செவ்வாய், 21 மார்ச், 2017

நான்காம் சங்கம் நிறுவியதமிழ்க்காவலர் பொ.பாண்டித்துரையார் பிறந்த நாள் 21.3.1867

நான்காம் சங்கம் நிறுவியதமிழ்க்காவலர் பொ.பாண்டித்துரையார் பிறந்த நாள்
21.3.1867.
மதுரை மாநகரிலே அவரின் தமிழ்ச்சொற்பொழிவு கேட்க தமிழன்பர்கள் விருப்பப்பட்டனர்.  இராமநாதபுரத்திலிருந்து  மதுரைக்கு வந்து சேர்ந்த அவருக்கு திருக்குறள் நூலும், கம்பராமாயணம் நூலும் தேவைப்பட்டது. கூட்டம் நடத்துபவர்களிடம் கேட்டுப் பார்த்தார். எவரும் தம்மிடம் இல்லையென்றே கை விரித்தனர். பிறகு அருகில் உள்ள நூல் அங்காடியான புது.மண்டபத்தில் விலைக்கு வாங்கி உரையாற்றினார். ஆனாலும் அவரின்   உள்ளம் மகிழ்ச்சி கொள்ள வில்லை.

செந்தமிழ் பிறந்த மதுரையிலே தமிழுக்கு  தாழ்வு நிலை கண்டு மனம் வருந்தினார். அது முதல் பாண்டிய மன்னர்கள் எந்த மண்ணில் சங்கம் உருவாக்கினார்களோ அதே மண்ணில் தமிழுக்கென்று சங்கம் அமைக்க உறுதி பூண்டார். அவர் வேறு யாருமல்ல, நான்காம் தமிழ்ச்சங்கம் (1901) நிறுவிய தமிழ் வள்ளல் என்று போற்றப்படும் பாண்டித்துரை ஆவார்.

இவர் சேது நாட்டு அமைச்சர் பொன்னுச்சாமி தேவர்- முத்து வீராயி நாச்சியார் இணையருக்கு மூன்றாவது மகனாக 21.3.1867இல் பிறந்தார். இவரின் பெற்றோர் கடைச்சங்க காலத்தில் இறுதியாக ஆண்ட மன்னன் உக்கிரப் பெருவழுதிப் பாண்டியன்  நினைவாக அப்பெயரையே பாண்டித்துரைக்குச் சூட்டினர்.

சிறுவயதில் தனது தந்தையை இழந்த பாண்டித்துரை முகவர் சேசாத்திரி என்பவரின் பொறுப்பில் வளர்ந்தார். அழகர் ராசு என்ற புலவரிடம் தமிழறிவை வளர்த்துக் கொண்டவர் இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் துரை உயர்தர பள்ளியில் படித்து ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றார்.

தனது பதினெட்டாவது வயதில் பாலவனத்தம் சமீன்தாராகப் பொறுப்பேற்றார். இராமசாமிப் பிள்ளை என்பாரிடமிருந்து சைவ தத்துவத்தை கற்றுக் கொண்டார். மதுரை சோமசுந்தர கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்ட காரணத்தால் இராமநாதபுரத்தில் தாம் கட்டிய மாளிகைக்கு 'சோமசுந்தர விலாசம்' என்றும் பெயர் சூட்டினார். இசைத்தமிழ் மீது  மிகுந்த ஆர்வமுடையவராகி தமது இருபத்திரண்டாம் வயதில் இசைத்தமிழ் மாநாட்டை ஏழு நாட்கள் நடத்தி புகழும்  அடைந்தார்.

அந்நாளில் ஸ்காட்துரை என்ற பரங்கியர் திருக்குறளை எதுகை மோனையோடு திருத்தி வெளியிட்டார். "சுகாத்தியரால் திருத்தியும் பதுக்கியும்.பதிப்பிக்கப்பட்ட குறள்" என்ற தலைப்பில் வெளியான அந்த நூலை பாண்டித்துரையாரும் வாங்கிப் படித்தார். முதல் பாடலே முற்றும் கோணலாய் இருந்தது. அப்பாடலில்,

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

-என்பதற்குப் பதிலாக

"அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி உகர முதற்றே உலகு"

-என்று அச்சிடப்பட்டிருந்தது.

இதைக் கண்டு கோபமடைந்த பாண்டித்துரையார்  அந்த வெள்ளைப் பரங்கியரின் அறியாமைக்கும், செருக்குத்தனத்திற்கும் பாடம் புகட்ட விரும்பினார். அதன்படி மொத்தம் அச்சடித்த ஐநூறு பிரதிகளுள் விற்பனை செய்தது போக மீதமுள்ள முந்நூறு பிரதிகளை பணம் கொடுத்து வாங்கினார். பின்னர்  ஆழக்குழி தோண்டி அந்தப்பிரதிகள் அனைத்தையும் போட்டு எரிக்கும்படி ஆணையிட்டார்.

இதைப் பாராட்டி பண்டிதர் அ.முத்துசாமிப் பிள்ளை என்பவர் பாடல் தீட்டினார். அது வருமாறு:

"வள்ளுவர் அருளிய மாண்புறு குறளைத் திருத்திய
வெள்ளையன் செய்கையை அறிந்து
வருத்தமுற் றதனை வாங்கித் தீக்கிரை ஆக்கியல் வெள்ளையற்(கு) அரும்பொருள் கொடுத்துப்
போக்கிய புண்ணியன் புவிபுகழ் கண்ணியன்"

1900ஆம் ஆண்டு திருப்பாதிரிப் புலியூரில் உள்ள தவத்திரு ஞானியார் அடிகளை பாண்டித்துரை யார் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அன்று மாலை சொற்பொழிவு நிகழ்த்திய ஞானியார் அடிகள், "பாண்டித்துரையாரும், பிற செல்வந்தர்களும் சேர்ந்து மீண்டும் ஒரு தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஏற்கெனவே, தமிழுக்கு நேர்ந்த இழிநிலை குறித்து வருத்தம் கொண்டிருந்த பாண்டித்துரையாருக்கு ஞானியார் அடிகளின் பேச்சு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அவரின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கும் வகையில், உடனடியாக தனது சகோதரர் பாசுகர சேதுபதியிடம் கலந்து பேசி மதுரையில் 1901ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் நான்காவது தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவித்தார். முதல் தமிழ்ச் சங்கத்தை காய்சினவழுதிப் பாண்டியன் என்பாரும், இரண்டாம் தமிழ்ச் சங்கத்தை வெண்டேர்ச் செழியன் என்பாரும், மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை முடத்திருமாறன் என்ற உக்கிரப் பாண்டியன் என்பாரும் தோற்றுவித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மதுரை சேதுபதி உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற நான்காம் தமிழ்ச் சங்க தொடக்கவிழாவில், உ.வே.சாமிநாதைய்யர், ரா.இராகவைய்யங்கார், வை.மு.சடகோப ராமாநுஜாசாரியார், வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார், சோழவந்தான் அரசஞ் சண்முகனார், பின்னத்தூர் நாராயண சாமி ஐயர், திருமயிலை சண்முகம் பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

தமிழேடுகள், அச்சிடப்பட்ட தமிழ்நூல்கள் ஆகியவற்றை தேடியெடுத்து பிறருக்கு பயன்படுமாறு தொகுக்கப்பெறுவதும், வெளிவராத அரிய பல தமிழ் நூல்களை அச்சிலேற்றி பரவச் செய்வதும், வடமொழி, ஆங்கிலம் முதலிய பிறமொழிகளில் உள்ள அரிய நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதும், தமிழைப் பரப்பும் ஏடு தொடங்குவதும், தமிழறிஞர்கள் சொற்பொழிவு நிகழ்த்துவதும், நல்லறிஞர்களால்  எழுதப்பெற்ற நூல் உரையை வெளிக்கொண்டு வருவதும் நான்காம் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களாக அறிவிக்கப்பட்டன.

மேற்படி நோக்கங்களை நிறைவேற்றிட வித்துவான் கழகம், சேதுபதி செந்தமிழ்கலாசாலை, பாண்டியன் புத்தக சாலை, தமிழ்ச் சங்க முத்திரா சாலை ஆகிய நான்கும் தமிழ்ச் சங்கத்தை தாங்கி நிற்கும் தூண்களாக பாண்டித்துரையார்  அவர்களால் நிறுவப்பட்டன.

தமிழறிஞர்களுக்காக உருவாக்கப்பட்ட வித்துவான் கழகமானது கடல் கடந்து வாழும் தமிழறிஞர்களையும் தன்பால் ஈர்த்தது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அ.குமாரசுவாமிப்பிள்ளை, ஆ.முத்துத்தம்பி பிள்ளை, நா.கதிரைவேற்பிள்ளை,  கு.கதிரைவேற்பிள்ளை மற்றும் பிரெஞ்சு நாட்டு அறிஞர் பேராசிரியர் ஜீலியன்வில்சன், மலேசியா காரை.சிவசிதம்பரை அவர்களும் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின்உ றுப்பினர்களாக இருந்து  தமிழ்ச்சங்கம் அடுத்தக் கட்ட வளர்ச்சி  நோக்கிச் செல்வதற்கு தேவையான திட்டங்களை வகுத்துக் கொடுத்தனர்.

சேதுபதி செந்தமிழ் கலாசாலையில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம் ஆகிய மொழிப்பாடங்களோடு தேவாரமும், திருவாய்மொழியும் சேர்த்து கற்றுத் தரப்பட்டது. அம்மாணவர்களுக்கு பாண்டித்துரையார் தம் சொந்த செலவில் இலவய உணவும், உடையும் வழங்கியதோடு,  நன்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுப் பணமும், பதக்கங்களும் அளித்துச் சிறப்பித்தார்.

தமிழ்ச்சங்க முத்திராசாலையில் நிறுவப்பட்ட அச்சகத்தில் பல அரிய தமிழ்நூல்கள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் பதிப்புப் பணிக்கு பாண்டித்துரையார் உறுதுணையாக விளங்கினார். புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை, மணிமேகலை ஆகியவை பாண்டித்துரையாரின் பொருளுதவியோடு வெளிவந்தன.

ஞானாமிர்தம், சைவ மஞ்சரி, ஐந்திணையைம்பதுரை, இனியவை நாற்பதுரை,   விவசாய ரசாயன சாஸ்திர சுருக்கம், யாப்பு அணியிலக்கணங்கள், வைத்தியசார சங்கிரகம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் முத்திராசாலையில் அச்சடிக்கப்பட்டு வெளிவந்தன. தமிழர் மரபாகிய சித்த மருத்துவத்தை மீட்டெடுக்கும் வகையில்  பாண்டித்துரை அவர்களே வைத்தியசார சங்கிரகம் நூலுக்கு அணிந்துரை வழங்கியது போற்றத்தக்க ஒன்றாகும்.

1902ஆம்ஆண்டு டிசம்பர் 7ஆம் நாளில் இரா.இராகவையங்காரை ஆசிரியராகக் கொண்டு."செந்தமிழ் " இதழ் தொடங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து மு.இராகவையங்கார் இதழின் பொறுப்பாசிரியராக  நீண்டகாலம் பணியாற்றி வந்தார். அவ்விதழில் தமிழின் பூர்வ வரலாற்றை  எடுத்துரைக்கும் பல ஆய்வு கட்டுரைகள் நுண்மான் நுழைபுலம் மிக்க அறிஞர்களால் எழுதப்பட்டு வந்தன. முதல் இதழிலேயே "உயர்தனிச்செம்மொழி " எனும் தலைப்பில் சூரிய நாராயண சாஸ்திரி கட்டுரை எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.

அவருக்குப் பின் மறைமலையடிகளாரின் பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, இரா.இராகவையங்காரின் சேது நாடும் தமிழும், சோமசுந்தர பாரதியாரின் தமிழ் நூல்களும் தமிழகமும், சேரர் பேரூர், மு.இராகவையங்காரின் வேளிர் வரலாறு, சாசனத் தமிழ்க்கவி சரிதம், தமிழரும், ஆந்திரரும் ஆகிய கட்டுரைகள் செந்தமிழ் ஏட்டை அலங்கரித்தன.

பாண்டித்துரையார்.தோற்றுவித்த மதுரைத் தமிழ்ச்சங்கத்திலும் தொல்காப்பியரை பிராமணர் என்றும், வடமொழி உயர்ந்ததென்றும், ஆரிய நாகரிகமே சிறந்தது என்றும் வைதீக பிராமணப் புலவர்கள் பேசி வந்தனர். இக்கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த பாண்டித்துரையார் மறைமலையடிகள் மூலம் பதிலடி தர விரும்பினார்.

25.5.1905இல், "மதுரைத் தமிழ்ச்சங்க நான்காம் ஆண்டு விழாவும் -தமிழர் நாகரிகப் போராட்டக் கொடி ஏற்றமும்"   என்ற  தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் உரையாற்றிய மறைமலையடிகள் ஆரிய நாகரிகத்திற்கும், பிராமணர்களுக்கும் தமிழர் கடமை பட்டிருக்க வில்லை என்றும், ஆரியர்களால் தான் தமிழும், தமிழரும் பாழ்பட நேர்ந்தது என்பதை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டிப்  பிராமணர்களின் வாயடைத்தார். அப்போது அதைக் கேட்டு வெகுவாக இரசித்த பாண்டித்துரையார்  மறைமலையடிகளுக்குப் பாராட்டுரை வழங்கினார்.

1906இல்  வ.உ.சிதம்பரனார் பரங்கியருக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். அப்போது ஒரு இலட்சம் ருபாயை தனது பங்குத் தொகையாகப் பாண்டித்துரையார் வ.உ.சி.க்கு அளித்தார். இதன் மூலம் அவரின் தமிழினப் பற்றும், இந்திய விடுதலைப் பற்றும் ஒரு சேர வெளிப்படுவதை உணரலாம்.

தமிழுக்குத் தீங்கு நேரும் போதெல்லாம் பாண்டித்துரையார் குரல்கொடுக்கவும் தயங்க வில்லை. சென்னை பல்கலை.யில்  பாடப்புத்தகத்திலிருந்து தமிழ்ப்பாடத்தை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  இதனை தடுத்துநிறுத்துவதற்கு சூரிய நாராயண சாஸ்திரியும், பூரணலிங்கம் பிள்ளை அவர்களும் பாண்டித்துரையாரை நேரில் சந்தித்து உதவி வேண்டினர்.

உடனடியாக மதுரைத் தமிழ்ச்சங்கத்தைக் கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றி  தனது எதிர்ப்பைக்.காட்டினார் பாண்டித்துரையார். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் எதிர்ப்பினை புரிந்து கொண்ட சென்னைப் பல்கலை. தமிழை நீக்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தது.

ஆரியர் தமிழரை அழைத்த 'திராவிடர்' என்ற சொல்லுக்கு 'ஓடுதல்' என்றபொருளும் உண்டு என்பதை தாம் எழுதிய 'தமிழ்ப் பழஞ்சரிதம்' நூலில் பாண்டித்துரையார் குறிப்பிட்டார். இதனை தொடர் கட்டுரையாக தமது 'செந்தமிழ்' ஏட்டிலே எழுதினார். அது பின்வருமாறு:

"தமிழணங்கு ஆந்திரம், கன்னடம், முதலிய சேய்களைப் பிறப்பியாது தனியிளமை பெற்று விளங்கிய காலத்திலே, அந்நங்கை தனக்கு ஆடலரங்கமாகக் கொண்ட பிரதேசம் வடவேங்கடந் தென்குமரியாயிடை யன்று.வடவியந்தென்குமரியாயிடையே அவ்வாறிளமை பெற்றிருந்த தமிழ் பின்பு ஆரியர் படையெடுப்புகளால் அலைப்புண்டு, தன் ஆடலரங்கைச் சுருக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. அன்றியும் அவ்வந்நியரது.கூட்டுறவை வெறுத்து அத்தமிழ் நங்கையோடி யொளியுமிடங்கள் பலவற்றில், தான்பெற்ற சேய்களை அங்கங்கே விட்டுப் பிரியவும் நேர்ந்தது. இவ்வாறு தமிழணங்கு தம்மையஞ்சியோடி ஒளிவது கண்ட ஆரியர் அந்நங்கைக்குத் 'திராவிடம்' என்னுங் காரணப்பெயரை வழங்கலாயினர்.
(திராவிடம் என்னும் மொழிக்கு வடமொழியில் ஓடுதலையுடையதென்பது பொருள்).

தமிழ்ப்பணியே தம் வாழ்நாள் பணியாக மேற்கொண்டிருந்த பாண்டித்துரையார் ஒருநாள் தம் மாளிகையில் பலருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று மயக்கமுற்று கீழ விழுந்தார். அப்போது நினைவிழந்தவர் மறுபடியும் மீள வில்லை. அவர் 2.12.1911இல் தமிழ் மண்ணை விட்டு உயிர் நீத்தார். அப்போது அவருக்கு அகவை நாற்பத்தி நான்கு. அந்த அகவைக்குள் அவர் செய்த தமிழ்ப்பணிகள் நம்மை மலைக்க வைக்கிறது. மனம் சில்லிடவே செய்கிறது.

அந்நாளில் அவர் தமிழ்ச் சங்கத்தை தொடங்கிய போது , சங்கம் வைத்த பாண்டியருக்கு ஒப்ப இவரால் தமிழ்ச் சங்கத்தை செலுத்த இயலாது என்று பலரும் ஏகடியம் செய்தனர். அவற்றையெல்லாம் புறந்தள்ளி புகழ்க்கொடி நாட்டினார் பாண்டித்துரையார். 

இவற்றை தம்பாட்டுத் திறத்தால் பின்வருமாறு விளக்குகிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
"இனியுமோர் தமிழ்ச் சங்கம் காண்பேன் இருந்த முதலிடை கடைச் சங்கம் போலவே
எனச் சொன்ன பாண்டித் துரைத்தேவன் சொல்லை
இவ்வையம் அந்நாளில் நம்பவே இல்லை.
வியந்தது வையம் சென்றநாள் சிலவே விரிந்தது மதுரைத் தமிழ்ச்சங்க நிலவே
அயர்ந்த தமிழரின் ஆடலும் பாடலும் அறிவின் செயலும் மிளிர்ந்தன பலவே"

1921ஆம் ஆண்டு ஆம்பூர் உயர் நிலைப்பள்ளியில் பணியாற்றிய போது தமிழாசிரியர் தகுதி பெற மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தேர்வெழுதி தகுதி பெற்றேன். அப்போது எழுந்த தமிழ்வெறியினால் ஆங்கிலத்தை அறவே புறக்கணித்து தமிழராய்ச்சியில் ஆழ முழுகித் தமிழின் அடிமட்டத்தைக் கண்டதாக மொழிஞாயிறு பாவாணர் குறிப்பிடுவார்.
பாண்டித்துரையார் உருவாக்கிய தமிழ்ச்சங்கம் இல்லையெனில்  மொழி ஞாயிறு இல்லையென்பார் செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார்.

பாவணரும் தனது 'பாண்டித்துரை பதிகம்' பாடலின் மூலம் பாண்டித்துரையாரை போற்றி வணங்கத் தவறவில்லை. அவர் கூறியதையே இந்நாளில்  நாமும் கூறிடுவோம்.

"தென்மதுரைப்பாண்டியன் தெய்வத் தமிழ்வாழி 
நன்மதுரை நாலாஞ்சங் கம் வாழி -
சொன்மதுரப் பாலவ நத்தம் வேள் பாண்டித் துரைத்தேவன்
போலிமை யற்ற புகழ்!"

(பாண்டித்துரையாரின் திருவுருவச்சிலை  மதுரைத் தமிழ்ச்சங்கம் சாலையில்
நிறுவப்பட்டுள்ளது)

நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், மார்ச் 16-31, 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக