சனி, 12 ஆகஸ்ட், 2017

தேசிய நூலகர் தினம் - ஆகஸ்ட் 12


தேசிய நூலகர் தினம் - ஆகஸ்ட் 12.

இந்திய நூலகத் தந்தை' என போற்றப்படும்
டாக்டர். எஸ்.ஆர். ரங்கநாதன் பிறந்த தினமே
தேசிய நூலகர் தினமாக (National Librarians Day) கொண்டாடப்படுகிறது.
தமிழக அரசின் பொது நூலகத் துறை
மற்றும் ராஜாராம் மோகன்ராய் நூலக
அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும்
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நூலகர்
தினமாக அனுசரிக்கப்படுகிறது.
நூலகத்துக்கு சென்று படிக்கும்
பழக்கத்தை மேற்கொள்வதற்கான
விழிப்புணர்வு தினமாக இது
அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள
அனைத்து நூலகங்கள் மற்றும் நாட்டின்
முக்கிய நூலகங்களில் இந்தத் தினம்
கொண்டாடப்படுகிறது.
எஸ்.ஆர். ரங்கநாதன் வாழ்க்கை வரலாறு:
சீர்காழி அருகே உள்ள வேதாந்தபுரம்
கிராமத்தில் பிறந்தவர் திரு. எஸ்.ஆர்.
ரங்கநாதன். நூலகத் துறைக்கு ஆற்றியுள்ள
சிறப்புமிக்க பங்களிப்புக்காக அவருடைய
பிறந்த நாளான ஆகஸ்ட் 12- ஆம் தேதியை
தேசிய நூலகர் தினமாக மத்திய அரசு
அறிவித்தது.
1892 ஆகஸ்ட் 12 ஆம் தேதி ராமாமிர்த்த
ஐயருக்கும் சீதாலட்சுமி அம்மையாருக்கும்
புதல்வராக ரங்கநாதன் பிறந்தார். 1921 ஆம்
ஆண்டு கணிதத் துறை உதவிப்
பேராசிரியராகச் சென்னை மாநிலக்
கல்லூரியில் பணியைத் தொடங்கினார்,
திரு. ரங்கநாதன்.
1924 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக
நூலகத்தில் நூலகரானார். இவரே,
சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல்
நூலகர். நூலகத் துறைக்குத் தன்னை
அர்ப்பணித்துக் கொண்டார். இங்கிலாந்து
சென்று நூலக அறிவியலில் பயிற்சி
பெற்றார்.
கோலன் பகுப்பு முறை..!
புத்தகங்களைப் பொருள் (அர்த்தம்)
வாரியாகப் பிரித்து அடுக்குவதற்காகக் "கோலன் பகுப்பு முறை' என்னும் பகுப்பு
முறையைக் கண்டுபிடித்தார், திரு.
ரங்கநாதன். இவர் ஆராய்ந்து கண்டுபிடித்த
இந்த முறை, நூலகத் துறையைச் சார்ந்த பல
மேனாட்டு அறிஞர்களால் ஒப்புக்
கொள்ளப்பட்டது. அதுவரை
கையாளப்பட்டுவந்த பகுப்பு முறையைக்
காட்டிலும் கோலன் பகுப்பு முறை
எளிமையாகவும் தனித்தன்மை
வாய்ந்ததாகவும் இருந்ததால் பல நாட்டு
நூலகங்களில் இம்முறையிலேயே நூல்கள்
பிரித்து வைக்கப்பட்டன. .
கோலன் பகுப்பு முறை பல்வேறு
வகைப்பட்ட பொருள்களில் எழுதப்பட்ட
நூல்களைப் பிரித்து, நூலகத்தில் அந்தந்தப்
பொருளுக்குரிய நூல்களை அந்தந்த
இடத்தில் வைக்க வசதியாக இருந்தது. இந்தப்
பகுப்பு முறை நூலகத்துக்கு வரும்
வாசகர்கள் தாங்கள் விரும்பும் நூல்களை
எளிதில் எடுத்துப் படிக்கவும், படித்து
முடித்த பின் அந்தந்த நூலுக்குரிய
இடத்தில் நூலகர் அடுக்கி வைக்கவும்,
நூற்றொகை தயாரிக்கவும் உதவியாக
இருந்தது.
நூலகர் திரு. எஸ்.ஆர். ரங்கநாதனின்
கண்டுபிடிப்பான கோலன் பகுப்பு
முறையில் நூலகப் பொருள் பட்டியல்
தயாரிப்பதும், அதனை நூலகர்களும்,
வாசகர்களும் பயன்படுத்துவதும் எளிதாக
இருந்தது. தமிழக அரசின் பொது நூலகத்
துறை நூலகங்களில் இப்பகுப்பு
முறையில்தான் நூல்கள் பொருள்
வாரியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் இதர பகுதிகள், உலகின்
பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்கள்
இந்தக் கோலன் பகுப்பு முறையைத்தான்
இன்றும் பயன்படுத்துகின்றன.
நூலக மாதிரி சட்டம்..!
நூலக அறிவியல் பற்றி பல நூல்களை
எழுதியதோடு, பல ஆய்வுக்
கட்டுரைகளையும் எழுதி
வெளியிட்டுள்ளார். 1939 ஆம் ஆண்டு நூலக
மாதிரி சட்டத்தை இயற்றினார். 1948 ஆம்
ஆண்டில் இவருடைய முயற்சியால்தான்
சென்னை பொது நூலகச் சட்டம்
நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி
உள்ளாட்சி நிறுவனங்கள் வசூல் செய்யும்
சொத்து வரியில் (பிராபர்ட்டி டேக்ஸ்) 10
சதவிகிதம் நூலகத் துறைக்கு
வழங்கப்படுகிறது.
பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நூலகராகவும்,
டெல்லி நூலகத் துறையின்
தலைவராகவும் பணியாற்றிய திரு.
ரங்கநாதன், ரஷியா, கிழக்கு ஜெர்மனி,
பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளுக்குச்
சென்று நூலகம் தொடர்பான
சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
புதுடெல்லியில் உள்ள நூலகத் தரக்
குழுவின் தலைவராகவும் இருந்தார்.
நூலக அறிவியல் தொடர்பான இதழின்
பதிப்பாசிரியராகவும், டி.ஆர்.டி.சி. நூலக
ஆராய்ச்சியின் சிறப்பாசிரியராகவும்
பணிபுரிந்தார்.

இந்திய நூலக அறிவியலின் தந்தை
இந்திய நூலக அறிவியலின் தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதன் (S.R.Ranganathan) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த வேதாந்தபுரம் கிராமத்தில் (1892) பிறந்தார். தந்தை ராமாயண சொற்பொழிவுகள் நிகழ்த்தும் நிலக்கிழார். சீர்காழியில் ஆரம்பக் கல்வி கற்றார். ஆழ்வார்கள், நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைப் பயின்றார்.
# எஸ்.எம்.இந்து உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் தேறிய பிறகு, சென்னை கிறிஸ் தவக் கல்லூரியில் கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். ஆசிரியர் பயிற்சியில் பட்டம் பெற்று, மங்களூர், கோயம்புத்தூர், சென்னை பல்கலைக்கழகங்களில் கணிதம், இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
# சென்னை பல்கலைக்கழக நூலகராக 1924-ல் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, லண்டன் சென்று, அங்குள்ள சிறந்த நூலகரான டபிள்யூ.சி.பி.சேயர்ஸிடம், நூல்களை வகைப்படுத்தும் கோட்பாட்டை அறிந்தார்.
# நாடு திரும்பியதும், பல்கலைக்கழக நூலகத்தை மறுசீரமைக்கத் தொடங்கினார். விரைவில் இந்த நூலகம் அறிவுசார் பிரிவினரைக் கவர்ந்தது. அவர்களை ஒன்றிணைத்து, சென்னை நூலகச் சங்கத்தை நிறுவினார். இது நூலக இயக்கத்தின் சின்னமாக மாறியது. அதன் அமைப்பு செயலாளராக 1928 முதல் 1945 வரை செயல்பட்டார்.
# இவரது பணிக்கு மனைவியும் உறுதுணையாக இருந்தார். ஸ்கூல் ஆஃப் லைப்ரரி சயின்ஸ் அமைப்பைத் தொடங்கினார். ஏறக்குறைய 15 ஆண்டுகள் இதன் இயக்குநராகப் பணியாற்றினார். தன் சேமிப்பு முழுவதையும் இதற்காக வழங்கினார். இவரது நூலக இயக்கத்துக்கு ஆங்கில அரசின் ஆதரவையும் பெற்றார்.
# இவர் நல்ல எழுத்தாளரும்கூட. நூலக நிர்வாகம் உள்ளிட்டவை தொடர்பாக 60-க்கு மேற்பட்ட நூல்கள், 2,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். பல நாடுகளுக்குச் சென்று நூலகம் குறித்து உரையாற்றினார். கடுமையாகப் பாடுபட்டு நூலகம் மற்றும் தகவல் அறிவியலுக்கான புதிய, அடிப்படைக் கோட்பாடுகளை நிறுவினார்.
# நூலகத் துறையில் 21 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக செயல்பட்டு பல புரட்சிகளை ஏற்படுத்தியவர் 1945-ல் ஓய்வுபெற்றார். பின்னர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நூலக அமைப்பை மேம்படுத்துவதற்காக வந்த அழைப்பை ஏற்று, அங்கு சென்றார். 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, தனி ஒருவராக அங்கிருந்த ஒரு லட்சம் நூல்களை வகைப்படுத்தினார்
# நூலக அறிவியல் பட்டயப் படிப்பை அறிமுகம் செய்து, தானே கற்பித்தார். டெல்லி பல்கலைக்கழக அழைப்பை ஏற்று அங்கு சென்றவர், நூலக அறிவியல் பாடம் கற்பித்தார். இவர் அங்கு இருந்தபோது, நூலக அறிவியல் இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டன.
# இந்திய நூலகச் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆவணங்கள் பதிவு ஆராய்ச்சி மையம், இந்திய புள்ளியியல் நிறுவனம் ஆகிய அமைப்புகளை நிறுவினார். டெல்லி, பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. பத்மஸ்ரீ விருதும் பெற்றார். மிக எளிமையாக வாழ்ந்தவர். சிக்கனமானவர். தேவையின்றி பணத்தையோ, ஆற்றலையோ வீணடிக்கமாட்டார்.
# நூலக அறிவியல், ஆவணப்படுத்துதல், தகவல் அறிவியல் துறைகளின் தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதன் 80-வது வயதில் (1972) மறைந்தார். இவரது பெயரில் ஆண்டுதோறும், சிறந்த நூலகர்களுக்கு ‘நல் நூலகர்’ விருது வழங்கப்படுகிறது.



நூலக இயக்கத்தின் முன்னோடி டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன்.

நூலகவியலில் பட்டக் கல்வி தரும் நூலகவியல் பயிற்சிப் பள்ளிகளுக்கு வித்திட்டவர் எஸ்.ஆர். ரங்கநாதன் (1892-1972). இவர் இந்தியாவில் நூலக இயக்கம் எழுச்சிபெறக் காரணமாக இருந்தவர். அதற்கான உறுதியான அடித்தளம் அமைத்தவர். கீழைத்தேச சிந்தனை மரபுகளையும் கலாசாரங்களையும் உள்வாங்கி நூலகவியல் சிந்தனைக்கான ஆய்வு, அறிவு மூலங்கள் மற்றும் கோட்பாடுகள் உருவாக்கியவர்.
இவர் சீர்காழியில் 12.8.1892 இல் பிறந்தவர். பெற்றோர்கள் இவருக்கு 15-வது வயதிலேயே திருமணம் நடத்திவைத்தனர். தமது 17-வது வயதில் உயர்நிலைப் படிப்பை முடித்து 24-வது வயதில் எம்.ஏ.பட்டமும், 25-வது வயதில் சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எல்.டி பட்டமும் பெற்றார். தொடர்ந்து அரசினர் கலைக்கல்லூரியில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1924-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல் நூலகராகப் பணி துவக்கினார்.
ரங்கநாதன் நூலகராகப் பொறுப்பேற்ற பின் இரண்டு ஆண்டுகள் லண்டனிலுள்ள பல்கலைக்கழகக் கல்லூரியில் நூலகவியல் பயிற்சியும், பட்டமும் பெற்றார். நூலகவியலில் பொதிந்துள்ள அறிவு, திறன், ஆய்வு யாவற்றையும் முறைப்படி கற்று தன்னளவில் சுயாதீனமான சிந்தனையாளராகவும் வளர்வதற்கான முழுத் தகுதியை வளர்த்து கொண்டார். 'கோலன் பகுப்பு முறையை' உருவாக்கத் தொடங்கினார்.
தமிழ் நாட்டில் நூலக இயக்கம் வளர வேண்டுமென்றால் பயிற்சி பெற்ற நூலகர்களை உருவாக்கத் தகுந்த பள்ளிகள், பாடத்திட்டம் அதற்கான பயிற்சி நூல்கள் ஆகியவை தேவை என்பதை உணர்ந்து அவற்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நூலகவியல் எனும் கற்கை நெறிக்கான அடிப்படை மூலகங்கள், தத்துவங்கள் பற்றிய திட்டப் பாங்கான சிந்தனையிலும் நடைமுறையிலும் ஈடுபட்டார்.
இதைவிட தமிழ் நாட்டில் நூலக உணர்வு வளர செல்வாக்குப் பெற்றவர்களின் ஆதரவும் அரவணைப்பும் தேவை என்பதை உணர்ந்து அதற்காகத் திட்டமிட்டு உழைத்தார். காங்கிரஸ் மாநாட்டையொட்டி நடந்த அனைந்திந்திய பொதுநூலக மாநாட்டுக்குச் சென்னையின் அமைப்புச் செயலாளர் பொறுப்பேற்றுச் சிறப்புறச் செயற்பட்டார். பின்னர் சென்னையிலுள்ள கல்வியாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் துணையோடு ஜனவரி 03, 1928-இல் சென்னை நூலகச் சங்கத்தைத் தொடங்கினார். அதன் முதல் செயலாளராகப் பொறுப்பேற்றுத் தொடர்ந்து 20 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார்.
சென்னை பல்கலைக்கழக நூலகக் கட்டடப் பணியைத் தொடங்கி உலக நாடுகளிலுள்ள சிறந்த நூலகக் கட்டங்களுக்கு இணையாக அதைக் கட்டிமுடிக்க அயராது பாடுபட்டார். நூலகம் அமைந்துள்ள கட்டடம் அதற்கேயுரிய வளங்களை, அமைவிடத்தை, பொறிமுறையைக் கொண்டிருக்க வேண்டும். அவை தொடர்பான வரன்முறையான சிந்தனைகளின் வெளிப்பாடாகவே இருக்கும். இதனை உணர்ந்து தனது நேரடி மேற்பார்வையில் கட்டடத்தை முடித்தார். பன்னாட்டு நூலகக் கட்டடங்களின் அழகியலையும் உள்வாங்கிக் கொண்டு அமைவுபெறும் நோக்கிலேயே செயற்பட்டார். அங்குள்ள கதவுகளும் ஜன்னல்களும் மேசை நாற்காலிகளும் வண்ணக் கண்ணாடிகளும் அவரது உழைப்பின் மேன்மையை உணர்த்தும்.
நூலகப் பயன்பாடு நகர்ப்புறம் சார்ந்த கல்வி கற்ற மக்களுக்கு மட்டும் உரித்துடையதல்ல. மாறாக கிராமப்புற சாதாரண எழுத வாசிக்கத் தெரிந்த மக்களுக்கும் நூலகப் பயன்பாடு வேண்டும் என்ற கருத்துடையவராகவும் இருந்து செயற்பட்டார். தானே மாட்டுவண்டியில் நூல்களை அடுக்கி எடுத்துக்கொண்டு கிராமம் கிராமமாகச் சென்றார். நூல்கள் படிக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தி கருத்துரைகள் வழங்கினார். பல்கலைக்கழகம் தொடங்கி கிராமப் புறங்கள் வரை நூலகப் பயன்பாடு ஓர் இயக்கமாக மலர்ச்சிபெறக் காரணமாக இருந்தார். ஒரு நாட்டில் பிரஜைகள் தமது நாட்டில் தமக்கு இருக்கும் உரிமைகளை அனுபவிப்பதுடன் அதனுடன் தொடர்புடைய பொறுப்புகளையும் சுமப்பவர்களாக இருக்கவேண்டும், உண்மையான பிரஜைகளாக இருக்க வேண்டுமானால்.
மக்களைப் பாதிக்கும் விடயங்களை பற்றிய சரியான தகவல்களை தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்; அந்தத் தகவல்களைக் கொண்டு பொதுவாக நன்மை கொடுக்கக்கூடிய கொள்கைத் திட்டங்களையும் நடைமுறைகளையும் கலந்துரையாடித் தெளிபவர்களாக இருக்க வேண்டும்; பொதுவில் கலந்துரையாடித் தெளிந்த கொள்கைத் திட்டங்களையும் நடைமுறைகளையும் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்.
மேற்கூறிய தகுதிகளையும் திறன்களையும் கொண்ட உண்மையான பிரஜைகளை உருவாக்குவதற்கென்றே 'நூலக இயக்கம்' மானுட வளர்ச்சியில் கண்டடைந்த நடைமுறையாகும். இன்று சமூக அபிவிருத்தி, மானிட அபிவிருத்தி பற்றிய சிந்தனையிலும் செயற்பாடுகளிலும் நூலக இயக்கம், வாசகர் வட்டங்கள் முதன்மையாக இருப்பதை நமது இதுகாறுமான பன்னாட்டு அனுபவம் எடுத்துக் காட்டுகிறது. இன்றைக்கு 60 வருடங்களுக்க முன்னரே நூலக இயக்கம், வாசிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்ந்து செயற்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக ரங்கநாதன் விளங்கினார் என்பது வரலாறு காட்டும் பாடம்.
ரங்கநாதனின் பணிகளும் சிந்தனைகளும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அனைத்திந்திய அளவில் பரவத் தொடங்கிற்று. நூலக இயக்கம் வேகம் கொள்ளத் தொடங்கியது. இதன் விளைவாக 1930-இல் வாரணாசியில் நடந்த ஆசியக் கல்வி மாநாட்டில் மாதிரி நூல்கள் எழுதி வெளியிட்டார். அந்த வகையில் 'ஐந்து நூலக விதிகள்' எனும் நூல் வெளிவந்தது.
1942-இல் இந்திய நூலகச் சங்கத்திற்கான இரண்டாவது நூலகச் சட்டத்தின் வரைவை அமைத்துக் கொடுத்தார். 1944-இல் இந்திய நூலகச் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 9 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார். சென்னைப் பல்கலைக் கழக நூலகராகப் பணியாற்றிக்கொண்டு அதை ஒரு பயிலரங்கமாகவும் பட்டறையாகவும் பயன்படுத்தி பல நூல்களையும் வெளியிட்டார். மேலும் நூலக மேம்பாட்டுக்குப் பல சிறப்பான திட்டங்களையும் தீட்டிச் செயற்பட்டார். பல்கலைக் கழக செனட் மண்டபத்தில் பல கூட்டங்களை நடத்தி நூலக மேம்பாட்டுக்கான திட்டங்களை முன்வைத்தார். நூலகமேம்பாடு குறித்த சிந்தனையின் முக்கியத்துவம் படிப்படியாக முனைப்படைவதற்கு உரிய தளத்தை உருவாக்கினார்.
1948-இல் இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில்தான் பொது நூலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. நூலகத்துறையில் அன்று அகில இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் தமிழ்நாடு இருந்தது. இந்தப் பெருமை ரங்கநாதனுக்கே உரித்தானது.
சென்னைப் பல்கலைக்கழக நூலகர் பதவியிலிருந்து தானே விருப்பு ஓய்வு பெற்ற பின், 1945-இல் காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் நூலகராகவும் நூலகவியல் பேராசிரியராகவும் பொறுப்பேற்றார். அதன் பின்னர் ரங்கநாதனின் பணியும் புகழும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் பரவத் தொடங்கின. நூலக இயக்கம் சமூக, மானிட அபிவிருத்தியில் முதன்மையான பங்கு வகிக்கக் கூடியது என்பதை எல்லோரும் உணர்வதற்குரிய பின்புலத்தை வலுவாக வழங்கும் ஆளுமை, அறிவு ரங்கநாதனுக்கு இருந்தது. இதனை இந்தியா கண்டுகொண்டது. உலக அளவிலும் இவரது சேவையைப் பெற்றுக்கொள்ள அவாவும் போக்கு அதிகரித்தது. பல வெளிநாட்டு நூலக மேம்பாட்டுக் குழுக்களில் பங்குகொண்டார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி 1956-இல் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்து 'சாரதா ரங்கநாதன் அறக்கட்டளை'யை நிறுவி அதன் மூலம் நூலகவியல் துறையை முழு வீச்சில் செயற்பட அடித்தளம் அமைத்தார். இந்தச் செயல் அன்று உலகம் முழுவதும் பாராட்டப் பெற்றது. நூலகவியல் துறை எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைச் சிந்தனையால் மட்டுமல்லாது செயலாலும் நிரூபித்து வந்தார்.
1957-ல் இந்திய அரசு இவருக்கு 'பத்மஸ்ரீ' பட்டம் அளித்துச் சிறப்புச்செய்தது. பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் (டி.லிட்) வழங்கின. 1962-இல் பெங்களூரில் 'டாக்குமென்டேசன் ரிசர்ச் டிரெயினிங் சென்டர்' எனும் அமைப்பைத் தொடங்கி அதன் கெளரவப் போராசிரியர் பொறுப்பை ஏற்று, தரமான நூலகர்கள் உருவாக வழிவகுத்தார். 1965-இல் இந்திய அரசு இவருக்கு 'தேசிய நூலகவியல் ஆய்வுப் பேராசிரியர்' பதவியை அளித்துப் பெருமைப்படுத்தியது. தொடர்ந்து 'நூலகவியல்' பற்றிய சிந்தனையில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தார். அவர் பெங்களூரில் செப்டம்பர் 27, 1972 அன்று நிரந்தரமாகவே ஓய்வு கொண்டார். 80 ஆண்டுகால உலக வாழ்க்கையில் 50 ஆண்டுகள் நூலக மேம்பாட்டுக்காகவே உழைத்து வந்த டாக்டர் என்.ஆர். ரங்கநாதன் 'நூலகத் தந்தை' என்று அழைக்கப் பெறுகிறார்.
நூலக அறிவியல் துறையின் நூலகப் பகுப்பாக்கம் என்பது நூலகத்தில் உள்ள ஆவணங்களுக்குப் பொருத்தமான அமைவிடத்தைக் கண்டுபிடித்தல் என்ற செயற்பாட்டுடன் தொடர்புறும் ஒன்றாகும். இதை மேற்கொள்ள அறிவுப் பிரபஞ்சத்தில் அடங்கியிருக்கும் பொருட்துறைகள் பற்றிய அறிவு முக்கியமானது. இவற்றை மிக விரிவாகச் சிந்தித்த டாக்டர் ரங்கநாதன் அறிவியில் அணுகுமுறை கொண்டு நூலகர் செயல்படுவதற்கான அடித்தளத்தை வழங்கிச் சென்றுள்ளார்.
'ஒரு குறிப்பிட்ட துறை தொடர்பாக ஒரு தனிமனிதன் மேற்கொள்ளும் சிறப்பு ஆய்விற்கும் அவனது அறிவுத்திறம் வாய்ந்த ஆற்றலுக்குமிடையே பிரிக்க முடியாத அளவிற்கு ஒன்றுபட்டு வந்து விழுகின்ற, செறிவானதும் விரிவுள்ளதுமான கருத்துக்கள் அல்லது கருத்துருவங்களின் ஒழுங்கமைக்கப்பட்ட உருவமைப்பு பொருட்துறையாகும்' என்பார் ரங்கநாதன். மேலும் அவர் பொருட்துறையை சாதாரண பொருட்துறை, கூட்டுப் பொருட்துறை, கலப்புப்பொருட்துறை என்று மூன்றாக வகைப்படுத்துவார்.
இன்று விரிவு பெற்றுவரும் அறிவுப் பிரபஞ்சத்தில் நூலகப் பயன்பாட்டின் ஆரோக்கியமான திசைப்படுத்தலுக்கான தெளிவான பார்வையையும் கருத்து நிலையையும் முன் வைத்தவர் ரங்கநாதன். நூலகவியல் ஒரு அறிவுத் துறையாக மேலும் வளர்த்தெடுக்கப்படுவதற்கான சிந்தனை மற்றும் ஆய்வுக் கருவிகளை ரங்கநாதன் தந்து சென்றுள்ளது நூலகத்துறைக்கு மட்டுமல்ல, அறிவுலகுக்கும் அவர் தந்த மிகப்பெரும் கொடையாகும்.
தெ.மதுசூதனன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக