சனி, 19 ஆகஸ்ட், 2017

விடுதலைப் போராளி ஒண்டிவீரன்



விடுதலைப் போராளி ஒண்டிவீரன்

ஒண்டிவீரன் ( இறப்பு : 1771 ) என்பவர் .திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்க்கு உட்பட்ட நெற்கட்டான் செவலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரரான
பூலித்தேவன் என்பவரின் படையில் படைவீரராகவும், படைத்தளபதியாகவும் இருந்த தாழ்த்தப்பட்ட இனத்தின் அருந்ததியர் பிரிவைச்சார்ந்த விடுதலைப்போராட்ட வீரர் ஆவார். புலித்தேவனின் படையில் தளபதியாக செயல்பட்ட வெண்ணிக் காலாடி , மற்றும் பொட்டி பகடை போன்றோறும் இவருடன் விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களேயாவர்.

சர்ச்சைகள்

மேலும் ஆசு என்னும் வெள்ளையரை சுட்டு கொன்ற பின் வாஞ்சிநாதன் தனது கைப்பட எழுதிய மடலில் "கேவலம் கோமாதா கறி தின்னும்
பஞ்சமன்"  என்று எழுதியவர்களுக்கு (பின்னாளில் பஞ்சமன் என்பதை அன்றைய காலத்தில் இங்கிலாந்தில் மன்னராக இருந்த ஐந்தாம் சார்ச் குறிப்பதாக மாற்றி விட்டார்கள் என தலித் முரசு குற்றம் சாட்டுகிறது) அக்குமுகத்தை சார்ந்த ஊடங்கள் முக்கியத்துவம் தருவதை போல் மெய்யாக விடுதலைக்கு போரிட்ட வென்னி காலாடி, ஒண்டி வீரன் , கந்தன் பகடை ,
பொட்டி பகடை , சுந்தரலிங்கம் , கட்டன கருப்பணன் போன்றோர்களின் வரலாறுகளை திட்டமிட்டு மறைக்கின்றனர் என அ. மார்க்சு , அழகிய பெரியவன் , ஏ.பி. வள்ளிநாயகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
போர் வெற்றி
1767 ம் ஆண்டு ஆங்கிலேயருடனான போரில் ஆங்கிலேய தளபதி கர்னல் எராலின் படையினை இரண்டாயிரம் வீரர்களுடன் போரிட்டு வெற்றிப் பெற்றார். பூலித்தேவரின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார்.

மணிமண்டபம்

2000 ஆம் ஆண்டு தமிழக அரசிடம் ஒண்டிவீரனின் இனத்தவர்கள் தங்கள் சார்ந்த வீரனுக்கு ஒரு நினைவுமண்டபம் கட்டவேன்டும் என்று மனுத்தாக்கல் செய்தார்கள். இதன் காரணமாக 2011 ஆம் ஆண்டு அப்போதைய தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சராக இருந்த
பரிதி இளம்வழுதியின் மூலம் 49 லட்சம் ஒதுக்கப்பட்டது. பாளையங்கோட்டையில் ரூபாய் 50 இலட்சம் செலவில் ஒண்டிவீரன் மணிமண்டபம் தமிழக முதல்வரால் காணொளிக் காட்சி மூலம் 1 மார்ச் 2016 அன்று திறந்து வைக்கப்பட்டது.

ஆதாரம்
அழகிய பெரியவன் தலித் முரசில் எழுதிய கட்டுரை.
இம்மானுவேல் தேவேந்திரர்- தமிழவேள்
கொலைகள வாக்கு மூலங்கள்-
அருணன் - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர்.


தளபதி ஒண்டிவீரன்.

இந்திய விடுதலைப் போராட்டம் எங்கே, எப்போது துவங்கியது? என்று சொல்ல யாருக்கும் துணிச்சல் இல்லை, அது வீரம் விளைந்த தமிழ்மண்ணில்தான் என்று சொல்ல பலருக்குத் தயக்கம்! வெள்ளையர்கள் வியாபாரிகளாகத்தான் நம்நாட்டிற்கு வந்தார்கள். பின்னர் கொள்ளையர்களாக மாறினார்கள். அதைத்தான் நாம் எதிர்த்தோம். வந்தேறிகள் நாட்டை ஆள்பவர்களாக மாறி வரி வசூலித்தார்கள். எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?
அதைத்தான் எதிர்த்தார்கள் தமிழ் சிற்றரசர்களின் சிலர். அந்த எதிர்ப்புதான் போர்களாயின. அந்தப்போர்கள்தன் இந்திய விடுதலைப் போருக்கான ஆரம்ப விதைகள். அந்த விதைகளில் பல மறைக்கப்பட்டதுதான் கொடுமை. வீரம் விளைந்த மண்ணில் விதைக்கப்பட்டவர்களின் வீரவரலாற்றை மறைக்க யாருக்கும் உரிமை இல்லை.
தளபதி ஒண்டிவீரன்
1755! இந்திய விடுதலை வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வைத்த ஆண்டு. உலக அரங்கில் ஒரு அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தன் வீரத்தைப் பதிவு செய்த ஆண்டும் அதுதான்.
விடிந்தால் போர். அது சாதாரண போர் அல்ல. பீரங்கிகள் வெடிமருந்து குவியல்கள். துப்பாக்கிகள் என்று பல ஆயிரம் பேர்கொண்ட பெரும்படையுடன் ஆங்கிலேய தளபதி கர்னல் ஹெரான், மாவீரன் பூலித்தேவனின் நெற்கட்டான்செவலைத் தாக்கப்பதுக்கியிருக்கிறான்.
""விடிந்தால் எங்கள் பீரங்கிகளுக்கு பூலித்தேவனின் ராஜ்ஜியமே சாம்பல். முடிந்தால் தடுத்துக்கொள்'' என்று அறைகூவல் விடுக்கிறான். தீப்பிழம்புகளைக் கக்கும் பீரங்கிகளின் பேய்வாய்கள் எல்லாமே நெற்கட்டான்செவலை நோக்கி நிறுத்தப்பட்டுவிட்டன.
ஏற்கெனவே இரண்டு முறை பூலித்தேவனை எதிர்த்து தோற்றோடிய வெள்ளைக்காரர்கள்தான் இவர்கள். இம்முறை பூலித்தேவனின் கோட்டையை தகர்த்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டியபடி, இரவோடு இரவாக முகாமிட்டிருந்தார்கள்.
""வரி கொடுக்க ஒப்புக் கொண்டால் சமாதானமாகப் போவோம். இல்லாவிட்டால் போர்தான். நெற்கட்டான்செவல் அழிவது உறுதி'' என்று சவால் விட்டான், ஹெரான்.
ஆனால் பூலித்தேவன், ""ஒரு நெல்மணியைக் கூட வரியாக செலுத்த முடியாது. முடிந்ததைப் பார்'' என்று எதிர் சவால்விட்டான். ""இதில் எங்களை வென்றால் நெல்லைச் சீமையைவிட்டே நாங்கள் புறப்படத் தயார்'' என்று வேறு ஏளனம் செய்தான் வெள்ளையன். ஹெரானின் சவாலுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். அதற்கு ஏற்ற வீரனைத் தேடினார் பூலித்தேவன்.
தளபதி ஒண்டிவீரன், ""நான் ஒருவன் போதும், எதிரிகளின் படையை அழிக்க'' என்று முன்வந்தான். பூலித்தேவன் சம்மதிக்க, புறப்பட்டான் ஒண்டிவீரன் ஒண்டியாக, எதிரிகள் முகாமிற்கு.
நெற்கட்டான் செவலுக்கு அருகில் உள்ள "தென்மலை' முகாமில்தான் எதிரிப்படை முகாமிட்டிருந்தது. முகாமில் ஒரே கும்மிருட்டு. தீவட்டியுடன் சில வீரர்கள் பாதுகாவலுக்கு நின்றிருந்தார்கள். அவர்களின் கண்ணில் மண்ணைத் தூவியபடி எப்படியோ முகாமிற்குள் புகுந்துவிட்டான் ஒண்டிவீரன்.
அப்படியிருந்தும் ஓரிருவர் பார்த்துவிட்டார்கள். "யார்?' என்று கேட்கிறார்கள். ""நான் குதிரை வாரை செப்பனிட வந்தவன்'' என்று பொய் சொல்கிறான். நம்பிவிடுகிறார்கள்.
நடு இரவை தாண்டி பொழுது ஒண்டிவீரன் மெல்ல தன் வேலையைக் காட்டத் தொடங்கினான். சத்தம் எழாமல், பீரங்கிகளின் அருகில் செல்கிறான். நெற்கட்டான்செவலை நோக்கி இருந்த பீரங்கிகளின் வாய்களை, தங்கியிருந்த முகாமை நோக்கித் திருப்பி விடுகிறான். அங்கிருந்த பட்டத்துக் குதிரை ஒன்றை அவிழ்த்துக் கொண்டு, வெளியேறப்பார்க்கிறான்.
குதிரை கலவரப்பட்டு மிரண்டு போக, சத்தம் கேட்டு சில வீரர்கள் ஓடி வருகிறார்கள். அதற்குள் ஒண்டிவீரன் அருகில் இருந்த குதிரையின் காடிக்குள் படுத்து, தன் மேல் புற்களைத் தூவி யாரும் அறியாதபடி ஒளிந்து கொண்டான்.
குதிரையைப் பிடித்த எதிரி வீரர்கள், குதிரையைக் கட்டிப்போட இடம் தேடுகிறார்கள்.
ஒரு வீரன் பெரிய ஈட்டி போன்ற ஆயுதத்தை காடியில் அறைகிறான். அது ஒண்டிவீரனின் இடது கை வழியாக தரைக்குள் இறங்குகிறது. ஈட்டி இறங்க இறங்க வலி அதிகரிக்கிறது. ஆனால் ஒண்டி வீரன் கத்தவில்லை. வலியைத் தாங்கிக் கொள்கிறான். அந்த ஈட்டி முளையில் குதிரையைக் கட்டிவிட்டு வீரர்கள் தூங்கப் போய் விடுகிறார்கள்.
அந்த முளையிலிருந்து கையை எடுக்க முடியாத நிலை. வலி கூடிக்கொண்டே போகிறது. விடிய இன்னும் சிறிதுநேரம்தான் இருக்கிறது. வேறு வழியே இல்லை. அங்கு களவாடிய பட்டாக்கத்தியால் சத்தம் எழாமல் தன் இடக்கையை தானே வெட்டித் துண்டாக்குகிறான். யாருக்கு அந்தத் துணிச்சல் வரும்?
வெட்டுப்பட்ட கை. கொட்டும் ரத்தம். இதோடு அந்த குதிரையையும் சத்தம் எழாமல் கிளப்பி, அதன் மேல் எறியபடி அபாய முரசையும் ஓங்கி உதைக்கிறான். எதிரிகள் வந்துவிட்டார்கள் என்பதற்கான எச்சரிக்கை ஒலியாக அதை நினைத்து, பீரங்கி வீரர்கள், பீரங்கியை இயக்குகிறார்கள். குண்டுமழை பொழிகிறது.
அது தங்கள் படை முகாம் மேலேயே தாக்கி அழித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு அவர்கள் பதறுகிறார்கள். முகாம் முற்றிலும் அளிக்கப்படுகிறது. அதற்குள் எதிரியின் குதிரையிலேயே மின்னல் வேகத்தில் நெற்கட்டான்செவலுக்குப் பறக்கிறான் ஒண்டிவீரன்.
எதிரிகளை முற்றிலும் அழித்துவிட்ட சந்தோஷத்தில் பூலித்தேவனிடம் வருகிறான். எதிரியின் குதிரையையும் பட்டாக்கத்தியையும் ஒப்படைக்கிறான். கூடவே வெற்றிச் செய்தியையும் அறிவிக்கிறான்.
அப்போதுதான் ஒண்டி வீரனின் கை துண்டிக்கப்படடு இருப்பதைக் கண்டு துணுக்குறுகிறார் பூலித்தேவன்.
""எப்படி உன் கை துண்டிக்கப்பட்டது?'' என்று கேட்க, ""இந்தக் கை துண்டானால் என்ன, நம் தாய் மண்ணை விட்டு எதிரிகளை விரட்டிவிட்டோமே, அதுவே போதும். இந்தக் கைக்கு பதிலாக தங்கக் கை செய்து தரமாட்டீரா என்ன?'' என்றாராம் ஒண்டிவீரன்.
போர்க்களத்தில் ஒண்டி வீரனுக்கு நிகர் அவனே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டதாக பூலித்தேவன் பாராட்டினார்.
கொரில்லாப் போர் முறையில் கைதேர்ந்தவர் ஒண்டிவீரன். போர்த்தந்திரங்கள் முற்றிலும் தெரிந்தவர். போர்க்களம் புகுந்துவிட்டால் வெற்றி வாகை சூடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவர். நெற்கட்டான்செவல், திருநெல்வேலி, களக்காடு, கங்கைகொண்டான், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் நடந்த போர்களில் எல்லாம் வெள்ளையர்களை ஓட ஓட விரட்டியவன் ஒண்டிவீரன். பூலித்தேவனுக்குப் பிறகும் கூட, அவரது மகன்களுக்கு உதவியாக இருந்து புதுக்கோட்டைப்போர் முதலியவற்றில் வெள்ளையர்களை எதிர்த்து வெற்றிவாகை சூடியவன். இவனைப் பற்றி வீர காவியமே பாடலாம்.
நொண்டிச் சிந்து, ஒண்டிவீரன் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவையே அவனது வீரத்திற்கு சாட்சி.
ஒண்டிவீரனின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் ஈடு இணை எதுவுமே இல்லை. தற்போது பாளையங்கோட்டையில் அவருக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்டுவது அவரது வீரத்திற்குக் கிடைத்த சிறப்பு. அருந்ததியர் சமூகத்திற்கு கிடைத்த பெருமை.



ஒப்பில்லா விடுதலைப் போராளி ஒண்டிவீரன்

இந்திய விடுதலைப் போராட்டம் அல்லது பிரித்தானிய எதிர்ப்புக்கான போராட்டக் களத்தில் முன்னிலை வகித்தது தமிழ்ச் சமூகம்தான். இந்த உண்மை நிலையை எடுத்துச் சொல்ல எனக்குக் கிடைத்த ஒரு பெருஞ் சான்று மாவீரன் ஒண்டிவீரனின் வரலாறு.
கி.பி. 1857இல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்க் கலகம் அல்லது அச்சமயத்தில் வட இந்தியாவில் எழுந்த கிளர்ச்சிகளையே இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் சிப்பாய்க் கலகத்தை முதல் இந்திய விடுதலைப் போராட்டம் என வர்ணிக்கிறார். எனினும் பிரித்தானிய அரசு நிர்வாகம் உருவாக்கப்படுவதற்கு முன்னதாக கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த காலகட்டத்திலிருந்தே, அதாவது சிப்பாய்க் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்னதாகவே பிரித்தானிய எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி விட்டது.
தென் தமிழகத்தில் பாளையக்காரர்களாக விளங்கி பிரித்தானிய எதிர்ப்பால் தம் உயிரை ஈந்த மாவீரர்களும் உண்டு. புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் இவர்களின் பங்கு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது நாம் அறிந்ததே.
ஆனால் சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக மாபெரும் போராளிகளின் வரலாறு குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது. அதை மீட்டெடுக்கின்ற மாபெரும் பணியில் இன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களும், அவர்களுக்கு ஆதரவான சனநாயகச் சக்திகளும் எடுத்துள்ள முயற்சியின் வெளிப்பாடே ஒண்டிவீரன், சுந்தரலிங்கம் போன்றோரின் வரலாற்றுப் பதிவுகள். அந்த வரிசையில் வரலாற்றில் தனித்து நிற்கின்ற ஒப்பில்லா விடுதலைப் போராளி ஒண்டிவீரனின் வரலாற்றை நாம்தான் அறியச் செய்ய வேண்;டும்.
இன்றைய நெல்லை மாவட்டத்தில், சங்கரன் கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் வடமேற்கே அமைந்துள்ள 'நெற்கட்டும் செவ்வல் கிராமமும்' அதனைச் சுற்றி 20 கி;.மீ. தொலைவில் அமைந்துள்ள கிராமங்களுமே 'நெற்கட்டும் செவ்வயல் பாளையமாகும்'. கி.பி.1750 காலகட்டத்தில் விசயநகரப் பேரரசின் நிர்வாகக் கட்டமைப்பில் தமிழகம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்றுதான் நெற்கட்டும் செவ்வயல் பாளையம். அக்காலகட்டத்தில் பாளையங்கள் பேரரசுகளுக்கு வரியாக நெல் செலுத்தி வந்ததால் அது நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என அழைக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்புள்ளது.
விசயநகரப் பேரரசின் நிர்வாகக் கட்டமைப்பில் நெற்கட்டும் செவ்வயலிலிருந்து வரி வசூலிக்கும் உரிமையை முகலாய மன்னர்கள் பெற்றிருந்தனர். தங்களது ஆடம்பரமான செலவினங்களாலும், சூழ்ச் சியாலும் முகலாய மன்னர்கள், வரி வசூலிக்கும் அதிகாரத்தை ஆங்கிலேயர்களின் கிழக் கிந்தியக் கம்பெனிக்குத் தாரை வார்த்துக் கொடுத்தனர். வணிகம் செய்து பிழைக்க வந்த பிரித்தானியர்கள் மிகக் கடுமையான வரிகளை உருவாக்கிச் சுரண்டலின் உச்சகட்டத்தை அடைந்தனர். இந்தச் சுரண்டலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்; மாவீரர் புலித்தேவன.; அவருக்குத் தலைமைப் படைத் தளபதியாய் ஒப்பில்லா வீரனாகக் களத்தில் நின்றவர்தான் ஒண்டிவீரன்.
வரிகொடுக்க மறுத்த காரணத்திற்காக ஏற்கெனவே வரி வசூலித்து வந்த முகலாய மன்னர்களும், புதிதாக வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற கிழக்கிந்தியக் கம்பெனியாரும் இணைந்து கி.பி.1755இல் முதல் போரைத் தொடுத்தனர். இப்போரில் பாளையத்தின் எல்லையிலேயே அவர்களை விரட்டியடித்தார் ஒண்டிவீரன். தொடர்ந்து கங்கை கொண்டார் போர், ஆழ்வார் குறிச்சிப் போர், வாசுதேவ நல்லூர்ப் போர் என மூன்று தாக்குதல்களைக் கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய போதும் மண்டியிடவில்லை மானமிகு ஒண்டிவீரனும், புலித்தேவனும்.
எனினும் தொடர்ந்து அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆங்கிலேயரின் நவீன பீரங்கிகள், துப்பாக்கிகளுக்கு முன்னால் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குத் தமிழர் படையின் வாளும் ஈட்டியும் தாக்குப்பிடித்ததே மாபெரும் வெற்றியாகும். மூன்று முறை தோற்று ஒடிய ஆங்கிலேயத் தளபதிகள் ஹெரான், ய+சுப்கான், மாப+ஸ்கான் போன்றோர் மிகப் பெரிய படைபலத்தோடு கி.பி.1767இல் நெற்கட்டும் செவ்வயலைத் தாக்கிய போது புலித்தேவன், சங்கரன்கோவிலில் உள்ள ஆவுடை நாச்சியார் கோவிலில் தஞ்சம் புகுந்தார். ஒண்டிவீரன் தன் மக்களோடும், புலித்தேவனின் வாரிசுகளோடும் பாளையத்தி லிருந்து வெளியேறி அடுத்த கட்டத் தாக்குதலுக்குத் தயாரானார். இந்நிலையில் ஆவுடை நாச்சியார் கோவிலில் தஞ்சம் புகுந்த புலித்தேவன் அங்கேயே சோதியில் அய்க் கியமானதாகச் சொல்லப்படுகிறது. வழக்கமாகத் துரோகத்தால் அல்லது சூழ்ச்சியால் கொல்லப்பட்டவர்களைத்தான் சோதியானதாகக் குறிப்பிடுவார்கள். (உதாரணமாக நந்தனார் வரலாறு)
தலைவனை இழந்த பாளையத்து மக்களுக்குத் தலைவனாகப் பொறுப்பேற்று அடுத்த கட்டத் தாக்குதலுக்கு நேரம் பார்த்துக் காத்திருந்தார் ஒண்டிவீரன். அப்போது ஆங்கிலேயர் இப்படிச் சவால் விடுத்தனர்: “உங்களில் எவனாவது வீரனாயிருந்தால், எங்கள் முகாமிற்குள் ஊடுருவிப் பட்டத்துக் குதிரையையும் பட்டத்து வாளையும் எடுத்துக் கொண்டு, நாங்கள் கட்டித் தொங்க விட்டிருக்கின்ற வெங்கல நகராவை ஒலிக்க வைத்து விட்டால் நாங்கள் நெற்கட்டும் செவ்வயல் பாளையத்தை உங்களிடமே தந்து விடுகிறோம்.”
இதுதான் சரியான தருணம் என்று உணர்ந்த ஒண்டிவீரன், தன்னந்தனியாக, ஒரு சாதாரணக் கூலித் தொழிலாளியைப் போல் ஆங்கிலேயர் முகாமிற்குள் ஊடுருவினார்.
யாரென வினவிய ஆங்கிலேயருக்கு, குதிரைக்கு வார்த்தைக்கக் கூடியவன், போர்வீரர்களின் காலணிகளை (ப+ட்ஸ்களை) செப்பனிடக் கூடியவன் என்று பதில் கூறி ஒண்டிவீரன் உள்ளே புகுந்தார்;. சில நாட்கள் அந்த முகாமில் தங்கிப் பட்டத்துக் குதிரை மற்றும் வாள் போன்றவை வைக்கப்பட்டிருந்த இடத்தை முதலில் அறிந்தார். வெங்கல நகரா கட்டி விட்டிருப்பதையும், மணி ஒலித்தவுடன் எதிரிகளைத் தாக்கக் கூடிய பீரங்கிகள் தயார் நிலையில் இருப்பதையும் கண்டுணர்ந்த ஒண்டிவீரன் சவாலில் வெல்ல அமாவாசைக் கும்மிருட்டைத் தேர்வு செய்தார்.
முதலில் முகாமின் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த பீரங்கிகளை ஆங்கிலேயர் பக்கமே திருப்பி அமைத்தார் ஒண்டிவீரன். தடுக்க முயன்ற காவலர்களைக் குத்திக் கொன்றார். பட்டத்து வாளை எடுத்துத் தனது இடுப்பில் செருகிக்கொண்டு, குதிரையைக் கிளப்ப முயன்;ற போது குதிரை ஒத்துழைக்க மறுத்துக் கனைத்து ஓடியது. குதிரை வீரர்;கள் என்னவென்று காண ஓடி வந்தனர். ஒண்டிவீரன் குதிரைக்குத் தீனி போடுகின்ற காடியில் படுத்துப் புற்களைத் தன்மேல் பரப்பி ஒளிந்து கொண்டார். இருட்டில் யாரெனக் கண்டறிய முடியாத சூழலில் குதிரையை மீண்டும் காடிக்குப் பக்கத்திலேயே ஒரு ஈட்டியை அறைந்து, அதில் குதிரையைக் கட்டி விட்டுச் சென்றனர் குதிரை வீரர்கள்.
ஈட்டி தரையில் அறையப்படும் போது ஒண்டிவீரனின் கையும் சேர்த்து அறையப்பட்டது. ஒண்டிவீரன் அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு காடியிலேயே படுத்துக் கிடந்தார் என்பது அந்த வீரர்களுக்குத் தெரியவில்லை. வீரர்கள் கண்ணயர்ந்த நேரத்தில் ஒண்டிவீரன் கையை ஈட்டியில் இருந்து பிடுங்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை. மீண்டும் குதிரை கணைத்து விட்டால் ஆபத்து என்பதை உணர்ந்து தான் இடுப்பில் செருகியிருந்த பட்டத்து வாளால் தன் கையைத் தானே வெட்டிக்கொண்டு மேலெழுகிறார்.
குதிரையைக் கிளப்பிக்கொண்டு வெங்கல நகராவை ஒலித்து விட்டுப் புயலெனப் புறப்பட்டார் ஒண்டிவீரன். எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வீரர்கள். பீரங்கிக் குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடிப்பதைக் கண்டு அதிர்ந்தது ஆங்கிலேயர் படை. அழிந்தது வெள்ளையர் முகாம். ஆயிரக் கணக்கான வீரர்கள் செத்து மடிந்தனர்.
விடுதலைப் போராட்டத்தில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டுத் தன் உயிரைத் தியாகம் செய்த வீரர்களும் உண்டு. அதே நேரத்தில் பகைவர்களை அவர்களின் ஆயுதத்தைக் கொண்டே அழித்தொழித்த வீரர்களும் உண்டு. இதில் இரண்டாவது வகையின் முன்னோடியாக ஒப்பில்லாப் போராளியாக விளங்கியவர் ஒண்டிவீரன்.
கையை இழந்து விட்டாயே என்று கதறிய குடும்பத்தினரிடமும் பாளையத்து மக்களிடமும் - 'இந்தக் கை போனால் என்ன? எனக்குத் தங்கக் கை கொடுப்பீர்கள் நீங்கள்" என நம்பிக்கை ஊட்டியவர் ஒண்டிவீரன். தாய் மண்ணை மீட்டெடுக்கக் கை மட்டுமல்ல உயிரையும் கொடுப்பேன் என சூளுரைத்தார் ஒண்டிவீரன்.
புலித்தேவன் கி.பி. 1767இல் மறைந்த பிறகும் 1771 வரையில் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் ஒண்டிவீரன். எதிரிகளின் முகாமை அழித்த தென்மலைப் போரோடு ஒண்டிவீரனின் சகாப்தம் முடிந்ததாகச் சொல்லப் படுகிறது.
அண்ணன்... எப்போது சாவான்? திண்ணை எப்போது காலியாகும் என்பது ஒரு தமிழ் வழக்காறு. புலித்தேவன் தேவர் சமூகத்தில் பிறந்தவர்! ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர் ஆனால் வல்லாதிக்க எதிர்ப்புப் போரில் புலித் தேவன் மறைந்த பிறகும் எதிரிகளுக்கு விலை போகாமல் மீண்டும்............ போராட்டத்தைத்.............; தொடர்ந்த நேர்மையான தமிழன் ஒண்டிவீரன். ஒரு குறிப்பிட்ட காலம் வரை புலித்தேவனின் மக்களை, குடும்பத்தாரைப் பாதுகாத்து வந்தவர் ஒண்டிவீரன். அதனால்தான் இன்றும் தேவர் சமூகம் ஒண்டிவீரனைக் காவல் தெய்வமாகவும், ஒண்டிவீரனின் சமூகம் புலித் தேவனை நன்றியுணர்வோடும் வழிபட்டு வருகிறார்கள்.
 தேவர் சமூகத்தில் பிறந்த முனைவர் இராசய்யாவும், இறைப்பணி செய்து வரும் அருட்தந்தை மார்கு அவர்களும் அருந்ததியர் சமூகத்தில் பிறந்த வரலாற்றாசிரியர் எழில் இளங்கோவனும் எழுத்தாளர் பிரபஞ்சனும் இணைந்து ஒண்டிவீரனின் வீரஞ் செறிந்த வரலாற்றை தமிழ் கூறும் நல்லுலகம் அறியச் செய்தனர்.
தமிழர்களின் வீரம் -
தமிழர்களின் விவேகம்
தமிழர்களின் போர்த் தந்திரம்
ஒண்டிவீரனின் வரலாற்றின் மூலமாகவும் இனி முன்னெடுத்துச் செல்லப்படும்.
(சமுக நீதித் தமிழ்த் தேசம் ஜனவரி 2011 இதழில் வெளியானது).


ஒண்டிவீரன் எனும் அருந்ததியர் மாவீரன்
ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர் ஆனால் ஒரு தேவரின் படையில் முக்கிய தளபதியாக செயல்பட்டவர். கட்டபொம்மனின் படையில் எப்படி சாதிப் பாகுபாடுகள் இல்லாமல் இருந்ததோ அப்படியே பூலித்தேவரின்படையும் செயல்பட்டுள்ளதை அறியலாம். பூலித்தேவரையும் ஒண்டிவீரனையும் தனித்தனியாக பார்க்கமுடியாது ஒருவர் இல்லாமல் மற்றவரின் வரலாறு என்பது இங்கில்லை. முதலில் பூலித்தேவர் யார் என்பதை அறிந்து கொள்வது முக்கியம். இராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் பூலித்தேவர் முன்னோர்கள் அவர்கள் திசைக் காவலுக்காக திருநெல்வேலி பகுதிக்கு வருகிறார்கள் அங்கு நெற்கட்டான் செவ்வல் அருகே கோட்டை அமைத்து ஆட்சி செய்கிறார்கள். அவர்களின் வாரிசாக வந்தவர் தான் பூலித்தேவர்.
அந்த பகுதியில் அருந்ததிய மக்களின் நிலங்களை இருளப்ப பிள்ளை என்பவர் தனது பலத்தால் பிடிங்கிக் கொள்கிறார், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இயலாமல் பூலித்தேவரிடம் முறையிடுகின்றனர் அருந்ததிய மக்கள். பூலித்தேவ இருளப்ப பிள்ளையிடம் இருந்து நிலங்களை மீட்டு அருந்ததிய மக்களிடம் திரும்ப கொடுக்கிறார். அன்றிலிருந்து அருந்ததிய மக்கள் பூலித்தேவரையே தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்கின்றனர். இப்படி மீட்டுத் தரப்பட்ட நிலங்களுள் ஒன்று தான் ஒண்டிவீரனின் தாத்தாவுடையது. ஒண்டி வீரனின் தாத்தாவிற்கு எட்டு பிள்ளைகள் அவர்களில் முத்தவரின் மகன் தான் ஒண்டிவீரன். ஒண்டிவீரனின் இயற்பெயர் வீரன்.
பூலியின் தலைமை தளபதி ஒண்டிவீரன், பூலியின் போர் வாளாகவே கருதப்பட்டார். நிலைமைக்கு தகுந்தாற்போல் போர்திட்டங்கள் வகுப்பதிலும் மறைந்திருந்து தாக்கி எதிரியை நிலைகுலையச் செயவதிலும் மிகவும் கைதேர்ந்தவர் ஒண்டிவீரன். நெற்கட்டான் செவ்வல், திருநெல்வேலி, வாசுதேவநல்லூர், களக்காடு, கங்கைகொண்டான், திருவில்லிப்பூத்தூர் ஆகிய இடங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக சண்டையிட்டு வெற்றிகளை குவித்தவர் ஒண்டிவீரன். அந்த காலகட்டத்தில் தான் ஆற்காடு நாவப்பிடம் இருந்து வரிவசூலிக்கும் உரிமையை பெற்ற ஆங்கிலேயர்கள் வரிகேட்டு ஆள் அனுப்புகிறார்கள். பூலி ஆங்கிலேயருக்கு வரிகட்ட முடியாது என்று மறுப்பு தெரிவிக்கிறார், அதுவரை நெற்கட்டும் செவ்வல் என்று இருந்த பெயர் அதாவது செம்மண் நிலத்தில் மிகவும் அதிகமான நெல்லை விளைவித்ததால் நெற்கட்டும் செவ்வல் என்று இருந்த பெயர் நெற்கட்டான் செவ்வலாக மாறியதாகவும் சொல்கிறார்கள்.
வரி கொடுக்க மறுத்ததையொட்டி ஆங்கிலேயர்கள் தென்மலைக்கு வந்து முகாமிட்டு பூலித்தேவரிடம் தங்கள் தூதுவர் ஒருவரை அனுப்புகிறார்கள். தூதுவர் ஆங்கிலேயரின் படை பலம் மிகவும் அதிகம் அவர்களுடன் சமாதானமாக போகும் படி கூறுகிறார். அவ்வாறு சமாதானம் வேண்டாம் என்றால் போர் என்பதை முடிவெடுப்பதாக இருந்தால் ஆற்காடு நவாப்பிடம் இருந்து வரி வசூலிக்கும் உரிமையின் அடையாளமாக ஆங்கிலேயரிடம் இருக்கும் பட்டத்து வாளையும் குதிரையையும் கடத்திக் கொண்டு வரவேண்டும் அதே சமயத்தில் போர் தொடங்கும் அடையாளமாக அங்கிருக்கும் நகராவையும் முழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். பூலித்தேவர் இந்த நிபந்தனைக்கு ஒத்து கொண்டு தனது தளபதிகளை கூப்பிட்டு ஆலோசனையில் இறங்குகிறார்.
பூலித்தேவனின் தளபதிகளை குறிக்கும் நாட்டுப்புறப்பாடல்
”சின்னான் பகடை பெரியான் பகடை
சிவத்தசொக்கன் கருத்தச் சொக்கன்
அண்ணன் தம்பிமார் அழகிரியுடன்
அஞ்சாறு பகடையுடன் ஒண்டியாம்...
இத்தானதி பேர்களுமே பூலி சேனாபதிகளாம்
அத்தானதி பேர்களுக்கும் கம்புக் காரர்கள்
வலையக்காரர்கள் வாள் வீச்சுக் காரர்கள்
வேல் வீச்சுக்காரர்களுடன் முன்னூறு பேருக்கதிபதியாம்”
பூலியின் படையில் ஒண்டிவீரன் பகடை, சின்னான் பகடை, பெரியான் பகடை, சிவத்தசொக்கன், கருத்தசொக்கன், ஓடிக் குத்துவான் பகடை என்று பல அருந்ததியர்கள் இருந்தனர். ஆங்கிலேயரின் நிபந்தனையை தனது தளபதிகளுக்கு விளக்குகிறார் பூலித்தேவர். அப்பொழுது ஒண்டிவீரன் பட்டத்து வாளையும் குதிரையையும் கவர்ந்து வரும் வேலையை தான் ஏற்றுக் கொள்வதாக கூறுகிறார். ஒண்டிவீரனின் திறமையை அறிந்த பூலித் தேவரும் அதற்கு ஒத்துக் கொள்கிறார்.
ஒண்டிவீரன் மாறுவேடம் இட்டு செறுப்பு தைப்பவர் போல் ஆங்கிலேயர் தங்கியிருந்த தென்மலை சென்று தனக்கு சூ, செறுப்பு, குதிரை சேனம் போன்றவைகள் தைக்க தெரியும் என்று வேலை கேட்கிறார். ஆங்கிலேயருக்கும் தேவை இருந்ததால் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். தனது நேரத்திற்காக காத்திருந்து பட்டத்துவாளை வைத்திருந்த இடத்தில் இருந்து திருடிக்கொண்டு பட்டத்து குதிரை கட்டியிருந்த இடத்தை நோக்கி செல்கிறார். கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்க்கும் பொழுது குதிரை பலமாக கனைத்து ஆங்கில சிப்பாய்கள் முழித்துக் கொள்கின்றனர். உடனடியாக அருகில் குதிரைக்காக போடப்பட்டிருந்த புல் குவியலுக்குள் படுத்துக் கொண்டு தன்னை மறைத்துக் கொள்கிறார் ஒண்டிவீரன்.
குதிரையை வந்து பார்த்த வீரர்கள் கயிறு அவிழ்ந்திருப்பதை பார்த்து கட்ட முயலும் பொழுது முளைகாம்பு ஆடியதை கவனித்து அதை தரையில் இருந்து பிடிங்கு மற்றொரு இடத்தில் அடிக்கின்றனர். அங்கு ஒண்டிவீரனின் கை புல்லுக்குள் மறைந்து இருக்கிறது அதன் மீதே அடித்துவிடுகின்றனர், ஒண்டிவீரன் அத்தனை வலியையையும் தாங்கி கொண்டு தனது நோக்கத்தை நிறைவேற்றும் வெறியுடன் அமைதியாக இருக்கிறார். புதிதாக அடித்த முளைகாம்பில் குதிரையை கட்டிவிட்டு சென்று விடுகின்றனர் வீரர்கள். அவர்கள் சென்ற பிறகு ஆராவரம் அடங்குவரை காத்திருந்து வலியையும் பொறுத்துக் கொண்டு இருந்துவிட்டு எழுந்தார் ஒண்டிவீரர். முளைக்காம்பை உறுவி கையை விடுவிக்க மற்றொரு கையால் முயல்கிறார் ஆனால் முடியவில்லை, தான் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் முளைக்காம்பில் மாட்டியிருந்த கையை வெட்டிவிட்டு, இரத்தம் சொட்ட சொட்ட குதிரையை அவிழ்த்துக்கொண்டு அமைதியாக அங்கிருந்து வெளியேறுகிறார்.
வெளியேறும் பொழுது நெற்கட்டான் செவ்வலை நோக்கி நிறுத்தப்பட்டிருந்த பீரங்கிகளை ஆங்கில சிப்பாய்களின் கூடாரத்தை நோக்கி திருப்பி வைத்துவிட்டு அங்கிருந்த நகராவை அடித்து போர்முழக்கம் இட்டு குதிரையை விரட்டிக் கொண்டு நெற்கட்டான் செவ்வலை நோக்கி பறந்தோடுகிறார். நகராவின் ஒலி கேட்டு எழுந்த ஆங்கிலப்படை அவசர அவசரமாக அந்த் இரவின் இருட்டில் பீரங்கிகளை உபயோகிக்க அது அவர்களின் கூடாரத்தையே தாக்கி பலத்த சேதத்தை உருவாக்குகிறது. குதிரையில் சென்ற ஒண்டிவீரன் பத்திரமாக பூலித்தேவரை சென்றடைகிறார். ஒண்டிவீரனின் வீரத்தை மெச்சியவர் ஒரு கையை ஒண்டிவீரன் இழந்திருப்பதை பார்த்து கவலைப்படுகிறார். அப்பொழுது ஒண்டிவீரன் ஒரு கை போனால் என்ன அதற்கு பதிலாக எனக்கு நீங்கள் தங்கத்தில் ஒரு கை செய்து கொடுப்பீர்களே நாம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் கவனம் செலுத்துவோம் என்று கூறுகிறார்.
இந்த படையெடுப்பின் ஆதாரங்கள் ஆங்கிலேயர் ஆவணங்கள் வழியாக உறுதி செய்ய முடிகிறது. 1755ல் படையெடுப்பு நடந்ததும் ஆங்கிலேயப் படைக்கு அலெக்ஸாண்டர் ஹெரான் தலைமை தாங்கியிருக்கிறார். இந்த படையில் ஆற்காடு நவாப் முகமது அலியின் படையும் அதன் தளபதியாக ஆற்காடு நவாப்பின் அண்ணன் மகபூஸ்கானும், ஆங்கிலேயரின் சுதேசிப் படையும் அதன் தளபதியாக கான் சாகிப்பும் இருந்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. பூலித் தேவனின் கோட்டையை தகர்க்க 18 பவுண்ட் பீரங்கிக் குண்டுகள் தேவை ஆனால் ஆங்கிலப் படையிடம் 12 பவுண்ட், 14 பவுண்ட் குண்டுகளே இருந்திருக்கின்றன. இதனால் ஹெரான் பூலித்தேவரை பயமுறுத்தி கப்பத்தை வசூலிக்கும் எண்ணத்துடன் தான் முதலியார் துபாஷை அனுப்புகிறார். அந்த பயமுறுத்தலுக்கு பயப்படாமல் விதித்த நிபந்தனையை நிறைவேற்றி போரிடுகிறார் பூலித்தேவரும் அவரது தளபதி ஒண்டிவீரனும்.
அதன் பிறகு கோட்டையை தகர்க்க ஹெரான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிகிறது 1755ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி கோட்டையை தகர்க்க முடியாமல் முற்றுகையை முடித்துக் கொண்டு மதுரையை நோக்கி திரும்புகிறது ஆங்கிலப்படை. இதன் பிறகு ஒண்டிவீரனின் மரணத்தைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை ஆனால் பூலித்தேவரின் மறைவிற்குப் பின்னும் அவரின் மகன்களின் படையில் இருந்து சண்டையிட்டதும் தெரிய வருகிறது. ஆனால் ஒண்டிவீரனின் மரணம் பற்றிய தகவல் இல்லை ஆனால் மக்கள் ஒண்டிவீரனை தங்களது தெய்வமாக வழிபடுகின்றனர்.
இந்த தகவல்களை அந்த பகுதியில் வசிக்கும் பிற சமூகமக்களும் உறுதி செய்கின்றனர். இன்று அருந்ததிய மக்கள் அந்த பகுதியில் எந்த நிலத்திற்கும் சொந்தகாரர்களாக இல்லை ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக நிலம் வைத்திருந்து விவசாயமும் செய்திருக்கின்றனர் என்பதை ஒண்டிவீரனின் வரலாறு நமக்கு தெளிவாக எடுத்துச் சொல்கிறது.



இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறுகள் அனைத்தும் 1800களுக்குப் பிறகான போராட்டங்களுக்கே முக்கியத்துவம் தருகின்றன. அதற்கு ஒரு நூற்றாண்டு முன்பே வெள்ளையருக்கு வரி கொடுக்க மறுத்து, நேருக்கு நேர் களமாடி கதிகலங்க வைத்த போராளிகள் தமிழகத்தில் உண்டு. அவர்களில் முதன்மையானவர் மாவீரன் பூலித்தேவன். நெல்கட்டும்செவல் என்ற பாளையத்தை ஆண்டவர். வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியர் போன்றோர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வீறுகொண்டு போராட முன்னோடியாக இருந்தவர்.
 உள்ளூர் துரோகிகளின் துணையோடு பெரும்படை நடத்திவந்த கர்னல் ஹெரான், டொனால்டு காம்பெல் போன்ற பிரிட்டிஷ் தளபதிகளை 4 முறை புறமுதுகிட்டு ஓடச்செய்த மாவீரன். அந்த மாவீரனின் வெற்றிக்குக் கைகொடுத்த முக்கியத் தளபதிகளில் ஒருவர்தான் ஒண்டிவீரன்!
வரலாற்றுப் பதிவுகளில் புறக்கணிக்கப்பட்ட வீரர்களில் முதன்மையானவர் ஒண்டிவீரன். ‘‘அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பல வீரர்கள் மன்னர் படையணிகளில் முக்கியப்பங்கு வகித்திருக்கிறார்கள். அவர்களில் மதுரைவீரன், ஒண்டிவீரன் போன்றோர் முக்கியமானவர்கள். வரிகட்ட மறுத்து முதன்முதலில் ஆயுத நடவடிக்கையில் இறங்கிய மாமன்னன் பூலித்தேவனின் நம்பிக்கைக்குரிய தளபதிதான் ஒண்டிவீரன். இயற்பெயர் வீரன். ஒண்டிக்கு ஒண்டியாக நின்று எதிரியை வீழ்த்தும் வல்லமைமிகுந்தவர் என்பதால் ஒண்டிவீரன் ஆனார்.
இவரது தலைமையிலான பூலித்தேவன் படையினர் 18 அடி நீளமுள்ள ஈட்டியை குறி தவறாமல் எதிரிகள் மேல் பாய்ச்சுவதில் கைதேர்ந்தவர்கள். வெறும் வாளும் ஈட்டியும் கேடயமும் கொண்டு வெள்ளையர் பீரங்கிகளைத் தகர்த்தவர்கள். 1767ல் பூலித்தேவர் மறைந்தபிறகும், தங்கள் மண்ணை எதிரிகள் கைப்பற்றவிடாமல் சக தளபதிகளுடன் இணைந்து போராடியுள்ளார் ஒண்டிவீரன்’’ என்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.
ஒண்டிவீரன் பற்றி நெல்லை வட்டாரத்தில் பல கதைப்பாடல்கள் உலவுகின்றன. அப்பாடலில் இடம்பெறும் செய்திகள் வியப்பூட்டுகின்றன.
பூலித்தேவரின் ஒற்றர் படைக்கு தளபதியாக ஒண்டிவீரன் இருந்தார். அத்தருணத்தில் கர்னல் ஹெரான், போர்தொடுக்கும் நோக்கில் தென்மலையில் முகாமிட்டு காத்திருந்தான். என்னதான் வெள்ளையரை ஓட ஓட விரட்டியடித்தாலும், அவர்களின் பீரங்கித் தாக்குதலை சமாளிப்பது பாளையத்து வீரர்களுக்கு சிரமமாகவே இருந்தது. அதற்கு மாற்றுவழி காணுமாறு தளபதி ஒண்டிவீரனுக்கு உத்தரவிட்டார் பூலித்தேவன். அதையேற்று தானே களத்தில் இறங்கினார் ஒண்டிவீரன்.
அன்று இரவு தொழிலாளி வேடம் பூண்டு வெள்ளையர் முகாமுக்குச் சென்றார். வழிமறித்த ஹெரானின் வீரர்களிடம், குதிரைக்கு வார்கட்ட வந்ததாகச் சொல்லி உள்ளே நுழைந்த ஒண்டிவீரன், அனைவரும் அசந்த நேரத்தில் நெல்கட்டும்செவலை நோக்கியிருந்த பீரங்கிகளை வெள்ளையர் படை திசையிலேயே திருப்பி வைத்தார். அருகில் வெள்ளைக்காரனின் பட்டத்துக்குதிரை நின்று கொண்டிருந்தது. பட்டத்துக்குதிரை வெற்றியின் சின்னம். அதைக் கவர்ந்து செல்வது வெற்றி பெற்றதற்கு சமம். மெல்ல அதன்மேலேறி பிடரியைப் பிடித்து உலுக்கிக் கிளப்பினார். சிலிர்த்த குதிரை மிரண்டு சத்தம்போட, வீரர்கள் ஓடிவந்தார்கள். அருகில் இருந்த தீவனக்கொட்டடியில் புற்களை மேலே போட்டுக்கொண்டு ஒளிகிறார் ஒண்டிவீரன்.
குதிரை கட்டில்லாமல் நிற்பதைப் பார்த்த வீரர்கள், தீவனக்கொட்டடியில் குதிரையைக் கட்டுவதற்காக ஒரு இரும்புக்கம்பியை அச்சாக அடிக்கிறார்கள். அந்தக் கம்பி, ஒண்டிவீரனின் வலதுகையில் இறங்கி, பூமியைத் துளைக்கிறது. வலி உயிரை இழுக்கிறது. ஆனால், ஒண்டிவீரன் சத்தம்போடவில்லை.
ரத்தம் பெருக்கெடுக்கிறது. வலி வதைக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் விடியப் போகிறது. மன்னன் தமக்கிட்ட கட்டளையை நிறை வேற்ற வேண்டும். யோசித்த ஒண்டிவீரன் தன் இடதுகையால் வாளை எடுக்கிறார். அடுத்த நொடி, வலதுகையில் இறங்குகிறது வாள். துண்டாகிறது கை. ரத்தம் சொட்டச் சொட்ட பட்டத்துக்குதிரையை அவிழ்த்துக்கொண்டு வெள்ளையர் முகாமை விட்டு வெளியேறுகிறார். இதைக்கண்ட வெள்ளைக்கார வீரர்கள் பீரங்கியை இயக்க, முகாமுக்குள்ளேயே குண்டுகள் விழுகின்றன. நிலைகுலைந்த வெள்ளையர்கள் முகாமை காலி செய்துவிட்டு தப்பியோடுகிறார்கள்.
ஒண்டிவீரனின் இந்தக் கதையை, ‘அங்கக்கை போனால் என்ன, தங்கக்கை தருவான் பூலிமன்னன்’ என்று தொடங்கும் கும்மிப்பாட்டு வடிவில் பாடுகிறார்கள் நெல்லை மக்கள். இதன்மூலம், தன்னைத்தானே வருத்திக்கொண்டு விடுதலைக்காகப் போராடிய முதல் தற்கொலைப்படை போராளியாகவும் ஒண்டிவீரனை உணர முடிகிறது.
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களின் பல கிராமங்களில் ஒண்டிவீரனை காவல்தெய்வமாக வணங்குகிறார்கள். வெள்ளையருக்கு எதிராகப் பொங்கியெழுந்த வீரர்கள் சிந்திய ரத்தத்தாலோ என்னவோ, நெல்கட்டும்செவல் அடர்ந்த செம்மண் பூமியாக இருக்கிறது. சங்கரன்கோவிலிலிருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது இக்கிராமம். பூலித்தேவனின் அரண்மனை இன்றும் அவரின் வீரத்துக்கு அடையாளமாகவே இம்மண்ணில் நிற்கிறது. ஒண்டிவீரனின் மரபைச் சார்ந்த மக்கள் அவருக்கும் ஒரு நினைவிடம் எழுப்பி அவர் நினைவைப் போற்றுகிறார்கள்.
‘‘பேராசிரியர் ராசையா உள்ளிட்ட சில வரலாற்று ஆய்வாளர்கள், சுதந்திரப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பங்களிப்பைப் பதிவு செய்துள்ளார்கள். இந்தப்பணி விரிவடைய வேண்டும். அவ்விதம் செய்தால்தான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு முழுமை பெறும்’’ என்கிறார் பிரபஞ்சன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக