வெள்ளி, 10 நவம்பர், 2017

முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை பிறந்த தினம் நவம்பர் 11, 1899.



முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை பிறந்த தினம் நவம்பர் 11, 1899.

கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக
முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ , தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
பிறப்பும் இளமைக்காலமும்
1893-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி பெரியண்ண பிள்ளை - சுப்புலட்சுமி அம்மையார் அவர்களுக்கு புதல்வனாய் பிறந்தார். தமிழ் இலக்கண கடலான இவர் பள்ளிக்கு சென்றதில்லை. ஐந்தாவது வயதில் முத்துச்சாமிக் கோனாரிடம் மணலில் தமிழ் எழுத்துகளை எழுதிப் பயிற்சி பெற்றார். நாவலர் வேங்கடசாமி நாட்டார், மறைமலையடிகள் , திரு. வி. க , நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலிய தமிழறிஞர்கள் தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கண-இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார்.

முக்கிய நிகழ்வுகள்

முதல் இந்தி எதிர்ப்புப்போரில் (1938) தந்தை பெரியாரோடும் , தமிழறிஞர்களோடும் கைகோத்துப் போராடிய முதன்மைப் போராளியே கி. ஆ. பெ. விசுவநாதம்.
1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் மக்களை தூண்டியதாகக் கூறி இரண்டு மாதம் சிறையிலடைக்கப்பட்டார். அதன் காரணமாக கி. ஆ. பெ. விசுவநாதம் தனது மகள் மணிமேகலை திருமண உறுதியேற்பாடு நிகழ்வுக்கு செல்ல முடியவில்லை. தன் வாழ்நாளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் போருக்கு துணை நின்றார்.
விருதுகள்
1956ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கம் "முத்தமிழ் காவலர்" விருது வழங்கியது
1965ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற சித்த மருத்துவ மாநாட்டில் "சித்த மருத்துவ சிகாமணி" விருது வழங்கப்பட்டது
1975ஆம் ஆண்டு தமிழ்நாட்டு நல்வழி நிலையம் "வள்ளுவ வேல்" என்னும் விருது வழங்கியது
பெருமைக்குரிய செய்திகள்
1. 2000ஆம் ஆண்டிலிருந்து கி. ஆ. பெ. விசுவநாதம் விருது அவர்களின் பெயரில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
2. இவரது நினைவில் ஐந்து ரூபாய் தபால் தலை இந்திய தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டது.
3. 1997ல் முதல்வர் கருணாநிதி திருச்சியில் துவக்கிய மருத்துவக் கல்லூரிக்கு கி. ஆ. பெ.யின் பெயர் சூட்டப்பட்டது.

இயற்றிய நூல்கள்

1. அறிவுக்கதைகள்
2. அறிவுக்கு உணவு
3. ஆறு செல்வங்கள்
4. எண்ணக்குவியல்
5. எது வியாபாரம்? எவர் வியாபாரி?
6. எனது நண்பர்கள்
7. ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும்
8. தமிழ் மருந்துகள்
9. தமிழ்ச்செல்வம்
10. தமிழின் சிறப்பு
11. திருக்குறள் கட்டுரைகள்
12. திருக்குறள் புதைபொருள் - பாகம் 1
13. திருக்குறள் புதைபொருள் - பாகம் 2
14. திருக்குறளில் செயல்திறன்
15. நபிகள் நாயகம்
16. நல்வாழ்வுக்கு வழி
17. நான்மணிகள்
18. மணமக்களுக்கு
19. மாணவர்களுக்கு
20. வள்ளலாரும் அருட்பாவும்
21. வள்ளுவர்
22. வள்ளுவரும் குறளும்
23. வானொலியிலே


“தமிழ்த் தேசியப் போராளி” கி.ஆ.பெ.விசுவநாதம் பிறந்த நாள் 11.11.1899
‘தமிழ்த்தேசியப்போராளி’ கி.ஆ.பெ.விசுவநாதம் பிறந்த நாள்
11.11.1899
பார்ப்பனரல்லாதோர் இயக்கமாகிய நீதிக் கட்சியை “திராவிடர் கழகம்” என்று பெரியாரும், அண்ணாவும் பெயர் மாற்றம் செய்ய விரும்பிய போது அதனை எதிர்த்து இயக்கம் கண்டவர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆவார்.
கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் திருச்சிராப்பள்ளியில் பெரியண்ணன்-சுப்பம்மாள் இணையருக்கு மகனாகப் 11.11.1899 இல் பிறந்தார். இவர் தந்தையார் சிவத்தொண்டில் ஈடுபட்ட காரணத்தால் சிவனைக் குறிக்கும் வகையில் இவருக்கு விசுவநாதம் என்று பெயரிட்டார்.
இவரின் தந்தையார் பெரியண்ணன் அவர்கள் தமது மூத்த சகோதரர் கிருஷ்ணன், ஆறுமுகம் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தததோடு கூட்டாகப் புகையிலைத் தொழிலையும் நடத்தி வந்தார். மூவரின் முதலெழுத்தைக் குறிக்கும் வகையில் கி.ஆ.பெ. (K.A.P.) எனும் பெயரினை தொழிலுக்குப் பயன்படுத்தியதால் இந்தப் பெயரே காலப்போக்கில், விசுவநாதம் அவர்களுக்கும் தலைப்பெழுத்தாக நிலைத்து விட்டது.
வலையானந்த சுவாமிகள் மூலம் சைவப்பற்றையும், மறைமலையடிகள் மூலம் தமிழ்ப்பற்றையும். வளர்த்துக் கொண்டார். ஆயினும் சைவத்தின் பெயரால் சாதி ஏற்றத்தாழ்வு பாராட்டினால் அதை ஏற்க மறுத்தார். கி.ஆ.பெ.வி. சிவ தீட்சைப் பெறாத தாழ்த்தப்பட்ட மக்கள் திருவாசகம் படிப்பதற்கு அனுமதி கேட்ட போது சைவராகிய வாலையானந்த சுவாமிகள் மறுத்தார். அதுமுதல் தன் கழுத்தில் சிவதீட்சைப் பெற்று தான் அணிந்திருந்த உத்திராட்ச மாலையை இனி அணிவதில்லை என்று கழற்றி வீசினார்.
1920ஆம் ஆண்டில் அகவை நிரம்பிய கி.ஆ.பெ.வி. நீதிக்கட்சியில் இணைந்து பார்ப்பனரல்லாத தமிழர்களுக்குப் பாடுபட்டதோடு, பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
சாதிக்கொரு நீதி சொல்லும் ஆரிய மனுதர்மக் கோட்பாட்டின்படி ஒடுக்கப்பட்ட மக்களும், கணவனை இழந்த பெண்களும் கொடுமைக்கு உள்ளான போது கொதிப்படைந்தார். 1927ஆம் ஆண்டு மே மாதம் சுமார்100 தாழ்த்தப்பட்டோரை அழைத்துக் கொண்டு முதன்முதலில் ஆலய நுழைவை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக திருச்சிராப்பள்ளி மலைக் கோட்டை, திருவானைக்காவல் கோயில்களிலும் கி.ஆ.பெ.வி.யின் தலைமையில் ஆலய நுழைவு மேற்கொள்ளப்பட்டது.
24.7.1927 அன்று அதே திருச்சிராப்பள்ளியில் “சுயமரியாதை அல்லது மூன்று நண்பர்கள்” நாடகம் அரங்கேற்றப்பட்டது. கி.ஆ.பெ.வி. இந்த நாடகத்தை பொறுப்பேற்று நடத்தினார். கலப்புத் திருமணம், விதவைத் திருமணம் ஆகியவை குறித்து இந்நாடகத்தின் கதா பாத்திரங்கள் வலியுறுத்தின.
அன்றைய தெருக்கூத்து நாடகங்களில் “வண்ணான் பாட்டு” எனும் பெயரில் சலவைத் தொழில் செய்திடும் மக்கள் இழிவு செய்யப்பட்டனர். ‘வண்ணான் வந்தானே…. வண்ணாத்தியும் வந்தாளே….” என்று தொடங்கும் ஓடியன் கிராமப் போன் இசைத் தட்டுப் பாடல் ஒலிபரப்பிற்கு எதிராக தென்னிந்திய வண்ணார் குல மகாஜனக் கூட்டம் 3.11.1933இல் திருச்சிராப்பள்ளியில் கூடியது. இக்கூட்டத்திற்கு கி.ஆ.பெ.வி.தலைமை தாங்கி கண்டனம் செய்தார். (1)
1938ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண முதல்வர் இராசாசி, பள்ளிகளில் கட்டாய இந்தியைப் புகுத்திய போது இதற்கு எதிராகத் தமிழறிஞர்கள் போர்க்குரல் எழுப்பினர். மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகிய மூன்று தமிழறிஞர்களின் பங்களிப்பு தமிழக வரலாற்றில் மிக முகாமையானவை.
சென்னை மாகாணத்தில் தமிழரல்லாதப் பகுதிகளில் இந்தித் திணிப்புக்கு எதிராகக் கிளர்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்தப் போராட்டத்தில் தமிழகப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் மட்டுமே தங்களை முழுமையாக இணைத்துக் கொண்டனர். இதில் நீதிக்கட்சியில் பணியாற்றிய தமிழரான கி.ஆ.பெ.வி.யின் பங்கு அளப்பரியதாகும்.
26.12.1937 அன்று திருச்சிராப்பள்ளியில் முதன்முதலில் கி.ஆ.பெ.வி. “சென்னை மாநிலத் தமிழர் மாநாடு” பெயரில் இந்தி எதிர்ப்பு மாநாட்டை கூட்டினார். அன்று நடந்த பேரணியில் பத்தாயிரம் பேர் பங்கேற்றனர். அதில் அவர் வெளியிட்ட அறிக்கை அனைத்து தமிழர்களையும் போராட்டத்தில் ஈர்க்கும் படி அமைந்தது. அது வருமாறு:
“தமிழனுடைய நாடு படையெடுப்பால் அழிக்கப்பட்டது. தமிழனுடைய நூல் கடல் நீரால் அழிக்கப்பட்டது. தமிழனுடைய கல்வி பார்ப்பனரால் ஒழிக்கப்பட்டது. தமிழனுடைய அறிவு புராணங்களால் மழுக்கப்பட்டது. தமிழனுடைய ஒற்றுமை சாதியால் பிரிக்கப்பட்டது. தமிழனுடைய பொருள் புரோகிதத்தால் பிடுங்கப்பட்டது. தமிழனுடைய கட்சி உபாயத்தால் ஒடுக்கப்பட்டது. தமிழனுடைய பதவி வஞ்சனையால் கவரப்பட்டது. தமிழனுடைய வீரம் உபதேசத்தால் அடக்கப்பட்டது.”
தமிழறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை திறப்புரை செய்த இம் மாநாட்டில் கட்டாய இந்தி திணிப்பைக் கண்டித்தும், தமிழ் மாகாணத்தை தனி மாகாணமாகப் பிரிக்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இராசாசி இந்தியை ஆதரித்து பேசிய போதெல்லாம் கி.ஆ.பெ. தனது வாதத்திறமையால் வென்று காட்டினார். இராசாசி தமிழ் இட்டலி போன்றது. இந்தி சட்னி போன்றது என்பார். இவரோ சட்னி இன்றி இட்டலியை உண்ண முடியும். இட்டலியின்றி சட்னியை உண்ண முடியுமா? என்று பதிலடி தருவார்.
உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம், இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ள இந்தி என இந்திமொழி ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்புவர். இவரோ, “பெரிய பூனைக்கு என்று ஒரு துளை செய்த பிறகு குட்டிப் பூனைக்காக ஒரு சிறு துளை செய்வது முட்டாள் தனம்” என்று பதில் தருவார்.
1938இல் சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியம் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக சோமசுந்தர பாரதியாரும், செயலாளராக கி.ஆ.பெ.வி.யும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பின் தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. நாடெங்கும் கயல், புலி, வில் அடங்கிய மூவேந்தர் கொடிகள் கி.ஆ.பெ.வி. அறைக்கூவலால் ஏற்றப்பட்டன.
இந்தி எதிர்ப்புப் பரப்புரைக்கு கி.ஆ.பெ.வி. தூத்துக்குடிக்கும், திருநெல்வேலிக்கும் சென்றபோது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நெல்லை மேலை வீதியில் கற்கள் வீசப்பட்டதில் நெற்றி உடைந்து இரத்தம் வழிந்தோடிய போதும் அவர் பேசுவதை நிறுத்த வில்லை. அப்போது ,”நான் வீட்டிலிருந்து புறப்படும் போது திரும்ப வருவதாக சொல்லிப் புறப்பட வில்லை. நான் உயிரோடு இருந்து தமிழை வளர்ப்பதை விட என் புதை குழியே அதிகமாக வளர்க்கும்!” என்றார்.
எட்டயபுரத்தில் சோமசுந்தர பாரதியார் தலைமையில், கி.ஆ.பெ.வி. பேசிய போது கல்லெறிதல் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது கி.ஆ.பெ.வி.யின் உதடு கிழிந்து இரத்தம் வழிந்தோடியது. உடனடியாக கூட்டம் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் நடந்த முதல் கட்ட இந்தி எதிர்ப்பு போரில் மட்டும் 12 மாவட்டங்களில் 314 ஊர்களில் 480 நாட்கள் 617 சொற்பொழிவுகளை கி.ஆ.பெ.வி. நிகழ்த்தி சாதனை படைத்தார்.
இந்தி எதிர்ப்புப் போரின் போது கி.ஆ.பெ.வி.னுடைய மகன் இராசரத்தினம் மறைந்தார். அதுபற்றி சிறிதும் கவலை கொள்ள வில்லை. மகன் இறந்த அன்றும் மறு நாளும் தொடர்ந்து கூட்டங்களில் பங்கேற்றார். நீதிக்கட்சி நடத்திய விடுதலை ஏடு தனது தலையங்கத்தில், ” வங்க நாட்டு பாபு சுரேந்திரநாத் பானர்ஜி தனது மகன் இறந்த போது அவரின் மனத்தின்மை மாறாது தொடர்ந்து பணியாற்றியதைப் போல கி.ஆ.பெ.வி. தன் மகன் இறந்த போதும் கலங்காது இந்தி எதிர்ப்புப் போரில் போராடி வருகிறார்” என்று பாராட்டி எழுதியது.
சுயமரியாதை இயக்கத் தலைவராக விளங்கியவர் பெரியார். அவர் தமிழறிஞர்களோடு இணைந்து “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழக்கமிட்ட போது தமிழ்த் தேசிய சிந்தனையாளரான கி.ஆ.பெ.வி.யை மகிழ்ச்சி கொள்ளச் செய்தது.
இராசாசி அரசால் பெரியார் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அந்தச் சிறையிலிருந்த படியே நீதிக்கட்சிக்கு தலைவரானார். சிறை மீண்டு வந்த பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கத்தை திடீரென்று ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று மாற்றினார். எழுச்சி பெற்று வந்த தமிழ்த் தேசிய உணர்ச்சியானது இதனால் திசை திருப்பப்பட்டது.
இதனை கி.ஆ.பெ.வி.யின் மனம் ஒப்புக் கொள்ள வில்லை. அதனோடு பெரியார் நீதிக்கட்சியை சர்வாதிகாரப் போக்கோடு நடத்தி வருவதாகக் கருதினார். அவரின் செயல்பாடுகள் கட்சியைப் பலப்படுத்துவதற்கு உதவவில்லை என்பதாகக் கூறி 25 குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பதவி விலகினார்.
ஆரிய ஆதிக்கத்திலிருந்து தமிழ் மக்களை விடுவிக்கப் போராடும் மறைமலையடிகள், உமா மகேசுவரனார் உள்ளிட்ட தமிழ்ப் புலவர்களை ஆரிய அடிமைகள், ஆரிய கூலிகள் என்று பெரியார் கூறியதை கி.ஆ.பெ.வி. தனது குற்றச்சாட்டுகளில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகி, சாதாரண உறுப்பினராக நீடித்து வந்த நிலையில், 27.08.1944 அன்று சேலத்தில் நடைபெற்ற 16-வது நீதிக்கட்சி மாநாட்டில் கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
‘திராவிடர் கழகம்’ என்னும் பெயர் மாற்றத்திற்கு அண்ணல் தங்கோ, கி.ஆ.பெ.விசுவநாதம், சவுந்தர பாண்டியனார், மு.தங்கவேலு ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். (2)
இந்த நிகழ்வு நடைபெற்றதற்கான புறச்சான்றுகள் எதுவுமில்லையென்றும், கி.ஆ.பெ.வி.க்கும், பெரியாருக்குமிடையே நிலவிய முரண்பாடு கட்சித் சீரமைப்பு தொடர்பானதேயன்றி, “திராவிட நாடு” கேட்டதிலோ, “திராவிடர்கழகம்” பெயர் மாற்றியதலோ அல்லவென்றும் பெரியார் இயக்கங்கள் திரும்பத் திரும்ப கூறி வருகின்றன.
இது உண்மையல்ல, சேலம் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே கி.ஆ.பெ.வி. “திராவிட நாடு” கருத்தியலில் மாறுபாடு கொண்டுள்ளதையும், “தமிழ் நாடு”என்பதில் உறுதியாக இருந்துள்ளதையும் அறிஞர் அண்ணா அவர்கள் கி.ஆ.பெ.வி.க்கும், சவுந்தர பாண்டியனாருக்கும் எழுதிய இரண்டு கடிதங்கள் உறுதிப்படுத்துகின்றன.
15.1.1942இல் சென்னையில் ஜஸ்டிஸ் இளைஞர் மாநாட்டிற்கு கி.ஆ.பெ.வி.யைத் தலைமை தாங்கும்படி அண்ணா கடிதம் ஒன்றின் மூலமாக கேட்டுக் கொண்டார். .கி.ஆ.பெ.வி.யின் கொள்கை நிலைப்பாட்டை உணர்த்தும் அண்ணாவின் கடித வரிகள் பின்வருமாறு:
“திருவாரூர் மாநாட்டில் திராவிட நாடு பற்றிய தீர்மானம் நிறைவேறியிருப்பதால் அதனை எதிர்ப்பது முறையல்ல, திராவிட நாடு பிரிவினை என்பது தமிழ்நாடு தமிழருக்கே என்பதற்கு முரண் அல்ல. இக்கருத்தில் தங்களுக்கு விருப்பமில்லாவிடில், தமிழ் நாடு தனி மாகாணம் ஆவதன் அவசியம் பற்றி தலைமை உரையில் விளக்குங்கள்” (3)
12.8.1944இல் W.P.சவுந்தரபாண்டியனார் அவர்களுக்கு எழுதிய மற்றொருகடிதத்தில் கி.ஆ.பெ.வி.யை சந்தித்து வரக்கூடிய சேலம் மாநாட்டில் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளும்படி அண்ணா கடிதம் ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளார். அது பின்வருமாறு:
“அன்புடைய தலைவருக்கு, வணக்கம். தங்கள் கடிதம் கண்டேன். மகிழ்ந்தேன். KAPஅவர்கள் வருவது பற்றி மிக்க சந்தோசமே, மாநாட்டுக்கு முன்பு அவரை வரவழைத்துத் தாங்கள் கட்சியின் இன்றைய நிலையைக் கூறுதல் அவசியம் என்று கருதுகிறேன். ஏனெனில், அவருடைய முன்னைய குற்றச்சாட்டுகளுக்கும், இன்றுள்ள கட்சியின் பிரச்சனைக்கும் இடையே பலப்பல மாறுதல்கள் உண்டாகி விட்டன எனவே பழையதைக் கிளறிக் கொண்டு எதிர்காலத் திட்டத்தை இடருடையதாக்கிக் கொள்ளக் கூடாது என்று கருதுகிறேன்.
குறிப்பாக, அவர் 1) கட்சிக்காக தரப்பட்ட நிதி, 2) கட்சியின் பத்திரிக்கை, 3) கட்சித் தலைவரின் ஏகபோக உரிமை 4) அமைப்பு முறை இல்லாமை என்பவைகளையே வற்புறுத்துபவர் 5) “தமிழ்நாடு தனி நாடாதல் வேண்டும், திராவிட நாடு அல்ல என்று கூறுவார். K.A.P. தவிர மற்றவர்கள் திராவிட நாடு என்ற குறிக்கோளோ, வரலாறு, இனப் பண்பு, முதலியவற்றுக்கு ஏற்றது என்பதையும் திராவிட நாடு என்னும் திராவிட கூட்டாட்சி என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள்.
நிற்க. நண்பர் KAP அவர்கள் இந்தப்படியே விஷயங்களை யோசிப்பதைவிட இன்றும், இனியும் செய்ய வேண்டியதை யோசிக்க வேண்டும்,” (4)
கி.ஆ.பெ.வி. கொள்கை முரண்பாடு இல்லாதவராக இருந்திருப்பின், அண்ணா மேற்படி கடிதத்தில் தெரிவித்திருக்கும் “திராவிட நாடு” கோரிக்கையை ஏற்றுக் கொண்டு திராவிடர் கழகத்திலே இருந்திருக்க முடியும். தான் ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாக நின்ற காரணத்தால்தான் “தமிழர் கழகம்” எனும் அமைப்பை தோற்றுவித்தார். தமிழர்களிடம் கொள்கை முழக்கம் பரப்பிட அதன் துணையாக ” தமிழர் நாடு” இதழைத் தொடங்கினார்.
திராவிடர் கழகத்திலிருந்து ஏன் விலகினீர்கள்? என்ற கேள்விக்கு அவ்வேட்டில் தெளிவாகவே கி.ஆ.பெ.வி. பதிலுரைத்தார்.
“நான் திராவிடர் கழகத்தில் இருக்கவுமில்லை. விலகவுமில்லை. அவர்கள் தான் ‘தமிழ் வாழ்க’ என்பதிலிருந்து ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதிலிருந்து ‘தமிழ்க்கொடி’ தூக்குவதிலிருந்து விலகிப்போனவர்கள்.” என்று விடையிறுத்தார். ( 5)
கி.ஆ.பெ.வி. தமிழர் கழகம் பெயரிலும், ம.பொ.சி. தமிழரசு கழகம் என்ற பெயரிலும் இயக்கம் தோற்றுவித்து செயல்பட்டு வந்ததை பெரியார் எதிர்த்தார். சென்னை கோகலே மண்டபத்தில் திரு.சி.டி.டி. அரசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், “தமிழர் என்பதும் தமிழர் கழகம் என்பதும் தமிழரசுக் கட்சி என்பதும் தமிழர் ராஜ்ஜியம் என்பதும் தமிழ் நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள்” என்று பெரியார் பேசியதோடு நிறுத்திக் கொள்ளாது பிற இடங்களில் தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்றும் கடுஞ்சொற்களை பயன்படுத்தி எழுதியும் பேசியும் வந்தார்.
அதற்கு பதிலுரையாக பின் வருமாறு தனது ஏட்டிலே கி.ஆ.பெ.வி. எழுதினார்.
“இதனால் தமிழ், தமிழர், ,தமிழரசு, ,தமிழ் நாடு, என்று கூறக்கூடாதென்றும், திராவிடம், திராவிட நாடு, திராவிடர் கழகம், திராவிட அரசு என்றே கூறவேண்டுமென்றும், அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது தமிழ் நாட்டுப் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து வருகிறது. காரணம் ஆந்திரா, மலையாள, கன்னடிய மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும் திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும், நாட்டையுமே கூறி வரும் போது தமிழ் நாட்டு மக்கள் மட்டும் தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக் கூடாது? இதற்கு மாறுபட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்க வில்லை.
அவ்விதமாய் இருந்தாலும் கருத்தும், கொள்கையும் உடையவர்களை பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று கூற வேண்டியது அவசியம் தானா என்பதையும் பெரியாரே எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு கழகத்தின் தலைவர் வாயிலிருந்து கடுஞ்சொற்கள் வருவது நேர்மையானது தானா என்பதை பொது மக்களே கருதிப் பார்க்க வேண்டும்.”
மேலும், பெரியார் ஆந்திரா, கேரளா, கன்னடிய நாடுகளுக்குச் சென்று ஆந்திரர் என்றும், கேரளர் என்றும், கன்னடியர் என்றும், தம்மைச் சொல்லிக் கொள்பவர்களிடம் போய் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்றும் கூறத் தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.(6)
1949இல் பெரியாரை விட்டு, அண்ணாதுரையும் விலகி திராவிட முன்னேற்றக்கழகம் அமைப்பைத் தோற்றுவித்து நடத்தி வந்தார். கி.ஆ.பெ.வி.யிடம் அணணாவின் தி.மு.கழகம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. கி.ஆ.பெ.வி. சொன்ன பதில் இது தான்: “கழகத்தை நடத்துவோர் வெற்றிப் பாதையில் விரைந்து செல்ல விரும்பினால், ‘திராவிட’ என்ற சொல் மாறி ‘தமிழர்’ என்ற சொல் அமைந்து ‘தமிழர் முன்னேற்றக் கழகம்’ என அது திகழ வேண்டும்” என்றார்.
பெரியாருக்கும் கி.ஆ.பெ.விக்கும் நடந்தது கொள்கை முரண்பாடு தானே தவிர, தனிநபர் முரண்பாடு அல்ல. பெரியாரிடம் தனிப்பட்ட முரண்பாடு கொண்டிருந்தால் கி.ஆ.பெ.வி. அண்ணாவோடு தி.மு.க.வில் இணைந்து பணியாற்றியிருக்க முடியும்.
ஆனால் அவ்வாறு செய்யாமல் அண்ணாவின் திராவிடத்தையும் எதிர்த்து நின்று அவர் தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதி குலையாமல் இருந்துள்ளார். இதன் மூலம் பெரியாருக்கும் கி.ஆ.பெ.வி.க்கும் நிகழ்ந்தது கொள்கை முரண்பாடு தான் என்பதை அண்ணாவின் இரு கடிதங்களும், அண்ணாவின் இயக்கம் குறித்து கி.ஆ.பெ.வி.யின் பதிலும் இதனை திட்டவட்டமாக உறுதிப்டுத்துகிறது.
தமிழர் கழகத்தை நடத்தவியலாமல் சில ஆண்டுகளில் அதனை அவர் கலைத்த போதிலும் தமிழ் மொழி, தமிழர் நலனுக்கு ஆபத்து நேரும் போதெல்லாம் அதனை எதிர்ப்பதில் முதல் ஆளாக நின்றார். தமிழ் எழுத்துச் சீர்திருத்த எதிர்ப்பு, இந்தியைத் திணிக்கும் வானொலி நிலைய எதிர்ப்பு, 1965ஆம் ஆண்டு இந்தி மொழி எதிர்ப்புப் போர் ஆகியவற்றில் பங்கேற்கத் தவறவில்லை.
கி.ஆ.பெ.வி. தமது 91-ஆம் அகவையில், தமிழீழப் போரை முன்னெடுத்துப் போராடிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளின் போது பின் வருமாறு எழுதினார்:
“கிளம்பினான் ஒரு தமிழ் இளைஞன்! வீரனிலும் ஒரு மாவீரன்! அவனே ஈழத்தின் வீரமகன் பிரபாகரன்!!! இத்தகைய வீரன் ஒருவன் புறநானூற்றுக்குப் பிறகு இரண்டாயிரமாண்டு களாக வேறு எவனும் தோன்றியதில்லை (7)
இராசீவ் காந்தி படுகொலையை சாக்காக வைத்து தமிழர் உரிமைகளை பறிக்க முயன்ற தில்லி அரசைக் கண்டித்து பா.ம.க.வின் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிலே, “1938இல் தமிழ்நாடு பிரிவினைப் போராட்டத்தைத் தொடங்கினோம். எங்களுக்குரிய உரிமையைக் கொடுக்காவிட்டால் நாட்டைப் பிரிக்க வேண்டிய அவசியம் தான் உருவாகும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.(8)
95 அகவை வரை ஒரு தமிழ்த் தேசியராகவே தன்னை அடையாளப்படுத்தி வாழ்ந்து வந்த அவர் 19.12.1994 அன்று மறைந்தார்.
சாவதற்கு இரு நாட்களுக்கு முன் விடுத்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப் பாடமொழியாக்கினால் நான் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் சாவேன்” என்று இறுதி ஆசையை வெளிப்படுத்தினார். (9) அவரின் கனவு மெய்ப்பட தொடர்ந்து போராடுவோம்!
நன்றி: முனைவர் கோ.வீரமணி எழுதிய “முத்தமிழ்க்காவலர்  கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் தமிழ்ப்பணி”.
 அடிக்குறிப்புகள்:
1) நகரதூதன் 05.11.1933 பக்.09
2) சுப.வீரபாண்டியன் எழுதிய ‘பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்”
3) வ.மணிமேகலை எழுதிய “முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்” ஒரு திறனாய்வு
4) பேரா. ந.க.மங்கள முருகேசன் எழுதிய” சுயமரியாதை இயக்கம்”
5) கி.ஆ.பெ.விசுவநாதம் கேள்வி-பதில், தமிழர் நாடு, 14.1.1950, பக்.48
6) தமிழர் நாடு, 25.1.1948, ம.பொ.சி. எழுதிய “புதிய தமிழகம் படைத்த வரலாறு”
7) கோவை மகேசன் நடத்திய “வீர வேங்கை” இதழ் 1990.
8) கி.ஆ.பெ.வி. தொடக்க உரை, பா.ம.க.வின் தமிழர் வாழ்வுரிமை மாநாடு
9) கி.ஆ.பெ.விசுவநாதம் பேட்டி, மாலை முரசு19.12.1994.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக