால் அது இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் மற்றும் குஜராத் சட்டசபை தேர்தல். இது மட்டுமின்றி அடுத்த ஆண்டில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மாநிலங்களில் எல்லாம் பல ஆண்டுகளாகவே காங்கிரஸ், பாஜகவிற்கு நேரடி போட்டி உள்ளது. இதைத் தொடர்ந்து தான் 2019ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

ராகுலை ஏற்பார்களா?

இதே போன்று ராகுல்காந்தி ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் எந்த மாதிரியான அணுகுமுறையை கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஏனெனில் ராகுலின் நடவடிக்கையால் ஏற்கனவே சில மாநிலத்தில் கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.


ஐமுகூ பிரதமர் வேட்பாளரா?

குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரெல்லாம் ராகுலைவிட வயதிலும் அரசியல் அனுபவத்திலும் மூத்தவர்கள். சோனியா தலைமையின் கீழ் செயல்பட இவர்கள் தயங்கியதில்லை ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை இவர்கள் ஏற்பார்களா என்ற கேள்வியும் உள்ளது. இதற்கான பதில்கள் எல்லாமே ராகுல் தலைமையில் சந்திக்கப் போகும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளே இறுதி செய்யும் என்று தெரிகிறது.
தெளிவு வேண்டும்
பாஐகவின் மதவாத சிந்தனை அவர்களுக்கு நீண்ட நாட்கள் கை கொடுக்காது. அதே போன்று மோடி அரசை விமர்சிப்பது மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டு வாங்கித் தராது, எனவே அவர்களின் நிலைப்பாடு என்ன. மக்களுக்காக அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்ற தெளிவு இருந்தால் மட்டுமே மக்கள் காங்கிரஸ் கட்சிக்கான அங்கீகாரத்தை அளிப்பார்கள் என்பதே இப்போதைய அரசியல் நிலவரம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக