திங்கள், 27 நவம்பர், 2017

இந்தியாவின் 10வது பிரதமர் வி.பி.சிங் பிறந்த தினம் நவம்பர் 27, 1940.



இந்தியாவின் 10வது பிரதமர் வி.பி.சிங் பிறந்த தினம் நவம்பர் 27, 1940.

1931-ம் ஆண்டு ஜுன் மாதம் 25-ந்தேதி அலகாபாத் நகரில் பிறந்த வி.பி.சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை உத்தரபிரதேசத்தில் இருந்த `தையா' சமஸ்தான மன்னர் ஆவார். அந்த மன்னருக்கு 2 மகன்கள். மூத்த மகன் சந்திரசேகர் பிரதாப் சிங். இரண்டாவது மகன்தான் வி.பி.சிங் என்றழைக்கப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங்.

வி.பி.சிங்குக்கு 5 வயதானபோது, மண்டா நகரின் மன்னர் ராஜ்பகதூர் அவரை தனது வாரிசாக தத்து எடுத்துக் கொண்டார். டேராடூன் கர்னல் பிரவுன் பள்ளியில் படிப்பை தொடங்கிய வி.பி.சிங், பின்பு அலகாபாத்தில் உள்ள பாய்ஸ் உயர்நிலைப்பள்ளியிலும், புனே பெர்குஷன் கல்லூரியில் பி.எஸ்.சி.யும் படித்தார்.

அப்போது அணுசக்தி விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வி.பி.சிங் கல்லூரியில் சிறந்த மாணவராகவும் தேர்ச்சி பெற்றார்.

1950-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படிப்பை முடித்த வி.பி.சிங், தீவிர அரசியலில் குதித்தார். வினோபாவேவின் பூமிதான இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். தனது சொந்த நிலத்தையே அந்த இயக்கத்துக்கு தானமாகக் கொடுத்தார்.

1969-ம் ஆண்டு ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1971-ல் முதல் முறையாக பாராளுமன்றத்துக்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார். 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி மந்திரி சபையில் துணை வர்த்தக மத்திய மந்திரி ஆனார்.

இவர் நேரு காலத்தில் அலகாபாத் உள்ளூர் அரசியலில் நுழைந்து விரைவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன் உறுதியான நேர்மையின் காரணமாக புகழ் பெற்றார். இவரின் அரசியல் வாழ்வு முழுக்க நேர்மையாக இருந்து மதிப்பு பெற்றார்.

பிறகு மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி 1980-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பணியாற்றினார். 1980 ல் ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியை இந்திய தேசிய காங்கிரஸ் கைப்பற்றியது, இந்திரா காந்தி இவரை உத்திரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக நியமித்தார். தென் மேற்கு மாவட்டங்கள் வழிப்பறி, கொள்ளை போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. முதல்வரானதும் வழிப்பறி & கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டார். முழுவதுமாக இக்கொள்ளையை தடுக்கமுடியாததால் இதற்கு தானே பொறுப்பேற்றுக்கொண்டு பதவி விலக முன்வந்தார், இவரின் இச்செய்கை இவருக்கு இந்தியா முழுவதும் பெயர் பெற்று தந்தது. 1983 ல் இவரின் மேற்பார்வையில் சில பயங்கரமான கொள்ளையர்கள் சரண் அடைந்தனர்.

1984ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் பெருவெற்றி பெற்றது. இராஜீவ் காந்தி முக்கியதுவம் வாய்ந்த நிதி அமைச்சகத்துக்கு இவரை அமைச்சராக்கினார். இராஜீவ் நினைத்தபடி லைசன்ஸ் ராஜ்' முறையை சீராக தளர்த்தி வந்தார். இந்தியாவில் தங்கம் விலை அதிகமாக இருந்ததால் அதிகளவில் தங்க கடத்தல் இருந்துவந்தது. தங்கத்திற்கான வரியை குறைத்தும், கடத்தப்பட்ட தங்கத்தை பிடிக்கும் காவல்துறையினருக்கு அவர்கள் பிடித்த தங்கத்தில் சிறியதை ஊக்கமாக கொடுத்தும் தங்க கடத்தலை கட்டுக்குள் கொண்டுவந்தார். அமுலாக்கப்பிரிவுக்கு அதிக அதிகாரங்களை கொடுத்தார். வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக இப்பிரிவு பல அதிரடி சோதனைகளை நடத்தியது. குறிப்பாக திருபாய் அம்பானி , அமிதாப் பச்சன் போன்ற அதிகாரவட்ட செல்வாக்குள்ள பலர் சோதனைக்குள்ளாகினர். பலர் காங்கிரஸ் கட்சிக்கு நிதி உதவி செய்தவர்கள் ஆனதால் வேறுவழியின்றி இராஜீவ் காந்தி இவரை நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார். நிதி அமைச்சராக அவர் எடுத்த நடவடிக்கைகள் புகழடைந்ததால் அமைச்சரவையை விட்டு விலக்காமல் அவருக்கு மற்றொரு முக்கிய துறையான பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டது.

பாதுகாப்பு துறை அமைச்சரானதும் பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்யும் முறையை ஆய்வு செய்தார். போபர்ஸ் பீரங்கி பேர ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பான தகவல்களை இவர் வைத்திருப்பதாகவும் அவை பிரதமரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் தகவல்கள் என்றும் செய்திகள் வர தொடங்கியது. அதைத்தொடர்ந்து இவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரிலிருந்து இவர் விலகிக்கொண்டார், மக்களவை உறுப்பினர் (அலகாபாத் தொகுதி) பதவியையும் இராஜினாமா செய்தார்.

மக்களவையிலிருந்து விலகியதும் அருண் நேரு & ஆரிப் முகமது கானுடன் இணைந்து ஜனமோர்ச்சா என்ற கட்சியை தொடங்கினார். இவர் பதவி விலகியதால் அலகாபாத் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்டு கடும் போட்டிக்கிடையே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அனில் சாஸ்திரியை தோற்கடித்தார். ஜனதா கட்சியின் குருவான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளான அக்டோபர் 11 அன்று 1988 ல் ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தோற்றுவித்தனர். ஜனதா தளத்திற்கு வி.பி.சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில கட்சிகளான திமுக, தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய முன்னனி உருவாக்கப்பட்டது, இதற்கு என்.டி.இராமா ராவ் தலைவராகவும், வி.பி.சிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர்.

காங்கிரஸுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக இடது சாரி கம்யூனிஸ்டுகளுடனும், வலது சாரி பாஜகவுடனும் தேர்தல் கூட்டணி வைத்து தேசிய முன்னனி 1989 பொது தேர்தலில் போட்டியிட்டது. தேசிய முன்னனி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களவையில் பெரும்பான்மை இடங்களை பெற்றதால் ஆட்சி அமைக்க முடிவு செய்தன. கம்யூனிஸ்டுகளும், பாரதிய ஜனதா கட்சியும் அரசில் பங்கேற்க மறுத்துவிட்டு அரசில் பங்குபெறாமல் வெளியிலிருந்து தேசிய முன்னனி அரசை ஆதரிப்பதாக கூறின.

இராஜிவ் காந்திக்கு மாற்றாக காங்கிரஸ் எதிர் அணியினர் வி.பி.சிங் அவர்களையே தூய்மையான மாற்று பிரதம் வேட்பாளராக முன்னிருத்தி இருந்த போதிலும் டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் அவர்கள் நாடாளுமன்றத்தின் நடு அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். அரியானாவின் ஜாட் தலைவரான தேவி லால் அப்பரிந்துரையை மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஐனதா தளத்தில் வி.பி.சிங்கிற்கு போட்டியாளராக விளங்கிய சந்திர சேகருக்கு தேவிலால் பிரதமர் பதவியை மறுத்தது ஆச்சரியத்ததை கொடுத்தது. ஏனென்றால் கருத்தொருமித்த வேட்பாளராக தேவிலால் வருவார் என சில தலைவர்கள் அவரிடம் கூறியதே. வி.பி.சிங் பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் நாடாளுமன்ற கூட்டத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார், அமைச்சரவையில் பங்கு பெறவும் மறுத்து விட்டார். காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் இணைந்து மத்தியில் முதல் கூட்டணி அரசை அமைத்தவர் என்ற பெருமையும் வி.பி.சிங்குக்கு உண்டு.

டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.

பதவியேற்ற சில தினங்களிலேயே அரசு நெருக்கடியை சந்தித்தது. காஷ்மீர் தீவிரவாதிகள் அப்போதய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சையதின் மகளை கடத்திச்சென்றனர். தீவிரவாதிகளின் நிபதனைக்கிணங்க சில தீவிரவாதிகளை அரசு விடுதலை செய்து அமைச்சரின் மகளை மீட்டது. மாநில பிரிவினைவாதிகளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என கருதிய பாஜகவின் வற்புறுத்தலினால் சர்ச்சைக்குரிய முன்னால் அதிகாரியான ஜக்மோகனை ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுனராக நியமித்தார். அதிகாரபூர்வமற்ற காஷ்மீர் இஸ்லாம் தலைவரான மிர்வாச்சின் மரண ஊர்வலத்தின் போது நடந்த துப்பாக்கி சூடு நடத்த ஜக்மோகன் உத்தரவு கொடுத்ததன் விளைவாக காஷ்மீர் தீவிரவாதம் மேலும் பரவகாரணமாக இருந்தார்.

பஞ்சாபில் கடும் போக்குடைய சித்தார்த்த சங்கர் ரேவை நீக்கிவிட்டு மித போக்குடைய முன்னால் அதிகாரி நிர்மல் குமார் முகர்ஜி அவர்களை ஆளுனராக நியமித்தார். இவர் புது தேர்தல் நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து சென்றார். வி.பி.சிங் பொற்கோவிலுக்கு சென்று இந்திரா காந்தி அரசில் நடைபெற்ற புளுஸ்டார் நடவடிக்கைக்காக மன்னிக்கும் படி வேண்டிக்கொண்டார்.

இலங்கையிலிருந்து இந்திய அமைதி காக்கும் படையை வி.பி.சிங் விலக்கிக்கொண்டார்.

தேசிய அளவில் சமூக நீதி தொடர்புடைய கருத்துக்களையும் பிரச்சனைகளையும் முன்னெடுத்து செல்ல முடிவு செய்து மண்டல் கமிசன் பரிந்துரைகளை நடைமுறை படுத்த முடிவு செய்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொது துறை அமைப்புகளில் வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்ய மண்டல் கமிசன் பரிந்துரைத்தது. வட இந்தியாவில் இம்முடிவுக்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் அல்லாதவர்களிடம் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு நகர்புறங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.

இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 1992-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசின் உத்தரவு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியபோது, `இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. பல்லாண்டுகளாக சுரண்டப்பட்டு வந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு மகத்தான வெற்றியாகும்' என்று வி.பி.சிங் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.

1989 ல் அம்பானி லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 1990 ல் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் முழு நிர்வாகத்தை கைப்பற்ற திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் மேற்கொண்ட முயற்சிகளை அரசு நிதி நிறுவனங்களான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பொது காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தடுத்தன. லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாகத்தை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அம்பானி அந்நிறுவனத்தின் செயற்குழு- தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அதைத்தொடர்ந்து இந்திய ஸ்டேட் வங்கியின் டி.என்.கோஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

தீவிர இந்து அமைப்புகளின் போராட்டமாக இராம ஜென்மபூமி இருத்தது, பாஜக அதை ஆதரித்து வந்தது. இராம ஜென்மபூமி இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட பாஜகவின் தலைவர் எல் கே அத்வானி வட இந்திய மாநிலங்களில் இரத யாத்திரை மேற்கொண்டார். அவருடைய இரத யாத்திரை அயோத்தியை அடையும் முன்னர் பீகாரில் கைது செய்யப்பட்டார். இதனால் பாஜக தேசிய முன்னனிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வி. பி. சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சென்றது. அதில் 142-346 என்ற அளவில் வி. பி. சிங் அரசு தோல்வி கண்டது.

வி.பி.சிங் 17 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். தவிர, அவருக்கு சிறுநீரக கோளாறும் இருந்து வந்தது.வி.பி.சிங் உடல் நலக்குறைவால் 27-11-2008 அன்று மரணம் அடைந்தார்.வி.பி.சிங்குக்கு சீதா குமாரி என்ற மனைவியும், அஜய் சிங், அபய்சிங் என்னும் இரண்டு மகன்களும் உள்ளனர்.மூத்த மகன் அஜய் சிங் சார்ட்டட் அக்கவுண்டண்ட் படித்து அமெரிக்காவில் வங்கி அதிகாரியாக பணியாற்றினார். இளைய மகன் அபய் சிங் டாக்டர் ஆவார். மனைவி சீதாகுமாரியும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக